செவ்வாய், மார்ச் 21

ஆய்வுதான் அறிவு - ஆதவன் தீட்சண்யா

                          

பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் என்ற நூலுக்கான முன்னுரை

வெறும் பெயர்களும் எண்களும் நிறைந்திருக்கும் டெலிபோன் டைரக்டரி போல மன்னர்களின் பெயர்களாலும் அவர்கள் ஆண்ட/ அழிந்த ஆண்டுகளின் எண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாளர்களால் அலுப்புடன் குறிப்பிடப்பட்ட இந்திய வரலாற்றை மக்களின் வரலாறாக மாற்றியெழுதி நேர்செய்யும் ஆய்வாளர்களில் ஒருவராக தோழர் மணிக்குமார் வளர்ந்தெழுந்த சித்திரத்தை இந்நூலின் ஈற்றிலுள்ள “எழுத எழுதவே வாசிப்பு கூடும்” என்கிற கட்டுரை வழங்குகிறது. “ஆய்வுதான் அறிவு” என்கிற புரிதலூறிய மார்க்சீய ஆய்வாளராக கடந்த காலத்தின் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளையும் போக்குகளையும் மணிக்குமார் ஆய்ந்தெழுதத் தேர்ந்து கொண்டதன் காரணம் இந்தப் பின்புலம்தான். 

புராண வரலாறு, சமயச்சார்பு வரலாறு, சமூக வரலாறு என்றுள்ள வகைமைகளில் சமூக வரலாற்றை எழுதுகிறவரான மணிக்குமார், 1999 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரையாக அவ்வப்போது எழுதிய இக்கட்டுரைகள் சமூக அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் இன்றைக்கு முனைப்படைந்துள்ள விவாதங்கள் பலவற்றை விளங்கிக் கொள்வதற்கும் அவ்விவாதங்களை அடுத்தச்சுற்றுக்கு முன்னகர்த்தவும் உதவுகின்றன. குறிப்பாக, ஆரியம்- திராவிடம், பெளத்தம், காலனிய ஆதிக்கம், விடுதலைப் போராட்டம், சமூகநீதிப் போராட்டங்கள், அரச வன்முறைகள், சாதிய மோதல்கள், சமத்துவத்துக்கான எத்தனங்கள் என விரியும் இவரது ஆய்வுப்புலம், வரலாற்றுத்திரிப்புகளையும் திரிபுகளையும் அம்பலப்படுத்தி உண்மையின் மீது நம்மை கண்குவிக்கச் செய்கின்றன. இடம் பெற்றுள்ள நேர்காணல்களும்கூட இந்தப்பாங்கிலேயே இருக்கின்றன. 

புராண இதிகாசப் புனைவுகளை கடந்தகாலத்தின் உண்மை நிகழ்வுகளைப் போல சித்தரிப்பது, தற்கால அறிவியல் தொழில்நுட்பச் சாதனைகள் அனைத்தும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக அல்லது இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக மோசடியாக உரிமை கோருவது, இவற்றையெல்லாம் இன்டியன் நாலட்ஜ் சிஸ்டம் என்கிற பெயரில் தொகுத்து உயர்கல்வியில் திணிப்பது, சாதியமைப்பு உள்ளிட்ட எல்லா தீங்குகளுக்கும் இஸ்லாமியரைப் பொறுப்பாக்குவது, சமூகத்தின் பிற்போக்கான நடத்தைகளை இந்தியத் தனித்தன்மை எனப் போற்றுவது, விடுதலைப் போராட்ட வரலாற்றைத் திரிப்பது, நாட்டின் பன்மைத்துவத்தை பாழாக்கி ஒற்றைமயப்படுத்துவது  என வரலாற்றின் மீது நடத்தப்பட்டுவரும் கொடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் கருத்தாயுதங்களாக இருக்கின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள். 

மேற்கத்திய, மார்க்சிய கண்ணோட்டத்தின் செல்வாக்கிலிருந்து இந்திய வரலாற்றை விடுவித்து இந்தியத்தன்மையுடன் இந்தியாவின் 12ஆயிரம் வருட வரலாற்றை எழுதப்போவதாக சங்பரிவார கும்பல் கொக்கரித்துக் கொண்டிருக்கும் காலமிது. அதற்காக சர்மாக்களையும் சாஸ்திரிகளையும் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழு, ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளெனவும் அவர்களது சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் சிந்துசமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்றும் புளுகிவிட்டு ஓடிவிட முடியாதபடி தடுக்கும் பல தரவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது. 

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் திப்பு சுல்தான் ஆற்றிய போற்றுதலுக்குரிய பங்கினை இருட்டடிப்புச் செய்வதற்கும்  அவர்மீது எதிர்பிம்பம் கட்டமைக்கப்படுவதற்குமான இழிமுயற்சியை அடித்து நொறுக்கும் வலுவான சான்றுகளை முன்வைக்கிறது “திப்பு சுல்தான்” கட்டுரை. மக்கள் நலனில் அக்கறைகொண்ட சமதர்மச் செயற்பாட்டாளராக கொண்டாடத்தக்கவர் திப்பு என்பதற்கு மணிக்குமார் கைக்கொள்ளும் அளவீடுகள் ஏற்கத்தக்கவை. மராத்திய இராணுவத்தளபதி ரகுநாதராவ் சிருங்கேரி மடத்தை கொள்ளையடிக்கிறான்; திப்புவோ மடத்தை மீண்டும் கட்டிட உதவுகிறார். குருவாயூர் கோவிலுக்கு 613.2 ஏக்கர் நிலமும் 1428ரூபாய் 9 அணா 2 பைசா வருடாந்திர மனியமும் கொடுத்ததற்கான சான்றுள்ளது எனும் கூற்று இப்போது தேவையான ஒன்று. திப்புவின் மகன்களும் பங்கெடுத்த வேலூர்ப் புரட்சியின் வீச்சையும் விளைவுகளையும் மதிப்பிட்டு அதனை இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று மணிக்குமார் தொடர்ந்து ஆய்வுப்பூர்வமாக முன்வைத்ததன் மூலமே அது இன்று பரவலாக கவனம் பெற்றுள்ளது எனலாம்.  

காலனியாட்சியாளர்கள் தம் வர்க்கநலனுக்கென மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களால் தவிர்க்கமுடியாமல் தலித்துகள் உள்ளிட்ட அடிநிலைச்சாதியினருக்கு கிட்டிய சில வாய்ப்புகளை திட்டமிடப்படாத ஆதாயங்கள் என்பார் ஆனந்த் டெல்டும்ப்டே. அப்படியான ஆதாயங்கள் மூலம் முன்னேறுவதற்கு தமிழ்ச்சமூகத்தில் நடந்த எத்தனங்களை மணிக்குமாரின் சில கட்டுரைகள் கவனப்படுத்துகின்றன. காலனியாட்சியின் பொருளாதாரச் சுரண்டல், கொடிய பஞ்சங்கள், புலப்பெயர்வுகள், நிலவருவாய் முறைகள், 1930களில் உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம், இவற்றினூடாக வணிகச் சமூகம் அடைந்த சாதக பாதகங்கள் என்று விரிந்துசெல்லும் இக்கட்டுரைகள் காலனிய ஆட்சியின் மீதான மறுமதிப்பீட்டைச் செய்கின்றன. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தாதாபாய் நெளரோஜி முன்வைத்த வடிகால் கோட்பாடு பற்றி மணிக்குமார் வழியாக நான் இப்போதுதான் அறிகிறேன்.  

விடுதலைக்கு முன்பும் பின்புமான சமூக வன்முறைகளை சாதிக் கலவரங்களாக பலரும் திரித்துக் கூறிவந்த நிலைக்கு மாறாக, அவற்றை சமூகநீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் நடந்த போராட்டங்கள் என நிறுவும் மணிக்குமார், இப்போராட்டங்கள் பொருளாதார மற்றும் பண்பாட்டு கட்டமைப்பில் உண்டாக்கிய மாற்றங்களையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். நாடார்கள் ஒருபோதும் ஒடுக்கப்பட்டவர்களாக- தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவர்களாக இருந்ததில்லை என்கிற போலிப்பெருமிதங்களை நிராகரித்து அச்சமூகம் இன்றைய நிலையை அடைவதற்கு நடத்திய போராட்டங்களை அதன் காலத்தில் வைத்து மதிப்பீடு செய்துள்ளார். 

அதேபோல முதுகுளத்தூர், கொடியன்குளம், தாமிரபரணி என தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள் தொடர்பான கட்டுரைகள் சாதியத்திற்கெதிராக களத்திலும் கருத்துலகிலும் தீவிரப்படுத்த வேண்டிய போராட்டத்தை வலியுறுத்துகின்றன. அம்பேத்கரும் கம்யூனிஸமும் கட்டுரையில், நாசிக் காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம் தொடர்பாக மணிக்குமார் முன்வைத்துள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோருகிறேன். ஏனென்றால் அப்போராட்டம் வழிபாட்டில் சமவுரிமை கோரும் தலித்துகளுக்கு இந்துமதம் வழங்கியுள்ள இடம் என்னவென்பதை அவர்களே நேரடியாக உணரவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது என்பதை அம்பேத்கர் மிகவிரிவாக பேசியுள்ளார். 

“வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல்  வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல. வரலாற்றுச்சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. இந்த விளக்கங்கள், விவாத தருக்கத்திலிருந்து வெளிப்பட்ட பொதுமைகளை வழங்கும் சான்றுகளைப் பகுப்பாய்வுச் செய்வதிலிருந்து வருகின்றன. புதிய சான்றுகளால் அல்லது ஏற்கனவே இருக்கிற சான்றுகளுக்குப் புதிய பொருள் கொடுப்பதால் பழமைகளைப் பற்றிய ஒரு புதிய புரிதலை நாம் அடையமுடியும்…” என்பார் மூத்த வரலாற்றாளர் ரொமிலா தாப்பர். அத்தகைய புதிய புரிதலை நமக்கு உருவாக்கும் தீவிரத்துடனும் அக்கறையுடனும் இக்கட்டுரைகளை எழுதியுள்ள தோழர் மணிக்குமார் அவர்களை தோழமையால் தழுவிக்கொள்கிறேன். ஆழ்ந்தகன்ற வாசிப்பும் இடையறாத தேடலும் மார்க்சியக் கண்ணோட்டமும் கொண்ட அவருடைய இந்நூலால் இந்திய/ தமிழ்நாட்டு வரலாறு மேலும் வளமடைந்து துலங்குகிறது. 

