வெள்ளி, அக்டோபர் 5

பாலைக் காக்குமா பூனை? - நா.ரகுராம்


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 400 நாட்களைக் கடந்து விட்டது. தமிழகக் காவல் துறையுடன் சேர்த்து நான்கு மாநில காவல்துறையும், மத்தியப் படையும், விமானப் படையும், நவீன ஆயுதம் தாங்கிய படை என 6000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூடங் குளம், இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையைத் துவக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அமைதியாக நடக்கும் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் சுமார் 4 மணிநேரம் கூடங்குளம் அணுஉலையை சுற்றிப்பார்த்த ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் "அணு உலை மிகவும் பாதுகாப்பாக" உள்ளது எனச் சொல்லிவிட்டார் எனவும், அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் (Atomic Energy Regulatory Board AERB) சொல்லிவிட்டதெனவும் கூறி எரிபொருள் (யுரனியம்) நிரப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தி வைக்க இயலாது என்று முதலில் கூறினாலும் செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லையென்றால் அத்திட்டத்தை கைவிடுவதே நல்லது என்று கூறியுள்ளது. அணு உலையை ஆதரிக்கும் அறிவுஜீவிகள் பலர் நம் முன்வைக்கும் பொதுவான கூற்று "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலை அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாகப்பட்டுள்ளது என்றும், அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்பதாகும். மேலும் இந்தியா வல்லரசாக மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் எனவும், மின் உற்பத்திக்கு அணுசக்தியே சிறந்தது என்றொரு மாயையை உண்டாக்கி வைத்துள்ளனர். இத்தகைய அபத்தமான பொய்யை மக்களிடம் கொண்டு செல்ல நாடாளுமன்ற விஞ்ஞானியும், ஏவுகணை விஞ்ஞானியும், அணு விற்பன்னர்களும், அரசின் கைக்கூலியாக செயல்படும் காவல்துறையினரும், இந்து முன்னணி அமைப்புகளும் தங்களால் இயன்றதை செய்து, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு தகுந்த உதரணமாக, இந்திய அணுசக்தி கழகம் (NPCIL - Nuclear Power Corporation India Ltd) மே 22, 2011 இல் வெளியிட்ட நூல் ஒன்றில் "அணுக்கதிர் வீச்சு மனிதகுலத்தின் எதிரியல்ல, நண்பன்தான் "என்றும் அதற்கு உதாரணமாக மருத்துவத்துறையில் உபயோகப்படுத்தப்படுகின்ற sonographyயால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் sonographyல் ஓலிஅலைகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓலிஅலைக்கும், அணுக்கதிர்வீச்சுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களைத்தான் "விஞ்ஞானிகளாக" நம்நாடு பெற்றுள்ளதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டிய அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புகுசிமா அணுஉலைப் பேரழிவிற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் நிலநடுக்கம், ஆழிப் பேரலை, இதர காரணங்களால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி குறிப்புகளிருந்தாலும், புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் கூட காண முடியவில்லை.

மின்சக்தி உற்பத்திக்கு அணுசக்தியே சிறந்தது எனக் கூறுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று இது மிகவும் அதிநவீன அறிவியல் வளர்ச்சி என்பதாகும். இத்தகைய நிலையில் அணு விஞ்ஞானம் அறிவியலின் வளர்ச்சி என்று சொல்கின்றவர்களுக்கு முன்வைக்கவேண்டிய கேள்வி, இது முழுமையடைந்த அறிவியல் வளர்ச்சியா? அறிவியல் என்பது பல செய்முறைப் பயிற்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதா, மனித இனத்துக்கு உகந்ததா என நுட்பமாக ஆராய்வதே அறிவியலாகும் என்பது எனது கருத்து. இத்தகைய நிலையில் அணுவைப் பிளப்பதன் மூலம் கிடைக்கும் அபரிதமான சக்தியை மட்டும் கருத்தில் கொண்டு அதனைத் தொடர்ந்து வரும் விளைவுகளையும், ஆபத்துகளையும் சிறிதளவும் எண்ணாமல் இருப்பது அறிவியலா? அல்லது அறிவீனமா?

