புதன், பிப்ரவரி 25

நீசக் காரியமும் நீசக் காரியனும்... ஆதவன் தீட்சண்யா...


சாகித்ய அகாடமி 2015 பிப்ரவர் 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய "இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்" என்கிற கருத்தரங்கில் சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் - என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து...
சாதியானது, அதன் உச்சத்தில் இருக்கும் பார்ப்பன ஆண்களைத் தவிர பார்ப்பனப் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமே எதிரானதுதான். பார்ப்பனர்கள் மற்ற சாதியினருக்கு நிகழ்த்தியக் கொடுமைகளுக்கு சற்றும் குறையாதவகையில் தம் சொந்தப்பெண்களையும் கொடுமைப்படுத்தும் அளவுக்கு சமத்துவத்துவவாதிகள். பார்ப்பனப் பெண்கள் அறியாப் பருவத்திலேயே கிழட்டுப் பார்ப்பனர்களுக்கு மணமுடிக்கப்பட்டனர். பருவமெய்துவதற்கும் முன்பாகவே அப்பெண்கள் விதவைகளாயினர். விதவைகளால் தமது “சாஸ்திரங்களுக்கும் சாதித்தூய்மைக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை கணவனின் பிணத்துடன் சேர்த்தே எரித்துக் கொல்லும் சதியைக் கடைபிடித்தனர். சதியில் எரிந்தொழியாமல் தப்பிக்கிற விதவைகள் தீயினும் கொடிய வாதைகளுடன் காலந்தள்ள நேர்ந்ததை பலரும் எழுதியுள்ளனர். வாழ்நாள் நெடுக கைம்மையில் உழலும் அவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து ஏதேனுமொரு வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஓய்வாக இருப்பதைப் பார்த்தால் அரிசியையும் பருப்பையும் கலந்து தனித்தனியாக பிரிக்குமாறு பணிக்கப்பட்டனர். ஓய்வாக இருந்தால் தங்களது அவலநிலையை எண்ணிப்பார்க்கவோ,  வேறு ஆண் துணையைத் தேடி சாஸ்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கவோ அவர்கள் முயற்சித்து விடுவார்கள் என்றஞ்சியே இப்படி ஏதாவதொரு வேலையில் அமுக்கப்பட்டனர். படுத்தப் படுக்கையாக கிடக்கும் பார்ப்பன ஆண்கள் கூட இளம்பெண்களை மறுமணம் செய்து கொண்டனர். ஆனால் பார்ப்பனப் பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.

திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக இறந்துவிடும் பெண்களின் சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்களது பிணத்தை கன்னிகழித்து அடக்கம் செய்யும் வழக்கம் நம்பூதிரி பார்ப்பனர்களிடம் இருந்ததை யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள “தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்” என்கிற நூல் தெரிவிக்கிறது. பார்ப்பனப் பெண்ணின் பிணத்தை கன்னி கழிக்கும் செயல் நீசக் காரியம் எனவும் கன்னி கழிப்பவர் நீசக் காரியன் எனவும் அழைக்கப்பட்டனர். நீசக் காரியத்தை நிறைவேற்றும் பொறுப்பு தலித்துகளுடையதாக இருந்தது. வாழும்போது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட பார்ப்பனப் பெண்கள் செத்தப்பின்போ பிணாபிமானமற்று நடத்தப்பட்டனர்.

தேசப்பிரிவினையின் போது மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒருவன் வேற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருத்தியை தூக்கிப்போய் வன்புணர்வான். அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதது கண்டு துணுக்குற்றுப்போகும் அவன் அவள் வெகுநேரத்துக்கு முன்பே செத்துப் போயிருப்பதைக் கண்டு பேதலித்துப்போவான். ஒரு பிணத்தைப் புணர நேர்ந்த தன்னை நினைத்து குன்றிப்போகும் அவன் தன் மனைவியோடும்கூட தாம்பத்தியம் கொள்ளமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆளாகிவிடுவான். நெக்ரோபிலியா என்கிற மனநோய்க்கு ஆட்பட்டவர்கள் பிணத்தைப் புணர்வதில் நாட்டம் கொண்டவர்கள்  என்கிறது உளவியல்.  இப்படி கலவரக்காரர்களும் மனநோய்க்காரர்களும் நெக்ரோபிலியா என்கிற மனநோய்க்கு ஆட்பட்டவர்களும் செய்யக்கூடிய காரியத்தை, தலித்துகளை செய்யப் பணித்த பார்ப்பனர்கள் எவ்வளவு கொடியவர்கள்? பிணத்தைப் புணரும் அவலத்துக்கு ஆளாக்கி தலித்துகளின் உளவியலையும் ஆளுமையையும் சிதைத்த குற்றத்திற்காக எந்தப் பார்ப்பனராவது பொறுப்பேற்க முன்வருவார்களா?

திங்கள், பிப்ரவரி 16

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க) - ஆதவன் தீட்சண்யா



சாவு வீட்டில் விமர்சிப்பது சரியான மரபல்ல என்பதுபோல இந்தியா டுடே நின்று போனது குறித்து பலரும் பலவிதமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வி.பி.சிங் மறைந்தபோது அவருக்கு இந்தியா டுடே எப்படி அஞ்சலி செலுத்தியது என்று பாருங்கள். 

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவுபடுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இடஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதி பூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்குமுறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல்திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.
-எஸ். பி


இந்தியா டுடேயின் வக்கிரத்திற்கு எதிராக கீற்று.காம் ஏற்பாடு செய்திருந்த கண்டனக் கூட்டத்தில் நான் பேசிய குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை கீற்று.காமில் அப்போது வெளியானது. அதற்குப்பிறகு விருந்தினர் பக்கத்தில் எழுதுமாறு வந்த ஓர் அழைப்பினையும் இதன்பேரிலேயே நிராகரித்து விட்டேன். 
ந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித்தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத் தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பது போல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழி நடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

(இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல் போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்தச் சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்தச் செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை.)

