செவ்வாய், நவம்பர் 8

மார்க்ஸை மருட்டிய ரயில் - ஆதவன் தீட்சண்யா

யிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான் எரிக்கும்போது நீங்கள் தேவையற்ற பதட்டத்திற்கு ஆளாக நேரிடும்.

அதோ கேட்கும் அந்த ஹாரன் சத்தம் ஒரு ரயிலுக்குரியதான கம்பீரத்தோடும் நளினத்தோடும் ஒலிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். காசில்லாத தாயிடம் கம்மர்கட் கேட்டு அடிவாங்கிய சிறுபிள்ளை விசித்து அழுவதுபோல் கூவிக்கொண்டு வருகிறது அந்த ரயில். அந்த அழுகுரலும் கூட மனதை நெகிழ்த்தி இரக்கத்தைத் தூண்டுவதாக இல்லாமல் எரிச்சலூட்டுவதாயும் தூக்கத்தைக் குலைப்பதாயும் இரை கிடைக்காத வெறியில் புதருக்குள்ளிருந்து வரும் நரியின் ஊளையாகக் கேட்கிறது. சிருங்காரம் குறைந்துவிடுகிறபோது தாபத்தின் பிதற்றமும் ஆபாசமாகிவிடுகையில் ஒரு ரயிலின் அலறலில் ரசிக்க ஏதுமில்லை.

இவ்விசயத்தில் என்னோடு மாறுபடுவோர் தமது கருத்தை தெளிவாகவோ குழப்பமாகவோ தெரிவிக்கலாம். இதற்காக நீங்கள் ரயிலைப் பார்த்திருக்கவேண்டிய முன்னிபந்தனை ஏதுமில்லை. குழந்தைகள் தம் பாதங்களால் மண்ணைப் புரட்டிக்கொண்டு தெருவில் கூடி விளையாண்டக் காலங்களில் ஒருவர்பின் ஒருவர் வரிசையாக நின்று முன்னிருப்பவனின் சட்டையையோ அரணாக்கயிறையோ பிடித்துக்கொள்ள எல்லோருக்கும் முன்னிருப்பவன் எல்லோரையும் இழுத்துக்கொண்டு க்கூ... ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு என்று ஓடும் ஒரு விளையாட்டை நீங்கள் பார்த்திருந்தால் கூட போதுமானாது. அதுதான் ரயில். தின்பண்டங்களை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு வந்துவிடும் கணம்வரைக்கும் பாகுபாடின்றி எல்லோரையுமே ஏற்றிக்கொள்ளும் பரந்த மனமுடைய அந்த ரயில் எந்த ஊரிலும் நிற்காமல் போகாது. தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் முன்பாகக்கூட நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் எங்கே இறங்கப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சொல்லாவிட்டால் வண்டி நிற்காது. பிறகு காணாமல்போன உங்களைத் தேடி அப்பா அம்மா அடுத்த வண்டியில்தான் வரமுடியும். அதற்குள் வண்டி ஷெட்டுக்குப் போய்விடும் ஆபத்திருப்பதால் பயணத்தில் கவனம் சிதறக்கூடாது.

அதையும் பார்க்க கொடுத்து வைக்காதவர்கள், மழைக்காலத்தில் கண்பறிக்கும் சிவப்பு வண்ண வெல்வெட் பூச்சிகளுக்கிடையே தன்போக்கில் ஊர்ந்து திரியும் நீளமான மரவட்டையைப் பார்த்திருக்கிறீர்களா... எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்... மழையே பெய்வதில்லை. சினிமாவில் பெய்கிற செட்டிங் மழையைப் பார்த்திருந்தால் உண்டு. அப்போதும் மழையைப் பார்க்காமல் வெள்ளுடையில் நனையும் நடிகையின்... சரி வேண்டாம். அந்த வழக்கு இப்போது எதற்கு, மழைக்காலத்தில் இனிமேல் வீட்டுக்குள் பதுங்காமல் வெளியிலிருக்கப் பாருங்கள். அடர்ஊதாவும் கருப்பும் சரிவிகிதமாய் குழைந்த நிறத்திலிருக்கும் அந்த மரவட்டையைப்போலவே கொஞ்சம் பெரியதாய் அதாவது ஆட்கள் ஏறி இறங்குமளவுக்கு பெரியதாய் இருக்கும் ரயில். மரவட்டையிலிருந்து வந்ததை மறைக்க விதவிதமான சாயங்களை பூசிக்கொண்டுள்ளன ரயில்கள்.

