ஞாயிறு, ஏப்ரல் 6

இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள் - ஆதவன் தீட்சண்யா



1. இது திவ்யாவின் கதை

திவ்யா என்றதும், கொஞ்சகாலத்திற்கு முன்புவரை ஊடகங்களிலும் நீதிமன்றம் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலும், அரசியல் கட்சிகளின் மேடைகளிலும் பரபரப்பாக பேசப்பட்ட திவ்யாதான் என்று நீங்களாக நினைத்துக்கொண்டு, அவள் கதைதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என்று படிக்காமல் கடக்கக்கூடும். ஆனால் இது அவளது கதையல்ல அவசரகுடுக்கைகளே. ஏனென்றால் அந்தத் திவ்யாவினுடையது கதையல்ல, நம் காலத்தில் நமது கண்ணெதிரிலேயே நடந்த உண்மை. எந்தவொரு புனைவையும்விட வலிய பாதிப்பை ஆழப் பாய்க்கும் பரவசங்களும் திகிலேறிய திருப்பங்கள் பலவும் துயரங்களும் கொண்ட உண்மையை இன்னொன்றால் விளக்க முடியாது. உண்மையின் முதலும் கடைசியுமாக உண்மையேதான் இருக்கிறது. உண்மையைப் புனைவாக்கும் போது அது, அந்த உண்மையை மேலும் துலக்கமாக்கி அதற்கொரு பொதுத்தன்மையை வழங்குவதற்கான நியாயத்தோடு எழுதப்பட வேண்டுமல்லவா? அப்படி எழுதப்பட்டால், என்னதான் பிரிந்து வந்திருந்தாலும் சாகடிக்கப்பட்டவன் தனது காதல் கணவன் என்பது குறித்த துக்கத்தில் மூழ்கியிருக்கும் அந்தப் பெண்ணுக்கு இந்தக்கதை மேலும் உளைச்சலையே தரும் என்பதால் எழுதாமல் தவிர்க்கப்படுகிறது. சம்பந்தாசம்பந்தமின்றி அவர்களது வாழ்க்கையில் தலையிட்டு ஊரூராக ஓடவிட்டவர்கள், நயவஞ்சகமாக பிரித்தவர்கள், நாடகமாடி கவிழ்த்தவர்கள் என்று பலரும் இந்தக் கதைக்குள்ளும் அதேபோல நுழைந்து கதையையும் தங்களுடையதாக மாற்றித் திரிக்கும் ஆபத்தினைத் தவிர்க்கவும் எழுதாமல் விடப்படுகிறது.

ஒருவேளை இது அந்தத் திவ்யாவை மையங்கொண்ட கதையாகவே இருப்பினும் நீங்கள் படிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அவள் விசயத்தில் நீங்களும் நானும் அதிகமும் அறிந்திருப்பது அவள் பெயரைத்தானேயன்றி மனதையோ வாழ்வையோ அல்ல (திவ்யா என்றில்லை, பொதுவாகவே எந்தவொரு பெண்ணின் மனதையும் அறிந்துகொள்ள இச்சமூகம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை). தன் சாதியில் ஆட்டுப்புழுக்கைபோல வதவதவென எத்தனையோ இளைஞர்கள் பிலுபிலுத்திருக்க, அவள் ஒரு தலித் இளைஞனை உயிரெனக் காதலித்திருக்கிறாள். ஒரு நாயையோ பூனையையோ காதலிக்காமல் மனிதனையே காதலிக்கத் தேர்ந்தமையால், தனது காதலில் புரட்சியோ கலகமோ பொதிந்திருப்பதாக அவள் கருதவில்லை. ஆண் பெண் என்கிற இயல்பொழுங்கு அனுமதிக்கும் எல்லைக்குள் நின்று தனது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்குச் சாதியை ஒரு அளவுகோலாக அவள் மதிக்கவில்லை. அதாவது காதலிப்பதாக இருந்தாலும் சொந்த சாதிக்குள் தான் காதலிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வரும் கருத்தையும் கட்டப்பஞ்சாயத்து மிரட்டலையும் அவள் தன் செயலால் மறுத்திருக்கிறாள். அந்தவகையில், காதலானது சாதி / மதம் பார்த்து வருவதில்லை என்று நெடுங்காலமாய் நிறுவப்பட்ட ஒரு உண்மையைத் தன்மொழியில் சொல்ல முயன்றிருக்கிறாள். அல்லது, இருவரும் ஒரே சாதி என்கிறபோது காதலிக்கவேண்டிய தேவை எங்கிருந்தடா வந்தது என்று யாரையோ கேட்க முயன்றிருக்கிறாள். உண்மைதான், சாதிக்குள்ளேயே காதலிப்பது என்பதை விடவும் மோசடியானது எதுவும் இல்லை.

அவர்களது காதலுக்கு அவளது குடும்பமும் சாதியும் தடையாகி மறித்த போது அவற்றிலிருந்து வெளியேறிப் போய் அவனைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். விரும்பியவண்ணம் அவனோடு சிலகாலமேனும் வாழ்ந்திருக்கிறாள். அவர்கள் கூடி வாழ்ந்ததன் நல்லடையாளமாய் தங்கிய கர்ப்பத்தையும் பிறக்கப்போகும் தங்களது குழந்தையைப் பற்றிய கனவுகளையும் சுமந்துகொண்டு மகிழ்ந்திருக்கிறாள். முதல் கர்ப்பம் தங்காது கலைந்தபோதும் இரண்டாவது கர்ப்பத்தை நிர்ப்பந்தமாக கலைக்க வேண்டி வந்தபோதும் அவள் எத்தகைய வாதையில் துடித்திருப்பாள் என்று நமக்கென்ன தெரியும்? கர்ப்பத்திலிருந்து சிதறி தொடையிடுக்கில் நழுவி விழுந்த ரத்தத்துண்டங்களைப் பார்த்து அவள் கதறியதை ஏடறியுமா எழுத்துதானறியுமா? காணும் முன்பே கலைந்துவிட்டதை கனவென்று சொல்வாளா கற்பிதமென கொள்வாளா? தனது காதலை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்கிற தவிப்பில் சாதியவாதிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் நீதிமன்றங்களிலும் எவ்வளவு துணிச்சலாக வாதாடியிருக்கிறாள்?

தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தானே தீர்மானித்துக்கொள்ள அவள் செய்த எத்தனங்களால்சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும் ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல்கூடாதுஎன்று கொக்கரிக்கும் மநுஸ்மிருதியைத் தமது மூத்திரத்தில் மூழ்கடித்தழிக்கும் பெண்களின் முயற்சிக்கு வலுசேர்த்திருக்கிறாள். அடுத்தடுத்து யாரும் எதிர்பார்த்திராத பல துணிச்சலான முடிவுகளை இத்தனைச் சின்னவயதில் எடுத்த அந்தத் திவ்யாவுக்கு நேரெதிரானவள் இனி நீங்கள் படிக்கப் போகும் கதையில் வரும் திவ்யா. சரியாகச் சொல்வதென்றால் இருவருக்கும் பெயர்தான் ஒன்றே தவிர வேறெந்தப் புள்ளியிலும் ஒருமை கொண்டவர்களல்ல. எனவே இந்த வரியிலிருந்து கதையின் தலைப்பைக்கூடஇது வேறு திவ்யாவின் கதைஎன்றே மாற்றிவிடலாம்.

தலைப்பு மாறுகிறதென்றால் கதையும் மாறுகிறதென்று பொருள். ஒரே தலைப்பின் கீழ் வெவ்வேறு கதைகளை எழுதுவதும் அல்லது வெவ்வெறு தலைப்புகளின் கீழ் ஒரே கதையை அரைத்துத் தள்ளுவதுமாகிய மோசடி இங்கு செல்லுபடியாகாது. கவனம் வையுங்கள், தலைப்பு மாறுகிறதென்றால் கதையும் மாறுகிறதென்று பொருள். எனவே, அந்தத் திவ்யாவின் காதல் கணவனது மர்மச்சாவைப் பற்றியோ அல்லது கொஞ்சகாலம் கழித்து இவளேகூட மர்மமான முறையில் இறக்கக்கூடும் என்பதைப் பற்றியோ இந்தக்கதையில் எங்காவது ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு யாரும் படிக்கவேண்டாம். நிஜத்தைப்போலவே இந்தக் கதையிலும் திவ்யா யாருக்கும் வேண்டப்படாதவளாகி விட்டாளா என்கிற கேள்வி இவ்விடத்தில் எழலாம். நிஜத்தில் ஒதுக்கப்படுகிறவர்கள் விரும்பியவண்ணம் வாழ்ந்து திளைக்கும் களமாக கலையும் இலக்கியமும் இயங்குவதை கவனியாததால் எழும்பும் கேள்வி இது. ஊடகங்கள் பாய்ச்சிய கரிய வெளிச்சத்தின் எரிவாலும் அதிகாரத்தின் கொடிய அலைக்கழிப்பினாலும் திரும்பத் திரும்ப மேடைக்கு இழுத்துவரப்பட்ட நிலைமை மாறி தனித்திருக்கிற அவளது இந்தக் காலத்திற்குள் நாம் குறுக்கிட வேண்டாமென வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அந்தந்த கணத்தைக் கடக்க அப்போதைக்கப்போது அவசர அவசரமாக தான் எடுத்த முடிவுகளெல்லாம் சரிதானா என்று நிதானமாக பரிசீலிக்கவோ நிரந்தரமாக மறக்கவோ அவளுக்குக் காலம் வழங்கியிருக்கிற இந்தத் தனிமை என்னால் குலையக்கூடாது என்பதால் அவளைக் கதையிலிருந்து வெளியேற்றுகிறேன்.

2. இது வேறு திவ்யாவின் கதை

இந்தக் கதையை எழுதுகிறவர் ஏற்கெனவே சொன்ன மாதிரி அந்தத் திவ்யாவுக்கு நான் நேரெதிர். அப்படியான வித்தியாசம் பிறப்பிலிருந்தே தொடங்கிவிட்டிருக்கிறது. ஆமாம், நான் அந்தத் திவ்யாவின் சாதியில் பிறந்தவளல்ல. சரியாக சொல்வதென்றால் நான் சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே வராத சமூகத்தில் பிறந்தவள். ஆனால் அவர்கள் சாதியைத் துறந்த சாதியினராக எம்மை அடையாளப்படுத்தினர். கடைசியில் நாங்களும் எங்களை ஒரு சாதியாக நம்பத்தொடங்கிய பெருந்துயரைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம். எங்களது வசிப்பிடம் சேரி. அவர்கள் வசிப்பதோ அநேக சாதிகளாக பிளவுண்டவர்கள் வசிக்கும் ஊர் என்கிற ஒதுக்குப்புறம். எங்களை எதிர்ப்பதற்கும் தாக்குவதற்கும் சுரண்டுவதற்கும் மட்டும்தான் ஊர்க்காரர்களாகிய அவர்கள் தமக்குள் ஒன்று சேர்வார்கள். மற்றபடி யார் ஒசத்தி என்று தங்களுக்குள் எப்போதும் அடித்துக் கொள்கிறவர்கள்தான். என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டிருக்கும் இந்தச் சிவக்குமார் அந்த ஊர்ச்சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவன்.