ஆய்வுப்புலத்தில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றுள்ள இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை நாங்கள் நடத்திய புதுவிசை இதழில் வெளியானவை என்பதனால் உண்டாகும் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நாம் ஆய்ந்தறிந்த உண்மைகளை எழுதாமல் போனால் ஏற்படும் வெற்றிடத்தை நமது கருத்தியல் எதிராளிகள் நிரப்பிவிடுவார்கள் என்கிற பதைப்புடன் அவர் எழுதிக் கொண்டேயிருக்கிறார். படிப்பதும், பரப்புவதும் நம் வேலை.     


திங்கள், மார்ச் 6

என் வானவில்லில் ஏழுநிறங்கள் இல்லை - ஆதவன் தீட்சண்யா








கேரள சாகித்ய அகாதமி வெளியிடும் "சாகித்ய சக்ரவாளம்" 2023 மார்ச் இதழுக்காக என்.ஜி.நயனதாரா  எடுத்த நேர்காணல். மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் : ஷாபி செருமவிலாயி

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வை கவிதையின் ஊடாக வெளிப்படுத்தும் தமிழ் மரபு சமகால கவிதையிலும் தொடர்கிறது?  

சகமனிதர்களின் அவலங்களிலோ சமூக நடப்புகளிலோ கண்பதித்தால் ஒரு பூ மலர்ந்திடும் தருணத்தினைக் காணும் இன்பத்தைத் துய்க்க முடியாமலே போய்விட நேரும் என்று மழுப்புகிற தூய(?) கவிஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது தான் தமிழ்க்கவிதை. மெய்யுலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மெய்நிகர் உலகில் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளிடம் உரையாடுகின்ற தற்காலத்தவருக்கு இவர்கள்தான் முன்னோடிகளாக இருக்கக் கூடும். உள்முகத் தேடல் என்று தமக்குள்ளேயே புதையும் இந்தக் கவிதைப்பரப்பினுள் உழைப்பு, உற்பத்தி, விநியோகம், அதிகாரம் சார்ந்து நிலவுகின்ற ஏற்றத்தாழ்வினையும் அதை நிலைநிறுத்தும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தும் கருத்தியல்களையும் எதிர்க்கின்ற பாரம்பரியம் விதிவிலக்கானதொரு சிற்றோடையாக இருந்து வந்திருக்கிறதேயன்றி அது ஒருபோதும் மைய நீரோட்டமாக இருந்ததில்லை. மதிக்கத்தக்கச் சிந்தனையாளர்களும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களுமான எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் கூட அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளியான “கடைசி வானத்துக்கும் அப்பால்” என்கிற கவிதைத்தொகுப்பின் முன்னுரையில் இதே மதிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.  

நம் காலத்தின் எதிர்ப்புணர்வு, அதிகாரத்திலுள்ள பார்ப்பனீயத்தையும் கார்ப்பரேட்டியத்தையும் (நான் இந்தக் கூட்டணியை பார்ப்பரேட்டியம் என்கிறேன்; ஆனந்த் டெல்டும்ப்டே பாசிஸம்+ என்கிறார்) அம்பலப்படுத்துவதிலும் அவற்றை முறியடிக்க மக்களை கிளர்ந்தெழச் செய்வதிலும் முனைப்பு கொண்டுள்ளது. மக்களை மனிதநிலையிலிருந்து பலபடிகள் கீழே தாழ்த்தி வைத்திருக்கும் இவ்விரண்டுக்கும் நேரடியான மாற்று சமத்துவம் தான். சமத்துவம் என்கிற ஆக நவீனமான கருத்தாக்கத்தை சொந்த வாழ்வியல் தேவையிலிருந்து கோருகின்ற சமூக அடுக்கினரிடமிருந்து வெளிப்படும் கவிதைகள் தன்னியல்பாகவே இந்தச் சமூக அமைப்புக்கும் நடப்புகளுக்குமான எதிர்ப்புணர்வை இன்றளவும் கொண்டுள்ளன. 

உங்களது கவிதையொன்று மண்ணுக்கும் சாதியுண்டு என்று முடியும். இன்னும் எத்தனை காலத்திற்கு கவிதை, போராட்டங்களுக்குக் குரல் கொடுப்பதாக இருக்குமென நினைக்கிறீர்கள்?  என்றாவதொரு நாளின் முடிவில் வெளிச்சம் வருமா? 

மனிதகுலத்தின் அடிப்படை வாழ்வாதாரமான நிலத்தை பூமித்தாய் என்றும் புண்ணிய பூமி என்றும் போற்றுகிறார்கள். ஆனால் குறிப்பிட்டதொரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் சாதிதான் அந்த நிலத்திற்கும் அதன் மக்களுக்கும் தெய்வங்களுக்கும் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்குமான மதிப்பைத் தீர்மானிக்கிறது. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். ஆனால் குடிநீர்த்தொட்டியில் மலத்தைக் கரைப்பார்கள் அல்லது செத்த நாயைத் தூக்கிவந்து குடிநீர்த்தொட்டிக்குள் வீசிவிட்டுப் போவார்கள். தீட்டு X புனிதம், உயர்வு X தாழ்வு, ஒதுக்குதல் X ஒதுங்குதல் என்னும் சாதியக் கருத்தாக்கம் இயற்கை வளங்களையும் அன்றாட வாழ்வின் அனைத்து நடத்தைகளையும் முடிவுகளையும் பாகுபடுத்துகிறது. இந்தப் பாகுபாட்டின் கொடூரத்திற்கு நேரடியாய் ஆளாகியிருக்கிற அல்லது இப்போதில்லாவிடினும் எப்போதேனும் ஆளாக நேரிடும் என்கிற அச்சத்தில் மனவுளைச்சலுக்கு ஆளாகிற எனது கவிதையின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும்? என் முன்னே நீட்டப்படும் குவளையில் உள்ள தண்ணீரில் மலம் கலந்திருக்காது என்று எந்த நம்பிக்கையில் நான் குடிக்கமுடியும்? இந்த இழிநிலையை அப்படியே வைத்துக்கொண்டு வாழ்க்கை உன்னதமானது என்றோ மனிதர்கள் மகத்தானவர்கள் என்றோ நான் எப்படி எழுதுவேன்? இந்த அவலத்திலிருந்து கடைசி மனிதரையும் விடுவிப்பதற்கான போராட்டம் நீடிக்கும் வரை, அந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கிற - அதன் நியாயத்தைப் பரந்த சமூகத்தின் முன்வைத்து உரையாடுகிற பணியை விடவும் மேலான நோக்கம் எதுவும் எனது கவிதைக்கு அவசியமில்லையெனல் கருதுகிறேன்.   

இந்திய / தமிழ்ச்சமூகத்தை மனிதாயமானதாகவும் ஜனநாயகப் பண்புடையதாகவும் தகுதிபடுத்தி ஒளிதுலங்கும் நற்காலத்திற்கு இட்டுச்செல்லும் வரலாற்றுக்கடமை தலித்துகள் பெண்கள் மற்றும் உழைப்புச்சக்தியைத் தவிர வேறொன்றையும் உடைமையாகக் கொண்டிராத உழைப்பாளி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கு குறைவான எதுவொன்றிலும் நிறைவடைய முடியாத அவர்கள் தமது நெடிய போராட்டத்தினூடாக ஈட்டிவரும் வெற்றியினால் தான் இந்தியாவுக்கு உலக சமூகத்தின் முன்னே கொஞ்சநஞ்ச மரியாதையாவது மிஞ்சியிருக்கிறது. வரலாற்றுக் கட்டாயம் அல்லது தவிர்க்கவியலாத தன்மையினால் தமது வாழ்நிலையில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்கிற கோட்பாட்டு தர்க்கங்களுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமல் இந்த நாட்டை அவர்கள் தமது இலக்கை நோக்கி இழுத்துப்போவதில் அங்குலம் அங்குலமாக முன்னேறி வருவதைத்தான் நீங்கள் குறிப்பிடும் ஒளியாக விளங்கிக்கொள்கிறேன். அந்த ஒளி என்றோ ஒரு நாளின் முடிவில் காணக்கூடியதாக அல்லாமல் அன்றாடம் சுடரக்கூடியதாய் இருக்கிறது.

 உங்களது கவிதைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

யாவருக்கும் பிடித்தமான, பொத்தாம்பொதுவான கவிதைகளை எழுதத் தெரியாதவனாக இருப்பது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பொம்மைக்கண்களைக் பொருத்திக் கொண்டவன் போல் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எல்லாவற்றையும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க ஏலாமல் தத்தளிப்பவன் நான். என்னை சமநிலை தவறச் செய்கிற அல்லது எழுதத் தூண்டுகிற புறநிலை  விசயங்களிலிருந்து என் சொந்த அனுபவத்துடன் இழைகிற அல்லது அவ்வாறு உட்கிரகித்துக்கொள்ள முடிகின்றவற்றை மட்டுமே எழுதுகிறேன். எனது கவிதையின் மூலகங்கள் யாவும்  எனது மொழியிலிருந்தும், எனது நிலப்பரப்பிலிருந்தும், எனது சக மாந்தர்களிடமிருந்தும் எனது வாழ்நிலையிலிருந்தும் பெறப்பட்டவை. ஆகவே, என்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள அல்லது இயல்புக்குத் திருப்பிட நான் எழுதிக்கொள்ளும் கவிதை எனக்கு மட்டுமேயானதாக இருக்கமுடியாது, இருக்கக்கூடாது எனக் கருதுகிறேன். அந்தக் கவிதையில் உங்களில் யாரேனும் உங்களைக் காணமுடிந்தால் என் கவிதையின் இலக்கு அதுவேயென பலம் பெறுகிறேன். 

எப்படி எழுதத் தொடங்கினீர்கள்?

உண்மையில் இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி: நான் கருவிலே திருவுடையவன் அல்ல. எனது பேனா எந்த தெய்வத்தினாலும் அருளப்பட்டதல்ல. மாணவப்பருவத்தில் எழுதப்பட்ட என் முதல் கவிதையின் முதலடி அசரீரியிலிருந்து பெறப்பட்டதல்ல. என் கவிதையின் பாடுபொருளும் மொழியும் வாசகர்களும் மனிதர்கள் தான். 

ஊரக வாழ்வும் நகர்ப்புற வாழ்வும் ஒன்றையொன்ரு எதிர்க்கும் இருமைகளாக உள்ளன. நகரமயமாக்கம் சமுக வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பென்னம்பெரிய கட்டிடங்களும், அகன்ற சாலைகளும் வெள்ளமெனப் பொழியும் விளக்கொளியும், வாகனங்களும், தகவல் தொடர்பும், வணிக வளாகங்களும் அவற்றில் குவிந்திருக்கும் பொருட்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், குடிநீர் இணைப்புகளும் தொழிற்கூடங்களும் கல்விச்சாலைகளும் மருத்துவமனைகளுமாக நகரங்கள் விரிவடைந்த வண்ணமுள்ளன. ஐ.நா. சொல்லும் ஒரு கணக்கின்படி இந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள 475 பெருநகரங்களிலும் 7935 சிறு நகரங்களிலும் 2030ஆம் ஆண்டில் 40 கோடிக்கும் மேலானவர்கள் வசிப்பார்கள் என கணிக்கப்படுகிறது. 

