இளவரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளவரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 3

கௌரவக்கொலை - ஆதவன் தீட்சண்யா




ரும்பாடு பட்டு வளர்த்த தம் பிள்ளைகளை பெற்றோர்களே கொன்றொழிக்கும் கொடுஞ்செயலை கௌரவக்கொலை என்றழைக்க என்ன நியாயம் இருக்கிறது? அவர்களைக் கொன்றாவது காக்கவேண்டிய அது உண்மையில் கௌரவம்தானா? கௌரவம் என்பதன் பொருள்தான் என்ன? என்று கேட்டு வலுவாக குறுக்கீடுவதற்கு பதிலாக உலகம் முழுக்க இவ்வகையில் வருடத்திற்கு 5000 பெண்கள் கொல்லப் படுவதாக புலம்புகிறது ஐ.நா. தற்கொலை, காணாமல் போதல், விபத்து என மூடி மறைக்கப்படுபவற்றையும் கொல்லப்படும் ஆண்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 20,000 வரை எகிறும் என்கிறது ஓர் ஆய்வு.  

கௌரவம், மானம், புனிதம், தூய்மை, உயர்வு என்கிற கற்பிதங்கள் தோன்றிய போதே அவற்றுக்கான உடனிபந்தனை போல இக்கொலைகளும் தொடங்கிவிட்டன. ஆகவே கௌரவத்திற்கான கொலைகள் திடுமென நடப்பது போன்ற பாவனை அவசியமற்றது. தன் குடும்பம் அங்கம் வகிக்கும் சாதி/மதம்/இனம்/நிறம் அல்லாத வேறொருவரது ரத்தக்கலப்பின்றி பெண்கள் தூய்மை காப்பதே கௌரவம் எனப்படுகிறது. இதற்கு ஏதேனும் பங்கம் வருமானால் காரணமானவர்களை கொல்வதன் மூலம் அந்தக் களங்கம் போக்கப்படுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. பழமைவாதத்தில் ஊறி நொதிப்பவை என இகழப்படும் மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாது வளர்ந்தவை என அலட்டிக்கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 26 நாடுகளில் கௌரவத்திற்கான கொலை தொடர்கிறது. 

இக்கொலைகள் பெண்ணின் சுயேச்சைத்தன்மையை தடுக்கும் பொருட்டானவை. சுயமாக வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது, குடும்பத்தார் கட்டாயப்படுத்திச் செய்யும் திருமணத்தை மறுப்பது, விவாகரத்து கோருவது, ஒரே கோத்திரத்தானை / ஊரானை மணப்பது, வேறு மதம்/சாதி/இனத்தவரை காதலிப்பது / மணப்பது, அயலாருடன் பழகுவது, வேறு கலாச்சாரத்தின் உடைகளை அணிவது ஆகிய நடத்தைகளால் ஒரு பெண் தங்களது கௌரவத்தைத் தாழ்த்திவிட்டதாக கருதுகிறவர்களால் அவள் கொல்லப்படுகிறாள். இதில் தந்தை, சகோதரர்கள், தாய்மாமன், கணவன் உள்ளிட்ட குடும்பத்தின் ஆண்களும் (மகனும்கூட) மூத்தப் பெண்களும் நேரடியாக பங்கேற்கிறார்கள். குடும்பம் பாசத்தால் தடுமாறுமானால் உறவினர்கள் தலையிட்டும் ஒத்துழைத்தும் கொன்று முடிக்கிறார்கள். பெண்ணை கௌரவக்கேடாக நடக்கத்தூண்டியவன் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவளது காதலன்/ கணவனும் கொல்லப்படுகிறான். குறிப்பிட்ட பெண்ணை கைவிடும்படியான கட்டளையை ஏற்காத ஆண் அவனது குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதுமுண்டு. 