பொதுவாக ஊர்க்கார பயல்கள் எங்களைக் காதலிக்கமாட்டார்கள். அவரவர் சாதியிலேயே பார்க்க ஓரளவுக்கு லட்சணமாக, வெள்ளைத் தோலோடு இருக்கிற, கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண்களின் பின்னால்தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இதை காதல் என்று வேறு சொல்லிக்கொள்வார்கள். இரண்டு பேரும் ஒரே சாதியாய் இருக்கிறபோது அங்கு காதலுக்கு ஒரு வேலையும் இல்லை. குணநலன், உடல்நலம், வசதி- இதுமாதிரியான விசயங்கள் பொருந்தி வந்தால்இரு வீட்டார்சம்மதத்தோடு கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள். இப்படி எதுவும் அக்கம்பக்கம் அமையாவிட்டால் ஏழு செருப்பு தேயுமளவுக்கு எங்கெங்கோ அலைந்தாவது அதேசாதிக்குள் ஒரு பெண்ணைப் பிடித்துக் கல்யாணம் செய்துகொள்வார்கள்.
விதிவிலக்காக சிலர் ஊருக்குள்ளிருக்கும் வேறு சாதிப் பெண்ணை விரும்புவார்கள். எந்தவொரு சாதியும் இன்னொரு சாதியை சமமென்று ஏற்பதில்லையாதலால்இரு வீட்டார் சம்மதத்தோடுஅவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடியாது. அடிபிடி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கூட்டிக் கொண்டு ஓடிப்போய் விடுவார்கள். அல்லது, அடுத்த ஜென்மத்திலாவது சேர்ந்து வாழ்வோம் என்று உணர்ச்சிமயமாக அழுதுகொண்டே பிரிந்து விடுவார்கள். இந்தச் சனியன்கள்தான் தாடி வளர்த்துக்கொண்டும் பீடி பிடித்துக்கொண்டும் காதல் காவியம், கத்திரிக்கா ஓவியம் என்று என்னத்தையாவது எழுதி நம் உயிரை வாங்குகிறவர்கள்.

சிவக்குமார் இந்த ரகமில்லை. ‘எனக்குத் திருமண வயதாகிவிட்டது. மனதுக்குப் பிடித்த உன்னை மணம் முடித்து வாழ சித்தமாயிருக்கிறேன்என்றான். எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாது தன் விருப்பத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தான். பிரார்த்தனைப் பலிக்கும் என்று தொடர்ந்து மன்றாடும் ஒரு மூடபக்தனின் சித்திரம் அவனில் படிந்திருந்தது.

ஊர்க்கார பயல் ஒருத்தன் சேரிப் பெண்ணிடம் வந்து உன்னைப் பிடித்திருக்கிறது, லவ் யு, நான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் அனாவசியமாக பிதற்றிக்கொண்டிருக்க மாட்டான். சேரிப்பெண் ஒருத்தியைப் பிடித்துப்போனால்- அதாவது அவளது உடம்பின்மீது ஆசை வந்து விட்டால் தனியாகவோ கூட்டாகவோ வலுவந்தமாக அவளைத் தூக்கிப்போய் சின்னாப்பின்னமாக்கி விடுவான். பட்டால் பாவம் தொட்டால் தோஷம் என்று பீற்றுகிற இந்த ஊர்க்காரப்பயல்கள் சராசரியாக தினத்துக்கு மூன்று சேரிப்பெண்களின் யோனிகளைக் கிழிக்கிறார்கள். இதில் வயது வித்தியாசம் வர்க்க வித்தியாசம் என்று ஒரு வெங்காயப் பாகுபாடும் கிடையாது. இப்படியான அட்டூழியங்களைச் செய்வதற்கான உரிமையினையும் அதிகாரத்தையும் தான் பிறந்த சாதித் தனக்கு வழங்கியிருக்கிறதென ஊர்க்காரப் பயல் ஒவ்வொருத்தனும் உறுதியாக நம்புகிறான். இதன் பேரில் அவளிடமிருந்தோ அவளது குடும்பத்தாரிடமிருந்தோ புகார் எதுவும் வெளிவராமல் பார்த்துக்கொள்ளும் தந்திரங்களை அவன் அறிவான். ஒருவேளை புகார் வந்தால் அதைச் செயலிழக்க வைக்கும் வழிகளும் அவனுக்குத் தெரிந்ததுதான். அவனிடமிருப்பது காமம்கூட அல்ல, காமவெறி. ஆனால் அவர்களில் ஒருவனாக இந்தச் சிவக்குமார் இல்லாதிருந்தது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இருந்தும்கூட சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்கிற புளித்த உவமையைச் சொல்லி அவனை ஒருபோதும் நான் கேவலப்படுத்தியதில்லை. பலவந்தமாக என்னைத் தூக்கிப்போக முடியாததால் காதலிப்பதாகவும் கல்யாணம் முடிப்பதாகவும் சொல்கிறானோ என்கிற சந்தேகம்தான் எனக்கு முதலில் வந்தது.

எனது அச்சங்களையும் அய்யங்களையும் மதித்து அதற்குண்டான சமாதானங்களை அவன் சொன்ன விதம் எனக்கு முதலில் பிடித்துப்போனது. பிறகு அவனையும் பிடித்தது. ஆனால் எனது வீட்டாளுகள், உறவுக்காரர்கள் ஒருவருக்கும் இது பிடிக்கவில்லை. இப்படிச் சொல்லிக்கிட்டு வந்த எத்தினியோ பசங்க நம்ம பொண்ணுங்க வயித்தை ரொப்பிட்டு ஓடிப்போனதையெல்லாம் மறந்துட்டியா? புள்ளைய கலைச்சிட்டுப் பொழைக்கிற வழியப் பாருன்னு ஊர்ச்சாதியானுங்க உபதேசம் பண்றதைகூட மறந்துட்டியா? வேணாண்டி பொண்ணே இந்தச் சகவாசம். அவங்காளுங்கக் கொன்னே போட்டுருவானுங்கஎன்று பலதையும் சொல்லி என் மனதைக் கரைக்கப் பார்த்தார்கள்.

