அன்புள்ள ஜெயமோகன், 26.06.2012 ஆம் தேதி என்னுடைய கடிதத்திற்கு
பதில் எழுதியிருந்தீர்கள். "உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறேன். ஜனநாயகம்
என்று ஒன்று உள்ளது அல்லவா?" என்று கடிதம் துவங்குகிறது. என்னைப் பற்றிய
அவதூறுகளையும் பொய்யான தகவல்களையும் நீங்கள் உங்கள் வலைத்தளத்தில்
எழுதியபோது, அதற்கான எதிர்வினையாக உங்களுக்கு எழுதிய கடிதத்தை நீங்கள்
பிரசுரம் செய்வதுதானே இதழியல் மரபு? அதைத்தானே நீங்களும் செய்தீர்கள்.
இதில் என்ன கூடுதல் ஜனநாயகமும் பெருந்தன்மையும்?
நான் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறாது, ஏதேதோ
சொல்லியபடி செல்கிறீர்கள். பரவாயில்லை. உங்களுக்காக இல்லாவிட்டாலும்
உங்களுடைய நியாய உணர்வு மிக்க வாசகர்களுக்காகவும் சமகால வரலாற்றில்கூட
உண்மைகள் மறைக்கப் படுவதை இயன்றவரை தடுப்பதற்காகவும் இக் கடிதத்தை
எழுதுகிறேன்.
முன்னதாக, பத்தாண்டுகளுக்கு முன் நாம் நெருங்கிய நண்பர்களாக, அதன்
நிமித்தம் உங்களுக்காக நானாகவே செய்த சில உதவிகளை இப்பொழுது சொல்ல
நேர்ந்தது, நீங்கள் தொடர்ந்து செய்துவரும் நேர்மையற்ற அவதூறுகளினால்தான்.
ஒடுக்கப்பட்ட
மக்களுக்காகவும் தாங்கள் நம்பும் கொள்கைகளுக்காகவும் தமிழ்-இந்திய
அறிவுப் புலத்தில் தொடர்ந்தும் தன்னலமற்றும் இயங்கிக்கொண்டிருக்கும் வ.கீதா,
எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அறிவுஜீவிகளை தொடர்ந்து அவதூறு
செய்துவரும் உங்கள் நோக்கத்திற்கு நிர்பந்தங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள்
நோக்கம் ஆபத்தானது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர்கள் மீது நீங்கள்
சுமத்தும் அவதூறுகளில் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியாது என்று வேறு
எவரையும்விட உங்களுக்குத் தெரியும். பின் ஏன் இதைச்செய்கிறீர்கள். இதனால்
என்ன உங்களுக்கோ உங்களுடைய கருத்தியலை ஆதரிப்பவர்களுக்கோ என்ன நன்மை?
எளிதில் எவராலும் ஊகிக்கக்கூடியதுதான் அது. மார்க்சீய, பெரியாரிய,
அம்பேத்கரிய தத்துவங்களோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள் மீது இருக்கும்
நன்மதிப்பை குலைப்பதுதான். அதனால் ஏற்படும் சந்தேகங்களினால் நம்பிக்கை
இழப்பவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான். தலித்துகளுக்கும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் இன்றைக்கு பெரும்
அச்சுறுத்தலாக இருப்பது இந்துத்துவாவைத் தவிர வேறு என்ன இருக்கிறது.
இதிலிருந்து நீங்கள் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறீர்கள் என்றும்
அதனால்தான் நீங்கள் வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களின்
மீது கசப்பை உமிழ்ந்தபடி இருக்கின்றீர்கள் என்றும் முடிவுக்கு வர
வேண்டியுள்ளது.
இன்றளவும் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து (பேருந்திலும், ரயிலிலும்)
தான் நம்பும் கருத்துகளை பேசிவரும் அ.மார்க்ஸ்ஸையும் நண்பர்களின் உதவிகளையோ
அல்லது வேறு எந்த நிறுவனங்களின் உதவிகளையோ ஏற்றுக்கொள்ளாமல், களப்பணியாற்ற
உடல்நிலை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்காகவே
இயங்கிக்கொண்டு ஓர் எளிய வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.வி.ராஜதுரை
மீதும் விடியல் சிவா மீதும் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை உங்கள் 'நினைவின்
நம்பிக்கைகளிலிருந்தும் உள்ளுணர்விலிருந்தும்' சொல்கிறீர்கள்.
