சனி, மே 12

கோபக்கார எழுத்தாளர்களும் கும்கி யானைகளும் -ஆதவன் தீட்சண்யா

சிவசுப்ரமணியம்,
துபாய்

கேள்வி: ஆதவன் அவர்களுக்கு, நான் அண்மையில்தான் துபாய்க்கு பணி நிமித்தமாகச் சென்றேன். ஓரளவு எனக்கு வாசிப்பு பின்புலம் உண்டு. ஆனால் துபாயில் நான் சந்திக்கும் இள தலைமுறை பலருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா மட்டுமே அறிமுகமாகின்றனர். வலைப்பூதான் அதற்கு காரணம் எனவும் சொல்ல முடியவில்லை. பலருக்கும் இப்போது தளங்கள் உள்ளன. உண்மையில் இவர்கள்தான் இன்றைய வாசகர்களைக் கவர்கின்றனரா? எந்நிலையில்?

குறிப்பிட்டதொரு பிராண்டை பிரபலமாகிவிட்டால் அதற்குப்பிறகு அந்தப் பெயரில் எந்தக் குப்பையையும் விற்கமுடியும் என்பது சந்தைவிதி. பிரபலமான அந்த பிராண்டை உபயோகிப்பதை ஒரு பெருமிதமாக கற்பிதம் செய்து கொள்வதுதான் நுகர்வுக் கலாச்சார மனநிலை. சந்தைமயப்படுத்தப்பட்ட இச்சமூகத்தில் இலக்கியத்தையும் ஒரு சரக்காக மாற்றும் நோக்கில் எழுத்து வியாபாரத்தை அல்லது வியாபார எழுத்தை ஊக்குவித்து குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை ‘பிராண்டுகளாக’ மாற்றுவதற்கு சில பத்திரிகைகளும் பதிப்பகங்களும் செய்துவருகிற தொடர்முயற்சிகளை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. சந்தையின் தேவைகளுக்குப் பொருந்திப் போவதற்கு தயாராயிருக்கிற எழுத்தாளர்கள் ‘விரைவாதமா புட்டைவீக்கமா நரம்புத் தளர்ச்சியா ஆண்மைக்குறைவா? உடனே வாருங்கள்...’ என்று பொதுக் கழிப்பிடச்சுவர்களில் அழைப்பு விடுக்கும் ‘சகல நோய்களையும் குணப்படுத்தும் கைராசி மருத்துவர்’ போல மாறுகிறார்கள். பழம் பெருமை பேசுகிற, இறுகிய சமூக ஒழுங்குகளை நியாயப்படுத்துகிற, பொதுப்புத்தியை குறுக்கீடு செய்யாத, அதிகாரத்திற்குப் பணிந்து போகிற அல்லது துணை நிற்கிற, வாசகமனதை தொந்தரவு செய்யாத, மறைவிட நமைச்சல்களை சொரிந்து கொடுக்கிற எழுத்துகளை முன்வைக்கும்போது அவர்களைக் கொண்டாடுவது வணிகப் பத்திரிகைகளுக்கும் உவப்பானதே. சாரமற்ற விசயங்களை தன்காலத்தின் அதிமுக்கியப்பிரச்னையாக முன்னிறுத்தி எழுதி மெய்யான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பவும்கூட இந்த எழுத்தாளுமைகள் தயங்குவதில்லை.

மேற்சொன்ன மலினமான காரணங்களைத் தவிர்த்து வேறு எதை முன்னிட்டு நீங்கள் குறிப்பிடும் மூவரும் அயலக இளந்தமிழரிடையே பிரபலமாகியிருந்தாலும் அது மகிழ்ச்சியளிக்கக்கூடியதே.

நரேன்
மலேசியா

கேள்வி: வல்லினத்தில் ஷம்மிக்கா என்பவர் குமரிக்கண்டம் தொடர்பாக சில கருத்துகளைச் சொன்னதை வாசித்தீர்களா? அந்தத் தகவல்கள் சரியானதுதானா? இன்றைய ஆய்வில் அதன் கண்டடைவின் எல்லை என்ன?