அவர்கள் சொல்லிய எதுவும் பொய்யில்லை. சேரிக்காரர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் வரலாற்று ரீதியாக பகையிருக்கிறது. அந்தப் பகை இரண்டாயிரம் வருசமாக வேர் பாய்ந்து திடங்கொண்டிருக்கிறது. இருதரப்புக்கும் இடையில் எண்ணெய் தண்ணி புழக்கம், கொடுக்கல் வாங்கல், கொண்டான் கொடுத்தான் உறவு எப்பவும் இருந்ததில்லை. சாதியைத் துறந்து சேரிக்குள் மணம் முடிக்க வந்த முத்துப்பட்டனை கொன்றிருக்கிறார்கள். மதுரைவீரனை மாறுகால் மாறு கை வாங்கியிருக்கிறார்கள். கண்ணகி -முருகேசன் ரெண்டு பேரையும் அடித்து அரை உசுராக்கி காதில் நச்சு ஊற்றிக் கொன்றதோடு அவரவர் சடுகாட்டில் வைத்து எரித்ததையும் நாடறியும். அபிராமியோடு ஓடிப்போய் புருசன் பொஞ்சாதியாகி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த பிறகு நைச்சியமாய் பேசி அழைத்து வந்த சூரக்கோட்டைக்காரர்கள் மாரிமுத்துவை கொன்று போட்ட விசயம் டிவியில் கூட வந்தது. ஆளைக்கடத்துவது, வீட்டை இடிக்கிறது, ஊரைக்கொளுத்தறது என்று அவர்கள் எங்காட்களுக்கு எதிராக நொடிக்கு நூறு அட்டூழியம் புரிவதைக் கண்ட பிறகும் என்னைச் சிவக்குமாருக்குக் கட்டிவைக்க எப்படி சம்மதிப்பார்கள் என் வீட்டார்?

ரத்தக்கலப்பு ஏற்படாமல் சாதி ஒழியாதுஎன்கிற அம்பேத்கரின் வாசகத்தை அடிக்கடி சொல்லும் அருகச்செல்வியக்கா மட்டும்தான் எங்கள் கல்யாணத்துக்கு ஆதரவாக இருப்பாள் என நம்பியிருந்தேன். ஆனால் அவளது கருத்து வேறாக இருந்தது. சாதி ஒழிப்பு என்கிற அரசியல் முழக்கத்தை முன்வைத்தா நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று அக்கா கேட்டதும் நான் தடுமாறித்தான் போனேன். அப்படியெல்லாம் நினைத்துக்கொண்டு ஒருவரால் காதலிக்க முடியுமா என்கிற கேள்வி தான் முன்னுக்கு நின்று மறித்தது. சாதி மனப்பாங்கை அப்படியப்படியே வைத்துக்கொண்டு ரத்தக் கலப்பு மட்டும் நடக்குமானால்அதனால் சாதி ஒழிந்துவிடுமென அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டாள் அக்கா. இருதரப்புக் குடும்பங்களையும் துறந்து சாதியடிப்படையில் இல்லாத புதிய குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிற அவளது யோசனை எனக்கு அப்போது உவப்பாக இருக்கவில்லை. அக்காவின் யோசனைகளைச் சிவக்குமாரும் வெறுத்தான். இதுவரை உலகத்தில் இல்லாத ஏதோவொன்றை முதன்முதலாக எங்களைக்கொண்டு நிறுவிப் பார்க்கும் விவரீத ஆசையை அக்கா வெளிப்படுத்துவதாகத்தான் இருவரும் நினைத்துக் கொண்டோம். எங்களுக்குக் கல்யாணம் செய்துவைக்கும் முயற்சியில் இறங்குவதால் ஏற்படும் சங்கடங்களிலிருந்தும் தாக்குதல்களிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக அவள் இப்படியெல்லாம் சொல்லி நாசூக்காக தவிர்க்கிறாளோ என்கிற சந்தேகத்தை எழுப்பினான் சிவக்குமார்.

பொதுவாக சாதிவிட்டுச் சாதிக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறவர்கள் முதலில்சேர்த்துக்கொண்டுஊரைவிட்டு ஓடிப்போவார்கள். கொஞ்சநாள் கழித்து இருதரப்புக் குடும்பங்களில் ஏதாவதொன்றோடு சாடைமாடையாக உறவாடி, நல்லது கெட்டதில் ஓரஞ்சாரமாக நின்று நெளிந்து பிறகு அப்படியே ஒட்டிக்கொள்வார்கள். இப்படி ராசியாவதற்கென்றேபெத்த பாசம்/ பேரக்குழந்தை / ஆண் வாரீசு/ என்பது மாதிரியான சென்டிமென்ட் ஃபார்முலாக்கள் பலவும் தமிழ்ச் சினிமாவில் வருவதற்கு முன்பே ஊர்களுக்குள் பிரபலமாகியிருந்தன. இந்த வாய்ப்பும்கூட ஊர்ச்சாதிகளுக்குள் ஓடிப்போகிறவர்களுக்குத் தானே தவிர சேரிக்காரர்களோடு ஓடுகிறவர்களுக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அக்கா ஓடிப்போவதும் உசிதமல்ல என்றாள். ‘ஒருவேளை உன்வீட்டார் ஏற்றுக்கொண்டாலும்கூட, சேரிக்காரியைச் சேர்த்துக்கொண்ட வீட்டில் புழங்குவதற்கு ஒம்பாத ஊர்க்காரர்கள் தந்திரமாக உன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அல்லது அப்பயொரு ஆபத்திருப்பதாக காட்டிக்கொண்டு உன் குடும்பத்தாரே உங்களை ஒதுக்கி வைக்கவும் கூடும்என்று முகத்துக்கு நேரே அவள் எடுத்துவைத்த உண்மைகளை எதிர்கொள்ள முடியாத சிவக்குமார் தன் குடும்பத்தின் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதாகக் கோபித்துக் கொண்டான்.

