Saturday, May 12

கோபக்கார எழுத்தாளர்களும் கும்கி யானைகளும் -ஆதவன் தீட்சண்யா

சிவசுப்ரமணியம்,
துபாய்

கேள்வி: ஆதவன் அவர்களுக்கு, நான் அண்மையில்தான் துபாய்க்கு பணி நிமித்தமாகச் சென்றேன். ஓரளவு எனக்கு வாசிப்பு பின்புலம் உண்டு. ஆனால் துபாயில் நான் சந்திக்கும் இள தலைமுறை பலருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா மட்டுமே அறிமுகமாகின்றனர். வலைப்பூதான் அதற்கு காரணம் எனவும் சொல்ல முடியவில்லை. பலருக்கும் இப்போது தளங்கள் உள்ளன. உண்மையில் இவர்கள்தான் இன்றைய வாசகர்களைக் கவர்கின்றனரா? எந்நிலையில்?

குறிப்பிட்டதொரு பிராண்டை பிரபலமாகிவிட்டால் அதற்குப்பிறகு அந்தப் பெயரில் எந்தக் குப்பையையும் விற்கமுடியும் என்பது சந்தைவிதி. பிரபலமான அந்த பிராண்டை உபயோகிப்பதை ஒரு பெருமிதமாக கற்பிதம் செய்து கொள்வதுதான் நுகர்வுக் கலாச்சார மனநிலை. சந்தைமயப்படுத்தப்பட்ட இச்சமூகத்தில் இலக்கியத்தையும் ஒரு சரக்காக மாற்றும் நோக்கில் எழுத்து வியாபாரத்தை அல்லது வியாபார எழுத்தை ஊக்குவித்து குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை ‘பிராண்டுகளாக’ மாற்றுவதற்கு சில பத்திரிகைகளும் பதிப்பகங்களும் செய்துவருகிற தொடர்முயற்சிகளை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. சந்தையின் தேவைகளுக்குப் பொருந்திப் போவதற்கு தயாராயிருக்கிற எழுத்தாளர்கள் ‘விரைவாதமா புட்டைவீக்கமா நரம்புத் தளர்ச்சியா ஆண்மைக்குறைவா? உடனே வாருங்கள்...’ என்று பொதுக் கழிப்பிடச்சுவர்களில் அழைப்பு விடுக்கும் ‘சகல நோய்களையும் குணப்படுத்தும் கைராசி மருத்துவர்’ போல மாறுகிறார்கள். பழம் பெருமை பேசுகிற, இறுகிய சமூக ஒழுங்குகளை நியாயப்படுத்துகிற, பொதுப்புத்தியை குறுக்கீடு செய்யாத, அதிகாரத்திற்குப் பணிந்து போகிற அல்லது துணை நிற்கிற, வாசகமனதை தொந்தரவு செய்யாத, மறைவிட நமைச்சல்களை சொரிந்து கொடுக்கிற எழுத்துகளை முன்வைக்கும்போது அவர்களைக் கொண்டாடுவது வணிகப் பத்திரிகைகளுக்கும் உவப்பானதே. சாரமற்ற விசயங்களை தன்காலத்தின் அதிமுக்கியப்பிரச்னையாக முன்னிறுத்தி எழுதி மெய்யான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பவும்கூட இந்த எழுத்தாளுமைகள் தயங்குவதில்லை.

மேற்சொன்ன மலினமான காரணங்களைத் தவிர்த்து வேறு எதை முன்னிட்டு நீங்கள் குறிப்பிடும் மூவரும் அயலக இளந்தமிழரிடையே பிரபலமாகியிருந்தாலும் அது மகிழ்ச்சியளிக்கக்கூடியதே.

நரேன்
மலேசியா

கேள்வி: வல்லினத்தில் ஷம்மிக்கா என்பவர் குமரிக்கண்டம் தொடர்பாக சில கருத்துகளைச் சொன்னதை வாசித்தீர்களா? அந்தத் தகவல்கள் சரியானதுதானா? இன்றைய ஆய்வில் அதன் கண்டடைவின் எல்லை என்ன?

மாசு மருவற்ற, போற்றி கொண்டாடத்தக்க பொற்காலமாக தமிழர்கள் தங்களது கடந்தகாலத்தை கற்பனை செய்யும் போது அந்த கற்பனையை உலவவிடுவதற்கு சௌகரியமான ஒரு இடமாக இந்துமாக்கடல் விளங்குகிறது. கடற்கோளுக்கு மிஞ்சிய அல்லது அதற்குப் பிறகு உருவான தமிழ்ச்சமுதாயம் அந்த இழந்த சொர்க்கத்தை மீட்டெடுப்பதில்தான் இயல்பான ஆர்வம் கொண்டு செயல்பட்டிருக்கும். இன்றைய தமிழ்ச்சமூகம் நேற்றின்/ கடல் கொண்ட நாகரீகத்தின் தொடர்ச்சிதான் என்றால் இது இருந்தால் என்ன இன்னொருமுறை கடல்கொண்டு போனால்தான் என்ன என்ற கேள்வி வருகிறது. ஆனால் இதற்கப்பால், ‘தென்னிந்திய நிலப்பரப்பின் ஒரு பகுதியை கடல் கொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் அது இப்பகுதியில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே நடந்துவிட்டது’ என்பதாக சு.கி.ஜெயகரனின் ‘குமரிநில நீட்சி’ என்ற நூலில் படித்ததாக நினைவிருக்கிறது.

கேள்வி: தோழர், இன்றைக்கு நிறைய தீவிர படைப்பாளிகள் ஜனரஞ்சக இதழ்களில் எழுதத் தொடங்கிவிட்டனரே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? சோரம் போவதாக இதை சொல்லலாமா? என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சு.ரா அவ்வாறு செய்யவில்லையே...

வெகுஜன / வணிகநோக்கிலான இதழ்கள் தங்களது வாசகர்களின் ரசனைமட்டம் என்கிற கற்பிதமான அளவீடு ஒன்றை எப்போதும் முன்னிறுத்துகின்றன. அந்த ரசனைமட்டம் மேம்போக்கான விசயங்களை, கொறிப்புத்தீனிகளை மட்டுமே அனுமதிப்பதாய் இருப்பது வாசகநலனை முன்னிட்டல்ல. அவை எந்தவொரு வாசகரையும் கலந்தாலோசித்து இன்னின்னதை வெளியிடலாமென முடிவெடுப்பதில்லை. வாசகர்களின் பெயரால் பத்திரிகையின் அதிகாரம்தான் நிலைநிறுத்தப்படுகிறது. எங்கள் வாசகர்கள் இதையெல்லாம் தாங்கமாட்டார்கள், ஓவர்டோஸ் என்று சொல்லிக்கொண்டு வாழ்வின் நுண்ணடுக்குகளையும் வெவ்வேறு பரிமாணங்களையும் அதனதன் ஆழத்திற்கே சென்று விளங்கப்படுத்துகிற எழுத்துகளை அவை அனுமதிப்பதில்லை. தமது அரசியல் கரிசனைகளுக்கு பங்கம் விளைவிக்கிற ஒரு வார்த்தையையோ வரியையோ அனுமதிக்காமல் தணிக்கை செய்துவிடுகிற இப்பத்திரிகைகள் கருத்துச்சுதந்திரம் பற்றி பேசுகிற கேலிக்கூத்துக்கும் இங்கே பஞ்சமில்லை. இப்படியான தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியாகும் எழுத்துகளைப் பார்த்து இன்னின்ன பத்திரிகைக்கு இப்படியிப்படி எழுதினால் தான் வெளியிடுவார்கள் என்று எழுத்தாளர்களே ஒரு சுயதணிக்கைக்கு தம்மைத்தாமே ஆட்படுத்திக் கொள்கிற கொடுமையும் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தன்னை வெளிப்படுத்துதல் என்கிற எழுத்தின் மிக அடிப்படையான நோக்கத்தைக் கைவிட்டுவிட்டு பிரசுரமாவதற்குரிய சாத்தியங்களுக்கு உட்பட்டு எழுதுகிறவர்களாக எழுத்தாளர்கள் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்கின்ற நிலைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாராம்சத்தில், இந்த வெகுஜன / வணிக நோக்கிலான இதழ்களும் அவற்றின்மீது ஒவ்வாமை கொண்டு அவற்றுக்கு வெளியே உருவாகியிருந்த ‘தீவிர’ இலக்கியப் பத்திரிகைகளும் ஒரே அரசியலைத்தான் பேசின. ஆனால் இருவேறு முகாம்களாக பிரிந்திருந்தன. ஒரே அரசியலை நிலைநிறுத்த விரும்பும் சக்திகள் இருவேறு முகாம்களாக பிரிந்திருக்க வேண்டியதில்லை என்கிற பரஸ்பர புரிதலினூடாகத்தான் ‘தீவிர எழுத்தாளர்கள்’ என அறியப்பட்ட சிலர் வெகுஜன இதழ்களில் பணியாற்றச் சென்றார்கள். வெகுஜன இதழ்களை தீவிர இலக்கிய இதழ்களாக மாற்றிவிடும் நோக்கத்தில் நடந்த ஊடுருவல் என்றோ, இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் வெகுஜனப்பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட மனமாற்றம் என்றோ இந்தப்போக்கினை மிகைப்படுத்தி புரிந்துகொள்ளாதபட்சத்தில் நாம் இதுதொடர்பில் இன்னும் கொஞ்சம் பேசமுடியும். இவர்கள்தான், வெவ்வேறு காரணங்களுக்காக வெகுஜன இதழ்களில் எழுதாமல் இருந்தவர்களை அவை உள்ளிழுத்துக் கொள்வதற்கான உத்திகளை தற்செயலாகவோ திட்டமிட்டோ வகுத்தவர்கள். ஒருவகையில் கும்கி யானை போன்றவர்கள். தத்தமது நிலைப்பாடுகளை தளர்த்திக்கொள்ளாமலே இயங்குவதற்கான சுதந்திர வெளிகளாக வெகுஜனப் பத்திரிகைகள் மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். இவர்களது பங்களிப்பில் வெளியான இந்தியா டுடே, விகடன் போன்றவற்றின் இலக்கிய மலர்களிலும் குமுதம் ஸ்பெஷல்களிலும் தீராநதிகளிலும் தீவிர மற்றும் அதிதீவிர எழுத்தாளர்கள் என்று நம்பப்பட்டவர்கள் பெரிதாக நிர்ப்பந்தங்கள் இன்றி எழுதிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். குடும்பத்திற்கு அடங்கிய பிள்ளைகளுக்கு கிடைப்பதைக் காட்டிலும் கோபக்கார பிள்ளைகளுக்கு சில கூடுதல் உரிமைகள் கிடைப்பது இயல்புதானே?