'மனச்சாட்சி சந்தை' என்னும் உங்களுடைய வலைத்தளக் கட்டுரையில் பல்வேறு
பொய்களையும் அவதூறுகளையும் எழுதினீர்கள். அதில் எஸ்.வி.ராஜதுரையையும்
விட்டுவைக்கவில்லை. பொதுவாகவே எஸ்.வி.ஆரை தொடர்ந்து விமர்ச்சித்து வருவதை
நான் கவனித்தபடி உள்ளேன். நீங்கள் 'உயிர் எழுத்தை' சிலாகித்தும்
'பாராட்டியும்' எழுதியபோதும் எஸ்.வி.ஆரை உங்கள் நச்சு எழுத்துகளால்
தீண்டாமல் விட்டதில்லை. மேற்கூறிய கட்டுரையில் பெரும்பாலான பகுதிகள் உங்கள்
சுயத்தைப் பற்றியும் உங்கள் நிலைப்பாடுகள் பற்றியும் உங்கள் இலக்கியப்
பங்களிப்புகள் மற்றும் 'தியாகத்'தைப் பற்றியும் பேசுகின்றன. ஆனால்
உண்மையில் அவ்வாறு நீங்கள் இல்லை என்பதுதான்.
"பலவழிகளில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்ட எழுத்தாளர்கள் தமிழில்
இருக்கிறார்கள். நான் என் சொந்தப்பணத்தையே எப்போதும் இலக்கியத்துக்காகச்
செலவிட்டு வருகிறேன்" என்ற தங்களுடைய வரிகள் என்னை எழுதத் தூண்டின. ஏனெனில்
இது இப்பொழுது என் சம்பந்தபட்ட விசயமில்லை. நீங்கள் எந்த அறத்தையும்
கடைபிடிக்காமல் உங்களை மாபெரும் 'அற'வானனாக காட்டிக்கொள்கையில் நீங்கள்
அப்படி இல்லை என்று சொல்வதற்காக நான் விரும்பாவிட்டாலும் நடந்த உண்மைகளை
சொல்லத் தீர்மானித்தேன். எனவேதான் ராஜன்குறை முகநூல் பக்கத்தில் இது பற்றி
எழுதினேன். பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் குற்றமே. இப்பொழுது
உங்கள் கடிதத்திற்கு வருகிறேன்.
சப்பைக்கட்டு 1: "பொதுவாக
தனிப்பட்ட நட்புகளின் அடுத்தகட்ட கசப்புகளை விவாதிக்கும்போது
ஒவ்வொருவருக்கும் அவரவர் சரிகள் இருக்கும். உங்கள் தரப்பை,
நியாயப்படுத்தலைச் சொல்கிறீர்கள். நான் சொல்வது நான் அறிந்ததும்
உணர்ந்ததுமான உண்மைகளை மட்டுமே".
"பொதுவாக தனிப்பட்ட நட்புகளின் அடுத்தகட்ட கசப்புகளை" என்று எதைச்
சொல்கிறீர்கள்? நமக்குள் எந்தக் கசப்பும் இல்லையே. இதுவரைக்கும் நாம்
எவ்வித சண்டையோ சச்சரவோ போட்டதில்லையே. அடுத்தக்கட்ட கசப்பென்றார்
முந்தையக் கசப்பு எது என்று விளக்க முடியுமா?
சப்பைக்கட்டு 2:
"எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிரெழுத்துக்குமான கருத்தியல் தொடர்பை அவ்விதழின்
தலையங்கத்தையும் அவர் எழுதும் கட்டுரைகளையும் ஒப்பிட்டு வாசிப்பவர்
புரிந்துகொள்ளமுடியும். அதை மறுப்பது உங்கள் நிலைபாடு என்றால் அதை
புரிந்துகொள்கிறேன். நான் அதை ஒரு கூட்டுச்செயல்பாடாகவே பார்ப்பேன்.
சிற்றிதழ்ச் சூழலில் இவ்வகை விஷயங்கள் எப்படி நடக்குமென எளிதில்
ஊகிக்கமுடியும்"
மார்க்ஸியத்தையும் பெரியாரியத்தையும் நான் என் வாழ்க்கை முறையாக
ஏற்றுக்கொண்டவன். அதை கடைபிடிப்பவன். இடதுசாரி அமைப்புகளில் செயல்பட்டவன்.