அருகச்செல்வியக்காவும் கைவிட்ட பிறகு ஆனது ஆகட்டுமென்று நாங்கள் ஓடிப்போனோம். முன்னைமாதிரி இருந்திருந்தால், ‘உன்மவ எம்மவனை மயக்கி கூட்டினு ஓடிட்டாள்என்று எங்களது குடும்பத்தை பஞ்சாயத்தில் நிறுத்தி இவங்காளுங்க சண்டை போட்டிருப்பார்கள். ஊர்க்காரப் பொண்ணு எவளாவது சேரிப்பையன்கூட ஓடிவிட்டால்உன்மவன்தான் எம் பொண்ணை மயக்கிப்புட்டான்என்று எகிறுவார்கள். அதுவே ஊர்க்காரப் பையன் ஒருத்தன் சேரிக்காரியோடு ஓடிவிட்டால் அப்பவும்உம்மவள்தான் எங்கப் பையனை மயக்கிப்புட்டாள்என்று சண்டை போடுவார்கள். மொத்தத்தில் ஊர்க்கார பையன்களும் பெண்களும் ஒண்ணுந் தெரியாத பச்சைமண் என்றும் சேரிக்காரர்கள் வில்லாதிவில்லர்கள் என்றும் சாதிப்பார்கள். ‘சேரிக்காரங்க மயக்குனா மயங்குற அளவுக்கு உங்கச் சாதி ஆணுபொண்ணு அத்தனையும் வீக் பார்ட்டிங்களா? அந்தந்த பருவத்துல வரவேண்டிய ஆசாபாசமெல்லாம் வரக்கூடாதுன்னு உங்கப் பொண்ணுங்களுக்குப் புளி வச்சு அடைச்சிட்டீங்களா? இல்ல பசங்களுத அறுத்துக் காக்காகழுகுக்குப் போட்டுட்டீங்களா?’ என்று கேட்க இப்ப எங்காட்களிலும் சிலபேர் தயாராகிவிட்டதால் இந்தச் சண்டை வராமல் போய்விட்டது. சண்டைதான் வரவில்லையே தவிர பகை இருந்தது. அதாவது எப்பவும் இருக்கும் பகையை நானும் சிவக்குமாரும் புதுப்பித்தோம். பகை என்று வந்துவிட்டால் ஜெயிப்பது தாங்களாக இருக்கவேண்டும் என்கிற ஊர்ச்சாதியின் அகம்பாவம், (ஏழுகழுதை வயசு எட்டுமுறை ஆகியிருந்தாலும்) மேஜராகாத தங்களது மகனைப் பெண்ணொருத்தி கடத்திவிட்டாள் என்று ஒரு பொய்ப் புகாரையாவது கொடுத்துவிட்டுத்தான் அடங்கும். ஆனால் சிவக்குமாரின் குடும்பத்தார் அவ்வாறும் செய்யாது காத்த அமைதி எனக்கு அச்சத்தையே விளைவித்தது. அடிப்பானைப் புழுக்கம் வெடிச்சாத்தான் அடங்கும் என்பது தெரிந்திருந்தாலும் எப்போது எப்படி வெடிக்குமோ என்கிற பதற்றத்தால் நான் நிலைகுலைந்து போயிருந்தேன்.

கல்யாணத்துக்கப்புறம் இருதரப்புக் குடும்பத்தில் எதுவொன்றுக்குள் நீங்கள் நுழைந்தாலும் அந்தக் குடும்பத்தோடச் சாதி, தன் சொந்தசாதியை உள்ளிழுத்துக்கொண்டு அதற்குப் புறம்பான மற்றவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கிவைத்துவிடும். அந்தக்குடும்பம் உங்களிருவரையும் ஒரேவிதமாக நடத்தாது. ஏனென்றால், இன்னொரு சாதியை சமமாக நடத்துவதற்கான பண்பையோ பயிற்சியையோ அந்தக் குடும்பம் ஒருபோதும் பெற்றிருக்கவில்லைஎன்றெல்லாம் அருகச்செல்வி அக்கா சொன்னதுதான் கடைசியில் எங்கள் வாழ்விலும் நடந்தது.

ஓடிப்போன நாங்கள் ஐந்தாறு மாதம் அங்கேயிங்கே என்று தங்கி எங்களது குடும்பங்களிலிருந்து விலகித்தான் இருந்தோம். அதாவது நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் எனக்குத் தெரியாமல் தனது குடும்பத்து ஆட்கள் சிலரது தொடர்பில்தான் இருந்திருக்கிறான். அவர்கள் மூலமாக தனது தந்தையை இணங்கவைத்து வீட்டுக்குள் நுழைந்துவிடும் அவனது திட்டம் எனக்குத் தெரியவந்தபோது அனேகமாக எல்லாமே முடிந்துவிட்டிருந்தது. ‘வெளியிலிருந்து கஷ்டப்பட்டது போதும், வா எங்க வூட்டுக்குப் போவோம்அங்கப் பிரச்சினை எதுவும் இருக்காது, எல்லாம் பேசி சுமூகமாக்கி வச்சிருக்குமுன்னபின்ன இருந்தாலும் போகப்போக சரியாயிடும்என்று அவன் சொன்னதை அவனே நம்பாமல் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அவனது நச்சரிப்பும் அணத்தலும் உச்சத்திற்குப் போனபோது சரி அதையும்தான் பார்ப்போம் என்று அவனது வீட்டுக்குப் போக சம்மதித்தேன். (இப்படியொரு இக்கட்டான நிலையில் அந்தத் திவ்யா இருந்திருப்பாளானால், ஏதாவது பிரச்சினை வந்தால் வீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற உத்திரவாதத்தையாவது அவனிடம் பெற்றிருப்பாள் என நான் நினைத்துக்கொள்வதுண்டு.)