ஆபிசுக்கோ வியாபாரத்துக்கோ அடுத்தவனை கவிழ்க்கவோ போகவேண்டிய அவசரத்தேவை மரவட்டைக்கு இல்லையாதலால் ஊர்ந்துபோக அதற்கு கால்களே போதுமானதாயிருந்தன. ஆனால் முன்வரியில் சொன்ன உயரிய நோக்கங்களுக்காக ஓடியாடித் திரும்பவேண்டியவனாயிருந்த மனிதன் ரயிலில் கால்களிருந்த இடத்தில் சக்கரத்தை பொருத்திக்கொண்டான். கொசுவர்த்திச் சுருள்போல் சுருண்டு ஓய்வெடுக்கும் மரவட்டையைப் பார்த்துவிட்டு ரயிலும் இப்படித்தான் மண்டலம்போட்டு சுருண்டிருக்குமோ என்று பயங்கொள்ளத் தேவையில்லை. அப்படியிருந்தால் அது ஆக்சிடென்டான ரயில் என்பது விளையாட்டுப் பிள்ளைகளுக்கு தெரியும். ரைட், இப்போது நீங்கள் ரயிலைப் பற்றி சொல்லலாம். குறிப்பாய் அதன் ஹாரன் பற்றி. அல்லது முதுகில் கூடு சுமந்து நகரும் நத்தையைப் போன்ற கூட்ஸ் வண்டிகள் பற்றி... (துருப்பிடித்த நாற்பது பெட்டிகளின் கடைசியில் அநாதையைப்போல் வெள்ளுடை தரித்து தனிமையில் கருகும் கூட்ஸ் கார்டு பரிதாபத்திற்குரியவர். அவரது தனிமையும் சோகமும் தனிக்கதை.)

எனக்கு ஏன் இந்த ஹாரன் ஒலி பிடிக்கவில்லையென்று யோசிக்கும்போது தான் எனக்கு ரயிலே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. நெரிசலில் சிக்கிய அவஸ்தையினாலோ அல்லது அடுத்தவன் உட்கார்ந்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் தூங்குவதுபோல் பாவலா பண்ணி படுத்திருப்பவர்கள் மீதான ஆத்திரத்திலோ இந்த வெறுப்பு வந்திருக்க நியாயமில்லை. மாப்ளா எழுச்சிக்காரர்களை தன்னுள்ளடக்கி பிணக்குவியலாய் கொண்டுவந்து திரூரில் தள்ளியதாலோ, நாட்டுப்பிரிவினையின் பேரால் அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை இந்துப்பிணங்களாவும் இஸ்லாமியப் பிணங்களாகவும் இருநாடுகளின் எல்லைகளுக்கும் எடுத்துச் சென்று கொட்டியதாலோ ரயில்மீது எனக்கு இப்படியான வெறுப்புண்டாகியிருக்குமெனத் தோன்றுகிறது. ஆனாலும் பிடிக்காத ஒன்றைப்பற்றி இவ்வளவு யோசித்திருப்பதை வைத்துப்பார்த்தால் ஒருவேளை மனசின் ஆழத்தில் அந்தரங்கமாய் அது எனக்கு பிடித்தமானதாயிருக்கிறதோ என்று குழம்பவும் நேர்ந்துவிட்டது. என்னை நானே சமாதானம் செய்துகொண்ட பிறகு தொகுத்த காரணங்கள் உங்களுக்கு முக்கியமற்றதாயும் கூட தோன்றலாம்.