இன்று கூடங்குளத்து தெருக்களில் விளையாடும் குழந்தைகளுக்குத் தெரிந்த அடிப்படை விஞ்ஞானம் கூட நாட்டை ஆளும் வர்க்கத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பவர்கள் எனக் கூறும் விஞ்ஞானிகளுக்கும் தெரியாமல் போனது அறிவியலா? அல்லது அறிவீனமா? இன்று கூடங்குளத்தில் நடக்கும் போராட்டம் அணு விஞ்ஞானம் என்ற அறிவியலுக்கெதிரான போராட்டமல்ல,  அறிவீனத்திற்கெதிரான போராட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இன்று அரசியல் தலைவர்களும், அணுசக்தித்துறை "விஞ்ஞானிகளும்", உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூடங்குளம் அணுஉலைக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்வைக்கும் வாதம் "அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் (AERB) ஒப்புதல் அளித்துவிட்டது"  என்பதாகும். இந்நிலையில் நாம் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம்:

அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் 1983ஆம் ஆண்டு அணுசக்தித் துறையால் (DAE- Department of Atomic Energy) அணு ஆற்றல் சட்டம் (Atomic Energy Act) 1962ஐ அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டது. அணுசக்தி ஆணையத்தின் (Atomic Energy Commission - AEC) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் வருகின்றது. அணு ஆற்றல் சட்டம் 1962வரையறையின்படி AERBன் மிக முக்கியமான பணி, அணுஉலைப் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்தல், கதிர்வீச்சின் அளவை நிர்ணயித்தல், தொடர்ச்சியாக அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆராய்தல், அணு உலையை நிரந்தரமாக மூடும் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வரையறுத்தல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளாகும். அணு உலையை இயக்கும் இந்திய அணுசக்தி கழகமும் (Nuclear Power Corporation of India Ltd.) அணுசக்தி ஆணையத்தின் (atomic energy commission - AEC) நேரடிக் கட்டுப்பாட்டில் வருகிறது. தனித்தனியாக நிர்வகிக்கப்பட வேண்டிய அணுசக்தி ஆணையம், இந்தியா அணுசக்தி கழகம் மற்றும் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உண்மை நிலை என்னவென்றால், அணுசக்தி ஆணையத்தின் இயக்குனரும், இந்தியா அணுசக்தி கழகத்தின் தலைவரும் ஒருவரே. அதாவது அணுஉலையை இயக்குபவரும், அது பாதுகாப்பாக செயல் படுகின்றதா என்று ஆராய்வதும் ஒரே நபர்!. தனி ஒரு அலுவலகக் கட்டிடம்கூட இல்லாத இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் நிதி, அணு விஞ்ஞானிகள், பிற தேவைகளுக்கு அணு சக்தி ஆணையத்தையே சார்ந்துள்ளது. தனித்து சுதந்திரமாக செயல்படும் நிலையுமின்றி, அதிகாரமும் ஏதுமில்லாத பெயரளவில் மட்டுமே இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இயங்கிவருகிறது.

உலகிலேயே இந்தியாவில் மட்டுமே அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இத்தகைய அவலநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டில் (Convention on Nuclear Safety - CNS) கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ள இந்தியா "அணுசக்தி பாதுகாப்பு மன்றம்" வரையறுத்துள்ள முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் நடைமுறைப் படுத்தாமல் உள்ளது என்ப‌தை எந்த‌ அணு விஞ்ஞானியும் ந‌ம்மிட‌ம் கூற‌ப்போவ‌தில்லை. "அணுசக்தி பாதுகாப்பு மன்றம்" வரையறுத்துள்ள அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கியமான வேலைதிட்டங்க‌ள்
1)தேவையான அதிகாரத்தை அளித்தல்
2)தேவையான பொருளாதார வசதி, தொழில்நுட்ப வல்லுநர்களை அளித்தல்
3)அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுசக்தி கழகத்திடமிருந்து தனியாக பிரித்து சுதந்திரமாக செயல்படுமாறு நிர்வகித்தல்.
4)அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் தனது ஆய்வறிக்கை, பிற அறிக்கைகளை பொதுமக்களுக்கு வெளியிடுதல்.