இம்மாதிரியான சூழ்நிலையில்தொடக்கத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்ததுஎன்கிற வழக்கமான வரியோடுதான் இப்பத்தியை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தொடக்கம் சரியாக இருந்திருந்தால் தொடர்ச்சியோ முடிவோ எப்படி தவறாக முடியும் என்கிற தர்க்கம் வந்துவிட்டதால்தொடக்கம் முதலே எதுவும் சரியாக இல்லைஎன்று முதல் வரி திருத்தப்பட்டுள்ளதை கவனித்துத் தொடர்ந்து வாசியுங்கள்.

ஆக, தொடக்கம் முதலே எதுவும் சரியாக இல்லை. என்னோடு கலந்துவிட்டதால் ஏற்பட்ட தீட்டுக்குப் பரிகாரச் சடங்கு செய்து அவனை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டபோதே எல்லா தவறுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். சேரிக்காரியோடு கலந்தவனை வீட்டில் சேர்க்கவே பரிகாரம் செய்தார்கள் என்றால் சேரிக்காரியாகிய என்னை வீட்டுக்குள் சேர்க்க அவர்கள் என்னென்ன செய்திருப்பார்கள் என்பதை இதே சாதிக்குட்டைக்குள் ஊறிநொதித்த மட்டைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.

புதிதாக நானொருத்தி வந்திருக்கிறேன் என்பதை அவனது குடும்பத்தாட்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. எதிரிலேயே நான் நின்றிருந்தாலும் யாருமில்லாத இடத்தைக் கடப்பது போலத்தான் அவ்விடத்தைக் கடந்தார்கள். இனி என்னையும் உள்ளடக்கியதுதான் அந்தக் குடும்பம் என்கிற எண்ணம் எனக்கோ அவர்களுக்கோ வந்துவிடாதபடியான புறக்கணிப்புகளை இயல்பாகவும் வன்மையாகவும் வெளிப்படுத்தினார்கள். எக்காரணத்தைக் கொண்டும் நான் தாய்வீட்டுக்குப் போகக்கூடாது- அங்கிருந்தும் யாரும் வரக்கூடாது, வீட்டுக்குள் நான் எதையும் தொடக்கூடாது, சமையற்கட்டில் நுழையக்கூடாது என்கிற கட்டுத்திட்டங்களையெல்லாம் ஒரு சொல்லும் சொல்லாமலே அமலுக்குக்கொண்டு வந்து விட்டார்கள். அந்த வீட்டில் எள்ளுருண்டையும் கொள்ளுப்பருப்புத் துவையலும் எப்போதும் தின்னக் கிடைத்ததும்கூட அவர்களது வாரீசு என்னில் தங்கிவிடாமல் கலைத்துவிடும் ஏற்பாடுதான் என்பதை நானறிவதற்குள் நாட்கள் தீர்ந்திருந்தன.

நான் அவர்கள் எல்லோரது மனசுக்கும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தேன். வெளிக்கண்ணுக்குத் தெரியாத மாயச்சேரி ஒன்றை வீட்டுக்குள் உருவாக்கிய அவர்கள் அதற்குள் மட்டுமே நடமாடப் பணித்திருந்தார்கள் என்னை. போகப்போகச் சரியாகிவிடும் என்கிற சம்பிரதாயமான சமாதானத்தை சொல்லிக் கொண்டிருந்த எனது கணவனை என் கண் முன்னாலேயே அவனது சாதி உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. அவன் தனது சாதிக்குள் வேகமாக திரும்பிக்கொண்டிருந்தான் என்பதையும் சேரிக்காரி என்பதற்கப்பால் வேறெந்த அடையாளத்தையும் என்னிடம் காண முடியாதபடி அவனது மனம் சூம்பிக்கிடப்பதையும் நான் அறிய நேர்ந்த தருணங்கள் வலி மிகுந்தவை.

1. சிவக்குமாரின் குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டாளுக்கும் நடைபாதை சம்பந்தமான எல்லைத் தகராறு ஒன்று நீண்டநாட்களாக இருக்கிறது. இதுபற்றிய வாக்குவாதம் ஒருநாள் கைகலப்பில் முடிந்தது. அடாவடிப்பேர்வழியான இவனது தம்பி விட்ட குத்து ஒன்று அவனது கடைவாய்ப் பல்லொன்றை நிலம் பார்க்க வைத்துவிட்டது. நிரந்தர ஊனம் ஒன்றை எதிராளிக்கு ஏற்படுத்தி விட்டது குறித்துச் சிவக்குமார் குடும்பம் குரூர திருப்தியில் திளைத்திருந்தபோது அந்தக் கெட்ட செய்தி வந்து சேர்ந்தது. ஊனப்பட்டவன் நியாயம் கேட்டுக் காவல்துறையிடம் புகார் ஒன்றைப் பதிந்திருந்தான். அவனைவிடப் பெரிய குற்றச்சாட்டுடன் எதிர்ப்புகார் ஒன்றை கொடுத்தால் அவனது புகாரை செயலிழக்கச் செய்து விடலாம்- கைதாவதிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவரும் வழக்கறிஞர் ஒருவரும் இவர்களுக்கு யோசனை சொல்லியிருந்தார்கள். அதன்படி தயாரிக்கப்பட்ட புகார்மனு என்னை மையப்படுத்தி இருந்தது. அதாவது, ‘‘போயும் போயும் ஒரு சேரிக்காரியை வூட்டுல சேர்த்துக்கிட்டிருக்கிற சாதிகெட்ட குடும்பம்’’ என்று இவர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏளனம் பேசி இழிவுபடுத்துவதாகவும் என்னை ஜாடைமாடையாக சாதிப்பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் இதைத் தட்டிக் கேட்டதற்காக இவர்களை அவர்கள் தாக்கியதாகவும் எழுதப்பட்டிருந்த அந்தப் புகார் முழுவதும் அப்பட்டமான பொய். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், சாதிரீதியாக இழிவுபடுத்தும் பக்கத்து வீட்டாள்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனியாக ஒரு பொய்ப்புகாரைத் தருமாறு இவர்கள் என்னை வலியுறுத்தியதுதான்.