முதலில் அதன் ஹாரன் ஒலி குழந்தைகளுடையதைப் போல் இசைமையோடு இல்லை. துருப்பிடித்த டவர்மேலிருந்து நேராநேரத்துக்கு ஊதியடங்கும் பஞ்சாயத்தாபீஸ் சங்கு மாதிரி கத்துகிறது. கூ...வும் ஜிக்குபுக்குவும் இணையவேயில்லை. தொலைவிலிருப்பவனுக்கு வெறும் கூ மட்டுமே கேட்கிறது. நீந்தும்போது தோள்பட்டையிலிருந்து முன்னும் பின்னும் மடங்கிநீளும் முழங்கையைப்போல் வெட்டுக்கிளியின் றெக்கையெலும்பு வடிவில் சக்கரத்துக்கு வெளியிலிருந்து நீண்டு மடங்கும் ஒன்றிலிருந்தோ (கனெக்டிங் ராடு...? சரியான பெயர் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்) அல்லது ரயிலின் ஆயிரத்தெட்டு பாகங்களின் கூட்டியக்கத்திலிருந்தோ எழும்பும் ஜிக்குபுக்கை அமுக்கி இருட்டடிப்பு செய்துவிட்டு என்ஜினில் டிரைவரின் கைப்பாவையாய் கிடக்கும் ஹாரன் ஒலி மட்டுமே கேட்கும்போது அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சைக்கிள் பெல் மாதிரியோ ஊமத்தை மொட்டுபோல் நுனிப் பருத்துக் கூம்பிய ஐஸ் வண்டியின் ஹாரன் மாதிரியோ வெளிப்படையாயிருந்து குழந்தைகள் அமுக்கி ரசிக்க தோதற்று டிரைவரிடம் சிறைப்பட்டிருக்கும் ஒரு கருவியிலிருந்து உன்னதமான இசை ஒருபோதும் வராது. வெறும் ஒலி, எச்சரிக்கை செய்யமட்டுமே உதவும். எச்சரிக்கை செய்வது parental ego (உபயம்: சுவாமி ஜல்சானந்தா, மனசே டென்சன் ப்ளீஸ், பக்கம் 600097856).

இந்த ரயில் வருவதற்கு முந்தி நாமெல்லோரும் எங்குமே போகாமல் ஒரேயிடத்தில் அடைந்தா கிடந்தோம்...? இல்லையே... அடேயப்பா எங்கெல்லாம் போய் வந்திருக்கிறோம்...? இலங்கைக்கு பர்மாவுக்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு.... ரோம் வரைக்கும் போய் வியாபாரம் பண்ணியிருக்கான் நம்மாள். அம்புலிமாமாவில் இன்னும் அனேகநாடுகளின் பட்டியலுண்டு. அங்கேயிருந்து இங்கே வந்து போயிருக்கிறார்கள்... நாலந்தாவிலும் தட்சசீலத்திலும் படிக்க எவ்வளவோ பேர் வந்து போயிருக்கிறார்கள். ஏசுநாதர் கூட காஷ்மீருக்கு வந்திருந்ததாய் ஒரு தகவலுண்டு (பார்க்க: கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே, இடமருகு). இதோ FTVயில் பூனை நடையழகிகள் பொழுதும் நடக்கிற நடைக்கு, நேர்க்கோட்டில் நடந்தார்களென்றால் உலகத்தையே ஏழுமுறை சுற்றிவந்துவிடுவார்கள் தானே. இங்கேயிருந்து கிளம்பி கடல்மேல் நடந்துபோன பல்லவ இளவரசன்தான் அங்கே போய் ஜூடோவை கற்றுக்கொடுத்திருக்கிறான்.

மத்திய ஆசியாவிலிருந்து மாடு கன்றுகளோடும் குதிரைகளோடும் கிளம்பி கைபர் போலன் கணவாய் வழியாக இங்கே வந்து தங்கிவிட்டவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஆறுமாதத்திற்கு முன்பே டிக்கெட் ரிசர்வ் பண்ணி பெர்த்தில் தூங்கிக்கொண்டே வந்து சேரவில்லை. நடந்தும் குதிரைமீதும் நாவாய் செலுத்தியும் உலகத்தையே அளந்து தீர்த்திருக்கிறார்கள். வாமனனுக்கு நேர்ந்தது போலவே இவர்களுக்கும் அடுத்த அடி வைக்க இடமில்லாமல் போய்விட்ட நிலையில் தூக்கிய பாதத்தோடு நடராஜனைப்போல நின்றே கிடக்கமுடியாதென்று சந்திரனில் கால்வைத்தனர். இதோ இப்போது செவ்வாய் கிரகத்துக்கும் போகப்போகிறார்கள். அங்கேயே கொஞ்சகாலம் இருந்தபிறகு நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், நாங்கள் தான் பூர்வகுடிகள், நாங்கள் வந்தேறிகளல்ல என்றெல்லாம் வரலாற்றை திரிப்பார்கள். பிரச்னை இப்போது எதுவென்றால் அவர்கள் யாரும் இந்த ரயிலுக்காக ஸ்டேசனில் காத்திருக்கவில்லை என்பதுதான்.