இந்த கோபக்கார பிள்ளைகளுக்கு வெகுஜனப் பத்திரிகைகளில் கிடைக்கத் தொடங்கிய இந்த அறிமுகம் இவர்களின் புத்தகங்களை பதிப்பித்த பதிப்பகங்களின் வியாபாரத்திற்கு உதவிகரமாக அமைந்தன. மட்டுமல்ல, வெகுஜனப் பத்திரிகைகளின் பரந்துவிரிந்த வாசகர்களிலிருந்து சிறுவீதத்தையாவது ஈர்த்துக்கொள்வதற்காக தீவிர இதழ்கள் என அறியப்பட்டவை ஒரு நடுவாந்திரத்தன்மைக்கு மாறியதையும் இங்கு ஒரு உடன் விளைவாக காணமுடிந்தது. வெகுஜன இதழ்களால் கிடைக்கும் பிரபல்யம், சன்மானம் போன்றவற்றுக்கு இரையாகிவிடாமல் விரிந்துபரந்த வாசகத் தளத்தையும் வீச்செல்லையையும் தமது மாற்று அரசியலையும் அதனை உட்செரித்த எழுத்துகளையும் முன்வைப்பதற்கான ஒரு களமாக பயன்படுத்திக் கொள்கிறவர்கள் எத்தனைப்பேர் என்கிற விவரம் என்னிடமில்லை.

பிறகு, நீங்கள் சுந்தரராமசாமி பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பொறுத்து ஒன்று சொல்லவேண்டியுள்ளது. வெகுஜன இதழ்களுக்கு எதிரான புனிதப்போரை தொடங்கியவர் என்பதுபோன்று முன்னிறுத்தப்படுகிற அவர் குமுதம், தீராநதி, விண்நாயகன் போன்றவற்றில் எழுதியவர்தான். வெகுஜன இதழ்களை எதிர்த்ததனாலும் இணக்கம் கண்டதனாலும் அதிக ஆதாயங்களை அடைந்ததும்கூட அவரும் அவரது குடும்பத்தாரிக் பதிப்பகமும்தான் என்பது குற்றச்சாட்டல்ல. எனக்குத் தெரிந்த உண்மை.

நன்றி: http://www.vallinam.com.my/issue41

Wednesday, May 2

ஓம் சாந்தி - ஆதவன் தீட்சண்யா


யிரைப் பிடுங்கியிழுக்கும் இந்தச் சித்ரவதைகளுக்கு
முடிவேயில்லையா எனப் புலம்புகிறாய்

நான் சொன்னபடி முன்னமே செத்திருந்தால்
தப்பித்திருக்கலாமே என்கிறேன்

அட கோழையே
சாவதற்கா
இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்கிறான்
விளக்குக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன்

கஷ்டப்பட்டுகொண்டேயிருந்தால்
வாழ்வதுதான் எப்போதென
எனக்கெழுந்தக் கேள்வியை யாரோ கேட்கிறார்கள்

சண்டையிடாமல் இருங்களேன் என்று உபதேசித்தபடி
மணல்மூட்டைகளுக்குப் பின்னிருந்து வந்த ஒருவன்
நிதானமாய் சுட்டுத்தள்ளுகிறான்
நம் ஒவ்வொருவரையும்

நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2012



Tuesday, May 1

மே1: உழைப்பாளர் தினமும் ஐசிஐசிஐ மோசடியும் - ஆதவன் தீட்சண்யா


மே-1, சர்வதேச தொழிலாளர் தினம். வேலைநேரத்தை எட்டுமணி நேரமாக குறைக்க வேண்டியும் இன்னபிற அடிப்படையான கோரிக்கைகளுக்காகவும் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் நாள். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் மே 1 பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை இல்லாத பகுதிகளில் அதற்கான போராட்டம் தொடர்கிறது.

இந்தியாவில் மத்திய அரசு பொதுவிடுமுறை தினமாக அறிவிக்காவிட்டாலும் மாநில அரசுகளும், வங்கி, காப்பீடு போன்ற நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மே தினத்திற்காக விடுமுறை அளித்துவருகின்றன. ஐசிஐசிஐ வங்கியும்கூட மே1 அன்றைக்கு நாடு முழுவதும் தனது கிளைகளுக்கு விடுமுறை விட்டுள்ளது. ஆனால் உழைப்பாளர் தினத்திற்காக அல்ல. அன்றைக்கு மகாராஷ்டிரா தினத்திற்காகவாம். ஆட்டுப்புழுக்கையை வாங்கிக்கொண்டு ஐசிஐசிஐயில் பணம் தருகிறார்கள்  என்று சொல்வது எந்தளவிற்குப் பொய்யோ அந்தளவிற்குப் பொய்யானது மே முதல்நாளை உழைப்பாளர் தினம் என்று சொல்லாமல் மறைப்பது.

மே முதல்நாளை நிராகரித்து விஸ்வகர்மா பிறந்த தினத்தை (?)  உழைப்பாளர் தினமாக கொண்டாடவேண்டும் என்று சங் பரிவாரத்தைப்போலவே வேறு ஏதாவதொரு நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடச் சொல்லி ஐசிஐசிஐயும் ஜோக்கடிக்கிறதா என்று பார்த்தால் அதுவுமில்லை.   மாறாக, மே முதல்நாளை சட்ட தினம் (Law Day) என்றும் விசுவாச தினம் ( Loyalty Day) என்றும் அறிவித்து உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்யும் அமெரிக்காவுக்கு நிகரானதொரு அரசியல் மோசடியில் ஐசிஐசிஐ ஈடுபட்டுள்ளது

30.4.12 அன்று ஐசிஐசிஐ ஒசூர்கிளையின் ஒளிபரப்புத்திரையில்மே1 விடுமுறை: மகாராஷ்டிரா தினம்என்ற செய்தியை படிக்க நேர்ந்ததும் அதுகுறித்து கிளைமேலாளரிடம் வினவினேன். நாளை மே தினத்திற்காகத்தான் விடுமுறை என்றார். பின் ஏன் இவ்வாறு ஒளிபரப்பாகிறது என்று கேட்டதற்கு, மகாராஷ்ட்டிரா தினமும் நாளைக்குத்தான்- மும்பையிலிருந்து  மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு என்பதால் இங்கும் அவ்வாறே தவறுதலாக வருகிறது என்று தெரிவித்தார்

இதே மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பில், தனது வணிகம் சார்ந்த கருத்துகள் என்று வருகிறபோது மட்டும் அந்தந்த வட்டாரத்தின் மொழியில் அந்தந்தப் பகுதிக்கேயுரிய தனித்தன்மைகளை உள்வாங்கி லாவகமாக வெளிப்படுத்த முடிகிற இவ்வங்கியினால் அதன் விடுமுறையையும் அவ்வாறே பிரித்து அறிவிக்க முடியாதா என்ன? முடியும் முடியாது என்பதல்ல, மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினம் என்று தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கக்கூடாது என்பதுதான் ஐசிஐசிஐயின் பிரச்சனை. அதனால்தான் அது மகாராஷ்டிரா என்ற ஒரு மாநிலம் உருவான தினத்தைக் கொண்டாட இந்தியா முழுவதிலும் உள்ள தனது அத்தனைக் கிளைகளுக்கும் விடுமுறை விட்டிருக்கிறது. பீகார் அல்லது வேறு ஏதாவதொரு மாநிலம் உருவான தினத்திற்காக மகாராஷ்ட்டிராவிலும் விடுமுறை என்று அறிவித்திருக்குமானால் சிவசேனா, நவநிர்மாண் சேனாவின் சூறையாடலுக்கு  ஒரு ஐசிஐசிஐ கிளைகூட தப்பியிருக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலம் உருவான மே முதல்நாளை மகாராஷ்ட்டிரா தினமாக கொண்டாடும் அம்மாநில மக்களது உணர்வுகளை மதித்து அன்றைக்கு ஐசிஐசிஐ விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வேறு எந்தவொரு மாநிலம் உருவான தினத்தையும் தன்னுடைய விடுமுறை நாளாக அறிவிக்காத ஐசிஐசிஐ, மகாராஷ்ட்டிரா தினத்திற்கு மட்டும் விடுமுறை என்று அறிவித்திருப்பது எதனால்

குறிப்பிட்ட ஒரேநாள் வெவ்வேறு வரலாற்றுரீதியான காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் போது, அந்த எல்லாக்காரணங்களையும் குறிப்பிட்டு அன்றைக்கான விடுமுறையை அறிவிப்பதை இவ்வங்கி வழக்கமாக கொண்டுள்ளதை அதன் இணையதளத்தில் உள்ள விடுமுறைதினங்களின் பட்டியல் (http://www.icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/common/holiday.htm) தெரிவிக்கிறது. (உதாரணத்திற்கு, ஏப்ரல் 14:  டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவிசுவ சங்கராந்தி/ சிராபோ/ பிஜூ பண்டிகை/ வைசாகி/ போஹாக் பிஹூ). இதன்படி மே முதல்நாளை சர்வதேச உழைப்பாளர் தினம்மகாராஷ்டிரா தினம் என்று குறிப்பிட்டிருந்தால் அதை நேர்மையான செயலாக கருத முடியும். அவ்வாறின்றி மே முதல்நாளை வெறுமனே மகாராஷ்ட்டிரா தினமாக மட்டுமே ஐசிஐசிஐ அறிவிப்பதன் பின்னே உள்ள அரசியல் என்ன? எட்டுமணி நேர வேலைக்காகப் போராடி உயிர்நீத்த தொழிலாளர்களின் வரலாற்றை 12 மணிநேரம் வேலை பார்க்கும் தன்னுடைய ஊழியர்கள் அறியக்கூடாது என்று அஞ்சுகிறதா ஐசிஐசிஐஒற்றுமை, சங்கம், போராட்டம், கூட்டுபேரச்சக்தி என்பவற்றை நினைவூட்டும் உழைப்பாளிகளின் போராட்ட வரலாற்றை மக்களது நினைவுப்பரப்பிலிருந்து அழிப்பதற்கு அது விரும்புகிறதா? உண்மையான வரலாற்றுக்காரணங்களுக்காக கொண்டாடப்படும்/ நினைவு கூர்ந்திடும் புகழ்பெற்ற நாட்களை அவமதிப்பதற்காகவோ முக்கியத்துவமிழக்கச் செய்வதற்காகவோ அந்த நாட்களின்மீது வேறு மலினமான காரணங்களை புனைந்தேற்றுகிற பிற்போக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்தால், ஐசிஐசிஐ வெறும் வங்கித்தொழிலை மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.

சர்வதேச உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்வதை ஒரு முழுநேரத் தொழில் போல செய்து வருகின்ற அமெரிக்காவிலேயே வால்ஸ்டீரிட்டை இடங்கொள்ளும் இயக்கத்தவர் இவ்வாண்டின் மே தினத்தில் சக்திமிக்க வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த ஐசிஐசிஐ எம்மாத்திரம் என்று ஒதுக்கிவிட்டுப் போகாமல் அதற்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம். கூடவே, 126 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆதிக்கச்சக்திகளால் வெறுக்கப்படுமளவுக்கும் அச்சுறுத்துமளவுக்கும் மே தினம் வலுவோடுதான் இருக்கிறது என்கிற செய்தியையும் உலகறியச் சொல்வோம்.

Wednesday, April 11

ஒளி என்பது வெளுப்பான இருட்டு-ஆதவன் தீட்சண்யா

கே.பாலமுருகனின் சிறுகதைத்தொகுப்பு
- பித்தனின் உடையாத இரவுகள்
 ருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.

