செவ்வாய், மார்ச் 18

படிப்பும் பகிர்வும் - ஆதவன் தீட்சண்யா

டிப்பு என்பதை கல்விநிலையத்துடன் மட்டுமே தொடர்புடையதாக கருதிக்கொள்ளும் ஒரு போக்கு சமூகத்தில் செல்வாக்கு பெற்றுள்ளது. எனவே குறிப்பிட்ட வகுப்பை முடித்ததுமே படித்து முடித்துவிட்டதாக நம்மில் பலரும் நினைத்துக்கொள்கிறோம். அதாவது நாம் படிக்கவேண்டியதே அவ்வளவுதான் என்றும் இனி இவ்வுலகத்தில் படிப்பதற்கென எதுவுமே இல்லையென்றும் இறுமாப்படைகிறோம்.

குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட வகுப்பில் அதற்கென தீர்மானிக்கப்பட்ட பாடங்களை மட்டுமே படித்து முடிப்பதோடு பலரது படிப்பின் எல்லை முடிந்துவிடுகிறது. அதிலும், அந்த படிப்பை முடித்ததற்காக வேலையொன்றும் கிடைத்துவிடுமானால் ஒருவர் படித்ததன் பயன் அதுவேயென்றாகிவிடுகிறது. அதற்கப்புறம் அவர் படிப்பதெல்லாம் அவரது அலுவல் சார்ந்த தாள்களையும் கோப்புகளையும் மட்டும்தான். இப்படியானவர்களில் ஒருசாரார்நாட்டுநடப்பை அறிந்துகொள்ளவும் பொதுஅறிவை வளர்த்துக்கொள்ளவும்நாளிதழ்களையும் வாரஇதழ்களையும் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றின் வழியாக அறிந்துகொண்ட செய்திகளைக் கொண்டே உலகின் சகலத்தையும் அறிந்துகொண்டதான பாவனையை இவர்களிடம் காணமுடியும். இவர்களைப் பொறுத்தவரை புத்தக வாசிப்பு என்பது வார/ மாத இதழ்களைப் புரட்டுவதுதான். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் தொகுக்கப்பட்டு வளமேற்றப்பட்டிந்தாலும் பாடப்புத்தகங்களும் பத்திரிகைகள் திரைப்படங்கள் உள்ளிட்ட ஊடகங்களும் திரும்பத்திரும்ப சில ஆயிரம் சொற்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. தமிழ்மொழியின் சொல்வளத்தை பயன்படுத்தாமலே வீணடிக்கிற இவற்றின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்கள் தாம் அறிந்து வைத்திருக்கிற இந்த சொற்பமான சொற்களுக்கு அப்பால் புதிதாக ஒருசொல்லைக் கண்டாலும்அய்யோ கடினம்என்று அலறுகிறார்கள்.

இவ்வாறான பலபோக்குகளினால் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு சார்ந்து உலகம் முழுக்க பல லட்சம் தலைப்புகளில் ஒவ்வோராண்டும் வெளியாகும் புத்தகங்களில் ஒன்றிரண்டைக் கூட படிக்காதவரும்கூட தன்னை படித்தவர் என்றே கருதிக்கொள்கிறார். தமிழில் மட்டுமே ஆண்டொன்றுக்கு சராசரியாக எட்டாயிரம்  புத்தகங்கள் வெளியாகும் நிலையில் அவற்றில் எதையுமே படிக்காத ஒருவர் இங்கு தன்னை படித்தவர் என்று சொல்லிக்கொள்கிற அபத்தங்களுக்கும் குறைவில்லை

ஒரு மொழியில் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும் எல்லா நூல்களையும் ஒருவர் படித்தேதானாக வேண்டும் என்று கட்டாயமில்லை, தேவையுமில்லை. தவிரவும் படிப்பதை மட்டுமே ஒருவர் தொழிலாகவும் செய்துகொண்டிருப்பது சாத்தியமில்லை. ஆனால், ஒருவர் தான் இயங்கும் துறையில் தன்னை சமகாலத்திற்குரியவராக மேம்படுத்திக்கொள்வதற்கு தன்னுடைய துறை சார்ந்து வெளியாகும் நூல்களில் சிலவற்றையாவது படிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இதில் பொதுநலன் என்றொரு புண்ணாக்குமில்லை, அவரவர் வளர்ச்சி என்கிற சுயநலத்திற்கே கூட அவசியமாயிருக்கிறது படிப்பு.

சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி என்று மாநிலம் முழுவதும் நடக்கக்கூடிய புத்தகக் கண்காட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு புத்தகங்கள் விற்பனையாகிவரும் இன்றைய காலகட்டத்தில் படிப்பு சம்பந்தமாக இப்படியொரு பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டை வைப்பது சரியா என்றும்கூட தோன்றலாம். புத்தகம் வாங்குவதற்கும் புத்தகம் படிப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது? வீடுகளில் இடம்பெற்றிருக்கும் பொருட்களை வைத்து ஒரு குடும்பம் மதிக்கப்படும் இந்த நுகர்வுக்கலாச்சார காலக்கட்டத்தில் புத்தகமும் ஒரு அலங்காரப் பண்டமாகத்தான் வாங்கப்படுகிறதா அல்லது வாசிப்பிற்காக வாங்கப்படுகிறதா என்று பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு நகரத்திலுள்ள பேரங்காடிகளையும் பிட்சா கார்னர்களையும் திரையரங்குகளையும் மதுக்கடைகளையும் அறிந்துவைத்திருக்கிறவர்களில் எத்தனைப்பேர் அந்த நகரத்தின் பொதுநூலகம் எங்கே இருக்கிறது என்று அறிந்துவைத்திருக்கிறார்கள்? பெரும்பாலும் நூலகங்கள் ஓர் அடையாள இடமாகத்தான் ( லேண்ட் மார்க்) அறியப்படுகிறதேயன்றி அது புழங்கத்தக்க/ வாசிப்புக்குரிய இடமாக கருதப்படுவதில்லை. ஒரு ஊரின் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கூட அங்குள்ள நூலகங்களில் உறுப்பினராக இல்லாதிருப்பதை எதனுடைய குறியூடாக அளவிடுவது?

சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் நடந்தவற்றையும் நடப்பவற்றையும் நடக்கக்கூடியவை அல்லது நடக்கவேண்டியவற்றையும் பற்றிய வெவ்வேறு கண்ணோட்டங்களைத் தாங்கி வெளியாகும் புத்தகங்களை வாசிப்பதானது உலகைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. நமது நிறைகளையும் போதாமைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும் கைக்கொள்ள/ கைவிட வேண்டிய மதிப்பீடுகளை அறியவும் வாசிப்பு வழியமைத்து தருகிறது. புதிய அனுபவத்தை, புதிய வாழ்க்கையை, புதிய நிலப்பரப்பைபுது வகையான அறிவுத்தளத்தை, புதிய மொழியை பொதித்து வைத்துள்ள புத்தகங்களை வாசிப்பதானது  தனிமனிதர்களின் ஆளுமை உருவாக்கத்தில் உள்ளுறையாக இருந்து அளப்பரிய பங்கு வகிக்கிறதுகுடும்பம், சாதி, மதம், ஊர், கல்வி, ஊடகம் ஆகியவை திணித்துக்கொண்டேயிருக்கிற கருத்துக்களின் வழியே உருப்பெறும்பொதுப்புத்திஎன்கிற மந்தை மனோபாவத்திலிருந்து விடுபடுவதற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளவும்கூட வாசிப்பு அவசியமாகிறது.