அந்த வகையில் எஸ்.வி.ராஜதுரை எழுத்துகளில் மட்டுமல்ல; மார்க்ஸியத்தையும்
பெரியாரியத்தையும் வாழ்க்கை முறையாகக்கொண்ட எவருடைய எழுத்துகளிலும் ஒரு
ஒற்றுமையைக் காணலாம். அதற்காக, எஸ்.வி.ஆர்தான் 'உயிர் எழுத்தை' வழி
நடத்துகிறார் என்று நீங்கள் சொல்வது தவறு. உங்களுடைய வழிமுறைகளைத்தான்
மற்றவர்களும் கடைப்பிடிப்பார்கள் என்று நீங்கள் நினைப்பதுதான். 'சொல்
புதிது'க்கு ஆசிரியர்கள் முறையே சூத்திரதாரி, சரவணன்1978, சதக்கத்துல்லா
ஹஸனீ ஆகியோர்கள் இருந்தாலும் உண்மையான ஆசிரியர் நீங்கள்தான். நீங்கள்
மத்திய அரசு ஊழியர் என்பதால் உங்கள் பெயரை ஆசிரியர் என்று போடவியலாது.
ஆனால் என் நிலைமை அப்படியல்ல.
சப்பைக்கட்டு 3:
"உயிர் எழுத்தில் என் கட்டுரையுடன் நீங்கள் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை
மட்டும்தானா? உங்களுக்கு மாற்றான ஒரு தரப்பு என்ற பொருளில் அல்ல ‘ஜெயமோகன்
எத்தனை இழிவானவர் என்பதை இந்தக்கட்டுரையிலேயே காணலாம்’ போன்ற சொற்களுடன்
அல்லவா அது உங்கள் எழுத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது?
"இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளை பதிவு
செய்த நூல் 'முறிந்த பனை' மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்
(யாழ்ப்பாணம்) வெளியிட்ட 'முறிந்த பனை' நூலில் இருந்து சில பகுதிகள் இங்கு
பிரசுரிக்கப்பட்டுள்ளன. மிகுந்த மன வாதையோடும் சொல்லவியலா துயரத்தோடும் இதை
வாசிக்க நேர்கிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தாங்கள்
நேரடியாக பார்த்ததை, பாதிக்கப்பட்டவர்களிடம் செய்த நேர்காணலைக்கொண்டு இந்த
நூலை உருவாக்கியுள்ளார்கள். இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு
பின்னர் 1996இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகும். இந்நூலை
கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய கலாநிதி ராஜனி திராணகம 1989இல்
படுகொலை செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் அங்கு இருந்த கவிஞர் பானு பாரதி
எழுதிய சில கவிதைகளும் இங்கு பிரசுரமாகியுள்ளது. இவற்றை படிக்கும்
எவருக்கும் புரியும், இந்திய ராணுவத்தினரும் அவர்களை ஆதரிக்கும் ஜெயமோகனும்
எத்தனை கீழ்த்தரமானவர்கள் என்று.
இந்திய அமைதிப்படை சென்றதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளை ஆதாரத்துடன் விளக்கும் 'முறிந்த பனை' நூலை பயணி வெளியீட்டகம் பதிப்பித்துள்ளது".
'உயிர்
எழுத்'தில் நான் எழுதிய சிறு குறிப்பு. இதில் எந்த இடத்தில் '‘ஜெயமோகன்
எத்தனை இழிவானவர் என்பதை இந்தக் கட்டுரையிலேயே காணலாம்’ என்று வருகிறது?
"இவற்றை படிக்கும் எவருக்கும் புரியும், இந்திய ராணுவத்தினரும் அவர்களை
ஆதரிக்கும் ஜெயமோகனும் எத்தனை கீழ்த்தரமானவர்கள்" என்றுதானே வருகிறது.
'முறிந்தபனை' நூலை படித்துவிட்டு உங்கள் பதிவை படித்தபோது இந்த உணர்வையே
நான் அடைந்தேன். எவரும் இதையே உணர்வர். எனவேதான் இப்படி எழுதினேன். நீங்கள்
இவ்வாறு எழுதலாமா ஜெய்? இதுதான் உங்கள் அறமா? (இழிவானவர் என்பதற்கும்
கீழ்த்தரமானவர்கள் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை நான் உங்களுக்கு
விளக்கிச் சொல்ல தேவையில்லை).