கூட்டாக கல்லால் அடிப்பது, சாணிக்கரைசலை ஊற்றுவது, வாயில் சிறுநீர் கழிப்பது, தலைமுடியை அலங்கோலமாக்குவது, சூடு வைப்பது, சவுக்கால்  வெளுப்பது, அமிலத்தை ஊற்றி முகத்தைச் சிதைப்பது, ஊரின் ஆண்கள் கூட்டாக வன்புணர்வது ஆகிய சித்ரவதைகளை ஏவி பெண்ணின் ஆளுமையைச் சிதைத்து மனநோயாளியாக்குவது போன்றவை கௌரவத்திற்காக நிகழ்த்தப்படும் வன்முறைகள். ஜோடியாகச் செல்பவர்களை மறித்துத் தாக்குவது, தாலி கட்டிக்கொள்ளுமாறு வதைப்பது போன்றவை சித்ரவதைகளுக்கு கலாச்சாரக்காவலர்களின் மேக் இன் இந்தியாகொடை. 

பெண்களை தெய்வமெனப் பசப்பும் இந்தியாவில் இந்த பாழாய்ப்போன கௌரவத்தின் பெயரால் பெண்கள் நீண்டகாலமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் சாதி, மதம், ஊர்க்கூட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் அழுத்தம் பெரும்பங்கு வகிக்கிறது. பெண்மீதான இழிவானப் பார்வை அவளை கருவிலேயே கொல்கிறது. அதற்கும் தப்பினால் பால்யத்திலேயே ஏதேனுமொரு கிழத்துக்கு இரண்டாந்தாரமாகவோ ஏழாந்தாரமாகவோ  மணம் முடிக்கப்பட்டு நல்ல பிராயத்தில் விதவையாக்கப்பட்டாள். விதவை வேறுதுணை தேடினால் கௌரவக்கேடாகிப் போகுமே என்றஞ்சி அவள் உடன்கட்டை ஏற்றி உயிரோடு எரிக்கப்பட்டாள். அறுத்துக்கட்டும் சாதி என்கிற அவமதிப்புக்கு அஞ்சி மறுமணம் மறுக்கப்பட்டது பெண்களுக்கு. அரசர் தொடங்கி பாளையக்காரர்கள் வரையான ஆண்டப் பரம்பரை பலரும் அடிக்கோவணம் இல்லாமல் அலைந்தவர்கள்தானே? அவர்களது சிறையெடுப்புக்கு அஞ்சி தம் குடும்பத்துப் பெண்களைக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்தவர்களுண்டு. மதக்கலவரம் மூளும் காலங்களில் பிறமதத்தாரிடம் சிக்கிச் சீரழிவதற்குப் பதிலாக சாவதே மேல் என்று தம் பெண்களை கொன்றவர்களிருக்கிறார்கள். இந்தக் கொலைகள் பெண்களின் நலன் சார்ந்ததே போல் கூறப்படுகிறது. செத்தப் பிறகு அவர்களுக்கு என்ன நலன்? களங்கப்படாதவளாக, ரத்தக்கலப்புக்கு ஆளாகாதவளாக சாதித்தூய்மை/ மதத்தூய்மையோடு செத்துப்போனாள் என்கிற கௌரவத்தக்காகத்தான் அவள் கொல்லப்பட்டாள். இங்குள்ள சிறுதெய்வங்களில் பலவும் இவ்வாறு கொல்லப்பட்ட பெண்கள்தான். மதுரை வீரன், முத்துப்பட்டன் போன்ற ஆண்தெய்வங்களுக்கும் இது பொருந்தும். 