அதாவது ரயில் இல்லாத காலத்திலும் வேறுவகையான போக்குவரத்து இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதுதான். எனில் ஆதிமனிதனை ஊர்ஊராய் தூக்கிச்சென்ற கழுதைக்கும் குதிரைக்கும் காளைகளுக்கும் இல்லாமல் நேற்றுவந்த ரயிலுக்கு மாத்திரம் தனியாக ரயில் போக்குவரத்து அமைச்சகம் எதற்கு? நிதிஷ்குமாரும் மம்தா பானர்ஜியும் சண்டையடித்துக் கொள்ளவா? ஏற்கனவே ஒற்றமையில்லாமல் பிரிந்து கிடக்கிற மந்திரிசபைக்கு நடுவில் இந்த ரயிலுமல்லவா தண்டவாளம் பதித்து ராவும் பகலும் ஓடிக்கொண்டிருக்கிறது?

சார் இதையெல்லாம் விடுங்கள். இந்த ரயிலே இந்தியாவுக்கு எப்படி வந்ததென்று யோசித்துப் பாருங்களேன். இந்தியர்கள் எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று திருபாய் அம்பானி போலவோ, பௌத்தன் அசோகன் சாலையோரம் நட்டு வளர்த்திருந்த லட்சக்கணக்கான மரங்களை வெட்டியெறிந்துவிட்டு பஞ்சம் பிழைக்க ஊர்ஊராய் மக்கள் ஓடுவதற்கு வசதியாக நாலுவழி சாலை போடவேண்டும் என்று புஷ்யமித்திர சுங்கனின் வாரிசான வாஜ்பாய் போலவோ இந்தியர்கள் எல்லோரும் நாடுபூராவும் சுற்றிவரவேண்டும் என்று வெள்ளைக்காரன் கண்ட கனவிலிருந்து இங்கு ரயில் வரவில்லை.

கோவில்பட்டியில் விளையுது பருத்தி. கோலாரில் விளையுது தங்கம். மலைநாட்டில் மிளகும் ஏலமும் கிராம்பும். டார்ஜிலிங்கிலும் நீலகிரியிலும் தேயிலை. சிம்லாவில் ஆப்பிள். சிங்கரேணியில் நிலக்கரி. பரந்துவிரிந்த இந்த நாட்டின் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் கொள்ளையடித்த வளங்களை துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கவும் தன்நாட்டுப் பொருட்களை துறைமுகத்திலிருந்து நாடுமுழுக்க ஏற்றிப்போய் விற்கவும் வசதியான சரக்கு வண்டியாகத்தான் ரயிலைக் கொண்டுவந்தான். அப்படியான கொள்ளையை தடுத்து அங்கங்கே ஜெய் ஜக்கம்மா, வந்தே மாதரம், டெல்லி சலோ, இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்குபவர்களின் குரல்வளையை அறுத்தடக்க பட்டாலியன்களை விரைந்தனுப்பவும் கோடைவாசஸ்தலங்களுக்குப் போய் உல்லாசமாய் கும்மாளமடிக்கவும் தனக்காகத்தான் பயணிகள் ரயிலை ஓடவிட்டான்.

ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொள்கிறேன் துரை ...என்று காந்தியும் மற்றவர்களும் ஏறிக்கொண்டார்கள். காந்தி இறங்கிக்கொண்டாலும் மற்றவர்கள் இறங்கவேயில்லை. பிறகு வெள்ளைக்காரனும் போய்விட மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து ஓடிப்போய் ஆக்ரமித்துக் கொண்டவர்கள் ஆயுளுக்கும் ரிசர்வ் செய்த நினைப்பில் பெர்த்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரத்தில் அப்பர் லோயர் மிடில் மூன்றில் எது வசதியான பெர்த் என்று வாதம் பண்ணி களைப்படைந்ததும் கழிப்பறைக் குழாயில் நீரருந்திவிட்டு மறுபடியும் தூங்கப்போய்விடுகின்றனர். எவ்வளவு தைரியமிருந்தா நான் படுத்திருந்த பெர்த்தில் படுத்திருப்பே என்று கனவில் மிரட்டும் வெள்ளையனுக்கு பயந்து அப்பர் பர்த்திலிருப்பவன் தூக்கத்தில் கழியும் மூத்திரத்தின் ஈரமும் வாடையும் மிடில், லோயர் ஆட்களை தூங்கவிடாமல் எழுப்பிவிடுவதுமுண்டு.

இதனால் மட்டுமே எனக்கு ரயில் பிடிக்காமல் போய்விட்டதாக நீங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் பிரதர். யாரையும் தொல்லை பண்ணாமல் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் வளைந்து நெளிந்து நம் பிள்ளைகள் எவ்வளவு லாவகமாய் ரயிலோட்டுகிறார்கள். முத்துபுல்லாக்கு போல மூக்கிலாடும் சளியைக்கூட துடைத்துக்கொள்ளத் தெரியாத சிறுபிள்ளைகளுக்கிருக்கும் இந்த சமயோசித அறிவு உலகத்தையே நல்வழிப்படுத்துவதாய் அலட்டிக்கொண்ட வெள்ளையனுக்கு இல்லாமல் போய் என்ன செய்தான் தெரியுமா? மூங்கில்வாரைகளுக்கு பதிலாய் இரும்பில் கட்டிய பாடை போல் நாடு நெடுகிலும் தண்டவாளம் பதித்தான். இதிலொரு குரூர முரண்பாடு என்னவென்றால் பாடைக்குக் கீழே பிணங்கள். ஆமாம், நிலத்தையே நம்பிக் கிடந்தவர்களைத் தான் தண்டவாளத்தைத் தாங்கும் ஸ்லீப்பர் கட்டைகளாய் குறுக்கி குப்புற படுக்கவைத்துக் கொன்றிருந்தான். உடைந்த அவர்களின் கனவுகள் பாதை நெடுகிலும் வெயிலிலும் மழையிலும் கிடந்து ஜல்லிக்கற்களாய் உருமாறிக் கிடப்பதை இப்போதும் காணலாம். சுரங்கத்துக்குள் தூர்ந்துபோகவும் பேரணைகளில் மூழ்கிப்போகவுமே சபிக்கப்பட்டதாயிருக்கிறது எளியவன் வாழ்க்கை என்பதை அறிவித்த முதல் பெருங்கேடு அது.

பைத்தியக்காரன் கிழிச்சது கோவணத்துக்கு ஆச்சு என்பதுபோல, வெள்ளைக்காரன் எதற்கோ போட்டிருக்கட்டும், இப்போது நமக்கு உதவுகிறதா இல்லையா என்று எனக்கான பதிலைச் சொல்ல பரபரக்கிறதா வாய்...? பொறுங்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் வெள்ளைக்காரன் எதற்காக ரயிலோட்டினானோ அதற்காகத்தான் இப்போதும் ஓடிக்கொண்டிருப்பதாய் நம்புகிறேன். அப்படியில்லை என்று வாதாட விரும்புகிறவர்கள் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏ.சி வகுப்பு என்ற பாகுபாடுகள் எதற்காகவென்று எனக்கு விளக்குங்களேன். அதைவிடவும் கொடுமை, ரிசர்வ்டு - அன்ரிசர்வ்டு. ரிசர்வேசன் கோச்சில் கால் வைத்துவிட்டால் கறுப்பனே கீழிறங்கு என்று காந்தியை அவமதித்து கத்திய வெள்ளைக்காரன் இன்றும் இங்கேயே இருப்பதை நேரடியாய் நீங்கள் காணக்கூடும். ரயிலுக்குள் இத்தனை பாகுபாடு என்றால் ரயில்களுக்கிடையேயும் ராஜதானி, சதாப்தி, துரிதவண்டி, தூங்கி வழியும் வண்டி என்று ஏற்றத்தாழ்வுகள். எல்லா வண்டியும் எல்லோருக்கும் பொதுதான். யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் என்று பசப்பாதீர்கள். ஏறுவதற்கு டிக்கெட் வேண்டும். டிக்கெட்டுக்கு பணம் வேண்டும். ஆனால் அந்தப் பணம் பொதுவிலில்லை. அப்புறம் என்ன மயிருக்குடா.... வேண்டாம்... பெண்களும் கதையைப் படிக்கவேண்டியிருக்கிறது. இல்லையானால் எனக்கு வரும் கோபத்தில் ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டிவிடுவேன்... பேசாமல் அடுத்த பாராவுக்கு போய்விடலாம்.

