புதன், மே 31

உனக்கு நான் வழங்குவது - ஆஸாங் வாங்கடெ

சென்ற வாரம் உத்தரப்பிரதேசக் கிராமங்கள் சிலவற்றுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றபோது, அவரைப் பார்ப்பதற்கு முன் அங்குள்ள தலித்துகள் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு அந்த  மாநில அரசாங்கம் சோப்பையும் ஷாம்பூவையும் வழங்கிய செயல்  நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அரசாங்கத்தின் அந்த ஈனச்செயலுக்கு எதிர்வினையாக  எழுதப்பட்ட கவிதையின் ஆங்கில மொழியாக்கம் 'thewire.in' இணையதள ஏட்டில் வெளிவந்துள்ளது. தலித் கவிஞரும் வழக்குரைஞருமான ஆஸாங் வாங்கடெ, டெல்லியிலுள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் – பெரியார் - புலே ஆய்வு வட்டத்தை நிறுவியவர்களிலொருவர்.

 ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா 

மனு எங்களைச் சுத்தமற்றவனாக்கினான்
உனது காழ்ப்பேறிய மனம் காரணமாக
சாதிப் பெயர்கள், ஒதுக்குதல்
ஆகியவற்றின் வாடை என் உடம்பில்.
புண்களின் நாற்றத்தில் நான் ஒளிர்கிறேன்
நான் நாறுவது என் மீதான  ஒடுக்குமுறையால், 
உனது மலத்தால் அல்ல.

உனது எசமானனைத் திருப்திப்படுத்த
நீ எனக்கு சோப்பும்  ஷாம்பூம் இன்று  வழங்கினாய்
நாற்றமடிக்கும் அந்த நாக்குகளை
சிறுபான்மை மக்களைப் பாலியல் வன்முறை செய்வோம், 
வெட்டுவோம் என்று
கூறும் அந்த நாக்குகளைக் கழுவவோ
மனுவாதத்தையும் வருணதர்மத்தையும் போதிக்கும்
 அந்த மூளைகளைச் சுத்தம் செய்யவோ
அவற்றை என்றைக்கேனும் பயன்படுத்தியுள்ளாயா?
  
 நீ எனக்கு வழங்கியுள்ளவையால்
எனது மாண்பை அவமதித்துள்ளாய்
நான் உனக்கு வழங்குவதன் மூலம்
உனது தற்செருக்கை அவமதிக்கிறேன்.

எனது பாபாசாகெபை  அபகரித்துள்ளவர்கள்
நிலையற்ற துப்புரவாளர்களாக ஆகியுள்ளனர்

 சாதி ஒடுக்குமுறை, ஒதுக்குதல்
என்ற எனது காயங்களை
உனது சோப்பு கிளறிவிட்டுள்ளது
எனக்கு உனது அனுதாபம் வேண்டாம்
உனது வெறுப்பையே வேண்டுகிறேன்
ஓங்கி ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்களில்
எனது எழுச்சி கீதம்
அது எனக்கு மாண்பைத் தருகின்றது
விடுதலையைத் தருகின்றது
போராடிப் பெறத்தக்க விடுதலையை.

இரண்டு வேளைச் சோற்றுக்காக
உனது மலத்தை அள்ளுகிறேன்
அதைச் செய்யாவிட்டால்
இந்தக் குடியரசில்
நான் பட்டினியுடன் உறங்க வேண்டும்
சோப்பும் ஷாம்பூவும்
உனது அறியாமையை வளர்க்கின்றன
எனது வயிற்றை அல்ல.

உனது எசமானன்
இந்த தேசத்தின் ஒளிவட்டத்தில்
நாங்களோ அவனுக்கு உகந்தவர்களாக
வெளிறிய சருமத்துடன்
அடிவருடிகளைப் போல்
கரவொலி எழுப்ப வேண்டுமாம்
எனக்குள் இருக்கும்
மௌனம் உடைபட்டு வெளிவருகையில்
அதிரப் போவது எது?

ஐயனே! வா, எனது வீட்டைப் பார்
நீ போர்த்தியிருக்கும் காவி அங்கியைக் காட்டிலும்
அது சுத்தமானதாக இருக்கும்
ஆனால் உனது  மனம் சுத்தமான பிறகு  பேசு
உன் மனதில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும்
மனு எரிந்த பிறகு சிரி
ஏனெனில்
எனது மௌனம் கலையப் போகிறது
ஏற்கனவே விடிந்தாகிவிட்டது.

நீ எனக்கு உன் முதுகைக் காட்டிவிட்டு
விலகுவதற்கு முன்
நான் வழங்குவதைப் பெற்றுக் கொள்:
எனது சோப்புகள்
அம்பேத்கரும் புத்தரும்
போ, உனது அடிமை மனதைச் சுத்தமாக்கு
போ, சாதியை அழித்தொழி
உனது அறிவில் மண்டிக்கிடக்கும் மனுவையும்தான்.
உனது காவி அங்கியை வெண்மையாக்கு
இங்கு இரு சூரியன்கள் இருக்க முடியாது
எங்களுக்கு எங்கள் கதிரவன்
உனது ஞாயிறைச் சுட்டுப் பொசுக்க.

https://thewire.in/141345/dalit-poet-adityanath-government/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...