***

கண்டது, கேட்டது, உணர்ந்தது என்று எதுவொன்றைப் பற்றியும் எல்லோருக்கும் ஏதேனுமொரு கருத்து இருக்கிறது. எது பற்றியும் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று ஒருவர் சொல்வதும்கூட ஒரு கருத்துதான். கடந்தகாலத்தின் மீதான விமர்சனமாகவோ நிகழ்காலத்தின் மீதான குறுக்கீடாகவோ எதிர்காலத்தின் மீதான கனவாகவோ இந்தக் கருத்து இருக்கலாம். உடன்படுவதாகவோ முரண்படுவதாகவோ எதுவாயினும் அதுவும் கருத்துதான்இந்தக் கருத்தை நாம் வாய்மொழியாகவோ சைகை உள்ளிட்ட உடல்மொழியினாலோ ஓவியமாகவோ நடிப்பாகவோ பாட்டாகவோ எழுத்தாகவோ வெளிப்படுத்துகிறோம் அல்லது பகிர்கிறோம். குழந்தைகளின் கிறுக்கல்கள்  தொடங்கி  தண்டிதண்டியான புத்தகங்கள் வரை எல்லாமே வெளிப்பாடுகள்தான்.

உயிர்வாழ்தலுக்கு இணையான மனிதவுரிமைகளில் ஒன்றாக கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம் போற்றப்படும் காலத்தில் வாழும் நாம், நமக்குள்ள கருத்துகளை நமக்குத் தெரிந்த வழியில்/ வடிவத்தில் தயங்காமல் வெளிப்படுத்துவோம். நம் காலத்தின் பிரதிநிதிகள் நாம்தான். நம் காலத்தின் வாழ்க்கை மீதான கருத்துக்களை நாமே சொல்லமுடியும். நம்மில் ஒவ்வொருவரது வாழ்வனுபவமும், உலகம் பற்றிய ஒவ்வொருவரது கண்ணோட்டமும் தனித்தன்மையானது. தனித்தன்மையான நம் ஒவ்வொருவரது வாழ்வைப் பற்றிய பகிர்தலின் தொகுப்பு நமது காலகட்டத்திய சமூகத்தின் வரலாறாக கூட்டுத்தன்மை பெறும். வரலாற்றின் ஒரு பகுதியை நீங்கள் ஏன் எழுதக்கூடாது…?

நன்றி: நெய்தல், ஜன-பிப்'2014


சனி, மார்ச் 15

எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் - ஆதவன் தீட்சண்யா

வர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் படிக்க யாரால் கூடும்… முடிவற்ற ஆயுளே சித்தித்தாலும் முடியா இலக்கு. வாழ்நாளெல்லாம் முயன்று நனைந்தத் துணியாய் துவளும் இக்கணத்தில் ஏதுமற்ற வெறுங்கூடாய் என்னையே வீசிக்கொள்கிறேன் படுக்கையில். சதையிணுக்குகளில் சல்லடையிட்டு, சாரம் குடிக்க நாச்சுழற்றும் குரூரத்தின் ரூபமானது இப்படுக்கை. காலத்தின் குழந்தைகள் கடைசி சயனம் கொள்ள கதியிதுவேயென விரிந்த கபடம்- ஆஸ்பத்ரி வார்டின் அழுக்கு படுக்கைகள் போல.

பாயின் ஒரு கோரைபோல ஊடுபாவி மௌனத்தின் உரு பூண்டு படுத்திருந்தேன். பசிப்பும் புசிப்புமற்ற ஏகாந்தமேக, பறக்கும் கம்பளத்தில் படுத்திருப்பதான சிலிர்ப்பு. பாயும் தலையணையும் கெக்கலிக்கின்றன தாமும் படுத்திருப்பதாய். ஓய்விற்கோ உறக்கத்திற்கோ அல்லாது விழிப்பை முன்னிறுத்தியே நான் படுத்திருப்பதை அவற்றுக்கும் யாவற்றுக்கும் பதிலாய் சொன்னேன்.

ஒவ்வோர் கணம் தெளிவின் சோபை மின்னல் பிரகாசமாய் விகாசமடித்து தீட்சண்யத்தில் ஜ்வலிக்கிறது முகம். திடுமென இருளிட்டு கறுக்கிறது. இமையற்றுப் பிறந்தவன் போல் திறந்தே கிடக்கும் விழியில் வெறித்தப்பார்வை. பின்மூடி ஆழ்தியானம் பூணுவதாகிறது என்னிருப்பு.

முக மனவோட்டங்களின் மர்ம வெளிப்பாடுகளால் பெரிதும் கலவரப்பட்டவர் முதலில் என் அப்பாவே. அம்மாவும் வந்தாள். எப்போதோ அறுத்த தொப்புள்கொடி இப்போது கிளைத்து அசைவதாய் அரற்றினாள். தவமாய் தவமிருந்து பெற்றப் பிள்ளை இப்படி தவங்கிக் கிடக்கிறானே பிணம் போல் என்றழுதாள். ஆடு சினையாவது எஜமானன் பிழைக்க அல்ல என்று நான் நினைத்ததை எப்படியோ அறிந்து கொண்டார்கள். நெருப்புச்சாட்டையால் விளாறல் கண்டோராகி துடிப்பில் வெளியேறினர். சிருஷ்டிப்பின் தாத்பர்ய சரடை நான் உருவி எறிந்ததில் அவர்களது துன்பம் அளவிடற்கரியதானது.

என் மனைவியிடம் விசாரணை. இரவின் அந்தரங்கத்தில் ஆளுமையும் கொள்ளாது அடங்கியும் நில்லாது விசித்திரப் போக்காளியாக நானிருந்ததை வைத்து பல திட்டவட்டமான முடிவுகளுக்கு அவள் ஏற்கனவே வந்துவிட்டிருந்தாள். படுக்கையில் தாசி போலிருக்க வேண்டுமென்ற துர்போதனைக்கு வெகுவாய் பலியாயிருந்த அவளது சாகசங்கள் என்னை எவ்வகையிலும் கிளர்த்த முடியாததில் மிக்க அவமானம் தாக்கியவளாய் ஊமையழுகையில் ஊறி நைந்திருந்தாள். உனக்கு நான், எனக்கு நீ, நமக்காக குழந்தைகள் என்பாள் தூக்கத்திலும். யாரும் யாருக்காகவுமில்லையென விளங்கவைக்க மேற்கொண்ட முயற்சிகள் என்னையொரு துஷ்டப் பிண்டமென உறுதிபடுத்த போதுமானதாயிருந்தது அவளுக்கு. கட்டுதிட்டம் இல்லாதவனை கட்டிக்கொண்ட கவலையில் இரவையும் பகலையும் அலை அலையாய் எழும்பும் விசும்பல் வளையங்களால் கோர்த்தாள். உலுக்கி உலுக்கி கேட்ட அம்மாவிற்கு அனாயசமான தோள்பட்டை குலுக்கலும் உதாசீனமான உதட்டுப்பிதுக்கலுமே என் மனையாளின் பதில்.

