வியாழன், ஜூலை 27
சனி, ஜூலை 15
நான் எழுத வந்திருக்காவிட்டால் குடிமுழுகிப் போயிருக்காது... ஆதவன் தீட்சண்யா
1. எனது முதல் கதையை எப்போது எழுதத் தொடங்கினேன் என்று இப்போது துல்லியமாகக் கூறுவது சாத்தியமில்லை; அவசியமுமில்லை. ஒருவேளை அது இன்னும் எழுதப்படாதும் இருக்கலாம். ஆனால் என் முப்பாட்டனான பெரியூர் (உத்தமசோழபுரம்) ஜெண்டாக்காரன் வம்சத்தில் பிறந்து இலக்கியப் பரப்புக்குள் நுழைந்த முதலாமவனாக நான் இருக்கக்கூடும். (முப்பாட்டியின் பெயர் யாருக்கும் நினைவிலில்லை).
அதிகாலைக்கே உரித்தான அமைதியின் ஒரு பகுதியைப்போல சாந்தமானதொரு குரலில் ஆர்.சி.செட்டிப்பட்டி தேவாலயத்திலிருந்து மிதந்துவந்த விவிலிய வாசகங்களில் இருந்த மயக்கும் மொழிநடை, அலமேலுபுரத்திலிருக்கும் எங்கள் காட்டில் அந்திஏர் பூட்டி நிலம் தளர உழுகையில் புரளும் செம்மண்ணில் படிந்து ஜொலித்த மஞ்சள் வெயில், கால்/அரை/ முழுப்பரிட்சை லீவுகளில் என்தாயின் ஊரான ஈச்சம்பாடிக்குப் போய் அங்கே பட்டிக்கு காவலிருக்கச் செல்கிற அல்லது ராத்திரி கரண்டில் தண்ணிகட்டுகிற என் மாமன்களிடம் விடியவிடிய ஜகடைகளைப் பற்றி கேட்டு பயந்த கதைகள், சிங்காரி என்றும் கொத்துக்காரிச்சி என்றும் அழைக்கப்படுகிற என் தந்தைவழிப் பாட்டி மாரிமுத்தம்மாள் மீது எந்நேரமும் படிந்திருக்கும் புகையிலையுடன் கூடிய தாரின் வாசம்.... இப்படியான என் ஞாபகங்களில் எவையெல்லாம் என்னை எழுதச் செலுத்தின என்று இழைபிரித்துச் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் எதுவும் என்னிடமில்லை. ஓர் எழுத்தாளனாக அடையாளம் பெற்றுவிட்ட இந்நாளில் எனக்கான கொடியையும் அதனடி வேரையும் தேடிப்பிடித்து இன்னின்ன பூர்வீகக் காரணங்களால் நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டிருக்கிறேன் என்று கூறுகிற முயற்சி கருவிலே திருவுடையவனாக்கும் என்று காட்டிக் கொள்கிற அபத்தத்திற்கே இட்டுச் செல்லும். ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும், எல்லாக்காலத்திலும் என் முன்னோர்களிடம் கதைகளிருந்தன. அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள், நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் எழுத வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறேன். ஒன்றும் குடி முழுகிப் போயிருக்காது என்பது விளங்குகிறது. ஏனென்றால் எங்கள் குடி என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதெல்லாமே ஏற்கனவே பாஷாணத்தில் மூழ்கடிக்கப்பட்டு விட்டிருந்தன. திமிறியடித்து மேலெழுந்துவிடாதபடி அவற்றின்மீது குப்பைகளையும் பாரங்களையும் கொட்டி வாழ்ந்ததற்கான தடயங்கள் முற்றாக மறைக்கப்பட்டிருந்தன. ஏன் யாரால், எப்போது- முக்கியமாக- எவ்வாறு மூழ்கடிக்கப்பட்டோம் என்பதைத் தேடிப் போவதின் வழியே தன்னைத்தானே கண்டடையத் துடிக்கிறவர்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொண்டது மட்டுமே நான் எழுத வந்ததன் பயனென உணர்கிறேன்.
தங்கச்சுரங்கங்களை பறிகொடுத்துவிட்டு காக்காப்பொன்னுக்காக சாக்கடை மண்ணை
அரித்து சலித்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் ரசிப்பதற்கும் கொண்டாடுவதற்கும்
என்ன இருக்கிறது என்ற கேள்வி என்னை துரத்துகிறது, ஓடிக்களைக்கிறபோது சாய்ந்து கொள்ளத்
தோதுவான கல்திட்டையாகவும் அதுவே இருக்கிறது. இனி அது துரத்துவதை நிறுத்தி விட்டாலும்கூட
ஓடுவதை நான் நிறுத்தமாட்டேன் எனத் தோன்றுகிறது. ஆமாம் என்னை விரட்டுவதற்கென்றே கடிக்கத்
தெரிந்த மிருகங்கள் சிலவற்றை நானே வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என் சொந்தப் பொறுப்பில்.
2. 'ராஜமாடுகள் தேவ கொம்புகள்/ வசந்தநிறத்திலே போடும் சாணிகள்...’ என்பதாக
எழுதப்பட்ட கவிதைகள் சிலவற்றை கல்லூரிக் காலத்தில் வாசிக்க நேர்ந்திருந்தபோதும் அதன்
சாயல் படாமல் தப்பிவந்தது குறித்த படபடப்பு இப்போதும் எனக்குண்டு. இலக்கியத் தீவிரவாதிகளின்
கூட்டங்களுக்கு செல்லத் தொடங்கிய காலத்தில் அங்கு எழுந்த விவாதங்கள், இந்திய/ தமிழகச்
சூழல் - அதில் நின்று வாழும் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் சிக்கல்கள்- படைப்பாளிக்கும்
சமூகத்திற்குமான உறவு- படைப்புமனதை தக்கவைத்துக் கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகள்- பொதுப்புத்தி
சார்ந்த தனது புரிதல்களிலிருந்து விடுபட்டு சுயமான அறிதல்களை நோக்கி நகர்தல் என்பவற்றை
உள்ளடக்கியதாக இராமல் வெறுமனே இஸங்களைப் பற்றிய சர்ச்சையாக நீண்டும் நெளிந்தும் கொண்டிருந்த
ஒரு காலமாய் இருந்தது அது.
எந்த இஸமாக இருந்தாலும் அதன் பொருத்தப்பாடு- தேவை குறித்து பரிசீலிக்காமல்
பொருத்தியே தீர்வது என்பதில் மட்டுமே பிடிவாதமாய் இருந்மோமானால், அது பொருந்துவதற்குப்
பதிலாக துருத்திக் கொண்டுதானிருக்கும் என்று எனக்குத் தோன்றும். ஆனால் யாரிடமும் வாதிடுவதில்லை.
அறிவுச் சோம்பல்/ முட்டாளின் சுயதிருப்தி/ வெட்டிவேலை என்று சாராம்சப்படுத்திக்கொள்ள
நான் விரும்பவில்லையானாலும் உண்மையில் எனக்கு இவ்விவாதங்கள் அலுப்பூட்டக்கூடியனவாகத்தான்
இன்றும் உள்ளன. எனவே எழுதுவது மட்டுமே என் வேலை என்ற அளவில் இலக்கியத் தீவிரவாதிகளின்
பயிலரங்குகள்/ ஃபெயிலரங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியவனாயிருக்கிறேன். ஆனால்
இந்த மனச்சுருக்கம் சரிதானா என்ற கேள்வி எப்போதும் என்னைப் பின்தொடர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.
3. பொதுவுடமை இயக்கத்தோடு ஏற்பட்டத் தொடர்பு அறிவார்ந்த ஒரு தேடலிலிருந்து
எனக்கு ஏற்பட்டதல்ல என்பதை நேர்மையாக சொல்ல வேண்டியிருக்கிறது. கல்லூரி காலத்தில் நடந்த
ஒரு சாதிக்கலவரத்திற்கு பிறகு அகவயமாகவும் புறவயமாகவும் பெரும் நெருக்கடிக்காளாகியிருந்த
போது டி.சண்முகம், கே.எம்.ஹரிபட் போன்ற தோழர்களுடன் ஏற்பட்ட தொடர்பு- அவர்களது வாழ்முறையில்
இருந்த எளிமை- பழகும் சுபாவம்- தொடர் வாசிப்பு- நடப்புலகம் குறித்த விமர்சனப் பூர்வமான
பார்வை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு பின் அவர்களுக்குப் பின்புலமாய் இருக்கிற அரசியலை
நானும் கற்றுணர விரும்பி வந்தடைந்த இடம் பொதுவுடமை இயக்கமாய் இருந்தது. ஒரு இயக்கத்தின்
பகுதியாக இயங்குவதற்குத் தேவையான அன்றாட அரசியலை உள்வாங்கிக் கொண்டது போல அடிப்படைத்
தத்துவமான மார்க்சீயத்தை உள்வாங்கிக் கொள்வது எளிதானதாய் எனக்கு இன்றளவும் தோன்றவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது என்ற பொத்தாம் பொதுவான ஒருவரி புரிதலை வைத்துக்கொண்டு
மார்க்சீயத்தை விளங்கிக் கொண்டதாய் கற்பிதம் செய்துகொள்கிற எனது அபத்தங்களை பலநேரங்களில்
உணர்ந்திருக்கிறேன்.
ஒரு கட்டிடத்திற்கான வரைபடத்தை முழுதாக தயாரித்து வைத்துக்கொண்டு வேலையைத்
தொடங்குதல் போன்றோ, நோட்ஸைப் பார்த்து விடைகளை எழுதுவது போன்றோ மார்க்சீய நூல்களைப்
பார்த்துப் பார்த்து இங்கு சமூகமாற்றத்தை கொண்டுவந்துவிடலாம் என்கிற குழந்தைத்தனமான
புரிதல்களை நான் வைத்திருந்த காலத்தில் எழுதியவற்றை வாசிக்கும்போது எனது அறியாமைகள்
பிடிபடுகின்றன. இடையறாது ஆழ்ந்து கற்பதற்கும் செயல்படுத்திப் பார்ப்பதற்கும் அதன் வழியே
செழுமைப்படுத்திக் கொண்டு மீண்டும் செயலுக்குத் தூண்டுவதுமான இயங்காற்றல் கொண்ட ஒரு
தத்துவத்தை இப்படி மொக்கையாக ஜோசியம் போல் நம்புவதிலுள்ள இடர்ப்பாடுகளிலிருந்து வாசிப்புதான்
என்னை மீட்டேற்றியது என்பேன்.
ஒரு புரட்சிகர மாற்றத்திற்கான கொதிநிலையை சமூகம் எட்டிவிட்டதான கற்பிதத்தில்,
புரட்சிக்கான இறுதி விசையை இழுத்துவிடும் தனிச்சிறப்பான வரலாற்றுக்கடமை எழுத்தாளனுக்கே
இருப்பதாய் கருதிக் கொண்டு அறைகூவல்களை எழுதிக் குவித்த காலம் ஒன்றிருந்தது. சுற்றியுள்ளவர்களெல்லாம்
சொதசொதவென ஈரத்தில் அமுங்கி நமுத்துக் கிடக்கிற போது படைப்பாளி மட்டும் அகவெழுச்சி
கொண்டு திகுதிகுவென எரியும் சுடராக இருப்பது சாத்தியமில்லை. எனவே அறைகூவல்களையும் பிரகடனங்களையும்
விடுக்கிற காலமல்ல இதுவென்றறிந்தேன். சமூகத்தில் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும்
மாற்றங்களுக்கு சாட்சியமாகவும் அம்மாற்றம் எதை நோக்கி சமூகத்தை உந்தித் தள்ளும் என்கிற
முன்னனுமானத்தையும் (தீர்க்கதரிசனமல்ல) என்னவாக மாறவேண்டும் என்ற கனவின் முன்மொழிவையும்
கொண்டதாகவுமே கலைஇலக்கியம் இருக்க முடியுமேயன்றி, அதுவே மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது
என்ற நிதானம் பிடிபட நான் எடுத்துக்கொண்ட காலம் சற்று அதீதமோ என்ற கேள்வியும் எனக்கிருக்கிறது.
எல்லாவற்றையும் மொத்தமொத்தமாகவும் பொத்தாம்பொதுவாகவும் பார்ப்பதிலிருந்து
விலகி அவற்றைப் பகுத்தும் தொகுத்தும் நுணுகிப் பார்க்கிறதொரு விமர்சனப் பார்வையை மார்க்சீய,
அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகளிலிருந்து பெற்றுக் கொண்ட பிறகே பொத்தாம்பொதுவான கதைமாந்தர்களும்
கதைக்களன்களும் சம்பவங்களும் என் படைப்புகளுக்குள் வருவது தடைபட்டிருக்கலாமென இப்போது
மதிப்பீடு செய்து கொள்கிறேன். சமூகம் வர்க்கங்களாய் பிளவுண்டிருக்கிறது என்று அதுவரையிருந்த
புரிதல் விசாலப்பட்டு வர்க்கம் சாதிகளாயும், சாதிகள் உட்சாதிகளாயும், உட்சாதிகள் குடும்பங்களாயும்,
குடும்பங்கள் பாலினபேதங்களோடும் சிதறடிக்கப் பட்டிருக்கிறதென கண்டுகொண்டபோது அதன் தலைகீழ்
அடுக்குமுறைக்குள் இருந்த ஒரு முரணும் பிடிபட்டது. அதாவது ஆண் பெண் இணைந்து குடும்பமாயும்,
குடும்பங்கள் கூடிய தொகுப்பு உட்சாதியாயும் உட்சாதிகளின் தொகுப்பு சாதிகளாயும் உருவாகி
வருகிற ஒரு சங்கிலியின் நீட்சியில் எல்லா சாதிகளுக்குள்ளிருந்தும் வர்க்கங்கள் உருவாகியிருக்க
வேண்டும். ஆனால் இங்கு உடைமை வர்க்கமோ உழைக்கும் வர்க்கமோ எல்லா சாதிகளிலிருந்தும்
உருவானவர்களைக் கொண்ட தொகுப்பாக அல்லாமல் குறிப்பிட்ட சில சாதியினரிலிருந்தே உருவாகியுள்ளது
என்ற உண்மை ‘நேர்க்கோட்டு சூத்திரங்களை’ நிராகரிப்பதாயிருக்கிறது.
