சனி, ஏப்ரல் 26

சுண்டூரு: பல ஆண்டுகளுக்குப் பின்; இன்னும் சில ஆண்டுகள் கழித்து - எஸ்.வி.ராஜதுரை

பதினைந்துஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அது. 1992 ஆகஸ்ட் 6ஆம் நாள் ( முன்பொரு ஆகஸ்ட் 6 இல்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹிரோஷிமா மீது அணு குண்டை வீசியது) ஆந்திராவிலுள்ள சுண்டூரு கிராமத்தில் எட்டு தலித் இளைஞர்கள் ஆதிக்கச்சாதி ரெட்டிகளால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்; அவர்களது உடல் துண்டுகள் கோணிப் பைகளில் அடைக்கப்பட்டுத் துங்கபத்திரா வாய்க்காலில் வீசப்பட்டன. இந்தக் கொடூரச் செயல்களைக் கண்டித்தும் அட்டவணை சாதியினர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்னும் கோரிக்கை விடுத்தும்  தலித்துகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டால் கலைக்கப் பட்டது. இதிலும் ஒரு  தலித் இளைஞர் - அனில் குமார் - கொல்லப்பட்டார். அரசாங்கத்தின் மீது தலித்துகளின் வன்முறையைத் தூண்டிவிட்டதாக  மனித உரிமைச் செயல்வீரர் போஜம் தரகம் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குப் பின் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அத்தண்டனைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவ்வளவுதான்.

ஆறு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மூலகாரணம் எனச் சொல்லப் பட்டது என்ன? அது ஒன்றும் புதிதல்ல; ‘மசாலா' தமிழ்த் திரைப்படங்களில் இருப்பது போன்ற ஒரே ஒரு ;ஃபார்முலா'தான்! தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நடக்கும்போது வழக்கமாகச் சொல்லப்படும் ஒன்றுதான்: அதாவது, தலித் இளைஞர்கள் ‘மேல் சாதி' பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசினர்; முறைகேடாக நடந்துகொண்டனர்;  இதைத் தட்டிக் கேட்கப் போன ‘மேல் சாதி' ஆண்களிடம் அந்தத் தலித் இளைஞர்கள் அடாவடித்தனம் பேசினர்.  இதனால் சட்டென்று ஆத்திரமடைந்த ‘மேல் சாதி' ஆண்கள் முன்பின் யோசிக்காமல் அந்தத் ‘தலித் இளைஞர்களை'த் தாக்கியதால் அந்த உயிர்ப்பலி நேரிட்டது! (அந்தத் தலித் இளைஞர்கள் முறை கேடாக நடந்துகொண்ட ‘மேல் சாதி'ப் பெண்களின் பெயர் மட்டும் ஒருபோதும் வெளியிடப்பட்டதில்லை. ஏனெனில் அது ‘மேல் சாதியினரின்' மானப் பிரச்சனை.)

இந்தியா முழுவதிலும் தலித் இயக்கம் பிளவுபட்டுக் கிடக்கிறது என்றாலும், இந்தப் பிளவுகளை மீறியும் கடந்த இருபதாண்டுகளாகவே தலித் சமுதாயம் முழுவதிலுமே சாதி எதிர்ப்பு உணர்வு வலுப்பட்டு வருவதைப் பார்க்கலாம். சுண்டூரு தலித் இளைஞர்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். ‘மேல் சாதியி'னரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது ஊர் நடுவில் அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளனர். ஊர்த் திருவிழாக்களின் போதும் தெரு நாடக நிகழ்ச்சிகளின் போதும் ‘மேல் சாதியி'னருக்குச் சமமாக உட்கார்ந்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு  ஏராளமான படித்த தலித் இளைஞர்கள் உள்ளனர். ‘மேல் சாதி' இளைஞர்களைக்காட்டிலும் தலித் இளைஞர்களிடையே தான் படித்தவர்கள் அதிகம். இட ஒதுக்கீட்டின் காரணமாக அவர்களுக்குக் கவ்வி வாய்ப்பு மட்டுமின்றி வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. பல தலித் இளைஞர்கள் ரெட்டி இளைஞர்களைக்காட்டிலும் முன்னேறியுள்ளனர். இரயில்வேத்துறையில் வேலை பார்க்கின்றனர். பலர் இளங்கலைப் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்டதாரிகளாக, பொறியியல் பட்டதரிகளாக உள்ளனர்.