எனக்கு நேர்ந்திருப்பது என்னவென்று நானே அறியாத நிலையில் குடும்பத்தார் வெகு பிரயத்தனம் கொண்டனர். எல்லாப் புரியாமைகளுக்கும் பரிகாரம் தேடும் பூர்வகுணம் தூண்ட வேலைகள் துவங்கிற்று. ஊரடங்கிய பின்னிரவில் வீட்டுவாசலில் ஒற்றைநாய் ஊளையிட்டுச் சென்றதுதான் பரிகார வேலையை துரிதமாக்கியிருக்க வேண்டும். இப்போதெல்லாம் அப்பா வெளித்திண்ணையில் சுருட்டு பிடித்தபடி நாய்விரட்டக் காத்திருக்கிறார்.

நடுக்கூட மூங்கில் வாரையில் மந்தரித்த மஞ்சள்துணி கட்டப்பட்டது. ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைத்தொகையும் அரிசி கருப்புக்கயிறு காதோலை கருவளையமும் அதனுள். காற்று பலமாய் வீசும்போதெல்லாம் மூக்குக்கு நேராய் ஆடிக்கொண்டேயிருக்கிறது மனிதர்களை கேலியிட்டபடி.

படுக்கை பற்றிக்கொள்ளாத தூரத்தில் குண்டம் மூட்டி யாகம் வளர்ந்தது. உள்ளூர் கங்காணியம்மன் கோயில் பூசாரியிலிருந்து மலையாள மாந்திரீகன் வரை தெய்வாம்சம் நிறுவிப்போயினர். இடுப்பிலும் புஜத்திலும் பிணிக்க ஏதுவான இன்னோரன்ன அவயங்களிலும் தாயத்துகள் நேர்ந்து கட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தர்காவிற்கு தூக்கிப்போய் பாத்தியா ஓதியதையும் பாதிரியொருத்தர் வீட்டிற்கே வந்து ஜெபித்துப்போனதையும் யாருக்கோ நடக்கிறது இதுவெல்லாம் என்று பார்த்திருந்தேன் விழிமூடி. வெளியூர் உறவினர்கள் இஷ்டதெய்வ சன்னதிகளில் பிரார்த்தித்து கூரியரில் பிரசாதம் அனுப்பிய வண்ணமுள்ளனர். அம்மாவும் துணையாளும் மூவேளையும் என் நெற்றியை திருநீரால் துலக்கினர். புத்திர பாசத்திற்கும் பதிபக்திக்கும் நடந்தப் போட்டியில் என் நெற்றி ஓரங்குலம் மேடுதட்டியது.

தலைமாட்டில் உயிரென படபடத்துக் கொண்டிருக்கிறது என் வாக்குமூலம். எனக்குள் நானே திருடிச் சேர்த்த வார்த்தைகள் கொண்டு இழைத்து நிறைத்தது. எவர் படிக்கவும் தோதாக எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. அடிக்குறிப்புகள், அருஞ் சொற்பொருள் விளக்கம் உள்ளிட்ட இலக்கண சாஸ்திர நியமங்கள் வழுவாது நெறியாளப்பட்டுள்ளது. கண்ணுக்கு உறுத்தாத வண்ணத்தில் ஒயிலான வடிவம் கொண்ட எழுத்துக்கள். ஜொலிக்கும் ப்ளோரசண்ட் எழுத்தையே கண்டவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். புரையும் பிரமையும் நீக்கி படிக்கலாம். எல்லோருக்கும் கிடைக்க எண்ணிலடங்கா பிரதிகளெடுத்து ஹெலிகாப்டர் வழியாகவும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணக்கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு போன்றே வாக்குமூலமும் கூட எழுத்தில் ஆகிருதி கொண்டதொரு வடிவமேயென இலக்கிய உலகம் ஒப்புக்கொள்ள சகுனம் பார்த்துக்கொண்டிருப்பதாய் சற்றுமுன் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவாய் தரித்த கணத்திலேயே எழுதத் தொடங்கியது பூர்த்தியாகிவிட்டது. முற்றுப்புள்ளி வைக்க மட்டும் ரத்தமில்லை மிச்சம்.

‘‘ பொருத்தமற்ற அலங்காரம். பொய் தளும்பும் வசனங்கள். மிகைப்பட்ட பாவனைகள். மோர்ப்பானையில் விழுந்தது போல் மொழி புளிக்கிறது. நெடுநாளாய் நடக்கும் இந்நாடகம் கண்டு மேடையே இற்றுக் கிடக்கிறது வெட்கிக் கூசி. நான் ஏற்று நடிக்கும் பாத்திரம் எதுவுமேயில்லை. ராஜபார்ட், வில்லன், பபூன், ஸ்திரீபார்ட், தாதி, பத்தினி, பரத்தை, உத்தமன், கள்ளபார்ட், கஞ்சன், வள்ளல், – ஹோ.. எல்லா வேடங்களும் நான் தோற்க உத்திரவாதமானவை. புழுங்கிச்சாகும் வெற்றுப் பார்வையாளனாய் இருக்கவொப்பது நடிக்க வந்தாலோ அட்டைக்கத்தியிலும் பாஷாணம் தடவி சொருகிவிடுவீர். ஆம் உங்களுக்கு புத்தம் புதியதாய் எதுவும் பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலமாட்டீர். பின் தெரியாதிருப்பதே திறமையென வாதித்துக் கிடப்பீர் வருசத்தில் பாதி நாள். அதற்கொரு மேடை தேவை. உண்மையில் கலைஞானம் எதுவுமறியாத நீங்கள் நாடகத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பது மேடையை உங்கள் அனுபோகத்திலேயே வைத்திருக்கும் சூதின் ஒரு பகுதியே என்பதை நானறிவே.. ”

சேனையே தோற்று மாயினும் களம்புகும் சுத்தவீரனுக்கு ஒற்றைக்குறுவாள் போதும். நானும் என் யுத்தத்தின் ஏகரூப ஆயுதமாய் நம்பிக்கொண்டிருப்பது இந்த சின்னஞ்சிறு வாக்குமூலத்தைத் தான். என்மீதான கேள்விகளுக்குரிய பதில்களாலும், பதிலறிவதற்கான கேள்விகளாலும் நிரம்பி தாள் விட்டுக் கீழிறங்கி திசையெல்லாம் வழியும் என்னுயிரொத்த குழந்தைபோல் அனாதையாய் துடிக்கிறது எழுத்து. வாரியணைத்து பால் புகட்ட வேண்டாம். ஒரு துளி விஷம் போதும். அடங்கிவிடும். காத்திருக்கிறேன் யார் தீண்ட வருவரென்று.

கருணை பொருந்திய காற்றும் ஒளியுமே முதலில் வந்தவை. இங்கேயே இவை இருந்திருக்கக் கூடும். தந்துகிகளை வெட்டிவிட்டு சொட்டுச் சொட்டாய் வடியும் ரத்த மசியெடுத்து உயிர்தாளா வாதையில் ஒவ்வொரு எழுத்தாய் எழுதுவதைக் கண்டு இரக்கம் கொண்டனவோ என்னவோ… ஆரத்தழுவி விம்மின. பாவம் தற்குறிகள் அவை. எழுத்துக் கூட்டி படிக்கவும் ஏலாதவை. உபாயமாய் குளுமையில் வீசின அறையெங்கும்.

