திங்கள், டிசம்பர் 17

புலப்படும் கரங்களும்…புலப்படா கரங்களும்…! - பிரபாத் பட்நாயக் தமிழில்: க.சுவாமிநாதன்

இது ‘‘மேக்ரோ ஸ்கேன்’’ இணைய தளத்தில் பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள கட்டுரை. உலகப் பொருளாதாரத்தில் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்கிற வர்த்தகப் பற்றாக்குறை, நெருக்கடிகள், தீர்வுகள் குறித்து ஆழமான விஷயங்களை அவர் அதில் பகிர்கிறார். அதன் தொகுப்பு கேள்வி – பதில் வடிவில் இங்கே…

மூன்றாம் உலக நாடுகள் இன்று உலகப் பொருளாதாரத்தில் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சனை என்ன? அதன் காரணங்கள் என்ன?
மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிச் சந்தைக்கான கிராக்கி குறைந்து இருப்பது முக்கியப் பிரச்சனையாகும். அவற்றின் சரக்குகள், சேவைகள் இரண்டுமே இந்நெருக்கடியைச் சந்திக்கின்றன. இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
ஒன்று, உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவ நெருக்கடி உலகப் பொருளாதாரத்தின் கிராக்கியை குறைத்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தியில் அந்நெருக்கடி பிரதிபலித்திருப்பதன் விளைவு இது. ஆகவே மூன்றாம் உலக நாடுகளின் மொத்த ஏற்றுமதி மதிப்பை எடுத்துப் பார்த்தால் இச்சரிவைப் புரிந்து கொள்ள முடியும்.
இரண்டாவது, அமெரிக்கா இன்று கடைப்பிடிக்கிற ‘‘சந்தைப் பாதுகாப்பு’’ கொள்கை. இதனால் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்கு அதிகமாகியுள்ளது. மற்றவர்களின் பங்கினைக் குறைத்துள்ளது.
இதன் தாக்கம் எவ்வாறு உள்ளது?
வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு கொண்டு சென்றுள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் இறக்குமதிகளின் அளவுகளும் இதற்கேற்ப குறையாததால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இச்சூழல் மூன்றாம் உலக நாடுகளுக்குள் வரக்கூடிய நிதி வரத்தையும் பாதித்துள்ளது. இதற்கு காரணம், அமெரிக்கா எடுத்துள்ள ‘‘சந்தை பாதுகாப்பு’’ நடவடிக்கைகள் நவீன தாராளமயம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதும் மூன்றாம் உலக நாடுகளுக்கான நிதி வரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்தியாவே இதற்கு உதாரணம். ஆகவே வர்த்தகப் பற்றாக்குறைகள் ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாடுகள் சொந்தமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மூன்றாம் உலக நாடுகள் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
மிகச்சிறந்த நடவடிக்கை என்பது, இறக்குமதி மீதான தடுப்புக்களேயாகும். வரிகள் மூலமாகச் செய்யலாம். அளவுக் கட்டுப்பாடுகள் வாயிலாகச் செய்யலாம். பணவீக்கத்தை ஏற்படுத்தாதவாறு இதைச் செய்வதே முக்கியமானது. உதாரணமாக பெட்ரோலிய இறக்குமதிகள் மீது வரி போட்டால் அது நுகர்வோர் முதுகுகளுக்கே மாற்றப்படும். அது விலைவாசி உயர்வை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உற்பத்தி நடவடிக்கைகள் எல்லாவற்றின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் பெட்ரோலியம் என்பது பொருளாதாரத்தில் தவிர்க்க இயலாத உற்பத்தி உட்பொருள் ஆகும். ஆனால் கார்கள், தங்கம் இறக்குமதிகள் மீது வரி போடலாம். அத்தகைய ஆடம்பரப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகள் பொதுவான பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்காது. ஆகவே இறக்குமதியைக் குறைக்கிற நடவடிக்கைகளில் இத்தகைய அணுகுமுறை நமக்குத் தேவையாகும்.

இதைத் தவிர வேறு நடவடிக்கைகள் என்ன? அவற்றின் விளைவுகள் என்ன?
பணவீக்கத்தை ஏற்படுத்தாமல் இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் பற்றி பேசினோம். அத்தகைய வழிகளைக் கையாண்டால் சாதாரண உழைப்பாளி மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படாது. ஆனால் மற்ற நடவடிக்கைகள் பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’. அதன் விளைவுகளை சாதாரண உழைப்பாளி மக்களின் வாழ்க்கைத்தரம் மீது பாதிப்பினை ஏற்படுத்தும்.

ஒரு குறிப்பிட்ட பொருள் மீது வரியோ, கட்டுப்பாடோ போடும்போது அப்பொருளின் விலை மீது மட்டுமே தாக்கம் இருக்கிற வகையில் அல்லது பணவீக்கம் எழாத வகையில் செய்ய முடியும். (உதாரணம்: கார், தங்கம் போன்ற ஆடம்பரப் பொருட்கள்) ஆனால் ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’ எல்லா பொருட்களின் விலை மீதும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மூன்றாம் உலக நாடுகளைப் போல வளர்ந்த நாடுகளுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள்தானே இருக்கும்?
அங்குதான் ‘‘சந்தை பாதுகாப்பில்’’ உள்ள பாரபட்சம் குறுக்கே வருகிறது. இப்போது அமெரிக்கா, பல நாடுகளின் இறக்குமதிச் சரக்குகள் மீது வரிச்சுவர்களை எழுப்பியுள்ளது. சேவைகளை அவுட்சோர்சிங் செய்கிற பெரு நிறுவனங்கள் மீது தண்டத் தொகைகளை விதித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க அவுட்சோர்சிங் நடவடிக்கைகளும் இதில் அடங்கும். ஆனால் இதேபோன்ற நடவடிக்கைகளை பிற நாடுகள் செய்வதை அமெரிக்காவோ, சர்வதேச நிதி மூலதனமோ ஏற்றுக் கொள்வதில்லை. ‘‘எல்லாவற்றையும் சந்தையின் செயல்பாட்டுக்கு விட்டுவிடுங்கள்’’ என்ற அமெரிக்காவின், சர்வதேச நிதி மூலதனத்தின்முழக்கம் வெற்று வார்த்தைகளே.

இப்படிப்பட்ட பாரபட்சத்தை மூன்றாம் உலக நாடுகள் மீற முடியாதா?
அதனால்தான் திணறுகிறார்கள். நாம் பொருளாதாரத்தில் மேலோட்டமாக பார்க்கிற நடவடிக்கைகள் ‘‘கண்களுக்குப் புலப்படும் கரங்கள்’’ ஆகும். ஆனால் அவற்றைவிட வலிமையானவையாக ‘‘கண்களுக்குப் புலப்படாத கரங்கள்’’ உள்ளன. இதனால் அமெரிக்காவும் சில வளர்ந்த நாடுகளும் ‘‘வரிச்சுவர்களை’’ நோக்கி நகர்கின்றன. ஆனால் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’ அல்லது உள்நாட்டு ஊதியம்/ பணச்சுருக்கம் நோக்கி நகர்கின்றன. ஆனால் சீனாவால் எதிர்வினை ஆற்ற முடிகிறது. பதிலுக்கு வரிச்சுவர்களை எழுப்ப முடிகிறது. காரணம், ஏற்கெனவே சீனா ஏற்றுமதி உபரியை வைத்திருப்பது ஆகும்.

இது வளர்ந்த நாடுகளின் மேலாதிக்கத்தை காண்பிக்கிறதே!
ஆமாம். 19ஆவது நூற்றாண்டில் இருந்த காலனி ஆதிக்கத்திற்கு ஒப்பான நிலைமையாகும். இது இந்தியா போன்ற காலனி நாடுகள் மேலை உலக உற்பத்திகள் மீது வரி போட முடியாது. குறிப்பாக பிரிட்டன் மீது இந்தியாவில் செய்ய முடியாது. 1846 வரை இந்தியப் பெருங்கடல் மீது பெருமளவு வரிகளை பிரிட்டன் போட்டது. பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கு பின் சுதந்திரச் சந்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் இறக்குமதி மீதான அவர்களின் வரிவிதிப்பு தொடர்ந்தன. இப்போதும் பழைய மேலாதிக்க முறைமையை நோக்கியே சர்வதேசப் பொருளாதாரம் நகர்வது போல் தோன்றுகிறது.

வேறு வழிகள் என்ன?
ஆட்சியாளர்கள் கூலியைக் குறைக்கிறார்கள். அதாவது மக்கள் கைகளில் புழங்கும் பணம் சுருங்கும் போது உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலைகளும் கட்டுக்குள் வரும். கிராக்கி குறைகிறது அல்லவா! இறக்குமதி பொருட்களின் விலைகளோடு போட்டி போடுகிற அளவுக்கு உள்நாட்டு விலைகளையும் கட்டுப்படுத்த முடியும். அதாவது 10 சதவீத வருமானம் குறைந்தால் அது 10 சதவீத விலைக் குறைப்பிற்கு வழிவகுக்குமென்பது கணக்கு. அதுவே ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’ 10 சதவீதம் இருந்தால் அத 10 சதவீதம் பண வீக்கத்தை உருவாக்கி இறக்குமதிப் பொருட்களை மேலும் அதிக விலையுள்ளதாக மாற்றும். 

