சாத்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாத்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 10

ஒரு துளி ரத்தம் - வ. கீதா

Long lines of migrants hoped to board buses for home on the outskirts of New Delhi on Saturday. Most were turned away.
கிரிஸ்டோபர் மார்லோ ஒரு நாடக ஆசிரியர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். டாக்டர் ஃபவுஸ்டஸ் என்ற நாடகம் ஒன்றை எழுதினார். அவர் காலத்தில் ஃபவுஸ்டஸ் என்ற மந்திரவாதியை பற்றி கதைகள் நிறைய வழங்கி வந்தன. அக்கதைகளை ஆதாரமாகக் கொண்டே தனது நாடகத்தை வடித்திருந்தார்.

மெத்த படித்தவன் ஃபவுஸ்டஸ். மந்திரதந்திரங்கள்  எல்லாம் தெரிந்தவன். இயற்கை ஆற்றல்களை கட்டுக்குள் வைக்கக் கற்றுக் கொண்டவன். சாத்தான் அவனுக்கு மேலும் பல விஷயங்களை வழங்குவதாகக் கூறி ஆசைக் காட்டுகிறான். நினைத்ததை சாதிக்கவல்ல பேராற்றலைத் தருவதாக சொல்கிறான். ஆனால் பதிலுக்கு ஃபவுஸ்டஸ் அவனது ஆன்மாவை தனக்கு தந்துவிட வேண்டும் என்கிறான்.

தனத மேதாவித்தனத்தில் திளைத்திருந்த ஃபவுஸ்டஸூக்கு இது சரியான பேரம்தான் என்று தோன்றுகிறது. சாத்தானுக்கு மகிழ்ச்சி. தனக்கு தேவைப்படும் போது ஆன்மாவை வாங்கிச் செல்வதாக கூறுகிறான்.

காலம் செல்கிறது. ஃபவுஸ்டஸ் சகல இன்பங்களையும் அனுபவிக்கிறான். அவனைப் போல அறிவாளி ஐரோப்பா எங்கிலும் இல்லை என்ற அளவிற்கு அவனுக்கு பேரும் புகழும் கிடைக்கின்றன. திடீரென்று ஒரு நாள் சாத்தான் அவன் முன் தோன்றி "ஆன்மா எங்கே?" என்று கேட்கிறான். ஃபவுஸ்டஸூக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் அப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அவன் அலட்சியமாக "எடுத்துச் செல்" என்கிறான்.

சாத்தான் அவனை இழுத்துச் செல்ல குட்டிச் சாத்தான்களை அழைக்கிறான். அவை ஃபவுஸ்டஸை சூழ்ந்து கொண்டு கொஞ்ம் கொஞ்சமாக அவனது சுயத்தை ஆட்கொள்கின்றன. ஃபவுஸ்டஸ் தன்னை தற்காத்துக் கொள்ள என்னென்னவோ செய்யப் பார்க்கிறான். ஆனால் அவனது ஆற்றல்களை அவனால் தருவிக்கவும் முடியவில்லை, தனது சுயத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இயலவில்லை.

சாத்தானோ அவனை கட்டியிழுத்து வானில் பறக்கத் தயாராகிவிட்டான். ஃபவுஸ்டஸ் செய்வதறியாது இருக்க அவனது ஆளுமை, உடல் அவனுக்கானவையாக இல்லாமல் போய் விடுகின்றன. சாத்தான் தனது கையாட்களின் உதவியுடன் அவனை தூக்கிக் கொண்டு பறக்கிறான்.

தான் சின்ன வயதில் கற்றுக் கொண்ட விவிலிய வாசகங்களை ஃபவுஸ்டஸ் நினைவுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான். முடியாமல் போக அரற்றுகிறான். தேம்பித் தேம்பி அழுகிறான். கடைசியில் எஞ்சியிருந்த விள்ளல் அளவான மனதை நினைவுக் துகள் ஒன்று ஆட்கொள்கிறது.