இந்திய/தமிழ்ச் சூழலை விளங்கிக் கொள்வதில் இப்படி எனக்குள் இடையறாது ஏற்படுகிற குழப்பங்கள், அதிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்களில் அவ்வப்போது பிடிபடும் தெளிவுகள் என்று எனக்குள் நான் அனுமதித்துக் கொண்ட எல்லாப் போக்குகளையும் பகிரங்கப்படுத்திக் கொள்வதற்கும் அவற்றை என் சகஜீவிகளுடனான உரையாடற் பொருளாக முன்வைப்பதற்கும் என் படைப்புகளன்றி வேறு யாதொரு துணையும் அற்றவனாயிருக்கிறேன். இவ்வாறு வெளிப்படையாக என்னை முன்வைத்துக் கொள்வதால் என் பலவீனங்களும் குழப்பங்களும் வெளித்தெரிந்துவிடும் என்கிற பயமேதுமில்லை எனக்கு. யாதொரு குழப்பமுமின்றி எல்லாவற்றுக்கும் திட்டவட்டமான தெளிந்த பதில்களை தெரிந்துகொண்ட பிறகு அம்மா வயிற்றைக் கிழித்துக்கொண்டு தொப்பென எகிறி குதிக்கிற வரமெதையும் நான் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு அறிவித்துக் கொள்கிற அல்லது தன்னைத்தானே மதித்துக்கொள்கிற/ தன் பலவீனங்களை ரகசியநோய்போல பதுக்கிப் பாதுகாக்கிற அதிமேதாவிகள் எங்கும் இருக்கத்தான் செய்வர். ஆனால் நான் ஓர் எளியன். சமூகம் எனக்குள் என்னென்னவிதமான மனவோட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சமூகத்தின் பரிசீலனைக்கே படைப்புகளாக திருப்பியனுப்புகிறேன்.
4. யார் மனதும் நோகாமல், எல்லோருக்கும் பிடித்தமானதை எழுதிக் காட்டுகிற
பபூன் டெக்னிக் எனக்கு கைவரவில்லை. எதை எழுதினாலும் கோவித்துக்கொள்ளவென்று ஒரு கூட்டமோ
கோஷ்டியோ இருப்பதைப் பார்த்த பிறகுதான் திருவாளர்.வாசகரும் பொத்தாம்பொதுவானவரல்ல என்பது
உறைக்கிறது. சாதியத்தால் தடித்து முருடுதட்டிப் போயிருக்கிற தமிழ்வாசகர் தன்னை மெல்லிய
இதயம் கொண்டவராக காட்டிக்கொள்ள என் எழுத்துக்கள் ரொம்பவும் க்ரூடாக/ ரூடாக இருக்கிறதென்று
அங்கலாய்ப்பது சற்றே நகைப்புக்குரியதுதான்.
தன் நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் சந்தேகிக்காத- அதுபற்றிய மறுபரிசீலனையைக்
கோராத / குற்றம்சாட்டாத எதுவொன்றையும்- அது எண்ணாயிரம் பக்கங்களில் எழுதப்பட்டிருப்பினும்
எவ்விதத் தொந்தரவுமின்றி வாசித்துவிடுகிற திருவாளர் வாசகர், சாதி/பாலினம்/ மதம் குறித்த
அவரது சார்புநிலைகளை சீண்டிப் பார்க்கிற படைப்புகளைக் கண்டமாத்திரத்தில் பதற்றமடைந்துவிடுகிறார்.
இந்த பதற்றம் அவசியமானது. உண்மையில் இந்த பதற்றம்தான், குற்றவுணர்ச்சியாக மாறவும்,
பின் ஒடுக்குமுறைச் சிந்தனைகளை கைவிடவும் / எல்லாநிலைகளிலும் சமத்துவத்தை முன்மொழியவும்
ஒருவரைத் தூண்டுகிறது என நம்புகிறேன். எனவே திருவாளர்.வாசகர் தனது பீடங்களிலிருந்து
கீழிறங்கி வருவதற்குத் தயாராகிவிடும் பட்சத்தில் எனது படைப்புகள் அவரை மனிதத்தின் அடுத்தடுத்தத்
தளங்களுக்கு ஏந்திப்போகுமொரு வாகனமாக மாறிவிடக் காத்திருக்கின்றன என இவ்விடம் உறுதியளிக்கிறேன்.
5. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்திருக்கிற/ பழகிய விசயங்களை தனது மொழிநடையிலும் ஒருதடவை சொல்லிப் பார்க்கும் நிர்ப்பந்தம் எந்தவொரு படைப்பாளிக்கும் இல்லை. எனவே அலுப்பூட்டும் இத்தகைய கூறியது கூறலைக் கடந்து ஒரு படைப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்று கருதுகிறாரோ அப்படியாக அவரே எழுதிப் பார்ப்பதுதான் சரியானதாயிருக்க முடியும். இந்தப் புரிதலுடன்தான் நான் எழுதிக் கொண்டிருப்பதாக நம்புகிறேன். அதாவது பரந்த இந்த உலகத்தில் எதை/ யாரை/ எவ்வாறு எழுதுவது என்று பிரக்ஞைப்பூர்வமாக, ஒரு சார்பு நிலை எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த சார்புநிலையிலிருந்தே அடுத்தடுத்து எழுதுவதற்கான கருப்பொருளை தெரிந்தெடுக்கிறேன்.
ஆயிற்று, இன்றைக்கெல்லாம் தொகுத்துப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு நூறு கவிதைகளும் இருபத்தோரு சிறுகதைகளுமே தேறிநிற்கின்றன. போதுமா இது என்கிற கேள்வி எனக்குள் எப்போதும் எழுந்ததில்லை. எனக்குத் தெரியும் எண்ணிக்கையிலோ தடிமனிலோ எதுவுமில்லை என்பது. ஆனால், நான் எழுத வேண்டியது நிறைய என்பது மட்டும் ஓடிக்கொண்டேயிருக்கிறது ரத்தம்போல. (இங்கு நிறைய என்பது அளவைக் குறிக்கும் எளிய சொல்லாக பயன்படுத்தப் படவில்லை.) எழுதுவேன், இன்னும் ஒரு நூறு கதைகளையாவது. இடையறாது நினைவின் குறுக்கும்மறுக்கும் ஓடிக் கொண்டேயிருக்கும் தெறிப்புகள் கவிதைகளாக உருப்பெறக்கூடும்.
என்னால் சொல்லப்படாத வார்த்தை யாராவதொருவரால் சொல்லப்பட்டுவிடும் என்று
நான் பதற்றமடைவதில்லை. இன்னொருவர் வார்த்தையை எப்படி என்னால் சொல்ல முடியாதோ அதுமாதிரியே
என் வார்த்தையை இன்னொருவர் சொல்ல முடியாது. சொல்லும் கணத்தில்தான் நானே என் வார்த்தையை
கண்டெடுக்க முடிவதாய் இருக்கிறபோது அதெப்படி என் வார்த்தையை இன்னொருவர் அனுமானித்து
சொல்லக்கூடும்? என் வார்த்தையின் மேல் என் எச்சில் படிந்திருக்கும். என் மூதாதைகளின்
உருவம் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். உடைந்த சீசாத்துண்டைப்போல மூர்க்கர்களின் பாதையில்
காத்திருப்பவற்றை என் வார்த்தைகளென அறியுங்கள்.
6. ஆனால் இப்படியெல்லாம் அலட்டிக்கொண்டாலும் எனது எழுத்துக்கள் யாருடைய சமன்களை குலைத்திருக்கிறது என்ற விவரங்கள் என்னிடத்தில் இல்லை. இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது அதீதமோ என்றுகூட தோன்றுகிறது சிலவேளைகளில். எழுத்துகள் வழியே நான் யாரோடு/ எதை/ ஏன் உரையாட விரும்புகிறேன் என்கிற கேள்விகள் எனக்கு மட்டுமேயானதா அல்லது எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படியான கேள்விகள் இருக்குமா? படைப்பாளியின் சுதந்திரம் என்ற வலுவான ஆயுதத்தைக் கொண்டு நான் எந்த அதிகாரத்தை எதிர்த்தாவது என் படைப்புகள் வழியே பேசியிருக்கிறேனா அல்லது என் சமகாலத்தின் குரலுக்கும் அழைப்புக்கும் செவிமடுக்காது தப்பியோடுவதைத்தான் படைப்பாளியின் சுதந்திரம் என்று சொல்லி பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறேனா என்பதெல்லாம் இன்னும் யாராலும் பரிசீலிக்கப்படவில்லை. உன் படைப்புகளால் இந்த சமூகத்தின் அமைதியும் ஒழுங்கும் கெட்டுவிட்டது என்று தண்டிக்கப்படுமளவுக்கு ஏன் இன்னும் என்னால் எதுவும் எழுதிவிட முடியவில்லை என்ற கேள்வி என்னை நிம்மதியற்றவனாக்கியிருக்கிறது. எல்லாத்தளங்களிலும் சமத்துவமின்மையை பேணிவரும் இச்சமூக அமைப்பின் அஸ்திவாரத்தில் ஆப்புவைக்கிற வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்று என் படைப்பு எதுவும் இந்தநாள் வரை தடை செய்யப்படாமல் இருக்கிறபோது, நான் எவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. ஏதோ ஆத்திரம் தீர நாலுவார்த்தை கத்திவிட்டுப் போகட்டும் என்று இந்த அமைப்பு அனுமதித்திருக்கிற எல்லையை மீறாத கவனத்தோடு தான் எனது படைப்புமனம் இயங்கிக் கொண்டிருக்கிறதா? அழுத்தத்தை உருவாக்குகிற சமூகமே அதன் தீவிரத்தைத் தணிக்கிற துளைகளையும் இட்டுவைத்திருக்கிறதா தனக்குள்ளே?
இப்படி எனக்குள் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை பகிர்ந்துகொள்ளும்போது,
நிலவும் சூழலுக்கு ஏற்ற படைப்புதான் வெளிப்படும் என்று சமாதானம் சொல்லப்படுகிறது. பாலஸ்தீனத்தில்,
இலங்கையில் போர் நடப்பதால் அங்கிருந்து வெளிப்படும் படைப்புகள் அதற்கேயுரித்தான உக்கிரத்தோடு
வெளிப்படும் என்றும் தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ அப்படியான கொந்தளிப்பான சூழல் இல்லையென்றும்கூட
சொல்லப்படுகிறது. உண்மையில் இங்கு கொந்தளிப்பான சூழலென்று எதுவுமில்லையா?
உயிர்களைக் காவு கொள்ளுதல், பெண்களை வல்லாங்கு செய்தல், உடைமைகளை அழித்தல்,
குழந்தைகளை அநாதையாக்குதல், உடலுறுப்புகளை சிதைத்தல், வாழிடத்தைப் பறித்து அகதிகளாக
விரட்டியடித்தல், கடும் மனஅழுத்தங்களுக்கு ஆட்படும் வண்ணம் மக்களை கண்காணிப்பதாயும்
கொடூரமாக சித்திரவதை செய்வதாயும் அரசப்படை/ ஆயுதந்தாங்கிய குழு செயல்படுதல்- என்று
ஒரு போர் அங்குள்ள மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் அழிமாண்டங்களை பட்டியலிடலாம்.
நமது அகிம்சாபூமியில் ஒரு வருஷத்தில் மட்டும் 1357 பேர் காவல்நிலையத்திற்குள் உயிரை
இழந்திருக்கிறார்கள். என்கவுண்டர் என்ற பெயரில் எவரொருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு
தேசவிரோதியென்றும் தீவிரவாதியென்றும் முத்திரைக் குத்தி தப்பித்துக்கொள்வது இங்கு ராணுவத்தினருக்கும்
போலிசாருக்குமான தேசிய விளையாட்டாக இருக்கிறது. இதிலே ஸ்பெஷலிஸ்ட்டுகள் உருவாகிவிட்டதாகவும்
அறிய வருகிறோம். விசாரணையேதுமின்றி அப்பாவிகள் பலர் பல பத்தாண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருப்பதை
மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. 19348 பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் ஓராண்டில். புகார் தராதவர்கள் இதில் சேர்த்தியில்லை.
சட்டப்படி கொடுப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்த கூலியைக் கேட்டதற்காக ரெட்டணையில்
சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் எளிய மக்கள். அன்னிய முதலாளிக்காக நிராயுதபாணிகளாயிருக்கும்
தொழிலாளர்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்கள் அரசாங்கத்தால். லட்சக்கணக்கான விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்... பிறந்த ஊரைவிட்டு பஞ்சம் பிழைக்க பெருநகரங்களை
நோக்கி நீளும் தங்க நாற்கரச்சாலைகளில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயக்
கூலிகள்.... தொடரும் வகுப்புக் கலவரங்களால் கொல்லப்படுகிறவர்களைப் பற்றிய விவரங்கள்
நம்மிடம் எப்போதும் உருப்படியாய் இருந்ததில்லை. தலித்துகளுக்கு எதிராக ஒவ்வொரு பதினெட்டு
நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நிகழ்த்தப்படுகிறது. கொஞ்சம் நிலமும் படிப்பும் கொண்டவர்களாய்
இருந்ததற்காகவே ஒரு குடும்பம் அழித்தொழிக்கப்படுகிறது கயர்லாஞ்சியில். செப்டிக் டேங்க்
சுத்தம் செய்ய இறங்கி சாகிறவர்கள் எல்லோருமே ஒரு சாதியினராக மட்டுமே இருக்கிறார்கள்.
சத்துக்குறைவின் காரணமாக ஒரு கிராமத்தில் 10 நாட்களுக்குள் 140 குழந்தைகள் இறந்துபோகின்றனர்.
இப்படியாகத்தான் இந்த நாட்டில் மனிதவுயிர்களும் அவர்களது உடைமைகளும் எந்தவொரு போர்நிகழும்
நாட்டின் சூழலுக்கு சற்றும் குறையாத வண்ணம் அழிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவையெல்லாம்
ஒரு படைப்பாளியின் மெல்லிதயத்தை ஊடுருவித் தாக்காத வெறும் புள்ளிவிவரங்களா?
மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் வெள்ளத்திலும் மழையிலும் சிக்கி மாண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்காக யார் எப்போது எவ்வாறு துக்கப்பட வேண்டும், யாருடைய சாவு இழப்பாக கருதிப் போற்றப்படவேண்டும் என்று ஆளும் வர்க்கமும் அதன் ஊடகமும் காட்டுவதைத் தாண்டி பிறவற்றைக் காணமுடியாத கருத்துக் குருடு நம் படைப்பாளிகளை பீடித்திருக்கிறதா? திட்டவட்டமாயும் வெளிப்படையாயும் தெரிகிற இரு எதிரிகளுக்குள் நடக்கிற ஆயுதம் தாங்கிய சண்டை மட்டும்தான் போர் என்கிற மரபான ராணுவமயப்பட்ட பார்வையிலிருந்து விடுபட்டு இந்தியாவில்/ தமிழ்நாட்டில் மனித வாழ்க்கை எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது என்பதை நம்மால் உணரமுடியாதா? நிராயுதபாணிகளான மக்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் கொலைகளையும் அவமதிப்புகளையும் அலைக்கழிப்புகளையும் தம்முடையதாய் உள்வாங்குவதற்கு ஒரு படைப்பாளி மனதைத் திறந்துவைத்திருப்பாரேயானால், அவராலும் உயிர்த்திரவம் பற்றியெரிய தன் படைப்புச்சக்தியை வெளிக்கொணர முடியும் என்றே நம்புகிறேன். கறுப்பர்களும், லத்தீன் அமெரிக்கர்களும், பாலஸ்தீனியர்களும், இலங்கைத் தமிழர்களும் இப்படியாகத்தான் உக்கிரமும் உயிர்வாழ்தலுக்கான தவிப்பும் சகமனிதன் மீதான கரிசனமும் கொண்டதாக தம் படைப்புகளை மேலேற்றி இயங்கச் செய்கின்றனர் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
‘நம் குழந்தைகள் வயிறு நிரம்ப உண்ணவேண்டுமென்பதற்காக, குளிருக்கு அடக்கமான
ஆடைகளை அணிய வேண்டுமென்பதற்காக, மூட்டைப்பூச்சிகள் இல்லாத படுக்கைகளில் தூங்க வேண்டும்
என்பதற்காக, நம் குழந்தைகளுக்காகவும் மக்களுக்காகவும் பொருள் உற்பத்தி செய்ய வேண்டுமென்பதற்காக....’
போராடினோம் என்று தன் நாவலில் வரும் வங்காரியின் வழியே கூகி வா தியாங்கோ அறிக்கையிட்டுக்
கொள்வதைப்போல நம்மில் எத்தனை எழுத்தாளர்கள் தேறக்கூடும் என்று யோசிப்போமா? ஒரு மனிதன்
கண்ணியமாகவும் சுயமரியாதையாகவும் வாழ்வதற்குரிய அடிப்படைகளை எட்டுவதற்கே வாழ்நாளெல்லாம்
போராட வேண்டியதாயிருக்கிற அவலத்திற்கும் அதன்பொருட்டு அடைகிற இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும்
நிலவும் இந்த சமூக அமைப்பின் உள்கட்டமைப்பே காரணமாயிருக்கிறதென்ற குறைந்தபட்ச அரசியல்
புரிதல் வந்துவிடுமானால் ஒரு படைப்புமனதிற்கு தனது இயங்குதிசை பிடிபட்டுவிடும்தானே?
ஆனால் இங்குதான் ஒரு படைப்பாளியின் உலகக் கண்ணோட்டம் எவ்வாறு பொதுப் புத்தியிலிருந்து
விலகியிருக்கிறது அல்லது வேறுபட்டுள்ளது என்ற கேள்வி வருகிறது.
எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வைப் பேணிவரும் இந்துமத/ ஆணியக் கண்ணோட்டத்திலிருந்து
உலகைக் காண்கிறபோது எல்லாமே அதனதன் இயல்பில் இயங்கிக் கொண்டிருப்பதாயும் நெருடலாய்
எதுவுமே இல்லையென்பது போலவும் தெரிவதில் வியப்படைய ஒன்றுமில்லை. அதற்கு எதிரான எத்தனிப்புகள்கூட
அதற்குள்ளேயே பொருந்திக் கொள்வதற்கான முயற்சியாகத் தான் தென்படுமேயன்றி விடுபடுவதற்கான
போராட்டமாக உணரப்பட மாட்டாது. எனவே வாழ்வின் உன்னதங்களை தரிசிக்க வைப்பது அல்லது அந்த
உன்னதங்களை மறைத்துப் போர்த்தியிருக்கும் பொருக்குகளை சொறிந்து களைவதுதான் தன் படைப்பின்
அதியுச்ச எல்லை என்று தன்னைத்தானே தாழ்விறக்கம் செய்துகொள்கிற படைப்பாளி, எவ்வித சங்கடங்களுமற்று
தன் தினப்படி வாழ்க்கையை கடக்க முடிந்தவராகிறார். அதன்பொருட்டே அவர் மழை, அருவி, கடல்,
காற்று, குயில், மலர், குழந்தை, ஈரம், அன்பு, காதல், கருணை, கத்திரிக்காய் என்பவற்றில்
தோய்ந்து தன்னை அனிச்சத்தின் மறுவுருவாய் கற்பித்துக்கொண்டு தனது ‘மெல்லிதயத்தை’ படைப்பின்
வழியே யாவருக்கும் பகிர்ந்தளிக்க முன்வருகிறார். வாழ்வின் மென்மையைப் பேசும் இவர்களிடமிருந்து
இவ்விடத்தில் நான் தனி கிளையெடுத்துப் பிரிந்து வாழ்வின் மூர்க்கத்தை எழுத முனைகிறேன்.
என்போன்றே சிலர் நடந்த கொடித்தடம் ஒன்று மெல்லிதாய் நீள்கிறது என்முன்னே...
7. “....இன்றைய காலகட்டத்தில் பண்டை நாட்களின் ஞானியின் பணியை மேற்கொள்ள
வேண்டும். அதாவது தான் சார்ந்துள்ள சமூகத்தின் மனசாட்சியாக இருந்து வரப்போகும் அபாயத்தை
முன்கூட்டி தெரிவித்து அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்து நெறிப்படுத்தவது எழுத்தாளனின்
பணி. அறிவுப்பூர்வமாகவும் ஊக்கத்துடனும் சமூகத்தின் மறு உருவாக்கத்தில் தனது பங்கைச்
செலுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுதான் அவனது எழுத்தின் அவசரமான/ அத்தியாவசியமான
செய்தியாக இருக்கவேண்டும். இன்றைய ஆப்பிரிக்காவின் நல்ல எழுத்தாளனின் குரல் வலிமையாக
உறுதியாக ஊடுறுவுவதாக இருக்கிறது. தொந்தரவு செய்யும் ஒரு செய்தி அதில் பொதிந்திருக்கிறது...
” என்கிற கூகியைத்தான் நான் வாழும் காலத்தின் சக்தியூட்டும் படைப்பாளியாக உணர்கிறேன்.
சிலர் எழுதிய தாள்கள் மலம் துடைக்கவும் தகுதியற்றதாக அருவருப்பூட்டும்.
ஆனால் சிறையிலடைக்கப்பட்ட கூகி அங்கு மலம் துடைக்கும் தாளில் ஒரு நாவலை எழுதி முடிக்கிறார்.
அது நாட்டின் வயல்வெளிகளிலும் அடுப்படிகளிலும் தெருமுனைகளிலும் மதுபான விடுதிகளிலும்
வரிக்குவரி வாசிக்கப்படுகிறது. மதுபானவிடுதியில் வாசித்துக் காட்டுகிறவனின் கோப்பை
காலியாகிற போதெல்லாம் என் கணக்கில் அவனது கோப்பையை நிரப்பு என்று கூட்டத்திலிருந்து
யாரோ ஒருவன் செலவழிக்கிறான் கூகியின் எழுத்தை கேட்பதற்காக. தமிழில் அப்படி வாசிக்கப்படும்
உக்கிரமான முதல் படைப்பாக என்னுடைய எழுத்துகள் இருக்க வேண்டும் என்ற எளிய ஆசையை அகங்காரம்
துளியுமின்றி இவ்விடத்தில் வெளிப்படுத்துகிறேன். எனக்கும் முன்பாகவே யாருடைய எழுத்தேனும்
வாசிக்கப்படுமேயானால், வாசித்துக் காட்டுகிறவரின் கோப்பை என் செலவில் தளும்பி வழியும்-
என் மகிழ்வைப்போல.
2008 டிசம்பரில் சந்தியா பதிப்பகம் வெளியிட்ட "ஆதவன் தீட்சண்யா கதைகள்" தொகுப்புக்கு எழுதிய என்னுரை.
வெள்ளி, ஜூலை 14
மக்களின் சம்மதமே அரசின் அதிகார எல்லை - ஆதவன் தீட்சண்யா
நீலம் ஆசிரிய குழுவினருடனான உரையாடலில் வந்த கேள்விகளும் நானளித்த பதில்களும்
1. ஒரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன் அது குறித்து கருத்துக் கேட்பதுதானே
ஜனநாயகத்தன்மை. ஆனால், அப்படிச் செய்யாதது கூட்டணிக் கட்சியினர் உட்பட மக்கள் பிரதிநிதிகளை
உதாசீனப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?
ஒரு சட்டத்திருத்தம் நாளை முன்மொழியப்படுவதாக இருந்தால் அதுபற்றிய சுருக்கமான
குறிப்பினை இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகிற பொதுவான நடைமுறை 12மணிநேர வேலை நாள் சட்டத்திருத்த முன்வரைவு
விசயத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பை படித்துப் பார்த்து தெரிந்துகொண்டுதான்
சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்டத்திருத்தத்தை
முன்மொழிய வேண்டாம், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதற்கு முதலமைச்சரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர்
வேல்முருகனும் முதல்வரிடம் கோரியிருக்கிறார். முதல்வர் உறுதியளித்தற்கு மாறாக சட்டத்திருத்தம்
முன்மொழியப்பட்டதே கண்டனத்திற்குரியது. முன்மொழியப்பட்டுவிட்ட நிலையில் அந்தத் திருத்தத்தின்
மீது விவாதம் தேவை என்று உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்து குரல் வாக்கெடுப்பின்
(ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க) மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி
அவையில் தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவாதமே இன்றி சட்டங்களையோ திருத்தங்களையோ
நிறைவேற்றுவதானது சட்டமன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பானது.
“அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதர்கும் அரசாங்கத்தை
மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம்,
இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்றமுடியாத உரிமைகளை தனிமனிதருக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம்
அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காகவென்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது.
எனவே ஆளப்படுவோரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும்
இயங்கவேண்டும்…” என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருப்பதை ஆட்சியாளர்கள் பின்பற்றும்பட்சத்தில்
இந்தச் சட்டத்திருத்தம் பற்றி பொதுவிவாதத்தை நடத்தியிருப்பார்கள். குறைந்தபட்சம் கூட்டணிக்கட்சிகளுடனாவது
பேசியிருப்பார்கள்.
2. எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத்
தெரிந்த திமுக அரசே தொழிலாளர் வர்க்கத்திற்குத் துரோகம் செய்துள்ளது. இந்நிலையில்,
பாஜகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?
பாஜகவையும் திமுகவையும் சமன்படுத்திப் பார்க்க முடியாது, கூடாது. அதுவும் இதுவும்
எதுவும் சரியில்லை என்று எல்லோரையும் குத்தம் சொல்லிக் கொண்டிருப்பதையே மகத்தான அரசியல்பணி
என்று திரிகிறவர்கள் கிளப்பிவிடுகிற இதுபோன்ற
வாதங்களை நாம் நிராகரிக்க வேண்டும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற அரசியல்
செயல்திட்டமும் அதை அடைவதற்கான வழிமுறைகளும் கொண்டவர்கள் சொந்த மதிப்பீடுகளை கைக்கொள்ள
வேண்டும். தூய்மைவாதம் பேசி எல்லோரையும் சனாதனிகளாகிய எதிரிகளின் பக்கம் தள்ளிவிடுவது
நமது நோக்கங்களுக்கு ஊறு விளைவிப்பதாகும்.
யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் 20 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மட்டுமே
என்னுடைய அரசில் பணியாற்றலாம் என்று அறிவித்தபோது அதன் நடைமுறைச் சாத்தியம், அறிவியல்தன்மை
போன்ற எதுவுமே விவாதத்திற்குள்ளாக்கப்படவில்லை. ஊடகங்கள் அந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு
இருப்பதான தோற்றத்தைக் கட்டமைக்க முயன்றன.
(பார்க்க: காமிய தேசத்தில் ஒருநாள் என்கிற என்னுடைய சிறுகதை). இதே சட்டத்திருத்தத்தை
ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவும்
நிறைவேற்றிய போது அது இடதுசாரி தொழிற்சங்கங்கள் சிலவற்றின் பிரச்னையாக குறுக்கிப் பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதை வரவேற்கத்தகுந்த
அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்கவேண்டும். இந்த முதிர்ச்சி ஏன் அந்த இந்த விசயத்தில்
வெளிப்படவில்லை என்று நொட்டை சொல்லிக்கொண்டிருக்காமல் இதை பரவலாக – வளர்த்தெடுப்பது
அவசியம். (திமுகவின் இணையச் செயல்பாட்டாளர்கள் சிலர் மொன்னை விசுவாசத்தைக் காட்ட செய்த
முயற்சிகூட அவ்வளவாக எடுபடவில்லை).
தமிழ்நாட்டில் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியதும் வறட்டு கெளரவம் பார்க்காமல்
உடனடியாக அமைச்சர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மே 2ஆம் தேதி
நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்காக கூட காத்திருக்காமல் பேச்சுவார்த்தை நடந்த அன்றே
சட்டத்திருத்தத்தின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஜனநாயகப்பண்பை கடந்த எட்டாண்டுகளில் பாஜக எந்த விசயத்திலாவது வெளிப்படுத்தியுள்ளதா?