இவை இரண்டும் வெவ்வேறு நடவடிக்கைகள் போலத் தோன்றினாலும் ஒரே விதமான பாதிப்பையே ஏற்படுத்தக்கூடியவை ஆகும். இரண்டுமே சாதாரண உழைப்பாளி மக்களை வதைப்பதாக இருக்கும்.
உழைப்பாளி மக்களைக் குறி வைக்கிற தீர்வுகளையே அரசு நாடுகிறதே!
ஆமாம். அரசு செலவினங்களை குறைப்பதென்ற பெயரால் மானியங்களை வெட்டுவது. ஏழைகளுக்கான மடை மாற்றங்களைத் தடுப்பது. அரசு ஊழியர்களின் சம்பளங்களை, பயன்களைக் குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது. இவையெல்லாம் உழைப்பாளி மக்களின் உண்மை ஊதியங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இத்தாக்குதல்களைத் தொடுக்க தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் தாக்கப்படவேண்டும். பணி அமர்த்தவும், பணியை விட்டு விரட்டுவதற்குமான சுதந்திரம் தொழிலதிபர்களுக்கு தரப்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?
மூன்றாம் உலகைப் பொறுத்தவரையில்,‘சந்தை பாதுகாப்பு’ ஒப்பீட்டளவில் நல்ல கருவியாக இருக்கலாம். வர்த்தக இடைவெளியை எதிர்கொள்ள உதவலாம். ஆனால் நிலையான தீர்வுக்கு வழி வகுக்காது.

நிலையான தீர்வுக்கு என்ன செய்வது? 
வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, உள்நாட்டு சந்தையை விரிவாக்குவது என்பதே ஆகும். மற்றபடி மேலே விவாதித்த எல்லா நடவடிக்கைகளுமே ஒப்பீட்ட அளவில் வேறுபட்ட பாதிப்புகளை உருவாக்குமே தவிர நிலைத்து நிற்கிற தீர்வுகளைத் தராது.

சனி, டிசம்பர் 15

ஹிட்லினி - ஆதவன் தீட்சண்யா


ம்பத்தகாத சம்பவங்களின் விளைநிலமாய் நாடொன்று இருக்குமானால் அது லிபரல்பாளையம் தான். அதுவும், சாக்கிய வம்சத்தாரை கபடத்தால் வீழ்த்தி ஆட்சிக்குவந்த காக்கிய வம்சத்தாரின் கடைசி மன்னரான ஹிட்லினி அன்றாடம் உறங்கப்போகும் வேளையில் ஏதேனுமொரு அதிர்ச்சியை அறிவித்து உலகையே பரபரப்பில் ஆழ்த்தும் உச்சத்தை எட்டிப் பிடித்திருந்தார். வியப்பிலாழ்த்தும் விரிமார்பன்ஜி (வி.வி.ஜி) என்கிற புனைப்பெயரால் புகழ்ந்தழைக்கப்படும் அப்பேர்ப்பட்ட ஹிட்லினி ஆளும் நாட்டில் குடிமக்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? இருந்திருக்கமாட்டார்கள் என்றே எல்லோரும் நினைப்பர். ஆனால் அவர்கள் சும்மாதான் இருந்தார்கள். கோன் எவ்வாறோ குடிமக்களும் அவ்வாறே என்கிற முதுமொழியை பொய்யாக்கும் விதமாக அவர்கள் சும்மா இருந்தார்கள்.

சும்மா இருந்தார்கள் என்றால் சும்மாவே இருந்தார்கள் என்றில்லை. சோறு தின்றார்கள், வெளிக்கிப் போனார்கள், வேலை பார்த்தார்கள், வரிசைகட்டி வாக்களித்தார்கள், கலவி செய்தார்கள், கண்ணயர்ந்தார்கள், பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள், அதுகளை படிக்க அனுப்பினார்கள். பிறகு செத்தார்கள், பிறந்தார்கள், செத்துப் பிறந்தார்கள் அல்லது பிறந்து செத்தார்கள். இப்படி இருக்குமிடம் தெரியாமல் இருந்துவந்த லிபரல்பாளையம் குடிமக்களில் ஒருத்தியாகிய ஏதுமறியாள் இன்று அவர்களது மன்னர் ஹிட்லினி தருவதை விடவும் பேரதிர்ச்சியை உலகத்திற்கு தந்திருக்கிறாள்.

ஏதுமறியாள், பன்னிரண்டிலக்கத்தார் பரம்பரையினள். அவளது தந்தையார் பில்லியனாரப்பன் பெரும் செல்வந்தர். நஞ்சைபுஞ்சை நாலுபக்கம் தோப்பு என்று திரண்ட சொத்துகளுக்கு அதிபதி. நாட்டில் வருடத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குமளவுக்கு வசதி கொழுத்த நாலைந்து பேரில் அவரும் ஒருவர். ஏதுமறியாளின் தாய் நிமிராதேவியும் லேசுபாசான குடும்பத்தவள் அல்ல. ஆனாலும் அவள் வெறும் திருமதி பில்லியனாரப்பன் அல்லது ஏதுமறியாளின் அம்மா. 

பில்லியனாரப்பன் - நிமிராதேவி தம்பதியருக்கு தமது குடும்ப அந்தஸ்துக்கேற்ற மாப்பிள்ளையை தேடிப் பிடிப்பது பெரும்பாடாயிருந்தது. கடைசியில் வாய்த்தது பெரிய இடத்து சம்பந்தம் தான். தொழிலதிபர் நாடுகாத்தான் என்றால் ஊருலகத்திற்கே தெரியும். அரசு வங்கிகளில் ஏழெட்டாயிரம் கோடி கடன் வாங்கி முடித்ததும் நாட்டை விட்டு ஓடிப்போய் தலைமறைவாக இருந்துவிட்டு அவ்வப்போது திரும்பி வந்து ஓடுமளவுக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர். அவரது மகனைத்தான் ஏதுமறியாளுக்கு கட்டி வைத்தார்கள்.



***
மன்னரின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்ட ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி திட்டத்தின்கீழ் ஆறே மாதத்தில் குழந்தையை பெற்றெடுக்கும் நாட்டின் முதல்பெண் ஏதுமறியாள். முழுமையாக வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான குழந்தையை ஆறேமாதத்தில் பெற்றெடுக்கப் போகிறோம் என்கிற பூரிப்பு அவளுக்கு. போட்டி நிறைந்த உலகத்தில், நொடியிலும் குறைவான பொழுதில் பல மாற்றங்கள் நிகழும் இக்காலத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னமே பிறப்பதால் லிபரல்பாளையம் குழந்தைகள் அடையப்போகும் நற்பயன்களை மனதிற்கொண்டு மன்னர் அறிவித்த இந்தத் திட்டம் தன்னிலிருந்து தொடங்குவது குறித்த பரவசத்தில் அவள் திளைத்திருந்தாள். ஆறுமாதமோ ஆறுவருசமோ காலஅளவு எதுவாயினும் கர்ப்பந்தரிப்பது பெண்தான். ஆனாலும் அவஸ்தைப்படும்  காலத்தின் அளவு குறைகிறதே என்று ஏதுமறியாளைப் போலவே நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் மன்னருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தாள். 

சுண்டைக்காய் விற்பது முதல் சுடுகாட்டுச் சாம்பல் அள்ளுவது வரையான ஒப்பந்தம் எதுவாயினும் மன்னரை நிழலெனத் தொடரும் நண்பர்கள் இருவருக்கே என்பதுதான் அங்குள்ள நியதி. அதன்படி 128 பில்லியன் டாலர் மூதலீட்டிலான இந்த ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி திட்ட ஒப்பந்தமும் அவர்களில் ஒருவரது ‘மியோநிறுவனத்திற்கே தரப்பட்டது. ‘மேக் இன் லிபரல்பாளையம்இலச்சினையுடன் இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன உயிர்நுட்பங்களைக் கொண்டு ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரியை வடிவமைத்த மியோ ‘புதிய மனிதர்களைப் படைக்கும் மன்னர் கடவுளாகிறார், நாமோ அவரது பக்தர்களாகிறோம்என்கிற விளம்பரத்துடன் களமிறங்கியது.

கருத்தரிப்பது முதல் மியோவின் மருத்துவக்கண்காணிப்பு வலையத்திற்குள் இருப்பதற்கு சம்மதிக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்ட முதலாவது பெண்ணான ஏதுமறியாள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதும் அந்த மருத்துவமனையை ஊடகத்தாரும் பாதுகாப்புப் படையினரும் சுற்றி வளைத்திருந்தார்கள். பிரசவ அறைக்கு வெளியே பதற்றமாக நடமாடும் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருந்ததால் ஏதுமறியாளின் கணவனும் அவனுக்கு ஒத்தாசையாக உறவினர்கள் சிலரும் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஃபாஸ்ட் ட்ராக் பிரசவத்தின் முக்கியத்துவம் கருதி குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது உயரதிகாரிகளுடன் அங்கு வந்திருந்தது பலரையும் நெகிழச் செய்தது. அன்றாடம் எத்தனையோ ஊழல்களைச் செய்து முடித்தேயாக வேண்டிய வேலைப்பளுவுக்கிடையிலும் அவர் ஒரு குடிமகளின் பிரசவநேரத்தில் இப்படி வந்து காத்திருப்பதைச் சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால்தான் அடுத்தடுத்து பரிசீலனையில் இருக்கும் அல்ட்ரா ஸ்பீடு ஐந்து மாத டெலிவரி, நானோ ஸ்பீடு நாலு மாத டெலிவரி போன்ற திட்டங்களை செயற்படுத்த முடியும் என்பதால் ஏதுமறியாளை விடவும் அதிகமான படபடப்புடன் தான் இருப்பதாக அவர் அளித்த பேட்டியும் #மினிஸ்டர்வெயிட்டிங் என்கிற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டிங்காகிக் கொண்டிருந்ததது.