இருளுக்குள் நுழைகிறபோதான தத்தளிப்பு, சற்றே பழகிய பின் கண்களுக்குப் புலப்படுகிற மங்கலான உருவங்கள், அவற்றின் நடமாட்டங்கள், முழுப் பரிமாணத்தில் தெரிந்துகொள்ளவியலாத அவற்றின் மீதான பயம் பரவசம் என்பவையெல்லாம் ஏற்கனவே வெளிச்சம் என்கிற ஒன்றை அறிந்திருப்பவருக்குத் தானேயொழிய பாலமுருகனின் கதைமாந்தர்களுக்கல்ல. ஏனென்றால் அவர்கள் வெளிச்சம் என்பதை வாழ்நாளில் ஒருபோதும் கண்டவர்களல்ல. எனவே அவர்கள் இருளில் பிறந்து இருளிலேயே வளர்ந்து வாழ்ந்து அதிலேயே மடிந்து ஆகக்கடைசியில் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தும் போகிறவர்களாக இருக்கிறார்கள். வெளிச்சத்துக்குள் நுழையும் தருணங்களில்கூட அதுதான் வெளிச்சம் என்பதை முன்பின் அறிந்திராத காரணத்தால் அவர்கள் கூசும் கண்களை மூடி அவ்விடத்தை இருளாலடித்து தமக்கிசைவாக்கிக் கொண்ட பின்பே இயல்புநிலைக்குத் திரும்புமளவுக்கு அவர்கள் இருள்வயப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டாதாயின் வெட்டெனவோ சட்டெனவோ மறந்துவிட அவர்களொன்றும் துறவிகளல்ல. வெளிச்சத்தின் மீதான அவர்களது தணியாத ஆவல் அது கிடைக்கவே போவதில்லை என்பதனால் தீராப்பகையாகவும் மாறிவிடுவதில்லை. ஆனால் அவர்களது பிரார்த்தனைகள் ஒளியுமிழும் தேவதைகளை எதிர்பார்த்தல்ல. மஞ்சள் வண்ண இருளைப்போல எப்போதும் அணையாத தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையுமே வேண்டுதலாய் கொண்டிருக்கின்றனர். அவர்களது அதிகபட்சக் கனவான ஜெனரேட்டர் விளக்குகளும்கூட கருமையாய் ஒளிர்பவை என்பது புனைவல்ல, வாழ்க்கை. ஆமாம், அவர்களது வாழ்க்கை இருள்மயமானது. அந்த இருளின் வயது இரண்டு நூற்றாண்டுகள்.

2.

‘உலகெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று ஒருமுறை அண்ணா சொன்னாராம். எப்படி வாழ்கிறார்கள் என்று அவரும் சொல்லவில்லை, ஏனோ அவரிடம் யாரும் கேட்கவுமில்லை. கை தட்டுவதற்கே நேரம் போதாதபோது கேள்வியாவது பதிலாவது? ஆனால் பாலமுருகன் தன் கதைமாந்தர்கள் வழியே இந்த கேள்விகளையும் பதில்களையும் முன்பின்னாகவும் அடுக்குகள் மாற்றியும் முரணொழுங்கிலும் சொல்ல முயன்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இண்டுஇடுக்கு சிற்றூர்களைச் சேர்ந்த எளிய மனிதர்கள் நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வழியே உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிஷாராலும் பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததுதான் மலேசியத்தமிழரது வரலாறும். அப்படியான மலேசியத் தமிழரது வரலாற்றின் மிகத்தொடக்ககால உளவியல் போக்குகளின் வகைமாதிரிகளே பாலமுருகனின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவைப் போலவே மலேசியாவையும் காலனியாகக் கொண்டிருந்த பிரிட்டிஷார் அங்கு ரப்பர் தோட்டங்களை உருவாக்கவும், தோட்டங்களையும் துறைமுகங்களையும் இணைப்பதற்கான சாலைகளையும் பாலங்களையும் நிர்மாணிப்பதற்காகவும் இங்கிருந்து உழைப்பாளிகளை கொண்டு சென்றனர். எங்கு கோண்டுபோய் சேர்க்கப்போகிறார்கள் என்கிற விவரமே தெரியாமல் கப்பலுக்குள் அடைபட்ட அந்தக்கணத்தில் மனதிற்குள் ஏற்பட்ட வெறுமையும் நிச்சயமற்றத்தன்மையும் அவர்களது மனதில் என்றென்றைக்குமான இருளாக கவிந்திருக்கிறது. பக்கத்து ஊரைக்கூட பார்த்திராத அவர்கள் நாடுகடந்து கடல் தாண்டி மலேய மண்ணில் மனிதச்சுவடே அதுவரை பட்டிராத பாகங்களிலெல்லாம் தமது முதலடிப் பதித்திருக்கின்றனர். கண்ணுக்கெட்டியவரை காடாகிப் பரந்திருந்த அந்நிலப்பரப்பில்தான் இனி என்றென்றைக்கும் தாங்களும் தங்களது சந்ததிகளும் கிடந்தழியப் போகிறோம் என்றுணர்ந்தவர்கள் கண்ணில் அன்றைக்கு அப்பிய இருள் இன்னும் விலகவேயில்லை என்பதற்கான எழுத்தாவணங்களில் ஒன்றாக பாலமுருகன் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். (‘கதவச் சாத்துடி கண்ணு கூசுது’ என்று வெளிச்சத்தைக் காண்பதற்கு அஞ்சி ஒரு கதையில் முறையிடுகிறவனும், அம்பாம் பாசா தோட்டத்து இருளுக்குள் புழங்கியே பழகிவிட்டதால் நகரத்து தங்கும் விடுதியறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருளுக்குள் படுத்து நிம்மதியடைகிற வனாக இன்னொரு கதையில் வருகிறவனும் ஒரே மனநிலையின் இருவேறு பிரதிகள்).

விலங்குகளின் இடமான அடர்க்காடுகளுக்குள் மனிதர்கள் நுழையும்போது உயிராபத்திலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் முதற்பெரும் சவால். அதிலும் அங்கேயே நிரந்தரமாய் வசிக்க நேரும்போது இந்த சவாலும் ஒவ்வொரு கணத்துக்குமானதாய் மாறிவிடுகிறது. எனவே அவர்கள் விலங்குகள் ஏறிவர முடியாத உயரத்திற்கு தரையில் மரத்தூண்களை நட்டு அவற்றின்மீது பரண்போன்ற கொட்டகைகளை அமைத்து வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்னிரவில் கொளுத்தப்படுகிற தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் விடியவிடிய எரியவிடுமளவுக்கு எண்ணெய் வளப்பமோ பொருள்வளப்பமோ அற்ற அவர்கள் இருளைப் போர்த்திக்கொண்டு நசநசக்கும் வியர்வையோடு விடிவதற்காக பதுங்கியிருந்திருக்கிறார்கள். விடிந்தால் மட்டுமென்ன, இரவின் மிச்சம்போல இருண்டுகிடக்கும் காடுகளுக்குள் புகும் அவர்களுள் எத்தனையோ பேர் ஒவ்வொரு நாளும் காணாமல் போயினர். ஆமாம் காடுகள் மனிதர்களை தின்று கொழுத்தன.

அச்சம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது, அதற்காக அடங்கிக்கிடந்துவிட முடிகிறதா என்ன? அந்த மக்கள் காடுகளுக்குள் அலைகிறார்கள். காடுகாடாக அலைகிறார்கள். தங்களது மரணத்தை தாங்களே தேடியலைவதுபோல இருக்கிறது அவர்களது அலைச்சல். காடுகள் வழிகளை மறக்கடித்து அவர்களை எங்கோ திசைமாற்றி கூட்டிப் போகின்றன. இப்படி மயக்கி கூட்டிப்போவதற்கென்றே பேய்களும் முனிகளும் மோகினிகளும் காடுகளுக்குள் வெவ்வேறு ரூபங்கொண்டு அவர்களை பின்தொடரவும் முன்வந்து மறிக்கவும் காத்திருக்கின்றன. ஆனாலுமென்ன, அவ்வளவு சேட்டைகளையும் கட்டுப் படுத்தவும் விரட்டியடிக்கவும் அங்கு திருநீறுடன் ஒரு சாமியாடி காத்திருக்கிறார். மட்டுமல்ல, வழிதப்பி அல்லாடுகிறவர்களை தானே வழியும் துணையுமாக வந்து பத்திரமாய் வீடு கொண்டு சேர்த்துவிட்டு மாயமாய் மறைந்துவிடுகிற நல்ல ஆவிகளும் காடுகளுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. காணாமல் போனவர்கள், காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள், தூக்கத்திலேயே கொல்லப்பட்டவர்கள், காட்டு/நாட்டு விலங்குகளுக்கு இரையாகிப்போனவர்கள், சயாம் மரண ரயில்பாதை அமைக்க தூக்கிச் செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேன்களில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், ஒரிஜினல் மற்றும் போலி என்கவுண்டர்களில் போட்டுத்தள்ளப்பட்டவர்கள், பதுங்குக்குழிகளிலேயே புதைந்துபோனவர்கள் என்று பலவந்தமாக உயிர் பறிக்கப் பட்டவர்கள் மீது இரக்கக்கொண்ட மக்கள் அவர்களை ஆவிகளாக்கி தம்மோடு சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒரு மர்மத்தின் விடையாக இன்னொரு மர்மம் அல்லது ஒரு மர்மத்தை இன்னொரு மர்மமே வந்து விளக்கிவிடுவது போன்று தெரிந்தாலும் ஆகக்கடைசியில் காட்டுவாழ்க்கை மர்மங்களாலேயே சூழப்பட்டதாய் இருக்கிறது. இருள் ஏற்படுத்திய மரணங்களையும் மரணங்கள் ஏற்படுத்திய இருளையும் எதிர்கொள்ளும் வகையறியாது அல்லது அதையே இயல்பாக ஏற்றுக்கொண்ட தோட்டக்காடுகளுக்குள் தனது பால்யத்தை கழிக்க நேர்ந்த பாலமுருகனின் ஆழ்மனப்பதிவுகளே இத்தொகுப்பின் கதைகளாக வெளிப்பட்டுள்ளன. இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் என்ற ஒரு கதையைத்தான், இருளினை இழையிழையாகப் பிரித்தும் கோர்த்தும் காட்டுவதுபோல 12 கதைகளாக அவர் எழுதிப் பார்த்திருப்பதாக தோன்றுகிறது. ஒவ்வொரு கதையிலும் வெவ்வெறு இடத்தில் நின்றுகொண்டு அவர் தன் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான தடயங்கள் கதைக்குள்ளேயே இருக்கின்றன. பழைய பட்டணத்தின் மரணக்குறிப்புகள் என்ற இத்தொகுப்பின் கடைசிக்கதையில் தனது தந்தையின் பெயரை நேரடியாக குறிப்பிடுவதை ஒரு துப்பாக வைத்துக்கொண்டு இந்தக் கண்ணியை பிடிக்கமுடியும். ஆனால் அவ்வாறான யூகங்களை விடுத்து கதைகளை அதனதன் அளவில் தனித்துப் பார்த்தாலும் காடன்றி வேறொன்றறியாத சிறார்களின் உலகே அவரது கதைகளாகி இருப்பதையும், அவர் கதைகளுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ள தொழில்நுட்பரீதியாக எவ்வித முனைப்பும் கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

உடும்புக்கார தாத்தா, நல்லம்மா பாட்டி, சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு காடு சுற்றும் தாத்தா, விளக்கைப் பற்றியே பினாத்திக் கொண்டு செத்துப்போகிற அம்மாச்சி பாட்டி, ஊரடங்கின பின்பு கிணற்றோடு பேசுகிற தாத்தா, அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்கவும் அனுமதிக்காத பாட்டி என்று வருகிறவர்களை கதாபாத்திரமாக குறுக்குவதா கதையாக விரிப்பதா? பாட்டிகளும் தாத்தாக்களும் கதைசொல்லும் இயந்திரங்களல்ல, அவர்கள்தான் கதைகளாக இருக்கிறார்கள் என்று படிக்கத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.