சாதி ஆதிக்கத்தை மையமிட்டு இயங்கும் அமைப்புகள் இந்தக் கொலைகளுக்கு உடந்தையாகவும் தலைமையேற்கவும் செய்கின்றன. சோறில்லாமல்கூட இருந்துவிடலாம் மானமில்லாமல் இருக்க முடியுமா? என்று கொம்புசீவும் இத்தகைய அமைப்புகளால் கண்ணகி-முருகேசன், இளவரசன், மாரிமுத்து, விமலாதேவி என்று தமிழகத்திலும் இந்தப் படுகொலைகளின் பட்டியல் நீள்கிறது. தமது சாதிப் பெண்களின் உடை முதல் திருமணம் வரை எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அதிகாரத்தை தாமாகவே எடுத்துக்கொள்கிற இவ்வமைப்புகளுக்கு ஆதரவாகவே வெகுஜன உளவியல் இயங்குகிறது. ரத்தக்கலப்பைத் தடுத்து சாதித்தூய்மையை காப்பதற்கும் பெண்களை ஒரு கட்டுக்குள் நிறுத்தவும் இப்படி நாலுபேர் தேவைதான் என்கிற கருத்து பலரிடமும் இருக்கிறது. பெண்கள் மெதுவே பொதுவெளிக்கு வருவது பற்றி இதை  எழுதிக்கொண்டிருக்கிற என்னையும் சேர்த்து ஆண்களுக்குள் ஏற்படுகிற பதற்றத்தையும் திரும்பவும் வீட்டுக்குள் அடைத்துவிட வேண்டும் என்கிற வன்மத்தையும் இந்த அமைப்புகள் மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றன. 

சராசரியாக ஒவ்வொரு ஆறுமணி நேரத்திற்கும் ஒரு இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்டோ கடுமையாக தாக்கப்பட்டோ இறக்கிறாள், அல்லது தற்கொலைக்கு தூண்டப்படுகிறாள் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. 2014 அக்டோபர் வரை 14 பெண்கள் கௌரவத்திற்காக கொல்லப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிப்பதுடன் கடமை முடிந்ததாக நினைக்கிறது அரசு. இதைவிடவும் பெருந்தொகையான மனிதர்கள் நாள்தோறும் கொல்லப்படுவதைப் பார்த்தே அதிராத நம் மனங்களில் இந்த எண்ணிக்கை யாதொரு சலனத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஒருவேளை நமக்குள்ளும் ஒரு கௌரவக் கொலைகாரன் பதுங்கியிருப்பது இதற்கொரு காரணமாயிருக்கலாம்.

7.1.15 ஆனந்த விகடன் இதழுக்காக எழுதியதன் முழுவடிவம்.

வியாழன், ஜூலை 11

ரயிலை விட்டிறங்காத போலிஸ் - ஆதவன் தீட்சண்யா

குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பது இளவரசனின் உடல்தான் என்றாலும் விரைத்துக்கிடப்பதென்னவோ போலிஸ் உள்ளிட்ட தருமபுரி மாவட்ட அரசு நிர்வாகம்தான். இளவரசனின் மரணத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் மர்மங்களை விலக்குவதில் சிறு முன்னேற்றத்தையும் எட்டாமல் நாலாம் தேதி எந்த இடத்தில் நின்றதோ அங்கேயே அது நின்று கொண்டிருக்கிறது. சடலம் கிடந்த நிலையை வைத்து இப்படி ஒரு தற்கொலை சாத்தியமா என்கிற குறைந்தபட்ச சந்தேகத்தைக்கூட எழுப்பிக் கொள்ளாமல்  இன்றுவரை திரும்பத்திரும்ப அது ‘தற்கொலை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது.