விமர்சனம் அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்களை அர்பன் நக்சல், ஆண்ட்டி இந்தியன், தேசவிரோதி,
இன்டலக்சுவல் ஜிகாத், அகடமிக் ஜிகாத் என்று அவதூறு செய்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை,
தேசிய பாதுகாப்புப்படை, சிபிஐ போன்ற தன் சட்டப்பூர்வ அடியாள் பட்டாளங்களையும் சட்டவிரோத
அடியாள் பட்டாளமான சங்பரிவார கும்பலையும் ஏவி ஆளை நசுக்கும் பாஜக உலக நாடாளுமன்ற வரலாற்றுக்கு
நேர்ந்த களங்கம். நேற்றுவரை அவர்களுக்கு இணக்கமாக இருந்த ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால்
மாலிக் மீதான ஒடுக்குமுறை புத்தம்புதிய சான்று. விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியுதவி
செய்ததை குற்றமாக கருதி, நூற்றாண்டுகால பாரம்பரியமுள்ள அஞ்சல் தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்தை
ரத்துசெய்திருக்கிறது பாஜக அரசுடன் திமுக அரசை எப்படி சமன்செய்து ஒப்பிட முடியும்?
3. ஒருநாளின்
மூன்றில் ஒருபகுதியை வேலைக்கு ஒதுக்குகிறோம். அதிலேயே உழைப்புச் சுரண்டல், பாலியல்
சுரண்டல் எனப் பல ஒடுக்குமுறைகள் அரங்கேறுகின்றன. இந்நிலையில் ஒருநாளின் இரண்டில் ஒரு
பகுதி வேலை என்ற நிலை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?
விலங்குகள் கூட தமது சக்திக்கு அப்பாற்பட்ட
வேலைகளைச் செய்யவைக்கும் போது முரண்டு பிடித்து மறுத்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால்
சூரியன் உதிப்பதையோ மறைவதையோ பார்க்கமுடியாதபடி தொழிலாளிகள் ஆலைகளுக்குள் அடைத்துவைக்கப்பட்டு
அவர்களது ரத்தமும் வியர்வையும் உறிஞ்சிப்பட்டன. தொடக்ககால முதலாளித்துவத்தின் இந்தக் கொடூர குணம் இன்றளவும்
நீடிக்கிறது. குறைந்தபட்சம் இடையறாத உழைப்பில் ஈடுபடுவதால் இழக்கும் ஆற்றலை திரும்பப்
பெறுவதற்கான அவகாசத்தைக்கூட தொழிலாளிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் அவர்களை மனித நிலையிலிருந்து
தாழ்த்தி இயந்திரநிலைக்குள் பொருத்த முனைகிறது முதலாளித்துவம். கடைநிலை ஊழியர் தொட்டு
கணினித் தொழில்நுட்ப ஊழியர் வரை இந்தச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் பணியிடத்திற்கு
அப்பால் ஓர் உலகம் இருப்பதையே அறிய முடியாதவர்களாக அறிந்தும் துய்க்க முடியாதவர்களாக
ஆளுமைக் குறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கான தனிவிருப்பங்கள், குடும்பவாழ்வு,
சமூக ஒன்றுகூடல் போன்றவற்றில் பங்கெடுக்காமலும்,
அரசை மாற்றுவதிலும் உருவாக்குவதிலும் பங்கெடுக்காமலும் உள்ளொடுங்கியும் ஒருகட்டத்தில் இவற்றில் நாட்டமற்றவர்களாகவும் மாறிப்போவார்கள்.
கிடைக்கும் சொற்பநேரத்தில் அசதியைப் போக்கிக் கொள்வதற்கான எளிய வழிகளில் தம்மை ஈடுபடுத்திக்
கொள்வதே போதுமென்ற நிலை உருவாகும்.
4. வேலைக்கான ஊதியம் என்பதிலேயே இங்கு பாகுபாடு நிலவுகிறது.
கடும் உழைப்பாளி, திறன் உழைப்பாளி என்று பிரிவினை வர்க்கப் படிநிலைகளை உருவாக்குகிறது.
இந்நிலையில், 12 மணி நேர வேலை எம்மாதிரியான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்?
ஒரு தொழில் நிறுவனத்தின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் தேவையற்றவர்கள்
என்ற நிலை உருவாகும். மூன்று ஷிப்டுகளுக்கான தொழிலாளர்களில் எடுத்தயெடுப்பில் ஒரு ஷிப்ட்
தொழிலாளிகள் தேவைப்படாதவர்களாக ஆக்கப்படுவார்கள். இவர்களை வெளியே அனுப்ப விருப்ப ஓய்வு
என்கிற பெயரில் கட்டாய வெளியேற்றத்தை நிர்வாகங்கள் கைக்கொள்ளும். ஏற்கனவே உள்ள வேலையின்மையை இது மேலும் அதிகரிக்கச்
செய்யும். வேலையின்மை அதிகரிக்கும்போது, உழைப்புச்சந்தையில் தொழிலாளர்கள் மலிவான விலைக்குக்
கிடைப்பார்கள். இவர்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளார்களின் ஊதியம் உள்ளிட்ட பணப்பயன்கள்,
உடல்/மனநலம் சார்ந்த உரிமைகள் பறிக்கப்படும். சமூகத்தின் பெரும்பகுதியாகிய உழைக்கும்
மக்கள் மனநிறைவற்ற ஒரு வாழ்க்கை முறைக்குள் மேலும் தீவிரமாக தள்ளப்படுவார்கள்.
5. இந்தியாவில் ஏற்கெனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழிற்நுட்பத்துறையிலும்
தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு நிரந்தர
தீர்வு எப்போது கிடைக்கும்.
தொழிலாளர் நல விதிகள், பணிப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதிய மாற்றம், லாபத்தில்
பங்கு, கண்ணியமான பணியிடச் சூழல் போன்றவை முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டிய அரசே
நடத்தும் நிறுவனங்களில்கூட முறையாக அமலாவதில்லை. எனில் தனியார் நிறுவனங்களிலோ அல்லது
எவ்வித கூட்டுபேரச் சக்தியுமற்ற முறைசாரா தொழில்களிலோ இவையெல்லாம் எப்படி கிடைக்கும்?
நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழில்களில் உள்ளவர்கள்
வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே. எஞ்சிய 94% தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில்தான்
உள்ளனர். இவர்களை அணிதிரட்டுவதும், அணிதிரட்டப்படாத நிலையிலேயே கூட கண்ணியத்துடன் வாழ்வதற்கான
சட்டப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம். சட்டவிரோதமாக
ஒரு துறையிலோ அல்லது நிறுவனத்திலோ 12 மணிநேரம் வேலைநாளாக இருக்கிறதென்றால் அங்கு 8
மணிநேர வேலைநாளை உறுதிசெய்வதுதான் அரசின் பொறுப்பாக இருக்கமுடியும். அதல்லாமல், ஒரு
சுரண்டலை நியாயப்படுத்தி எல்லோரையும் அந்த விஷச்சூழலுக்குள் தள்ளக்கூடாது.
பார்ப்பனீயம், முதலாளியம் என்கிற இரண்டு
எதிரிகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், தொழிலாளர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும்
ஓர் அரசை நிறுவிக்கொள்ளும் அளவுக்கு அரசியலில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றும் அண்ணல்
சொல்லிச் சென்ற வரிகளில் தான் இதற்கான தீர்வு இருப்பதாக கருதுகிறேன். அடைவதற்கோர் பொன்னுலகம்
உண்டு என்று மார்க்ஸ் சொன்னதன் பொருளும் இதுதான். ஆனால் இந்த மேற்கோள்களை கொட்டை எழுத்தில்
போடுவதாலோ தொண்டை நரம்பு புடைக்க ஆவேசமாக முழங்குவதாலோ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்
போவதில்லை. கற்பி, போராடு, ஒன்றுசேர் எனும் சொற்களின் உள்ளார்ந்த பொருளை விளங்கிக்கொண்டு செயல்படுவதில் தான் மாற்றத்தை இழுத்துவர முடியும்.
நீலம், 2023 ஜூன் இதழ்
சனி, ஜூன் 3
ஆளுநரின் ஆன்மிகப்பொய் அல்லது ஆன்மிகமே பொய் - ஆதவன் தீட்சண்யா
உலகமே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த மே 1 அன்று முன்னெப்போதுமில்லாத வழக்கமாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் உருவான நாளை ஆளுநர் மாளிகை கொண்டாடியிருக்கிறது. மற்ற மாநிலங்கள் உருவான தினங்களை ரவி இவ்வாறு கொண்டாடுகிறாரா, தமிழ்நாடு அல்லது வேறு மாநிலங்கள் உருவான தினங்களை மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் கொண்டாடுகிறார்களா என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்நாடு ஆளுநரின் இந்தக் கொண்டாட்டத்திற்கு தேவை என்ன வந்தது?
இந்நிகழ்வில்
சாதியத்திற்கெதிராகவும் சமத்துவத்திற்கும் போராடிய மகாத்மா ஜோதிராவ் பூலே, நாட்டின்
முதலாவது ஆசிரியை சாவித்திரிபாய், சமூகநீதியின் ஓரங்கமாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய
சாகு மகராஜ், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகிற்கே ஒளிபாய்ச்சும் அண்ணல் அம்பேத்கர்,
சுதந்திரப் போராட்டத்தில் மராட்டியரின் பங்கு, மும்பையை தம்முழைப்பால் வளப்படுத்திக்
கொண்டிருக்கும் தாராவி தமிழ்மக்கள் – பற்றியெல்லாம் ஆளுநர் பேசியிருந்தால் இந்நிகழ்வை
நடத்தியதற்கான நியாயம் இருந்திருக்கும். ரவியோ “சத்ரபதி
சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தார். ஆனால், உண்மையாக அவா் ஆங்கிலேயரிடமிருந்து ஆன்மிகம்,
கலாசாரத்தை பாதுகாக்க படையெடுத்தார்” என்று பேசியுள்ளார். உண்மையில் சிவாஜி
ஆங்கிலேயர்மீது படையெடுத்தாரா, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுத்தாரா?
1674
ஜூனில் நடந்த சிவாஜியின் முடிசூடும் விழாவை நேரில் பார்த்த டாக்டர் ஃபிரையர் “ராஜா, இந்து மரபுப்படி தராசுத்தட்டில் தங்கத்தால் நிறுக்கப்பட்டார்.
அவரது எடை சுமார் 16000 வராகன்கள். இத்துடன் மேலும் ஒரு இலட்சம் வராகன்கள் சேர்த்து
அவரது நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருந்த பிராமணர்களுக்கு
அவர் முடிசூட்டிக் கொண்ட மறுநாள் விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கிறார்.
1676ஆம்
ஆண்டின் இறுதியில் மராட்டியத்திலிருந்து பெரும்படையுடன் கீழை கர்நாடகம் நோக்கி புறப்பட்டார்
சிவாஜி. இதற்கான காரணம் பற்றி “சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ்” என்ற நூலில் ஜதுநாத் சர்கார்
விரிவாக விவாதிக்கிறார். முடிசூடும் விழாவினால் சிவாஜியின் கருவூலம் பெருமளவு
காலியாகியிருந்தது. அடுத்தடுத்த படையெடுப்புகள் செலவைத்தான் இழுத்துவிட்டனவேயன்றி,
சொல்லிக்கொள்ளும்படியான வருவாயை ஈட்டித் தரவில்லை. ஏற்கனவே இரண்டுமுறை சூரத்தின் வளம்
முழுவதையும் உறிஞ்சியெடுத்தாகிவிட்டது. (இந்தச் சூறையாடலின் கொடூரத்தை அருணன் ‘காலம்தோறும்
பிராமணியம்’ நூலில் ‘சூரத் கொள்ளை’ என்ற தலைப்பில் பதைபதைக்க விவரித்துள்ளார்). அருகாமை
நாடுகளிலும் இனி கொள்ளையடிக்க வளப்பமில்லை. எனவே செல்வவளம் கொழிக்கும் புதிய பகுதிகள்
தேவையாயிருந்தது சிவாஜிக்கு.
கீழை
கர்நாடகம் என்பது தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரப்பகுதி வரை நீள்கிறது. இப்பெரும்பரப்பின்
வளம், துறைமுகங்களில் நடக்கும் அன்னிய வர்த்தகம், கனிமச்சுரங்கங்கள், அரசுகளின் பொறாமைப்படத்தக்க
ஆண்டு வருமானம், தங்கத்தை பூமியில் புதைத்துவைக்கும் கர்நாடகத்தவர்களின் வழக்கத்தால்
கிடைக்கும் புதையல்கள், பெருஞ்சொத்துடைய கோவில்கள், வெள்ளாமை கொழிக்கும் வயல்கள்– இவையெல்லாம்
சேர்ந்து தங்கபூமி என்று அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இப்பகுதி சிவாஜியை சுண்டியிழுத்தது.
வழிநெடுக
உள்ள ஆட்சியாளர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சிவாஜியின் வருகை தூதுவர்கள் மூலம் முன்கூட்டியே
தரப்பட்டது. சிவாஜியின் படை ஊருக்குள் புகுந்தால் என்ன கதியாகும் என்கிற அச்சம் பரவியிருந்ததால்
எதிர்பார்த்த பலன் கிடைத்தது. இடைவழியில், 1677 பிப்ரவரியில் ஹைதராபாத்தில் கோல்கொண்டா
சுல்தானை சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டார் சிவாஜி. அரச மரியாதையுடனும் விழாக்கோலம்
பூண்டு கொண்டாட்டத்துடனும் சுல்தானால் வரவேற்கப்பட்ட சிவாஜி அவரது விருந்தினராக
மார்ச் முற்பகுதிவரை – சுமார் ஒருமாதம் தங்கியிருந்தார்.
பிஜப்பூர்
சுல்தானின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளைத் தாக்கி கைப்பற்றினால் அதிலொரு பகுதியை
கோல்கொண்டா சுல்தானுக்கு தருவதாக சிவாஜி வாக்குறுதியளித்தார். இதற்கான ராணுவச்செலவினங்களை
ஈடுகட்ட நாளொன்றுக்கு 3000 ஹன் தொகை மானியம், ஆண்டுதோறும் அன்பளிப்பாக ஒரு இலட்சம்
ஹன், மராட்டியத்தின் தூதுவருக்கு சுல்தானகத்தில் இடம், 5000 பேர்கொண்ட படை, ஆயுதங்கள்
ஆகியவற்றை தருவதற்கு சுல்தான் சம்மதித்துள்ளார். அங்கிருந்த செல்வந்தர்களும் மக்களும்
சிவாஜிக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளனர்.