3.

தோட்டக்காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் இடைத்தங்கல் முகாம்களைப் போன்ற கம்போங் / கம்பத்தில் (கிராமங்கள்) தமிழர்களின் வாழ்க்கை மேலும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் மாறுகிறது. தோட்டக்காட்டிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்றாலும் மரணமும் இருளும் காணாமல் போதலும் அவர்களை நிழலெனத் தொடர்வது குறித்த பதற்றம் கதைகளுக்குள் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை புலப்பெயர்வும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பூர்வீகத்திலிருந்து பெயர்ந்துவந்த அவர்கள் இன்னமும் நிலைகொள்ளவியலாமல் மலேசியா முழுக்க அலைந்து கொண்டே இருப்பது குறித்த துயரம் கதைகளுக்கிடையேயான பொதுத்தன்மையாக இருக்கிறது.

தோட்டக்காடுகளிலும் கம்போங்கிலும் சாகாமலும் தொலைந்துபோகாமலும் எஞ்சியவர்களை வரவழைத்து காணாமல் போக்கடிக்கவோ அல்லது சாகடிக்கவோ பட்டணங்கள் காத்திருக்கின்றன. மீனா அக்காவும் தனசேகர் அப்பாவும் மட்டுமா அங்க காணாமல் போகிறார்கள்? வருகிற ஒவ்வொருவரும் காணாமல் போகிறார்கள் அல்லது இயல்பு திரிந்து வேறொன்றாகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், பாலியல் தொழிலாளர்கள், மொடாக்குடியர்கள், பிச்சைக்காரர்கள், நம்பர் தாள் விற்பவர்கள், உறங்கும் குழந்தையை விட்டுவிட்டு அகாலத்தில் பிரியும் தந்தையர்கள், அப்பா முகம் காணும் ஏக்கத்தில் வதங்கும் குழந்தைகள், கிறுக்குத்தேவன்கள் என்று பலபக்கமிருந்து வந்து சேரும் இவர்கள் பட்டணங்களின் உதிரிகளாக உழன்றலைகிறார்கள். உடல் வளர்ச்சிக் குன்றிய பூச்சாண்டி, யார் கண்ணிலும் படாதவாறு சாத்திய அறைக்குள்ளேயே படுத்தப் படுக்கையாய் கிடக்கும் அவனது தந்தை, பஸ்கட்டணம் செலுத்தமுடியாமல் ஒளிந்துகொள்ள முயற்சித்து தவறி விழுந்து செத்துப்போகிற மாணவன், வயிற்றுக்குள் சுடுகாடு இருப்பதாய் பிதற்றுத் திரிகிற இளைஞன், கணவனின் புறக்கணிப்பை இடையறாத செல்போன் உரையாடல் வழியே கடக்க முனையும் பெண், குற்றவுணர்ச்சியில் மடிந்துகொள்ளும் அவளது கணவன் என வருகிறவர்களும்கூட அவரவர் இருப்பில் உதிரிகள்தான். இந்த உதிரிகளின் குரலாக இருந்து எழுதி தியாகச் செம்மலாகிவிடும் பேராசையற்ற பாலமுருகன் அந்த உதிரிகளில் ஒருவராக கரைந்து எழுதியிருக்கிறார். மலேயாவில் தமிழர்கள் உதிரிகள் என்றால், அந்த தமிழர்களில் உதிரிகள் எவரோ அவர்களின் கதைகள் இவை.

4.

தோட்டவாழ்வையும் அதைத் தொடர்ந்த வாழ்வையும் வெகுஇயல்பாக அதன் நுண்திறங்கள் விளக்குமுறப் பேசும் இக்கதைகள் அங்கு தமிழர்களுக்குள் நிலவும் சாதியப் பாகுபாடுகள் பற்றி மறந்தும் ஒரு வார்த்தை பேசாமல் இருப்பது தற்செயலான விடுபடல் தானா? சட்டிமுட்டி சாமான்களைப் போலல்லாமல் சாதியை தங்களது உயிரெனவோ உயிரைக் காக்கிற உடலெனவோ உடன் கொண்டேகின இம்மக்கள் மலேயாவின் தோட்டக்காடுகளில் சாதியத்தையும் சேர்த்தே வளர்த்திருக்கிறார்கள். அந்தக் காடுகளில் எதையெதையோ போக்கடித்த அவர்கள் சாதியை மட்டும் அப்படியே வைத்திருக்க முடிந்திருக்கிறது. இந்தியாவில் / தமிழகத்தில் ஊர், சாதி என்று பிளந்து வாழப் பழகியிருந்த அவர்கள் தோட்டக்காடுகளில் மேல்குச்சு- கீழ்க்குச்சு, மேல் லயம்-கீழ்லயம் என்ற பாகுபாட்டின் அடிப்படையிலேயே தங்களது வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டிருந்த அவலத்தைப் பேசாமலே கடக்கின்றன கதைகள்.

வசிப்பிடத்திலும் வேலைக்காட்டிலும் வாழ்க்கைவட்டச் சடங்குகளிலும் மணவுறவுகளிலும் கடக்கமுடியாதபடி, எந்த ஒளியாலும் ஊடுருவிச் செல்ல முடியாதபடி தடித்து மறிக்கும் அந்த சாதிய இருள் பற்றி பாலமுருகன் தன் கதையில் பேசாததற்கு அவருக்கென்று வலுவான காரணங்கள் இருக்கக்கூடும். பொத்தாம்பொதுவான தமிழர் / இந்தியர் / மலேசியர் / மனிதர் / பிரபஞ்சவாசி என்கிற கற்பிதம் ஒன்றை கட்டியெழுப்பும் அரசியல் முயற்சி எதுவும் தனக்கு இல்லாதபட்சத்தில் தோட்டவாழ்வின் பிரிக்கவியலாத அம்சமாக இருக்கும் சாதி தன் கதைகளுக்குள் நழுவிப்போனது ஏன் என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். எழுதியதை வைத்துதான் பேசவேண்டுமேயன்றி எழுதாதை வைத்து பேசக்கூடாது என்கிற தந்திரமான காப்புவாசகம் எதுவும் தொகுப்பின் முகப்பில் இடம் பெறாததால் மட்டுமே இதை நான் சுட்டிக்காட்டவில்லை. இத்தகைய விடுபடல்களால் கதையின் நம்பகத்தன்மை மீது படரும் சந்தேகத்தை வேறுவகையான சமாதானங்களால் போக்கிவிட முடியாது என்பதை தெரிவிக்கும் பொருட்டே சொல்கிறேன்.

உள்ளடக்கரீதியில் மிகவும் நேர்க்கோட்டுத்தன்மை வாய்ந்த இக்கதைகளை – ஏதோவொரு வகையான சொல்முறை சார்ந்த மயக்கத்திற்கு ஆட்பட்டவராகி- உடைத்தும் சிதைத்தும் எழுதியிருக்க வேண்டியதில்லை என்கிற எண்ணம் முதல் கதையிலேயே வந்துவிடுகிறது. கதைகளின் மீது ஒருவகையான மாந்திரீகத்தன்மையை படரவிடுவதற்கான எத்தனம் வெறும் வார்த்தைகளாகவே பிணங்கி நிற்பதும், தலைப்புகள் பொருந்தாமல் விலகிப் போவதும்கூட இந்த சொல்முறையினால்தான் என்று தோன்றுகிறது. கவிதை வரிகள்/ மேற்கோள்கள்/ உபதலைப்புகள் எல்லாக்கதைகளுக்கும் அவசியமா என்கிற கேள்வியும் அவை கதைக்குள் பொருந்தியிழையாமல் துருத்திக்கொண்டு தெரிவது குறித்த புரிதலும் அவருக்கே ஏற்பட்டுவிட்டதுபோலும். அதனால்தான் இப்போதெல்லாம் அவர் கதையை கதையாக மட்டுமே எழுதுகிறார் என்பதே அதற்கு சாட்சி.
 
நன்றி: http://www.vallinam.com.my

Saturday, March 10

கண்டேன், களைப்படைந்த என் தோழனை... ஆதவன் தீட்சண்யா

2012 ஜனவரி 29, பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டின் நிறைவுநாள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர். தொல்.திருமாவளவன், ஆளூர் ஷாநவாஸ் மற்றும் அப்துல்லா ஆகிய நண்பர்களுடன் வந்திருந்தார். அந்த மேடையில் வைத்து தான் திருமாவளவனை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். சுவரொட்டிகளிலும் ஃபிளக்ஸ் பேனர்களிலும் பெரிய்ய்ய பெரிய்ய்ய உருவமாக பார்த்துப் பழகியிருந்த என் கண்கள் அவரது நிஜமான உருவத்தை நம்ப மறுத்தன. ஆனால், இதுதான் நிஜம், மற்றதெல்லாம் கட்சிக்காரர்களின் தேவைக்காக ஓவியர்களாலும் இயந்திரங்களாலும் இழுத்தும் நீட்டியும் பெரிதாக்கப்பட்ட பிரமைகள் என்று சொல்லி ஒருவழியாக கண்களை சமாதானப்படுத்தினேன்.

அவர்தான் மாநாட்டின் கடைசி கருத்துரையாளர். அவரது உரையை முதன்முறையாக கேட்கப்போகும் ஆர்வம் எனக்கிருந்தது. அவரது மேடைப்பேச்சுகள் பற்றி பலரும் சொல்லக்கேட்டு உருவாகியிருந்த அனுமானங்களின் பேரில் இந்த ஆர்வச்சுரப்பு கூடியிருந்தது. வேறு பலரும்கூட அந்த அவையில் என்னொத்த மனநிலையோடு இருப்பதைக் காணமுடிந்தது. அவர் மிகுந்த நிதானத்தோடு ஆரம்பித்தார். திடுமென குரலுயர்த்தி ஆவேசமாகப் பேசினார். சட்டென தழைந்த குரல் தேம்புவதைப் போலிருந்தது. பிறகு மீண்டும் ஆவேசம்... நிதானம், தழைதல்.... நான் கண்களை மூடிக்கொண்டேன். அல்லது அவரது உருவத்தைப் பார்க்காமல் குரலை மட்டும் கவனித்தேன். அது யாரையும் தன்வயங்கொள்ளும் குரல்தான். உணர்வுகளின் ஏற்றயிறக்கங்களை கேட்போர் மனதில் பாய்த்துவிடும் நுட்பமூறியிருந்தது அதனில். அப்படியொரு ஆளுமை கொண்ட அவரது குரலுக்கு அந்த அரங்கம் கட்டுப்பட்டிருந்தது. நான்தான் கடும் உளைச்சலுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகிக்கொண்டிருந்தேன். இந்த உளைச்சலும் ஏமாற்றமும் அன்றைக்கு மட்டுமல்ல, அடுத்தநாள் (30.1.12) கப்லா பதாஸ் நகரில் நடந்த பெரியார் சிலை திறப்புவிழாவில்  அவரது உரையைக் கேட்டு இன்னும் கூடுதலாகியது.