 சுண்டூரு மாணவர்கள், கல்லூரிப் படிப்புக்காக 20 கி.மீ.தொலைவிலுள்ள தெனாலிக்குத்தான் செல்ல வேண்டும். இரயில், பேருந்துப் பயணங்களின்போது தலித் இளைஞர்களுக்கும் ‘மேல் சாதி' பெண்களுக்குமிடையே தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம்; அது நட்பாக வளர்ந்து காதலில் போய் முடிந்திருக்கலாம். இது ‘மேல் சாதி'க் குடும்பங்களுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம். எனவே, தலித் இளைஞர்கள் ‘மேல் சாதி' பெண்களிடம் ‘முறை கேடாக' நடந்திருக்கின்றனர் என்பதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும். இந்த சம்பவத்தைப் பொருத்தவரை மூலகாரணமாகச் சொல்லப்படதும் கூட வழக்கமான ஃபார்முலாதான்: திரைப்பட அரங்கொன்றில் ஒரு தலித் இளைஞன் ஒரு ரெட்டிப் பெண்ணைக் கேலி செய்திருக்கிறான், எனவே ரெட்டி ஆண்களுக்குச்  ‘சட்டென்று' கோபம் ஏற்பட்டது, அதனால் முன் பின் யோசிக்காமல் தாக்குதலில் ஈடுபட்டனர்! ஆனால், 'முன் பின் யோசிக்காமல்” என்று கூறப்படுவதைச் செரிப்பது கடினம். ஏனெனில், படுகொலை நிகழ்ந்த அன்று ஏறத்தாழ நானூறு ரெட்டிகள் முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் கொலை ஆயுதங்களோடு ஒன்று கூடியிருந்தனர். ‘சட்டென்று' வந்த ஆத்திரத்தால் கொலை செய்வதோடு அவர்கள் நின்றிருக்கலாம். ஆனால் கொலையுண்டவர்களின் உடல்களைக் கண்டதுண்டமாக வெட்டி வாய்க்காலில் துக்கியெறியுமளவிற்கு அவர்கள் சென்றது ஏண்?  தன்மானம் பேசும் தலித்துகளுக்குப் பாடம் புகட்டத்தான்.

ஆந்திராவிலுள்ள ஆதிக்கச்சாதிகளிலேயே மிக வெறிபிடித்தவர்கள் ரெட்டிகள்தான். கடந்த 400 ஆண்டுகளாகவே அவர்கள் கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியா ‘சுதந்திரம்' அடைந்த பிறகு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்களும் அவர்கள்தான். நீதித் துறையையும் அவர்கள் தங்கள் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக சுண்டூரு இளைஞர்கள் நடத்தி வரும் உறுதியான போராட்டத்தின் காரணமாகத்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் சம்பவம் நடந்த இடத்திலேயே நிறுவப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றம் செல்வதற்காக தலித்துகள் நகர்ப்புறங்களுக்குப் பயணம் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போய் விட்டது. நீதியை நிலைநாட்டுவதற்காக தலித்துகள் ‘சுண்டூரு பாதிக்கப்பட்டோர் சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். தங்கள் சார்பில் வழக்காட நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்குரைஞரின் பின்னணியை ஆராய்ந்து அவர் தலித்துகளின் பால் அக்கறை கொண்டவர் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே அவருடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர். ரெட்டிகளின் கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆசை காட்டுதல்கள், ரெட்டிகளுக்கு வழக்காட வந்த ‘புகழ் பெற்ற' வழக்குரைஞர்களின் திறமைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது நீதிமன்றம் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டினர். இத்தகைய தலித் சாட்சிகளில் முக்கியமானவர் தனராஜ். இவருமே 1992 ஆகஸ்ட் 6 ஆம் நாள் நடந்த தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுச் செல்லப்பட்டு எப்படியோ தப்பிப் பிழைத்தவர். ஐந்து தலித்துகள் தன் கண் எதிரேயே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தவர்.மற்றொரு முக்கிய சாட்சி, ‘சுண்டூரு பாதிக்கப்பட்டோர் சங்க'த்தின் முன்னாள் தலைவர் மெருகொண்டா சுப்பாராவ். இவர் கூலித் தொழிலாளி.