சப்பைக்கட்டு 4: "குறைந்தது
இருபது பேராவது உங்களிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது என்று சொன்னார்கள்.
அனுப்பவில்லை என்பதே உங்கள் நிலைபாடு என்றால் அதுவும் சரிதான்".
இது என்னைப் பற்றிய மிக முக்கியமான உங்களுடைய அவதூறாக நான் கருதுகிறேன்
ஜெய். நீங்களும் உங்கள் மூலமாக 'அந்த இருபது பேரும்' இதை நிரூபிக்க
வேண்டும். நிரூபிக்காவிட்டால் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால்
நான் உங்கள் மீது வழக்கு தொடர வேண்டியது வரும். ஏனெனில், ஒருவருக்கு எதிராக
இருபது பேரை தூண்டிவிடுவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இந்த
குற்றச்சாட்டை எளிதில் புறம் தள்ளவியலாது.
சப்பைக்கட்டு 5:
"சொல்புதிதுக்கு நான் உங்களிடம் விளம்பரம் கோரினேன். அதற்குப்பதிலாக
எப்படியும் இருபது முறையாவது ‘காலச்சுவடை அடிச்சு தூக்கிரலாம்... கிராண்டா
பண்ணலாம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் சொன்ன வரியையே
சொல்லியிருக்கிறீர்கள். மனுஷ்யபுத்திரனை நீங்கள் உருவாக்கினீர்கள், நீங்கள்
இல்லையேல் அவர் இல்லை என என்னிடம் மட்டுமல்ல பலரிடமும்
சொல்லியிருப்பீர்கள். அதையும் மறுக்கிறீர்கள் என்றால் அதுவும் உங்களுடைய
சமகால நிலைபாடாக இருக்கலாம்".
நான் அப்போது தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை.
சரியாகச் சொல்லப்போனால் 1987லிலிருந்து 2000வரைக்கும் சுமார் 13ஆண்டுகள்
நான் எல்லா நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருந்தேன். இந்தச் சமயத்தில்தான்
'காலச்சுவடு' மீண்டும் துவக்கப்பட்டது. எனக்கு அதனுடைய நடவடிக்கைகள்
எதுவும் தெரியாது, மனுஷ்யபுத்திரன் அப்பொழுது 'காலச்சுவ'டில் இருந்தார்
என்பதைத் தவிர. எனக்கும் 'காலச்சுவடு'க்கும் ஒரு பிரச்சினையும் இல்லாதபோது
நான் எப்படி "‘காலச்சுவடை அடிச்சு தூக்கிரலாம்... கிராண்டா பண்ணலாம்’ என்று
நான் சொல்லியிருப்பேன். இப்படி நீங்கள் சொல்வது பச்சைப்பொய். சிண்டு
முடிந்துவிடுகிற கேவலமான வேலை. 'காலச்சுவடு'க்கும் உங்களுக்கும்தான்
அப்பொழுது பிரச்சினை. 'காலச்சுவடு'க்கு எதிராக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க
வேண்டும் என்பது உங்கள் கனவு. அதை 'உயிர்மை' மூலம் நிறைவேற்றிக்
கொண்டீர்கள் என்பதுதான் உண்மை.
"மனுஷ்யபுத்திரனை நீங்கள் உருவாக்கினீர்கள், நீங்கள் இல்லையேல் அவர்
இல்லை என என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் சொல்லியிருப்பீர்கள்".
மனுஷ்யபுத்திரன் உருவாக நான் காரணமில்லை என்று தெளிவாகவே சொல்லியிருந்தேன்.
இப்பொழுதும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் 'உயிர்மை'யில் என்
பங்களிப்பையும் மனுஷ்யபுத்திரனின் ஆளுமையையும் போட்டுக்
குழப்பிக்கொள்கிறீர்கள். 'உயிர்மை' ஆரம்பித்தது நானும் மனுஷ்ய புத்திரனும்
(உயிர்மை பதிப்பகத்தை அல்ல; அதில் என் பங்கு துளியும் இல்லை). அது
மனுஷ்யபுத்திரனை இன்னொரு தளத்துக்கு அழைத்துச்சென்றது. என் பங்களிப்பின்
முக்கியத்துவத்தை மனுஷ்யபுத்திரன் மட்டுமல்ல; தமிழ் இலக்கியப் புலத்தில்
உள்ள எவரும் அறிவர். அதை நான் சொல்லியிருப்பேன். மனுஷ்யபுத்திரனுக்கு
இடதுசாரி தத்துவங்களை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று அவரே ஒரு
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் என்றாலும் அவர் தன் வாசிப்பின் வழியே தன்னை
செழுமைப் படுத்திக்கொண்டார் என்றே சொல்வேன். சரி அப்படி சொன்னால்தான்
என்ன? இதனால் எதை நிறுவ முயல்கிறீர்கள்? மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்கும்
சிண்டுமுடிந்து விடுவதற்குத்தானே? ஒரு எழுத்தாளனுக்கு இது அறமா?