எதிர்பார்த்ததைவிடவும்
கூடுதலான ஆதாயங்களுடன் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய சிவாஜிக்கு கர்நூலில் 5இலட்சம்
ஹன் திறையாக கிடைத்துள்ளது. பின் நல்லமலா காடுகளூடாக பயணித்தவர், இந்துக்களுக்கு மிகப்புனிதமான
நிவ்ரிடி சங்கமத்தில் (கிருஷ்ணா நதியுடன் பவனிஷா நதி கலக்குமிடம்) நீராடி வழிபட்டிருக்கிறார்.
படைகளை அனந்தப்பூருக்கு அனுப்பிவைத்துவிட்டு தென்னிந்தியாவின் மிகத்தொன்மையான சிவத்தலமான
ஸ்ரீசைலத்திற்கு 1677 மார்ச் 24 சென்று ஒன்பது நாட்கள் தங்கியிருந்து சிவனை வழிபட்டிருக்கிறார்.
‘கைலாஷ்த்வாரா – கைலாயத்தின் நுழைவாயில்’ என்றழைக்கப்படும் அப்பகுதியின் இயற்கையழகிலும்
அங்கு தவழ்ந்த அமைதியிலும் மனம் தோய்ந்த சிவாஜி, தான் இறப்பதற்கு இதைவிடவும் புனிதமான
இடம் வேறெங்கும் இருக்கமுடியாது என்றெண்ணி அங்கேயே தன் தலையை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக
(நவகண்டம்) படைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த அமைச்சர்கள் அவர் இந்து
உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துரைத்து தடுத்துவிட்டதால், அவர் அங்கு ஸ்ரீகங்கேஷா
என்ற மடாலயத்தைக் கட்டி லட்சக்கணக்கான பார்ப்பனர்களுக்கு உணவளிக்க பெருந்தொகையையும்
கொடுத்திருக்கிறார். ஒருவேளை இதைத்தான், இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை, ஆன்மிகத்தையும்
கலாசாரத்தையும் மீட்டெடுக்கும் செயல் என்கிறாரா ஆளுநர்?
1677
ஏப்ரல் முதல்வாரத்தில் ஸ்ரீசைலத்திலிருந்து அனந்தப்பூர் சென்று அங்கிருந்த தன் படையுடன்
நந்தியால் கடப்பா திருப்பதி காளஹஸ்தி வழியாக திறை வசூலித்தபடி மே முதல்வாரத்தில் சென்னைக்கு
மேற்கே ஏழுமைல் தொலைவிலுள்ள பெட்டபாலம் என்கிற ஊரை அடைந்த சிவாஜி அங்கு முகாமிட்டிருக்கிறார்.
அங்கிருந்துகொண்டே, மே9 அன்று முன்னோட்டப்படையாக 5000 பேரடங்கிய குதிரைப்படையை காஞ்சிபுரம்
வழியாக பீஜப்பூர் சுல்தானின் வசமிருந்த செஞ்சிக்கு அனுப்பியிருக்கிறார். பின்பு நேரில்
சென்ற சிவாஜி, பீஜப்பூர் படைகளின் தளபதிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு எளிதாக செஞ்சியைக்
கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் மே 23ஆம் தேதி வேலூரை வந்தடைந்த சிவாஜி அங்கு பீஜப்பூர்
சுல்தானின் கீழிருந்த கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். (14 மாதங்களுக்குப் பிறகு
வசமானது).
புதிதாக
கைப்பற்றிய பகுதிகளை தனக்கு விட்டுக்கொடுக்காமல் சிவாஜியே வைத்துக் கொண்டதை ஒப்பந்த
மீறலாக கருதிய கோல்கொண்டா சுல்தான், சிவாஜிக்கு கொடுத்துவந்த பணம் உள்ளிட்ட உதவிகளை
நிறுத்திக் கொண்டார். இதனால் ஏற்பட்ட பணமுடையைச் சமாளிக்க சென்னை, பழவேற்காடு பகுதிகளின்
செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் 2இலட்சம் ரூபாய் கடன் கேட்டு சிவாஜி கடிதங்களை
அனுப்பினார். இவர்களில் யாரும் தப்பமுடியாதபடி சிவாஜியுடன் வந்தவர்கள் மிரட்டி பலவந்தமாக
வசூல் செய்தனர். அதுவும் போதாமல் தவித்த சிவாஜியின் பார்வை, தஞ்சாவூர் பக்கம் திரும்பியது.
தஞ்சாவூரை அப்போது ஆண்டு கொண்டிருந்தது வேறு யாருமல்ல, சிவாஜியின் சொந்த தம்பி - அவரது
தந்தையின் இரண்டாம் தாரத்துக்குப் பிறந்த எகோஜி என்கிற வெங்கோஜி.
பீஜப்பூர்
சுல்தானின் தளபதியான எகோஜி, சிவாஜிக்கு முன்பே தமிழ்நாட்டிற்குள் வந்து, 1676ஆம் ஆண்டு
நாயக்கர்களிடமிருந்து தஞ்சையை கைப்பற்றி இங்கு மராத்தியர் ஆட்சியை நிறுவியிருந்தார். “…தனது நிலையை வலுப்படுத்த எண்ணிய அவர் வடக்கிலுள்ள மராத்தியர்களையும்
அந்தணர்களையும் பதவியில் அமர்த்தி நிர்வாகத்தை மாற்றியமைத்தார். விவசாயிகளின் நிலங்கள்
பிடுங்கப்பட்டன. இப்புதிய எஜமானர்கள் நல்ல நிலங்களை தங்களுக்கு வைத்துக்கொண்டு தமிழ்
விவசாயிகளை குத்தகையாளர் நிலைக்கு மாற்றினர்… எகோஜி விளைச்சலில் நான்கில் மூன்று பகுதியை
வரியாக வசூலித்தார்; செலுத்தவேண்டிய தொகையை பணமாக வசூலித்து, வரிகளை அதிகரிக்க பொருள்களின்
விலையை தன்னிச்சைப்படி உயர்த்தி, தனக்கென பொக்கிஷங்களை கோயில்களில் ஒதுக்கிவைத்தார்…”. இதுதான்
எகோஜி ஆட்சியின் லட்சணம்.
தம்பியைச்
சந்திக்க தஞ்சாவூர் வரும் வழியில் வாலிகண்டபுரம் ஆளுநரான ஷெர்கானைத் தோற்கடித்த சிவாஜி,
கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமால்வாடியில் முகாமிட்டார். அங்கு பிரஞ்ச் தூதர் எம்.ஜெர்மைன்
சிவாஜியுடன் மூன்றுநாட்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் (ஆனாலும் சிவாஜி
படையின் கொள்ளையிலிருந்து பிரஞ்ச் பகுதிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை). தஞ்சாவூரிலிருந்து
வந்துகொண்டிருந்த தம்பியை திருமானூருக்குச் சென்று எதிர்கொண்டு வரவேற்றிருக்கிறார்
சிவாஜி. அண்ணனும் தம்பியும் திருமால்வாடியில் எட்டுநாட்கள் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள்.
தங்களது தந்தை பாகப்பிரிவினையை பாரபட்சமாக செய்து தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக மனத்தாங்கல்
கொண்டிருந்த சிவாஜி, இப்போது தனக்குரிய பங்கை நேர்செய்து தரும்படி தம்பியிடம் கேட்டிருக்கிறார்.
பணம், நகை, குதிரைகள், படை, ஆளுகைப்பரப்பு அனைத்திலும் நான்கில் மூன்று பங்கினைக் கோரிய
அண்ணனிடம் மறுத்துப் பேசினால் தன் கதி என்னவாகும் என்றுணர்ந்த தம்பி ஜூலை 23 அன்று
இரவோடிரவாக கொள்ளிடம் தாண்டி தஞ்சைக்கு தப்பியோடிவிட்டார். ஆத்திரத்திமுற்ற சிவாஜி,
கொள்ளிடத்தின் வடகரையில் இருந்த எகோஜியின் பகுதிகளைக் கைப்பற்றினார்.
1677
ஜூலை 27 அங்கிருந்து கிளம்பி திட்டக்குடியில் இடைத்தங்கலிட்டவர், படையினரை எலவனாசூர்
மீது ஏவியுள்ளார். பட்டுத்துணிகள், சந்தனக்கட்டைகள், வாசனை திரவியங்கள், மாலத்தீவு
தேங்காய்கள், கையுறைகள், கூர்வாட்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளுடன் வந்திருந்த தேவனாம்பட்டணம்
டச்சு தலைமை அதிகாரியைச் சந்தித்துள்ளார். பின் அங்கிருந்து தன் பரிவாரத்தினருடன் விருத்தாச்சலம்
சென்று ஆகஸ்ட் 1-3 வரை தங்கி சிவன் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். (ரவி சொல்லும்
ஆன்மிகத் தேடல் தலைப்பில் இதை வரவு வைப்போம்). இதனூடே சிதம்பரமும் விருத்தாச்சலமும்
அடுத்த சில வாரங்களில் பரங்கிப்பேட்டையும் (போர்டோ நோவா), அக்டோபரில் ஆரணியும் சிவாஜியின்
வசமானதையடுத்து தென்னாற்காடு, வடாற்காடு முழுவதும் அவரது ஆளுகைக்குள் வந்தது.
***
தமிழ்நாட்டில்
சுல்தான்களின் ஆளுநர்களுடனும் சொந்தத் தம்பியுடனும் போரிட்ட சிவாஜி ஆங்கிலேயர்களிடமிருந்து
ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க போரிட்ட வரலாற்றைப் பார்ப்போம்.
சிவாஜி சென்னைக்குள் வந்தார் என்பதை நேரடியாக குறிப்பிடும் ஆவணம் எதுவும் இல்லை. “…வழியில் அவர் மதராஸ் வழியாக கடந்து சென்றார்…” என்கிற குறிப்பு சுட்டும் காலகட்டம் 1677 மே. சென்னைக்கு அருகாமையில் சிவாஜி முகாமிட்டிருந்ததற்கு பலநூல்களிலும் ஆதாரங்கள் உள்ளன. (இங்கு ஓர் இடைத்தகவல்: சென்னையில் தம்பிசெட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு 1677 அக்டோபர் 3 அன்று சிவாஜி வந்து அம்மனை தரிசித்துச் சென்றதாக கோவிலில் ஒரு கல்பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்நாளில் இரண்டுநாட்கள் நடையில் சென்னையை எட்டும் தொலைவில் சிவாஜி இருந்திருக்கிறார்.)
பெட்டபாலத்தில்
தங்கியிருக்கையில் சென்னையிலிருந்த ஆங்கிலேயர் கவுன்சிலுக்கு சிவாஜி தனது தூதுவர்களை
(மகத்ஜி பந்த்) இரண்டுமுறை அனுப்பிவைத்திருக்கிறார். “14 மே 1677, இன்று ஒரு அந்தணர் மற்றும் வேறு இரண்டு பிரஜைகள் மூலம்
சிவாஜி மன்னரிடமிருந்து சில கிளர்ச்சியூட்டும் கற்களையும் விஷத்தை முறிக்கும் மருந்துகளையும்
கேட்டு ஒரு செய்தியும் கடிதமும் கிடைத்தன. நாங்கள் எங்கள் தூதர் மூலமாக எங்கள் தோட்டங்களில்
கிடைக்கும் சில பழங்களோடு அவர் கேட்டதையும் ஒரு உள்நாட்டுக் கடிதத்துடன் அனுப்பத் தீர்மானித்துள்ளோம்.
அந்தண தூதருக்கு மூன்று கெஜம் அகன்ற துணியையும் கொஞ்சம் சந்தனக்கட்டையையும் அளிக்க
முடிவெடுத்துள்ளோம். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும் இந்தச் சிறிய காணிக்கைகளுக்காக
பணம்பெறுவது சரியல்ல என்று கருதுகிறோம். அவர் எவ்வளவு பெரிய நபர் என்றும் அவர் மேன்மேலும்
வளரவளர மதிப்புமிக்க கம்பனிக்கு அவரது நட்பு எவ்வளவு பொருளுடையதாக இருக்கும் என்பதையும்
கருத்தில்கொண்டே இவ்வாறு முடிவுக்கு வந்தோம்” என்கிறது பிரிட்டிஷ் ஆவணமொன்று.
சிவாஜிக்கு அனுப்பப்பட்ட இக்காணிக்கைகளின் மதிப்பு அறுபது வராகன்கள். இவற்றுக்கு
நன்றி தெரிவிக்கும் கடிதத்துடன் இதேவகைப் பொருள்களை மீண்டும் கேட்டு மே 25ஆம் தேதி
சிவாஜி வேலூரிலிருந்து ஆட்களை அனுப்பியுள்ளார். 52 வராகன் மதிப்பில் ஆங்கிலேயர்கள்
கொடுத்தனுப்பியுள்ளனர்.
தென்னாற்காட்டிலிருந்து
1677 செப்டம்பர் 22ஆம் தேதி வாணியம்பாடி வந்தடைந்த சிவாஜி அங்கிருந்தபடியே சென்னையிலிருந்த
ஆங்கிலேய கவர்னருக்கு கடிதமொன்றை எழுதினார். “கர்நாடகப்பகுதியில்
புதிதாக பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்ட திட்டமிட்டுள்ளேன். துப்பாக்கி, வெடிபொருட்களை
ஏற்றிச் செல்லும் வண்டிகளைக் கட்டுவது, சுரங்கங்களைத் தோண்டுவது, கற்சுவர்களை தகர்ப்பது
போன்ற வேலைகளைச் செய்வதற்கான நிபுணத்துவம் வாய்ந்த ஆட்கள் உங்களிடமிருந்தால் 20-25
பேரை குறைந்தபட்சம் 10 அல்லது 5 பேரையாவது அனுப்புங்கள். அவர்களுக்கு நல்ல ஊதியத்தைக்
கொடுத்து எனது கோட்டைகளில் தங்கவைத்து கவனித்துக்கொள்கிறேன்”. நடுநிலை
வகிக்க வேண்டிய வணிகர்களாகிய தங்களால் இக்கோரிக்கையை ஏற்கவியலாது என்று பணிவுடன் மறுத்து
பதில் வந்திருக்கிறது. அதன்பிறகு சிவாஜி ஆங்கிலேயர்களிடம் எதையும் கேட்கவில்லை.