காமக்கிழத்திகளின் கதகதப்போடு குளிரை அனுபவிக்கவேண்டுமென்று ஒவ்வொரு ஸ்டேசனிலும் தங்கும் வசதியுடன் துவக்கப்பட்டு நூற்றாண்டைக் கடந்துவிட்ட ஊட்டி மலைரயில் கூட எனக்கு பிடிக்கவில்லை. காலகாலத்துக்கும் இங்கேயே ஆண்டு அனுபவிப்போம் என்ற கனவோடு அவர்கள் விட்ட அந்த ரயிலே ஒரு பொம்மை போலவும் விளையாட்டைப் போலவும் ஆகியிருப்பதால் அது தம்மை பகடி செய்வதாய் கருதி இப்போதெல்லாம் பிள்ளைகள் ரயில் விளையாட்டை கைவிடத் தொடங்கியுள்ளனர். தொட்டும் தொடர்ந்தும் ஆடிய விளையாட்டிலிருந்து யாரும் யாரையும் தொட்டு உறவாட அவசியமேயில்லாத கிரிக்கட் மாதிரியான ஆட்டங்களுக்கு அவர்கள் தாவிக் கொண்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்துவிட்ட இக்காலத்தில் குளிப்பாட்டிய பிற்பாடே வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளுமளவுக்கு தம் பிள்ளைகள் இனி தீட்டுப்படமாட்டார்கள் என்று ஆசாடபூதிகளுக்கு சந்தோசம்.

ரயில்தான் எனக்கு பிடிக்காதே தவிர ரயில்வே ஸ்டேசன் பிடிக்கும். அதிலும் ரயிலில்லாத ஸ்டேசனைப் போல் அலாதியானது எதுவுமேயில்லை. எதற்காக ஒரு இடம் அறியப்பட்டிருக்கிறதோ அதுயில்லாமல் இருக்கும்போது அந்த இடம் வேறொன்றாகி ஈர்க்கிறதல்லவா. ஓடாத மணிக்கூண்டுகள் மேல் எனக்கு ஈர்ப்பு வந்ததும் கூட இப்படித்தான். நாளையும் பொழுதையும் இருபத்திநாளாய் கிழித்துப் போட்டுவிட்ட மனிதனை கடுப்படிப்பதில் ஓடாமலிருக்கும் மணிக்கூண்டுகளுக்குத்தான் முதலிடம். ஓடாமலிருப்பதாலேயே அதில் தானாய் படிந்துவிடும் புராதனம் ரயிலில்லாத ஸ்டேசனின் துரு வாசனையிலும் இழைந்திருப்பதை மழைக்காலங்களில் நீங்கள் முகர்ந்தறியக்கூடும். ஊரின் மையமானதொரு இடமாகவும் சந்திப்பு மையமாகவும் உச்சிவெயிலுக்கு ஒதுங்கத் தோதான நிழற்கூடமாகவும் நாய்களுக்கு பிடித்த கம்பமாகவும் தேனிக்களுக்கு கூடுகட்டும் உயரத்திலும் ..... அப்பப்பா... மணிக்கூண்டு என்றால் நேரம் காட்டுவது என்று தன்மீது சுமத்தப்பட்ட ஒற்றை அடையாளத்தை மறுக்கும்போது எத்தனை அடையாளங்கள் சேர்ந்துவிடுகிறது... அதுபோலவே தான் ரயில்நிலையங்களும். ஆனாலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளைப்போலவும் அலுவலகங்களைப் போலவும் ரயில்நிலையங்களும் மக்களிடமிருந்து வெகுவாக தள்ளியிருப்பதை நான் மன்னித்துவிட்டதாக நீங்கள் இவ்விடத்தில் குழப்பிக் கொள்ளக்கூடாது.