சப்பைக்கட்டு 6: "மருதம்
ஆரம்பிக்கப்பட்டதே சொல்புதிதுக்கு ஒரு ஊழியர் வைக்கமுடியும்
என்பதற்காகத்தான். சொல்புதிதையும் மருதத்தையும் சேர்த்து நடத்தினால்
பொருளியல்ரீதியாக நல்லது என்பதற்காக. அதற்காகவே நீங்கள் உதவினீர்கள்".
நான் தெளிவாக சொல்லியிருந்தேன். இப்பொழுதும் சொல்கிறேன், நான் 'சொல்
புதிது'க்கு எந்த உதவியும் செய்கிறேன் என்று சொல்லவுமில்லை, செய்யவுமில்லை.
ஒரு வேலை அது உங்கள் 'தனிப்பட்ட' செயல்திட்டமாக இருக்கலாம். நான்
திருச்சியிலிருந்து என்னுடைய நிறுவனத்தின் டொமெயினிலிருந்து மருதம்.காமை
நடத்தலாம் என்று நான் சொன்னபோது நீங்கள் அதை ஏன் உறுதியாக மறுத்தீர்கள்
என்பது எனக்கு இப்பொழுதான் புரிகிறது.
சப்பைக்கட்டு 7:
"நீங்கள் செய்த உதவி டொமெய்ன் பதிவுசெய்து அளித்தது மட்டுமே. அதற்கான
ரசீதுகளோ செலவுகளோ எதுவும் எனக்கு அளிக்கப்பட்டதில்லை. சரவணனுக்கு நீங்கள்
ஊதியம் அளித்தீர்கள், கணிப்பொறி வாங்கிக்கொடுத்தீர்கள் என்பதெல்லாம் எனக்கு
இப்போது தெரியவரும் புதியசெய்தி. வாங்கிக்கொடுப்பதாக நீங்கள் இருமுறை
சொன்னீர்கள் என்பது என் நினைவு. அவர்தான் அதை உறுதிசெய்ய வேண்டும்.
கணிப்பொறி வாங்கிக்கொடுத்திருந்தால் ஏன் அவர் விலகும்வரை வெளியே கொடுத்து
சொல்புதிதை தட்டச்சு செய்தார்?"
நான் எப்போதும் நடந்தவகைளையும் உண்மையையும் பேசக்கூடியவன். எனக்கு
யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நான் நம்பும் விசயங்களுக்காக நான்
செயல்படுகிறேன்.
மருதம்.காம் வெளிவந்து கொண்டிருந்தபோதே கணிப்பொறி
சரவணனுக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டது. காரணம் வடிவமைப்பதற்கும் தட்டச்சு
செய்வதற்கும் சுமார் 5000 ஆயிரம் செலவாகிறது என்றும் கணிப்பொறி
வாங்கிவிட்டால் தானே அதை செய்துவிட முடியும் என்றும் சரவணன் சொன்னார்.
எனவே, அவரை திருச்சிக்கு வரச்சொல்லி இங்கு டெக்னோட்ரானிக்ஸ் என்னும்
நிறுவனத்தில் சுமார் 50,000 மதிப்புள்ள கணிப்பொறியும் ஸ்கேனரும் வாங்கித்
தந்தேன். அதற்காக திருச்சி ஜெயின்சனில் கடன் வாங்கினேன் (மாத தவணைக்கு).
அன்று ஐந்தாயிரம் ரொக்கமும் கொடுத்தேன். திருச்சியிலிருந்து
கணிப்பொறியாளர்கள் மதுரை சென்று கணிப்பொறியை இன்ஸ்ட்டால் செய்தார்கள். அதை
உடனே உங்களுக்குத் தெரிவித்தேன். அதற்கு, கணிப்பொறி எதற்கு என்று என்னிடம்
வினவவும் செய்தீர்கள். இதற்குப் பின்னரும் சரவணன் 2500 ரூபாய் ஆகிறது என்று
சொன்னார். இரண்டு மாதங்களுக்கு பணம் கொடுத்தேன். சரவணன் தொடர்ந்து தன்
தந்தை அவரை ஏசுவதாகச் சொன்னார். நான் தொழில் இழப்பில் மூழ்கிக்கொண்டிருந்த
நேரம் அது. பின்னர்தான் உங்களிடம் நடத்த இயலாததைச் சொன்னேன் என் முந்தைய
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி.