விசாரணை விசயத்தில் விரைத்துக்கிடக்கிற இந்த நிர்வாகம், பிரச்னையையும் வழக்கையும் திசைதிருப்புவதில் அளவுக்கதிமான வேகத்தில் செயல்படுகிறது.  இளவரசன் எழுதிய கடிதம் என்கிற ஒன்று கைக்கு கிடைத்திருக்கிறதென்றால் தடயவியல் சோதனையின் மூலம் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு முடிவுகளை அறிவிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும். அவ்வாறின்றி எடுத்தயெடுப்பில் ‘இந்தக் கடிதத்தின் மூலம் தற்கொலை தான் என்பது உறுதியாகிவிட்டது’ என அவசரஅவசரமாக அறிவித்தது. இப்போது அந்தக்கடிதம் உண்மையானது போன்ற தோற்றத்தோடு ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. அக்கடிதத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளிக்கும் பல்வேறு பதவுரைகளையும் பொழிப்புரைகளையும் எழுதி பரப்பும் வேலையை ஊடகங்களின் பொறுப்பில் விட்டுள்ளது நிர்வாகம். இளவரசனின் மரணத்தின் பேரில் மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை நீர்த்துப்போகச் செய்யவும், மனைவியைப் பிரிந்த சோகத்தில் நடந்த வழக்கமானதொரு தற்கொலைதான்’ என்று நிறுவுவதற்கும் அது இப்படியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அன்றைய தேதியில் யாரும் ரயிலில் மோதி இறக்கவில்லை என்பதை ரயில்வேதுறை பலமுறை சொல்லிவிட்ட பின்னும்கூட இளவரசனின் மரணத்தை ரயிலோடு தொடர்புபடுத்துவதிலேயே நிர்வாகத்தின் எத்தனம் இருக்கிறது. ஒருவேளை ரயிலின் முன்பகுதியிலிருந்த ஓட்டுநர், கடைசியிலிருந்த கார்டு உட்பட எல்லோருடைய கண்ணையும் கட்டிவிட்டு ரயிலின் பக்கவாட்டில் மோதியிருந்தால், அடிபட்டுச் செத்தது இளவரசன்தான் என்று சொல்வதற்கும்கூட வழியற்ற வகையில் உடல் சிதறிப்போயிருக்கும் என்பதையும்கூட ரயில்வே அதிகாரிகள் தெளிவுபட கூறிவிட்டனர். ஆனாலுமென்ன, ரயிலை விட்டு கீழிறங்க மறுக்கிறது போலிஸ். ரயிலும் இல்லை தற்கொலையும் இல்லை என்கிற கருத்து பரலாக உள்ள நிலையில் போலிஸ் மட்டும் அதை ஏற்காமல் இருக்கிறது. தற்கொலை என்று நிறுவுவதில் போலிஸ் கொண்டிருக்கிற இந்த வறட்டுப் பிடிவாதத்தினால் மோப்பநாயை பயன்படுத்துவதுகூட தவிர்க்கப்பட்டுள்ளது.

இளவரசனின் மரணம் ரயிலைத் தவிர்த்த வேறுவகையிலான தற்கொலையாகவே இருந்துவிடும் பட்சத்திலும்கூட அதற்கான உளவியல் முற்றுகையை உருவாக்கிய பாட்டாளி மர்டரர் கட்சியினர் ஒருவர்கூட இதுவிசயமாக இன்னும் விசாரிக்கப்படாதது ஏன்? இளவரசனிடமிருந்து திவ்யாவை பிரித்தெடுப்பதில் மூர்க்கத்தனமான ஈடுபாடு கொண்டிருந்த பாட்டாளி மர்டரர் கட்சியினரை அவரது சாவுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு ஏன் உதாசீனம் செய்யப்படுகிறது? வன்னியர்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு பகுதிக்கு - திவ்யாவின் பெரியம்மா வீட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள அந்தப்பகுதிக்கு- இளவரசன் ஏன் வந்தார் அல்லது வரவழைக்கப்பட்டார் என்கிற கேள்விகளும் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவற்றோடு கவனங்கொண்டு விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம்- இளவரசனின் கடைசிநாட்களில் அவரோடு செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என்பதுதான்.