ரயில்வே ஸ்டேசன் மீது நான் வைத்திருந்த பிடிப்பும் ஒருநாள் முடிவுக்கு வந்தது. கோயமுத்தூர் குண்டுவெடிப்புக்கு பிறகு முன்பு போல் அங்கு போய்வருவது எளிதாயில்லை. தாடியுடனிருக்கும் என்னைப் பார்த்ததுமே போலிசின் துப்பறியும் ஏழாவது அறிவு விழித்துக்கொள்கிறது. தீவிரவாதி தான் தாடியோடு இருப்பான், தாடியோடிருக்கும் தீவிரவாதியாய் ஒருவனிருக்கும் பட்சத்தில் அவனிடம் கட்டாயம் வெடிகுண்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவுடனேயே அவனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமே என்ற தேசபக்தி பொங்கிவிடுகிறது போலிசுக்கு. உடனடியாய் என்னை விசாரணைக்கு அழைத்துவிடுகின்றனர். ரயில்வே ஸ்டேசனுக்கு போவதின் உடன்விளைவாக போலிஸ் ஸ்டேசனுக்கும் போகவேண்டியதாகிவிட்டது. இப்போதெல்லாம் தீவிரவாதிகள் எல்லா ரூபத்திலும் மறைந்துத் திரிவதாக போலிஸ் நம்புவதால், குடிமக்கள் எல்லோருமே தினசரி தங்களது உடம்பின் ஒன்பது புழைகளிலும் மெட்டல் டிடெக்டரை நுழைத்து வெடிகுண்டை மறைத்து வைத்திருக்கவில்லை என்று நிரூபிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதுமாதிரியான மாற்றங்கள்தான் இந்திய சமூகத்தில் வரப்போகிறது என்று தெரிந்திருந்தால் பழமைவாதத்தில் இறுகிக்கிடக்கும் இந்திய சமூகத்திற்குள் ரயில் நுழைவதை வரவேற்று எழுதியிருக்கமாட்டார் கார்ல் மார்க்ஸ்.

வேடிக்கைப் பார்க்க ரயில்நிலையம் போவதே விபரீதமாகிவிட்ட இக்காலத்தில் எட்டாம் அத்தியாயத்தில் ரயிலை எரிக்கப்போவதாய் முதலில் நான் எடுத்த முடிவை கைவிடுவதாய் இந்த வரியிலேயே அறிவிக்கிறேன். எவனோ எரித்த இரண்டு பெட்டிகளுக்காக மூவாயிரம் அப்பாவிகளைக் கொன்ற நாடு இது. இனி என்னாலும் எதற்கு சேதாரம்?

2 கருத்துகள்:

  1. super , elimaiyaka gothra vai kan mun niruthidinka . suvaraasiyama padicha naan eppodu kanneerodu .

    பதிலளிநீக்கு
  2. அடைத்து வைப்பதற்கு இடமா இல்லை அரசாங்கத்துக்கு?
    ரயிலை விட ஜெயிலே மேல் என்று மக்கள் சொன்னதால் அங்கே அடைத்தோம் என்று ஏலேக்ட்ரோனிக் தேர்தல் பெட்டியைத் திறந்து காட்டும் தேசம் இந்தத் தேசம்.
    உள்ளாட்சித் தேர்தலின் உள்காயமே இன்னும் ஆறாததால் பாவம் மக்கள் பரிதாபமாகக்கிடக்கிறார்கள். (காயம் பிறர் ஏற்படுத்தியது. உள்காயம் அவர்களுக்கு அவர்களே ஏற்படுத்திக் கொண்டது) என்ஜின் பெட்டியை எழுதிக்கொண்டவர்கள்தான் பாரதத் தேசத்தின் பயணத்திற்கு உதவுகிறார்களாம்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...