வியாழன், ஜனவரி 8

ஊரெல்லாம் தேடுன மாரியம்மா ஊட்டுலேயே சிக்குனாளாம் - திருவாசகம்

 

யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் ?
ஐரோப்பிய, ஸ்பானிய, சப்பானிய ,அமெரிக்க, அண்டார்டிக்க எழுத்தாளர்களின் மொத்த புத்தகங்களையும் வாசித்து வாசித்து வாய் வீங்கி போன எனக்கு புலம் பெயர்ந்து வாழும் நாடு திரும்பா எழுத்தாளரான இந்த நந்தஜோதி பீம்தாஸ் குறித்து எதுவுமே தெரியவில்லை என்பதில் யாதொரு அவமானமும் எனக்கில்லை.

"பதிப்பக அடிமைகள் பலரும் தண்டி தண்டியாக எழுதி வண்டி வண்டியாக" புஸ்தக பண்டிகைகளுக்கு இறக்குமதி செய்யும் (வெளியீடு என்றும் சொல்லலாம்) புத்தக கண்காட்சி எழுத்தாளராக பீம்தாஸ் இல்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் ?
பீம்தாஸ் இந்த மாதிரியான பண்டிகைகள் குறித்தெல்லாம் அறிந்தவராக தெரியவில்லை. அவர் பூர்வீகம் தமிழராகவே இருப்பினும் கூட. இருந்திருந்தால் புத்தக பண்டிகைகளில் ஏதோவொரு பதிப்பக வாசலில் உட்கார்ந்து வலிக்க வலிக்க கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் அவரிடம் நானும் ஒரு கையெழுத்தை வாங்கி ஃ பேஸ்புக்கில் போட்டோ போட்டிருப்பேன். ராவோடு ராவாக வாசித்து விமர்சனக் கூட்டமும் வைத்திருக்கலாம்.

பீம்தாசின் புத்தகங்கள் இதுவரை தமிழில் வெளியாகாததற்கு அவர் எப்படி காரணமாக முடியும் ?

கடந்த வாரம் உல்கடொ(டோ இல்லை 'டொ' ) நாட்டில் பேசப்படும் மியுஸ்(யூ இல்லை 'யு ') மொழியில் வழங்கப்படும் உயர்ந்த விருதான 'புரவிஸ்' விருதை பெற்ற "ஃபிளிப்ஸ் அல்மேஸ்டோ ஒசகாயோ" என்ற ஐரோப்பிய வாழ் அமெரிக்க ஜப்பானிய எழுத்தாளரின் முடிக்கப்படாத நாவலொன்றை மேசையிலிருந்து அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து வருகின்ற ஜனவரி ஒன்றுக்குள் ரிலீஸ் செய்திட வேண்டுமென்று வெறிகொண்டு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் சில "இருமொழி இயந்திரங்களின்" கண்களில் கூட ஆங்கிலத்தில் எழுதும் பீம்தாசின் நாவல்கள் படவில்லை என்பது அதிசயமாகத்த்தானே இருக்க முடியும் ! ஆங்கிலத்தில் எழுதினாலும் கூட நந்தஜோதி பீம்தாஸ் ஒரு இந்தியர் அதுவும் தமிழர் அதுவும் சேரியர் தானே !

எது எப்படியோ நந்தஜோதி பீம்தாசின் புதிய நூலான "moustache : nothing but hair " என்ற நாவல் வெளியாகி விட்டதென்ற தகவலை ஃ ப்யூமி கெப்ளர் ( பீம்தாசின் புத்தகங்களை வெளியிட்டு வரும் otherside பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவு செயலாளர் )எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல்(otherside@elml) உறுதி செய்ததை அடுத்து அந்த நாவலை டவுன் லோடு செய்ய எவ்வளவோ முயற்சித்தேன் (படிப்பதற்குத்தான் தான் சார் ). ஆனால், முடியவில்லை.

"ஊரெல்லாம் தேடுன மாரியம்மா ஊட்டுலேயே சிக்குனாளாம்" என்ற கதையாக பீம்தாசின் நாவல் தமிழிலேயே கிடைக்கிறது என்று கேள்விப்பட்டதும் அதை வாசிக்க வேண்டும் என்பதை விடவும் அதை யார் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில்தான் பேரார்வமாக இருந்தேன்.  
ஆதவன் தீட்சண்யா.
இவரா? தமிழில் வாங்கப்பட்டு வரும் உயர்ந்த விருதுகளில் ஒன்றிரண்டான 'விளக்கு' விருதோ 'கோபாலபுரம்' விருதோ அல்லது குறைந்த பட்சம் " கே.ஆர் .விஜயா" விருது கூட கிடைக்காத இவரா பீம்தாசை மொழிபெயர்த்தார்? உணர்ச்சிப் பூர்வமாகவோ நெகிழ்சிப்பூர்வமாகவோ இதுவரை எதுவும் எழுதாத இவர் ஒரு anti லிட்ரேச்சர் ஆசாமியாசே. இவர் எப்படி மொழிபெயர்ப்புக்குள் நுழைந்தார் என்று கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், வரலாற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா ?

எது எப்படியோ நந்தஜோதி பீம்தாசின் நாவல் ஒன்று என் கைக்கு வந்தாகி விட்டது. அதுவும் தமிழில்.

"மீசை என்பது வெறும் மயிர்" என்ற அந்த நாவலை "ஏர்க்காலில் கண்டெடுத்த குலதெய்வத்தின் சிலையை தூக்கி வருவது போல" உற்சாகத்துடன் கொண்டு வந்தேன். படித்துக் கொண்டிருக்கிறேன்.