மனித தேவ பாஷைகளறிந்த மகான்களுக்காக வழியும் விழியும் திறந்தேயிருந்தன. பார்க்க வந்த ஓரிருவரும் பார்வையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருப்பதால் வாக்குமூலத்தை வாசிக்க முடியாதிருப்பதாய் சொன்னதை நம்பவேண்டியிருந்தது. வழியெல்லாம் தடுக்கி விழுந்து காயங்களோடு வந்து சேர்ந்திருப்பது அவர்களின் கூற்றை உறுதி செய்கிறது. பார்வையை பதனமிட்டு வைத்திருக்கும் ரசக்குடுவையின் சாவி, ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒன்றுபோல் பறக்கும் ஒன்பது கிளிகளில் ஒன்றின் வயிற்றுள் இருப்பதாயும், அதன் காவல்பூதங்கள் காற்றணுக்களிலும் கலந்திருப்பதாயும் சொன்னபோது மலைப்பும் பயமும் தொற்றியது. சடுதியில் ஓடிப்போய் சாவி எடுத்து பார்வை தரித்து வந்து படிப்பதாய் பதைத்தார்கள். என்னருகில் நின்றிருக்கும்போதே அவர்களது கால்கள் கழன்றுபோய் செருப்பை மாட்டிப் கொண்டு வழியில் நின்றன வாகனங்களாகி.

அந்தி மசங்கலில் வந்து சேர்ந்தார்கள் அண்டை வீட்டார் வண்டி பூட்டிக்கொண்டு. முன்கூட்டியே வந்துபார்க்காத குற்றவுணர்வு மேலோங்க, காரணங்களை அடுக்கினர். ஓய்வு ஒழிச்சலற்ற தம் பணியால்தான் உலகமே சுழல்கிறதென்றும், நிற்க நேரமில்லை என்றும் சொன்னார்கள். காலம் பொன் போன்றதென்று உடலெங்கும் பச்சை குத்தியிருந்தார்கள். இருபத்தி நாலு முள் வைத்த கடியாரத்தை கண்ணிமையில் கட்டித் தொங்கவிட்டு காலத்தை அளந்தளந்து விரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். கழுத்தில் தொங்கிய காலண்டர் தாள்களை கைகள் அனிச்சையாய் கிழித்தபடியேயிருந்தன. வாக்குமூலத்தை வாசிக்க நேரமற்றிருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். வரும் வருஷத்து பஞ்சாங்கத்தோடோ, வார, மாத இதழ் ஏதோவொன்றின் இலவச இணைப்பாகவோ கொடுத்தால் ஒழிந்த நேரங்களில் படிக்க முயல்வதாய் உத்தரவாதம் தந்து போயினர். போகிற அவசரத்தில் விட்டுப்போன வண்டிமாட்டின் கழுத்துமணி மாதாக்கோயிலில் போல் அடித்துக்கொண்டேயிருந்து வாசலில்.
ஆராய்ச்சி மாணவர்கள் வந்திருந்தனர் பேரேடுகளோடு. சிறுமழலைப் பிராயம் தொட்டே பாடம் சுமந்ததில் கூன் கண்டிருந்தனர். கண்ணிருக்கும் இடத்தைகூட கண்ணாடி மாட்டிய பின்தான் அறிய நேர்ந்தது. விளம்பரப் பலகைகள் போல் விதவிதமான வாசகங்கள் பொருந்திய உடுப்புகளும் கால்ஜோடுகளும் தரித்திருந்தனர். நடையுடை பாவனைகளில் முன்னணி நட்சத்திரங்களின் சாயல் தெறித்தது. படுக்கையின் நீள அகலம், நிறம், படுத்திருந்த கோணம், பார்வையின் திசை, வாக்குமூலத்தின் தடிமன், எடை, நொடிக்கு எத்தனை முறை தாள்கள் படபடக்கின்றன என்ற அதிநுட்ப விபரங்களை குறிப்புகளாக்கினர். காற்றும் ஒளியும் கோபத்தில் மூர்க்கமாய் வீசின பொறுக்காது. எல்லாம் நிலை புரண்டன. கெட்ட ஆவிகள் கட்டிப்புரளும் இந்த அறையை இடித்து வாஸ்துபடி நிர்மாணிப்பது நலமென கட்டிடக்கலை நிபுணர் ஒருவர் சொன்ன கருத்து ஆமோதிக்கப்பட்டது.

படித்துக் கொண்டிருக்கும் நீங்களாவது வாக்குமூலத்தை படித்தாலென்ன என்றேன் தீனஸ்வரத்தில். எத்தனை மார்க் கிடைக்கும் என்றார்கள். எல்லாமே மதிப்பெண்களாக அளவிடப்படுகையில் மௌனமே சரியான எதிர்ப்பாயிருக்குமென பதிலற்றிருந்தேன். அவர்களுக்கு உறுத்தலாகி இருக்கும் போல. பாமரன் பொம்மை பார்க்க புரட்டுதல் போன்று ஒப்புக்கு விரல்நுனியில் அளைந்தனர். பின் ஒருவன் உரக்க படிக்க எல்லோரும் கேட்பதென தீர்மானமானது. கற்றலில் கேட்டலே நன்று என்றொருவன் முதுமொழி செப்ப அவனது சமயோசித புத்தியை ‘‘சபாஷ்’’ என்று கூட்டம் ஆரவாரித்தது.

‘‘….ஒன்றுக்கு அடுத்து இரண்டு என்கிறது உம்கல்வி. இல்லை. இரண்டுக்குமிடையே எத்தனை தசம பின்ன அலகுகள்… ஏன் மறைக்கிறீர்… குறை பின்னங்கள் ஊனங்களென குற்றம் சாட்டுகிறீர். உண்மையில் குறை பின்னங்களின் சேர்மானத்தில்தான் உமது முழுமையடங்கி இருக்கிறது என்பதை ஞாபகம் வையுங்கள். மட்டுமல்ல, யாதொரு பின்னமும் அதனளவில் பெருமைபடத்தக்க அளவுக்கு முழுமையானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளும் காலம் வரும். பிரச்னை என்னவெனில், உங்களின் ஒப்புதலுக்காக செல்லாப் பிண்டமும் கூட காத்திருக்கப் போவதில்லை என்பதுதான். அதனிமித்தம், என் தாத்தன் மண்ணை உழுதுழுது மலட்டித் தள்ளியது போல் கல்வியை தலைகுப்புற கவிழ்த்துப் போட்டு புதிதாய் எழுத…’’