மேற்கூறிய எந்த வரைமுறைகளையும் அணுசக்தி ஆணையம் (AEC) இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(AERB) வழங்கியதில்லை மாறாக பொருளாதார வசதிக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (AERB) எப்போதும் அணுசக்தி ஆணையம் (AEC), இந்திய அணுசக்தி கழகத்தையே (Nuclear Power Corporation of India Ltd.) சார்ந்துள்ள அவலநிலையில் உள்ளது. இன்று ஒரு சாதாரண தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள்கூட தரக் கட்டுப்பாட்டுக் (Quality Control Team)குழுவை தனித்தே வைத்துள்ளது. மிகவும் ஆபத்து நிறைந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை உணர்ந்தும், AERB ஒரு விதிவிலக்காக உள்ளது. மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய தராப்பூர் 1 மற்றும் 2 அணுஉலைகள் 40ஆண்டுகளுக்கு மேலாகியும்(ஒரு அணு உலையின் உயர்ந்தபட்ச ஆயுட்காலம்40 ஆண்டுகள் மட்டுமே) அதை தொடர்ந்து இயக்க AERB எத்தகைய அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளது? இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை என்னவென்றால் AERBயிடம் அணு உலையை மூடுவதற்கான எந்த வித செயல்திட்டமும் இல்லை!!!.

வளர்ந்த நாடுகளில் தகுந்த அதிகாரத்துடனும், சுதந்திரமாகவும் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. பாலுக்கு பூனையை காவலாக நிறுத்தியுள்ளது இந்தியா.அணு உலையை இயக்கும் நிறுவனத்தின் கீழ் அதை கட்டுபடுத்தும் நிறுவனம் உள்ளது ! இந்த நிறுவனம் கொடுக்கின்ற அறிக்கைகளை தான் உச்ச, உயர் நீதிமன்றங்கள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகளை வழங்குகின்றன என்பது இந்திய மக்களின் அடிப்படை பாதுகாப்பு என்ப‌தையே கேள்விக்குறியாக்குகின்றது, எனினும் இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் 1993, 1996 க்கு இடைப்பட்ட காலங்களில் Dr.கோபாலகிருஷ்ணன் தலைமையின் கீழ் பாராட்டும் படியாக பல பணிகளை செய்துள்ளது. அணு உலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, 700 க்கும் மேற்ப்பட்ட அணுசக்தித்துறையின் (DAE) ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கையொன்றை தயார் செய்து 1995 ஆம் ஆண்டு நவம்பர் 7 தேதி அணு சக்தி ஆணையத்திடம்(AEC) சமர்ப்பித்தது. அவ்வறிக்கையின்படி 130வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதில் 95 வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது எனவும் அணு சக்தி ஆணையத்திற்கு (AEC) பரிந்துரைத்தது. அணுசக்தி ஆணையமும் (AEC), இந்திய அணுசக்தி கழகமும் (NPCIL), AERBன் இவ்வறிக்கையை நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்ற வழக்கமான காரணத்தைக் கூறி, அதை பொதுமக்களுக்கு வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. Dr.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஜூன் 18 ,1996 இல் பணி ஓய்வு பெற்று வெளியேறும் போது "AERB மிகவும் அவலநிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது எனவும், எவ்வித அதிகாரம் இன்றி பெயரளவில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும், அணுசக்தித் துறைக்கு தங்கள் வரியின் மூலம் பொரளாதார உதவி செய்யும் இந்திய மக்களுக்கு அத்துறையின் ஒவ்வொரு அறிக்கையும் கிடைக்க செய்ய வேண்டுமெனவும்" பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இதுநாள் வரை AERB இந்திய அணு உலைகளை 3 முறை ஆய்வு செய்து தனது அறிக்கைகளை அணுசக்தித் துறையிடம் (DAE) சமர்பித்துள்ளது. அனைத்து அறிக்கைகளும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. முதல் ஆய்வு 1976 இல் அமெரிக்காவில் த்ரீ மைல் தீவில் (Three Mile Island) நிகழ்ந்த அணு உலைகள் விபத்திற்குப் பிறகு 1979 ஆம் ஆண்டும், இரண்டாவது ஆய்வு 1986 இல் ரஷ்யாவில் உள்ள செர்நோபில் உள்ள அணு உலை விபத்திற்குப் பிறகு 1986ஆம் ஆண்டு AERB ஆல் நடத்தப்பட்டது. மூன்றாவது ஆய்வு Dr.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையின் கீழ் AERBஇருந்த போது நடத்தப்பட்டது. சமீபத்தில் புகுசிமா அணுஉலைப் பேரழிவிற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மார்ச் 14, 2011 அன்று நாட்டின் அனைத்து அணு உலைகளும் ஆய்வு செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இவ்வுத்தரவின் படி குழு ஒன்றை அமைத்து ஆகஸ்ட் 31, 2011இல் அனைத்து அணு உலைகளும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை ஒன்றை AERB சமர்ப்பித்தது. இந்த ஆய்வின்போது கல்பாக்கம் அணு உலைகளில் அவசர காலங்களில் அணுஉலை சூடாகாமல் பாதுகாக்க தானாக இயங்கக்கூடிய ECCS (Emergency Core Cooling System) என்ற வகை குளிர்சாதனம் ஆய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் கைகாவில் உள்ள அணு உலையில் 2009 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட விபத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் நவம்பர் 29 , 2010 இல் AERB வெளியிட்ட அறிக்கையில் 2 தொழிலாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டது.