***


நாடு திரும்பாஎழுத்தாளரான நந்தஜோதி பீம்தாசின் எழுத்துகளின் தமிழ் மொழிபெயர்ப்பான "மீசை என்பது வெறும் மயிர்" நூலை படித்து முடித்ததும் எனக்குள் நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டேன் .முதலில் இது ஒரு நல்ல மொழி பெயர்ப்பா ?

"தட்டக்குருவியை 'பிளேட்பேர்ட்' என்று மொழிபெயர்த்த மொழியறிஞர்களிடமோ, அல்லது ஒரு மாநாட்டில் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் வங்கத் தலைவர் ஒருவர் 'மை டியர் காம்ரேட்ஸ்' என்று விளித்ததை தேவரின சொந்தங்களே" என்று மொழி பெயர்த்த தமிழ் சான்றோர்களிடமோ சிக்காமல் இந்த நூல் ஆதவன் தீட்சன்யாவிடம் சிக்கியது எவ்வளவு ஆபத்தாகியிருக்கிறது என்பதை இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஏலும். 

சரி, மொழிபெயர்ப்பு தான் இப்படி இருக்கிறதே நாவலின் கதைப் போக்காவது வாசிப்பின்பம் இருக்கும்படி இருக்கிறதா?

" பாபுவும் ஜமுனாவும் மனதிலிருந்து அகல மறுக்கிறார்கள். சுசீலாவின் பாத்திர வடிவமைப்பு நேர்த்தியும் க்ளைமேக்சில் அவள் எடுக்கும் துணிச்சலான முடிவும் வாசகர்களின் நெஞ்சை விட்டு அகலாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். classic. மேலும், இன்றைய நவீன வாழ்க்கை முறை தனிமனிதன் மீது எவ்வளவு நெருக்கடிகளை திணிக்கிறது அதை எவ்வாறு கடந்து தனது தன்னிலைகளை மீட்டெடுப்பது என்பதை மாடி வீட்டு ராமச்சந்திரன் நாயரின் பாத்திரம் பிரதிபலிக்கிறது. திவாகர், மதுமிதாவின் வெறித்தனமான காதலை ஏற்றுக் கொள்ளாமல் போனது நெஞ்சை கனக்கச் செய்கிறது . கங்கா எங்கு தான் போனாள் என்று சொல்லாமல் விட்டது தான் நாவலின் பலமே".

இப்படியெல்லாம் மிகச் சரளமாக நாவல் விமர்சனம் எழுதுவதற்கு தோதாக நாவல் எழுதுவதை விட்டுவிட்டு இந்த புத்தகம் பேனாவையும் காகிதங்களையும் பார்த்து கெக்கலிப்பு செய்கிறதே ஒரு சாமர்த்தியம்.

மேலும், பிரதாப முதலியார் சரித்திரத்திரத்தில் தொடங்கி துப்பறியும் திகில் நாவல்கள், வரலாற்றுக் கதைகள், நடுத்தர வர்க்க சமூகக் கதைகள் முன் - பின் நவீனங்கள், குறிகளின் செயல்திறன் - செயல் இன்மை திறன் கதைகள் வரையிலும் வாசித்து தீர்த்து இன்னும் இலக்கிய தாகம் அடங்காமல், வருகின்ற புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கும் குவியல்களுக்காக ymca மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் என்னிடமே வாசிப்பு குறித்து சவால் விடுக்கிறதே இந்த புத்தகம்.

நாவல் என்ற மகத்துவமான இலக்கிய வகைமையின் மாண்புகளை குலைப்பதற்கென்றே ஆதவனால் எழுதப்பட்டிருக்கும் இந்நூலின் இலக்கிய மதிப்பீடு குறித்து நான் எழுதினால் அது பத்து லைக்குகள் பெறுவதற்குக் கூட தகுதியானதாக இருக்காது. தமிழ் இலக்கியத்தின் "முன்னணி ஆளுமை" என்று தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொள்ளாமல் ப்ராப்பர் இலக்கியவாதிகளால் அவ்வாறு அழைக்கப்படும் நாவலாசிரியரும் இலக்கிய விமர்சகருமான திரு. கே.என்.சுந்தர மோகன்ராம் அவர்களோடு (ஆதவன் தீட்சண்யா தனது கதைகளை இதயத்திலிருந்து உருவாக்காமல் அறிவிலிருந்து உருவாக்குகிறார் என்ற புகழ் பெற்ற விமர்சனத்தை வைத்தவர் இவர்தான் என்பது இலக்கிய வாசகர்களுக்கு நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன் )

"மீசை என்பது வெறும் மயிர்" நூலை முன்வைத்து ஒரு இலக்கிய உரையாடலை ('செந்தலை குருவி' இதழுக்காக ) நிகழ்த்தவிருக்கிறேன். விரைவில்.

அதுவரை, பீம்தாசின் மற்ற நாவல்களான
Why can't we share the bed tonight,
Hoof sound which chase in dream,
The dried sea by the fish's drinking,
Who is going to swallow the mercury droplets,
Even before this, we were in dark  - ஆகியவை ஆதவன் தீட்சண்யாவிடம் சிக்காமல் இருக்க முன்னணி இலக்கிய ஆளுமைகளின் சார்பில் ஜெபிக்கிறேன் ஆண்டவரே !

1 கருத்து:

  1. கூகிள் ஆண்டவரிடத்திலும் இவரைப் பற்றிய தகவல்கள் இல்லையே...? இவரின் நாவல்கள்இங்கு கிடைப்பதற்கு வழி இல்லை போலும்...

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...