‘‘….Match the following வகையாக அட்டவணைப் படுத்திவிட்டீர் மனிதரை.
(எ.டு) மாணவன்- கல்வி, கலாட்டா.
இளைஞர்- வேலை, காதல்.
பெண்- கல்யாணக் கனவு.
திருமணமானவள்- வரதட்சணை, மாமியார் நாத்தி நங்கை கொடுமை.
வயோதிகம் – பென்சன், ஈஸி சேர்.
விவசாயி- கடன், ஜப்தி …. இன்னின்னாருக்கு இன்னின்ன பிரச்னைதான் இருக்க முடியுமென மருந்துச் சீட்டைப்போல பரிந்துரைக்கிறீர். உண்மையில், வகுக்கப்பட்ட எல்லா சூத்திரங்களுக்கும் அடங்காமல் தான் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தன்போக்கில் உள்ளது. ஒரே வார்த்தையில் விடையளிக்கும் ஒரு மார்க் கேள்வி போன்று மொன்னையும் தட்டையுமானதல்ல வாழ்க்கை. சிக்கலும் நுட்பமும் செறிந்த சுருள் வளைய பரிமாணம் கொண்டது. நீங்கள் முன்வைக்கும் நேர்க்கோட்டுத் தீர்வுகளை, ஒரு வண்டைப் போல் குடைந்து கொண்டு போய் தன்பாதையை நிறுவுதல் வழியாக உங்களை நிராகரிக்கிறது…’’  

 -வாசித்துக் கொண்டிருந்தவன் அஜீரணம் கண்டவனாகி ஓங்கரித்து வாந்தியெடுத்தான். ‘‘ஓவர்டோஸ்’’ என்றார் மேற்பார்வையாளர். வேண்டுமானால் வாக்குமூலத்திற்கு கோனார் நோட்ஸ் இருந்தால் வாங்கிப் போய் மனப்பாடம் செய்து கொள்வதாகவும், முடியாதபட்சம் பிட்டெழுதுவது அல்லது Choice ல் விட்டு விடுவதாகவும் சலிப்போடு கூறினர். நோட்ஸாக சுருக்கித்தர முடியாதவன் வாக்குமூலமே எழுதியிருக்கக் கூடாதென்று கால்மாட்டிலிருந்த புகார் புத்தகத்தில் பதிந்தனர். நவீனாபிமானி ஒருவன் Floppy/CD யாவது இருக்கிறதா என்றான். மிதமிஞ்சிய ஏமாற்றத்தில் கோரஸாக பயணமே வீணென்று தலையிலடித்துக் கொண்டு வெளியேறினர்.

வாக்குமூலம் எழுதிவிட்ட பின் உயிரோடிருப்பது வீணென்றும், சட்டென முடிந்தால் அடக்கவேலை பார்த்துவிட்டு விடிந்ததும் வேறு வேலை பார்க்கலாமே என்றும் அங்கலாய்த்தனர் நண்பர்கள். விடியவைக்கும் வேலையே தமக்கிருப்பதால் விரைவாக சாகுமாறு என்னை வேண்டினர். எழுதியவனே சவம்போல் கிடக்கையில் எழுத்து மட்டும் ஏன் ஆடவேண்டுமென்று கண்ணோரம் துடிக்கும் வாக்குமூலத்தை உயிருள்ளதொரு வில்லனென பாவித்து கொல்லக் கொதித்தனர். இரும்புக்கை மாயாவியராகி காற்றலைகளில் மிதந்து காகிதங்களின் கழுத்தை நெறித்தனர். பின் சாதுபோல் வெளியேகி கனவின் மரணத்திற்கு அஞ்சலிக்க பூங்கொத்தொன்றை புறாக்காலில் கட்டி அனுப்பியிருந்தனர். பூவின் இதழ்கள்தோறும் உபயம் இன்னின்னாரென கோயில் படிக்கட்டுகள், டியூப்லைட்டுகளில் போல் பெயர், பதவி மறவாது எழுதப்பட்டிருந்தது. பூக்கள் கன்றி வாடின என்போல்.

பொதுவில் வாக்குமூலங்கள் குறித்து திட்ட வட்டமான காரணங்களின் பேரில் அவர்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். வாக்குமூலம் தேவையற்றது என்பதை முடிந்த வகையிலெல்லாம் எல்லாக் காலத்திலும் தாம் வலியுறுத்தியே வருவதை நினைவூட்டினர். கையோடு கொண்டுவந்திருந்த அலமாரிகளை திறந்து காட்டினர். சங்க காலம் தொட்டு சமகாலம் வரையான இலக்கியச்சான்றுகள், செய்திக்கோப்புகள், தீர்மான நகல்களால் அலமாரி பிதுங்கியது.

எவர்மீதும் குற்றம்சாட்டாத வாக்குமூலம் எதுவுமே இருக்கமுடியாதென்றும் அப்படி வெளித் தெரியாதவைகளில் மாந்திரீக மசியால் சங்கேதக் குறிகளாக குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டிருக்குமென்றும் நம்பினர். என்றேனுமொரு நாள் எடுத்து வாசிக்கையில் கூண்டில் நிற்போர் பட்டியலில் தன்பெயரும் இருக்கக் கூடுமென ஒவ்வொருவரும் ரகசியமாக அச்சம் கொண்டிருக்கிறார்கள். உயிலைத் தவிர வேறொன்றும் எழுத உரிமையற்றவனாகவே சாகும் தருவாயில் ஒருவனிருக்க வேண்டுமென சட்டத்திருத்தம் கோரினர். கனவான்கள் சபை விசேஷ கூட்டத் தொடருக்காக காத்திருக்கிறது.

திடுமென சூறைக்கு ஊசல்கண்ட தூளியாய் அங்குமிங்கும் அலைகிறது நினைவு. உலகமே அகண்டதொரு பெரும் படுக்கையாய் தோன்றுகிறது. பாத்யதை கோரும் பாகத்திற்கு பட்டா பத்திரம் சிட்டாடங்கலென பக்கா ஏற்பாடுகளோடு படுத்திருக்கிறார்கள் சிலர். சர்வே எண், விலைமதிப்பு, பதவி, பட்டம், பிறந்த நட்சத்திரம், இறக்கும் நாள் விபரங்கள் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. இசை நாற்காலி பந்தயம்போல் படுக்கையைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது பெருங்கூட்டம். தாதன் சங்கொலி நின்றதும் இடம் கிடைத்துவிடுமென பரபரப்பில் தோய்ந்தோடுகிறார்கள் அவர்கள். நான் யாரோடும் சேராது எட்ட நின்றிருக்கிறேன். வேடிக்கை பார்ப்பதாய் சொல்ல முடியாது. விட்டேத்தி என்றும் அர்த்தமில்லை அதற்கு.

எல்லோரும் என்போன்றே வாக்குமூலம் எழுதிவைத்திருக்கிறார்கள். அது பறந்து விடாதபடிக்கு தம் தலையை தாமே கொய்து பேப்பர் வெயிட்டாக அமுக்கியுள்ளார்கள். பரஸ்பரம் குரோதம் வளர்ந்திருக்கிறது முகாந்திரமின்றியே நகம் போல. அடுத்தவரது வாக்குமூலம் – அது எவ்வளவு நியாயம் சூடியது என்றாலும் படிக்காது எப்படியும் நிராகரிப்பதென அந்தரங்கமாய் சங்கல்பம் கொண்டிருப்பது தும்மல் வழியாயும் துப்பிய எச்சில் ஊடேயும் எங்கும் பரவி பகிரங்கமாகிவிட்டது. என்ன செய்வது இவ்வளவு தாள்களையும் என்ற தவிப்பு எல்லோருக்கும். “பழைய பேப்பருக்கு பட்டாணி….’’ என்றொருவனின் கூப்பாட்டில் பதற்றமும் உளைச்சலும் பெருகியது இவர்களுக்கு.