செல்போன் சேவை நிறுவனங்கள் சிம்கார்டு வழங்குவதில் கையாள வேண்டிய நெறிமுறைகள் இறுக்கப்பட்டுள்ள நிலையில் சிம்கார்டுக்குரியவர் யார் என்று கண்டுபிடிப்பது எளிதானதே. ஒருவேளை அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்திருந்தால்கூட அப்போதும் அதிலிருந்து வெளியாகும் சமிக்ஞைகள் மூலமாக அவர் இருக்குமிடத்தை கண்டுபிடிக்குமளவுக்கு தொழில்நுட்ப சாத்தியங்கள் உள்ளன. எனவேதான் பொதுவாக இப்போதெல்லாம் செல்போன் தொடர்புகள் பற்றிய விவரங்களை முதலில் திரட்டிக்கொண்டு தான் எந்தவொரு குற்றத்தைப் பற்றிய புலன் விசாரணையையும் போலிஸ் தொடங்குகிறது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் தொடர்புகளைத் திரட்டுவதும், தொடர்ந்து கண்காணிப்பதும் குற்றவாளியை அல்லது குற்றம் நிகழ்ந்த பின்னணியை துரிதமாக நெருங்குவதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளன.

தருமபுரி பாரதிபுரத்தில் தனது அத்தை வீட்டிலிருந்த போது வந்த செல்போன் அழைப்பினைத் தொடர்ந்தே இளவரசன் வெளியே சென்றதாகவும், அதற்குப்பிறகே அவர்  பிணமாகியிருக்கிறார் என்றும் அவரது பெற்றோர்களும் உறவினர்களும் கூறிவருகின்றனர். இளவரசனின் தொடர்பெல்லைக்குள் இருந்தவர்களே அவரை பிணமாக்கியுள்ளனர் என்று அவர்கள் எழுப்பும் சந்தேகத்தை காவல்துறை பின்தொடர மறுக்கிறது. ஒருவேளை இளவரசன் பிணமாவதற்கு காரணமாணவர்களின் தொடர்பெல்லைக்குள் இப்போது காவல்துறை சிக்கியிருக்கிறதா..?

ஞாயிறு, ஜூலை 7

பாட்டாளி மர்டரர் கட்சி

ளவரசனின் மரணத்தைப்போலவே பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட விதமும் பல சந்தேகங்களை உள்ளடக்கியுள்ளது. எப்பேர்ப்பட்ட விண்ணாதிவிண்ணன் எத்தனைத் தடவை மறுக்கூராய்வு செய்து பார்த்தாலும் எப்படி சாவு நேர்ந்தது என்றுதான் சொல்ல முடியுமே தவிர யாரால் சாவு நேர்ந்தது என்று சொல்ல முடியாது. யாரால் எதற்காக எப்போது சாகடிக்கப்பட்டார் என்கிற உண்மைகளை அரசியல் விருப்புவெறுப்புக்கோ வேறுவகைச் சாய்மானங்களுக்கோ அழுத்தங்களுக்கோ பணிந்துபோகாத ஒரு புலனாய்வுக்குழுவினால் தான் வெளிக்கொண்டுவர முடியும். அப்படியொரு புலனாய்வுக்குழுவை தமிழ்ச்சினிமாவில் மட்டுமே காணமுடியும் என்பதால் நடப்புலகில் தேடி நியமிக்க முடியாது. ஆகவே சுமாராக தீய்க்கும் கொள்ளியால் சொறிந்து கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. ரயிலில் சுண்டல் விற்கிறவர்களிடம் தண்டல் வசூலிப்பதில் மட்டுமே தன் சாமர்த்தியத்தை காட்டிவருகிற ரயில்வே போலிசிடமிருந்த இளவரசன் மரண வழக்கை உள்ளூர் போலிசுக்கு மாற்றியுள்ள அரசு, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக இருந்து புலனாய்வு செய்வார் என நேற்று அறிவித்துள்ளது. ஒருவேளை மத்திய புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கு மாற்றப்படுமானால், Congress Bearue of Investigation என்கிற இகழ்மொழியிலிருந்துதப்பிக்க அதற்கொரு வாய்ப்புள்ளது.
***
வன்னியப்பெண்ணை காதலிக்கிறவர்களுக்கும்  கல்யாணம் முடிக்கிறவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று காடுவெட்டி குருவும் மரம் வெட்டி மருத்துவரும் அறிவித்ததன் செயலாக்கமாகவே இளவரசனின் மரணத்தை கருதவேண்டியுள்ளது. இளவரசனின் மரணம் (இன்ப?) அதிர்ச்சியளிப்பதாக கூறிக்கொண்ட குட்டி ராமதாஸ் கூடவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கணக்காக இந்த மரணத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அறிவித்துக்கொண்டார். அவர் எத்தனை பாசாங்கான மொழியில் பசப்பினாலும் திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் அவர்களின் மரணம் தொடங்கி இளவரசனின் மரணம் வரையான  அவ்வளவு அழிமானங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்களின் காலடித்தடங்கள் தைலாபுரம் தோட்டத்திலேயே முடிவடைகின்றன என்கிற உண்மையை மறைத்துவிடமுடியாது.