பக்கத்து நாடான இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பெரியார், பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றார். மனிதப்பிறப்பில் மகோன்னதப் பாய்ச்சலாக கர்ப்பக்காலத்தை குறைக்கும் எமது அரசின் இம்முயற்சி பெரியாரின் வாக்கினை செயற்படுத்தும் முதற்படிஎன்று அந்தப் பேட்டியில் அவர் சொல்லியிருந்த கருத்து கடும் சர்ச்சையை உருவாக்கியது. பெரியார் கர்ப்பப்பையை கத்தரித்து எறியச் சொன்னதன் பொருள் வேறு என்றும், மியோவிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு இதுபோன்ற பிறப்பணுச் சோதனைகளை அனுமதிக்கும் மோசடிக்கு பெரியாரை துணைக்கழைக்கும் போக்கை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கருப்புக்கொடி காட்ட நினைத்தவர்களை அவ்வாறு நினைத்ததற்காகவே கைது செய்த போலிசார் அவர்களை ராஜவிரோதக் குற்றத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.

இதனிடையே, மருத்துவமனை தலைமையதிகாரி அரைமணி நேரத்திற்கொருமுறை வெளியிட்டு வந்த மருத்துவ அறிக்கையை விதவிதமான தலைப்புகளுடனும் முற்சேர்க்கை பிற்சேர்க்கைகளுடனும் ஒளிபரப்பிய ஊடகங்கள் நாட்டின் அதிமுக்கிய நிகழ்வாக ஏதுமறியாளின் பிரசவத்தை மாற்றிக் கொண்டிருந்தன. ஒரு அறிக்கைக்கும் மறு அறிக்கைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடற்கூறு வல்லுநர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், ஆல் டாபிக் அளந்தான்கள் என்று பலதிறத்தாரும் கர்ப்பகாலத்தைக் குறைக்கும் இந்த ஃபாஸ்ட் ட்ராக் பிரசவத்தின் சாதகபாதகங்கள் குறித்து நேரலையில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே ஒளிபரப்புக்கூடத்திற்குள் திமுதிமுவென நுழைந்த போலிசார், அரசாங்கம் கொண்டுவரும் திட்டம் எதுவானாலும் ஏற்றுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமேயல்லாது ஆதரித்தோ எதிர்த்தோ இப்படி விவாதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் சட்டம் தன் கொடுமையைச் செய்யும் என்றும் மிரட்டிய காட்சியும் நேரலையில் ஒளிபரப்பாகியது. போலிசாரின் இந்த அத்துமீறலுக்கு எதிராக வீசிய கண்டன அலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதையடுத்து எல்லாம் இயல்புநிலைக்குத் திரும்பின.

புரோகிதர் கணித்தருளிய புண்ணியவேளையாம் காலை 10.59.41 மணிக்கு குழந்தை பிறந்துவிட்டது என்கிற நற்செய்தியுடன் கூடிய கடைசி மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நள்ளிரவைத் தாண்டியும் அறிக்கை வராததால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நாடு தத்தளித்தது. ‘பிரசவ வலி எடுத்தும் தாமதமேன்?’, ‘இன்னும் தலை திரும்பவில்லையா?’, ‘தாயும் சேயும் நலமா?’ என்று ஊடகங்கள் பல்வேறு யூகங்களை கிளப்பின. இவ்வளவு காலமும் பத்துமாதம் பொறுத்திருக்க முடிந்த நாம் இப்போது சிலமணி நேரங்கள்கூட காத்திருக்க முடியாமல் ஏன் பொறுமையற்றுப் போனோம் என்று  சிலர் கூறிய புத்திமதி அங்கு யாருக்கும் தேவைப்படவில்லை. மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஏதுமறியாளின் உறவினர்களும் நண்பர்களும் தம்மை உள்ளே அனுப்பும்படி அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். பராக்கு பார்க்க வந்திருந்தவர்களும் இவர்களோடு சேர்ந்துகொண்டதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலிசார், லேசான தடியடி நடத்தி பலரது மண்டையை உடைத்து காலை முறித்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஃபாஸ்ட் ட்ராக்கில் முதலாவது குழந்தை பிறந்தது என்கிற உயிர்நுட்பச் சாதனையை உலகுக்கு அறிவிப்பதற்காக மன்னரே இங்கு தனிவிமானத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் அதற்காகவே மருத்துவமனை நிர்வாகம் காலங்கடத்துவதாகவும் ஒரு தகவல் கசிந்தது. இதையடுத்து அமைச்சர்கள் பலரும் அங்கே வரத்தொடங்கிய சற்றைக்கெல்லாம் மருத்துவமனை மொட்டை மாடியில் மன்னரின் தனி விமானம்  வந்திறங்கியது. தனிவிமானம் என்பது பெயருக்குதான். ஆனால் மியோ நிறுவனரும் உடன் வந்திருந்தார். தனது இரண்டு நண்பர்களில் ஒருவராவது உடன் வராமல் பாத்ரூம் போவதற்கும்கூட பழகியிருக்காத மன்னர், இந்த பிரசவத்தோடு நேரடி தொடர்புடைய மியோ நிறுவனரை இங்கு அழைத்துவந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.   

மன்னருடனேயே வந்திருந்த செய்தியாளர்கள் அவர் விமானத்தை விட்டு இறங்கிய நொடியிலிருந்து நேரலை ஒளிபரப்பை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்கள். மருத்துவமனைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த அகன்ற பெருந்திரைகளில் அவரது ஒவ்வொரு அசைவும் உடனுக்குடனே நேரடியாக ஒளிபரப்பாகியது. நாட்டுமக்கள் தொலைக்காட்சிகள் வழியாக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொட்டைமாடியிலிருந்து உள்ளுக்குள்ளேயே இறங்கி பிரசவ வார்டுக்குள் போன மன்னர் ஏதுமறியாளின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.  பின் அவர் மருத்துவர்களைப் பார்த்து கட்டை விரலை பெருமிதத்தோடு உயர்த்திக் காட்டினார். இதற்காகவே காத்திருந்த மருத்துவர்கள் வார்டுக்கு வெளியே சில நிமிடங்கள் காத்திருக்குமாறு மன்னரை பணிந்து வேண்டிக் கொண்டனர்.

வெளியே வந்த மன்னர் ஏதுமறியாளின் மாமனார் நாடுகாத்தானை கண்டதும் பாய்ந்தோடி கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். ‘நீங்க நாடு திரும்புறப்ப நான் வெளியே போயிடுறேன். நான் திரும்புறப்ப நீங்க தலைமறைவா ஓடிப்போயிடுறீங்கஎன்று பாசத்தோடு கடிந்துகொண்ட மன்னர் ‘நாம் சந்தித்து எவ்வளவு நாளாச்சு?’ என்று பெருமூச்செறிந்தார். நெகிழ்ந்துபோன நாடுகாத்தான், ‘ஓடுவதற்கு முன்னால் நம் அமைச்சர்கள் எல்லோருக்கும் முறையாக தெரிவிக்க முடிகிற என்னால் உங்களிடம் மட்டும் சொல்லிக்கொள்ள முடியாமல் போகிறதே என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. இன்று அந்தக் குறையும் தீர்ந்தது. நீங்கள் வந்தது என் பாக்கியம்என்றார். அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் போதே மருத்துவர்கள் புடைசூழ தாதியொருவர் பட்டுத்துகிலால் சுற்றப்பட்ட குழந்தையை ஏந்திக்கொண்டு ஓட்டம் போல விரைந்து  வந்தாள். மன்னர் எதிர்கொண்டோடி தாதியிடமிருந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டார்.

தாய்வயிற்றுச் சூட்டின் கதகதப்பு கூட இன்னமும் தணிந்திராத ஒரு பச்சிளம் குழந்தை தனது கைகளில் இருப்பதை எண்ணி மன்னர் உணர்வுக்கொந்தளிப்புக்கு ஆளானார். பட்டத்தரசியோடு வாழாது போனதால் தவறவிட்ட இந்த அனுபவத்தை காலம் கடந்து இப்போதேனும் தனக்கு வாய்க்கச் செய்த - இன்னமும் முகம்கூட பார்க்காத- அந்தக் குழந்தையின் மீது அவருக்கு பேரன்பு சுரந்தது. ஆர்வமும் பரபரப்பும் பெருமிதமும் பொங்க பிறந்தநாள் பரிசுப்பொதியைப் பிரிக்கும் சிறுவனின் பரவசத்தோடு குழந்தையைப் பார்க்க பட்டுத்துகிலை விலக்கினார். அந்தக் குழந்தை தலையில்லாமல் இருந்தது.