இந்திய/ தமிழ்ப்பரப்பில் பகுத்தறிவு, பகுத்தறிவுக்குப் புறம்பான கடவுள், மதம், சாதி, சடங்குகள், மனிதகுலத்தின் இயல்பான பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை மீட்டெடுக்கவும் வளர்த்தெடுக்கவும் நடந்தப் போராட்டங்கள், அத்தகையப் போராட்டங்களில்  ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னணியில் நின்றதற்கான அகவயமான தேவை, சமத்துவத்திற்கும் பகுத்தறிவிற்குமுள்ள தொடர்பு, குறித்தெல்லாம் அவர் பேசவில்லை என்பதோ, பலரையும் போலவே அவரும்கூட பகுத்தறிவு என்றால் பெரியார் மட்டும்தான் என்கிற ரீதியில் பேசியதோ எனது ஏமாற்றத்திற்கான காரணங்களல்ல. அவரது உரையில் விரவிக் கிடந்த விரக்தியும் ஏமாற்றமும் துக்கமும் வலியும்தான் என்னையும் மூழ்கடித்துவிட்டது என்பதை மெதுவே உணர்ந்தேன்.

***

ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமையை தலித்துகள் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கிற ஒரு நாட்டில் அந்தக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு சமரசமற்ற நூறுநூறு இயக்கங்கள் தேவைப்படுகின்றன. அப்படியான இயக்கங்களில் ஒன்றாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை நானும் பார்த்த காலமொன்று இருந்தது.  தலித் ஒற்றுமை, தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக உடனடி அணிதிரட்சி, சாதியத்திற்கு  எதிரான கருத்தியல் போராட்டம் என்று  அதன் பன்முகப்பட்ட செயல்பாடுகள் தமிழக அரசியல் பண்பாட்டுக் களத்தில் அதுவரை செயல்பட்டு வந்த எல்லோருக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கின. 

உதட்டளவிலேனும் சாதியத்திற்கு எதிராகப் பேசியாக வேண்டியதொரு இக்கட்டான நிலை உருவாவதை விரும்பாத ஆதிக்கச்சாதியினரும் அவர்களது கட்சியினரும் விடுதலைச்சிறுத்தைகளையும் திருமாவளைவனையும் ‘எதிர்கொள்ள’ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் கட்சியாக மாறி தேர்தலுக்கு வந்தது. பிறகென்ன, ஆதிக்கச்சாதியினர் நிம்மதியடைந்தனர். தன்னைத்தானே முனை மழுக்கிக்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் தயாராகிவிட்டது என்பது அவர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்திற்குரியதாகியது.

ஒட்டுமொத்த தலித்துகளையும் அணிதிரட்டிக்கொள்கிற உள்வலுவின்றி குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டுமே மையப்படுத்தியதாக தனது அமைப்பு உள்ளுக்குள் குன்றிக் கொண்டிருந்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வெறுமனே தலித்துகளுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது என்று பேசத் தொடங்கினார் திருமாவளவன். சாதியொழிப்பு அரசியலை கைவிட்டுவிட்ட ஒருவரை தங்கள் மந்தையின் கடைசி ஆடாக சேர்த்துக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. சாதியொழிப்பு அரசியல் பக்கம் திரும்பவும் தலைதிருப்பிவிடாமல் அவர் தமிழராகவோ இந்தியராகவோ எம்.பி.யாகவோ வேறு எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

ஊர் ஊருக்கு தலித்துகளை வெட்டுகிறவன், கொளுத்துகிறவன், கொல்கிறவன், வல்லாங்கு செய்கிறவன், வகைதொகையின்றி வன்கொடுமை புரிகிறவன் என்று யார் யார் இருக்கிறார்களோ அவர்களில் ஒருவன்கூட தன் சாதியவாதத்தையோ ஒடுக்குமுறையையோ தலித்விரோதப் போக்கையோ கைவிடாதபோது அவர்களையெல்லாம் தமிழர்களாக குணம்மாற்றி உருவகித்துக் காண்கிற பெருந்தன்மை திருமாவளவன் கண்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது. எந்தெந்த ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து தலித்துகள் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் போராடிக் கொண்டிருந்தார்களோ அந்த ஆதிக்கச் சாதிக்காரர்களின் அரசியல் கட்சிகளோடு ‘தமிழர்’ என்ற அடிப்படையில் அவர் தானாக முன்வந்து கைகுலுக்கியதன் பின்னே இருந்த உளவியல் மிகவும் முக்கியமானது. சாதிய மோதல்களுக்கு முடிவுகட்டி நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான ஒரு முன்மொழிவைப் போன்றதொரு பரிமாணம் அவரது நடவடிக்கைகளுக்குள் பொதிந்திருந்தது. 

ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்திலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகான காலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவாக நடைபெற்ற எல்லா இயக்கங்களிலும் அவர் முன்னணியில் இருந்தார். 2009 அக்டோபரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கைக்கு வந்தபோது நானும் அங்குதான் இருந்தேன். நோர்வுட்டிலும் யாழ்ப்பாணத்திலும் அவர்கள் பயணம் மேற்கொண்டதற்கு அடுத்தடுத்த நாட்களில் நான் அப்பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.  மற்றெவரையும்விட திருமாவளவன் மட்டுமே தங்களது துயரங்களை சரியாக உள்வாங்க முடியும் என்கிற ஒரு கருத்து வடக்கிலும் மலையகத்திலும் இருந்த தமிழர்களிடையே வலுவாக இருந்ததை  என்னால் காணமுடிந்தது. அந்த நம்பிக்கையை அவர் சிறிதளவும் பொய்ப்பிக்கவில்லை. தமிழர் அரசியலில் திருமாவளவன் முதன்மைப் பெற்று வருவதை பொறுத்தக்கொள்ள முடியாத சாதியவாதிகளின் பொறுமலால்தான் இலங்கை சென்று வந்தவர்களில் அவர் மட்டுமே இங்கு அவதூறுகளுக்கு ஆளானார். டிராமாவளவன் என்று அவரது பெயரை இழித்து தமிழ்நாடெங்கும் ஒட்டப்பட்டன சுவரொட்டிகள். அவரது ஈழ ஆதரவும்  பிரபாகரன் மீதான விசுவாசமும் எப்போதும் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் சித்தரிக்கப்பட்டதன் பின்னே தமிழ்த்தேசியவாதிகளின் சாதியமனம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதற்கப்புறமும் சளைக்காமல் இவர்தான் தமிழ், தமிழர் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாரேயன்றி மற்றவர்கள் இவரை தலித்தாகவேதான்  நடத்தியிருக்கிறார்கள். அந்த வலியிலும் துயரத்திலும் வெடித்தப் பேச்சைத்தான் நான் கேட்க நேர்ந்திருக்கிறது.

 ***
ஒவ்வொரு சேரியிலும் மேதகு பிரபாகரன் திருவுருவையும் தமிழீழத்தையும் அறிமுகப்படுத்திய என்னை நீங்கள் ஏன் தமிழனாகப் பார்க்கவில்லை? முள்வேலிக்குள் அடைபட்டிருந்த ஈழத்தமிழர் துயர்துடைக்க நான் சாகும்வரை உண்ணாவிரம் மேற்கொண்டிருந்தபோது அவனவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பொங்கல் கொண்டாடப் போய்விட்டது ஏன்? இப்படியாவது செத்தொழியட்டும் என்றா? எனக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய எனது கட்சிக்காரர்கள் 360க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது எதனால்? ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும் எனது கட்சிக்காரர்கள் 30 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எதனால்.... ஈழப்பிரச்னையை மையப்படுத்தி நான் முன்வைத்த எந்தவொரு போராட்டத் திட்டத்தையும் தமிழ்த்தேசியவாதிகள் ஏற்காமல் பின்வாங்கிப் போனதற்கு அவர்களது சாதியமனம்தானே காரணம்...?

- இப்படியாக ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் வந்து விழுந்த அவரது கேளவிகளின் உட்பொருளாய் இருந்தது இதுதான்- உங்களையெல்லாம் நம்பித்தானே நான் என் மக்களை அழைத்துக்கொண்டு இப்படியெல்லாம் அலைந்தேன், அதற்கு நீங்கள் காட்டிய கைமாறு இதுதானா? நான் இன/மொழி/  தேசிய/சர்வதேசிய அரசியல் எது பேசினாலும் என்னை ஒரு தீண்டத்தகாதவனாகவேதான் பார்ப்பீர்களா?

ஆமாம் தோழர், இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? என்று இடைமறித்து கேட்கவேண்டும் போலிருந்தது எனக்கு. தமிழர் என்கிற பொது அடையாளத்தை தன்னோடும் தனது மக்களோடும் பகிர்ந்துகொள்ள சாதியவாதிகள் மறுத்துவிட்டது குறித்த பெருந்துயரத்தை அடக்கமாட்டாமல் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச் சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’ என்று பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டை நடத்திய தோழர்களைப் பற்றி குமைச்சலுற்ற மலேசியத்தமிழனுக்கும் ‘தமிழர்’ அரசியலுக்குள் திருமாவளவன் வலுப்பெறுவது கண்டு எரிச்சலடைந்த நம்மூர் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இருப்பது ஒரேவகையான சாதியமனம்தான். ஆனால் இதைப் புரிந்துகொள்ள திருமாவளவன் போன்ற தோழர்களுக்கு இவ்வளவு காலம் ஏன் தேவைப்பட்டது என்றுதான் யோசிக்க வேண்டியுள்ளது.

அடங்க மறு அத்துமீறு என்று தன் தம்பிகளுக்கெல்லாம் சொல்லிவிட்டு மனதை ‘சாந்தப்படுத்த’ ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்றுக்கொள்ள போனபோதும், புதுக்கூரைப்பேட்டை கண்ணகி முருகேசன் கொலையில் சமரசம் செய்ய முயற்சித்தார் என்பது குறித்தும், அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றி முரண்பட்ட வகையில் பேசியது பற்றியும் அவர்மீது எனக்கிருந்த கோபம் தணியவில்லை என்றாலும் அந்த கணத்தில் அவர்மீது எனக்கு பரிவே மிஞ்சியது.