இளவரசனுடனான திவ்யாவின் காதலை தனிநபர் முடிவாக விட்டுவிடாமல் தங்களது சாதியின் மானத்தோடும் மண்ணாங்கட்டி வீரத்தோடும் தொடர்புபடுத்தி பா.ம.க ஏற்றிய வெறிக்கு முதல் பலி திவ்யாவின் தந்தை நாகராஜன். நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புகளை கொள்ளையழிக்க பா.ம.க.வுக்கு தேவைப்பட்ட பிணமாக அவர் மாற்றப்பட்டார். இந்த வன்கொடுமை மற்றும் கொள்ளையழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனத்தனத்தில் பா.ம.க. மட்டுமே ஈடுபட்டது. தலித்துகளுக்கு எதிராக அனைத்து பிற்போக்கு பழமைவாத வெறியர்களையும் அணிதிரட்டுவதில் ராமதாசும் அவரது கட்சியினரும் காட்டிய ஈடுபாடு வன்மம் மிக்கது. திவ்யா - இளவரசன் தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட போது, இவர்களுக்கு ஆபத்து யாரால் நேரக்கூடும் என்பதை ஊருலகம் அறிந்தே இருந்தது. 

திவ்யா - இளவரசன் தம்பதியரை பிரித்தே தீர்வது என்று 2012 நவம்பரிலிருந்து பா.ம.க. செயல்படுத்தி வந்த  ஓரம்சத்திட்டம் இளவரசனின் மரணத்தோடு முற்றுப்பெற்றுள்ளது. இளவரசன் பிணமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இனி திவ்யாவே துணிந்தாலும் திவ்யாவின் தாயாரே சேர்த்துவைக்க ஆசைப்பட்டாலும் அதனால் பயனொன்றும் இல்லை. அதாவது பா.ம.க. மற்றும் வன்னிய மானத்திற்கு இனி எந்த பங்கமும் வரப்போவதில்லை. எனவே இவ்வளவு காலமும் திவ்யாவையும் அவரது தாயாரையும் நிழல்போல பின்தொடர்ந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த பா.ம.க.வினரும் அக்கட்சியின் வழக்கறிஞர்களும் இப்போது அவர்களை விட்டு ஒதுங்குவதுபோல காட்டத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில்தான் இப்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

நண்பன் என்று சொல்லிக்கொண்டு இளவரசனின் இறுதிநாட்களில் பாரதிபிரபு என்பவன் உடனிருந்ததும், அவனது அலைபேசி அழைப்பின் பேரில் வெளியே சென்ற இளவரசன் பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இளவரசனை வரவழைத்த அந்த திடீர் நண்பன் அதற்குப்பிறகு ஏன் காணாமல் போனான் என்பதும், இளவரசனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் அருகாமையில் திவ்யாவின் பெரியம்மாவுடைய வீடு இருப்பதும் தற்செயலானவையல்ல. இளவரசனின் பிணம் இருந்த நிலையை வைத்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியங்கள் மிகமிக நுண்ணிய அளவில்கூட இல்லை என்றான நிலையிலேயே அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. எனில் அவரை ஒரு தொல்லையாகவும் எதிரியாகவும் கருதிய பா.ம.க. தலைவர்கள்தான் அவரது உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. ஆனால் நஷ்டஈட்டுக்கு ஆசைப்பட்டு தருமபுரியிலும் பாச்சாரப்பாளையத்திலும் மரக்காணத்திலும் தலித்துகள் தங்களது வீடுகளை தாங்களே கொளுத்திக்கொண்டார்கள்  என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்ட அதே உத்தியில் இளவரசன் தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டதாகச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