யாரும் யாருடையதையும் படிப்பதில்லை என்றானது. இப்போது எல்லோருமே அவரவர் வாக்குமூலத்தை அவரவரே படித்து மகிழ்ந்தனர். சொல் பொருள் நயம், சொல்லியிருக்கும் விதம் இன்னும் பன்னூறு நுண்ணிய விவரிப்புப் பாங்கினை சிலாகித்து தம்மைத்தாமே பாராட்டி புகழ்ந்தார்கள். புகழுரையும் கைத்தட்டலும் ஒலிநாடாவில் பதியப்பட்டு சுய புளகிப்பு நிமித்தம் இரவும் பகலும் இடையறாது ஒலிக்கிறது. ஐங்கண்டங்களிலும் அண்டார்டிகாவிலும் அறிமுகக் கூட்டங்களை சொந்த செலவில் ஊர்கூடி நடத்துவது போல் நடத்தினர். சுய வாக்குமூலம் மீதான இவர்களின் விமர்சனக் கட்டுரைத்தொகுப்பு வாக்குமூலத்தை விடவும் பெரியதாயிருந்தது. முடிந்தவரை கை வளைத்து முதுகில் தட்டிக்கொடுத்தனர். தலையில் ‘ஷொட்டு’ வைத்து கன்னம் வழித்து நெட்டி முறித்து ‘‘என் கண்ணே பட்டிரும் போல’’ என்று திருஷ்டி கழித்தனர். இறுதியில் தமக்குத் தாமே பரிசளித்துக் கொள்ள தீர்மானித்து வெற்று மைதானத்தில் ஒற்றையாளாய் நின்று விழா எடுத்தனர். ஜோல்னாப்பையில் கொண்டு வந்திருந்த பதக்கத்தை ஓரங்க நாடகத்தின் நடிகன்போல் கொடுத்து வாங்கி பையிலேயே திணித்துக் கொண்டனர். சிலரோ கழுத்தில் கட்டித் தொங்கவிட்டு அலைந்தார்கள்.

பூனையாய் பம்மி ஒற்றறியப் போன என் புலன்களுக்கு சோர்வே மிஞ்சியது. அவர்களது வாழ்வு பற்றிய எத்தகவலுமற்று என் மீதான புகார் பட்டியலின் தொகுப்பாயிருந்தன அவை. ஒட்ட ஒழுகாது வெட்டிக்கொண்டு திரியும் துக்கிரி என்ற அடைமொழியால் விளித்திருந்தனர் என்னை.

ஓரிருவர் என்போலவே எழுதியிருந்தனர்: ‘‘…சித்ரகுப்தனின் பேரேடு நிகர்த்த உமது அகராதிகளும் குறிப்பேடுகளும் தூசுதட்டுப்பட்டு தயார் நிலையிலிருக்கும் இப்போதே. ஒரு பாவமும் அறியாத மகான்கள் யாராவதொருவரின் மேற்கோள்/குட்டிக்கதை வழியாக எனது மனப்போக்கிற்கு வலிந்து சாயல் ஏற்றிவிடுவீர். கோழைத்தனமென்றோ, தப்பியோடுதல் (Escapism) என்றோ அடைமொழியும் தரப்பட்டுவிடும். குற்றம் சுமத்தியவன் மீதே அதை பாயவைக்கும் பூமராங் வித்தையில் கை தேர்ந்தவராயிற்றே…

கண்ணுக்கு தெரியாத அளவுகோலும் தராசும் சட்டகங்களும் உங்கள் கையிலிருக்கும். யாருக்கோ தைத்த செருப்புக்கும் உடுப்புக்கும் நான் பொருந்தியாக வேண்டுமென சட்டாம்பிள்ளையாகி உத்திரவிடுவீர். ஏற்காவிடில், இவன் மனிதனே இல்லை என என்மீதான இறுதிப் பிரகடனம் வாசிக்கப்பட்டுவிடும்…’’

டாக்டர்களிடம் போகவும் தயக்கமே. வைத்யசாலைக்கு வெளியே அலங்காரமாய் தொங்கும் பெயர்ப்பலகையிலும் உள்ளிருக்கும் கருவிகளிலும் வழிகிற நுட்பமும் திறமையும் சிகிச்சைகளில் வெளிப்படுவதேயில்லை. ஓடிக்கொண்டே ஒன்னுக்கிருப்பது மாதிரி அவசர அவசரமாகவும், சிலநேரங்களில் நெடுநேரம் யோசிக்கிற பாவனை செய்தும் எனது மனநிலைக்கு ஏதாவதொரு ‘‘..மேனியா’’ என்றோ ‘‘…போபியா’’ என்றோ நாமகரணம் சூட்டுவர். பெயருக்குப் பின்னால் இன்னும் இரண்டு மூன்று எழுத்துக்களை கூட்டிக்கொண்டு தம் மேதாவிலாசத்தை புதுக்கிக் கொண்ட திருப்தியில் ஆழ்வர். ஆராய்ச்சிக்கூட வெள்ளெலி போல் நான் கிடக்க, டாக்டரின் கல்லாப்பெட்டி தள்ளாடும் பளுவில்.

வாக்குமூலங்களை வாசிக்க வாசிக்க, எனது வாக்குமூலத்தின் சில பகுதிகளை திருத்தியும் விரித்தும் எழுதவேண்டிய அவசியம் உணர்ந்தேன். ‘‘குற்றச்சாட்டுகளுக்கான பதில்’’ என்று புதிய அத்தியாயமே சேர்க்க வேண்டியதிருந்தது. பிடித்தக் கவிதை, ரசித்த இசை, முதல் முத்தத்தின் கிளர்ச்சி, வந்த – எழுதிய காதல் கடிதங்களின் உயிரோட்டமான விவரிப்புகள், என் சினேகிதிகளை சக்களத்திகளாய் வரித்துக்கொண்டு மனைவி ரகசியமாய் உகுக்கும் கண்ணீரின் வெதுமை, கனவுகளின் ஆளுமை… இப்படி தனித்துவம் செறிந்த பலவும் அமுங்கிப் போய்விடாதபடி கவனமாய் எழுத வேண்டியிருந்தது புது அத்தியாயத்தை.

‘‘பல்லிடுக்கில் துருத்திக் கொண்டிருக்கும் எனது சதை இணுக்குகளும் மேலன்னத்தில் படிந்திருக்கும் ரத்தகறையும் உங்களது குரூர வெற்றியின் அடையாளங்களாகி நிற்கும். உளைச்சல் தோய்ந்த என் சாவை முன்னிட்டு ஷெனாயின் பேரிரைச்சலோடு துவங்கும் உங்களின் நாடகம். பெருகி வழியும் கிளிசரின் கண்ணீர் துடைக்க திரைச் சீலைகளே கைக்குட்டைகளாகி நனையும். கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் தவிப்பில் வசனங்கள் வந்துவிழும் அர்த்தப் பிழைகளோடு. துன்பியலாய் தொடங்கி அங்கதமாய் தானே மாறிப்போகும் அந்த நாடகத்தையும் நான் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும் – பால்வெளி மண்டலத்தின் ஏதாவதொரு வீதியில் நட்சத்திர மீனாயிருந்து…’’

இதுகாறும் யாரும் எடுத்துப் படிக்காத என் வாக்குமூலத்தை, காலம் ஒரு நாள் தன் கண்ணில் ஒற்றிப் படிக்கும். சருகையும் ரசித்து வாழ்வைத் துய்த்தவொரு மனசை, வாள்கொண்டு கிழித்து நூல்கொண்டு தைக்க முயன்றோரை கூண்டிலேற்றும். என் வாக்குமூலத்தின் கடைசிவரிகளை காற்றும் ஒளியும் கடலடி பாசிகளும் காலகாலத்திற்குமாய் சொல்லிக் கொண்டேயிருக்கும். காரியசித்தமானதும் தம்மில் இப்படி பொறித்து என் வாழ்வுக்கு சாட்சியமாகும் :

‘‘ மேடை எங்களுடையது. எமக்கே எமக்கானதொரு மேடையை கட்டுவிக்க அடியும் சுதையுமாய் சமைந்திருப்பது எம்முன்னோரின் ரத்தமும் சதையும். அவர்களின் கனவைப் பாடவும் கதையைக் கூறவும் எங்களுக்கு எங்களின் மேடை தேவை.