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக் கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஓர் அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோதகுரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால் தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக் கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக் கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளி வைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத்துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக்கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக் கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்து வந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப் போய் கொளுத்திக்கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப்போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச் சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம் தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப் போட்டு விசிறிவிட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்வி நிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள் கொலைகள் கொள்ளைகள் பாலியல் வன்கொடுமைகள். காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.க. விடம் மாட்டிக்கொள்கிற ஒரு சிறுமியைப்போல இந்தச்  சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின்கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத் தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதி ரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக் கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்று விடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டு வராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஓர் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.



சனி, பிப்ரவரி 14

துக்கத்தின் நெடுவேலில் - ஆதவன் தீட்சண்யா



உன் பெயரை ஜெபித்தபடி
புலர்ந்திருக்கும் இவ்விரவை
நான் தன்னந்தனியே கடக்க வேண்டியிருக்கிறது
ஒரு நிலவைப்போல
கடைசி சந்திப்பின் வெதுவெதுப்பான ஞாபகங்களன்றி
வழித்துணைக்கு ஏதுமில்லை

இதோ இதோவென தளர்ந்து நகரும்
கிழட்டு நொடிகளைக் கோர்த்தபடி  
எண்திசையும் கண்சுழற்றிப் பார்க்கிறேன்
நீ வந்துவிடுவாயென

இருளின் அரூபங்களில் உன் முகங் கண்டு பித்தேறி
வெற்றுவெளி துழாவி கட்டித் தழுவியது மாயமென்றறிந்து
துக்கத்தின் நெடுவேலில் பாய்ந்து
துடித்தடங்குகிறேன் உயிரைப்போல

இதே வானத்தின் கீழ்
பெருமூச்சை உகுத்தபடி நீயும் கிடப்பதறியாது
என்பொருட்டு இரக்கமுற்ற ராப்பூச்சிகள் வினோத ஒலியெழுப்பி
உன்னையழைக்கும் இப்பகல் கவியும் வேளையில்
அயர்ந்து முளைக்கிறது சூரியன் வீடு திரும்பும் கூர்க்காபோல
கூசும் கண்களை மூடிக்கொள்கிறேன்
பின்வரும் இரவுகளிலும்
இவ்வாறே விழித்திருக்கத்தான் வாய்த்திருக்கிறதென்று.

வியாழன், பிப்ரவரி 12

அலை என்பது சொல்லல்ல – ஆதவன் தீட்சண்யா



 விடிந்தால் வாக்கு எண்ணிக்கை, விடியற்காலையில் ஒரு வேட்பாளர் அதுவும் அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டவர் காணவில்லை என்றால் அந்த நாடு எப்படி இருக்கும்? ‘‘பிரதமர் வேட்பாளரையே காப்பாற்ற முடியாத உங்களுக்கு வண்டி எதுக்கு வாகனம் எதுக்கு என்று காவல்துறையினரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டிருக்கும். குறிவைத்து அடித்து நொறுக்கப்பட்டதில் மாற்றுக்கட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றுகூட மிஞ்சியிருக்காது. பூட்டப்பட்டிருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதில் ஒரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டிருக்கும். கைக்கு கிடைத்ததை தூக்கிக்கொண்டு நாலாத்திக்கிலும் சனங்கள் ஓடும். தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும் புகையும் ஒவ்வொருவரது உள்ளிருந்த பகையையும் இழுத்துக் கொண்டு வந்து நடுத்தெருவில் கடாசும். எதெதற்கோ எவ்வப்போதோ உருவாகி கணக்குத் தீர்க்கப்படாமல் உறுமிக் கொண்டிருந்த முன்விரோதமெல்லாம் நேர்செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில். கோடாலியும் குத்தீட்டியும் அரிவாளும் கொடுவாளும் ஆட்களின் கைகளாய் நீளும். அந்த நாட்டுக்கு மயானமென்று தனியாக எதுவும் தேவைப்படாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிணங்கள் வீழும். வன்முறையையும் கலவரத்தையும் நியாயப்படுத்தி பிரதமர் வேட்பாளரின் வாரீசுகள் ‘ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது இப்படியான சேதாரம் ஏற்படத்தான் செய்யும்’ என்று அறிக்கை விடுவார்கள். தூங்கும் குழந்தையைப்போல சற்றுமுன்புவரை சாந்தமாக தோற்றமளித்துக் கொண்டிருந்த அந்த நாடு அதிகாலை வேளையில் கலவரத்தாலும் வன்முறையாலும் திணறத் தொடங்குவதை தொலைக்காட்சிகள் துல்லியமாக பரப்பி எஞ்சிய பகுதிகளையும் உசுப்பிவிடக் கூடும்’’ என்றெல்லாம்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அன்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்று பூர்வோத்திரப் பெயர் கொண்ட லிபரல் பாளையம் இன்னும் அமைதியாகவேதான் இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் வென்று அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வார் என்று எதிர்பார்க்கப் பட்ட நட்சத்திர வேட்பாளர் காணாமல் போய்விட்டதை முதலில் அறிந்த அவரது வீட்டுக் காவலாளி அந்த திகிலூட்டும் விசயத்தை யாரிடமாவது சொல்லும் வரைக்குமான அமைதி அது.