இத்தனை ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது -அது முழுமையான வெற்றி அல்ல என்னும் போதிலும். குற்றம் சட்டப்பட்டவர்களில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை; 35 பெருக்கு ஓராண்டுக் கடுங்காவல்; எஞ்சியுள்ளோர் மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. தண்டிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளனர். அதே போல விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என இதுநாள் வரை போராட்டம் நடத்திவந்த தலித் அமைப்புகளின் கூட்டமைப்பும் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலவளவு, கோலார் அருகிலுள்ள  கம்பளப்பள்ளி கிராமம் ஆகியவற்றில் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளுக்கு நீதி கிடைக்கவில்லை. மேலவளவு படுகொலையை பொருத்தவரை குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவதில் எந்தத் தலித் அமைப்புக்கும் அக்கறையோ உறுதிப்பாடோ இருக்கவில்லை. தலித் அமைப்புகள் ஒன்றுபட்டுக் கூட்டமைப்பை உருவாக்கிப் போராட முன்வரவில்லை.  கம்பளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முக்கியமான தலித் சாட்சிகள் சிலர் நீதிமன்றத்தில் ‘பல்டி' அடித்து ‘மேல் சாதியினருக்கு' சாதகமாக நடந்துகொண்டனர். இன்னொரு பக்கம், நாடுமுழுவதிலுமே, ‘வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை' பொருத்தவரை காவல்துறை ஆதிக்கச்சாதிகள் சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், சுண்டூரு தலித்துகளின் ஒற்றுமையும் உறுதிப்பாடும், அங்குள்ள தலித் அமைப்புகளின் ஒருமைப்பாடும் தலித்துகளின் தன்மானப் போராட்டத்தில்  சிறப்பான மைல் கல்லாக அமைகின்றன.

சிறப்பு நீதிமன்றம் சுண்டூரு தலித் மக்களுக்கு வழங்கியுள்ள மகிழ்ச்சி நீடிக்காது போய்விடலாம்.  நீதித்துறையும் ஆதிக்கச்சாதிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால் உயர் நீதிமன்றத்தில் செய்யப்படும் மேல் முறையீடுகளில் ரெட்டிகளுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்படலாம். ஆந்திராவில் மாறிமாறி ஆட்சி செலுத்துவரும் மேல் சாதியினரான  கம்மாக்களுக்கும் ரெட்டிகளுக்குமிடையிலான அதிகாராப் போட்டாபோட்டிகளும் முரண்பாடுகளும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் திசையைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கக்கூடும். அண்மைய சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பையும்கூட இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். இப்போது ஒரு ரெட்டி முதலமைச்சராக உள்ளார். எனவே ரெட்டிகளுக்குச் சார்பாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்குமேயானால், அது ரெட்டிகளுக்குச் சார்பானதும் தலித்துகளுக்கு எதிரானதுமான அப்பட்டமான பாரபட்சமாகக் கருதப்பட்டிருக்கும்.  எனவே தலித் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என சில தலித் அறிஞர்கள் கருதுகின்றனர். ஏறத்தாழ சுண்டூரு படுகொலை நடந்த அதே காலக்ட்டத்தில் கரம்சேடு என்னும் கிராமத்தில் தலித்துகள் கம்மா சாதியினரின் வன்கொடுமைக்காளாகினர். ஆனால், சாட்சிகள் சந்தேகத்துக்கிடமின்றி குற்றத்தை நிருபிக்க உதவவில்லை என்று நீதிமன்றம் கூறி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

எனினும் இந்த உண்மைகள் சுண்டூரு தலித்துகளின் உற்சாகத்தையோ போராட்டப் பண்பையோ சிறிதும் குலைத்துவிடப் போவதில்லை. வெற்ரிகளைப் போலவே, தோல்விகளும் அவர்களைப் போராட்டப் பாதையில் உந்திவிடத்தான் செய்யும்.

II

மூன்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த கட்டுரையைத்தான் மேலே தந்திருக்கிறோம்.  அந்த கட்டுரையில் கூறியிருந்ததைப் போலவே, ஆந்திர உயர் நீதிமன்றம் கடந்த 22.4.2014இல் வழங்கிய தீர்ப்பும் அமைந்திருகின்றது.