நானாக விரும்பியே உங்களுக்காக மருதம் இணைய இதழை ஆரம்பித்தேன். அதற்கான
டொமெயின் அப்போதைய என் நிறுவனத்தின் ஆடிட்டர் முத்துகுமாரசாமி நடத்திய
நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது. இரண்டு தவணையாக ஒரு லட்சம்
கொடுக்கப்பட்டது. அதன் ரசீதுகளை, நான் நாகர்கோவிலில் உங்களை சந்திக்க
வந்தபோது நேரில் கொடுத்தேன். இதையெல்லாம் நீங்கள் மறுக்கலாம் இப்பொது.
ஆனால் சம்பந்த இடங்களில் உண்மைகள் உறைந்து இருக்கின்றன. அவை சாட்சியங்களாக
இருக்கின்றன.
"கணிப்பொறி வாங்கிக்கொடுத்திருந்தால் ஏன் அவர் விலகும்வரை வெளியே
கொடுத்து சொல்புதிதை தட்டச்சு செய்தார்?" என்ற கேள்வியை நீங்கள்
கேட்கவேண்டியது சரவணன்1978 இடம்தான். என்னிடம் இதற்கான பதில் இல்லை. சரவணனை
எனக்கு அறிமுகப்படுத்தியதே நீங்கள்தான்.
சப்பைக்கட்டு 8:
நாகர்கோயிலில் ஒரு பக்கத்துக்கு பத்துரூபாய்க்குமேல் ஆகாது என
வாதிடுகிறீர்கள். சரிதான், நாகர்கோயிலில் இப்போதும்கூட இருபது ரூபாய் ஆகும்
ஒரு பக்கத்துக்கு. அன்று சராசரியாக மாதமொன்றுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய்
தட்டச்சுக்குச் செலவிடப்பட்டது. அது எனக்கு பெரியதொகை.
சரிதான். பத்தாண்டுகளாக நாகர்கோவிலில் ஒரு பக்கம் தட்டச்சு செய்ய இருபது ரூபாய்கள் வாங்குகிறார்கள் என்றால் அதுவும் சரிதான்!
சப்பைக்கட்டு 9:
"ஆறுமாதத்துக்கு ஸ்பேஸ் இருக்கிறது என்று நீங்கள் சொன்னதாகச் இப்போது
சொல்வதை பெரும் ஆச்சரியத்துடன் மட்டுமே பார்க்கிறேன். இதைப்போல இன்னும் பல
கேட்கநேரிடலாம் போலும். ஒருநாள் காலையில் மருதம் நின்றுவிட்டது. ஏன் என்று
தெரியவில்லை. உங்களை பலமுறை கூப்பிட்டபின் ஏதோ தொழில்நுட்பச்சிக்கல் உடனே
சரியாகிவிடும் என்றீர்கள். அதன்பின்னர் டொமெய்ன் காலாவதியாகிவிட்டது உடனே
பணம் கட்டுகிறேன் என்றீர்கள். அப்படி சொல்லிக்கொண்டே இருந்தீர்கள்.
அப்படியே இருமாதம். அதன்பின்னர் பணம் கட்டினாலும் டொமெய்னை
மீட்கமுடியாது வேறு டொமெய்ன் பார்ப்போம் என்றீர்கள். அதற்காக
காத்திருந்தேன். அதன்பின் நம்மிடையே தொடர்பே விட்டுப்போயிற்று. நீங்கள்
தொலைபேசியை எடுப்பதில்லை. நான் அழைக்கவுமில்லை. மனுஷ்யபுத்திரன் நீங்கள்
சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். அதன்பின் நாம் பார்ப்பது ஒரு வருடம்
கழித்து. உங்கள் நிதிச்சிக்கல்களை அப்போது சொன்னீர்கள்"
இதற்குத் தேவையான அளவு விளக்கங்கள் கொடுத்துவிட்டேன். நீங்கள் அழைத்து
ஒருபோதும் தொலைபேசியை எடுக்காமல் இருந்ததில்லை. அதற்கு அவசியம் இல்லை.
நமக்குள் பெரிய இடைவெளியும் ஏற்பட்டு விடவில்லை. 2003இல்தான் 'உயிர்மை'
தொடங்கப்பட்டுவிட்டதே. உங்கள் நினைவின் நதியில் ஏன் இத்தனை தடுமாற்றம்
ஜெய்?
சப்பைக்கட்டு 10: "சில
இதழ்கள் வரட்டும், அதன்பின் எழுதுகிறேன் என்றுதான் சொன்னேன். தொலைபேசியை
துண்டித்த இரவில் நீங்கள் என்ன நிலையில் பேசினீர்கள் என
சொல்லவேண்டியதில்லை"
நான் உங்களிடம் 'உயிர் எழுத்'தில் எழுதுங்கள் எனக் கேட்டது காலை
7மணிக்கு. அது என் கடிதத்தில் தெளிவாக இருக்கிறது. நீங்கள் 'உயிர்
எழுத்'தில் எழுதுவதாக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை. அலுவலகத்திற்கு
நேரமாகிறது என்று கூறியே தொலைபேசியை துண்டித்தீர்கள். அப்பொழுது
எவருக்கும் இருந்ததுபோலவே என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாது
இருந்திருக்கலாம். அது ஒரு குற்றமும் இல்லை. நான் உங்களிடம் பேசிய சிறிது
நேரத்தில் மனுஷ்யபுத்திரன் என்னை அழைத்து பேசினார். அப்பொழுது நான்
உங்களிடம் பேசியதை அவரிடம் சொன்னதாகச் சொன்னார் ("நீ யாரிடம் பேசினாலும்
எனக்கு ஐந்து நிமிடத்தில் தெரிந்துவிடும் என்றும் சொன்னார்).
நீங்கள் நான் இரவில் பேசியதாகவும் நான் 'எப்படி இருந்தேன்'., அதாவது
நான் குடித்துவிட்டு பேசினேன் என்றும் பொய் சொல்கிறீர்கள். நான்
குடித்துவிட்டு பேசினால்தான் என்ன? ஒருவரை எதிர்கொள்ள இப்படி தரம்
தாழ்ந்துதான் போகவேண்டுமா?
சப்பைக்கட்டு 11:
"இவ்வளவையும் பொதுவெளியில் சொல்லவேண்டிய கட்டாயம் உங்களால் உருவானது.
ஃபேஸ்புக் போன்ற சமூகதளங்களில் எனக்காக நீங்கள் ‘லட்சக்கணக்கில்’
செலவிட்டீர்கள் என்றும் அதை நான் மறைப்பதாகவும் நீங்கள் எழுதினீர்கள். அதை
தெளிவுபடுத்தியாகவேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் இதெல்லாமே நான் சொல்லும்
பொதுவான பிற விஷயங்களை மழுங்கடிப்பதற்கான காரணங்களாக முன்வைக்கப்படும்".
இவ்வளவும் என்னால் உருவாகவில்லை; நீங்கள் கண்ணாடி வீட்டிற்குள் வந்து
கல்லெறிந்தனாலேயே வந்தது. ஃபேஸ் புக்கில் என்ன எழுதினேன். ராஜன் குறை இட்ட
ஒரு நிலைத் தகவலுக்கு போட்ட கமெண்ட் இதுதான்: "தமிழில் என்னளவுக்கு
தீவிரமாக பாதிக்கக்கூடிய மொழி கொண்ட இன்னொரு படைப்பாளி இல்லை என்பதே"
என்னும் ஜெயமோகனின் வரிகளில் மிளிரும் கர்வம் ஓர் எழுத்தாளனுக்குரியதல்ல.
மேலும் "பலவழிகளில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்ட எழுத்தாளர்கள்
தமிழில் இருக்கிறார்கள். நான் என் சொந்தப் பணத்தையே எப்போதும்
இலக்கியத்துக்காகச் செலவிட்டு வருகிறேன்". இப்படிப்பட்ட கோயபல்ஸ் புளுகை
தமிழில் யாரும் சொன்னதில்லை. ஏனெனில் 'உயிர்மை' ஆரம்பிப்பதற்கு முன்னால்
ஜெயமோகனுக்காக (2001இல்) 'மருதம்.காம்' எனும் இணைய இதழை நான் நடத்தியதை
பலரும் அறிவர். லட்சங்களை விழுங்கிய 'மருதம்.காம்' குறித்து ஜெயமோகன்
எங்கும் சொல்வதில்லை. அவருடைய 'அறிவு நாணயம்' அத்தகையது.