இந்திய தலைமை தணிக்கைக்குழுவின் அறிக்கை:

அண்மையில் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தை தணிக்கை செய்து சுமார் 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றை இந்திய தணிக்கைக்குழு வெளியிட்டது. இவ்வறிக்கையில் அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல், அதிகார வரம்பு, சட்டரீதியான நிலைப்பாடு, அணுஉலைப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அணுக்கதிர்வீச்சின் அளவை நிர்ணயித்தல், அணு உலைகளை நிரந்தரமாக மூடும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 2012 இல் தனது அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின் வாயிலாக CAG தெரிவித்துள்ள சில முக்கிய தகவல்கள்.

1. அணு உலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரையறுக்கும் அதிகாரம் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இல்லை.

2.அணுஉலைப் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் அபராதத்தொகையை நிர்ணயிக்கும் அதிகாரமும், அபராதத்தொகையை வசூலிக்கும் அதிகாரமும் அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கிடையாது.

3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாதுகாப்பு அம்சங்களை வரையறுக்கும் மிக முக்கியமான பொறுப்பை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரமின்றி செயலிழந்து இருக்கின்றது.

4. மெக்கோனி (Meckoni) கமிட்டி மற்றும் ராஜாராமண்ணா கமிட்டியின் பரிந்துரைகளின் படி 27 வகையான பாதுகாப்பு ஆவணங்களை இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இதுநாள் வரை தயாரிக்கவில்லை.

5. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவத்துறையில் அணுக்கதிர்வீச்சின் பாதிப்பை அறியவும், கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு மாநிலத்திலும் கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழுமம் (Directorate of Radiation Safety - DRS), இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்பட வேண்டும். கேரளா மற்றும் மிசோரம் மாநிலங்களில் மட்டுமே இத்தகைய கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழுமத்தை (DRS)அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் நிறுவியுள்ளது.

6. அணுஉலையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும் போதுமான அதிகாரம் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இல்லை.

7. அணுஉலைக் கழிவுகளை அப்புறப்படுத்தவும், அணு உலைகளை நிரந்தரமாக மூடும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வரையறைகள் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை.

8. இதுநாள் வரை சர்வதேச அணுசக்திக் கழகம்(International Atomic Energy Agency IAEA) பரிந்துரைத்த பாதுகாப்பு அமசங்களைப் பெருவதில் முறையான வழிகளின்றி இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது.

புகுசிமா விபத்திற்குப் பிறகு அணுசக்தியைப் பெருமளவு சார்ந்திருக்கும் வளர்ந்த நாடுகளான பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகள் புதிய அணுஉலைகளை அமைக்கும் முடிவைக் கைவிட்டுள்ளனர். தனது மொத்த மின்உற்பத்தியில் 30%ற்கும் மேலாக அணுசக்தியைச் சார்ந்திருக்கின்ற ஜப்பான் தனது நாட்டில் இயங்கிவந்த 52 அணுஉலைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இன்னும் "30 ஆண்டுகளில்" அணு உலை இல்லா ஜப்பான் நாட்டை படைப்பதாகவும் உறுதிபூண்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியில் 75% இக்கு மேலாக அணு சக்தியை சார்ந்திருக்கின்ற பிரான்சு அணுஉலைகளை நிரந்தரமாக மூடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜெர்மனி 2022 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து அணுஉலைகளும் மூடப்பட்டுவிடுமென அறிவித்துள்ளது. மொத்த மின் உற்பத்தியில் வெறும்2.7% இக்கு குறைவாகவே அணு சக்தியை சார்ந்துள்ள இந்தியாவோ அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பாக உள்ளது என்ற பொய்யான அறிக்கையொன்றை சமர்ப்பித்து பல புதிய அணு உலைகளை அமைக்கும் பணியில் எவ்வித முன் ஆய்வுமின்றி மிகத் தீவிரமாக‌ இறங்கியுள்ளது. அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும் எந்தொவொரு நாட்டிலும் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அணு விஞ்ஞானம் அறிவியல் துறையில் முன்னோடி என்னும் ஒரு மாயயை ஆளும் வர்க்கமும், அதற்கு விசுவாசமாக உள்ள விஞ்ஞானத் துறையும் ஏற்ப்படுத்தி வைத்துள்ளது. இதை உலகிற்கு எடுத்துரைக்கும் தலையாய கடமை நமக்குள்ளது.

பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட ஒரு அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட்ட ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி அரசியல் தலைவர்களும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூடங்குளம் அணு உலைகளை இயக்கி சொற்ப அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவின் அணைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக உள்ளது எனக் கூறுவதென்பதும், இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் வறுமையை ஒழித்துவிடும் என்பதும் ஒன்றே. உண்மையென்னவென்றால் எந்தவொரு அணு உலையும் பாதுகாப்பானது அல்ல மாறாக மனிதகுலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் மோசமான ஆபத்துகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு நூல்கள் மற்றும் கட்டுரைகள்:

1.
நீரஜ் ஜெயின் அவர்களால் எழுதப்பட்ட "Nuclear Energy Technology from Hell" என்ற நூல்.
2.
அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தை தணிக்கை செய்ப்பட்ட இந்திய தணிக்கை குழுவின் அறிக்கை.
3 .
உலகளாவிய அணு சக்திக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியும் அப்போராட்டங்களை ஆதரிக்கும் கட்டுரைகளை வெளியிட்டுள்ள dianuke.org என்ற இணையதளம்.
4 .
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் செய்தியை வெளியிட்ட செய்தித்தாள்கள்
http://www.thehindu.com/news/national/no-stay-on-fuel-loading-but-sc-will-examine-risk-factor/article3892860.ece
http://www.thehindu.com/news/national/stay-commissioning-of-kudankulam-till-safety-steps-are-applied-bhushan-urges-court/article3918476.ece
http://www.thehindu.com/news/states/tamil-nadu/will-stop-kudankulam-if-its-found-unsafe-supreme-court/article3942238.ece

thecolloquium.net/colloquium/index.php?option=com_content&view=article&id=183:nuclear-jaitapur&catid=76:in-focus&Itemid=308
http://www.guardian.co.uk/world/2012/sep/14/japan-end-nuclear-power
http://www.ndtv.com/article/india/pm-orders-review-of-safety-at-indian-nuclear-plants-91588



2 கருத்துகள்:

  1. உங்கள் மறதி சிகிச்சை எல்லாம் முடிந்து, இப்ப அணு உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ள தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...