வயல்வெளியில், ஆலைகளில், வானம் படுத்துறங்கும் மலைமுகட்டில் எமது நாடகமாந்தர் ஜனித்த வண்ணமிருக்கிறார்கள். ஆர்டீசியன் ஊற்றாய் பொங்கும் இவர்களது ஆசைகளே இனி நாடகங்கள்.

நேற்றிரவு நடத்தியதே உமது கடைசி காட்சியாயிருக்கட்டும். கள்ளமாய் கைப்பற்றிய மேடையிலிருந்து மலிவான உங்கள் பழஞ்சரக்குகளோடு கீழிறங்குவீராக. நாங்கள் மேலேறி வருகிறோம் சூரிய சந்திர ஒளி குளித்து ஆடவும் பாடவும்…’’ 

சனி, மார்ச் 8

புறப்பாடு – ஆதவன் தீட்சண்யா

நிலா வந்துவிட்டது.

எல்லையற்றப் பெருவெளியை வெறிகொண்டு தழுவுகையில் தூரிகையில் பிடிபடாத வர்ணவினோதமாய் உருகி வழிகிறது கனவுக்குழம்பு. கவிஞனும் ஓவியனும் கவனப்படுத்திவிட முடியாத நெருக்கத்தில், கோர்த்த விரலிடுக்கில் வியர்வை கசிய விழிமூடி ரசித்து லயிப்பின் முகடுகளில் இருவரும். உறைந்திருந்த மௌனம் மட்டுமே உடையாய் படிந்திருக்க, காலம் மூட்டிய பருவக்கொடுந்தணல் தகித்து ஜ்வாலையடங்கி காற்றின் ஆலிங்கனத்தில் தானே எரிந்துவிட தவித்து கிடந்தது கனன்று.

அனுமானங்களை உதிர்த்துவிட்டு மனசை பிழிந்து மனசை நிறைத்துவிட்டுப் போகிற வெற்றியை நிகழ்த்தும் வார்த்தைகளுக்கான தவம், வரம் பெறாமலேயே கலைந்தது.

சொல், வேர் மண்ணிலிருந்து வெளியேறுவது வேதனைதானே…?”

வேருக்கும் மண்ணுக்கும் சாசுவத பிணைப்பொன்றுமில்லை. எல்லாமே தற்காலிகம்ஒப்பந்தம் முறிகிற கால அளவிற்கான காத்திருத்தலை நிரந்தரமெனக் கொள்ளாதே. நிரந்தரம் தேக்கத்தின் குறி. சுருங்கி சுருங்கி பூஜ்யத்தில் வீழ்கிற துவக்கம். தற்காலிகம்எல்லாமே தற்காலிகம்விதையை உதறிவிட்டு செடி வருகிறதே…”

நேரடியாக கேட்கிறேன். நாம் பிரிவதில் வருத்தமில்லையா உனக்கு…”

இயந்திர வார்ப்புகளில் எல்லாமே வந்துவிட்டாலும், இதயம் இன்னும் உணர்வு சாகரத்தை உறிஞ்சி குடித்துவிட்டு தள்ளாடித்தான் திரிகிறது. வருத்தமில்லை என்று சொல்வது என்னை வேறாக பிம்பப்படுத்துகிற வார்த்தை. அதற்காக, நீயில்லாமல் எப்படி வாழ்வேன் என்று போலியாகவும் சம்பிரதாயமாகவும் பேசும் நாடக பாணியில் எனக்கு சம்மதமில்லை…”

மேகம் தன்னையே எல்லாதிசையிலும் அனுப்பியது உடைத்து உடைத்து. நிலவோ போக்குகாட்டி தப்பி குளிர்க்கரங்களை நீட்டியபடி எதிர்திசையில் சுழன்றது. இந்த நித்தியச் சண்டையில் இன்றாவது வெற்றி தோல்விக்கு சாட்சியமாகிவிடுவதென்று ஓசையின்றி காத்திருந்தன நட்சத்திரங்கள்.

ஆறுதலாக பேசத்தெரியாதா உனக்கு…”

பொய்மரங்களில் ஊஞ்சல்கட்டி ஆடுவதில் உனக்கு விருப்பமிருக்கிறதாகாவியச்சாயல் படிந்த வார்த்தைகளை கண்ணீரில் தோய்த்து பிழிய பிழிய பேசுவதில் உனக்கு சந்தோசமாமனசைக் காட்டினால் நீ ஏன் வாயைப் பார்க்கிறாய்ஒப்புக்கு பேசினாலும் உனது உயிரை நீட்டிக்கும் வார்த்தைகள் என்னிடத்தில் உண்டு. இருக்கிற எல்லாவற்றையும் எடுத்துக்காட்ட நானொன்றும் விற்பனைக்கூடத்து வேலையாளில்லை…”

இனிவரும் நாட்களின் தனிமை குறித்தாவது அச்சம் கொள்கிறாயா…”

தேவையானதையெல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டபின் நாமே நமக்கு மாட்டிக் கொள்கிற கூண்டுதானே தனிமைஅதில் கிட்டாததும் எட்டாததும் எதுவுமில்லை. அதற்கேன் அச்சம்அதன்றி, ஆற்றல் பொருந்திய பன்முகமாய் விரியும் வீரத்தின் மையப்புள்ளியே அச்சம்தான் என்று நம்புகிறேன்…”

புரிகிற மாதிரி பேசேன்…”

பிடிக்காத விசயத்தை எந்த மொழியில் யார் பேசினாலும் புரிவதில்லை உனக்கும் எனக்கும் யாருக்கும்…”

நீ அதிகமாக பேசுகிறாய்…”

ஊமைகளின் முணகல்களுக்கும் உள்ளர்த்தம் உண்டு…”

உறக்கத்தை விரட்டிவிட்டு, கண்ணாமூச்சியாயிருக்குமோ என்ற ஐயத்தில் வெறித்தன நட்சத்திரங்கள். பதில் கிடைக்காத இழுபறி.