 நீதிபதிகள் எல்.நரசிம்ம ரெட்டி, எம்.எஸ். ஜெய்ஸ்வால் ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரையும் ஓராண்டுச் சிறை தண்டனை வழங்கப்பட்ட 35 பேரையும் (அதாவது  சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அனைவரையும்) விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.  எட்டு தலித்துகள் கொலை செய்யப்பட்ட நேரம், கொலை செய்யப்பட்ட இடம், கொலை செய்தவர்களின் அடையாளம் ஆகியவற்றை அரசாங்கத்தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஒரு சாட்சி தந்த சாட்சியம் ‘ஆட்டம் காணக்கூடியதாக' இருந்தது என்றும், இத்தகைய சாட்சிகள் கூறிய சாட்சியங்களின் அடிப்படையிலேயே அமர்வு நீதிமன்றம் மேற்சொன்ன 56 பேரைக் குற்றவாளிகள் என்று கருதி, அவர்களுக்குத் தண்டனை வழங்கியது என்றும், ஆகவே அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் உயர் நீதமம்னறம் தீர்ப்புக் கூறியது.

ஆதிக்கச்சாதியினர் இவ்வழக்கில் தாங்கள் பெற்ற வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்துவதற்கு மூன்றுமாதகாலம் தடைவிதிக்கவேண்டுமென்று காவல்துறைக்கு "ஆணையிட்ட" உயர்நீதிமன்றம் மனிதமாண்புகளையும் மனித உரிமைகளையும் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மனதில் பதியவைக்கும்படி சமுதாயத்திலுள்ள அனைத்து பிரிவினருக்கும் அமைப்புகளுக்கும் "உபதேசம்" கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட தலித்துகளின் குடும்பங்களின் வேதனையை அரசாங்கம் அவர்களுக்கு தந்துள்ள உதவிகளால் போக்கமுடியாது என்று தனது " இரக்கவுணர்வையும்"  வெளிப்படுத்தியுள்ளது.

அமர்வு நீதிமன்றத்தில் தலித்துகளுக்காக உயிரைக் கொடுத்து வாதாடிய மனித உரிமை இயக்க வழக்குரைஞர் சந்திரசேகர் 2013இல் காலமாகிவிட்டது தலித்துகளுக்குப் பின்னடைவாக இருந்தாலும், இடதுசாரி இயக்காங்களுடன் தொடர்பு கொண்டிருந்தவரும், தலித் இயக்க முன்னோடிகளிலொருவருமான வழக்குரைஞர் போஜா தரகம், உயர் நீதிமன்றத்தில் தலித்துகளுக்காக வழக்காட அரசாங்கத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். தலித் அமைப்புகள் ஒன்றுபட்டு இந்த வழக்கை நடத்திய போதிலும், ஆதிக்கச் சாதி செல்வாக்குக்குட்பட்ட நீதிமன்றம், நாம் எதிர்பார்த்தபடியே தலித்துகளுக்கு அப்பட்டமான அநீதி வழங்கும் தீர்ப்பை வழங்கிவிட்டது.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் களேபரங்களுக்கிடையே, ஏறத்தாழ 23 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு பற்றிய செய்தி, தமிழகத்தில் ‘தி ஹிந்து‘ ஆங்கில  நாளேட்டில் மட்டுமே வெளிவந்துள்ளனது.

உச்ச நீதிமன்றத்தில், ஆந்திரப் பிரதேச அரசாங்கம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தலித் அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

‘சாதிக்கு (அதிலும் குறிப்பாக தலித்துக்கு) ஒரு நீதி' என்பதுதான் இந்த நாட்டின் எழுதப்படாத விதியாக இருக்கையில், உச்ச நீதிமன்றத்திடமிருந்து எத்தகைய நீதி கிடைக்குமோ?








1 கருத்து:

  1. நீதி மன்றம், காவல் துறை, சாதி இந்துக்கள் இப்படி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டால், இவர்களால் என்ன செய்ய முடியும், ஒன்று பட்டு செயல்பட வேண்டிய தரும்புரி நாடாளுமன்ற தொகுதியில் நின்ற படித்த தலித்துக்கள் அவர்களின் ஓட்டை பிரித்து எஜமான் விசுவாசத்தை காட்டும் வரை, இது போன்ற தீர்ப்புகளும், கொலைகளும் நடக்கும்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...