பெரியார் சிலை திறப்பில் பேசிவிட்டு மேடையிலிருந்து வந்த திருமாவளவனிடம் என்னை நண்பர் அப்துல்லா அறிமுகப்படுத்தினார். கையை இறுகப் பற்றிக்கொண்டு பேசினார். அயோத்திதாசரைப் பற்றியெல்லாம் மாநாட்டில் பேசினீர்களாமே, மகிழ்ச்சி என்றார். நீங்கள் ஏன் அவ்வாறு பேசவில்லை என்று கேட்கத் தோன்றியதை முதல் சந்திப்பு என்பதாலோ என்னவோ தவிர்த்தேன்.  உங்கள் மீது ஆதவன் அண்ணனுக்கு, மார்க்ஸ் தோழருக்கெல்லாம் நிறைய விமர்சனம் இருக்கே... அதுபற்றி பேசலாமில்லையா என்றார் அப்துல்லா. நான் தயாராகத்தான் இருக்கிறேன், ஆனால் தமிழ்நாட்டில்தான் உரையாடலே இல்லாமல் போய்விட்டதே என்றார் திருமாவளவன். போகிற போக்கில் என்னத்தப் பேச... எப்போதேனும் சந்தித்து உரையாடுவோம் தோழர்.... என்று விடைபெற்றுக்கொண்டேன்.  அவரும் கையசைத்துக்கொண்டு கிளம்பினார்.

சாதியவாதிகளின் புறக்கணிப்புக்கு ஆளாகி ‘பொதுமேடையிலிருந்து’ இறக்கிவிடப்பட்டு மீண்டும் சேரிக்கே திரும்பிக்கொண்டிருப்பதைப் போலிருந்தது அவரது நடை. சாதிக்கொழுப்பால் செவியடைத்துக் கொண்டவர்களிடம் பேசிப்பேசி களைத்துப்போன ஒருவர் வேறெப்படி நடக்கமுடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, March 5

முப்பதடி தூரத்துக்கு மூக்கிலே பட்டாணி உருட்டினால்கூட பிரபலமாகிவிடலாம் - ஆதவன் தீட்சண்யா

vallinam.com.my இணைய இதழின் வாசகர்கள் கேள்விக்கான எனது பதில்கள்- II
 எழிலன் அரசு - தஞ்சை

கேள்வி : எழுத்தாளர் அவர்களுக்கு, உங்களை இந்தக் கேள்வி - பதில் பகுதி மூலம் அறிகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். இதை உங்களிடம் கேட்பதா வல்லினத்திடம் கேட்பதா என தெரியவில்லை. எனக்கு ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை எழுத்துகள் அறிமுகம். அப்படியிருக்க பெரிதும் அறிமுகம் இல்லாத ஷோபா சக்தி போன்றவர்களையும் உங்களையும் வாசகர்களுடன் உரையாட வைப்பதில் என்ன அவசியம். (இதை நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை). இதன் பின்ணணிதான் என்ன?

பதில் : அதிகளவில் விற்பனையாகும் வார இதழ் ஒன்று பளிச் பிரபலங்கள் என்று எட்டுபேரை அடையாளப்படுத்தி அவர்கள் தரும் ஒரு செய்தியை வெளியிடும் தொடர் ஒன்றை தொடங்கியிருந்தது. பளிச் பிரபலங்களின் முதற்பட்டியலில் எனது பளீர் படமும் செய்தியும் வெளியான அன்றைக்கு நான் ஒரு பயணத்தில் இருந்தேன். ரயிலில் அந்த இதழை பலரும் படித்துக் கொண்டிருந்த போதும் இந்த போட்டோவிலிருப்பது நீங்கள்தானா என்று என்னிடம் ஒருவரும் கேட்கவில்லை. ஒசூரில் ரயிலை விட்டிறங்கி வெளியே வருகிறேன். என்னைப் போலவே இறங்கியவர்களும் வழியனுப்பவும் வரவேற்கவும் வந்தவர்களுமாக குறைந்தபட்சம் மூவாயிரம் பேராவது அந்த நேரத்தில் அங்கு இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவருக்கும் என்னைத் தெரியவில்லை. எனக்கும் கடக்கிற முகங்கள் புதிதாகத்தான் தெரிந்தன. நாங்கள் ஒரே ஊரில் இருக்கிறோம். ஆனால் எங்களுக்குள் யாருக்கும் யாரையும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே, பிரபலம் என்பதன் பொருள் ஒருவர் இயங்கும் தளத்தில் அறியப்பட்டவராய் இருக்கிறாரா என்பதுதானேயன்றி ‘பொறந்தக் குழந்தையக் கேட்டாக்கூட அவரைப் பற்றி சொல்லும்’ என்கிற அளவுக்கு தமிழ்ச்சினிமா நாட்டாமைக் கணக்காக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்னும் சொன்னால், ஒரே துறையில் இயங்குகிறவர்கள் மத்தியிலும்கூட அறியப்படாமல் இருந்துவிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை. ப.சிங்காரம் போன்றவர்கள் அப்படித்தானே ஒடுங்கி இருந்துவிட்டுப் போனார்கள்.

பிரபலங்கள் என்று நீங்கள் அறிந்துவைத்திருக்கிற யாரையும் அவர்கள் பிறப்பதற்கும் முன்பே நீங்கள் அறிந்திருக்க முடியாது என்று நம்புவோமாக. அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்று எல்லா எழுத்துகளிலும் தொடங்கும் பெயருள்ள எழுத்தாளர்களின் எழுத்துகளை ஒருவர் அறிந்தவைத்திருப்பது சாத்தியமில்லை, தேவையுமில்லை. எனவே ஜெ என்ற எழுத்துடன் தொடங்கும் பெயருள்ள எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டும் ஜெஜெவென நீங்கள் அறிந்துவைத்திருப்பதில் பிழையொன்றும் இல்லை. நாங்களிருவரும் இந்த உலகத்தில் பிறந்துவிட்டிருக்கிறோம் என்பதைக் கூட நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே தாங்கள் என்னையோ ஷோபாசக்தியையோ அறியாமலிருப்பது குறித்த மகிழ்ச்சியை நான் வல்லினம் வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது. சைலன்சரின் மஃப்ளரை கழற்றிவிட்டு டபடபவென்று வண்டியோட்டி கவனத்தை ஈர்க்கும் அற்பத்தனங்கள்கூட கணநேரத்து பிரபலமாக ஒருவரை ஆக்கிவிடுகிறது. பரபரவென்று எதையாவது பிராண்டியோ, யாரையாவது வம்பிழுத்தோ, என்னைத்தவிர யாருமே எழுத்தாளனில்லை என்று அபத்தமாக உளறிக்கொட்டியோ எனது இருப்பை அறிவித்துக்கொண்டே இருப்பதன் மூலமாகவும்கூட பிரபலமாகிவிட முடியும். அவ்வளவு எதுக்கு, முப்பதடி தூரத்துக்கு மூக்கிலே பட்டாணி உருட்டினால்கூட பிரபலமாகிவிடலாம். இதோ உங்களுக்கு ஒரு 500 பக்கத்தில் பதில் எழுதி பைண்டிங் செய்து அனுப்பி வைத்தேனென்றால், அதை நீங்கள் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி அங்கலாய்த்து என்பேரை பிரபலமாக்கிவிடமாட்டீர்களா என்ன? விடுங்கள் எழிலன், இப்படியான சில்லறைத்தனங்களை செய்து பிரபலமாவதைவிட மூணாம்பேருக்கு தெரியாமல் எங்காவது ஒரு மூலையில் இருந்துவிட்டுப்போகிறேன். உலகம் ரொம்பவும் பெரியது.

மையமான கேள்விக்கு வருவோம். ‘‘பெரிதும் அறிமுகம் இல்லாத ஷோபா சக்தி போன்றவர்களையும் உங்களையும் வாசகர்களுடன் உரையாட வைப்பதில் என்ன அவசியம்’’ என்று கேட்பதன் மூலம் உங்களது பிரபலப்பட்டியலுக்குள் அடங்காத யாரிடமும் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு கருத்து ஏதுமிருக்காது என்று நம்புகிறீர்கள்போலும். அதற்கு நானென்ன செய்ய முடியும்?

கேள்வி : மற்றுமொரு கேள்வி, நீங்களும் ஷோபா சக்தியும் சகோதரர்களா? பார்க்க ஒன்று போல இருக்கிறீர்கள்? அப்படியென்றால் உங்கள் சகோதரர்கள் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்களும் பதில் கொடுப்பார்களா?

பதில் : எனக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவன் கோவையில். இன்னொருவன் வீட்டை விட்டு வெளியேறி பத்துவருடங்களுக்கும் மேலாகிறது. எங்கிருக்கிறான் என்பதை நாங்களறியோம். அவனது சகவாசம் குற்றச்செயல்களில் அவனை மூழ்கடித்துவிட்டது. ஆகவே அவர்களிருவரும் உங்களோடு உரையாடும் கெடுவாய்ப்பு இப்போதைக்கு இல்லை. நிம்மதி கொள்ளுங்கள். மற்றபடி ஷோபாசக்தியும் நானும் சகோதரர்களல்ல, பரஸ்பரம் அக்கறையும் மதிப்பும் உரிமையும் கொண்டிருக்கிற - கருத்துகளை மனம் விட்டு விவாதித்துக்கொள்கிற தோழர்கள். மனிதர்களுக்குத் தேவையும் அதுவாகத்தான் இருக்கிறது.


செல்வராஜா - இலங்கை

கேள்வி : மலேசிய - சிங்கை எழுத்துகளை நீங்கள் வாசிப்பதுண்டா? அவ்வெழுத்துகள் குறித்த பேச்சுகள் அண்மைய காலமாகதான் அதிகம் ஒலிப்பதாகப்படுகிறது. இன்னும் வேறெந்த நாடுகளில் தமிழ் இலக்கியம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது?

பதில் : சிங்கப்பூர் இளங்கோவன் அவர்களின் நாடகப்பிரதிகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பில் அவரது நாடகம் சிலவற்றின் ஒளிப்பிரதியை காணும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ரெ. கார்த்கிகேசு, சை. பீர்முகமது என்று அவ்வப்போது வாசித்துதுண்டு. ம. சண்முகசிவா, நவீன், பாலமுருகன், யோகி, சிவா பெரியண்ணன், தேவராஜன் போன்றவர்களின் எழுத்துகளை சமீபத்தில்தான் இணையத்தில் வாசிக்கத் தொடங்கினேன். அ. ரெங்கசாமியின் இமயத்தியாகம் நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன்.

மலேசியா-சிங்கப்பூருக்கு புலம் பெயர்க்கப்பட்டதைப்போலவே இலங்கைக்கு புலம் பெயர்க்கப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்கிற தனியடையாளம் பெற்றுள்ள இந்திய வம்சாவளியினரது எழுத்துகள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. தலித்துகளை ஈடேற்ற வந்தவர்கள் என்று கொண்டாடப்படுகிற பிரிட்டிசார் இங்கிருந்த சாதிமுறையை தங்களது சுரண்டலுக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை அறியத்தருகிற ஆவணங்களான அவை தமிழின் புலம்பெயர் இலக்கியத்தின் தொடக்கமெனவும் விளங்குகின்றன. அதே காலகட்டத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு - 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிசாராலும் பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் கலை இலக்கிய ஆக்கங்கள் எதையும் நான் கண்டதில்லை. அவர்கள் அங்கு வெறும் வாயோடும் வயிற்றோடும் சென்றுவிடவில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ அதேயளவுக்கு அவர்கள் தங்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டுதானிருப்பார்கள் என்பதும் உண்மை. இங்கிருந்து அவர்கள் கொண்டு போன பெயர், சாமி, கோயில் எல்லாம் இருக்கும் போது அவர்கள் கொண்டு சென்ற மொழியும் கதைகளும் பாட்டுகளும் என்னவாயின என்கிற ஆய்வு தேவைப்படுகிறது.