"ஒரு துளி ரத்தம், அரைத்துளியாவது இருந்தால் கூட போதும். அது என்னை காப்பாற்றிவிடும். எனது கிறிஸ்துவே" என்று முணுமுணுக்கிறான். 

அவனுக்கான நேரம் முடிந்துவிட்டது. இனி அவனது ஆன்மா அவனிடத்தில் இல்லை. சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள்.

புனித வெள்ளியன்று இக்கதையை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றிற்று.

தமது உழைப்பு ஆற்றல்கள் ஆகியவற்றை செலுத்தி இவ்வுலகை வாழத்தக்க உலகாக மாற்றத் தொழில் புரிந்துவரும் உழைக்கும் மக்கள், குறிப்பாக ஆதிகுடிகள், தலித்துகள், இவர்களின் இரத்தமும் உடல்களும்தான் நம்மை இரட்சித்து வருபவவை. நமது கணக்குவழக்கற்ற தேவைகளை நிறைவேற்ற தம்மை வருத்தி நம்மை அவர்கள் வாழ வைக்கின்றனர்.

ஆனால் அவர்களின் பாடு குறித்து நம்மில் பலர் யோசிப்பதில்லை. வளர்ச்சி, நுகர்வு என்ற பெயரில் நாம் நமது ஆன்மாவை அநீதிக்கும் சமத்துவமின்மைக்கும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். காலம் நம்மை அலைக்கழிக்கும் இந்நேரத்தில் அவர்களின் ரத்தத்தைதான் மீண்டும் கோருகிறோம். ஆனால் ஆன்மாவை இழந்த நிலையிலும் பவுஸ்டஸூக்கு இருந்த மனத்தாங்கல் நம்மில் பலருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

"என்னை ஏன் கைவிட்டீர்கள்" என்று அவர்கள் கேட்டால் பதில் சொல்ல இங்கு யாரும் இல்லை. 

pc: nytimes.com


திங்கள், ஆகஸ்ட் 31

கடவுளின் கதை - ஆதவன் தீட்சண்யா



பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து எழுதியுள்ள ‘கடவுளின் கதை’ என்கிற நூல் இன்றைய காலகட்டத்தின் தேவையை நிறைவு செய்யும் வரவு என உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கடவுள்தான் மனிதர்களைப் படைத்தார் என்கிற நம்பிக்கைக்கு மாறாக மனிதனின் ஆகச்சிறந்த படைப்பே கடவுள் என்று நிறுவுவது நாத்திகமல்ல, அறிவியல். நாத்திகம் அறிவியலின் துணைகொண்டு கடவுளை மறுத்ததேயொழிய அதை அழிக்கவில்லை. உண்மையில் கடவுள் தன் பக்தர்களைக்கண்டுதான் நடுநடுங்க வேண்டிய அவலத்திற்கு ஆளானது என்பதை அங்கதம் பொங்கும் நடையில் சொல்லிப்போகும் இந்நூல் கடவுளின் கதை தவிர்க்க முடியாதபடி அறிவியலின் கதையாகவும் இருப்பதை மறுக்கமுடியாத ஆய்வுத்தரவுகளுடன் முன்வைக்கிறது.