ஆண்துணை இல்லாமலேயே இனி வாழ்ந்துவிடப் போகிறாயா…”

சத்தியம் சொல்லும் தருணமில்லை இது. பிறப்பின் நிர்மலத்தை ஆடை கொண்டு போர்த்தி அழகுபடுத்திக் கொள்ள பாடம் படிப்பதில்லை யாரும். தேவையே அதற்கானதை தேடிக்கொள்ளும். துணை என்கிற ஆதிசூத்திரத்திற்குள் அடங்காத வாழ்வும் உறவும் எங்குதானில்லைநீயாக உன்னை பாதுகாவலனாக வரித்துக் கொள்ளாதே. வேலியை ஆடுகள் மட்டுமல்ல, விவரிக்க முடியாததும் நியாயமானதுமான பல காரணங்களுக்காக பயிர்களும் விரும்புவதில்லை…”

என் மீது மெய்யான காதலில்லையா…”

உன்னிடமிருக்கிறதா மெய்யுக்கும் பொய்யுக்குமான துலாக்கோல்…”

அப்படியில்லை. என்னோடு வாழ உனக்கு விருப்பமில்லையா…”

விருப்பம் சார்ந்ததில்லை வாழ்க்கை. அதன் போக்கில் வந்து படிவதை ஏற்கவும் நிராகரிக்கவும் மனம் கொள்கிற பக்குவத்தில் புதைந்திருக்கிறது விருப்பும் வெறுப்பும். சிற்பி நினைப்பது மட்டுமே சிற்பமாகிவிடுகிறதா என்னஉளியின் ஜீவரசம் தன்னில் உயிர்பெற்றெழ பாறையும் ஒத்துழைக்க வேண்டுமேநான் உளிகளையும் பாறைகளையும் படித்துக்கொண்டே, என்னை அவைகளினிடத்து படிப்பித்துக் கொண்டுமிருக்கிறேன்…”

மாயக்கால்களால் சுழன்றோடும் நிலவை கவ்வி விழுங்க மேகசர்ப்பம் வாய்பிளந்து துரத்துகிறது உடலெங்கும் தலைகளோடு. சாகச விளையாட்டின் முடிவை நோக்கி காத்திருந்தன இமையில்லாத நட்சத்திரங்கள்.

இருவரது அம்பறாத்தூணியிலிருந்தும் கிளம்புகிறது சமபலத்திலான அஸ்திரங்கள். மோதிக்கொள்ளும் கணச்சிதைவில், நோக்கை புறந்தள்ளி மூர்ச்சையற்று வீழ்ந்தபடியும் முத்தமிட்டுக் கொண்டபடியுமாக எய்தவர்களையே இளக்காரத்தில் வீழ்த்தின.

அவ்வளவு தூரம் நீ போயாக வேண்டுமா…”

தூரங்களை நெருங்கித்தொடாத பயணம் வாயை தைத்துக்கொண்டு பாடக்கிளம்புவது. அது உயிரின் கிளர்ச்சியை அனுமதிப்பதில்லை. மயானத்துக்கு செல்லும் சவ ஊர்வலத்தில் குயில்களுக்கும் ஸ்வரங்களுக்கும் வேலையில்லை…”

நீ சம்பாதித்து ஆகவேண்டியது என்ன…”

அது பணத்தின் குறியீடல்ல. விழிப்படலம் சிவக்க சிவக்க கற்றதற்கான அங்கிகாரம். பாடசாலைகளுக்கு வெளியே பரந்து திளைத்திருக்கும் அனுபவக் கல்வியை அடைய கிடைத்த வாகனம். எனக்கு சுயமாய் கால்களிருப்பதை சொல்கின்ற சூட்சும வடிவம். என்னை கௌரவப்படுத்தும் எதையும் கீழ்மையில் ஆழ்த்தமாட்டேன்…”

உள்ளூர் நஷ்டமும் சரி வெளியூர் லாபமும் சரி என்பதை அறியாதவளா நீ…”

நாற்றங்காலில் தங்குகிற பயிர் நல்லபடியாய் விளைவதாக உயிர் விஞ்ஞானம் ஒப்புவதில்லை. லாபமும் நஷ்டமும், பணத்தாள்களாகவும் பரிவர்த்தனைப் பிண்டங்களாகவும் உள்ள உங்கள் மதிப்பீடுகளில் நான் வேறுபடுகிறேன்…”

நிராயுதத்தின் விளிம்பு வந்தாகிவிட்டது. எஞ்சியவற்றை இனி கவனமாய் எய்வதில்தான் வெற்றி. வியூகத்தை மாற்றி உக்கிரமாய் தொடர்கிறது சண்டை.

ஆணின் சம்பாத்தியத்திற்குள் அடங்கி வாழ்வதுதான் இலக்கணம் என்பதையும் நீ மறுக்கிறாயா…”

நமது சந்திப்பை நீ ஒரு வழக்கைப்போலவும் பேட்டியாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறாய். ஆண்மை ஆணுக்கும், பெண்மை பெண்ணுக்கும் உள்ள குணங்களாஅது மனிதர்களுக்கு பொதுவானது. எல்லோரிடத்திலும் எல்லா குணங்களும் புயலும் தென்றலுமாய் நுழைந்து பரவி நுட்பமாக வாழ்கிறது. அதை இலக்கணமென்ற முரட்டு வார்ப்புக்குள் திணிக்காதே…”

திசை திருப்பாதே. ஆணின் சம்பாத்தியத்தில் அடங்கி வாழ முடியுமா முடியாதா…”

பொதி சுமக்கிற கழுதையைப் போலவும், ஏர் உழுகிற மாட்டைப்போலவும் சம்பாதிக்கிற மிருகமாக உன்னை பாவித்துக்கொள்ள உரிமையிருக்கிறது. அருவியை குழாயில் அடைத்துவைத்துக் கொண்டு, தேவைபடுகிறபோது திருகிவிட்டு குடிக்கவும் குளிக்கவும் நினைப்பது ஆதிக்கமா அராஜகமா என்ற தடித்த விவாதத்திற்கு இது இடமில்லை. நாம் காதலர்களாகவே பிரிவோம்…”

இனியும் எங்கே இருக்கிறது காதல்…”

தேடிப்பாரேன் எங்காவது தென்பட்டதா என்று- நாம் பிரிந்துவிட்ட பிறகாவது…”

கடைசியாக கேட்கிறேன். திருமணம், தாம்பத்யம், புனிதம், பௌத்ரம் மீதெல்லாம் உனக்கு நம்பிக்கையுண்டா…”

ஏனில்லைஎனக்கான கோணத்தில் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும். மூதாதையர்களின் மாண்புகளுக்குரிய மரியாதைகளோடு, மரபுகளை மதித்துக் கொண்டேதான் மறுதலித்து வருகிறேன்…”

நீ கனவுகளை கட்டிக்கொண்டு காகிதத்தில் வாழ்பவளோ…”

நன்றி. கனவுகளை தொலைத்தவர்கள் ஜடத்திலே ஜனித்தவர்கள் என்கிற குற்றப்பட்டியலில் என்னை சேர்க்காமல் விட்டதற்காக…”

துரத்தலும் வெளித்தாவி தப்புவதுமாக சண்டை நீள்கையில் நேற்று மிச்சம் வைத்திருந்த கிரணங்களோடு வானில் பாய்ந்தது சூரியன்.

ஏனிப்படி தகிக்கிறது குளிர்நிலவென்று விழித்தன வேடிக்கை சலித்து பின்னிரவில் உறக்கத்தில் தோய்ந்த நட்சத்திரங்கள்.

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...