வடகிழக்கு இலங்கையின் தமிழர்களது எழுத்துகள் தனித்த வகைமையாக இருப்பதைப்போலவே இனப்படுகொலைகளின் கொடூரத்தால் புலம் பெயர்ந்து அவர்கள் உலகின் பலபாகங்களுக்கும் சென்றதன் பின்னே உருவாகியுள்ள எழுத்துகளும் தனிவகைமையானவை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஈழத்திலிருந்து மலேசியாவுக்கு சென்ற தமிழர்களான த.நாகமுத்து (நீலகண்டன்-1925), அ.நாகலிங்கம் (சாம்பசிவம்- ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம்- 1927) ஆகியோரைப் போன்று பொருளீட்டும் நோக்கங்களுக்காக பிறநாடுகளுக்கு சென்றவர்கள் எழுதியவற்றுக்கும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில் தாய்நிலம் விட்டு வெளியேறி வேற்றுமண்ணில் தஞ்சம்புகுந்தவர்கள் எழுதுகிறவற்றுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன. கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இந்த புலம்பெயர் வாழ்விலிருந்து உருவான தலைமுறையினர் உலகின் பலபாகங்களிலிருந்தும் புகலிட இலக்கிய ஆக்கங்களை முன்வைக்கிறார்கள்.

கேள்வி : தமிழ்க் கவிதைச்சூழலில் இன்றைக்கு முக்கியமான ஆளுமையாக யாரைக் கருதுகிறீர்கள். ஏன்?

பதில் : ‘இப்போதெல்லாம் யாரும் உருப்படியாக எழுதுவதில்லை- நம்மிருவரைத்தவிர’ என்று இன்னொரு எழுத்தாளரை பாராட்டும் சாக்கில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். தனக்குத்தானே முடிசூட்டிக் கொள்கிற அளவுக்கு வெட்கம் கெட்டவர்களையும் தன்னைத்தானே கொண்டாடிக்கொள்கிற சுயமோகிகளையும்கூட நம்மால் காணமுடிகிறது. மாற்றி மாற்றி சொரிந்துகொள்ள நகம் வளர்க்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘இது முழுமையான பட்டியல் அல்ல’ என்கிற காப்புவாசகத்துடன் தனக்கு வேண்டியவர்களின் பெயர்களால் நிரப்பப்பட்ட பட்டியல்கள் இங்கு அனேகம் பேரிடம் உண்டு. பரஸ்பர அறிமுகம்/பாராட்டு, குறிப்பிட்ட கருத்தோட்டம், சாதி, மதம், வட்டாரம் அல்லது குறிப்பிட்ட பதிப்பகம் சார்ந்த அளவிலான பிணைப்பின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியல்கள் தயாராகியிருப்பதை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்துவிடும். இன்னும் சிலர் தங்களுக்கு இலவசமாக அனுப்பப்படும் புத்தகங்களிலிருந்தே பட்டியல் தயாரிக்கிறார்கள். ஒன்றாக சேர்ந்து தண்ணியடிப்பது அல்லது குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதும்கூட இப்படியான பட்டியல் தயாரிப்பின் பின்புலமாக இருந்துவிடுகிறது. சார்புநிலைகளைக் கடந்து ஒரு கவிதை உருவாவதற்கான சூழலே இல்லாத நிலையில் எந்த பிரதிபலனும் பாராமல் சார்புநிலை இல்லாமல் கவிதை/கவிஞர் பற்றிய மதிப்பீடு ஒன்று இருப்பதாகவும் நான் நம்பவில்லை. எனவே கவிதைக்கான சூப்பர் ஸ்டார் என்று யாரையும் முன்வைக்கும் வாய்ப்பை நான் துறக்க விரும்புகிறேன். கவிதையின் மகாராஜாவை தேர்ந்தெடுக்கும் மாலையை நீங்கள் வேறு யானையிடம் கொடுங்கள் நண்பரே.

ஆளுமை மதிப்பீடு மட்டுமல்ல, விருதுகள் மற்றும் பரிசுகளுக்கான தேர்வுகளையும்கூட இந்த சார்புத்தன்மைகளே தீர்மானிக்கின்றன. பலசுற்று பரிந்துரைகளின் பேரில் வழங்கப்படுகிற விருதுகளை மிகுந்த ஜனநாயகப்பூர்வமானதாக/ சார்புத்தன்மையற்றதாக / நடுநிலையானதாக நாம் கருதுகிறோம். இந்த பலசுற்றுப் பரிந்துரைகள் யாரையெல்லாம் விலக்கிவைக்கின்றன என்பதை கவனிப்போமானால் தேர்வுப்பட்டியலுக்குள் மறைந்துள்ள சார்புத்தன்மை ஜனநாயக வேடம் பூண்டு வெளிப்பட்டிருப்பதை உணர முடியும். அதுவுமில்லாமல், உங்கள் தரப்பும் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்பதைத் தாண்டி ஜனநாயகம் என்பதும் சார்புத்தன்மை உடையதுதானே. ஜனநாயகம் என்பதே சார்புத்தன்மை கொண்டதாய் இருக்கும்போது ஒரு தனிமனிதரின் தேர்வும் மதிப்பீடும் எவ்வளவு சாய்மானங்களைக் கொண்டிருக்கும் என்பதை உணர முடிகிறதல்லவா? அதனால்தான் பட்டியல்களை நீட்டுவதற்கோ பரிந்துரைகளை முன்வைப்பதற்கோ நான் துணிவதில்லை.

இது தப்பித்துக்கொள்ளும் உத்திதானே என்று நீங்கள் குற்றம் சாட்டலாம். இல்லை. நடப்புலகம் முன்வைக்கும் அறம், ஒழுங்கு, அதிகாரம் ஆகியவற்றுடன் பொருந்திப் போகமுடியாத ஒரு தனிமனிதரின் அவஸ்தைகளையும் சீற்றத்தையும் எதிர்நிலைக் கொண்டாட்டங்களையும் மற்றமை மீதான கரிசனங்களையும் வெளிப்படுத்துகிற அசலான ஒற்றைக்கவிதைக்காக/ ஒரேயொரு சொல்லுக்காகவும் கூட ஒருவரைக் கொண்டாடலாம் என்றே கருதுகிறேன். அப்படியான கவிதையை படிக்க நேர்கிற போதெல்லாம் அதை எழுதியவரை உடனே தொடர்புகொண்டு உரையாடுவதிலும் எனது கருத்துகளை பகிர்ந்துகொள்வதிலும் மட்டற்ற ஆர்வம் கொண்டிருக்கிறேன். வாழ்வின் மூர்க்கமான தருணங்களைப் எழுதுவதற்கு காலம் உலவவிட்டுள்ள பலரில் சிலரை நான் தொடர்ந்து கண்டுவருகிறேன். நீங்களும் காணக்கூடும்.

கேள்வி : நீங்கள் முழுக்க கருத்து ஒத்துப்போகும் எழுத்தாளர்கள் உண்டா?

பதில் : அவசியமில்லை. சாத்தியமுமில்லை. எனக்கானதைப்போலவே வேறு எவருடைய வாழ்வும் மனவமைப்பும் முற்றிலும் வேறானது- தனித்துவமானது. ஆனால் ஏதோவொரு வகையில் கூகியின் எழுத்துகளோடு நான் கூடுதலாகவும் ஒருமை கொள்கிறேன். தன் காலத்தை ஒரு எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொள்வது, தனக்கு முன்னே வரலாறு என்று முன்வைக்கப்பட்டிருப்பதை எவ்வாறு மாற்றி எழுதுவது என்பதை அவரது எழுத்துகள் எனக்கு உணர்த்துகின்றன. அறியப்பட்ட வரலாற்றை நகாசுப்படுத்தும் வகையில் கூடுதலாக சில பக்கங்களை எழுதிச் சேர்த்து கைத்தட்டல் பெறுவதல்ல என்வேலை என்று உணர்ந்துகொள்வதற்கு அவரது எழுத்துகளே துணைசெய்தன.


அருணாசலம், தமிழ்நாடு

கேள்வி : தலித் மக்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்ட்கள் உண்மையாகவே போராடுகிறார்களா? அல்லது வெறும் வோட்டு அரசியல் மட்டும்தானா?

பதில் : மற்ற சாதிகளெல்லாம் ஏதோ நாட்டுநலனைப் பிரதானப்படுத்தும் கொள்கை கோட்பாடுகளையெல்லாம் ஆரதீர ஆய்ந்தோய்ந்து வாக்களிக்கிற மாதிரியும் தலித்துகள் மட்டும் தங்களுக்கென்று ஏதாவது செய்கிறவர்கள் அல்லது செய்கிற மாதிரி நடிக்கிறவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிடுகிறார்கள் என்பது போன்றதுமான அனுமானத்திலிருந்தே ஓட்டு அரசியல் மட்டும்தானா என்கிற கேள்வி எழுகிறது. சிறுபான்மையினர் பற்றிய விவாதங்களிலும்கூட இதேமாதிரியான ஓட்டரசியல் என்கிற குற்றச்சாட்டு இடம்பெறுவதைக் காணமுடியும். இவர்களுக்கெல்லாம் சுயமான அறிவு இல்லை, யாராலும் இவர்களை ஏமாற்றிவிட முடியும் என்கிற முன்தீர்மானத்திலிருந்தும் கூட இப்படியான கேள்விகள் முளைக்கின்றன. தலித்துகள் செறிந்து வாழும் பெரும்பாலான தொகுதிகளில் அப்பட்டமான தலித் விரோதக் கட்சியான காங்கிரஸ் பலநேரங்களில் வெற்றிபெற்றிருப்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?

இப்போது கேள்வியின் முதற்பகுதிக்கு வருவோம். இந்தியாவின் முதல்தலைமுறை கம்யூனிஸ்டுகளில் ஒருவரான சிங்காரவேலர், பண்டிதர் அயோத்திதாசருடன் இணைந்து பணியாற்றியதையும், அரசியல்ரீதியான தற்சார்புக்கு வழிவகுக்கும் என்பதற்காக அம்பேத்கர் முன்வைத்துப் போராடிய இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி போன்ற கோரிக்கைகளை ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதையும் கவனத்தில் வையுங்கள். ஆனால் இந்த பழங்கதைகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதால் தலித்துகள் அன்றாடம் சந்திக்கிற தீண்டாமைக் கொடுமைகள், ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள், பாகுபாடுகள், மறுத்தொதுக்குதல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிற தலித்திய பெரியாரிய அமைப்புகளோடு இணைந்தும் தனித்து சுயபலத்திலும் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். இத்தகைய போராட்டங்களில் சாதியவாதிகள் மற்றும் அரசியந்திரத்தின் தாக்குதல்களையும் வழக்குகளையும் தண்டனைகளையும் தாங்கிக் கொண்டு களத்தில் இருப்பவர்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் உள்ளனர் (ஓட்டு கம்யூனிஸ்ட், வேட்டு கம்யூனிஸ்ட் எல்லோரையும் சேர்த்துதான் சொல்கிறேன்). கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பாலானவர்கள் தலித்துகளாக இருப்பதினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்களில் ஒரு குறைந்தபட்ச பகுதியினராவது தங்களை தலித்துகளாக உணர்வதினாலும் ஏற்படுகிற அழுத்தங்களினால் இதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது.

