ஞாயிறு, டிசம்பர் 18

கவனமாய் கடக்கவும் - ஆதவன் தீட்சண்யா

துர்சொப்பனங்களின் நெரிப்பில்
படுக்கையில் மூச்சா போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

உலகை களியாட்ட மேடையாய் வரித்து
வாழ்வைத் துய்க்கிறவர்களுக்கும்
மலர் மழை மழலைச்சிரிப்பென பாடித்திளைக்கும்
நெப்பமான நுரைமனக் கவிஞர்களுக்கும்
பொருந்தும் இவ்வெச்சரிக்கை

காவல்நிலையத்தைக் கடக்கும் பெண்ணின் பதற்றத்தோடு
மாற்றுப்பாதை வழியே இக்கவிதையைக் கடப்பதன்றி
சாத்வீகத்தால் நிரப்பப்பெற்ற நற்குணவான்
தனது நம்பிக்கைகளை தற்காத்துக்கொள்ள மறுமார்க்கமில்லை
 
மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப்போல் அச்சமூட்டக்கூடும்
 
எழுத்திலிருந்து துண்டித்து மேலே தெரியும் மெய்யெழுத்துப்புள்ளி
தலைவேறு முண்டம் வேறாய் தரிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தி
ஒரு எழுச்சியை வீழ்த்தியதான கொண்டாட்டங்களை
முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம்
 
வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே வழியும் உதிரம்
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான இடைப்பள்ளத்தில் தேங்கி
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும் அபாயமுண்டு
 
ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்
 
முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும் இடையேயுள்ள வெளி
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட
பெருங்குழிகளாக சாயலிடுமானால்
இக்கவிதையை
சுனாமிக்கானதாய் தப்பர்த்தம் கொள்ள வாய்ப்புண்டு
 
என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளிபோல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
தூக்கத்தில் வளர்ந்து
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்
 
ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப்போலிருக்கும்
அடுத்தடுத்த பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி
நீங்கள் யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது.

2 கருத்துகள்:

  1. 'உண்மைதான்...
    படித்து இன்புற இது பாலியல் கவிதையன்று.
    வெடித்து கிளம்பும் ஒரு விதையின் வேதனை குமுறல்கள்.'

    பதிலளிநீக்கு
  2. கவிதையை கடக்க முடியவில்லை. ஏனென்றால் இது காயங்கள். பலர் இதை மிதித்து விட்டே செல்கின்றனர்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...