இந்த நகரங்கள், கிராமங்களுக்குக் கிட்டாத பல வசதி வாய்ப்புகளையும்  உள்கட்டமைப்பினையும் பெற்றிருந்தபோதிலும் இவற்றைப் பகிர்ந்து கொள்வதில் சாதி, மதம், பாலினம், வர்க்கம் சார்ந்து ஒவ்வொரு நகரமும் தன்னளவில் திட்டவட்டமான பாகுபாடு நிறைந்ததாக உள்ளது. காலநிலை மாற்றங்கள், வேளாண்மை நசிவு, கடன்சுமை, சாதிக்கொடுமை உள்ளிட்ட பல காரணங்களால் கிராமங்களிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு வருகின்றவர்கள் மீது (ஆண்டுதோறும் சுமார் 2 கோடி பேர்) இந்தப் பாகுபாடு மேலும் மூர்க்கமாக வெளிப்படுகிறது. 

வாழ்வாதாரம் தேடியலையும் உள்நாட்டு இடப்பெயர்வுகளை, நகரங்களை ஆக்கிரமிக்கும் சதியாகவும் சட்டவிரோதமாகவும் பார்க்கும் குரோத மனப்பான்மை நீதிமன்றங்களையும் பீடித்துள்ளது.  இட நெருக்கடி, வளங்களின் பற்றாக்குறை, சூழல் மாசு போன்ற பிரச்னைகள் இல்லாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய திட்டமிடலுடன் நகரங்களை உருவாக்குகிற – விரிவாக்குகிற அணுகுமுறை இங்கு ஏட்டளவிலானவை. 

உலகமயமாக்கலுக்குப் பிந்தைய இந்த முப்பதாண்டுகளில் கல்வி, பொது சுகாதாரம், மருத்துவம், குடிநீர் விநியோகம், மின் விநியோகம், கழிவுநீர் அகற்றம், பொதுப்போக்குவரத்து ஆகியவற்றை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசுகள் வெளியேறுவதுடன் இப்பொறுப்புகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் வாழ்க்கைச் செலவினம் கூடி நகரவாசிகளின் வாழ்க்கைத் தரம் குறைகிறது. அதிலும் குறைந்த வருமானமுள்ளவர்களின் துயரம் சொல்லி மாளாதது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, நகரங்களின் பெரும்பாலான மனிதர்கள் – குறிப்பாக மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் அப்படியொன்றும் கிராமத்தார்களைவிட மேம்பட்ட நவீனமான சிந்தனை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் நகரத்தின் எல்லா வாய்ப்புகளையும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் பயன்படுத்தி நிலவுடைமைச் சமூகத்தின்- முடிந்தால் அதற்கும் முந்தைய காலக்கட்டங்களின் மதிப்பீடுகளை உள்வாங்கிய நகரங்களைத்தான் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது வீடுகளில் குடும்ப ஜனநாயகம் பேணப்படுவதில்லை. தனது அண்டை வீட்டில் வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர் வசிப்பதை சகித்துக் கொள்ள மறுக்கிற சராசரி இந்தியரிலிருந்து நகரவாசிகள் எவ்வகையிலும் வேறுபட்டவர்களாக இல்லை. உணவு, வழிபாடு, நம்பிக்கைகள் சார்ந்து சகமனிதர்களை ஒதுக்குவதிலும் இதே நிலை தான். பெருவீதமான திருமணங்கள் சொந்தசாதிக்குள் மட்டுமே நடக்கின்றன. 1970ஆம் ஆண்டு நடந்த மொத்த திருமணத்தில் 5% மட்டுமே சாதிக்கலப்புத் திருமணங்கள் என்றால் அது ஒரு சதவீதம் அதிகரித்து 6% ஆவதற்கு 42 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. பெண்கள் மீதும் தலித்துகள் மீதும் 15 நிமிடங்களுக்கு ஒரு வன்முறை நிகழ்த்தப்படும் தேசிய சராசரியிலிருந்து நகரவாசிகள் வேறுபட்டிருப்பதாக சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் ஒடுக்குமுறையின் வடிவங்களில் நுட்பங்கள் கூடியிருக்கலாம். 

 தமுஎகச செயல்பாடுகள், அமைப்பின் அக்கறைகள் பற்றி?

1975 ஆம் ஆண்டு ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட அவசரநிலைக் காலத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்து உருவான அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). உருவான காலந்தொட்டு சமூகத்தின் மதிப்புமிக்க கலை இலக்கிய ஆளுமைகளும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இவ்வமைப்பில் இணைந்து பணியாற்றிவருகிறார்கள். மூன்றாண்டுகளுக்கொரு முறை கிளை முதல் மாநிலம் வரை ஜனநாயக முறைப்படி மாநாடுகளை நடத்தி செயல்திட்டங்களை உருவாக்கிக் கொள்கிறோம். தற்போது 22 ஆயிரம் பேர் உறுப்பினர்கள். 

சமூக அரசியல் பண்பாட்டு வெளிகளில் முனைப்படைந்து வரும் பிரச்னைகளில் தலையிடுவது, விவாதங்களின் வழியே கருத்துருவாக்கம் செய்வது, கலை இலக்கிய முகாம்களையும் நூல் விமர்சனக் கூட்டங்களையும் புத்தகக் கண்காட்சிகளையும் நாடகவிழாக்களையும் நடத்துவது என எமது செயல்பாடு தொடர்கிறது. தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்து மேடையேற்றுகின்ற கலை இரவு என்கிற வடிவம் தமுஎகசவின் கொடையாகும். ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவையும், குறும்பட – ஆவணப்பட விழாவையும் நடத்தி வருகிறோம். ஒவ்வோராண்டும் சிறந்த நூல்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் ஆளுமைகளுக்குமான 15 விருதுகளும், சிறந்த 3 திரைப்படங்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

சமூகம் பலமுனைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் கருத்தியல் வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளுகிற வலதுசாரி கருத்தியல் மேலெழுந்து வரத்தொடங்கிய காலம் முதலே அதன் வெறுப்பரசியலையும் பிளவுவாத அபாயத்தையும் எதிர்த்து பல வடிவங்களில் பரப்புரை செய்து வருகிறோம். தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கையாக முன்வைக்கப்பட்ட நாள்முதலே அதற்கெதிராக மாநில அளவில் இயக்கங்களையும் கல்வி உரிமை மாநாட்டையும் நடத்தி உண்டாக்கிய அழுத்தம் மாநிலத்திற்கென்று தனியாக கல்விக்கொள்கையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் திருத்தச் சட்டம், திரைப்பட தணிக்கைச் சட்டம், பீமா கோரேகான் பொய்வழக்கு ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களிலும் எம்மை இணைத்துக் கொண்டிருக்கிறோம்.  

கொரானா பொதுமுடக்கக்காலம் எங்களது செயல்பாடுகளை பன்மடங்காக்கியது. இணைய வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தினோம். வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புறக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பாதுகாத்திட எம்மாலான அனைத்தையும் செய்தோம். இணையவழியில் திரைப்பள்ளியையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நாடகப் பள்ளியையும் நடத்தினோம். தற்போது தஞ்சாவூரில் நிரந்தர திரைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்த் திரையுலகில் கவனம் பெற்றுள்ள ஆளுமைகள் பலரும் இதன் ஆசிரியர்களாக பங்கேற்கின்றனர்.  

வீடுதோறும் உறுப்பினர், வீதிதோறும் கிளை என்கிற இலக்குடன், தமிழ்நாட்டில் தமுஎகச இல்லாத ஊரே இல்லை, நிகழ்ச்சி நடக்காத நாளே இல்லை என்கிற அளவுக்கு எமது செயல்பாட்டை விரிவுபடுத்திவருகிறோம். 

தமிழ்நாட்டில் புத்தகங்களின் பரவல் எவ்வாறுள்ளது?

பெரும்பாலான தமிழர்களின் வீடுகளுக்குள் முதலில் வந்த அச்சடிக்கப்பட்ட காகிதம் பஞ்சாங்கம் அல்லது அரசுக்கு வரியோ வட்டியோ செலுத்திய ரசிதுகளாக இருக்கக் கூடும். எழுதப்பட்ட முதல் காகிதமாக ஜாதகம் அல்லது நில ஆவணங்கள் இருக்கலாம். (விதிவிலக்காக சிலரது வீடுகளில் அரிதான ஓலைச்சுவடிகள் இருந்திருக்கின்றன). இவற்றுக்கு அடுத்தக்கட்டத்தில் வந்துசேர்ந்தவை பாடப்புத்தகங்கள். இவையல்லாத வேறு புத்தகங்களை நூலகத்தில் வேண்டுமானால் பார்க்கலாமேயொழிய அவை வீடுகளுக்குள் நுழைவதற்கான சூழல் சமீபகாலம் வரை இல்லை. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் கல்வியும் வருமானமும் ஜனநாயகப்படத் தொடங்கியதன் தொடர்ச்சியில்தான் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்களின் பரவலாக்கமும் நடைபெறத் தொடங்கியது. அதாவது சொந்தமாக பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கும் சக்தியுடைய ஒரு மக்கள் தொகுதி இங்கு உருவானது. அவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கியதில் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய  இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு. சோவியத் இலக்கியங்கள், பகுத்தறிவு நூல்கள்,  விடுதலைக் கருத்தியல்கள் என இந்த இயக்கங்கள் திறந்துகாட்டிய உலகத்தின் விசாலத்தில் உருவான தலைமுறையினர் தான் தமிழ்ச்சமூகத்தின் அறிவியக்கத்திற்கு முன்னோடிகளானார்கள். 

பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் பெருநகரங்களில் மட்டுமே புத்தகச் சந்தைகளை நடத்திவந்த நிலையில் தமுஎகச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற இயக்கங்கள் அடுத்த நிலை நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் தமது சொந்த வலுவுக்கேற்றபடி புத்தகச்சந்தைகளை கொண்டுசேர்த்தன. கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எமது அமைப்பு வெளியிட்ட “அரசியல் கட்சிகளுக்கு கலை இலக்கியச் சமூகத்தின் கோரிக்கை சாசனத்தில்”, குறைந்தபட்சம் மாவட்டத் தலைநகரிலாவது மாநில அரசே செலவழித்து புத்தகச்சந்தைகளை நடத்தவேண்டும் என்று கோரியிருந்தோம். இது வேறு பலரது கோரிக்கையும் கூட. இப்போதைய தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக்கண்காட்சியை நடத்தத் தொடங்கியுள்ளது. முதன்முதலாக  இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியினையும் சிறப்பாக நடத்தியுள்ளது. ஆண்டொன்றுக்கு சராசரியாக நூறு கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்களை வாங்கும் தமிழ்நாட்டவர்கள் அவற்றை படித்து தமது கருத்துலகத்தை செம்மைப்படுத்திக் கொள்வதற்கான தனித்த ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. 

நாளொன்றுக்கு சராசரியாக 4.15 மணி நேரம் செல்போன் மூலமாக சமூக ஊடகங்களிலும் இன்னபிற இணையதளங்களிலும் உலவும் இந்தியர்கள் / தமிழர்களிடையே அவர்கள் அணுகத்தக்க வடிவங்களில் புத்தகங்களை வெளியிடுவது அவசியமெனத் தோன்றுகிறது. 

உங்களது எழுத்தின் அரசியலை எப்படி தொகுத்துப் பார்க்கிறீர்கள்?

மாணவப்பருவந்தொட்டு என்னை பிணைத்துக்கொண்டுள்ள இடதுசாரி இயக்கத்தின் கருத்தியலும் எனது சொந்த முயற்சியில் நான் கற்றுவருகிற அம்பேத்கரியமும் பெரியாரியமும் என்னை வழிநடத்துகின்றன. கூருணர்ச்சியுடனும் தன்மதிப்புடனும் வாழ்வதற்கான உள்வலுவை அவற்றிடமிருந்தே பெறுகிறேன். என் காலத்திற்கு முன்பாக நடந்துமுடிந்துவிட்ட நிகழ்வுகள் அல்லது சொல்லப்பட்டுவிட்ட கருத்துகளில் நான் தலையிடும் சாத்தியமில்லை. எனவே அவற்றை அந்த காலச்சூழலுக்குள் வைத்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவற்றின் மீது எனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கிறேன். சமகால நடப்புகளை உன்னிப்பாக கவனித்து சாத்தியமானவற்றில் நேரடியாகவும் எழுத்தின் வழியாகவும் பங்கெடுக்கிறேன். ஒரு தனிமனிதனாக என்னால் மாற்றியமைக்க முடியாத எதார்த்தங்களை எனது புனைவுகளுக்குள் மாற்றியமைக்கிறேன். புனைவில் முன்வைக்கும் மாற்றங்களை நடப்புண்மையாக மாற்றுவதற்கு தனிமனிதனாகவும் கூட்டாகவும் என்னாலானதைச் செய்துகொண்டுமிருக்கிறேன்.  

வாழ்வின் மூர்க்கங்களையும், அதிகாரத்தின் அட்டூழியங்களையும், கண்காணிப்பினால் உண்டாகும் பதற்றத்தையும், சூழலைச் சகித்துகொள்ளவியலாத கணத்தில் தோன்றும் ஆவேசத்தையும் எனக்குள்ளான முரண்களையும் தொடர்ந்து எழுதுவதை எனது கடப்பாடாக ஏற்றுள்ளேன். 

 புகைப்படம்: பிரியா கார்த்தி 

 

 


வியாழன், ஜனவரி 5

களத்தில்… - ஆதவன் தீட்சண்யா

நிமித்தம் பாராமலும்
நற்சொல் கேளாமலும் 
நெடுங்காலமாய்
நீ தொடுத்துவரும் போரினால் 
சமத்துவத்திற்கான பாதையில் 
முன்னகரும் நான் 
புறங்காட்டப்போவதில்லை
நான் 

உனது படைக்கலமனைத்தையும் முறித்துப்போட்டு
பாசறையை வெறுங்கூடாரமாக்கிய நாளில்
நீயோ
பீயை அள்ளிக்கொண்டு வருகிறாய்

ஆயுதம் எதுவென்றறியாத 
உன்னுடன் போரிடுவது அவமானம்
உன்னை
எதிரியென ஏற்குமளவு  
நாணமற்றுப் போகவில்லை நான்

நாசினியால் 
கைகளைக் கழுவித் தூய்மையாகு 
மலத்தை நினையாமல் 
சோறுண்ணப் பழகு
குடிநீரைப் பாழ்படுத்தும் 
குணக்கேடரல்ல யாம்
தைரியமாய் தண்ணீர் குடி
மலையேறி துவண்டிருக்கும் 
உன் சாமிக்கும் 
ஒரு முழுங்கு கொடு

இன்று போய் நாளை 
எதிரியாகும் தகுதியுடன் 
திரும்பி வா
எதிரியாவதற்கு 
நீ மனிதராக வேண்டும்
நான் காத்திருக்கிறேன். 

திங்கள், ஜனவரி 2

லெனின் இல்லாத இலங்கை… - ஆதவன் தீட்சண்யா


இலங்கை மலையகத்தமிழர் ஒருவரோடு எனக்கு முதல் நேரடித்தொடர்பு என்றால் தோழர் ஜோதிகுமாருடன் தான் என்பதாக நினைவு. இந்தியா வந்திருந்த அவர் எழுதிக்கொண்டிருக்கும் எங்களில் சிலரை சவுத் விஷன் பாலாஜி மூலமாக சந்தித்துப் பேச ஏற்பாடாகியிருந்தது. இலக்கியத்தின் நோக்குகள் போக்குகள் பற்றி நீண்ட அந்த உரையாடலில், “மார்க்ஸை பலரும் படித்தார்கள். ஆனால் லெனின் என்றொருவர்  படித்ததும் அவரது எழுத்துக்கள் பெரும் புரட்சிக்கானதாகி விட்டதல்லவா? பின்னாளில் வரப்போகும் லெனின் என்கிற ஒரேயொரு வாசகருக்காகத்தான் மார்க்ஸ் எழுதிவிட்டுப்போனார் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்தும் தேவைப்படும், எழுதுங்கள்..” என்று எங்களிடம் ஜோதிகுமார் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. சொன்னதுதான் நினைவிலிருக்கிறது, அவர் கேட்டுக்கொண்டவாறு அந்தச் சந்திப்பில் பங்கெடுத்த நான் எழுதவில்லை- வேறு யாரும் எழுதினார்களா என்றும் தெரியவில்லை.

இதனிடையே அறிமுகமான தோழர் ந.இரவீந்திரன் புதுவிசை இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் வழியாக அறிமுகமாகிய அபூர்வமான தோழர்தான் லெனின் மதிவானம். ந.ரவீந்திரனின் இந்துத்துவம் இந்து சமயம் சமூக மாற்றங்கள் என்ற நூல் மீது புதிய சிந்தனை கலை இலக்கியப் பேரவை நடத்திய கருத்தாடல் நிகழ்வுகளில் அவர் முன்வைத்த கருத்துகளை எனக்கு அனுப்பியிருந்தார். விசயங்களை மாறுபட்டு பார்க்கும் கண்ணோட்டம் அவரிடம் இருப்பதை உணர்ந்துகொள்ள அது போதுமானதாயிருந்து. அதன் தொடர்ச்சியில்தான் புதுவிசையிலும் கீற்று.காம் இணையதளத்திலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அவ்வகையில், கல்வியமைச்சகத்தின் தலைமை அலுவலர்களில் ஒருவராக தனது பணிச்சுமைக்கிடையிலும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதிவந்தார்.

புலம்பெயர் இலக்கியம் – விவாதத்திற்கான புள்ளிகள் என்கிற எனது கட்டுரையைப் படித்ததுடன் அதை தனது கொழுந்து இதழிலும் மறுபிரசுரம் செய்திருந்த தோழர் அந்தனி ஜீவா, இந்தியா வந்திருந்தபோது என்னை தஞ்சையில் வைத்து சந்தித்து இலங்கை மலையகத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். வரவழைப்பதற்காக அவர் அனுப்பியிருந்த இலங்கை மத்திய மாகாண சாகித்ய விழா அழைப்பிதழ் ஒன்றை வைத்துக்கொண்டு கிளம்பிப்போய் ஹட்டன் நகரில் இருந்த ஜோதிகுமார் இல்லத்தில் தங்கியிருந்த எட்டுநாட்களில் (2009 அக்டோபர் 8-15) தான் தோழர் ந.இரவீந்தரனுடன் வந்து தோழர் லெனின் மதிவானம் நேரில் அறிமுகமானார். அவரது பெயரைப் போலவே தோற்றமும் கம்பீரமானது.  டிம்புல்ல வீதியில் என நினைவு- அவரது வீட்டிற்கு அழைத்துப்போனார். அம்மாவும் பிள்ளைகளும் பரஸ்பரம் தோழர் என்றே அழைத்துக்கொள்ளும் அதிசயத்தை நான் அங்குதான் பார்த்தேன். வீட்டிற்கு வரும் எல்லோரையுமே தோழர் என்றே விளிக்கும் சூழலில் வளர்ந்த- வாழ்கிற எங்களுக்கு, எங்களுக்குள் தோழர் என்பதற்குமப்பால் வேறு உறவுமுறையைச் சொல்லி விளிக்கும் அவசியமே எழவில்லை என்று அம்மாவும் மகனும் சொன்ன அந்த நொடியின் ஆச்சர்யம் எனக்கு இன்னமும் நீங்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தளவுக்கு செல்வாக்கு செலுத்திய காலமொன்று இருந்திருக்கிறது.


பின்னொரு நாள் ஹைலெண்ட் ஸ்கூலுக்கும், அவரது பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக உழைத்த- அவர் தனது பால்யத்தைக் கழித்த கேஸில்ரீ எஸ்டேட்டுக்கு அழைத்துப் போனார் லெனின். அங்கு சென்றதுமே அவர் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டவராய் இருந்தார். இங்கிருந்த ஒரு சாமானிய தோட்டக்காட்டானின் பிள்ளைகளாகிய நானும் தம்பியும் ( தம்பி – ட்ராட்ஸ்கி மதிவானம். அப்போது நுவரேலியாவில் நீதிபதியாக இருந்தாரென நினைவு. தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி) இன்றைக்கு நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறோம் என்றால் அது கடந்த 200 ஆண்டுகளாக மலையகத்தமிழர்கள் நடத்திய போராட்டங்களினாலும் தியாகங்களினாலும் தான் என்று சொந்த வாழ்வை வரலாற்றுக்குள் பொருத்திப் பேசும்போது அவர் குரல் கம்மியது. கூலியுயர்வுக்காக, குடியிருப்புக்காக, கண்ணியமான பணியிடச் சூழலுக்காக, குழந்தைகளின் கல்விக்காக எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமைக்காக என்று இடையறாது போராடித்தான் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இன்றைக்கு மலையகத் தமிழர்கள் என்கிற ஒரு தேசியமாக உருக்கொண்டுள்ளார்கள் என்று ஜோதிகுமார், ஜேம்ஸ், மகேந்திரன், முத்துலிங்கம் போன்ற தோழர்கள் சொல்லியிருந்த வரலாற்றை மேலும் அடர்த்தியாக்குவதாய் இருந்தது அவரது பேச்சு. தோட்ட வாழ்வின் கொடூரங்களுக்கிடையிலும் தொழிலாளர்களிடமிருந்த அன்னியோன்னியம், கலையுணர்ச்சி, போர்க்குணம், தோழமை, தொழிற்சங்கங்களின் துரோகம் என்று சாப்பாட்டு மேசையிலும் பேசிக்கொண்டேயிருந்தார். போராட்ட குணம் நிறைந்த தனது பெற்றோர் குறித்து அவருக்கு அப்படியொரு பெருமிதம்.

புனைவிலக்கியத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்வனுபவமும் கண்ணோட்டமும் மொழிவளமும் சொல்திறமும் கொண்டவரான லெனின் ஏனோ அதில் நாட்டம் காட்டாமல் ஆய்வுப்புலத்தில் தன்னை பொருத்திக்கொண்டார். மதிக்கத்தக்க ஆய்வாளரான தோழர் ரவீந்திரனுடனான அணுக்கம் அப்படியொரு ஈடுபாட்டை அவருக்குள் உருவாக்கியிருக்கக்கூடும். பாரதி, கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன், டானியல், டொமினிக் ஜீவா போன்றோரது எழுத்துகளில் நுணுகிய வாசிப்பும் வாசிப்பது பற்றி உடனே எழுதிவிடும் பழக்கமும் அவருக்கிருந்தது.  எனது சிறுகதைகள் குறித்தும்கூட பொருட்படுத்தும்படியான மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். அவ்வாறாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பினைக் கொண்டுவரவிருந்த நிலையில் அந்தக்கட்டுரைகளின் தேர்வு குறித்து என்னுடைய கருத்தினை கேட்டனுப்பியிருந்தார். படித்துவிட்டு நான் சொன்ன விமர்சனங்களையும் திருத்தங்களையும் மிகுந்த பொறுமையுடன் உள்வாங்கி அவற்றை உரியமுறையில் திருத்தியமைத்தார். அந்தளவுக்கு அவர் வெளிப்படைத்தன்மையும் விமர்சனங்களுக்கு செவிசாய்க்கும் பண்பும் கொண்டவராயிருந்தார்.

புதிய அமைப்பு முயற்சிகள், இணைய இதழ்கள், இலக்கிய நிகழ்வுகள் என்று இடையறாது இயங்கும் லெனினுக்கு நட்புவட்டம் பெரியது. மலையகம் தொடங்கி கொழும்புவரையுமாக – தெற்கே பதுளையிலும்கூட- அவர் பலருக்கும் நெருக்கமானவராய் இருந்தியங்கினார். திலகர் போன்ற தோழர்களின் அறிமுகம் அவரால்தான் எனக்கு கிடைத்தது.

லெனினுக்கிருந்த பரந்த இலக்கியத் தொடர்பின் தாக்கம் இலங்கையின் தமிழ்ப்பாடநூல் உருவாக்கத்தில் வெளிப்பட்டது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கலைஞர்கள் பலரது ஆக்கங்களை பாடநூல்களில் அறிமுகம் செய்வித்தார்.

நான் இரண்டாம் முறை இலங்கை சென்றபோது லெனின் வீட்டில் தான் நானும் ரவீந்திரனும் தங்கினோம். காலனியாட்சியாளர்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்த்திக் கொண்டுபோகப்பட்ட தமிழர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க ஏதாவது செய்தாக வேண்டும் தோழர் என்றார்.  ஆனால் அதுசார்ந்து ஏதும் செய்தாரா என்று தெரியவில்லை.

மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியேயான உரையாடல்களை,   இந்தியாவுக்கு வரப்போவதாக  சொல்லித்தான் முடிப்பார். இடையில் உடல்நலம் குன்றி வெளியுலகத் தொடர்புகளற்றவராக அவர் முடங்கியிருக்கும் விசயமறியாமல் - இரண்டொருதடவை பேச முயற்சித்தபோது பதிலற்ற நிலையில்- வேலைப்பளுவினால் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார் போல என்று நானாக நினைத்துக்கொண்டேன்.  ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருப்பதாக தோழர் பபி தெரிவித்தபோது மீண்டுவந்துவிடுவார் என்று நம்பினேன். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சற்றே தேறி நடமாடத் தொடங்கியுள்ளதாக செய்தி கிட்டியபோது வலுப்பட்ட அந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டு லெனின் மரணத்தைத் தழுவிவிட்டார்.

சகோதரனை – தோழனை இழந்திருக்கும் துயரத்தைப் பகிர ட்ராட்ஸ்கி அழைத்திருந்தார். தனது மகளுக்கு மார்க்ஸ் தீட்சண்யா என்று பெயரிடுமளவுக்கு என்மீது அன்புகாட்டும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்ல இலங்கைக்கு வருவதற்கு மனம் பறக்கிறது, வருவேன்.

நன்றி: லெனின் மதிவானம் : இளமை புதுமை இனிமை 


புதன், நவம்பர் 9

கண்களைப் பறித்துவிட்டு கண்ணாடி மாட்டுவதா? -ஆதவன் தீட்சண்யா

“ஒருவருக்கு வாழ்நாள் நெடுகிலும் பிரிக்கவே முடியாத துணையாக அல்லது நட்பாக இருக்கக்கூடியது அவரது மொழி மட்டுமே. அது அவரது கண்ணியத்தின் பிரிக்கமுடியாத அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின், சமூகத்தின் அல்லது நாட்டின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்துவதும் மொழியே…” என்று தொடங்குகிறது அலுவல்மொழிக்கான நாடாளுமன்றக்குழுவை அமைப்பது குறித்த இந்திய ஒன்றிய அரசின் விளக்கக்குறிப்பு. இந்த மட்டிலும் சரிதான். “ஒரு நாடானது அதன் தேசியக்கொடி, தேசியகீதம், தேசியமொழியின் வழியாகவே அங்கீகாரம் பெறுகிறது. ஆகவே நமக்கொரு தேசியமொழி – அலுவல் மொழி- தொடர்புமொழி தேவை” என்று ஏதோ நாட்டுநலனில் அக்கறை கொண்டதுபோல பேசும் அக்குறிப்பு, “இந்தியாவின் புராதனப்பெருமைகளின் உறைவிடமாகவும் இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலவளமாகவும் இருப்பது சமஸ்கிருதம், சமஸ்கிருதத்திற்கு நெருக்கமாய் இருப்பது இந்தி. ஆகவே இந்திக்குதான் தேசியமொழியாகும் தகுதி இருக்கிறது” என்கிறது. 

அரசதிகார கட்டமைப்பிற்குள் ஊடுருவியிருக்கும் ஆரிய மேன்மைவாதிகள், இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு மிகவும் பிற்காலத்தில் வந்துசேர்ந்த ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளெனத் திரித்துக் காட்டுவதற்காக ஆரியர்களின் சமஸ்கிருதத்தை இந்தியப் புராதனப் பெருமைகளின் உறைவிடமாகவும் இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலவளமாகவும் காட்டும் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள் என்பதற்கு 2009-2014 காங்கிரஸ் ஆட்சியில் வெளியான இந்தக் குறிப்பு ஒரு சான்று. இதே பொய்யைத்தான் 2019ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். மோகன்பகவத் “சமஸ்கிருதம் இல்லாமல் இந்தியாவை  முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. இந்தியாவின் பழங்குடி மொழிகள் உட்பட இந்தியாவின் மொழிகள் அனைத்திலுமே 30% சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை” என்று புளுகியிருக்கிறார். 

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் தெரிந்த 26ஆயிரம் பேருக்கு மட்டுமே தூர்தர்ஷனில் சமஸ்கிருத செய்தியறிக்கை வாசிப்பது, கல்வியின் எல்லா மட்டத்திலும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தும் படியாக தேசிய கல்விக்கொள்கையை வகுத்தது, மாணவர்களுக்கு சமஸ்கிருத சுலோகங்களில் போட்டி நடத்துவது, சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களை உருவாக்குவது, சமஸ்கிருதப் பரவலுக்கு பெருந்தொகையை ஒதுக்குவது என  சமஸ்கிருத்தை சுமந்தலையும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி இந்தித்திணிப்பில் ஈடுபடுவதற்கு காரணம் இல்லாமலில்லை. சமஸ்கிருதத்தை பொதுமொழியாக- தொடர்புமொழியாக ஆக்குவதற்கு இசைவான சூழல் உருவாகும் வரை இடைக்கால ஏற்பாடாக இந்தியை முன்னிறுத்துவது (As a solution to the problem of ‘lingua franca, till the time sanskrit takes that place we shall have to give priority to Hindi on the score of convenience) என்று ஆர்.எஸ்.எஸ்.க்கு கோல்வால்கர் வகுத்துக்கொடுத்த நிலைப்பாடுதான் இதற்கு காரணம். இந்தப் பின்னணியில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைகளைக் காண வேண்டியுள்ளது. 

அலுவல்மொழியாக இந்தி பயன்படுத்தப்பட்டு வருவதன் நடப்பு நிலவரம் பற்றி  ஐந்தாண்டுகளுக்கொரு முறை குடியரசுத்தலைவரிடம் அறிக்கை தரும் நடைமுறைக்கு மாறாக, இப்போதைய குழு மூன்றாண்டுகளுக்குள் இரண்டு அறிக்கைகளைக் கொடுத்துள்ளது. அவ்வளவு வேகம். இரண்டாவது அறிக்கையின் 112 பரிந்துரைகள் என்னென்னவென்று அறிவிக்கப்படாவிட்டாலும், பிஜூ ஜனதாதளம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தக்குழுவின் துணைத்தலைவருமான பர்த்ரிஹரி மஹ்தாப், இப்பரிந்துரைகள் தேசிய கல்விக்கொள்கைக்கு இசைவாக தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். (எகனாமிக் டைம்ஸ், 2022 அக். 9). 

நாட்டின் பெரும்பகுதியினரால் பேசப்படுகிற – எழுதப்படுகிற- புரிந்துகொள்ளப்படுகிற மொழியாக இந்தி இருக்கிறது என்கிற நெடுங்காலப் பொய்யின் மீதே இந்த அறிக்கையும் நிறுவப்பட்டுள்ளது. 1961ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தி பேசுவோர் 30.39% (13.34 கோடி) என்றிருந்த நிலை 2011ஆம் ஆண்டு  மக்கள்தொகை கணக்கெடுப்பில் 43.63% (52.83 கோடி) என அதிகரித்துள்ளதாக காட்டப்படுகிறது. குறைந்தபட்சம் 10000 பேருக்கு மேல் பேசக்கூடிய மொழிகளில் 55 இந்தியின் கீழ் கொண்டுவரப்பட்டு அம்மொழிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்களை இந்திபேசுவோர் பட்டியலில் அடைக்கும் வேலை கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்துள்ளது. இவர்களைக் கழித்துவிட்டால் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்னவாகும்? அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதற்கான பரிசீலனையில் ஐமுகூ - II காலந்தொட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள போஜ்புரி உள்ளிட்ட 38 மொழிகளையும் தனித்தெடுத்தால் இதுகாறும் ஊதிக்காட்டப்பட்ட இந்தி பேசுவோர் அளவு வெகுவாக சுருங்கிப்போகும். அப்படியே பெரும்பான்மையாக இருந்தாலும் அதற்காக எப்படி மற்ற மொழியினர் மீது திணிக்கமுடியும்? 

 இனி, ஊடகங்கள் வழியே தெரியவந்துள்ள சில பரிந்துரைகளைப் பார்ப்போம்: 

·         அன்னியமொழியான ஆங்கிலத்தை தவிர்க்கவேமுடியாத இடங்களிலும் தருணங்களிலும் மட்டுமே பயன்படுத்துவது. மற்ற எல்லா நிலைகளிலும் இந்தி அல்லது உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவது.

ஆங்கிலத்தைப் போலவே  இந்தியும் இந்தியர்களில் பெரும்பான்மையினருக்கு அன்னிய மொழியே. அதல்லாமல் இந்தியைத் தவிர்த்த பிறமொழிகள் அனைத்தையும் உள்ளூர் மொழிகள் என்று சுட்டுவதில் எடுத்தயெடுப்பிலேயெ இந்தியை நாடுதழுவிய மொழியாகக் காட்டும் சூதுள்ளது. ‘உள்ளூர் மொழி’களும் பயன்பாட்டில் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அதிகாரத்தின் தோளேறி வரும் இந்திதான் கோலோச்சும் என்பதை  அறிக்கை மறைக்கிறது. 

·         ஒன்பதாம் வகுப்புவரை கட்டாயமாக இந்தி.

சரி, அதன்பின்? ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் அனைத்திலும் இந்தி பயிற்றுமொழியாக்கப்பட வேண்டுமாம். அனாடமி என்கிற ஆங்கிலச்சொல்லுக்கு நேரானதொரு சொல்லைக்கூட கொண்டிராத இந்தியை எல்லா வகுப்புகளுக்கும் பயிற்றிமொழியாக்குவது நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழடிப்பதாகும். இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து இந்த நிறுவனங்களுக்கு  படிக்கச்செல்லும் மாணவர்களுக்கும் இந்திதான் பயிற்றுமொழி என்பதை எப்படி ஏற்கமுடியும்?   

·         அரசுப்பணிகளுக்கு ஆளெடுக்கும் போட்டித்தேர்வுகளில் உள்ள ஆங்கில மொழித்தாளை நீக்கி இந்தி மொழித்தாளை புகுத்துவது.

இந்தி பேசும் மாநிலத்தவருக்கு இது எளிதாகும் அதேவேளையில், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புதிதாக இந்தியைக் கற்று அதில் தேர்வெழுதி தேர்ச்சிபெற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள்ளாக்கப்படுவர்.    

·    இந்திபேசும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் அலுவலகப்பணிகளில் இந்தியைப் பயன்படுத்தாத ஊழியர்களையும் அலுவலர்களையும் எச்சரிப்பது, எச்சரித்தும் மாறாதவர்கள் பற்றி ‘வருடாந்திர பணிச்செயல்பாட்டு மதிப்பீட்டறிக்கையில் (Annual Performance Assessment Report –APAR) குறிப்பிட வேண்டும்.

1956ஆம் ஆண்டு வெளியான பாலகங்காதர் கெர் கமிட்டியின் அறிக்கை, குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இந்தியைப் படித்து புழங்குமொழியாக கைக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று மிரட்டியது. இப்போதைய அறிக்கை, அவர்களது ஆண்டு உயர்வுத்தொகை, பதவி உயர்வு போன்றவற்றை தடுக்கமுடியும் என்று  சூசகமாக மிரட்டுகிறது. இந்திக்கு கொடுக்கும் இதே முன்னுரிமையை மற்ற தேசிய மொழிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் கொடுத்தாக வேண்டும் என்று இந்த அறிக்கை பேசவில்லை. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் மட்டுமன்றி நெடுஞ்சாலை மைல்கற்களில்கூட தமிழ் புறக்கணிக்கப்படுவதுடன் இந்தி வம்படியாக திணிக்கப்படுகிறது. 1976 அலுவல்மொழி விதிகள் தமிழ்நாட்டிற்கு விலக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டி இங்குள்ள அலுவலங்களில் இயங்கும் அலுவல்மொழி / இந்திப் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கோரிக்கை கவனங்கொள்ளத்தக்கது.  

·         வடகிழக்கு மாநிலங்களுக்கு 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் நியமனம்.

யாருக்கு யார் வடகிழக்கு என்று கேள்வியெழுப்புமளவுக்கு தனித்துவமான பண்பாட்டுப் பின்புலமும் மொழிவளமும் கொண்ட அந்த மாநிலங்களை ‘இந்து / இந்திப்பிரதேசமாக மாற்றும் வேலையில் சங்பரிவாரத்தினர் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள 9 பழங்குடிகள் தங்களது தாய்மொழியை தேவநாகரி வடிவில் எழுதுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டுள்ளதையும், 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இந்தி பயிற்றுவிக்கப்படுவதற்கு எட்டு வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளும் ஒப்புதல் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் இவ்வறிக்கை பெருமையுடன்  பட்டியலிடுவதுடன் சேர்ந்ததே இந்த நியமனப் பரிந்துரையும். 

இன்னும், உயர்நீதிமன்ற உத்தரவுகளை இந்தியில் மொழிபெயர்ப்பது, இந்தி மொழி அகராதியை  தற்காலப்படுத்தி வெளியிடுவது, அலுவலகங்கள் அமைச்சரகங்கள் துறைகள் உள்ளிட்டவற்றின் அறிவிக்கைகள் அழைப்பிதழ்கள் நிகழ்ச்சித்தொகுப்புகளை இந்தி / உள்ளூர் மொழியில் மட்டுமே தயாரித்தல், நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரல்களில் 70 % மட்டுமே இந்தியில் என்றிருப்பதை அதிகரித்தல், ஐக்கியநாடுகள் அவையின் அலுவல்மொழிகளில் ஒன்றாக இந்தியை ஏற்கச்செய்தல் - என்று  இதுவரை தெரியவந்துள்ள பரிந்துரைகளில் ‘இந்திதான் இந்தியா’ எனக் காட்டுவதற்கான கெடுமுயற்சியைத் தவிர வேறெதையும் காணமுடியவில்லை. 

ஒரே நாடு ஒரே மதம் ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வாணையம், ஒரே சீருடை என்று சங்பரிவாரத்தினரின் பாஜக ஆட்சி நாட்டின் பன்மைத்துவத்தை ஒழித்துக்கட்ட மேற்கொண்டிருக்கும் நாசகரத் திட்டத்தின் பகுதியாகவே ஒரே மொழி என்பதும் இப்போது திணிக்கப்படுகிறது. 1918ஆம் ஆண்டிலிருந்து இந்தி பிரச்சார சபாக்கள் இயங்கிவருகின்றன. விருப்பமுள்ளவர்களும் தேவைப்படுகிறவர்கள் படித்துக்கொள்கிறார்கள். இவர்கள் இந்தியைக் கட்டாயமாகுவதன் மூலம் அதன்மீது வெறுப்பை வளர்க்கவே முயற்சிக்கிறார்கள். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்று இந்திய நாடாளுமன்றத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் தரப்பட்ட உறுதிமொழிகளை இப்போதைய பரிந்துரைகள் கவனத்தில் கொண்டிருப்பதாக உணரமுடியவில்லை. ஆங்கிலத்தின் இடத்தை தேசியமொழிகளால் நிரப்புவது என்று சொல்லிக்கொண்டு இந்தியைத் திணிப்பதானது வெறும் மொழிப்பிரச்னை மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமையிலும் தனித்துவத்திலும் தலையிடுவதுமாகும். மாநிலங்களை ஒன்றிய அரசின் காலனிகளாக்குவதுபோலவே நாட்டின் மொழிகள் அனைத்தையும் இந்திக்குக் கீழ்ப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் முறியடிக்கப்பட வேண்டியதே. 

1937 முதல் இன்னல் பல ஏற்று ஈகங்கள் புரிந்து இந்தித் திணிப்பினை முறியடித்து மொழியுரிமையைப் பாதுகாத்து வந்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலும் தீரமுடன் இப்போதைய அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு முறியடிப்பார்கள். அதற்காக, மொழிகளின் தனித்துவத்தையும் மொழிகளுக்குள் சமத்துவத்தையும் பேணவேண்டும் என்று நாடு முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பலைகளை ஒருமுகப்படுத்தியாக வேண்டும். இந்தித் திணிப்பு எதிர்ப்பு- மொழியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தமுஎகச நடத்துவதும் அதன்பொருட்டே.