இறப்பு, இறப்புக்குப் பிறகு உயிர் எங்கே என்னவாக இருக்கும், இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்களா, இறந்தவர்கள் தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வார்கள் என்பதான கேள்விகளால் விளைந்த அச்சத்தில் அவர்களை சாந்தப்படுத்தும் மூத்தோர் வழிபாடும் சடங்குகளும் ஆதிமனிதர்களிடம் தொடங்கின. தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை ஆற்றல்களையும் விலங்குகளையும் வணங்கத் தலைப்பட்ட அவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை வளமையின் குறியீடுகளாக கருதி அவற்றையும் வழிபட்டனர். பிரபஞ்சமும் பூமியும் காற்று ஒளி வெப்பம் நீர் ஆகியவையும் கோடானுகோடி ஜீவராசிகளும் மனிதகுலமும் எவ்வாறு உருவானது, அவை எவ்வாறு ஏன் இயங்குகின்றன என்பது பற்றிய கேள்விகளுக்கு விடைதேடி கிளம்பியவர்களில் ஒரு பகுதியினர் அவற்றை இயற்கையின் இருப்பாகவும் இயக்கமாகவும் கண்டனர். இன்னொரு சாரார் இவை எல்லாவற்றையும் உருவாக்கி இயக்குபவர் கடவுள் என்கிற மாபெரும் வடிவமைப்பாளர் என்னும் முடிவுக்குச் சென்றனர். இந்த சிந்தனைப் பிளவு இன்றளவும் நீடிக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அந்த நம்பிக்கையைத் தவிர வேறு ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வது வெறும் சமாதானம் தானேயன்றி அது உண்மையல்ல என்று பக்தர்களுக்கும் தெரிந்திருந்தது. எனவே கடவுள்தான் யாவற்றையும் படைத்தார் என்றால் அவர் எங்கிருந்து கொண்டு எவற்றால் படைத்தார், அழிவுகளுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு, தீமைகளுக்கு பொறுப்பு சாத்தான் என்றால் சாத்தானைப் படைத்தது யார்? சாத்தான் கடவுளைவிடவும் வல்லவரா? கடவுள் ஏன் பலவாக இருக்கிறார்? உருவ வழிபாடு சிறந்ததா அருவ வழிபாடு சிறந்ததா? கடவுளை அடையும் வழிதான் என்ன? என்பதான கேள்விகள் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும் ஆட்டிப் படைத்தன. இது குறித்த விவாதம் ஆதிகாலம் தொடங்கி இன்றுவரையிலும் எவ்விதமாக உலகெங்கும் நடக்கிறது என்பதை இந்தநூல் தொகுத்தளிக்கிறது.

மதங்களின் உருவாக்கம், அரசுகளின் உருவாக்கம், மதங்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவும் முரணும், ஒன்றையொன்று கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்த மதமும் அரசும் மேற்கொண்ட எத்தனங்கள், ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள் மோதல், மதங்களுக்கிடையே மோதல், இந்த கலவரங்களில் கடவுள் நம்பிக்கையாளர்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்ட ஒடுக்குமுறைகள் தண்டனைகள் அழிவுகள் படுகொலைகள், கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறைகள், ஆள்தூக்கி கருப்புச்சட்டங்கள் ஆகியவற்றின் வரலாற்றை கண்டங்களின் வாரியாகவும் யுகவாரியாக காலநிரல்படுத்தியும் பேசுகிறது இந்நூல். கடவுளும் மதமும் அதிகாரத்தின் கையில் சிக்கி சாமான்ய மக்களை ஒடுக்கும் கருத்தியல்களாக உருப்பெற்றது, கண்டதையெல்லாம் கும்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏகக்கடவுள் நோக்கி நகர்வது, குலதெய்வங்களையும் வழிபாட்டு மரபுகளையும் உட்செரிப்பது, மதமாற்றம் செய்வது, மதத்திற்குள்ளேயே பிரிவுகளுக்குத் தாவுவது  என்கிற உலகளாவிய வரலாற்றுடன் இந்திய/ தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றையும் இந்நூல் இணைக்கிறது.  

மதங்களின் ஆதிக்கத்திலிருந்து திமிறிக்கொண்டு உருவான புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் அதன் தொடர்பில் விளைந்த பொருளியல் மற்றும் அரசியல் அமைப்புகள்,  கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் இருந்த முடியாட்சிகள் தூக்கியெறியப்பட்டு நாடாளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயக ஆட்சி முறைகள் உருவாவது, மூடத்தனங்களிலிருந்து சமூகத்தை விடுவித்து பகுத்தறிவுப்பாதையில் இட்டுசெல்வதற்கான போராட்டம் ஆகியவற்றையும் விவரிக்கிற இந்நூல் மனிதகுலம் தோன்றியதிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரையான வரலாறாகவும் விளங்குகிறது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, வால்டேர், கோபர்னிகஸ், கலிலியோ, டார்வின், புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், ராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என்று வெறும் பெயர்களாக நாம் கடந்துவிடக்கூடிய ஆளுமைகளின் வரலாற்றையும் உலகியல் கண்ணோட்டத்தையும் இந்த நூலின் வழி அறியமுடிகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வுநூல்களையும் மதநூல்களையும் தேர்ந்து கற்று அவற்றின் சாரத்தில் ஊறிய அறிவின் துணிவோடும் தனக்குரிய அரசியல் பார்வையோடும் பேராசிரியர் அருணன் எழுதியிருக்கும் இந்நூலை ஒருவேளை கடவுள் வாசிக்கும்பட்சத்தில் தன்வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது.   