கொழுந்தனைக் காப்பாற்ற இப்படியொரு பொய்ப்புகார் கொடுப்பதில் தவறொன்றும் இல்லை என்று சிவக்குமாரும் வாதாடியபோதுதான் எனக்குள் அவன் மீதான முதல் குமட்டல் தொடங்கியிருக்கக்கூடும். உண்மையில் அப்படிë/„ரு புகாரைக் கொடுப்பதாக இருந்தால் முதலில் உன் குடும்பத்தார் மீதுதான் நான் கொடுக்கவேண்டி இருக்கும். நீங்களோ பழிபாவமறியாத பக்கத்துவீட்டாளுகள் மேல் பொய்ப்புகார் செய்யச்சொல்லி என்னை வற்புறுத்துகிறீர்கள். தவறு செய்த உன் தம்பியைக் காப்பாற்ற எனது சாதியை ஒரு கேடயமாக்குவதில் எனக்குச் சம்மதமில்லை என்று மறுத்துவிட்டேன்.

2. செழுந்தகைக் கொழுந்தன் அப்படியென்றால் என் காதல் கணவன் சிவக்குமாரோ ஒருநாள் ஊரின் கால்நடை மருத்துவமனைக்குப் போய் அங்குள்ள மருத்துவரிடம் தேவையில்லாமல் தகராறு செய்து மாட்டிக்கொண்டான். கல்லிடுக்கில் சிக்கி காலொடிந்துபோன ஆட்டுக்குட்டிக்குச் சிகிச்சை வேண்டி இவன் தூக்கிச் சென்றிருக்கிறான். ஆட்டுக்குட்டியைப் பரிசோதித்த மருத்துவர், வெளியே போயிருக்கிற மருந்தாளுநர் வந்ததும் கட்டுப் போட்டுக்கொண்டு செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு அடுத்த வேலைக்குப் போயிருக்கிறார். அரைமணி நேரம் காத்திருந்தும் மருந்தாளுநர் வராதபடியால் பொறுமையிழந்துபோன இவன் மருத்துவரிடம் போய் நீங்களே கட்டுப்போடுங்கள் என்று கேட்டுக் கூச்சலிட்டிருக்கிறான். இவனது கூச்சலை அவர் பொருட்படுத்தவில்லை என்று தெரிந்ததும் ஆத்திரமேறிமருந்தாளுநர் பார்க்குற வேலையை நீயே பார்த்துட்டா பவுசு குறைஞ்சிருமோ…. டாக்டருக்கும் கீழான எந்த வேலையையும் பார்க்காத பரம்பரையா நீசெத்த மாட்டை தூக்கினவனுங்க, இப்ப உசுரோட இருக்குற ஆட்டுக்குட்டிக்குக் கட்டுப்போட மாட்டானுங்களாம்பழசை மறந்துட்டு ஆடாதே..’ என்று ஒருமையில் விளித்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு ஆட்டுக்குட்டிக்குக் கட்டுப் போடாமலே வந்துவிட்டான். உளைச்சலுக்குள்ளான அந்த டாக்டர், இவன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் கொடுக்கப் போவதாக யாரோ புரளி கிளப்பிவிட்டிருந்தார்கள்.

அந்த டாக்டர் புகார் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி, முன்கூட்டியே அவன்மீது நீ ஒரு புகாரை கொடுத்து வை. ஒருவேளை அந்த டாக்டர் புகார் கொடுத்தால் அவனைப் பணிய வைக்க உனது புகார் உதவும்என்று யாரோ இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன்பேரில் இவன் தயாரித்திருந்த புகார் மனுவை நீங்களே படியுங்கள்.

‘‘காலொடிந்த ஆட்டுக்குட்டிக்குச் சிகிச்சை வேண்டி கால்நடை மருத்துவமனைக்குச் சென்ற எனது மனைவியிடம் பணியிலிருந்த மருத்துவர் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். அவரிடமிருந்து பெரும்பாடு பட்டுத் தப்பி வந்த என் மனைவி என்னிடம் முறையிட்டு அழுததன் பேரில் நான் மருத்துவமனைக்குச் சென்று மேற்படி டாக்டரிடம் விசாரித்தேன். அப்படித்தான் நடந்து கொள்வேன் என்று ஆணவமாக பேசிய அந்த டாக்டர், இதுகுறித்து வெளியில் சொன்னால் சாதியைச் சொல்லி திட்டியதாக உன்மீது பொய்யாக பிசிஆர் கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று என்னை மிரட்டவும் செய்தார். என் மனைவிக்கு நேர்ந்த மானபங்கம் இன்னொரு பெண்ணுக்கு நேராதிருக்கும் பொருட்டு, டாக்டர் உருவில் திரியும் இந்தக் காமுகன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.’’ 
 
தமது சாதிக்காரனைப் பணியவைக்க முன்பு என் சாதியைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்த சிவக்குமாரும் அவனது குடும்பத்தாரும் இப்போது என் சாதிக்காரனைப் பணிய வைக்க பெண் என்கிற எனது உடலையே பயன்படுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கவே அருவருப்பாக இருந்தது. ‘அந்த டாக்டரோடு ஒருமுறை படுத்துவிட்டு வந்து இப்படியொரு புகாரை நானே தரட்டுமா?’ என்று கேட்டதற்குப் பிறகுதான் அந்தப் புகார் மனுவை கிழித்தெறிந்தான். அதைக் கிழித்ததும்கூட எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால்தானே தவிர தனது தவறை உணர்ந்தல்ல. சொல்லப்போனால் இதில் அவனது தவறு என்று தனித்துச் சொல்ல ஏதுமில்லை. சேரிக்காரர்களை மட்டுமல்ல அவர்களுக்கான சட்டங்களையும்கூடத் தங்களிஷ்டத்திற்கு எப்படியும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிற ஊர்க்கார மனம் எதையெல்லாம் செய்யுமோ அவற்றை அவனும் செய்யத் துணிந்திருக்கிறான்.