நன்றி: தீக்கதிர் நாளிதழ், 2022 நவம்பர் 4

செவ்வாய், அக்டோபர் 25

எது நடந்ததோ அது எப்படி நன்றாகவே நடந்திருக்கமுடியும்? -ஆதவன் தீட்சண்யா

பகவத் கீதையை மையப்படுத்தி மருத்துவர் நா.ஜெயராமன் எழுதி, விரைவில் வெளிவரவிருக்கும் நூலுக்கு நானெழுதிய முன்னுரை

வேதங்களில் இல்லாததோ சொல்லாததோ எதுவுமேயில்லை என்றொரு கோஷ்டி விளம்பித் திரியும். அப்படியா, என்னென்ன என்றொரு பட்டியல் கொடுங்களேன் என்றால் அது இது வந்து என்று இழுத்தார்கள். அப்பேர்ப்பட்ட வேத ஸ்லோகங்களை எங்களுக்கும் சொல்லுங்களேன்  புரிந்துகொள்கிறோம் என்றால் அபச்சாரம் அபச்சாரம், உங்களுக்கெல்லாம் சொன்னால் சொன்ன நாக்கு அழுகிரும் கேட்ட காது அவிஞ்சிரும் என்று சாபமிட்டார்கள். சரி, நாங்களே படித்துப் பார்த்து தெரிந்துகொள்கிறோம் புத்தகமிருந்தால் கொடுங்களேன் என்று கேட்டால் அது அசரீரியாக சொல்லப்பட்டது… சொல்லப்பட்டதை கேட்டு எங்களுக்குள் சொல்லிக் கொள்வோமே தவிர அச்சடிக்கும் பாபத்தை செய்யமாட்டோம் என்றார்கள். பிறகு ஒருவழியாக அதெல்லாம் புத்தகமாக வந்து பலரும் படித்து “இவ்வளவுகாலமும் உயர்வுநவிற்சியாய் ஏற்றிச்சொன்ன அளவுக்கு அதில் பெரிய தத்துவமோ வழிகாட்டுதலோ இல்லை; தங்களது தீவனமான கால்நடைகளுக்குத் தீவனம் தேடி பல்வேறு நிலப்பரப்புகளையும் தட்பவெப்ப நிலைகளையும் கடந்து  இந்தியாவுக்குள் வந்த ஆரியர்களின் வழிநடைப்பாடல்கள், சடங்குகள், மந்திரங்கள் தவிர அந்த வேதங்களில் வியந்து போற்றுமளவுக்கு ஒரு வெங்காயச் சருகுமில்லை” என்று அம்பலப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் இந்த ஆஹா ஓஹோ ஆலாபனை ஓய்ந்தபாடில்லை. 

வேதங்கள் பற்றி உலவவிடப்பட்ட கற்பிதங்களுக்கு சற்றும் குறையாதவை பகவத் கீதை பற்றிய கட்டுக்கதைகள். கீதை வழிகாட்டுகிறது, ஒளி கூட்டுகிறது, வாழ்வின் சாரத்தை விளக்குகிறது என்றெல்லாம் ஓயாமல் நம்மிடம் சொல்லப்பட்டு வருகிறது. போர்க்களமேகிய ஒருவனுக்கு சொல்லப்பட்ட போதனைகளின் தொகுப்பு என்று பார்த்தாலும்கூட அது ஒரு சத்திரியனுக்குச் சொல்லப்பட்டது தான். சொன்னவனான கிருஷ்ணன் பிராமண வர்ணத்தவனோ சத்திரிய வர்ணத்தவனோ அல்ல. வேளாண்மையோ வியாபாரமோ செய்பவனல்ல என்பதால் அவன் வைசியனாக இருக்கவும் வாய்ப்பில்லை. கால்நடை வளர்ப்பு, பால்பொருள் விற்பனை என்கிற வேளாண் காலத்திற்கு முந்தைய மேய்ச்சல் நாகரீகக்கட்டத்தில் தோன்றி – ஆனால் வேளாண் காலத்திற்குப் பிறகும் நீடிக்கிற-  உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடக்கூடிய குடும்ப/ குல வரலாற்றைக் கொண்டு பார்த்தால் தர்க்கப்படி அவன் சூத்திரனாக இருக்கவே வாய்ப்பதிகம். எனில் அவனெப்படி அர்ச்சுனன் வீட்டில் சம்பந்தம் கலந்தான் என்கிற கிளைக்கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், சத்திரியனல்லாத கிருஷ்ணனால்  சத்திரியனான அர்ச்சுனனுக்கு புத்திமதி சொல்லமுடியுமா என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பிட்டதொரு சூழலில் அவனது வர்ணதர்மத்துக்கேற்ப சொல்லப்பட்ட போதனைகள் என்றே சமாதானம் சொல்லிக் கொண்டாலும், வர்ணங்கடந்து காலங்கடந்து எப்படி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வழிகாட்ட முடியும் என்கிற கேள்வியும் ஒருபுறமிருக்க, பகவத் கீதையைப் பாடமாக்க வேண்டும், அதை இந்தியாவின் புனிதநூலாக அறிவிக்கவேண்டும் என்கிற பெருங்கூச்சலை எழுப்புகிறவர்கள் யாரெனக் கண்டால் அவர்களில் பலரும் பார்ப்பனர்களாயுள்ளனர். உலகத்திற்கே புத்தி புகட்டி பரிபாலிக்கும் பூதேவர்கள் என்று தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் பார்ப்பனர்கள், ஒரு சூத்திரனால் சத்திரியனுக்கு சொல்லப்பட்ட போதனைகளிலிருந்து அப்படி என்னத்தைக் கண்டார்கள், அதை ஏற்குமளவுக்கு அவர்கள் தத்துவ வறுமையில் உழன்றிருந்தார்களா, எதற்கதை பாதுகாக்கத் துடிக்கிறார்கள் என்று ஆராயப்புகுந்தால், பகவான் கிருஷ்ணனின் வாய்வழியே சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் மகாபாரதக் கதைக்குள் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பார்ப்பனீயச் சரக்குகளே என்பதை கண்டறிய முடியும். 

கீதை திரும்பத்திரும்ப மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டால் அதில் முன்னிறுத்தப்படும் மதிப்பீடுகளும் உலகியல் கண்ணோட்டமும் அவர்களது அகவுலகத்திலும் நடத்தையிலும் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புராணங்களும் இதிகாசங்களும் இன்னபிற மதநூல்களும் கூட சமூகத்தில் தொடர்ந்து புழக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுவதும் இதற்காகவே தான். இவற்றின் வழியே சொல்லப்படும் தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தனிமனிதரோ சமூகக்குழுவோ அவற்றை உள்ளூர்த்தன்மையுடனும் சொந்தத் தேவைகளை அனுசரித்தும் மறுவுருவாக்கம் செய்து மீண்டும் புழக்கத்திற்கு விடுகின்றனர். இதனால்தான் புராண இதிகாசப் பாத்திரங்கள் பலவும் மக்களுக்கும் அந்தந்த வட்டாரத்திற்கும் நெருக்கமானவவையாக உணரப்படுகின்றன. பரவலாக புழக்கத்தில் உள்ள ஒரு கதையின் சூழமைவையும் கதைமாந்தர்களையும் தங்களிடம் உள்ள கதைக்குள் பொருத்துவது அல்லது அவற்றை வைத்துக்கொண்டு புதிய கதைகளைப் புனைவது என்பதில் மக்கள் எப்போதுமே முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்கள். இப்படி பல மகாபாரதக் கதைகளை உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கும் வெகுமக்கள் கீதை பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அதை அவர்கள் மேட்டுக்குடிகளின் ஞானத்தேடல் பசப்புக்கானது என ஒதுக்கிவிட்டார்கள்.  

வெகுமக்களுக்கு மகாபாரதக் கதைதான் தெரியுமேயன்றி இடையில் நுழைக்கப்பட்ட இந்த கீதை தெரியாது. ஒருவேளை கீதையை தேவைப்படாதது எனவும் அவர்கள் கருதியிருக்கக் கூடும். ஆனால் பார்ப்பனீயர்களுக்கு மகாபாரதக் கதையை விடவும் கீதை தான் உசத்தி.  ஏனென்றால் கீதை தான் பார்ப்பனீய உலகியல் கண்ணோட்டத்தை  சமூகத்தின் மீது திணித்திட உகந்தது எனக் கருதுகிறார்கள். பார்ப்பனீயர்கள் விதந்தோதுவதனாலேயே அவர்களது கருத்தியல் அடிமைகளும் பகவத்கீதையை பலவாறாக உயர்த்திப் பேசுகிறார்கள். பழ கருப்பையா இப்படியானவர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக்கொண்டு பேசிய ஓர் உரையில் காந்தியின் வாழ்வை கீதையில் சொல்லப்படும் யோகங்கள் தான் நெறிப்படுத்தின என்று குறிப்பிட்டுள்ளார். கீதையைப் படித்து மகாத்மா ஆகிவிட முடியுமென்றால் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் நிலையில் ஏன் காந்திக்குப் பிறகு ஒரு மகாத்மாவைக் கூட இந்த நாடு கண்டடையவில்லை என்கிற கேள்வி இவ்விடத்தில் எழுவது இயல்புதான். ஆனால் அதையும் கடந்து, கீதையின் எந்த யோகம் காந்தியை ஈர்த்து, பின்பற்றச் செய்து அவரை விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பொறுப்புக்கும் மகாத்மா நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கும் என்கிற கேள்வியை எழுப்பி, கீதைக்குள் அப்படியெந்த யோகமும் இல்லை என்கிற உண்மையைப் போட்டுடைக்கிறது மருத்துவர் நா.ஜெயராமனின் இந்நூல். 

பகவத் கீதையும் காந்தியின் வாழ்வும் இந்நூலில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கீதை உருவான காலம், தேவை, அதன் கருத்தியல், சமூக இருப்பு பற்றி அறிந்திட தமிழில் கீதை தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களிலான நூல்களைப் படித்து தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார் நூலாசிரியர். பகவத் கீதையில் முன்வைக்கப்படும் யோகங்கள் யாவை என்பதை நிரல்படுத்தி இவற்றில் எந்த யோகமும் காந்தியை ஈர்த்து வழிநடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நிறுவுகிறார். இதற்காக காந்தியின் வாழ்க்கை  மற்றும் அவரது கருத்துலகம் சார்ந்து எழுதப்பட்டுள்ள முக்கிய நூல்களையும்  படித்து அவற்றிலிருந்து தனக்கான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

அர்ச்சுனன் போர்க்களத்தில் நிற்கிறான். காந்தியும் விடுதலைப்போராட்டக் களத்தில் நிற்கிறார். இரண்டு களங்களிலும் போரை தொடுப்பவருக்கும் மறிப்பவருக்குமான அடிப்படைகள் வெவ்வேறானவை. ஆகவே அங்கு பேசப்படும் போர்நெறிகளில் ஏதும் இங்கு பொருந்தியதாக காந்தியால் சொல்ல முடியவில்லை. எதிரிகள் தாயாதிகள்தான் என்றாலும் கொல்லத் தயங்காதே என்று அதற்கான நியாயங்களைச் சொல்லும் கீதையிலிருந்து, வாழ்நாளெல்லாம் அஹிம்சையை பின்பற்ற முயன்ற காந்தி எதைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும்? 

விடுதலைப் போராட்டத்தின் தலைமையென அடையாளப்பட்ட அவரது வழிகாட்டுதலுக்கு நேரெதிர் மனநிலையில் நாடு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக வீறுகொண்டெழுந்து போராடிக்கொண்டிருந்தது. ஆயுதமேந்துதல் உள்ளிட்ட வழிகளில் போராடிக் கொண்டிருந்த அம்மக்களின் நடுவே காந்தியோ தனித்தொதுங்கி காலத்துடன் இழையாமல் அஹிம்சையைப் பேசிக்கொண்டிருந்தார். அவ்வகையில் பார்த்தால் காந்தியின் அஹிம்சை எனும் தனிப்பட்ட பிடிவாதம் வெகுமக்களுக்கு விரோதமான ஹிம்சையாக இருந்தது என்பதற்கான உதாரணங்கள் பல இந்நூலிலுண்டு. 

பகவத் கீதை என்கிற பெயரைக்கூட அறிந்திராத மக்கள் எதிரியை வீழ்த்த சமரசமற்று போராடிக் கொண்டிருந்த வேளையில், பகவத் கீதையை பழுதற கற்றறிந்த காந்தியோ பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்று பஜனிசைத்துக்கொண்டிருந்தார். இப்படி, தன்சொந்த வாழ்க்கையிலும் கூட பயன்படுத்த முடியாத பகவத் கீதையை காந்தி கடைசிவரை சுமந்து திரிந்ததையும் அதை நமக்கும் பரிந்துரைத்த அவலத்தையும் விரிவாக சுட்டிக்காட்டும் இந்நூல் இனியாவது பழ.கருப்பையாக்கள் பகவத் கீதை / காந்தியைப் பற்றி கவனமாக பேசும்படி வலியுறுத்துகிறது. 

கீதாசாரம் என்கிற ஸ்டிக்கரை நம் கண்ணின் கருவிழி மீது கூட ஒட்டிவைத்து அதன்படிதான் உலகமே சுழல்கிறது என்பதான மாயையை உருவாக்கும் முயற்சி நடைபெற்றுவரும் இக்காலத்தில், அதன் ஒருவரி கூட கீதையில் இல்லை என்றும், ஆளாளுக்கு இஷ்டப்படி பிழிந்தெடுத்து விளாவி விநியோகித்துக் கொண்டிருக்கும் அந்த கீதாசாரத்தில்  ஒரு சாரமும் இல்லை, அதன் ஒருவரி கூட வாழ்வில் பின்பற்றத்தக்கதல்ல என்றும் ஜெயராமன் செய்யும் கேலி ரசிக்கத்தக்கது.    

தனது மருத்துவத் தொழிலுக்கிடையில் நடப்புலகத்தை உன்னிப்பாக கவனித்துவரும் தோழர் ஜெயராமன், பேருழைப்பைச் செலுத்தி கீதையின் மகத்துவமென பூசி மெழுகப்பட்டுள்ள மாயையைகளை இந்நூல் வழியே கலைத்துப் போட்டுள்ளார்.  எப்போதும் போல் எளியதொரு சொல் அல்லது காட்சியிலிருந்து எழுதுவதற்கான பொறியைப் பெறும் அவர் எழுதத் தேர்ந்திடும் பொருள் குறித்த படிப்பினாலும் ஆய்வுகளினாலும் கருத்துலகை வளப்படுத்தும் நூலாக இதையும் எழுதியுள்ளார். புத்தகம் விரைவில் வரட்டும். 


வெள்ளி, அக்டோபர் 7

சென்னை மருத்துவக் கல்லூரியில்… ஆதவன் தீட்சண்யா

    காந்தியின் தீண்டாமை, ஆஷ் கொலை வழக்கு உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ள மருத்துவர் நா.ஜெயராமன் புனைவிலக்கிய முயற்சியாக சென்னை மருத்துவக் கல்லூரியில்…. என்கிற நாவலை எழுதியுள்ளார்புதுக்கோட்டையும் சென்னை மருத்துவக் கல்லூரியும் தான் கதையின் நிகழ்விடங்கள்.  இரண்டு மூன்றாண்டுகளை ரிபீட் கோச்சிங்கிற்காகவும் அதற்காக பெருந்தொகையையும் செலவழிக்க முடிந்தவர்களால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்கிற நீட் காலத்திற்கு சற்று முன்னதாக கதை நடக்கிறது.  தலையாரியின் மகன் பீமாசெல்வனும் தாசில்தார் மகள் சித்திரைச்செல்வியும் தான் முதன்மைப் பாத்திரங்கள். இப்படி சொன்னதுமே அவர்களுக்குள் காதல் என்பதைச் சுற்றிய கதையாக இருக்கக்கூடும் என்று யூகிப்பதில் தவறேதுமில்லை, காதலிப்பது மனிதசுபாவம் தானே… ஆனால் கதை அவர்களது காதலை தூரத்தில் எங்கோ வைத்து மற்றபல விசயங்களைப் பேசுவதாயுள்ளது. 

சாதிப்படிநிலையில் மேலேயும், அது வழங்கிய மூலதனமாக நிலவுடைமையும், கல்வியும், கூடுதலாக அரசு அதிகாரமும் அதற்கேற்ற தோரணையும் வாழ்முறையும் உலகியல் கண்ணோட்டமும் கொண்டுள்ளவர் தாசில்தார். அவரது மேற்சொன்ன நிலைகளுக்கு நேரெதிர்  நிலையில் வாழ்பவர் தலையாரி. இவர்களுக்கு ஒத்த அலைவரிசையில் இவர்களது இணையர்கள். மருத்துவராகிவிட வேண்டும் என்பதற்காக சித்திரைச்செல்வி நாமக்கல்லில் ஒரு மதிப்பெண் தொழிற்சாலையில் வைத்து தயார்  செய்யப்படுகிறாள். பீமாசெல்வன் உள்ளூரில் ஓர் அரசுப்பள்ளியில் படிக்கிறான். இருவரும் சமவயதினர், ஒரே படிப்பினர். ஆனாலும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளிலும் வாய்ப்புகளின் தரத்திலும் உள்ள வேறுபாடுகள் இரண்டு தனிப்பட்ட நபர்கள் சார்ந்தவையாய் அல்லாமல் சமூகப்பாகுபாட்டின் விளைவுகளாக இருப்பதை விரிவாகப் பேசுகிறது நாவல். வறுமை என்றில்லாவிட்டாலும் எளிய பொருளாதாரப் பின்புலமுள்ள குடும்பம், அரசுப்பள்ளி, ஆசிரியர்களின் வழிகாட்டுதல், பொதுநூலகம், புத்தகப்படிப்பு வழியாக உருவாகிவரும் பீமாவுக்கும், தனியார் பள்ளி, பாடப்புத்தகம், மனப்பாடம், எதுகேட்டாலும் கிடைக்கும்- கேட்காமலேகூட கிடைக்கும்- குடும்பப் பின்புலம் ஆகியவற்றினூடாக வளரும் சித்திரைச்செல்விக்கும் படிப்பின் வழியே எட்டவேண்டிய இலக்குகள் இயல்பாகவே வெவ்வேறானவை. சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களாக அவர்கள் இணைந்திருந்த காலம் நெடுக அவர்களிருவருக்குமிடையே நடைபெறும் உரையாடலில் அவள் பகுத்தறிவாதியாகவும் சாதி மறுப்பாளராகவும் தன்னை மறுவுருவாக்கம் செய்துகொள்கிறாள். இங்கு பீமா அவளை திருத்துகிறவனாகவோ நல்வழிப்படுத்துகிறவனாகவோ அல்லாமல் அவளது முயற்சிகளுக்கு உடனிருந்து உதவும் தோழனாக இருக்கிறான். 

என்னதான் ஓர் ஆணும் பெண்ணும் கல்வி, வேலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் சமமாகிவிட்டாலும் அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சாதி ஒரு பெருந்தடையாக இருக்கிறது என்பதன் அவலசாட்சியமாக இவர்களது சகமாணவியும்-அவளது காதலனும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆதிக்கச்சாதியின் கெளரவத்திற்காக கொல்லப்படுவோம் என்கிற அச்சத்திலிருந்தே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மையை எதிர்கொள்வதற்கு அந்தக் கல்லூரி வளாகம் திணறுவதையும் அதிலிருந்து மீள்வதற்காக கூட்டாக மேற்கொள்ளும் எத்தனத்தையும் நாம் கவனங்கொள்ள வேண்டியுள்ளது. காதலித்துவிட்டதற்காக திருமணம் என்றல்லாமல் திருமணம் செய்துகொள்வதற்காக சித்திரைச்செல்வியை காதலிக்கிற பீமா, தங்களுடைய காதலை வெற்றியடைந்த காதலாக்குவதில் உறுதியாக இருக்கிறான். சாதி மற்றும் அதிகாரப்பெருமிதத்தில் ஊறித் திளைத்துள்ள தனது பெற்றோரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி சம்மதம் பெறுவதற்கான போராட்டத்தை விடாப்பிடியாக நடத்தி இந்த வெற்றியை சாத்தியமாக்குகிறாள் சித்திரைச்செல்வி. 

மருத்துவக்கல்வியின் வரலாறு, மருத்துவப்பணியின் தனித்துவம், ரங்காச்சாரி போன்ற மருத்துவர்களிடமுள்ள அர்ப்பணிப்பு, அறிவியல் மனப்பான்மைக்குப் புறம்பான சாதியப் பிடிமானங்கள் என்று தனது துறைசார்ந்த பல விசயங்களையும் கதையின் போக்கிற்குள் வைத்தே கவனப்படுத்துகிறார் மருத்துவர் நா.ஜெயராமன். 

***

நாவலை படித்துவிட்டு தொலைபேசியில் தோழரை அழைத்து இந்த நல்லம்சங்களைத் தெரிவித்தேன். தொடர் உரையாடல் வழியாகவே கதையை வளர்ப்பது, அவனும் அவளும் ஒருவரையொருவர் மட்டுமீறி மதிப்பது, அவர்களுக்கிடையேயான உரையாடலில் பரஸ்பரம் புகழுரைகளை பரிமாறிக்கொள்வது, வயதுக்கு மீறி யோசிக்கிற/ பேசுகிற பீமா பாத்திரப் படைப்பு, முகப்போவியம் மற்றும் நூலாக்கத்தில் பாரதி புத்தகாலயத்தின் சிரத்தையின்மை போன்ற சில பலவீனங்களையும் தோழமையுடன் சுட்டிக்காட்டினேன். அடுத்தடுத்து எழுதுவதற்கு இந்த விமர்சனங்கள் உதவியாக இருக்குமென நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.  தொடர்ந்து எழுதட்டும்.


சென்னை மருத்துவக்கல்லூரியில்... 
மருத்துவர் நா.ஜெயராமன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:ரூ.220

ஆய்வுதான் அறிவு - ஆதவன் தீட்சண்யா

                           பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் ...