சிவாஜிக்கு
செஞ்சி மற்றும் வேலூரில் இரண்டு வலுவான அரண்மனைகள், (இவற்றின் ஆண்டு வருமானம் 550 ஆயிரம்
பவுண்ட்கள்), 72 மலைகள், சமதளத்தில் 14 கோட்டைகள், வீரர்கள், குதிரைகள், பெரும் நிலப்பரப்பு
சொந்தமாகியிருந்தன. ஆனால் நிலத்தைவிடவும் தங்கம்தான் சிவாஜியின் இலக்கு. இதற்காக இப்பகுதி
எலும்புவரைக்கும் உரிக்கப்பட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இவ்வளவு பெரும் ஆதாயங்களுடன்
1677 நவம்பரில் – சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு- தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து
தனது சொந்த நாட்டை நோக்கிப் புறப்பட்ட சிவாஜி ஆங்கிலேயர்களுடன் எங்குமே போரிடவில்லை.
ஒன்றிரண்டு கோவில்களுக்குப் போனதெல்லாம் ஆளுநர் சொல்வதுபோல ‘ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும்
மீட்கும்’ கணக்கில் வராது.
சிவாஜியால்
தமிழ்நாட்டில் விட்டுச்செல்லப்பட்ட அவரது மகன் புதிய சிவாஜியின் படைகள் “காஞ்சீவரத்தைச் சூறையாடி ஏறத்தாழ 500 பேர்களைக் கொன்று நகரத்தைப்
பாழாக்கிவிட்டதாகவும், அங்கு குடியிருந்தவர்களை ஊரைவிட்டு ஓடச்செய்ததாகவும் அவர்கள்
இங்கும் அங்குமாக சிதறி ஓடியதாகவும் செய்தி வந்தது… கொள்ளையடிப்பவர்களே சொத்துக்களை
வைத்துக்கொள்ளலாம் என்று ஊக்குவித்திருப்பதாகவும்”. சிவாஜிகளிடமிருந்து
பெற்ற இந்த ஊக்குவிப்பை சங்பரிவாரத்தினர் நடத்தும் கலவரங்களில் காணமுடிகிறது. கோவில்நகரமாம்
காஞ்சியில் நடத்திய கொலையும் கொள்ளையும் ஆன்மிகத்தில் வருமா?
ஆங்கிலேயர்களின்
ஆட்சிக்கெதிரான போரில் கொல்லப்பட்ட திப்புவை தேசத்துரோகி என்றும் ஆங்கிலேயர்களுடன்
இணக்கம் பேணி காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சிவாஜியை தேசபக்தராகவும் காட்டுவதன்
காரணம், சிவாஜி பார்ப்பனீயக் கருத்தியலுக்கு அடிமையூழியம் செய்தார் என்பதுதான்.
சிவாஜியின் படையெடுப்பால் அழிவையும் கொள்ளையையும் தவிர தமிழ்நாடு கண்ட பலன் என்னவென்று
ஆளுநர் சொல்வாரா?
உதவிய
நூல்கள்:
1. பிரிட்டிஷ்
இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள் - ஜெ.டால்பாய்ஸ் வீலர்
2. தமிழக
வரலாறு - கு.ராஜய்யன்
3. சிவாஜி
அன்ட் ஹிஸ் டைம்ஸ் - ஜதுநாத் சர்கார்
நன்றி: செம்மலர், 2023 ஜூன் இதழ்
புதன், மே 31
ஆளுநரே, நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி? -ஆதவன் தீட்சண்யா
தானொரு சனாதனவாதி என்று கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்தளவுக்கு சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவராக இருக்கிறார்?
பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி 1916ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘சனாதன தர்மம்’ என்கிற நூலின்படி, சனாதனம் என்றால் நித்திய மதம். ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதால் இம்மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரியர்களின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்றழைக்கப்படும் நிலத்தின் வடக்குப்பகுதியில் குடியேறின. ஆரியர்கள் குடியேறியதால் ஆரிய வர்தம் என்றான இந்நிலப்பரப்பு, கிழக்குப் பெருங்கடலில் இருந்து மேற்குப் பெருங்கடல் வரை, இரண்டு மலைகளுக்கு இடையே (ஹிமவான் மற்றும் விந்திய) பரவியுள்ளது.
-இதன்படி, சனாதனம் ஆரியவர்தத்தில், ஆரியர்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. விந்திய மலைத்தொடருக்கு அப்பாலுள்ள கேரளத்திற்கும் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்திருப்பதன் மூலம் ஆளுநர் ரவி, சனாதனத்தின் எல்லையை மீறிய குற்றத்தைச் செய்திருப்பதுடன், சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழ்நாடுதான் என்று பொய்யுமுரைக்கிறார்.
சனாதனத்தை நித்திய மதம் என்கின்றனர். அந்தப் பெயர்கூட அநித்தியமாகி பின்னாளில் இந்துமதம் என மாறிப்போனது. சனாதனம் என்பதை ஒரு கோட்டையாகவோ குட்டிச்சுவராகவோ உருவகப்படுத்திக்கொண்டோமானல் அதன் அடித்தளம் ஸ்ருதி. அதன் நான்குச்சுவர்கள் ஸ்மிருதிகள். நான்கு வேதங்களிலிருந்து தேவர்களால் சொல்லப்பட்டு ஞானிகளாலும் ரிஷிகளாலும் கேட்டறியப்பட்டது ஸ்ருதி,. இவ்வாறு கேட்டறிந்து நினைவில் வைத்து சொல்லப்பட்டவை ஸ்மிருதிகள். தேவர்கள் எங்கிருந்து என்ன மொழியில் எதைச் சொன்னார்கள், ரிஷிகளும் ஞானிகளும் அதை எங்கிருந்து கேட்டு என்னவாக விளங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு என்ன மொழியில் போதித்தார்கள், போதனையின் மொழியும் பொருளும் கேட்டுக்கொண்டவர்களுக்கு புரிந்தனவா என்கிற கேள்விகள் ரவிகளுக்கு தேவைப்படுவதில்லை. ஏனெனில் கேள்விகள் பகுத்தறிவுடன் தொடர்புடையவை. சரி அந்தத் தேவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. ‘அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லீறாதிய’ என்கிற கதைதான்.
ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்கள், நான்கு ரிஷிகளால் எழுதப்பட்ட நான்கு ஸ்மிருதிகள் (மநு ஸ்மிருதி, யாக்ஞவல்லிய ஸ்மிருதி, ஷங்க லிகிதா ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி), இரண்டு இதிகாசங்கள், வேதங்களைப் படிக்க முடியாதவர்களுக்காக/ கூடாதவர்களுக்காக(?) புனைந்துரைக்கப்பட்ட 18 புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்து சொல்லப்படும் சட்டங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பின்பற்றி வாழ்வதுதான் சனாதன தர்மத்தின்படியான வாழ்க்கையாகும். இந்தச் சனாதன தர்மத்திற்கு எதிராக வாழ்வதற்கு வரலாறு நெடுகிலும் நடந்த போராட்டங்களின் ஊடாகத்தான் சமூகத்தின் இன்றைய எல்லா முன்னேற்றங்களும் சாதனைகளும் எய்தப்பட்டன. இதன் தொடர்ச்சியில்தான் ஆர்.என்.ரவியால் ஆட்சிப்பணி அதிகாரியாகவும் ஆளுநராகவும் ஆக முடிந்திருக்கிறது. ஆனால் இந்த நாடு சனாதனத்தாலும் ரிஷிகளாலும்தான் கட்டியெழுப்பப்பட்டது என்று உண்மைக்கு மாறாக கதையளக்கிறார்.
சனாதன தர்மம் ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்தது. இந்த வர்ணங்கள் ஆரியப்பெண்களுக்குக் கிடையாது. அவர்கள் திருமணத்திற்கு முன் தகப்பனின் வர்ணத்தையும் திருமணத்திற்குப் பிறகு கணவனின் வர்ணத்தையும், கணவனுக்குப் பிறகு மகனின் வர்ணத்தையும் சேர்ந்தவர்கள். படிநிலையான இந்த வர்ணப்பிரிவினை அந்தந்த வர்ணத்திற்கென வகுத்துள்ள வேலைகளைத்தான் செய்யவேண்டும் என்கிற நிலை இப்போதும் நீடித்திருந்திருந்தால் ஆர்.என்.ரவி என்ன படித்திருப்பார், என்ன வேலை செய்து கொண்டிருந்திருப்பார்?
ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்த சனாதனம், தனிமனித வாழ்க்கையை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு ஆஸ்ரமங்களாகப் பிரித்தது. ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வேலைப்பரிவினை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரொருவரும் எந்தக் கட்டத்தையும் இன்பத்தையும் விலக்கிச்செல்லக்கூடாது என்கிறது.
ஆஸ்ரமத்தின் முதலாவது கட்டமான பிரம்மச்சரிய காலத்தில் உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து இருபிறப்பாளராவது அவசியம். இந்த உபநயனச் சடங்கினை பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமேயானதாக ஆக்கியதன் மூலம் பெண்களும் இதர வர்ணத்தவரும் கல்வி பெறுவதை சனாதனம் தடுத்துள்ளதை ரவியால் மறுக்கமுடியுமா? "வேதங்களையோ, இரண்டு வேதங்களையோ, ஒரு வேதத்தையோ முறைப்படி, மீறாமல் படித்தல் பிரம்மச்சரியம்” என்கிறது சனாதனம். இதன்படி, வேதங்களைத் தவிர மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், என்டயர் பொலிடிகல் சயின்ஸ் போன்ற வேறெதையும் படிக்கக்கூடாது; ஐஐடி, ஐஐஎம், மருத்துவக்கல்லூரி போன்றவற்றிலிருந்து வெளியேறுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன் ரவி!.
“மாணவர் மது, இறைச்சி, வாசனை திரவியங்கள், மாலைகள், சுவையான - காரமான உணவுகள், பெண்கள், அமிலங்கள் ஆகிய உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் விசயங்களைத் தவிர்க்கட்டும்” என்கிற உபதேசத்தில் பெண்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை ரவி ஏற்கிறாரா? மாணவர்கள் தவிர்க்கவேண்டிய பட்டியலில் காமம், கோபம், பேராசை ஆகியவற்றுடன் நடனம், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல் போன்றவற்றையும் சேர்க்கிறது சனாதனம். எனில், இசை/ நடன/ நாடக/ திரை/ ஓவிய/ நுண்கலைப்பள்ளிகளை மூடிவிடலாமா ரவி? “வதந்திகள், அவதூறு, பொய்யிலிருந்து விலகியிருத்தல்” என்னும் சனாதனத்திற்கு விசுவாசமாக இருப்பதாக இருந்தால் முதலில் மாணவர் அமைப்பான ஏபிவிபியை மட்டுமல்ல ஒட்டுமொத்த சங்பரிவார அமைப்புகளையும் கலைக்க வேண்டியிருக்கும். ரவியேகூட பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
***
நான்கு ஆஸ்ரமங்களில் மற்ற மூன்றுக்கும் ஆதாரம் இரண்டாவதான இல்லற வாழ்வுதான் (கிருகஸ்தம்). எல்லா உயிரினங்களும் காற்றின் ஆதரவில் வாழ்வதுபோல, மற்ற ஆஸ்ரமத்தார் அனைவரும் குடும்பஸ்தர்களின் ஆதரவில்தான் வாழ்கின்றனர். அவர் மற்ற மூன்றையும் உண்மையாக ஆதரிக்கிறார். அனைத்து நீரோடைகளும் ஆறுகளும் ஓய்வெடுக்க கடல் நோக்கிப் பாய்வதுபோல், அனைத்து ஆஸிரமத்தாரும் ஓய்வெடுக்க இவர்களை நோக்கியே ஓடுகின்றனர்… தேவர்களை வழிபடுதல், கல்வி, தாங்கள் இருந்ததைப் போல ஒரு குடும்பத்தை வளர்ப்பதன் மூலமும் புதிய வாழ்க்கைக்கு உதவுவதன் மூலமும் பித்ருகளுக்குரிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமைகளிலிருந்து விலகக்கூடாது. இந்தக் கடமைகளின் கடுமையான சுமையைத் தாங்குங்கள் என்கிறது சனாதனம். வீட்டை விட்டு ஓடுபவர்களின் வேலை பாவத்தில் விழுகிறது. துறவு வாழ்க்கை நடத்துவதற்காக, உரிய காலத்திற்கு முன்பே இல்லற வாழ்விலிருந்து வெளியேறி காடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மீது பரிதாபப்பட்ட இந்திரன் ஒரு தங்கப்பறவையாக வடிவெடுத்து வந்து "இல்வாழ்வைப் பின்தொடருங்கள்” என்று வழிகாட்டியுள்ளார். ஆஸ்ரமங்கள் அனைத்திலும் இல்லறத்தாரே உயர்ந்தவர் என்கிறது வேதம்.
ஏழைகளுக்கு உதவிய பிறகு எஞ்சிய உணவை உண்பதே உண்மையாக உண்பதாகும். தான் மட்டும் காளான் இறக்குமதி செய்து உண்பதெல்லாம் சனாதனத்தில் வராது. இல்லற வாழ்வைத் துறந்தவர்கள், பாதியில் கைவிட்டு ஓடியவர்கள் குறித்து சனாதனியான ரவியின் நிலைப்பாடு என்ன? இல்லற வாழ்வை மேற்கொள்ளாத மடாதிபதிகள், பீடாதிபதிகள், லோககுருக்கள், லோக்கல் குருக்களை சனாதன விரோதிகள் என்று எப்போது அறிவிக்கப்போகிறீர் ரவி? துறவொழுக்கத்தை கேலிக்குள்ளாக்கும்விதமாக ஆடம்பரத்திலும் சட்டவிரோதச் செயல்களிலும் திளைக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் நிகழ்வுகளில் பங்கெடுக்கும் தலைவர்களை ரவி கண்டிப்பாரா? வாழ்வின் ஒரு கட்டத்தைக் கடந்தவர்கள் முந்தையக் கட்டத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறது சனாதனம். ஆனால் வரிசைக்கிரமமாக அல்லாமல் எடுத்தயெடுப்பில் நேரடியாக தட்கல் முறையில் சந்நியாசம் போய்விட்டு பின்னர் கிருகஸ்த நிலையை ஏக்கத்துடன் திரும்பிப்பார்த்து ரகசிய கேமராவில் சிக்கிக்கொண்டவர்கள், மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் இழுத்துவரப்பட்டவர்கள் சனாதனத்துக்கு ஏற்படுத்திய இழுக்கு பற்றி ரவி வாய்திறப்பாரா?