நன்றி: ஹலோ விகடன்

செவ்வாய், ஜனவரி 22

மாறாட்ட ஆள் - ஆதவன் தீட்சண்யா


ஒரு ஆசுவாசத்திற்காக 
முகப்புத்தகத்தில் இணைய விரும்பிய கடவுள்
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு
ஃபேக் .டி. ஒன்றினால் கணக்கைத் தொடங்கி
உள்நுழைந்த கணத்திலேயே
கடவுள் என்ற பெயரில் அங்கே
அனேகர் உலவக்கண்டார்

வம்புதும்பு எதிலும் சிக்க விரும்பாத கடவுள்
முதலில் தயாரிக்க விரும்பியதென்னவோ
நண்பர்களாக இருக்கக்கூடாதவர் பட்டியலைத்தான்

வாழ்நாளெல்லாம் தன்னை இம்சிக்கும் பக்தர்கள்
தானும் கடவுளே எனும்
மாயைக்குள் மிதக்கும் படைப்பாளிகள்
தன்னைவிட்டால் யார் என்கிற அகங்காரிகள்
வருஷம்பூராவும் வாதித்துக்கொண்டே இருப்பவர்கள்
வருஷத்துக்கொரு முறைகூட வாயே திறக்காதவர்கள்
செல்போனை நோண்டிக்கொண்டேயிருப்பவர்கள்
24 X 7 லைக் போடுகிறவர்கள்
அமைச்சர்களின்
அதிகாரப்பூர்வ மற்றும் கணக்கில் வராத மகன்கள்
ஆள்வோரின் கால்சுற்றும் செல்லப்பிராணிகள்
ஆண்டெனா போல் ஆண்குறி சூடியவர்கள் 
ஓயாத உபதேசிகள்
ஒண்ணுக்கிருப்பதையும் நிலைத்தகவலாக்கும் ஓட்டைவாயர்கள்
கருத்துக்கண்ணற்றோர்- என்று
கழித்து கழித்து கடைசியாய் மிஞ்சிய
சாத்தானும் அவரும்
இப்போது நண்பர்கள்.

நன்றி: ஆனந்தவிகடன், 23.1.13

திங்கள், நவம்பர் 14

சாத்தான் மட்டுமே வேதம் ஓதும் - ஆதவன் தீட்சண்யா



கூரையில் வைக்கப்பட்ட தீ
திகுதிகுவெனப் பரவி எரித்துக்கொண்டிருக்கிறது
என்வீட்டை

தசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது
தணலில் வெந்து கொண்டிருப்பது
படுக்கையாய்க் கிடந்த என்தாயாகவோ
நிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம்

நாங்கள் சேமித்துவைத்திருந்த விதைதானியஙகள்
வெடித்துத் தெறிக்கின்றன சோளப்பொரியைப்போல

என் அண்டைவீட்டார்
நீரையிறைத்துக் கொண்டிருக்கின்றனர் முன்ஜாக்கிரதையோடு
தத்தமது கூரைமீது

எவர்மீதும் சேதாரத்தை விசிறாமல்
தனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு

யார்மனதும் தொந்தரவுக்காளாகாத வண்ணம்
இதுகுறித்த புகாரினை வெளிப்படுத்துவது எங்ஙனமென
ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறான்
கூரைக்கு தீ மூட்டியவன்.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...