@Arangasamy Kv 2001இல் ஒரு ஜீபி இடம் வாங்க எத்தனை செலவு ஆகும் என்று
உங்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜெயமோகனுக்குத் தெரியும்.
அதற்காக பணம் கட்டப்பட்ட ரசீதுகள் அவரிடம் கொடுக்கப்பட்டன. மருதம்.காம்
ஆசிரியராக சரவணன் 1978 என்பவரை ஜெயமோகனே நியமித்தார். மருதம்.காம்
நடத்துவதற்காக கம்ப்யூட்டர் மற்றும் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டது. இதை
நீங்கள் ஜெயமோகனிடம் கேட்டுக்கொள்ளலாம். மருதம்.காம் நடத்த ஆர்.எஸ்.எஸ்
உதவுவதாக காலச்சுவடு குற்றம் சாட்டியதாக நினைவு. அதையொட்டி சென்னையில் 2004
அல்லது 2005 இல் நடந்த சென்னை புத்தகக் காட்சியில் ஜெயமோகனால்
காலச்சுவட்டிற்கு பதில் கூறும்முகமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்ட
பிரசுரத்தில் ஒரு நண்பர் உதவியால் வெறும் மாதம் 3000 ரூபாய் செலவில்
நடத்தப்பட்டது என்றும் அந்த நண்பர் தொடர்ந்து உதவி செய்ய இயலாததால் இணைய
இதழை தொடர்ந்து நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் மருதம்.காம்
பற்றி குறிப்பிட்டுள்ளார். எத்தனை இதழ் நடத்தப்பட்டது என்ற சந்தேகத்தை
நீங்கள் ஜெயமோகனிடமே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மற்றபடி எந்த ஜீப்பிலும்
ஏற எனக்கு நேரமில்லை. உங்கள் பயணம் இனிதே அமையட்டும். நன்றி"
இதில் நான் எவ்விதமான பொய்களையோ அவதூறுகளையோ சொல்லவில்லை. உண்மையை
மட்டுமே பேசினேன். எனக்கு ஏற்பட்ட இழப்புகளை பற்றி நான் கவலைப்படவில்லை.
நான் விரும்பியே செய்தேன். "மருதத்தை பெரிய அளவில் ஆரம்பித்தோம். அன்றைய
காலகட்டத்தில் மருதம் அளவுக்கு பெரிய இணைய இதழ் ஏதும் இருக்கவில்லை." என்று
கூறும் உங்களுடைய வலைத்தளத்தில் ஏன் இது பற்றிய தகவல் இல்லை?
சப்பைக்கட்டு 12:
"சொல்புதிதுக்கு நீங்கள் அளித்த பணம் என்பது நானறிந்தவரை மருதம் டொமெய்ன்
மட்டுமே. [அதுவும் உங்கள் நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது. அதை பின்னர்
உங்கள் நண்பர்களாலேயே அறிந்தேன்] அதை இப்போது உறுதிசெய்ய விரும்புகிறேன்".
உங்களை என்னதான் சொல்வது. என் நிறுவன உள் விவகாரங்கள் தெரிந்த ஒரு
நண்பரும் இல்லை. அப்பொழுது என் நிறுவனத்தில் 23 பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களை உங்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. அப்படி தெரிந்திருந்தாலும் நான்
சொன்ன தகவலைத்தான் சொல்லமுடியும். ஏனெனில் அதுதான் உண்மை. சரி விடுங்கள்,
யார்தான் அந்த 'நண்பர்'? ஜெய், சொல்லுங்க ப்ளிஸ்..!
சரி, விடுங்கள் ஜெய். சுதீர் செந்திலையே தெரியாது என்று
சொல்லிவிடுங்கள். பிரச்சினை முடிந்தது. நானும் உங்களை தெரியாது என்று
சொல்லிவிடுகிறேன். ஆனால், நான் இருபது பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்
என்பதை மட்டும் விளக்கிவிடுங்கள். இல்லையெனில் நான் சட்டரீதியாக உங்களை
எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
.
பார்க்கலாம் ஜெய்.
சுதீர் செந்தில்
திருச்சி
28.06.2012