***
இல்வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் தனது கடமைகளின் முழுச்சுமையையும் தன் மகன்களால் சுமக்க முடிவதைக் காணும்போது, மூப்பின் அறிகுறிகள் தோன்றும் போது, தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் தன்னைச் சுற்றி வருவதைக் காணும்போது, அவரும் அவரது மனைவியும் வீட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து, சுறுசுறுப்பான உலகியல் வாழ்க்கையிலிருந்து விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணரவேண்டும். தத்துவார்த்த நூல்களைப் படிப்பதற்காகவும், பிறருக்காக தியாகம் செய்யவும், நல்வழிப்படுத்தவும் கொடுக்கப்பட்ட அமைதியான, சற்றே ஒதுங்கிய வாழ்க்கையே மூன்றாவது ஆஸிரமமான வானப்ரஸ்தம். இந்த ஒரு விசயத்திலாவது சனாதன தர்மத்தை ஏற்று ரவி, மோடி, அமித்ஷா, மோகன் பகவத் போன்றவர்கள் அரசியலிலிருந்தும் பதவிகளிலிருந்தும் ஒதுங்கி காடுகளுக்குச் சென்று தவவாழ்வு மேற்கொண்டு சனாதனத்தில் தமக்குள்ள பற்றினை நிரூபிப்பார்களா? ஒருவேளை காடுகளுக்குப் போய் பழங்குடிகளுக்கு தொல்லை தரவேண்டாம் என்கிற நல்லெண்ணம் உதிக்குமாயின் காசி, ராமேஸ்வரம், கைலாயம் என்று எங்காவது ஆன்மிகப்பயணம் மேற்கொள்வது அவர்களது வீட்டுக்கு எப்படியாயினும், நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக அமையும். (அதற்குள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு விலகல் கடிதம் எழுதுகிறீர்கள் ரவி? கொஞ்சம் பொறுங்கள், நான் சனாதனத்தின் அத்தனை விசயங்களையும் பேசப்போவதில்லை, கட்டுரை முடியப்போகிறது).
இறுதியாக, தனது தோலில் சுருக்கத்தையும்,
தலையில் நரையின் வெண்மையையும், குடும்பம் அடுத்தடுத்த சந்ததியினரால் நிறைந்திருப்பதையும்
காணும் ஒருவர் அனைத்து பந்தங்களையும் துறந்து செல்போன், கேமரா எதுவுமின்றி காட்டிற்குச்
சென்று தியானத்திலும் வழிபாட்டிலும் தனது கடைசி நாட்களைக் கழிக்கவேண்டும் என்கிறது
சனாதனம். எப்போது கிளம்பப் போகிறீர்கள் ரவி?
நன்றி:
தீக்கதிர் 2023 மே 7
விடுதலை 2023 மே 9
புதன், ஏப்ரல் 26
சிஐடியு - ஏஐடியுசி மே தினச் சூளுரை
தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்! ஒன்றிய எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுக்கும் கூட்டறிக்கை வருமாறு:
1886இல் சிகாகோவில் நடைபெற்ற 8 மணிநேர வேலைக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடு, மரண தண்டனை ஆகியவற்றின் நினைவாக மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1889இல் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில் நடந்த இரண்டாம் அகிலம் இதை உலகத் தொழிலாளர் உரிமை நாளாகப் பிரகடனம் செய்தது.
சென்னை மேதினம்-100
இந்தியாவில் முதல்முதலாக தமிழகத்தில், சென்னை கடற்கரையில் சிந்தனைச்சிற்பி தோழர் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் செங்கொடியேற்றி மே தினத்தைக் கொண்டாடினார். அது நிகழ்ந்து நூற்றாண்டு நிறைகிறது. பெருமைக்குரிய அந்த நிகழ்வை நினைவிலேந்தி தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் அனைவரும் மே தினத்தை, செங்கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுவோம். வரலாறு காணாத உலக முதலாளித்துவ நெருக்கடியினால் வேலையிழப்பு, கதவடைப்பு, லேஆப், ஊதிய வெட்டு அதிகரித்து வருகிறது. நெருக்கடிச் சுமைகள் முழுவதும் சாதாரண உழைப்பாளி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகளுக்கு மீட்புத் திட்டங்கள் என்ற பெயரால் பெருமளவு சலுகைகள், தொழிலாளிகளுக்கோ துன்ப துயரங்கள். இக் கொடுமைகளுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் அலைஅலையான வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. போராடும் உழைப்பாளிகளுக்கு மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், கடந்த காலங்களை விட பெருமளவு அதிகரித்துள்ளன. தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறது. இந்தச் சட்டங்களை எதிர்த்து தொழிலா ளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் விதிகளை உரு வாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வருகின்றன. சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு போன்றவை பறிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்துப் போராடும் உரிமைகளும் கூட தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
பெருகி வரும் வேலையின்மை
கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு பழைய உற்பத்தி நிலைக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றிய அரசு இந்தத் தொழில்களை செயலூக்கப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் உருப்படியான பலன் எதையும் தரவில்லை. பெருகிவரும் மோசமான வேலையின்மை கவலை அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலை இழப்பும், ஆலை மூடலும், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி ஐடி துறையிலும் பெருகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புச் சந்தையில் 80 லட்சம் இளைஞர் கள் சேருகிறார்கள். வேலையின்மை 34 சதவீதம் என அதன் உச்சத்தை தொட்டுவிட்டது. கிராமப்புறப் பொருளாதாரத்தை ஓரளவுக்கு பாதுகாத்து வந்த தேசிய கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத் தொழிலாளர் களுக்கான நிதி 30 சதவீதம் அளவுக்கு வெகுவாக குறைக்கப்பட்டதால் அவர்களது வேலை பெறும் உரிமையும் பறிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் 19 கோடியாக இருந்த வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை, 2022இல் 35 கோடியாக அதிகரித்துள்ளது. பசியின் கொடுமையால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 65 சதவீதமாக பெருகி உள்ளது என ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கிறது. அதேசமயம் நாட்டின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து 27.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் முதல் 5 பேரிடம் 72 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளன.
அனைத்துத் துறையிலும் தோல்வி
அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் அதிகரிப்பு, நிலக்கரி, தொழில்துறை உதிரி பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றில் கட் டாய இறக்குமதி போன்றவற்றால் பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் உள்ளடக்கம் அபரிமிதமாக அதிக ரித்து; ஏற்றுமதியில் நாட்டிற்கு வர வேண்டிய பலனை முழுவதுமாக பறித்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.82 க்கும் மேல் எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் தங்கக் கையிருப்புகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தி யாவின் வெளிநாட்டு கையிருப்பு 564 பில்லியன் டாலர்களாக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பெரும் தொகைகள் அதானி குழும நிறுவனத்திற்கு அள்ளி வழங்கப்பட்டுள்ள உண்மையை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் தனிப்பட்ட ஆர்வத்துடன் அதானி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டதும், தன்னுடன் கௌதம் அதானியை எப்போதும் அழைத்துச் சென்றதும் உலகம் முழுதும் அப்பட்டமாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்த ஒன்றிய அரசு நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பை முற்றிலுமாக சிதைக்க முற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவை ஒரு பெரும் பான்மை வகுப்புவாத இந்து ராஷ்டிரம் ஆக மாற்றும் திசையில் வேகமாக முன்னேறி வருகிறது. டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக எதிர்க்கிறது. அதோடு சட்டத்தை கையிலெடுத்துக் கொள்கிறது. ராமநவமி தினத்தன்று பல்வேறு இடங்களில் இக்கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை கூச்சமில்லாமல் மத நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்கிறது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சிக் கொள்கை கடுமையாகத் தகர்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் நான்கு அடிப்படை தூண்க ளான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தேசிய சொத்துகளைக் கொள்ளையடிப்பது, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, தேசிய பணமாக்கல் திட்டம் இவை அனைத்தும் கார்ப்ப ரேட்டுகளுக்கு தேசத்தின் சொத்துகளை கொள்ளைய டிப்பதற்காகவே வழிவகுத்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் நலன்களை பாதுகாப்பது தேசத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் மக்கள் விரோத, தேச விரோத பாசிச அரசை அகற்றுவதே இந்த மே நாள் சபதமாகட்டும்.
தமிழ்நாட்டில்...
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 60 சதவீதம் பங்களிக்கின்ற மொத்த தொழிலாளர்களில் 94 சதவீதம் தொழிலாளர்களை கொண்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மாநில நல வாரியங்கள் புரட்டிப் போடப்படுகின்றன. நல வரி வசூல் அதிகாரத்தையும் நிதி பலன் வழங்கும் திட்டங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது. இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் கட்டிடத் தொழிலாளர் நலவாரிய நிதியாக வசூலிக்கப்பட்டு செலவிடப்படாமல் ரூ.38 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. சுமார் 2 கோடி தொழிலாளர்கள் நேர்முகமாகவும் இதர 2 கோடி பேர் மறைமுகமாகவும் பணி செய்கிறார்கள். இவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை தரக்கூடிய சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்வதும், சமூகப் பாதுகாப்பு தருவதும் அரசின் இன்றியமையாத கடமையாகும். நிலவும் வேலையின்மை பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணி புரிகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான வீடியோக்களை, தனது அரசியல் ஆதாயத்திற்கு பாஜக பயன்படுத்தியதையும் அதன் விளைவாக நாடு முழுவதும் அச்ச உணர்வை உரு வாக்கிய கொடூரத்தையும் நாம் நன்கு அறிவோம்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?
பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்நாள் முழுக்க வேலை பார்த்தும் நிரந்தரம் செய்யப்படாமல் காண்ட்ராக்ட் என்ற பெயரிலும் அவுட்சோர்சிங் என்ற பெயரிலும் தினக் கூலிகளாகவே வைக்கப்பட்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயரில் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி, தொழிலாளர் துறை போன்றவற்றில் கீழ் நிலையில் பணி புரியும் சி அன்ட் டி பிரிவு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் புதிய ஆட்களை நியமிப்பதற்கு பதிலாக அவுட்சோர்சிங் என அரசாணை வெளியிடப்பட்டது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன்மொழிந்துள்ள 87 மற்றும் 89 விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. ஆளும் வர்க்கமும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. மீறி சங்கம் அமைத்தால் தொழிலாளர்கள் பணி நீக்கம், இட மாற்றம் பொய் வழக்கு என பழிவாங்கப்படுகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள், தலையிட வேண்டிய தொழிலாளர் துறையோ செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தகவல் தொடர்புத்துறையில் தற்போது உலக மந்த நிலையை காரணம்காட்டி தமிழகத்தில் இளம் தொழிலாளர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் வேகப்படுத் தப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவிதமான சட்டவிதிகளையும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை.
பணி நிரந்தரமின்மை
பல்லாயிரக்கணக்கான இளம் தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதோடு அல்லாமல் வாய்மூடி மௌ னியாகவும் இருக்கிறது. அதே போன்று ஆப் மூலமாக பணிபுரியும் கீக் ஊழியர்கள் பணி பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார்கள். இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் இவர்களுக்குப் பொருந்தாதாம். இவர்களை தொழிலாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய தொழிலாளர் துறை இவர்களது முதலாளி யார் என்று தேடுகிற தாம். இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் போனால் அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிலாளர்களை கீக் தொழிலாளியாக மாற்றும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் திட்ட ஊழியர்களாக பணியாற்றும் அங்கன்வாடி, ஆஷா, மக்களை தேடி மருத்துவம், என்சிபிஎல் போன்ற ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளித்தல் சட்டம் 1982 கூறுகிறது. இந்த மானியக் கோரிக்கையில் கூட அந்த சட்டப்படி 237 தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டார்களா என்பது பற்றி சட்டமன்ற கொள்கைக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை.
குறைந்தபட்ச ஊதியம்...
இந்தியாவிலேயே மிக குறைவாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. எல்ஐசி முடிவுப்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கான தொகையை குறைந்தபட்ச ஊதியமாக வழங்கிடல் வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங் காமல் வேலை அளிப்பவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்தடிப்புச் செய்கிறார்கள். இவைகளுக்கு சிறந்த உதாரணம் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை தொழிலாளர் துறையினால் அமலாக்க முடியவில்லை. தோட்டம் போன்ற துறைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதாரரீதியாக வளர்ந்த மாநிலங்களில் இரண்டாமிடத்தை வகித்தாலும், தொழிலாளர்களின் ஊதியம் இந்தியாவின் சராசரி யிலிருந்து ரூ.2500 குறைவாக உள்ள போதும் சமூக நீதி பொருளாதாரக்கொள்கை என்பது வாய் வார்த்தையாகவே உள்ளது. ஒன்றிய அரசின் பொதுத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும் அதே வேளையில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை களில் முனைப்புக் காட்டுவது தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கே விரோதமானதாகும்.
சட்டமீறல்கள் பெருமிதமா?
தமிழக போக்குவரத்துத்துறைக்கு நெடிய வரலாறு உண்டு இத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க அதிமுக முயற்சித்தபோது அதை எதிர்த்து நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாதுகாத்தோம். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வேண்டுமென்றால் தனியார்மயத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பதும் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு ஒத்திசைவாகவே உள்ளது. மாநில அரசை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலும் உள் ளாட்சி மற்றும் இசேவை துறைகளிலும் தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்படுவதில்லை. இந்த சட்ட மீறல்கள் செய்வதை அதிகாரிகள் பெருமிதமாக கருது கிறார்கள். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொய்வின்றி வாதாடுகிறது. இவைகளை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் ஒன்றிய அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களின் உரிமையை பறிப்ப தற்கும் 44 சட்டங்களை சுருக்கி நான்கு சட்டத் தொகுப்பு, வெளியிட்டது. ஒன்றிய ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இதனை எதிர்க்கின்றன. தமிழ்நாடு அரசு இயல்பாகவே சட்ட தொகுப்புகளை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த சட்ட தொகுப்புக ளுக்கு வரைவு விதிகளை தமிழ்நாடு அரசு தொழி லாளர் துறை வெளியிட்டது. அந்த விதிகளை உறுதி செய்யாமல் தடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துச் சங்கங்களும் ஒரே குரலில் அரசுக்கு எடுத்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் சட்டத்தொகுப்பு இதுவரை அமல் நடத்தப்படவில்லை என்பதால், அதிலுள்ள வேலை நேரத்தில் மாறுதல்
உள்ளிட்ட விசயங்களை முன்னதாகவே செயல்படுத்தும் வகையில் தொழிற்சாலைச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா 12.04.2023இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பன்னிரெண்டு மணி நேரமாக்கிட, முதலாளிகளின் முப்பது ஆண்டு கால கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. 75 ஆண்டுகாலம் எந்த அரசும் செய்யத் துணியாத தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செய்து தமிழக உழைப்பாளிகளுக்கு ஊறு விளைவித்துள்ளது.
மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உட்பட பல்வேறு முத்தரப்புக் குழுக்கள் உள்ளன. கடந்த காலத்தில் பத்து ஆண்டுகளாக இந்த குழுக்கள் அனைத்தும் கூட்டப்படாமலேயே இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்த குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொழிலையும், தொழிலாளர்களையும் பாது காப்பதற்கான பல்வேறு கருத்துக்கள் இவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் உரிய முயற்சிகள் உண்டா எனில் கேள்விக்குறியே. எனவே ஒன்றிய,மாநில அரசுகளிடமிருந்து தொழிற்சங்க இயக்கத்தின் கூட்டுபேர உரிமை, ஜனநாயக உரிமை, சுதந்திர உரிமைகளை மீட்டெடுப்போம். தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம். ஒன்றிய சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று இந்த மே நாளில் சபதமேற்போம்.
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!
மே தினம் நீடூழி வாழ்க! புரட்சி ஓங்குக!
நன்றி: https://theekkathir.in
திங்கள், ஏப்ரல் 24
சூரியனையே பார்க்கமுடியாதபடி செய்துவிடாதீர் - ஆதவன் தீட்சண்யா
தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப் 21 அன்று திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அன்றைக்கு காலை சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி போன்ற தோழர்கள் முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டாமென்றும், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சரும் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடமிருந்தும் தோழமைக்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தச் சட்டத்திருத்தம் பற்றி இன்று தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப் போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வந்து அரசுடன் கலந்துபேசியதை மட்டும் வைத்துக்கொண்டு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப்போவதாக அறிவித்திருப்பதானது மிகவும் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற நடவடிக்கை. எதிர்ப்புக்கு செவிமடுக்கிற ஜனநாயகப்பண்பு இந்த அரசிடம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த அழைப்பை ஓர் அளவுகோலாக கருதமுடியாது. அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது.
எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்தே அதை தகர்த்ததன் மூலம் திமுக அரசு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே துரோகம் செய்துள்ளது. இதைச் சொன்னதுமே சீனாவில் இல்லையா என்கிற கேள்வி சாமர்த்தியமாக முன்வைக்கப்படுகிறது. சீன அரசு தொழிலாளர் விரோதப் பாதையில் செல்லுமானால் அதை அந்நாட்டின் தொழிலாளிகள் எதிர்ப்பார்கள். ஒருமைப்பாட்டுணர்வில் நாமும் எதிர்ப்போம். தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமென சீனாவிலிருந்து பின்பற்றத்தக்க எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது அங்கு தோல்வியடைந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட ஒரு விசயத்தைத்தான் திமுக அரசு பின்பற்ற வேண்டுமா? (இந்த ஆண்டு அங்கு மேதினக் கொண்டாட்டத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)
996 வேலைநாள் – அதாவது காலை
9 மணி முதல் இரவு 9 மணிவரை – 6 நாட்கள் - என்கிற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது.
இது, நாளொன்றுக்கு எட்டுமணி நேரம், அதிகப்படியாக வாரத்திற்கு 44 மணிநேரம் என்கிற சீனாவின்
வேலைநாள் சட்டத்திற்கு விரோதமானது, தாராளவாதக் கொள்கையை நோக்கி சீன அரசு சரிகிறது என்று
அறிமுக நிலையிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் இந்த 996 வேலைமுறையை ஏற்கவிரும்பும்
நிறுவனம் அதன் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
996 வேலைமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு பணப்பயன்கள் உறுதிசெய்யப்பட்டிருந்த
போதும் பணிச்சுமையின் காரணமாக கடும் மனச்சோர்வுக்கும் உடல்ரீதியான பல துன்பங்களுக்கும்
ஆளாகிவந்தனர். நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன்,
சூரியவெளிச்சத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவிலில்லை என்று எழுதிவைத்துவிட்டு
தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 996ஐசியூ.காம் போன்ற
இணையதளங்கள் (996 வேலைநாள் என்பது தொழிலாளர்களை ஐ.சி.யூ. சிகிச்சைக்கு அனுப்புவதுடன்தான்
முடிகிறது என்பதைச் சுட்டும்விதமாக இப்பெயர்) எதிர்ப்புணர்வுகளை ஒருங்கிணைத்தன. கடைசியில்,
தொழிலாளர்களின் உடல், மனநலப் பிரச்னைகளில் சமரசமில்லை என்று பாதுகாப்புச் சட்டங்களை
தீவிரமாக செயல்படுத்தப் போவதாக சீன அரசு அறிவிக்கவேண்டிவந்தது. இந்தச் சூழலில்தான்
அங்கிருந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுடன்
இந்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்துகொண்டு சீனாவின் 996 போல இங்கும் வேலைநாளை மாற்றும்படி
கோருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் பாஜக
அரசு ஆளைக் கொல்லும் இந்தத் திட்டத்தை நெகிழ்வான வேலைநாள் என்று வஞ்சகமாக ஏவியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். நாட்டின் சட்டப்பூர்வ வேலைநாளுக்கு விரோதமான இந்த உழைப்புச்சுரண்டல் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் போர்க்குணமும் அமைப்புரீதியாக திரளும் வாய்ப்பும் அற்றவர்களாக உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலைநாளுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு பொருளற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியக்கூடும். 8 மணி நேர வேலைநாள் என்பதன் வரலாற்றையோ அதற்கான தியாகத்தையோ அறியாதவர்களுக்கு அது தேவையற்றதாகக்கூட தோன்றலாம். நியோ நார்மல் என்கிற பெயரில் எல்லா ஒழுங்கீனங்களையும் விதிமீறல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு அதற்குள் சாதகமானதைத் தேடியடைந்து சமாதானமடைகிற, பீயிலே பொறுக்கிய அரிசியில் பிரியாணி ஆக்கித் தின்பதை பெருமிதமிதமாய் பேசியலைகிறவர்களும் கூட மனிதர்கள்தான். அவர்களது உடல்/மனநலனுக்கும் இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது கெடுதலானதே. எட்டு மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வு போன்ற அடிப்படையான கோரிக்கைகள் இவர்களுக்கும் தேவையானவையே.
8மணிநேர வேலை என்பதே 8 மணிநேரத்துடன் முடிந்துபோவதில்லை. உணவுத் தயாரிப்பது, -பணியிடத்திற்கு சென்று திரும்புதல் உட்பட அதற்கான முன்தயாரிப்புக்கென கூடுதலாக சிலமணி நேரங்களை – உறக்கத்திற்கும் ஓய்வுக்குமென இருக்கும் தமது சொந்த நேரத்திலிருந்து செலவிட வேண்டியிருக்கிறது. ஒருவர் எட்டுமணி நேரம் உழைப்பதனால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதில் ஓய்வும் உறக்கமும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தே அவற்றுக்கென தனியாக நேரப்பங்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை வாழ்வில் உறக்கம் என்பதே ஓய்வு என்று திரிக்கப்பட்டுவிட்டதால் உழைப்புக்கும் உறக்கத்திற்கும் அப்பால் இன்னொரு வாழ்வு இருப்பதையே அறியாதவர்களாக அல்லது அறிந்தும் துய்க்கும் வாய்ப்பற்றவர்களாக தொழிலாளர்கள் நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 12 மணிநேரம் வேலை என்பது 12 மணிநேரத்துடன் முடியக்கூடியதா? முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு ஒவ்வொரு தொழிலாளியின் சொந்த நேரத்திலிருந்தும் மேலும் நான்கு மணிநேரங்களை அபகரித்துக்கொடுக்கப் போவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.
மூன்றாவது ஷிப்ட் என்பதே இல்லாமல் போகும் நிலையில் ஒரு ஷிப்டுக்குத் தேவையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படாமலே போகும் நிலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கதி என்ன என்பது ஒருபுறமிருக்க, அந்த ஷிப்டுக்கென தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை குறையுமா நீடிக்குமா? இரண்டு ஷிப்டு தொழிலாளர்களைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிவிட முடியும் என்கிற வகையில் அரசின் செல்லப்பிள்ளைகளான முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபம். வாரத்தில் மூன்று நாட்கள் நிறுவனத்தை மூடிவைப்பதனால் அந்த நாட்களில் (உணவு, வாகனம், மின் கட்டணம், தண்ணீர், இயந்திரத் தேய்மானம் போன்ற நடைமுறைச் செலவுகள் மிச்சம் என்கிற வகையில் மற்றொரு லாபம் என்பதும் உண்மைதான். ஆனால் வாராவாரம் மூன்றுநாட்களுக்கு ஆலையை மூடிவைக்கவா முதலீட்டாளர்கள் ஆலைகளைத் திறப்பார்கள்? அது அவர்களின் வர்க்க இயல்புக்கு ஏற்புடையதல்ல. எனில் அந்த மூன்று நாட்களிலும் வேறு வகையாக ஆலையை இயக்குவதற்கான திட்டம் அவர்களுக்கு இருக்கும். 12 மணிநேரம் அமலானால் அப்போது அந்தத் திட்டமும் தன் கோரமுகத்துடன் வெளிப்படக்கூடும். ஒருவேளை நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளர்களையும் எஞ்சிய மூன்றுநாட்களில் தற்காலிக/ ஒப்பந்த/ பயிற்சி/ தொழிலாளர்களையும் கொண்டு ஆலையை இயக்குவது அவர்களது திட்டமாக இருக்கலாம். வேலையின்மையைக் காட்டி தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களைக்காட்டி நிரந்தரத் தொழிலாளர்களையும் பணியவைத்துச் சுரண்டுவதில் இந்திய முதலாளிகள் ஏற்கனவே மோசமான பல முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.
ஒவ்வொரு வாரமும் வேலையற்று இருக்கப்போகிற மூன்றுநாட்களையும் என்னவிதமான ஆக்கப் பணிகளில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்கிற முன்கணிப்பு ஏதும் அரசுக்கு இருக்கிறதா? நான்குநாள் உழைப்பின் அலுப்பை சேர்த்துவைத்து மூன்றுநாட்களில் தீர்த்துக் கொள்வது சாத்தியமா? இவ்விசயத்தில் ஒசூர் தொழிற்பேட்டையின் அனுபவம் ஒன்றினை பகிர்வது பொருத்தமாக இருக்கும்.
கனப்படுப்பை ஏன் மூட்டவில்லை?
வீட்டில் நிலக்கரி இல்லை.
ஏன் நிலக்கரி இல்லை?
நிலக்கரி வாங்க பணமில்லை
ஏன் பணமில்லை?
அப்பாவுக்கு வேலை இல்லை.
அப்பாவுக்கு ஏன் வேலையில்லை?
அவர் வேலை செய்யும் சுரங்கத்தில்
அதிகப்படியான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதாம்.
-குழந்தைக்கும் தாயுக்குமிடையே மார்க்ஸ் காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த உரையாடல் காலங்கள் தாண்டி 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடியதே. முதலாளிகள், தொழிலாளிகளை வதைத்து அதிகப்படியான உற்பத்தியைப் பெற்றுவிடுவார்கள். சந்தையின் தேவையை விடவும் கூடுதலாக கையிருப்பில் உள்ள சரக்கு தேங்கிவிடும் பட்சத்தில் அந்தச் சுமையைத் தொழிலாளிகள் மீது ஏற்றிவிடும் தந்திரமாக கதவடைப்பு செய்து உற்பத்தியை முடக்கிவிடுவார்கள். அம்மாதிரியான நேரங்களில் “ஆஹா, மூடிய ஆலையைத் திறக்கும் வரை வேலையே இல்லை… ஜாலியோ ஜாலி…” என்று எந்தத் தொழிலாளியும் கும்மாளம் போடுவதில்லை. உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களைக் கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.
ஒரு தற்காலிக கதவடைப்பின் மூலம் வாராவாரம் வந்த மூன்றுநாள் விடுமுறையே தொழிலாளிகளின் ஆளுமையைச் சிதைக்குமென்றால் நிரந்தரமாகவே வாராவாரம் மூன்றுநாள் விடுமுறையில் அவர்கள் என்னவாகப் போகிறார்கள்? சும்மா இருக்கவொட்டாமல் வேறு இன்னுமொரு நிறுவனத்திற்கு தங்களை விற்றுக்கொள்ளும்படி அரசு விரட்டுகிறதா? அல்லது முதல் நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளியாகவும் அடுத்த நாட்களில் அத்துக்கூலியாகவும் வேலை பார்க்கும்படி நெட்டித்தள்ளுகிறதா? அப்படியும்தான் வேலை பார்த்து சம்பாதிக்கட்டுமே என்றும் கூட இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சொல்லக்கூடும். ஆனால் சம்பாதித்துக் கொண்டேயிருந்தால் வாழ்வது எப்போது என்று தொழிலாளர்கள் நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடையைத் தேடி கண்டையும் வரை வேலைநேரத்தை மாற்றமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பது குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லையானால் சீனத் தொழிலாளி சொன்னதையே அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சொல்வோம்: சூரியனையே பார்க்க முடியாதபடி செய்துவிடாதீர்.
நாட்டையே நாம் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சியின் சின்னம் என்பதற்காகவேனும் சூரியனை அன்றாடம் பார்க்கும்படியாக தொழிலாளிகளின் வேலைநேரம் மாற்றமின்றி நீடிப்பதை உறுதிசெய்யவேண்டும். அல்லது இன்னும் கூடுதல் நேரம் சூரியனைப் பார்க்கும்விதமாக வேலைநேரத்தை ஆறுமணிநேரமாகக் குறைத்து தன் தந்தையின் கனவை நனவாக்கவேண்டும்.
-
த மிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப...
-
பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் ...
-
(இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ...) சா மிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத...