திங்கள், ஆகஸ்ட் 5

சுதந்திரம் 2013, ஒரு யானை அங்குசதாரியாகிறது - ஆதவன் தீட்சண்யா



சுதந்திரம் 2013

யுத்தமோ அவசரநிலையோ அறிவிக்கப்படாத
இந்நாட்களின் ஒவ்வொரு முன்னிரவிலும்
மத்தியகாலத்து மணியோசை
கண்டங்களைத்தாண்டி எச்சரிக்கிறது
சைரன் ஒலியாக

கடைகண்ணிகளைச் சாத்தியக் கையோடு
திண்ணைகளையும் தெருக்களையும் சுருட்டிப்போய்
காவல்நிலையத்தின் மூலையில் சாய்த்த குடிமக்கள்
நிலா நட்சத்திரங்கள் மேகக்கூட்டம் இருள் ஒளியென 
தத்தமது வசமிருந்த இரவுகளையும்
உள்ளது உள்ளவாறு அப்படியப்படியே ஒப்படைத்தபோது
இரவு மணி பதினொன்று

இரவின் வாழ்வை
குடிமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காவலர்கள்
பதிலுக்கு
ஒவ்வொருவர் தலையிலும் ஏற்றியனுப்பினர்
அமைதியை 

அமைதியை தூக்கிவந்த வழியெங்கும்
அடுப்பாங்கரையின் நெருப்பு அணைந்தது
குரைத்த நாய்களின் குரல்வளை அறுந்தது
ரெண்டாவதாட்டம் ரத்து செய்யப்பட்ட
சினிமாக்கொட்டகைகளில் பதுங்கின பேய்கள்
அகாலத்தில் அலறும் வழக்கமுடைய ஆந்தையும்
அதிகாலை 4 மணிக்காக காத்திருக்கிறது மௌனமாய்
அமைதியைக் குலைக்க விரும்பாத அன்னையொருத்தி
பாலுக்கு வீறிட்டக் குழந்தையின் கழுத்தை நெறித்தாள்

தெருவெங்கும் நிறைத்ததுபோக
எஞ்சியிருந்த அமைதியைச் சுமந்து 
வீடுகளுக்குள் ஓடிப்புகுந்த குடிமக்கள்
உள்ளிருந்து தாளிட்டுக்கொண்டதோடு
சன்னல்களையும் புகைப்போக்கிகளையும் அடைத்தார்கள்
வெளியே வர பரபரக்கும் கால்களை முறித்து
தத்தமது கண்ணுக்கே தெரியாதபடி பரணில் ஒளித்தனர்
விளக்குகளை அணைத்து படுக்கையில் விழுந்ததும்
இமைகளைத் தைத்து கண்களை மூடினர்
ஞாபகமறதியில் கதவைத் திறந்துவிடாதிருக்க
கைகளை பின்புறமாய் கட்டிக்கொள்வதற்கு முன்
பற்களால் கவ்விக்கொண்டனர்  
அடையாள அட்டையின் நகலொன்றை

ஒவ்வொரு தெருவிலும்
ரோந்து வாகனங்களிருந்து இறக்கிவிடப்பட்ட அமைதியால்
சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்ட இவ்விரவு
அடர்ந்த இருளில் வளரத்தொடங்கும் வேளையில்
ஊரடங்கு உத்தரவையறியாத கோழியொன்று
பெருங்குரலெடுத்து கூவித்தொலைக்கிறது இவ்வாறு.

ஒரு யானை அங்குசதாரியாகிறது

யானையின் நிறம்
கருப்பு, சாம்பல், கருஞ்சாம்பலெனக் குழம்பி
எலிபண்ட் ப்ளாக் எனச் சொல்லி
மாவுத்தனே நழுவும்போது
யானை குறித்து ஏதுமறியாத நீங்கள்
அதை வாங்கி வந்ததுதான் முதற்பிழை

அந்தஸ்துக்காக அரசர்கள் வைத்திருக்கும் யானையை
அன்னாடங்காய்ச்சிகள்
தூர இருந்து பார்க்கலாம்
தொடை நடுங்காதிருந்தால் தொட்டும் தடவலாம்
வளர்க்க ஆசைப்பட்டு வாங்கினது கெடுவினை

கொஞ்சுவதற்கும் ஏவுவதற்கும் தோதாக
கைக்கடங்கிய வளர்ப்புமிருகங்கள் எத்தனையோ இருக்க
ஒரு யானையை இழுத்துவந்த தவறுக்கான  விலையை
நீங்கள் கொடுத்துத்தானாக வேண்டும்

காற்சங்கிலி
இரும்பிலா தங்கத்திலா
கட்டிவைப்பதெனில்
மரத்தடியிலா மாட்டுத்தொழுவிலா
கட்டாந்தரையிலேயே காற்றாட விட்டுவிடுவதா
கவரி வீசி கண்மூட வைப்பதா
ஏசியில்தான் உறங்குமென்றால்
எந்த ஓட்டலில் ரூம் போடுவதென
எதையுமே யோசியாது யானையை வாங்கிவிட்டீர்

மூங்கக்குத்துகளையும் கருப்பங்காடுகளையும்
இஷ்டம்போல் தின்று வளர்ந்த யானை
நீங்கள் தரும் கூபா புற்கட்டுக்கு பசியடங்காமல்
வேலியைப் பிய்த்தெறிந்து விளைச்சலைத் தின்னும்
விரட்டத் துணிந்தோரை மிதித்தே கொல்லும்

கழுதை குதிரை எருமை எருதென
எதன் மீதும் சவாரிப்போக முடியாதபோது
காலொடிய நடந்த கதை மறந்து
உங்களைச் சுமக்குமென ஓட்டிவந்த யானையை
நீங்கள் சுமக்கத்தொடங்கிய தலைகீழ் நொடியிலிருந்து
உங்கள் நெற்றி புடைத்து மத்தகமாகிறது
அங்குசமோ அதன் தும்பிக்கையில்.

 
நன்றி: தீராநதி, ஆகஸ்ட் 2013

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...