மாசு மருவற்ற, போற்றி கொண்டாடத்தக்க பொற்காலமாக தமிழர்கள் தங்களது கடந்தகாலத்தை கற்பனை செய்யும் போது அந்த கற்பனையை உலவவிடுவதற்கு சௌகரியமான ஒரு இடமாக இந்துமாக்கடல் விளங்குகிறது. கடற்கோளுக்கு மிஞ்சிய அல்லது அதற்குப் பிறகு உருவான தமிழ்ச்சமுதாயம் அந்த இழந்த சொர்க்கத்தை மீட்டெடுப்பதில்தான் இயல்பான ஆர்வம் கொண்டு செயல்பட்டிருக்கும். இன்றைய தமிழ்ச்சமூகம் நேற்றின்/ கடல் கொண்ட நாகரீகத்தின் தொடர்ச்சிதான் என்றால் இது இருந்தால் என்ன இன்னொருமுறை கடல்கொண்டு போனால்தான் என்ன என்ற கேள்வி வருகிறது. ஆனால் இதற்கப்பால், ‘தென்னிந்திய நிலப்பரப்பின் ஒரு பகுதியை கடல் கொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் அது இப்பகுதியில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே நடந்துவிட்டது’ என்பதாக சு.கி.ஜெயகரனின் ‘குமரிநில நீட்சி’ என்ற நூலில் படித்ததாக நினைவிருக்கிறது.

கேள்வி: தோழர், இன்றைக்கு நிறைய தீவிர படைப்பாளிகள் ஜனரஞ்சக இதழ்களில் எழுதத் தொடங்கிவிட்டனரே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? சோரம் போவதாக இதை சொல்லலாமா? என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சு.ரா அவ்வாறு செய்யவில்லையே...

வெகுஜன / வணிகநோக்கிலான இதழ்கள் தங்களது வாசகர்களின் ரசனைமட்டம் என்கிற கற்பிதமான அளவீடு ஒன்றை எப்போதும் முன்னிறுத்துகின்றன. அந்த ரசனைமட்டம் மேம்போக்கான விசயங்களை, கொறிப்புத்தீனிகளை மட்டுமே அனுமதிப்பதாய் இருப்பது வாசகநலனை முன்னிட்டல்ல. அவை எந்தவொரு வாசகரையும் கலந்தாலோசித்து இன்னின்னதை வெளியிடலாமென முடிவெடுப்பதில்லை. வாசகர்களின் பெயரால் பத்திரிகையின் அதிகாரம்தான் நிலைநிறுத்தப்படுகிறது. எங்கள் வாசகர்கள் இதையெல்லாம் தாங்கமாட்டார்கள், ஓவர்டோஸ் என்று சொல்லிக்கொண்டு வாழ்வின் நுண்ணடுக்குகளையும் வெவ்வேறு பரிமாணங்களையும் அதனதன் ஆழத்திற்கே சென்று விளங்கப்படுத்துகிற எழுத்துகளை அவை அனுமதிப்பதில்லை. தமது அரசியல் கரிசனைகளுக்கு பங்கம் விளைவிக்கிற ஒரு வார்த்தையையோ வரியையோ அனுமதிக்காமல் தணிக்கை செய்துவிடுகிற இப்பத்திரிகைகள் கருத்துச்சுதந்திரம் பற்றி பேசுகிற கேலிக்கூத்துக்கும் இங்கே பஞ்சமில்லை. இப்படியான தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியாகும் எழுத்துகளைப் பார்த்து இன்னின்ன பத்திரிகைக்கு இப்படியிப்படி எழுதினால் தான் வெளியிடுவார்கள் என்று எழுத்தாளர்களே ஒரு சுயதணிக்கைக்கு தம்மைத்தாமே ஆட்படுத்திக் கொள்கிற கொடுமையும் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தன்னை வெளிப்படுத்துதல் என்கிற எழுத்தின் மிக அடிப்படையான நோக்கத்தைக் கைவிட்டுவிட்டு பிரசுரமாவதற்குரிய சாத்தியங்களுக்கு உட்பட்டு எழுதுகிறவர்களாக எழுத்தாளர்கள் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்கின்ற நிலைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாராம்சத்தில், இந்த வெகுஜன / வணிக நோக்கிலான இதழ்களும் அவற்றின்மீது ஒவ்வாமை கொண்டு அவற்றுக்கு வெளியே உருவாகியிருந்த ‘தீவிர’ இலக்கியப் பத்திரிகைகளும் ஒரே அரசியலைத்தான் பேசின. ஆனால் இருவேறு முகாம்களாக பிரிந்திருந்தன. ஒரே அரசியலை நிலைநிறுத்த விரும்பும் சக்திகள் இருவேறு முகாம்களாக பிரிந்திருக்க வேண்டியதில்லை என்கிற பரஸ்பர புரிதலினூடாகத்தான் ‘தீவிர எழுத்தாளர்கள்’ என அறியப்பட்ட சிலர் வெகுஜன இதழ்களில் பணியாற்றச் சென்றார்கள். வெகுஜன இதழ்களை தீவிர இலக்கிய இதழ்களாக மாற்றிவிடும் நோக்கத்தில் நடந்த ஊடுருவல் என்றோ, இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் வெகுஜனப்பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட மனமாற்றம் என்றோ இந்தப்போக்கினை மிகைப்படுத்தி புரிந்துகொள்ளாதபட்சத்தில் நாம் இதுதொடர்பில் இன்னும் கொஞ்சம் பேசமுடியும். இவர்கள்தான், வெவ்வேறு காரணங்களுக்காக வெகுஜன இதழ்களில் எழுதாமல் இருந்தவர்களை அவை உள்ளிழுத்துக் கொள்வதற்கான உத்திகளை தற்செயலாகவோ திட்டமிட்டோ வகுத்தவர்கள். ஒருவகையில் கும்கி யானை போன்றவர்கள். தத்தமது நிலைப்பாடுகளை தளர்த்திக்கொள்ளாமலே இயங்குவதற்கான சுதந்திர வெளிகளாக வெகுஜனப் பத்திரிகைகள் மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். இவர்களது பங்களிப்பில் வெளியான இந்தியா டுடே, விகடன் போன்றவற்றின் இலக்கிய மலர்களிலும் குமுதம் ஸ்பெஷல்களிலும் தீராநதிகளிலும் தீவிர மற்றும் அதிதீவிர எழுத்தாளர்கள் என்று நம்பப்பட்டவர்கள் பெரிதாக நிர்ப்பந்தங்கள் இன்றி எழுதிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். குடும்பத்திற்கு அடங்கிய பிள்ளைகளுக்கு கிடைப்பதைக் காட்டிலும் கோபக்கார பிள்ளைகளுக்கு சில கூடுதல் உரிமைகள் கிடைப்பது இயல்புதானே?

இந்த கோபக்கார பிள்ளைகளுக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் கிடைக்கத் தொடங்கிய இந்த அறிமுகம் இவர்களின் புத்தகங்களை பதிப்பித்த பதிப்பகங்களின் வியாபாரத்திற்கு உதவிகரமாக அமைந்தன. மட்டுமல்ல, வெகுஜனப் பத்திரிகைகளின் பரந்துவிரிந்த வாசகர்களிலிருந்து சிறுவீதத்தையாவது ஈர்த்துக்கொள்வதற்காக தீவிர இதழ்கள் என அறியப்பட்டவை ஒரு நடுவாந்திரத்தன்மைக்கு மாறியதையும் இங்கு ஒரு உடன் விளைவாக காணமுடிந்தது. வெகுஜன இதழ்களால் கிடைக்கும் பிரபல்யம், சன்மானம் போன்றவற்றுக்கு இரையாகிவிடாமல் விரிந்துபரந்த வாசகத் தளத்தையும் வீச்செல்லையையும் தமது மாற்று அரசியலையும் அதனை உட்செரித்த எழுத்துகளையும் முன்வைப்பதற்கான ஒரு களமாக பயன்படுத்திக் கொள்கிறவர்கள் எத்தனைப்பேர் என்கிற விவரம் என்னிடமில்லை.

பிறகு, நீங்கள் சுந்தரராமசாமி பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பொறுத்து ஒன்று சொல்லவேண்டியுள்ளது. வெகுஜன இதழ்களுக்கு எதிரான புனிதப்போரை தொடங்கியவர் என்பதுபோன்று முன்னிறுத்தப்படுகிற அவர் குமுதம், தீராநதி, விண்நாயகன் போன்றவற்றில் எழுதியவர்தான். வெகுஜன இதழ்களை எதிர்த்ததனாலும் இணக்கம் கண்டதனாலும் அதிக ஆதாயங்களை அடைந்ததும்கூட அவரும் அவரது குடும்பத்தாரிக் பதிப்பகமும்தான் என்பது குற்றச்சாட்டல்ல. எனக்குத் தெரிந்த உண்மை.

நன்றி: http://www.vallinam.com.my/issue41

புதன், மே 2

ஓம் சாந்தி - ஆதவன் தீட்சண்யா


யிரைப் பிடுங்கியிழுக்கும் இந்தச் சித்ரவதைகளுக்கு
முடிவேயில்லையா எனப் புலம்புகிறாய்

நான் சொன்னபடி முன்னமே செத்திருந்தால்
தப்பித்திருக்கலாமே என்கிறேன்

அட கோழையே
சாவதற்கா
இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்கிறான்
விளக்குக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன்

கஷ்டப்பட்டுகொண்டேயிருந்தால்
வாழ்வதுதான் எப்போதென
எனக்கெழுந்தக் கேள்வியை யாரோ கேட்கிறார்கள்

சண்டையிடாமல் இருங்களேன் என்று உபதேசித்தபடி
மணல்மூட்டைகளுக்குப் பின்னிருந்து வந்த ஒருவன்
நிதானமாய் சுட்டுத்தள்ளுகிறான்
நம் ஒவ்வொருவரையும்

நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2012



செவ்வாய், மே 1

மே1: உழைப்பாளர் தினமும் ஐசிஐசிஐ மோசடியும் - ஆதவன் தீட்சண்யா


மே-1, சர்வதேச தொழிலாளர் தினம். வேலைநேரத்தை எட்டுமணி நேரமாக குறைக்க வேண்டியும் இன்னபிற அடிப்படையான கோரிக்கைகளுக்காகவும் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் நாள். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் மே 1 பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை இல்லாத பகுதிகளில் அதற்கான போராட்டம் தொடர்கிறது.

இந்தியாவில் மத்திய அரசு பொதுவிடுமுறை தினமாக அறிவிக்காவிட்டாலும் மாநில அரசுகளும், வங்கி, காப்பீடு போன்ற நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மே தினத்திற்காக விடுமுறை அளித்துவருகின்றன. ஐசிஐசிஐ வங்கியும்கூட மே1 அன்றைக்கு நாடு முழுவதும் தனது கிளைகளுக்கு விடுமுறை விட்டுள்ளது. ஆனால் உழைப்பாளர் தினத்திற்காக அல்ல. அன்றைக்கு மகாராஷ்டிரா தினத்திற்காகவாம். ஆட்டுப்புழுக்கையை வாங்கிக்கொண்டு ஐசிஐசிஐயில் பணம் தருகிறார்கள்  என்று சொல்வது எந்தளவிற்குப் பொய்யோ அந்தளவிற்குப் பொய்யானது மே முதல்நாளை உழைப்பாளர் தினம் என்று சொல்லாமல் மறைப்பது.

மே முதல்நாளை நிராகரித்து விஸ்வகர்மா பிறந்த தினத்தை (?)  உழைப்பாளர் தினமாக கொண்டாடவேண்டும் என்று சங் பரிவாரத்தைப்போலவே வேறு ஏதாவதொரு நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடச் சொல்லி ஐசிஐசிஐயும் ஜோக்கடிக்கிறதா என்று பார்த்தால் அதுவுமில்லை.   மாறாக, மே முதல்நாளை சட்ட தினம் (Law Day) என்றும் விசுவாச தினம் ( Loyalty Day) என்றும் அறிவித்து உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்யும் அமெரிக்காவுக்கு நிகரானதொரு அரசியல் மோசடியில் ஐசிஐசிஐ ஈடுபட்டுள்ளது

30.4.12 அன்று ஐசிஐசிஐ ஒசூர்கிளையின் ஒளிபரப்புத்திரையில்மே1 விடுமுறை: மகாராஷ்டிரா தினம்என்ற செய்தியை படிக்க நேர்ந்ததும் அதுகுறித்து கிளைமேலாளரிடம் வினவினேன். நாளை மே தினத்திற்காகத்தான் விடுமுறை என்றார். பின் ஏன் இவ்வாறு ஒளிபரப்பாகிறது என்று கேட்டதற்கு, மகாராஷ்ட்டிரா தினமும் நாளைக்குத்தான்- மும்பையிலிருந்து  மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு என்பதால் இங்கும் அவ்வாறே தவறுதலாக வருகிறது என்று தெரிவித்தார்