பா.மா.க தலைவர்கள் என்ன பசப்பினாலும் இளவரசனின் குடும்பத்தார் அவர்களையே குற்றம்சாட்டியுள்ளனர். ஊரார் கண்களும் அவர்களையே உற்றுநோக்குகின்றன. கடலில் மிதக்கிற பிணங்கள் எல்லாம் கப்பல் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வது எந்தளவிற்கு பொய்யோ அதேயளவு பொய்தான் ரயில்ரோட்டில் கிடக்கிற பிணங்கள் எல்லாம் ரயில் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வதும் என்பதை வெகுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். எனவேதான் இளவரசன் பிணமாகக்கிடப்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் சடாரெனச் சொன்னார்கள்- இளவரசனை அடித்துக்கொன்று ரயில்ரோட்டில் கிடத்திவிட்டார்கள் என்று. இயல்பான தமது உள்ளுணர்விலிருந்தும் நடப்புலகத்தை அவதானிப்பதிலிருந்தும் எடுத்தயெடுப்பில் உண்மையைப் பேசிவிடுகிற வெகுமக்களுக்கு இது கொலையா தற்கொலையா என்கிற சந்தேகமோ குழப்பமோ எழவேயில்லை.


தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இளவரசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக ஃபிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்தலையை தானே இப்படி வெட்டிக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா? பாதி தலையை மட்டும் ரயில் சிதைக்குமா? ரயிலைவிட வலுவானதா இளவரசனின் உடல்?
 கொலைப்பழியிலிருந்து தப்பிக்கும் விசயத்தில் பா.ம.க.வினரின் எண்ணம் பொய்த்துப் போனாலும்  வன்னியப்பெண்ணை மணம் முடிக்கத் துணிகிற யாருக்கும் இளவரசனுக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்கிற அச்சத்தை பொதுஉளவியலுக்குள் பதியவைப்பதில் வெற்றிபெற்றுள்ளனர். இந்தவகையில் இளவரசனின் மரணத்தோடு தாங்கள் தொடர்புபடுத்தி பார்க்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே அவர்கள் விரும்புகின்றனர். ( முகப்புத்தகம் போன்றவற்றை கருகடித்து தீய்க்கும் இந்த ‘அக்னிப்புத்திரர்கள்’ இளவரசனின் மரணத்தை கொண்டாடித் தீர்ப்பதும்கூட இந்த விருப்பத்தின் ஒருபகுதிதான்).

இளவரசனை ‘காணாப்பிணமாக’ போக்கடிப்பதற்கான சாத்தியங்களை வேண்டுமென்றே நழுவவிட்டு முழுப்பிணமாக ரயில்ரோட்டில் கிடத்தியதற்கு காரணம், ரயில்ரோட்டில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் பிரதியை ஒவ்வொருவரது மனதிலும் கிடத்துவதுதான். உள்ளிருந்து வாழும் அந்தப்பிணத்தின் பிரதி சாதியை மறுத்து காதலிக்கத் துணிகிற எவரொருவரையும் எச்சரித்து தடுத்துவிடும் என்று பா.ம.க. தலைவர்களும் வன்னிய  வெறியர்களும் நம்புகின்றனர். ஆனால் வாழத்துணிந்த மக்கள் பிணங்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...