குழந்தைக்கு பதிலாக தன்னிடம் தவறுதலாக வேறெதையோ கொடுத்துவிட்டார்களோ என்று பதற்றமும் அதிர்ச்சியுமடைந்த மன்னர், சுதாரித்து மறைப்பதற்குள் அந்தக் காட்சி நேரலையாக உலகத்தின் பார்வைக்குச் சென்றுவிட்டது. இதுபற்றிய செய்திகள் மேலும் பரவாமல் தடுப்பதற்காக செயற்கைக்கோள் ஒளிபரப்புகளும் இணையச்சேவையும் செல்போன் சேவையும் அதிரடியாக முடக்கப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் அதற்குள்ளாகவே ‘அந்த மருத்துவமனையில் இறப்பவர்களுக்கு கால் இருக்காது, பிறப்பவர்களுக்கு தலை இருக்காது, ‘நாட்டோட தலையைப் பார்க்க விரும்பாத குழந்தைத்தலை, ‘முண்டத்தைக் காணவந்த முண்டம், ‘ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரியில் தலையில்லை, நானோ டெலிவரியில்...?’ என்கிற மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேறி வைரலாகிவிட்டதை அறிந்து மன்னர்  கடுங்கோபமாகிவிட்டார். இப்படி துணிந்து எழுதுகிற யாரும் இன்னமும் இங்கு மிச்சமிருக்கிறார்களா அல்லது அண்டை நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்திருக்கும் தேஷ்விரோதிகள் அங்கிருந்தபடியே இங்கு நடப்பதை உன்னிப்பாக கவனித்து மக்களை தூண்டிவிடுகிறார்களா என்கிற குழப்பமும் அவரை பீடித்தது. 

குழந்தை முகத்தை முதன்முதல்ல நான் தான் பார்க்கணும்னு சொன்னது உண்மைதான். அதுக்காக அந்தக் குழந்தை தலையோடு பிறந்திருக்கா இல்லையான்னுகூட பார்க்காம கொண்டாந்து என்கிட்ட தருவீங்களா? என்று மருத்துவக்குழுவை கடிந்துகொண்டார். தலையில்லாமல் குழந்தை பிறந்தது மற்றும் அது தொடர்பாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை, தேஷ்விரோதிகளின் சீர்குலைவு வேலைகள் ஆகியவற்றை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான உத்தரவையும் அங்கிருந்தே பிறப்பித்த மன்னர் தாளாத உளைச்சலுடன் தலைநகருக்கு புறப்பட்டார். 

***
தலையில்லாத முண்டம் தேநீர்க்கடைக்கு வந்து டீ குடித்துவிட்டுப்போனது என்பதான வதந்திகளை உண்மையென நம்பி வீட்டு எரவாணத்தில் வேப்பிலைக்கொத்தை செருகிவைத்த மக்கள், தலையின்றி ஒரு குழந்தை பிறந்திருக்கும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இது ஏதோ கெடுங்காலத்தின் அறிகுறி என்ற அச்சம் நாடெங்கிலும் பரவி பரிகாரப்பூசைகள் நடக்கத் தொடங்கின. கர்ப்பமுற்றிருந்த பெண்களோ தங்கள் குழந்தை எதெது இல்லாமல் பிறக்கப் போகிறதோ என்கிற கவலையில் வாடினர். இதுகுறித்த உண்மையை அறிவியலாளர்கள் வெளிப்படையாக சொல்லவேண்டும், ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து நார்மல் டெலிவரி மீட்புச் சட்டத்தை இயற்றவேண்டும் என்றெல்லாம் சொல்ல நினைத்தவர்கள் பின்விளைவுகளுக்கு அஞ்சி கமுக்கமாயினர்.

 (இப்பத்தியில் கதைத்தன்மை இல்லை என்கிற கவலையில் அன்னந்தண்ணி ஆகாரமின்றி சாவதற்கு வாய்ப்புள்ள புனைவுத்தீவிரர்கள் நேரடியாக அடுத்த பத்திக்குச் செல்லவும்). இதற்குமுன் எங்காவது இப்படி தலையற்ற குழந்தை பிறந்திருக்கிறதா என்பதே உலகெங்கும் கூகுளில் அதிகமாக தேடப்படும் தகவலாக மாறிவிட்டிருந்தது. மனித உடம்பும் விலங்கின் தலையும் கொண்ட தெய்வங்கள் உலக நாகரீகங்கள் பலவற்றிலும் உண்டு. இப்படியான மாறுபாடு கொண்ட ‘நாய்தன், மனிநாய்என்கிற மனித இனங்கள் வாழ்ந்திருப்பதற்கான தடயங்களை உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகிய தமிழில் வெளியான ‘மீசை என்பது வெறும் மயிர்என்ற நாவலில் காணமுடியும். அதே மொழியில் முண்டம் என்ற வசைச்சொல் புழக்கத்தில் இருப்பது ஏன்? தானே தனது தலையைக் கொய்து தாம்பாளத்தில் வைத்து காணிக்கை தரும் நவகண்டம் என்கிற வழக்கம் வீரயுகக் காலத்தில் இருந்திருக்கிறது. சின்னமுண்டா என்கிற திபெத்திய பௌத்த பிக்குணியின் பெயரே அவள் தலையில்லாதவள்- முண்டமாக இருப்பவள் என்பதை குறிக்கிறது. பின்னாளில் சின்னமஸ்தா என்கிற தலையில்லாத காளியாக கீழைநாடான இந்தியாவில் வழிபடப்படுபவள் இவள்தானாம். தலையில்லாத உருவமொன்று சூரியனை உயர்த்திப் பிடித்திருக்கும் கற்பொறிப்பு எகிப்திய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலையில்லாதவன் என்னும் பொருள்படும் Akephalo என்ற சொல் கிரேக்க மொழியில் இருப்பதைக் கொண்டு கிரேக்கத்தொன்மத்திலும் தலையில்லாத தெய்வம் இருந்திருக்கும் என வாதிடுவோர் உண்டு. ஆனால் இதெல்லாம் அமானுஷ்யங்கள் பற்றியவை. மனிதர்கள் தலையின்றி பிறந்ததாகவோ இருந்ததாகவோ வரலாறில்லை.

ஏதேதோ மாறுபாடுகளோடும் அவயவங்கள் சிலதின்றியும் குழந்தைகள் அவ்வப்போது பிறந்து கொண்டுதானிருக்கின்றன. தலை சிறுத்தும் பெருத்தும்கூட குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் உலகத்தில் தலையே இல்லாமல் பிறந்த முதல் குழந்தை ஏதுமறியாளுடையதுதான்.

***
பிரசவ மயக்கம் தெளிந்த ஏதுமறியாள் தன்னருகில் தலையின்றி கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு அலறித் துடித்தாள். எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம். ஆனால் எனது குழந்தையின் தலை எங்கே? பிரதமரிடம் காட்டும் பரபரப்பில் வயிற்றைக் கிழித்த மருத்துவர்கள் கவனக்குறைவாக குழந்தையின் தலையைத் துண்டித்துவிட்டார்களா? ஒருவேளை அப்படி துண்டான தலை வயிற்றுக்குள் கிடந்து உருண்டு தவிக்குமோ? பரிதவிப்பில் வயிற்றைத் தடவித்தடவிப் பார்த்தாள். ஃபாஸ்ட் ட்ராக் திட்டம் குழந்தை திரண்டு வளர்வதற்குரிய இயல்பான கால அவகாசத்தைக் கொடுக்காமல் துரிதப்படுத்தி தலை உருவாவதை தடுத்துவிட்டதா? இது குறைப்பிரசவத்தின் மற்றொரு வகையா? அல்லது ஃபாஸ்ட் ட்ராக்கில் இந்தளவில்தான் குழந்தை பிறக்குமா? யாரோ நடத்திப் பார்க்க நினைத்த விபரீதச்சோதனைக்கு நானும் என் குழந்தையும் வெள்ளெலியாகிப் போனோமா? ஆற்றாமையும் அங்கலாய்ப்பும் நெட்டித்தள்ள குழந்தையை மாரோடு அணைத்துக் கொண்டாள். ஊட்டப்படாமல் நெறிகட்டிக் கிடந்த பால் அந்த அழுத்தத்தில் குழந்தையின் மீது பீறிட்டு வீணே வழிந்தது. அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம். அழுவதற்கே வாயில்லாத என் குழந்தை எப்படி பால் குடிக்கப்போகிறது என்று நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் பெருகியது.

தலையில்லாமல் பிறந்த தனது குழந்தையை காட்சிப்பொருளாக்க வேண்டாம் என்று ஏதுமறியாள் விடுத்த வேண்டுகோள் யார் காதிலும் விழவில்லை. செய்தியாளர்களும் குழந்தையை நேரில் காணும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களும் வந்தவண்ணமிருந்தனர். வருகிறவர்களின் கேள்விகளும் அவர்களது குத்தலான பேச்சுகளும் தலையில்லாத குழந்தையை எப்படி வளர்ப்பது என்கிற குழப்பமும் கூடி அவளையும் அவளது குடும்பத்தாரையும் வெகுவாக தொந்தரவு செய்தன. மன உளைச்சல் மிகுதியான ஒருகட்டத்தில் குழந்தையை கொன்றுவிடலாமா என்று யோசித்தாள். ஆனால் கொல்வதற்கான யாதொரு அவசியமுமின்றி குழந்தையே பிணம்போல தான் கிடந்தது.