இதே மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பில், தனது வணிகம் சார்ந்த கருத்துகள் என்று வருகிறபோது மட்டும் அந்தந்த வட்டாரத்தின் மொழியில் அந்தந்தப் பகுதிக்கேயுரிய தனித்தன்மைகளை உள்வாங்கி லாவகமாக வெளிப்படுத்த முடிகிற இவ்வங்கியினால் அதன் விடுமுறையையும் அவ்வாறே பிரித்து அறிவிக்க முடியாதா என்ன? முடியும் முடியாது என்பதல்ல, மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினம் என்று தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கக்கூடாது என்பதுதான் ஐசிஐசிஐயின் பிரச்சனை. அதனால்தான் அது மகாராஷ்டிரா என்ற ஒரு மாநிலம் உருவான தினத்தைக் கொண்டாட இந்தியா முழுவதிலும் உள்ள தனது அத்தனைக் கிளைகளுக்கும் விடுமுறை விட்டிருக்கிறது. பீகார் அல்லது வேறு ஏதாவதொரு மாநிலம் உருவான தினத்திற்காக மகாராஷ்ட்டிராவிலும் விடுமுறை என்று அறிவித்திருக்குமானால் சிவசேனா, நவநிர்மாண் சேனாவின் சூறையாடலுக்கு  ஒரு ஐசிஐசிஐ கிளைகூட தப்பியிருக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலம் உருவான மே முதல்நாளை மகாராஷ்ட்டிரா தினமாக கொண்டாடும் அம்மாநில மக்களது உணர்வுகளை மதித்து அன்றைக்கு ஐசிஐசிஐ விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வேறு எந்தவொரு மாநிலம் உருவான தினத்தையும் தன்னுடைய விடுமுறை நாளாக அறிவிக்காத ஐசிஐசிஐ, மகாராஷ்ட்டிரா தினத்திற்கு மட்டும் விடுமுறை என்று அறிவித்திருப்பது எதனால்

குறிப்பிட்ட ஒரேநாள் வெவ்வேறு வரலாற்றுரீதியான காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் போது, அந்த எல்லாக்காரணங்களையும் குறிப்பிட்டு அன்றைக்கான விடுமுறையை அறிவிப்பதை இவ்வங்கி வழக்கமாக கொண்டுள்ளதை அதன் இணையதளத்தில் உள்ள விடுமுறைதினங்களின் பட்டியல் (http://www.icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/common/holiday.htm) தெரிவிக்கிறது. (உதாரணத்திற்கு, ஏப்ரல் 14:  டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவிசுவ சங்கராந்தி/ சிராபோ/ பிஜூ பண்டிகை/ வைசாகி/ போஹாக் பிஹூ). இதன்படி மே முதல்நாளை சர்வதேச உழைப்பாளர் தினம்மகாராஷ்டிரா தினம் என்று குறிப்பிட்டிருந்தால் அதை நேர்மையான செயலாக கருத முடியும். அவ்வாறின்றி மே முதல்நாளை வெறுமனே மகாராஷ்ட்டிரா தினமாக மட்டுமே ஐசிஐசிஐ அறிவிப்பதன் பின்னே உள்ள அரசியல் என்ன? எட்டுமணி நேர வேலைக்காகப் போராடி உயிர்நீத்த தொழிலாளர்களின் வரலாற்றை 12 மணிநேரம் வேலை பார்க்கும் தன்னுடைய ஊழியர்கள் அறியக்கூடாது என்று அஞ்சுகிறதா ஐசிஐசிஐஒற்றுமை, சங்கம், போராட்டம், கூட்டுபேரச்சக்தி என்பவற்றை நினைவூட்டும் உழைப்பாளிகளின் போராட்ட வரலாற்றை மக்களது நினைவுப்பரப்பிலிருந்து அழிப்பதற்கு அது விரும்புகிறதா? உண்மையான வரலாற்றுக்காரணங்களுக்காக கொண்டாடப்படும்/ நினைவு கூர்ந்திடும் புகழ்பெற்ற நாட்களை அவமதிப்பதற்காகவோ முக்கியத்துவமிழக்கச் செய்வதற்காகவோ அந்த நாட்களின்மீது வேறு மலினமான காரணங்களை புனைந்தேற்றுகிற பிற்போக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்தால், ஐசிஐசிஐ வெறும் வங்கித்தொழிலை மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.

சர்வதேச உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்வதை ஒரு முழுநேரத் தொழில் போல செய்து வருகின்ற அமெரிக்காவிலேயே வால்ஸ்டீரிட்டை இடங்கொள்ளும் இயக்கத்தவர் இவ்வாண்டின் மே தினத்தில் சக்திமிக்க வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த ஐசிஐசிஐ எம்மாத்திரம் என்று ஒதுக்கிவிட்டுப் போகாமல் அதற்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம். கூடவே, 126 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆதிக்கச்சக்திகளால் வெறுக்கப்படுமளவுக்கும் அச்சுறுத்துமளவுக்கும் மே தினம் வலுவோடுதான் இருக்கிறது என்கிற செய்தியையும் உலகறியச் சொல்வோம்.

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...