அவ்வளவுதான், இனியும் பேசிக்கொண்டிருக்க என்ன இருக்கிறது? நாங்கள் காதலித்தது உண்மை. என்றென்றைக்கும் இணைபிரியாது வாழ்வோம் என்று கல்யாணம் முடித்ததும் உண்மை. படுக்கையில் மட்டுமே தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவனாக சிறுத்துக்கொண்டிருந்த அவனை நான் உதறியெறிந்துவிட்டது மற்றுமொரு உண்மை. உண்மையைத் தவிர காதலில் வேறொன்றுமில்லை என்று நம்பிய ஒரு காரணத்திற்காகவே இன்றுஅந்தத் திவ்யாவைப் போலவே நானும் தனியளாகிவிட்டேன்.

ஆண்துணையின்றி தனியாக உன்னால் வாழ்ந்துவிட முடியுமா என்று நான் எதிர்பார்த்த கேள்வியையே கேட்குமளவுக்குத்தான் அவனுக்கு அறிவிருந்தது. தனியாகப் பிறந்து, தனியாக வளர்ந்து, தனியாக சாகப்போகிற நான் என் சுயத்துக்குத் திரும்புகிறேன் என்பதை விளங்கிக்கொள்ளாத அந்த ஆண் அதே பழைய கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தது

இன்னும் சில திவ்யாக்களின் கதை (அல்லது ஒவ்வொரு பெண்ணும் திவ்யாவாகும் கதை)


எங்களிருவரது சாயலிலும் எங்களிலிருந்து சற்றே மாறுபட்டும் இப்போது தருமபுரிக்குப் பக்கத்திலிருந்து ஒரு திவ்யா உருவாகியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களைப் போலவே அவளும் தனியளாகிவிட்டாள். அவள் தனியளாக்கப்பட்ட விதம் எத்தனை கொடூரமானது என்று அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய உங்களிடமே சொல்வது அதிகப்பிரசங்கத்தனம். இப்படி நான் சொல்வதை உங்களது சாதிவெறிக்குக் கிடைத்த பாராட்டு என்று நீங்கள் ரசிக்கலாம் அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுக்கலாம். ஆனால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களில் நீங்கள் எந்தளவுக்குப் பங்குதாரி என்பது திவ்யாக்களாகிய எங்களுக்குத் தெரியும். உங்களது பங்கேற்போடும் ஆதரவோடும் தான் இங்கு திவ்யாக்கள் உருவாக்கப்படுகிறோம்.

நீங்கள் ஒவ்வொருவரும் எங்களில் ஒவ்வொருவரையும் திவ்யாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்தவகையில் எங்களுக்குத் தனித்தப் பெயர் இருப்பதைக்கூட சகித்துக்கொள்ள முடியாதவராகிவிட்டீர்கள். இந்தத் திவ்யா, அந்தத் திவ்யா, இன்னொரு திவ்யா என்று நீங்கள் திரட்டிக்கொண்டிருக்கற எங்களது உடல்களிலிருந்து சுத்த சாதிக்கான உடல்களின் வகைமாதிரிகளையும் எதிர்மாதிரிகளையும் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். சேரிக்காரிகளின் யோனிகளைத் திறக்கும் கள்ளச்சாவிகளை வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துவிட்ட நீங்கள், ‘அந்தந்த சாதிக்காரனின் குறிக்கு மட்டும் திறந்து மூடும்படியான யோனிப்பொறியை எங்களது பெண்களுக்குப் பிறப்பிலேயே வடிவமைத்துத் தாரும் ஆண்டவரேஎன்கிற பிரார்த்தனையுடன் கடவுளை மிரட்டிக்கொண்டிருப்பதை நாங்களறிவோம். உங்களது பிராத்தனைக்கு அஞ்சி எங்களது பிறப்புறப்பில் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் கடவுள் நாங்கள் ஒவ்வொரு முறை உள்ளாடையைக் கழற்றும் போதும் கீழே விழுந்துவிடுகிறார். அங்கு புறக்காவல் நிலையம் அமைத்துச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், விரைவு நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் தீர்ப்பதிகாரிகள், வேவு பார்க்கும் சி..டி.க்கள், சாதிச்சங்கத் தலைவர்கள், ஒழுக்கவாதிகள் என்று எல்லோருமே இப்படித்தான் கீழே விழுவதும் பிறகு எங்களது தொடையிடுக்கில் குடியேறுவதுமாக இருக்கிறீர்கள். இடுப்புக்குக் கீழே இத்தனை பேரைச் சுமந்துகொண்டு எப்படித்தான் நாங்கள் இயல்பாக நடக்கமுடியும் மூடர்களே?

மூத்திரக்குழியென இகழ்ந்ததைக் கண்காணிக்க எமது உள்ளாடைகளுக்குள் பதுங்கியிருப்போரே, தந்தோம் உமக்குப் பொதுமன்னிப்பு, வெளியே வாருங்கள். எங்களது மூத்திரவாடைக்குப் பழகிப்போன உங்களது நாசி இனியேனும் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கட்டும். எங்களது தொடைச்சந்தை முடிவெல்லையாய் கொண்டிருக்கும் உங்களது ஆன்மீக, இலக்கிய, அரசியல் பயணங்கள் இனியேனும் பரந்துவிரிந்த இந்த உலகத்தைக் கண்கொண்டு பார்ப்பதாகவும் காட்சிகளில் திளைப்பதாகவும் அமையட்டும் என்று வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு
உங்கள் மீது அனுதாபமுள்ள
திவ்யாக்கள்
நன்றி: பறை இதழ், http://vallinam.com.my

1 கருத்து:

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...