***
வி.வி.ஜி., குழந்தைக்கு தலையில்லாததை பார்த்த நொடியில் நீங்க காட்டின பதற்றம்... உங்க முகத்துல தெரிந்த திகைப்பு... விசாரணை கமிஷனை அறிவித்த வேகம்... அப்பப்பா... நேரலையில் பார்த்துக்கிட்டிருந்த உலகமே நம்பிடுச்சு உங்களை...’

உலகம் எங்கே நம்பியது? அப்படி நம்பியிருந்தால் நாம் இந்த கதிக்கு ஆளாகியிருப்போமா?’

கவலைப்படாதீங்க ஜி, ஏதாவது குறுக்குவழியைக் கண்டுபிடிப்போம்...’

அந்தாள் சொல்லுற குறுக்குவழியில் போய் போய்தான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம். நான் சொல்லும் குறுக்குவழி என்னன்னா...’

நீதிமன்ற பணியாளர் “சைலன்ஸ்... ஹிட்லினி வகையறா  ஹிட்லினி வகையறா...”

ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி மூலம் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளும் ஏதுமறியாளின் குழந்தையைப் போலவே தலையின்றி பிறந்ததால் ஆவேசம் கொண்ட மக்களைக் கொண்டு உருவான புதிய சாக்கியர் இயக்கம் விரிமார்பன்ஜி என்கிற  ஹிட்லினியை வீழ்த்தி காக்கிய வம்சத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. புதிய சாக்கியர் ஆட்சி அமைத்த விசாரணை ஆணையத்தின் சம்மன் பேரில் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு காத்திருந்த வேளையில் இப்படி உரையாடிக்கொண்டிருந்த ஹிட்லினி, அவரது தளபது குமித்ஹோ, தொழிலதிபர்களாகிய நண்பர்கள் இருவர் ஆகிய நால்வரும் விசாரணைக்கூண்டில் ஏறி நின்றார்கள்.  அந்த ஹிட்லினி வகையறா நீதிபதி தூயாவிடம் கூட்டாக கொடுத்த வாக்குமூலம்:

“தலை என்பது வெறும் தலையல்ல. எங்களுக்கு விரோதமாக மக்களை தயாரிக்கிற மூளை, கண், காது, வாய், நாக்கு அத்தனையும் அந்தத் தலைக்குள்தான் இருக்கிறது என்பதை பார்க்கவே அச்சமாக இருந்தது. அதனால்தான் ஏதாவதொரு குற்றம்சாட்டி நாடுமுழுக்க தலைவெட்டும் தண்டனையை அமல்படுத்தினோம். ஆனால் எத்தனை பேரின் தலையைத்தான் வெட்டுவது என்று ஒரு கட்டத்தில் சலிப்பாகிப் போனது.  தலையை வெட்டுவதையே ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தால் மற்ற வேலைகள் தடைபட்டன. எனவே தலையேயில்லாமல் குழந்தைகளை பிறப்பித்துவிட்டால் தலைவெட்டும் வேலை மிச்சம், ஆட்சிக்கும் ஆபத்திருக்காது என்கிற நினைப்பில் ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி திட்டத்தைக் கொண்டு வந்து மறைமுகமாக சோதித்துப் பார்த்தோம். எல்லாம் எங்கள் திட்டப்படி நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இந்த புதிய சாக்கியர்கள்...”

நன்றி: விகடன் தடம் , 2018 டிசம்பர்
ஓவியங்கள்: மணிவண்ணன்








புதன், டிசம்பர் 12

மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான் - ஆதவன் தீட்சண்யா


னஅழுத்தம் என்றால் அது இன்னதுதான் என்று பகுத்துப் பார்த்து, அதற்கொரு தணிப்பையோ தீர்வையோ நோக்கிப் போவதற்கான வாய்ப்பு எதுவும் எனக்கு கிடைத்ததில்லை. எனக்கு மட்டுமில்லை.. பெரும்பாலானோருக்கும் அது கிடைப்பதில்லை. பிரச்னைகள் எவ்வளவு மன அழுத்தம் தந்தாலும் அதையெல்லாம் கடந்துபோக வேண்டிய நெருக்கடிதான் எனக்கு வந்திருக்கிறது.

என்னுடையது பெரிய குடும்பம். அதிலிருந்து முதல் தலைமுறை அரசு ஊழியராகிவிட்ட நான் ஒவ்வொரு சம்பள தினத்திலுமே கடும் மன உளைச்சலுக்கும் தப்பிக்க முடியாத திணறலுக்கும் ஆட்பட்டிருக்கிறேன். உருட்டிப்புரட்டி வாழ்வது என்கிற அவஸ்தைமிக்க பற்றாக்குறை வாழ்வை எதிர்கொள்ளக்கூடாத அவ்வளவு சின்ன வயதில் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் என்றாவதொரு நாள் தீர்வு கிடைக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதற்குக் கூட அப்போது சூழல் இடம் கொடுக்கவில்லை. அப்போது நான் அடைந்த வேதனைகளைத் தான் நீங்கள் மன அழுத்தம் என்று பகுப்பீர்களானால் அதற்கு எந்தவொரு நிவாரணத்தையும் தேடிக்கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே மருகியபடிதான் அந்தக் கட்டத்தை நான் கடந்து வந்திருக்கிறேன். அது வெறும் பொருளாதாரரீதியான பிரச்னை மட்டுமேயல்ல. அது எனது தெரிவுகளையும் விருப்பங்களையும் மட்டுப்படுத்தி அதற்குரிய குணவியல்புகளைக் கொண்டவனாக என்னை மாற்றியிருக்கிறது. இன்றளவும் வழிநடத்துகிறது. அந்த நாட்களை  பின்னோக்கிப் பார்ப்பதற்குக் கூட எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.

என் வாழ்வின் பிரிக்க முடியாத மற்றோர் அங்கம் அலுவலகம். நான் உட்பட ஊழியர்களும் அதிகாரிகளும் எங்களது பொருளாதார நிலைகளை ஓரளவுக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களை இந்த நிலைக்கு உயர்த்திய துறை தொடர்ந்து நசிந்து கொண்டே வருவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தகவல் தொடர்புச் சேவையை வழங்கும் ஒரு மிகப்பெரிய துறையை திட்டமிட்டே  நசிவடையச் செய்கிறது அரசு. மக்களின் தேவையை ஈடு செய்யும் வகையில் ஆளெடுப்பு இல்லாமல் அலுவலக இருக்கைகள் காலியாக கிடக்கின்றன. குடியிருப்புகள் காலியாக கிடக்கின்றன. மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலில் இருப்பது போன்ற நிச்சயமற்றத்தன்மைக்குள் தூக்கி வீசப்பட்டவர்களாக இருக்கிறோம்.  ஒரு மாதச்சம்பளக்காரனாக காலந்தள்ளப் பழகிவிட்ட நிலையில் அதில் ஒரு இடையறுப்பு நடந்தால் என்ன செய்வது என்று யோசனையும் கவலையும் மற்றெல்லா ஊழியர்களையும் போலவே எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு பரிகாரமோ நிவாரணமோ ஏதும் இல்லை என்பதே உண்மை.

இவற்றைவிட அதிகமான மனஅழுத்தம் தரக்கூடியது சமூக நிகழ்வுகள் தான். எப்போதாவது நடக்கிற ஏதோவொரு நிகழ்வால் நீங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிலிருந்து நீங்கள் வெளியே வந்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்,  இயல்புக்குத் திரும்பலாம். ஆனால், இப்போது நடக்கக்கூடிய எந்தவொரு விஷயமுமே, நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கான நேரத்தையே கொடுப்பதில்லை. அன்றாடம் ஒரு இழவு வீட்டில் இருப்பது போன்ற மனநிலையைத்தான் சூழல் உருவாக்கி வருகிறது.

இதிலிருந்து வெளியேறும் ஒரு வழியாக, இதைவிட கொடூரமான, மிகுதியான வாதையைத் தருகிற வேறொரு பிரச்னைக்குள் போய் தலையிடுவதாகத்தான் இருக்கிறது. தலையீடு என்றால், நேரடியாக களத்துக்குப்போவதுதான் என்றில்லை. அந்தப் பிரச்னையில் மனம் மூழ்கி விடுகிறது. வேறு எது குறித்தும் யோசிக்க முடியாமல் மூளை மரத்து போகிறது. உதாரணத்துக்கு, தருமபுரியில் மூன்று ஊர்கள் எரிக்கப்பட்டது பற்றிய கவலை தீரும் முன்னே இளவரசன் மர்மமாக இறந்து போகிறான். பிறகு கோகுல்ராஜ். இதோ இப்போது ராஜலட்சுமி, செளம்யா, நந்தீஷ் –சுவாதி…இசக்கி சங்கர்…

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த வளர்ச்சிகளை அனுபவிப்பதாக, மேலும்மேலும் மனிதத்தன்மையுள்ள ஒரு வாழ்க்கையை நோக்கி சமூகத்தின் ஒரு பகுதியினர் தொடர்ச்சியாக முன்னேறி போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் கொண்டாடத்தக்க எத்தனையோ தருணங்கள் இருக்கையில், `எங்களை அடிச்சிட்டாங்க.. எங்க வீட்டை எரிச்சுட்டாங்க.. எங்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கிட்டாங்க’ என்று,  தொடர்ச்சியாக கதறிக் கொண்டும் புகார் சொன்னால் கேட்பதற்கான ஆட்களை தேடிக்கொண்டும் அலைகிறவர்களாகவும் உங்களை இந்தச்சமூகம்  நிறுத்தியிருக்கும் போது, எப்படி நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்?

15நிமிடங்களுக்கு ஒரு சாதிய, பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டே இருக்கும் ஒரு சமூகத்தில், நான் ஆசுவாசம் அடைந்து கொள்வதற்கான ஒரு இடத்தை வழியை நானே தேடினாலும் கிடைக்காது. சுற்றிலும் எதுவும் நடந்துவிட்டுப் போகட்டும் என்று கண்டும் காணாமாலும் இருந்தால் மட்டுமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். சமூக நடப்புகளை ஓரளவு கவனித்துக்கொண்டிருக்கிற ஒருவரால் மனஅழுத்தத்திலிருந்து தப்பவே முடியாது.

நான் ஒரு வேலையில் இருக்கிறேன். என்னுடைய குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் தோழர்களும் என்னிடம் பிரியமாக இருக்கிறார்கள். என்னுடைய அமைப்பு எனக்கு பெரிய பலமாக இருக்கிறது. இவை எல்லாமே என்னுடைய புறதோற்றத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான பாதுகாப்பைத்தான் வழங்க முடியும். ஆனால், என்னுடைய உளவியலுக்குள் நிகழக்கூடிய விஷயங்களை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அதை, வேறு யாரோ அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களே தொடர்ச்சியான மன நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். வாழ்வின் கொண்டாடத்தக்க தருணங்களை துன்பத்தில் உழலக்கூடிய தருணங்களாக அவர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாதிரியான தொடர் மனஅழுத்தம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும்?

வெளித்தோற்றத்தில் நாம் சிரிக்கிறோம். நண்பர்களோடு சந்தோஷமாக இருக்கிறோம். விழாக்களுக்கு செல்கிறோம். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறோம். இவையெல்லாமே அகவயமான நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரு கற்பிதமான முயற்சியோ என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமுண்டு. ஏனென்றால் கலந்துகொள்வது எல்லாமே இது தொடர்பானதாகவே இருக்கிறது. தீர்வுக்கான வழியே இல்லாததுபோன்று தொடர் அழுத்தங்கள்தான் இருக்கின்றன. தொடர்ந்து கடிகாரத்தைப் போல ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். நின்றுவிட்டால், நீங்கள் செத்துப்போய்விட்டதாக ஆகிவிடும்.

இந்தப் புறவயமான நெருக்கடிகளே அகவயமான நெருக்கடிகளை உருவாக்குகிறது. இதிலிருந்து தப்பித்து ஓடமுடியாது. தற்காலிகமாகவும் தப்பிக்கமுடியாது. அதை எதிர்கொள்வது மட்டுமே ஒரே வழி. அதை எதிர்கொள்ளும் போராட்டத்தில் அல்லது முடிவில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் கூட இருக்கலாம்.. எதிர்பார்த்த மாற்றம் நிகழாமல் போகலாம். ஆனால், அந்த அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி அதை எதிர்கொள்வது மட்டும்தான்.

அதற்கு பதிலாக, படிப்பது, பாடல் கேட்பது, சுற்றுப்பயணம் செல்வது, இவை எல்லாமே கோயிலுக்குப் போனால் மனம் சாந்தமாகிவிடும் என்று சொல்வது போன்ற, மூட நம்பிக்கை தான். இடைவிடாத சமூக நெருக்கடிகள் இருக்கும் ஒரு காலகட்டத்தில் எதை நான் உண்ண வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படி இயங்க வேண்டும், என்னுடைய அன்றாடத்தை எப்படி கழிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடியதாக வெளியே ஒரு சக்தி இருக்கிறது. எல்லாமும் கண்காணிப்புக்கு உள்ளான ஒரு காலத்தில், நான் கண்காணிக்கப்படுகிறேன் என்று தெரியும்போது.. நான்  எப்படி ஆசுவாசுமாக இருக்கமுடியும்?. ஆசுவாசம் என்பதே இட்டுக்கட்டப்பட்ட, ஒரு மாயையான வஸ்துதான்!’’ 

அலையும் பெண்டுலத்திற்கு
அமைதி தேவையாம்
கடியாரம் நின்றுவிடுமே
(எனது முதல் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை)

நன்றி: விகடன்.காம்

புதன், டிசம்பர் 5

மருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா


PC;newdelhivoice
சாதியை விட காதல் முக்கியமா, காதலைவிட சாதி முக்கியமா என்கிற தலைப்பிலான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குரிய நேரத்துக்கும் முன்பாகவே அரங்கிற்குள் சென்றுவிட்ட நான் படப்பிடிப்பையும் விவாதத்தின் போக்கையும் கவனிப்பதற்காக காட்சி சட்டகத்துக்கு வெளியே பார்வையாளர் பகுதி என்பது போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்துகொண்டேன். நிகழ்வின் பங்கேற்பாளர்களுடன் வந்திருந்த பலரும்கூட அங்குதான் அமர்ந்திருந்தார்கள். மேடையில் இருதரப்பாரும் சமமான எண்ணிக்கையில் இருந்தாலும், ஒலி/ஒளிப்பதிவுக்குள் வராத இப்பகுதியில், சாதியே முக்கியம் என்கிற தரப்பினருக்கு ஆதரவானவர்கள் பெரும்பான்மையினராகவும், காதலே முக்கியம் என்னும் தரப்பாருக்கு ஆதரவானர்கள் மிகச்சொற்பமாகவும் இருந்தனர். இது ஒருவகையில் சமூகத்தின் அசலான நிலையை விளக்குவதற்குரிய மாதிரித்தோற்றம் போல எனக்கு தோன்றியது.

பொதுவாக நம் கவனம் மேடைகளிலேயே குவிந்துவிடுகிறது. இங்கும் அதுதான் நடந்தது. காமிராவுக்கு முன்பாக பேசுகிறோம்- அது பொதுவெளியில் ஒளிபரப்பாவிருக்கிறது என்று தெரிந்தே ‘நாங்கள் விடுக்கிற எச்சரிக்கையையும் மீறி எங்கள் சாதிப் பெண்களிடம் பழகினால் கொல்லத்தான் செய்வோம்என்று பகிரங்கமாக பேசிவிட்ட ஒரு இளைஞரைப் பற்றியே ஆவேசமான விமர்சனங்கள் வந்தன. விளைவுகள் என்னவெனத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படையாக பேசிவிட்ட அவரை உடனேயே குற்றவாளியாக பார்ப்பதற்கு நம் கண்கள் பழகிவிட்டிருக்கின்றன. ஆனால் தன் சாதிக்காக கொலை செய்யவும் தயங்கமாட்டேன் என்று கொக்கரிக்குமளவுக்கு அந்த இளைஞரின் மனசில் நஞ்சும் வன்மமும் பாய்ச்சியவர்கள் யார்? அவர்கள் காமிராவுக்கு வெளியே இருந்தார்கள். படப்பிடிப்புக்கு தொந்தரவில்லாமல் ஓர் ஓரத்தில் பார்வையாளர்கள் என்பவர்களாக எனது அருகாமையில் அமர்ந்திருந்தார்கள்.

பார்வையாளர்கள் எனப்படுவோர் உண்மையில் பார்வையாளர்களல்ல, அவர்கள்தான் சமூகத்தின் உளவியலை சட்டெனக் காட்டிவிடுபவர்கள் என்பதை நான் உணர்ந்த தருணமது. அவர்களது கருத்துகள் மேடையில் சொல்லப்பட்டதைவிடவும் வெளிப்படையாகவும், சமூகத்தின் உள்ளோட்டத்தை காட்டவல்லதாகவும் இருந்தன. அவர்கள் தங்களது வார்ப்பில் ஒரு கொலையாளி மேடையில் உருத்திரண்டு வெளிப்படுவதை ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். அதேவேளையில், சாதியைவிட காதலே முக்கியம் என்று சிலர் வாதிட்ட போது அவர்கள் எதிரடியாக வசவுகளையும் பொறுமலையும் உடல்மொழியில் பரிகாசத்தையும் வெளிப்படுத்தினார்கள். தங்களது சாதிக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்று அவர்கள் தமக்குள் சன்னக்குரலில் கடுமையாக பேசிக்கொண்டார்கள். சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பதற்காக தமது சாதியின் / குடும்பத்தின் தூய்மையை - கௌரவத்தைக் காப்பதற்காக கொலை செய்வதை நிறுத்திக்கொள்ள முடியாது என்று அவர்கள் உறுதிபட நம்புகிறார்கள். நாடெங்கும் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றொழித்து வரும் இந்த நம்பிக்கைதான் ஒசூர் சூடுகொண்டப்பள்ளி நந்தீஷ் - சுவாதி காதல் தம்பதியரையும் இப்போது கொன்றிருக்கிறது.

***

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சிவனசமுத்திரம் வழியாக பாய்கிறது சிம்ஷா ஆறு. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்மின் திட்டத்தின் மதகுக்கு அருகில் 13.11.18 அன்று 25 மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத - கைகால் கட்டப்பட்ட- ஊறி நொதித்த நிலையிலான ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதாக பெலகாவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் வருகிறது. இதேபோல, ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சற்று தள்ளி 15 ஆம் தேதி 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலமும் கைகால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. சடலமாக கிடந்த ஆணின் உடலில் காணப்பட்ட நீலநிற பனியனில் அம்பேத்கர் படமும் ‘ஜெய்பீம் - சூடகானப்பள்ளிஎன்கிற ஆங்கில வாசகமும் அச்சிடப்பட்டிருப்பதை துப்பாக வைத்துக்கொண்டு தேடத்தொடங்கிய பெலகாவல்லி காவல்நிலையத்தினர் வந்து சேர்ந்த இடம் ஒசூர் சூடுகொண்டப்பள்ளி.

சூடுகொண்டப்பள்ளி, ஒசூர் வட்டத்தின் உள்ளொடுங்கிய சிற்றூர்களில் ஒன்று. இங்கு சாதிவாரியாக வன்னியர்கள் 40, ஆதிதிராவிடர் 18, நாயுடு 15, குரும்பர் 15, அருந்ததியர் 1 என்கிற எண்ணிக்கையிலான குடும்பங்கள் வசிக்கின்றன. பட்டியல் சாதியினர் யாருக்கும் குறிப்பிடும்படியாக நிலம் இல்லை. எனவே அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பிற சாதியினரின் நிலங்களில் வேளாண் கூலிகளாக பணியாற்றிவருகின்றனர். இளைஞர்கள் அருகாமை நகரமான ஒசூருக்கு வந்து வேலை செய்து திரும்புகின்றனர். ஆதிதிராவிடர்களான திம்மக்கா - நாராணயப்பா தம்பதியரின் மகனான நந்தீஷ் (23) அவர்களில் ஒருவர்.  இதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாஸ். வன்னியரான இவர் தன் சொந்த சாதிக்கு வெளியே போய் நாயுடு சாதியைச் சேர்ந்த சின்னம்மாவை திருமணம் செய்துகொண்டவர். இவர்களது சாதிக்கலப்பில் பிறந்த பெண் சுவாதி (21).

கிருஷ்ணகிரி கல்லூரியில் படித்துவந்த சுவாதியும் நந்திஷூம் நான்காண்டுகளாக காதலித்துவந்ததை அறிந்த சுவாதியின் பெற்றோர் நந்திஷையும் அவரது குடும்பத்தாரையும் இதன் பொருட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்திஷ் சுவாதியிடமிருந்து விலகிச் சென்றிருக்கிறார். ஆனால் சுவாதி உறுதியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறி வந்த நிலையில் இருவரும் 2018 ஆகஸ்டில் கோயிலில் மணம் செய்துகொண்டனர். பிறகு சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்திருக்கின்றனர். 

பொதுவாக இவ்வாறான சூழலில் தங்கள் பெண் காணாமல் போய்விட்டதாகவோ, யாரோ கடத்திப் போய்விட்டதாகவோ சாதியாதிக்கவாதிகள் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். உள்ளூர் காவல் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் இவர்களுக்கு தொடர்பும் செல்வாக்கும் இருக்குமாதலால் காவல் துறையினர் இந்தப் புகாரின் பேரில் பெண்ணையும் அவளது காதலன் / கணவனை  தேடிப் பிடித்து விடுவார்கள். பிறகு காவல்துறையினரே பெண்ணை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளும்படி பையனை மிரட்டி பணியவைப்பார்கள். சில நேரங்களில் நீதிமன்றமே கூட இப்படியான வேலையைச் செய்வதுண்டு. இவ்வாறு பிரித்து  அழைத்துச் செல்லப்படும் பெண் நாளடைவில் என்னவாகிறாள் என்று யாரும் கவனிப்பதில்லை. தீராத ‘வயிற்றுவலியால்அவதிப்பட்டு வந்த இளம்பெண் தற்கொலை என்று வரும் செய்தியானது ஏற்கனவே கொல்லப்பட்ட அவளது காதலின் தொடர்ச்சிதான் என்று அடையாளம் காணப்படுவதில்லை. (அரிதாக, சில புகார்களில் காவல்துறையும் நீதிமன்றமும் சாதிக்கலப்பு தம்பதியரை காப்பாற்றும் பொறுப்பை மேற்கொள்கின்றன.)

சுவாதியின் குடும்பத்தார் இப்படியான புகார் எதையும் தரவில்லை. இதன் பொருள் அவளது காதல் மணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதல்ல. அல்லது தொலையட்டும் இத்தோடு என்று தலைமுழுகிவிட்டனர் என்பதுமல்ல. கமுக்கமாக இருந்து தீர்த்துக்கட்டுவது என்கிற கொடூர முடிவுக்கு ஏற்கனவே வந்துவிட்டதால் தான் அவர்கள் புகார் கொடுத்து வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்கவேண்டாமென இருந்திருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் அறியமுடிகிறது. சில ஊடகங்களில் சொல்லப்படுவது போல நந்திஷ் சுவாதி இருவரையும் தற்செயலாக பார்த்ததும் அந்நேரத்தில் மூண்ட ஆத்திரத்தில் கூட்டிப்போய் அவர்கள் கொலை செய்துவிடவில்லை. எங்கே வைத்து கொல்வது, சடலங்களை எங்கே கொண்டு போய் மறைப்பது, காணாப்பிணமாகவோ அனாமதேயமாகவோ மாற்றுவதற்கு செய்யவேண்டியது என்ன என்பது போன்ற விசயங்களை மிகத் தெளிவாக முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டையும் ஊரையும் விட்டு வெளியேறிப் போய் ஒசூரில் வசித்துவந்த மகளையும் அவளது கணவனையும் பின்தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்திருக்கிறார்கள்.

தோதான தருணமெனக் கருதி நந்திஷ் சுவாதி தம்பதியரை 10.11.18 இரவு கடத்தியிருக்கிறார்கள். சாதிக்கலப்பு நடந்ததால் ஏற்பட்ட தீட்டினை பரிகாரச்சடங்கு செய்து கழித்துவிட்டு வீட்டுக்கு அழைத்துக்கொள்வதாகக் கூறி நயவஞ்சகமாக அழைத்துப் போனார்கள் என்றொரு தகவல் இருக்கிறது. ஒருவேளை அப்படி சொன்னதை இந்தத் தம்பதியர் நம்பி வண்டியில் ஏறிக் கொண்டார்களா அல்லது பலவந்தமாக ஏற்றப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஆனால் தாங்கள் கடத்தப்பட்டிருக்கும் தகவலை 11.11.18 அதிகாலை 2.14 மணிக்கு தனது கடை முதலாளிக்கு நந்தீஷ் ‘அண்ணா, கிட்னாப் ணா, கனகபுராஎன்கிற குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார். அந்நேரம் வரைக்கும் அவரது கையில் செல்போன் பறிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது என யூகிக்கமுடிகிறது.

அகாலத்தில் வந்த அந்தச் செய்தியை அப்போதே பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இவர்களை காப்பாற்றியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், ஒசூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் அவர்களது வாகனம், போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் அதிகமில்லாத கனகபுரா வழியில் சென்றிருக்கிறது. அடிக்கடி சென்று பரிச்சயப்பட்டவர்களால் மட்டுமே அந்த வழியில் அந்நேரத்திற்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் கனகபுரா மார்க்கம் என்பதும்கூட முன்கூட்டியே தெரிவு செய்யப்பட்டதுதான் என்கிற முடிவுக்கு வரமுடியும்.  நந்தீஷ்  அனுப்பிய குறுஞ்செய்தியின் அடிப்படையில் அவரது முதலாளியும் நந்தீஷின் தம்பி சங்கரும் அவர்களை 11.11.18 காலையிலிருந்தே பல இடங்களிலும் தேடியதோடு காவல் நிலையத்திலும் தெரிவித்திருக்கிறார்கள். பின்பு எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே - 11.11.18 அன்று விடிவதற்குள்ளாகவே நந்திஷ் சுவாதி தம்பதியரை சுவாதியின் குடும்பத்தினர் கொன்று முடித்திருக்கின்றனர் என்பது பிற்பாடுதான் தெரியவந்தது.

***

சிவனசமுத்திரம் அருவியையடுத்த பவர் ஹவுஸ் மதகடியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் நந்திஷ் - சுவாதி தம்பதியர் தான் என்று கண்டறியப்பட்டது,  இதன் தொடர்பில் சுவாதியின் தந்தை சீனிவாஸ் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டது, தலைமறைவாக உள்ள இன்னும் நால்வரை காவல்துறை தேடிவருவது உள்ளிட்ட செய்திகள் 16.11.18 பிற்பகலில் ஊடகங்கள் வழியே பரவத் தொடங்கின. சடலங்களின் கதியைக் காட்டும் புகைப்படங்கள் கொலையாளிகளின் குரூரத்தைக் காட்ட போதுமானதாக இருந்தன.

சாதிமறுப்பு திருமணத்தை ஏற்க மறுத்து செய்யப்பட்ட இக்கொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் களத்திற்கு வந்தன. அன்று மாலையே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒசூரில் மறியலில் ஈடுபட்டது. மறுநாள் 17.11.18 காலையில் சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், அ.இ.ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சுகந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் பிரவீன் குமார்,  நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திரை இயக்குநர் பா.ரஞ்சித், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சாதியொழிப்புச் செயற்பாட்டாளர் கௌசல்யா, ஜெய்பீம் பேரவையினர் உள்ளிட்டோர் நந்தீஷின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தினர். நந்திஷ் குடும்பத்திற்கு பாதுகாப்பு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஆணவப்படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை, வழக்கை தமிழகத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை செய்தியாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்தார்.

பின்னர் மேற்சொன்ன அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரும் இணைந்த குழு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சென்று ஒசூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இதே கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், இக்கொலைகள் சாதியாணவப் படுகொலைகளே என்று சொல்வதற்கான முகாந்திரம் இருப்பதால் அந்தக் கோணத்திலேயே விசாரணை நடத்துவதற்கு காவல்துறை அறிவுறுத்தப்படுவதாகவும் கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவப்படுகொலையே நடப்பதில்லை என்று துணைமுதல்வரே கூறிவந்த நிலையில் இப்படியொரு எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் போராட்டக்களத்தில் பெற முடிந்ததை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

***

ஒசூர் பகுதியில் இப்படியொரு ஆணவப்படுகொலை நடந்திருப்பது இதுவே முதல்தடவை என்பது போல உள்ளூரில் ஒரு கருத்து நிலவுகிறது. ஒருவேளை, கடைசியாக அணிந்திருந்த ‘ஜெய்பீம்- சூடகானப்பள்ளிஎன்கிற நீலநிற பனியனுடன் நந்திஷின் உடல் கிடைத்திருக்காவிட்டால் இருவரும்  அனாமதேயப் பிணம் என்று கர்நாடகத்தில் எரிக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்கிற புகார் தமிழகத்தில் நிலுவையில் தூசிமண்டி கிடந்திருக்கும். ஊராருக்கு பயந்து எங்கோ கண்காணாத தொலைவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் போல என்று நந்தீஷின் குடும்பத்தாரும்கூட தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கும். ஆனால் அந்த பனியன் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து ஒசூர் பகுதியில் சாதியின் கொடூரத்தை அம்பலப்படுத்திவிட்டது.

சிம்ஷா ஆற்றில்  சிவனசமுத்திரம் அருவிக்கும் பவர் ஹவுசுக்கும் இடைப்பட்ட - முதலைகள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் சடலங்களை வீசுவது என்கிற இந்த இடத்தேர்வு சில கேள்விகளை எழுப்புகிறது. அதாவது, எங்கோ ஒசூரில் உள்ளொடுங்கிய ஒரு சிற்றூரில் இருக்கிற சுவாதியின் குடும்பத்தினருக்கு இந்த இடம் தோதானது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இந்த இடம் பற்றி நன்கு பரிச்சயமான, கொலை செய்து பிணங்களை எறிவதற்கு உகந்த இடம் என்பதை அறிந்த சிலரது உதவியின்றி இந்தக் கொலைகளைச் செய்திருக்க முடியாது. எனில் அவர்கள் யார்? கைதாகியுள்ள எழுவரில் அவர்களும் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இன்னும் விசாரணை வளையத்திற்குள் வரவேயில்லையா? இன்னின்னரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று தனது உறவினர்கள் 22 பேரின் பெயர்களை குறிப்பிட்டு சுவாதி எழுதிய கடிதம் ஒன்று அவளது நாட்குறிப்பில் இருந்ததாக கூறப்படுவதை போலிசார் கவனம் கொண்டிருக்கிறார்களா? மைசூரில் இருக்கும் சுவாதியின் உறவினர்கள் ஆறுபேருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருக்கலாம் என நந்தீஷின் தம்பி சங்கர் எழுப்பிய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடக்கிறதா? அடுத்த சிலதினங்களுக்குள்ளாகவே நந்தீஷ் -சுவாதியின் சடலங்கள் கரையொதுங்கிய அதேயிடத்தில் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பிணம் கரையொதுங்கியது. கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதி கே.வி.எம்.தொட்டியைச் சேர்ந்த ஜோதி என்கிற அந்தப்பெண்ணை அவளது பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமா ஆகியோர் கடத்தி கொன்று அந்த இடத்தில் வீசியதாக சொல்லப்படுகிறது.  சுவாதியும் ஜோதியும் கொல்லப்பட்ட விதத்தில் காணப்படும் ஒப்புமைகள் தற்செயலானதுதானா?

ஒரு தொழிற்பேட்டையாகவும் பெங்களூரு என்கிற பெருநகரத்தின் ஒருபகுதி போலவும் ஒசூர் மாறிக் கொண்டிருந்தாலும் இங்கு சாதியச் செயல்பாடுகள் முனைப்பாகவே இருக்கின்றன. குடும்ப விழாக்கள் என்கிற பெயரில் பல்வேறு சாதிச்சங்கங்களின் அணிதிரட்சி நடக்கின்றன. நகரத்தின் சொத்துகள், தொழில்கள், வணிகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் சமூக அந்தஸ்திலும் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதை ஒசூரில் மட்டும் எப்படி தவிர்த்துவிடமுடியும்? அதேபோல கிராமப்புறங்களில் நிலவுடைமையில் நிலவும் பாரபட்சம் சாதிய பாரபட்சத்துடன் பின்னிப்பிணைந்ததாக இருக்கிறது. சூடுகொண்டப்பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு தலித்துகள் சாதிரீதியான ஒடுக்குமுறைகளையும் பல்வேறு விதமான தீண்டாமைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியில்தான் நந்திஷ்-சுவாதி படுகொலையைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒசூரின் சுற்றுவட்டாரங்களில் சமீபத்தில் மட்டுமே 7 படுகொலைகள் சாதிரீதியாக நடந்திருக்கின்றன என்று தோழர் திருமாவளவன் 20.11.18 அன்று ஒசூர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்ததையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.  

ராஜலஷ்மி, சௌம்யா படுகொலைகள் குறித்த படபடப்பு அடங்குவதற்குள் நந்தீஷ் - சுவாதி படுகொலை. கஜா புயல் என்கிற பேரிடர் உண்டாக்கியுள்ள துயரத்தின் அழுத்தத்தில் இந்தப் படுகொலைகள் மீது உரிய கவனம் குவியாமல் திசைதப்பிய நிலையில் இதோ இப்போது நெல்லை வெள்ளாங்குழியில் மற்றுமொரு ஆணவக்கொலை. இசக்கி சங்கர் என்கிற கோனார் சாதி இளைஞர் அகமுடையார் சாதிப் பெண்ணை காதலித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். மறுநாள்  அதிகாலையில் அந்தப்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இசக்கி சங்கரை கொன்றதாக அந்தப் பெண்ணின் 16 வயது தம்பியும் அவனது வயதையொத்த நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்துவிட்டு எதுவும் நடவாதது போல பள்ளிக்கூடம் சென்று வகுப்பறையில் இயல்பாக இருக்குமளவுக்கு இந்த சிறார்களின் மனம் குற்றத்தன்மைக்கு பழகியது எப்படி? நந்தீஷ்- சுவாதி கொலையில் தொடர்புடையவர்களின் தோற்றத்தைப் பார்த்து ‘இவ்வளவு பூஞ்சையான இவர்களா இப்படி கொடூரமாக கொலை செய்தார்கள்?’ என்று கேட்டதைப் போலவே இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. சாதி யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கிவிடும். இவ்வளவு சிறிய வயதில்  தென்மாவட்டங்களில் வேறு சில சாதிரீதியான கொலைகளிலும் இவ்வாறு 18 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது? மைனர்கள் கொலைக்குற்றத்தில் ஈடுபடுகிறார்களா அல்லது வேறு நோக்கங்களுக்காக இவ்வாறு ஈடுபட்டதாக காட்டப்படுகிறார்களா?


வேறு சாதியில் மணம் புரிந்துகொண்ட சீனிவாஸ், தன் மகள் ஒரு தலித்துக்கு வாழ்க்கைத் துணையாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை கொல்கிறார். 16 வயது தம்பி தன்னை விட 9 வயது மூத்த அக்கா தங்கள் சாதிவரம்பை மீறி அவமானத்தை தேடித்தந்துவிட்டதாக கூறி அவளது காதலனை  கொல்கிறான். இந்த சாதி உளவியலை காவல்துறையும் நீதிமன்றங்களும் சட்டரீதியாக அணுகி என்ன செய்துவிட முடியும்? சமத்துவம் சாதியொழிப்பில் நம்பிக்கையுள்ள இயக்கங்கள் தலித்துகளை அணிதிரட்டுவதில் காட்டுவதைவிடவும் பன்மடங்குத் தீவிரத்தோடு இந்த சாதியவாதிகளிடம் தனிமனித அளவிலும் குடும்ப அளவிலும் தலையிட்டு அணுக்கமாக உரையாடாமல் என்ன மாற்றம் இங்கு வந்துவிடும்? பார்ப்பனீயத்தின் அடியாள்படையாக மாறிவிட்டிருக்கிற இடைநிலைச் சாதியினரை சாதிய உணர்விலிருந்து மீட்டு ஜனநாயகப் பண்புள்ளவர்களாக, பிறரோடு கலந்து வாழும் மனிதச்சுபாவமுள்ளவர்களாக மாற்றுவதற்கு அவர்களிடையே பணியாற்றும் திட்டம் ஒன்று உடனடித் தேவையாக இருக்கிறது. வேலைத்திட்டம் என்பது வேலை செய்வதற்குரிய திட்டம் என்கிற புரிதல் அதினிலும் கூடுதலாக தேவைப்படுகிறது.

நன்றி: செம்மலர், டிசம்பர் 2018

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...