நாடுமுழுவதும் அவருக்கு ஆதரவாக வீசும் அலையின் வேகத்தைக் கண்டு கடல் அலையெல்லாம் கூட கப்சிப்பென அடங்கிவிட்டதாகவும், அந்த அலை ஆளுயரத்துக்கு எம்பி அடுத்தநாட்டு எல்லையைத்தாண்டியும் ஆர்ப்பரித்து வீசுவதாகவும், அவரே அடுத்தப்பிரதமர் என்றும், போகிற போக்கைப் பார்த்தால் உலக நாடுகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாக அவர் ஒருவரே பிரதமராகி விடும் வாய்ப்பிருப்பதாகவும் அன்டைம்ஸ் நவ், ஹெட்லெஸ் டுடே போன்ற தொலைக்காட்சிகள் வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்புகள் இன்னும் சிலமணிநேரங்களில் உண்மையாகிவிடக்கூடிய நல்வேளையில் அவர் ஏன் காணாமல் போனார்? அவராக எங்கும் ஓடிவிட்டாரா அல்லது அவரை யாரும் ஓட்டிவிட்டார்களா? ஒருவேளை எதிர்க்கட்சிகளால் அவர் கடத்தப்பட்டிருப்பாரா? அவரது வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரது கட்சிக்காரர்களே அவரை போட்டுத் தள்ளிவிட்டார்களா? அவர் காணாமல் போயுள்ளதற்குப் பின்னே சர்வதேச சதி ஏதும் அரங்கேறியுள்ளதா? தனது கட்டுக்காவலையும் மீறி இப்படியெல்லாம் நடப்பதற்கான சாத்தியம் தான் என்ன என்றும் இன்னும் பலவாறாகவும் யூகித்த அந்த விசுவாமிக்க காவலாளி தனது எஜமானர் காணாமல் போய்விட்ட விசயத்தை இன்னமும் நம்பமுடியாதவராக தத்தளித்தார். என்றாலும் அவர் அவ்வாறாகவே இருப்பதற்கான அவகாசம் இல்லை. பிரதமர் வேட்பாளர் காணவில்லை என்கிற விசயத்தை காவல்துறைக்கு சொல்வதா அல்லது கட்சித்தலைமைக்கு தெரிவிப்பதா என்று அப்படியும் இப்படியுமா யோசித்துக் குழம்பி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தபோது காலை 4 மணி.

லிபரல்பாளையத்தின் வரலாற்றில் இதற்குமுன் இப்படி ஒருவரும் காணாமல் போயிருக்கவில்லையாதலால், முன்னுதாரணமற்ற இந்தச் செய்தியைக் கேட்டு அரண்டுபோன காவல்துறை அதிகாரிகள் அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு செயற்படத்தொடங்கினார்கள். இத்தனைக்கும் லிபரல்பாளையத்தின் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு போலிசுக்கு இணையானது எனப் பெயர் பெற்றதாகும். லிபரல்பாளையத்தின் சூட்டிகையான குற்ற உலகத்தினர் அப்படியான அரும்பெரும் சவால்களை உருவாக்கி தங்கள் நாட்டு போலிசை ஸ்காட்லாந்து யார்டு போலிசுக்கு இணையாக திறன்பெறுமாறு பயிற்றுவித்திருந்தார்கள். ஆனானப்பட்ட கேடிகளையும் அகில உலக கில்லாடிகளையும் அரைமணி நேரத்தில் கண்டுபிடிக்கும் வல்லமை கொண்ட தங்களுக்கு இந்த பிரதமர் வேட்பாளரைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடினவேலையல்ல என்கிற மிதப்போடு தான் விசாரணையைத் தொடங்கினர் காவல்துறையினர். ஆனால் அவர்களுக்கு அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரமே அவகாசமிருந்தது.

பிரதமர் வேட்பாளராகிய அவர் அருகாமையிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிடக் கிளம்பும் கம்பீரத்தையும் அழகையும் படம் பிடிக்கவும் பரபரப்பான செய்தியாக்கவும் கட்சிக்காரர்களும் ஊடகத்தினரும் அவரது வீட்டின் முன்பாக காலை ஆறுமணியளவிலிருந்தே குவியத் தொடங்கிவிடுவார்கள் என்று உளவுத்துறை ஏற்கனவே அறிக்கை அளித்திருந்தது. எனவே அவர்கள் வருவதற்கும் முன்பாக அவரை தேடிக் கண்டுபிடித்து எதுவுமே நடவாததுபோல வீட்டுக்குள் சேர்த்துவிட வேண்டும் என்று காவல்துறை களமிறங்கியது.

பொதுவாக வார்டு கவுன்சிலர் தொடங்கி பிரதமர் வரை மக்கள் பிரதிநிதி என்று தேர்ந்தெடுக்கப் படுபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு காணாமல் போய்விடுவது லிபரல்பாளையத்தில் வழக்கம்தான். காசு பணம் துட்டு மணி மணி என்று மும்முரமாகி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியும் அவையும் எங்கிருக்கிறது என்பதையே மறந்துபோனவர்கள் அங்கு அநேகருண்டு. எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு வெளிநாட்டுக்குப் பயணம் போவதிலேயே காலத்தைக் கழித்துவந்த ஒரு பிரதமர் எந்த நாட்டுக்கு தான் பிரதமர் என்பதையே மறந்துபோனதும், கடைசியில் விட்டது சனியன் என்று லிபரல்பாளையத்துச் சனங்கள் அவரை தொலைத்து தலைமுழுகியதும் உலகறிந்த விசயம்தான். அப்படி இவரும்கூட பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு காணாமல் போயிருந்தால், அதை இந்தளவுக்கு யாரும் பொருட்படுத்தியிருக்கமாட்டார்கள், சகஜம்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே இவர் காணாமல் போய் தங்களுக்கு இப்படியொரு இக்கட்டான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக காவல்துறை கருதியது.

நாடுமுழுவதும் அவருக்கு ஆதரவாக அலை வீசிக்கொண்டிருப்பதாக வரும் செய்திகளால் பொறி கலங்கிப் போயிருந்த ஆளுங்கட்சி தலைமை அவர் காணாமல் போய்விட்டதாக காவல் துறையிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டு சற்றே நிம்மதியடைந்தது. வாக்கு எண்ணிக்கை தினமான இன்றைக்கு காணாமல் போயிருப்பதற்கு பதிலாக ஒருவேளை அவர் வாக்குப்பதிவு தினத்தில் காணாமல் போயிருப்பாரேயானால் அவருக்கான ஆதரவு அலை அப்படியே அனுதாப அலையாக மாறி வரலாறு காணாத தோல்வியை தாங்கள் தழுவ நேரிட்டிருக்கும் அபாயக் கட்டத்தை தற்போது கடந்துவிட்டதாக உணர்ந்ததால் ஏற்பட்ட நிம்மதி அது. இருந்தாலும் அரசியல் நாகரீகம் கருதி, அவர் காணாமல் போயிருப்பது குறித்து தாங்களும் பதற்றப்படுவதாக காட்டிக்கொள்ளும் பொருட்டு ஆளுங்கட்சித் தலைவரும் அவரது கைக்கடங்கிய பொம்மையான தற்போதைய பிரதமரும் அவசரமாக சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எப்பாடு பட்டாவது ஆறுமணிக்கு முன்பாக அவரை கண்டுபிடித்து கூட்டிவந்துவிட வேண்டும் அல்லது, அவர் காணாமல் போயிருக்கிற விசயத்தை வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மறைத்து வைப்பதற்கான சாக்குப்போக்குகளை தயாரிக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் வழியாக உத்தரவு பிறப்பித்தனர்.

முந்தின நாளிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வழக்கம்போல புதிய சர்ச்சையொன்றை கிளப்பிவிட்டு பத்துமணியளவில் பிரதமர் வேட்பாளர் தன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் ( வெற்றி பெற்றவன் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க ஒருவனும் துணிவதேயில்லை என்கிற ஹிட்லரின் வாசகம் தருகிற உற்சாகத்தில் அவர் தினமும் எதையாவது உண்மைபோல சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்). தான் பல் துலக்குவதிலிருந்து பாத்ரூம் போவது வரை எல்லாவற்றையும் அதிசயம் போல வியந்தெழுதி ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் நொடிக்கு நொடி அப்டேட் செய்வதற்காக தன்னுடனேயே வைத்திருக்கும் ஊடகப்படையினரும் அப்போது அவரோடு வந்திருக்கிறார்கள். மறுநாள் கிளப்ப வேண்டிய புதிய பரபரப்புகள் எழுப்பவேண்டிய சர்ச்சைகள் பற்றி நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய பிறகு அவரது காலடியிலேயே படுத்துறங்க அந்த ஊடகப்படையினர் தெரிவித்த விருப்பத்தை அன்புடன் நிராகரித்து அவரவர் வீட்டுக்குப்போய் தூங்கிவிட்டு காலை ஆறு மணிவாக்கில் வந்துவிடுமாறு அவர் வழியனுப்பிவைத்தாரென காவலாளியின் வாக்குமூலம் தெரிவிக்கிறது. எப்போதும் தன்னுடனிருக்கும் அவர்களை, தான் காணாமல் போவதற்கு வசதியாகத்தான் பலவந்தமாக பிரித்து வெளியே அனுப்பி வைத்திருப்பாரோ என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது. ஆனால், காணாமல் போவதாயிருந்தால்கூட ஊடகப்படையை உடனழைத்துக் கொண்டுதான் காணாமல் போகக்கூடியவர் என்பதால் அந்தக்கோணம் அவசரமாக கைவிடப்பட்டது.

‘ஆடு அறுக்கிறதுக்கு முன்னயே அப்பா எனக்கு புடுக்குக்கறி’ என்பானாம் அவசரக்காரன். அது போல தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பிரதமராகிவிட்ட செருக்கில் திளைத்துக்கிடந்த இவர், ஒருவேளை அந்த நினைப்பிலேயே உடன்படிக்கையிலோ ஒப்பந்தப்பத்திரத்திலோ கையெழுத்துப் போட ஏதாவது அண்டை அயல் நாடுகளுக்கு பயணம் போயிருக்கக்கூடும் என்கிற கோணத்தில் பல்வேறு நாடுகளிலுமுள்ள தூதரங்களையும் தொடர்புகொண்டு நடத்திய விசாரணையிலும் காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த புகைப்படத்திலிருப்பவரை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று காணாமல் போய்விட்ட – விவரம் போதாத ஒரு குழந்தையையோ வீட்டில் சண்டை போட்டு பிணங்கிக்கொண்டு வந்தவரையோ அல்லது மனநலம் குன்றிய நபரையோ தேடுவதுபோல ஒரு பிரதமர் வேட்பாளரைத் தேடிவிட முடியாதுதானே? எனவே ஒரு கண் பார்ப்பதை மறுகண் அறியாதபடி கமுக்கமாக தேடவேண்டியிருந்தது. ஆட்டோ ஸ்டேண்ட், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமானநிலையம், துறைமுகம், டோல்கேட் என்று எல்லாவிடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததிலும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. நாடு முழுவதிலுமிருந்த சந்துபொந்து சாராயக்கடை இண்டுஇடுக்கு இடியாப்பக்கடை என்று எல்லா இடங்களையும் சல்லடைப் போட்டு சலித்துப் பார்த்தும் அவர் கிடைக்காமல் போனதால் சோர்ந்துவிட்ட காவல்துறை கடைசியில் செயற்கைக் கோள் புகைப்படங்களையும் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. எந்த தடயத்தையும் விட்டுவைக்காமல் இப்படி காணாமல் போய் உயிரை வாங்குகிறாரே என்று கடுப்பாகிப்போன காவல்துறை வட்டாரம், அரசாங்கம் கொடுத்த காலக்கெடுவுக்குள் தங்களால் கண்டுபிடிக்க முடியாத அந்த ஆளை சனங்களாவது கண்டுபிடித்து இழுத்துவரட்டும் என்று செய்தியை மெதுவே ஊடகங்களுக்கு கசியவிடத் தீர்மானித்தது. பிறகென்ன, ஊடகங்களுக்குத் தெரிந்தால் உலகத்துக்கே தெரிந்த மாதிரிதானே?

இன்று புதன்கிழமை, ஆகவே நாளை வியாழக்கிழமை என்பதைக்கூட ஏதோ தாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்த புத்தம்புது செய்திபோல பரபரப்பாக அறிவிக்கும் தொலைக்காட்சிகளுக்கு இப்படியொரு விசயம் கிடைத்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்? கேமராவும் மைக்குமாக வந்து குவிந்துவிட்டார்கள் அவரது வீட்டு முன்பும் காவல்துறை தலைமையகம் முன்பும். திருவிழாக்கூட்டம் போல திரளத் தொடங்கிய சனங்களிடம் கருத்து கேட்கப்பட்டு நேரலையாக ஒளிபரப்பானது. வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் ஒருமணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் ஒருவரே காணாமல் போய்விட்டிருக்கிறார் என்றால் சாமானிய குடிமக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று அவரது கட்சியின் தொண்டர்கள் ஆவேசமாக கேட்கும் காட்சி எல்லாச்சேனல்களின் வழியேயும் இடியெனக் கேட்டது. தோல்வி பயத்தால் ஏற்பட்ட அவமானத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவர் எங்கோ கண்காணா தேசத்திற்கு ஓடிப்போய்விட்டதற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று ஆளுங்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பொறுப்பின்றி துடுக்குத்தனமாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த செய்தி தொடர்பாளரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து கொடும்பாவி கொளுத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்திய பிரதமர் வேட்பாளரின் தொண்டர்கள் இத்தகைய அசாதாரணமான சூழல் நிலவுவதால் இன்று நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எச்சரித்தனர்.

குறிப்பிட்ட கட்சிக்குத்தான் அவர் பிரதமர் வேட்பாளரேயன்றி எங்களுக்கல்ல என்று தெரிவித்த தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் காணாமல் போய்விட்டார் என்னும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலுக்காக வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏற்கனவே திட்டமிட்டபடி இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிவித்தது. அரசனுக்கு பதிலாக சிம்மாசனத்தில் இருத்தப்பட்ட அவனது செருப்புக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த மக்களையும், தங்களோடு வராத தலைவருக்கென மேடையில் காலியாக ஒரு நாற்காலியைப் போட்டு வைத்துவிட்டு நடத்தப்பட்ட கட்சிகளையும் பற்றி கேள்விப்பட்டிருந்த இந்த பிரதமர் வேட்பாளரின் ஆதரவாளர்கள், அவர் காணாமல் போய்விட்டிருந்தாலும் ஒருவேளை இனியொரு போதும் அவர் திரும்பி வரவே போவதில்லை என்றாலும் இந்தத் தேர்தலில் தாங்கள் அவருக்கு வாக்களித்திருப்பதால் அவரே தங்களுக்கு பிரதமர் என்கிற முடிவில் மாற்றமில்லை என்பதை தீர்மானமாக அறிவித்தனர்.

ஒன்றுமில்லாத விசயங்களைப் பற்றியெல்லாம் ஒன்பது மணிநேரத்துக்கு நேரலை விவாதங்கள் நடத்தி பாண்டித்தியம் பெற்றிருந்த லிபரல்பாளையத்து தொலைக்காட்சி சேனல்கள் பரபரப்பும் திருப்பங்களும் பல்வேறு குழப்பங்களும் நிலவும் இன்றையச்சூழலில் 24 மணி நேரமும் விவாதங்களை நடத்தத் தயாராகின. இதற்காக பல்வேறு கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களுக்கும் அரசியல் நோக்கர்கள் எனச் சொல்லப்படுகிறவர்களுக்கும் அழைப்பு பறந்தது. இவர்களையெல்லாம் விட எந்த தலைப்பானாலும் சடாரென்று உடனுக்குடன் கருத்து சொல்வதற்கென்றே பிரத்யேகப் பயிற்சி பெற்றிருக்கும் கருத்து கந்தசாமி, பொன்மொழி புகழேந்தி, நறுக்குமொழி நாராயணன், துடுக்குப்பேச்சு துரையரசு உள்ளிட்ட திடீர் மற்றும் துரிதச் சிந்தனையாளர்கள் பங்கெடுத்தால்தான் விவாதம் சூடுபிடிக்கும் என்பதால் அவர்களும் போர்க்கால வேகத்தில் அழைக்கப்பட்டனர்.

தேர்தல் நேரமாதலால் எப்படியும் எது குறித்தேனும் குறைந்தபட்சம் ஐந்தாறு சேனல்களிலாவது பேசவேண்டிவரும் என்கிற முன்னனுமானத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தலைநகருக்கு வந்து ஸ்டுடியோ வாசலில் துண்டுவிரித்துப் படுத்திருந்த இந்த திடீர் மற்றும் துரிதச் சிந்தனையாளர்கள் பெரும் வேட்டை கிட்டிய கிளர்ச்சியோடு தயாரானார்கள். ‘எங்க டிவியில் வந்து பேசுங்க’ என்று ஒரு அழைப்பு விடுத்தால் போதும், நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்தி லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து திரட்ட வேண்டிய தகவல்களை தாங்களாகவே மெனக்கெட்டு திரட்டிக்கொண்டு வந்து பேசிவிட்டுப் போகிறவர்களாக இந்த திடீர் மற்றும் துரிதச் சிந்தனையாளர்கள் விளங்கினர். இதற்குமுன் இப்படி யாராவதொரு பிரதமர் வேட்பாளர் எந்த நாட்டிலாவது காணாமல் போயிருப்பதாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறதா? அதற்கான ஓலைச்சுவடி அல்லது கல்வெட்டு ஆதாரங்களோ செப்புப் பட்டயங்களோ இருக்கின்றனவா? நாட்டுப்புறக்கதைகள், வாய்மொழித்தரவுகள், செவிவழிச் செய்திகள், இலக்கியச்சான்றுகள் ஏதும் கிட்டியுள்ளனவா என்றெல்லாம் ஏராளமாக ‘வீட்டுப்பாடம்’ படித்து தீவிர தயாரிப்புகளுடன் இவர்கள் வந்திருந்தார்கள். இப்படியான தருணங்களில் வெளிப்படுத்தும் சாதுர்யமான வாதங்களும் முகபாவங்களும் உடல்மொழியும் தொனியும் தான் அடுத்தடுத்து அழைக்கப்படுவதற்கான தூண்டில் என்பதால் அவர்கள் ஒவ்வொருவருமே கிட்டத்தட்ட நாட்டாமை வேடத்தில் நடிக்கிற ஒரு குணச்சித்திர நடிகரைப் போன்றோ அல்லது எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்கிற துடுக்கானதொரு கதாநாயகனைப் போன்றோ தம்மைத்தாமே உருவகித்து வைத்திருந்தார்கள். ஒரு சேனலில் முடித்துக்கொண்டு அடுத்தச் சேனலுக்கு போகும் வழியில் மாற்றிக்கொள்வதற்கான மாற்று உடுப்புகள் ( ஜிப்பா, காலர் இல்லாத அரைக்கைச்சட்டை, பூப்போட்ட லினன்/ பருத்தி ரகங்கள்) கொண்ட பையை அவர்கள் எப்போதும் கக்கத்தில் இடுக்கியிருந்தார்கள்.

எந்தச் சேனலைத் திறந்தாலும் யாராவது நாலுபேர் லபலபவென இரைந்து கத்திக் கொண்டிருந்தார்கள். இன்னதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்கத்தான் முடிந்ததேயன்றி இன்னின்னதைத்தான் பேசுகிறார்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட ஒருவராலும் யூகிக்கக்கூட முடியவில்லை, அவ்வளவு இரைச்சல். இருந்தாலும், ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளர் வாக்கு எண்ணும் நாளில் காணாமல் போய்விட்டது தொடர்பிலானதொரு விவாதத்தில் ஆற அமர பொறுமையாக பேச முடியாதுதானே என்று சமாதானமடைந்த பார்வையாளர்கள் பேசுகிறவர்களின் வாயசைப்புக்கு ஏற்ப தாங்களாகவே வசனங்களை வருவித்துக் கொண்டார்கள். பார்வையாளன் தனக்கான பிரதியை தானே உருவாக்கிக்கொள்ளும் வகையில் அமைந்துவிட்டிருக்கிற இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியின் மீதுமான பின்நவீனத்துவத்தின் வெற்றியைக் குறிக்கிறது என்றும் இது பியர் பூர்தியே அறியாத பரிமாணம் என்றும் விமர்சகர் ஒருவர் சொல்லுமளவுக்கு விவாதங்களின் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.

இந்த பரபரப்பு சலசலப்பு மற்றும் முணுமுணுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் திருவாளர். வாக்குடையானும் திருமதி.மைவிரலாளும் கூறிய கருத்துகள்தான் பொருட்படுத்தக்கூடியவையாய் இருந்தன. தங்களது அபிமான வேட்பாளர் காணாமல் போயிருப்பது பற்றிய விசயத்தின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வலுவைக் கொண்டிருந்தன அவ்விருவரது வாதங்கள். அவர்களைப் பொறுத்தவரை காணாமல் போனவர் யாரோ ஒருவரல்ல, இந்த முறை அவர்கள் யாருக்கு வாக்களித்திருந்தார்களோ அந்த வேட்பாளர் காணாமல் போயிருக்கிறார். எனவே பிரதமர் வேட்பாளர் காணாமல் போய்விட்டதை அவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாக பாவித்தனர். இத்தனைக்கும் வாக்குடையானும் மைவிரலாளும் காணாமல் போன பிரதம வேட்பாளரின் கட்சிக்காரர்களோ அல்லது அனுதாபிகளோ அல்ல. சொல்லப்போனால் கடந்த தேர்தல்வரைக்கும் இப்படியொருவர் அரசியலில் இருக்கிறார் என்பதையேகூட அறிந்திராதவர்கள். இந்தத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அவர் திடுமென இவர்களுக்குத் தெரியவந்தார். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளங்கள், ஃபேஸ்புக் என்று எங்கு பார்த்தாலும் தெரிகிற இந்த மூஞ்சி யாருடையதாக இருக்கும் என்று தெரிந்துகொள்கிற தொடக்கநிலை ஆர்வத்தோடுதான் அவரை இவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள். அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் இந்த நாடே அழிந்து அதலபாதாளத்தில் முழுகிவிடும் என்பது போன்ற பிரச்சாரம் எங்கு பார்த்தாலும் கொள்ளைநோய் போல பரவிக் கொண்டிருந்தது. திரும்புகிற பக்கமெல்லாம் அவரது முகமே தெரிந்தது. அவரிடம் ஏதோ ஒன்று இருக்கப்போய்தான் இவ்வளவு பெரிசாக அவரை காட்ட முடிகிறது என்கிற பேச்சு பரவலாகிக்கொண்டிருந்தது. ஒன்றுமில்லாததைத்தான் ஊதிப் பெரிதாக்க முடியும் என்று யாரேனும் சொன்னால் அது அவரது வளர்ச்சியைக் கண்டு எரிச்சலடைந்தவர்களின் அங்கலாய்ப்பு என ஊடகங்கள் எழுதின. தேர்தல் நெருங்க நெருங்க நாடு முழுவதும் அவரது அலை பலமாக வீசுவதாகவும் தேர்தலை நடத்துவதும் வாக்களிப்பதும் எண்ணுவதும் ஒரு சம்பிரதாயத்துக்காகத் தானேயன்றி அவரது வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் சொல்லத் தொடங்கின. கருத்துக்கணிப்புகளும் அரசியல் நோக்கர்களின் அவதானிப்புகளும் அடுத்தப் பிரதமர் அவர்தான் என்று திரும்பத்திரும்ப சொல்லியதைக் கேட்டுக் கொண்டேயிருந்ததில் அவரது அலை தங்களையும் சுருட்டியிழுத்துக் கொண்டிருப்பதாக வாக்குடையானும் மைவிரலாளும் நம்பத்தொடங்கினார்கள். அந்த அலை வெறுமனே ஒரு சொல்லாக இல்லாமல் தங்கள்மீது பாய்ந்து ஈரப்படுத்தி உள்ளிழுத்துக்கொண்டது போன்ற உணர்வாக மாறிவிட்டதாக நம்பினார்கள். தேர்தல் என்று நடந்தால் தங்களது வாக்கு அவருக்குத் தான் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்த விதம் இதுதான். வெறும் வாக்காளர் என்ற நிலையிலிருந்து பிரதமர் வேட்பாளர் ஆதரவுப் பேரவையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் என்கிற நிலையை எட்டிவிட்ட இவ்விருவரும் வரலாற்றையும் இலக்கியத்தையும் சமகால நிகழ்வுகளையும் உதாரணமாக காட்டி இன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் எழுப்பிய ஆணித்தரமான வாதங்கள் சில இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளன.

1. மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு, அதை நினைவுபடுத்திக்கொண்டேயிருப்பது நமது கடமை என்கிறார் வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்பாம். ஆமாம், காணாமல் போய்விட்டார் என்பதற்காக அப்படியே மறந்து விட்டுவிட அவரொன்றும் மலேசிய நாட்டு விமானமல்ல, இந்த நாட்டின் பிரதமராக வரவிருந்தவர். நாளைக்கே திரும்பிவந்தாலும் பிரதமராகக்கூடியவர். எனவே அவரை எப்பாடு பட்டாவது கண்டுபிடித்தாக வேண்டும்.

2. கொட்டாரத்தில் அடைத்துவைத்திருந்த ஒரு யானையும் அதன் பாகனும் திடுமென காணாமல் போய்விடுவதாகவும் அப்போதைக்கு பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த மக்களும் ஊடகங்களும் பிறகு அதை மறந்துவிட்டு அடுத்த பரபரப்புக்குத் தாவிவிடுவதாகவும் ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி ஒரு கதை எழுதியிருப்பார். பிரதமர் வேட்பாளர் காணாமல் போயிருப்பது பலவிதங்களிலும் அந்தக்கதையோடு ஒத்துப்போகிறது என்றாலும் நிஜத்தில் நடந்ததையும் ஒரு கதையில் நடப்பதையும் ஒன்றாகப்போட்டு குழப்புவதை ஆளுங்கட்சி பேச்சாளர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

3. பட்டாபிஷேகம் நடக்கவிருந்த நிலையில் வனவாசம் போக நேர்ந்த காவிய நாயகனை தனது லட்சியப்புருஷனாக ஏற்றுக்கொண்டவர் என்பதை வைத்து எங்களது பிரதமர் வேட்பாளரும் ஏதாவதொரு காட்டுக்குப் போயிருப்பார் என்று கூறுவது முட்டாள்தனம். பிரதமர் நாற்காலியின் மீது கண்வைத்து பல்லாண்டுகாலமாக சுற்றிச்சுற்றி வந்து ஜல்லியடித்துக் கொண்டிருந்த கட்சியின் மூத்தத்தலைவர்கள் பலரை ஓரங்கட்டி வனவாசம் அனுப்பியிருக்கும் ஆற்றல் படைத்த அவர் வனவாசம் போயிருப்பார் என்று கூறுவது வக்கிரமானது மட்டுமல்ல, காவியநாயகனையும் அவரையும் ஒருசேர அவமதிப்பதாகும். இதன்றி, பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம் என்கிற இரண்டு ஆஸ்ரம நிலைகளைத் தாண்டியவர்கள்தான் வானப்ரஸ்தம் – வனவாசம் போவார்கள். எங்களவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிரம்மச்சர்யத்தையே கைவிடாதவர். எனவே குடும்பஸ்தராகி கிருஹஸ்த நிலையை இன்னமும் தொட்டிராத அவர் வானப்ரஸ்தம் ஏகியிருப்பார் என்றோ ஆஸ்ரமத்தின் கடைசிநிலையான சந்நியாசம் வாங்கியிருப்பார் என்றோ சொல்வது சாஸ்திர விரோதம். படிப்படியான இந்த நிலைகளை கிரமவரிசையில் கடக்காமல் எடுத்தயெடுப்பில் பிரம்மச்சர்யத்திலிருந்து நேரடியாக சந்நியாசம் வாங்குகிறவர்கள் இடையிடையே திருட்டுத்தனமாக குடும்பஸ்தராகி அவ்வப்போது பிடிபடுகிறச் செய்தியை நன்கறிந்திருக்கிற எங்களது பிரதமர் வேட்பாளர் ஒருபோதும் சாஸ்திரவிரேதமாக நடப்பவரல்ல.

4. அரசப்பதவி வேண்டாமென்று புத்தர் துறவறம் பூண்டதை இவரோடு ஒப்பிடுவது இரண்டு வகைகளில் பொருத்தமற்றது. முதலாவது, புத்தரையும் அவரது கருத்துகளையும் அடியோடு வெறுத்து எதிரியாக பாவிக்கிறவர் எங்களது பிரதமர் வேட்பாளர். இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொன்றின் மீதும் எங்களவர் ஆசைப்பட்டு பின்தொடர்வதும்கூட ஆசையை விட்டொழிக்க வேண்டும் என்கிற புத்தரின் போதனை மீதான வெறுப்பில்தான். மற்றது, புத்தர் அரசப்பதவியை மறுத்து துறவியானவர். இவரோ துறவை மறுத்து அரசப்பதவியை நாடுகிறவர். துறவிக்கு எதற்கு அரசப்பதவி என்று குதர்க்கமாக கேட்டு மக்களைக் குழப்பப் பார்க்கும் மாற்றுக்கட்சி நண்பர்களுக்கு எங்களது பதில், மனைவியை மறந்து அல்லது மறைத்துவிட்டு வாழ்வது மட்டுமே துறவு என்றாகிவிடாது என்பதுதான்.

இப்படியாக வாதங்களை எழுப்பி வாக்குடையானும் மைவிரலாளும் எதிராளிகளை வாயடைக்க வைத்துக்கொண்டிருந்த வேளையில் நாடு அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாகியது. எண்ணுவதற்கான தயார்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த லிபரல்பாளையத்தின் அத்தனை வாக்கு எண்ணிக்கை மையங்களும் தண்ணீரில் முழுகிக் கிடப்பதாக வந்த செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. ஒரு சொட்டு மழைகூட பெய்யாத ஒரு நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டும் தண்ணீரில் முழுகியிருக்கிறதென்றால் அது தங்களது அபிமான பிரதமர் வேட்பாளர் பிரதமராவதை தடுக்கும் கெடுநோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிவேலையாகத்தான் இருக்கமுடியும். ஏழடுக்கு பாதுகாப்பையும் மீறி இந்தச் சதிவேலை நடந்திருக்கிறதென்றால் அது ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்ததாகத்தான் இருக்கமுடியும் என்று வாக்குடையானும் மைவிரலாளும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறதேயன்றி அது ஒருபோதும் யாருக்கெதிராகவும் போட்டியிடுவதில்லை என்று லிபரல்பாளையம் தலைமை தேர்தல் ஆணையர் கூறியசமாதானத்தை வாக்குடையானும் மைவிரலாளும் ஏற்கவில்லை.

யார் என்ன குற்றம் சாட்டினாலும் அதற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் ஆகப்போவது எதுவுமில்லை என்றாகிவிட்டது. உண்மையில் என்னதான் ஆனார் இந்த பிரதமர் வேட்பாளர்?

***

கனவில் கண்டெடுத்த புதையலுக்கு காலணா மதிப்பில்லை என்பார்கள். ஆனால் பிரதமர் வேட்பாளர் கண்ட கனவு ஒவ்வொன்றும் பலித்தே வந்தது. லிபரல்பாளையத்தின் பிரதமராகிவிடுவது என்கிற அவரது கனவும்கூட பலித்துவிடும் நிலையிலேயே இருந்தது. நாடெங்கும் அவருக்கு ஆதரவாக வீசும் அலையில் மிதந்து அவர் பிரதமர் நாற்காலியில் அமரப் போவதை விடிந்தால் நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை உறுதி செய்யக்கூடியதாயிருந்தது. ஆமாம், அப்படியொரு அலையை அவரும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாக்கி வளர்த்து வைத்திருந்தார்கள். அந்த அலையின் ஒவ்வொரு திவலையும் பல்கிப் பெருகி மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குள் வாக்காக புகுந்து திமிறிக் கொண்டிருப்பதையும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். ஆனால் குறிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே தவறுதலாக வெடித்து தயாரித்தவர்களையே காவுகொண்டுவிடுகிற ஒரு குண்டைப் போல உக்கிரம் மிகுந்த இந்த ஆதரவு அலை தங்களுக்கு பெருத்த சேதாரத்தை விளைவிக்கப் போகிறது என்பதை மட்டும் அறியாதவர்களாய் இருந்தார்கள்.

வாக்குப்பதிவு முடிந்து கடந்த ஒருமாதமாக பூட்டப்பட்ட அறைக்குள் திமிறிக்கொண்டிருந்த ஆதரவு அலை இனியும் பொறுக்கமுடியாதென்கிற ஆவேசத்துடன் மூர்க்கமாகவும் கட்டுக்கடங்காத வேகத்தோடும் பொங்கி அதிகாலை மூன்று மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களை மூழ்கடித்துவிட்டு பிரதம வேட்பாளராகிய அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரையும் வாரியிழுத்துக் கொண்டு பாய்ந்தது. ஆயிரம் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி நாடாளுமன்றத்தின் பட்டாபிஷேக மண்டபத்திற்கு விரைவது போன்ற பேரனுபவமாக அதை அவர் உணர்ந்தார். ஆனால், எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்பாகவே கிளம்பி வேகமாக வீசும் இந்த அலை தன்னை சடுதியாக பிரதமர் நாற்காலிக்கு இழுத்துக்கொண்டு போய் அமர்த்தப்போகிறது என்கிற பரவசத்தோடு அலையின் நுரையில் மிதந்துகொண்டிருந்த அவரது கண் முன்னாலேயே நாடாளுமன்றம் அவருக்குப் பின்னால் நழுவிப் போய்க்கொண்டிருந்தது. அவர் உருவாக்கிய அலை அவராலேயே கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வீசி அவரை நாட்டுக்கு வெளியே எங்கோ தொலைதூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு தானும் வடிந்தடங்கியது.

ஜீவராசிகள் என்று ஏதுமற்ற ஒரு பாழ்வெளியில் தன்னந்தனி உயிரியாய் அன்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்னும் லிபரல்பாளையத்தின் பிரதமர் வேட்பாளர் மயங்கிக் கிடந்தார். கரையொதுங்கிய சிப்பிகளைப்போலவும் நண்டுகளைப் போலவும் அவரைச் சுற்றி சிதறிக்கிடந்தன மின்னணு வாக்கு இயந்திரங்கள்.

 நன்றி: http://malaigal.com/?p=4943

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...