போராட்டங்களின் நெருக்கடியினால் தீண்டாமையின் ஒரு வடிவத்தை கைவிட நேர்ந்தால் நூறு புதிய வடிவங்களை பிறப்பித்து களமிறக்குகின்றனர் சாதியவாதிகள். சாதி இருக்கும்வரை தீண்டாமை ஒழியாது என்பது எளிய பாடம். ஆகவே தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே சாதியொழிப்பு என்கிற கருத்தியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சாதியொழிப்பானது சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் தலித்துகள்மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதோடு மட்டுமல்லாது சகலமானவர்களையும் சுதந்திரமுள்ளவர்களாக்குகிறது. சாதிப்புனிதங்களையும் பெருமிதங்களையும் காப்பாற்றுவதையே வாழ்வின் ஆகப்பெரும் கடமையாக கருதி செலவிட்டு வந்த தம் ஆற்றல்களை வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் திருப்பிவிட்டு ஒரு செயலூக்கமுள்ளதாக இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கான திறப்பாக சாதியொழிப்பு திகழும். இந்த விரிந்த பொருளில்தான் நீங்கள் ‘தலித் மக்களின் விடுதலை’ என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால், அந்த விடுதலைக்காக கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல வேறு யாரும்கூட இன்றைய தேதியில் போராடிக்கொண்டிருக்கவில்லை என்பதே என் கருத்து.

நன்றி: http://www.vallinam.com.my/issue39/aathavanbathilgal.html

Sunday, February 26

அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்? - ஆதவன் தீட்சண்யா

‘ஆ... தமிழர்களுக்குள் பிரிவினையா? ஐயகோ...    என் செய்வேன்..      ஏது செய்வேன் .... ’ என்று நெஞ்சைப் பிடித்துக்  கொண்டு ரத்த வாந்தி எடுப்பதை வழக்கமாய் கொண்டுள்ள - ஒண்ணும் தெரியாத ஓவர் ஆக்டிங்காரர்கள் இதைப் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
லேசியத் தமிழர்கள் என்ற விளிச்சொல் திரண்ட ஒரு தோற்றத்தை நமக்கு உருட்டிக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் அவ்வாறாக இல்லை. ஒருங்கிணைந்து வாழவேண்டிய புறத்தேவைகளும் நெருக்கடிகளும் அதிகரித்தே வந்தபோதிலும் அவர்கள் பிளவுபட்டே இருக்கிறார்கள். இந்தப் பிளவு அங்கு போய் உருவாக்கிக்கொண்டதல்ல, இங்கிருந்து போகும்போதே எடுத்துக்கொண்டு போய் நாட்டியது. போகும்போதே அந்த கப்பலுக்குள் தலித்துகளை தனிமைப்படுத்தி ஒரு மூலையிலே உட்கார்த்திவைத்தவர்கள் அங்கேபோய் மட்டும் அப்படியென்ன ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழ்ந்திருக்கப்போகிறார்கள்?

மலேயாவின் தோட்டக்காடுகளின் உருவாக்கத்திற்கும் அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்காகவும் பிரிட்டிஷாரால் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் (வெயிலுக்குப் பயந்து வெள்ளாவிப்பானையில் குதித்தக் கதையாக விரும்பிச் சென்றவர்களும் இதில் அடக்கம்) கடும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான போதிலும் இவர்களது வாழிடங்கள் மேல்குச்சு- கீழ்க்குச்சு என்று பிளவுபட்டே இருந்திருக்கின்றன. மேட்டிலிருந்தது மேல்குச்சு, தாழ இருந்தது கீழ்க்குச்சு என்றெல்லாம் அருஞ்சொல் பொருள்விளக்கம் பகர்கின்ற வியாக்கியான விற்பன்னர் யாரும் வாய்திறந்து விடாதீர்கள். இந்தப் பிரிவினை அப்பட்டமான சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்தியாவில் தமிழகத்தில் ஊர் சேரி என்று இரண்டிரண்டாக இருக்கிற அதே பிரிவினை அங்கும் நீட்டிக்கப்பட்டிருந்திருக்கிறது.

தோட்டக்காடுகள் அருகிப்போய் நகரங்களை நோக்கி பெரும்பாலான தமிழர்கள் பெயர்ந்து வந்துவிட்ட நிலையில், அருகருகாக வாழ நேர்ந்திருக்கிற யதார்த்தத்தில், வெவ்வேறு தொழில்களுக்குள் ஈடுபட்டு கடந்தகாலத்தின் ரேகைகளை துடைத்தழித்துக்கொண்ட இன்றைய நாளில் இங்கு சாதியின் இடம் என்னவாக இருக்கிறது என்று கேட்டால், நம்மூர் போலவே, ‘இப்பல்லாம் யார் சார் சாதிப் பாக்குறாங்க’ என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். அப்படியா, அவ்வளவு நல்லவங்களா நீங்க என்று பேசத்தொடங்கினால்தான் குட்டு உடைகிறது. கல்யாணம் செய்யறப்ப மட்டும் தீவிரமா விசாரிப்பாங்க. மற்றபடி இங்கு சாதிக்கு ஒரு வேலையும் இல்லை என்கிறார்கள். இதுவொன்று போதாதா சாதியை நிலைநிறுத்த? சாதியின் உருவாக்கத்துக்கும் மறு உற்பத்திக்கும் நிலைநிறுத்தலுக்கும் மூலகாரணமாய் கல்யாணம்தானே இருக்கிறது? ஒருவர் யாரை  திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது செய்து கொள்ளக்கூடாது என்கிற எல்லைதான் சாதி என்று பேரா.முத்துமோகன் வரையறுப்பதும் இதனால்தானே?

சரி, கல்யாணத்தைத்தவிர வேறு விசயங்களில் மலேயத்தமிழர்கள் சாதி பார்ப்பதில்லையா என்று விவாதிக்கத்தொடங்கினால் அனேகமாக எல்லாவற்றிலும் சாதிவகிக்கும் பங்கை உணரமுடிகிறது. அங்கு தமிழர்களுக்கென்று பாடுபடுவதற்காகவே தொடங்கப்பட்டதாய் சொல்லிக்கொள்கிற ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட ஏதாவதொரு சாதியினரே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். தமிழர் பிரதிநிதித்துவம் என்கிற பெயரில் கிடைக்கும் அதிகாரங்களையும் சலுகைகளையும் யார் அனுபவிப்பது என்கிற போட்டியில் ஆதிக்கச்சாதிகள் ஒன்றையொன்று காலை வாரிக்கொண்டாலும், அவை தலித்துகளுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று தடுப்பதில் ஒற்றுமை கொண்டிருக்கின்றன. இந்தவகையில் இந்திய/தமிழக கட்சிகளின் நகல்களாகவே மலேசியத் தமிழர்களின் கட்சிகள் இருக்கின்றன. மலேசிய முக்குலத்தோர் பேரவை, மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம், மலேசிய யாதவர் சங்கம் போன்ற அமைப்புகள் சர்வஜன அமைப்புகளல்ல- அவை குறிப்பிட்ட சாதியினரையே அணிதிரட்டிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டைப்போலவே அங்கு போயும் நாங்கள் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று அலட்டிக்கொள்கிற அக்கப்போர்களுக்கும் பஞ்சமில்லை. சரிடாப்பா, அப்படியே ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் அவ்வளவுபேருமா  கிரீடம் கட்டிக்கிட்டு நாட்டை ஆண்டீங்க? யாரோ ஒருத்தன்தான் ராஜாவா இருந்திருப்பான், மத்தவனெல்லாம் மாடுகன்னு மேய்ச்சுக்கிட்டு மண்ணை உழுதுக்கிட்டுதானே இருந்திருக்க முடியும்? என்று கேட்டால் அதுக்காக நாங்களும் மற்றமற்ற சாதிகளும் ஒண்ணாயிட முடியுமா என்று  இங்கே பேசுகிற அதே குதர்க்கம் அங்கும் இருக்கிறது.  இன்டர்லாக் நாவலுக்கு மலேசியத்தமிழர்களிடையே கிளம்பிய எதிர்ப்புக்கு இந்த உளவியலே காரணமாகிறது. அதெப்படி இந்த நாவல் எங்களையும் பறையர்னு சொல்லலாம்? நாங்களெல்லாம் வேற சாதியாக்கும் என்று நுரைதள்ள எகிறிக் குதித்த எல்லோரிடமும் வெளிப்பட்டது சாதியம்தானே? பார்ப்பனர்கள் தங்களைத்தவிர இங்கிருக்கும் எல்லோரையும் தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பதைப் போலவே, நீங்கள் ஆ பரம்பரையோ பே பரம்பரையோ, மலேசியர்கள் இந்தியர்கள் எல்லோரையும் பறையர்களாகவே கருதுகிறார்கள். பறையர்கள் என்றால் தீண்டத்தகாதவர்கள்- இழிவானவர்கள் என்று இந்த இந்துத்தமிழர்கள் உருவாக்கின நச்சுக்கருத்தாக்கம் இன்று அவர்களையே தாக்கும்போது, இதுவரை பேசிவந்த தமிழர் என்ற அலங்காரங்களை களைந்துவிட்டு அப்பட்டமான சாதிக்காரர்களாக அம்மணமாக வெளிப்பட்டார்கள்.

இத்தனை நொட்டைகளைக் கொண்டிருக்கிற மலேசியாவில் பகுத்தறிவு மாநாட்டுக்கான தேவையும் நியாயமும் இருக்கின்றன. மாநாட்டு தலைமையுரையிலும், தீர்மானங்களிலும் வலியுறுத்தப்பட்டதைப் போல சாதிச்சங்கள் தடைசெய்யப்பட வேண்டும். சாதிப்பெருமிதங்களை வலிந்தூட்டும் கொண்டாட்டங்களை நிறுத்தினாலே சமூகம் ஓரளவுக்கு இயல்பாக இருக்கும். அதற்காக மாநாட்டுக்கு அப்பாலும் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே தேநீருக்காக மாநாட்டு அரங்கிலிருந்து வெளியே வந்தோம். தோழர் மார்க்ஸிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் மிகுந்த குமைச்சலுடன் சொன்ன விசயம்- ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச்சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’

இதைக் கேட்டதும் "இன்னும் நூறு பெரியார் வந்தால்தான் இவங்கெல்லாம் திருந்துவாங்க" என்று தானே சொல்லத் தோன்றுகிறது?’ நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பெரியார் மறுபடியும் வரமாட்டார்தானே? வந்தாலும் நூறு பெரியாரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவைத்தான் அவரால் செய்ய முடியும். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், பகுத்தறிவுப் பரம்பல், சாதியொழிப்பு போன்ற வேலைகளையெல்லாம் மறுபடியும் பெரியார் தலையிலேயே கட்டிவிட்டு நீங்களும் நானும் அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்?  

(தொடரும்)