வியாழன், ஆகஸ்ட் 6

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

 

கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160

இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு கொண்டிருக்க வேண்டாமென்று காபி போட்டுக் கொண்டு எழுதப் போகலாமென எழுந்தேன். ஞாயிறன்று சேலம் நிகழ்வில் பரிசளிக்கப்பட்ட புத்தகப்பொதி பீப்பாய் மீது கிடந்தது. தோழர்கள் எவ்வளவு அன்பாக கொடுத்தார்கள், நாம் இன்னும் பிரிக்காமல் கூட வைத்திருக்கிறோமே என்று பிரித்தால் ரபீக் ராஜாவின் ஆடலும் பாடலும், அரிசங்கரின் கரப்பான். அரிசங்கர் எழுத்தின் மீதிருந்த ஈர்ப்பில் கரப்பானை எடுத்தேன். அது அவருடைய மொழியினாலா கதையினாலா என்ன மாயமோ  விறுவிறுவென ஓடி ஆறுமணிக்கு முடிந்துவிட்டது. எழுதினால் இப்படி படிப்பவரை உள்ளிழுத்துக் கொள்ளும்படியாக, ஒருமூச்சில் படித்துமுடித்துவிடும் படியாக  எழுதவேண்டும் என்பது பொது விதியா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்படி தோன்றியது. படிக்கும் போதே தொந்திரவு செய்து உங்களது இயல்பைக் குலைக்க வேண்டும் என்பது உள்ளடக்கம் சார்ந்தது, படிப்பதையே தொந்தரவாக்கிவிடுவது  மொழி சார்ந்தது. அரிசங்கர் பாய்ச்சலாக கதைசொல்கிறார்.   

இந்தக் கரப்பான், இந்திய உச்சநீதிமன்றத்தால் சுட்டப்பட்டு, அதனால் அறச்சீற்றத்துடன் பொங்கியெழுந்து ஆட்சியாளர்களை நிலைகுலையவைத்த கரப்பான் அல்ல. அல்லது, காப்காவின் உருமாற்றத்திலிருந்து ஊர்ந்துவந்து உங்களது மூளையைக் கொறிக்கிற கரப்பானுமல்ல. இது, தகுதியுள்ளது எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு அடிக்கடி உதாரணம் காட்டப்படும் கரப்பான்.  அப்படியான அது எங்குதான் இருக்கிறது என்று தேடுவதைவிடவும் அது எங்குதான் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுவதே சரியாக இருக்கும். ஆமாம், அது எங்கும் நிறைந்திருப்பதாக நம்பப்படும் கடவுளைவிடவும் மெய்யானது. கதவிடுக்கிலும் இருக்கும் காபிக் கோப்பையிலும் மிதக்கும் என்று அறியப்பட்ட விதங்களில் அல்லாமல் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் ஓர் உணர்வாக நம்பிக்கையாக அது ஊர்ந்துகொண்டிருக்கிறது.

பிழைத்திருப்பதற்காக எதைச் செய்வதும் நியாயம் என்கிற மனிதத் தர்க்கம் இந்த பூமியின் ஏனைய உயிரினங்களை அழித்திருக்கிறது. சுற்றுச்சுழலை அழித்திருக்கிறது. சக மனிதர்களை அழித்திருக்கிறது. மிச்சமிருப்பது என்னவென்று தேடி கடைசியில் தன்னையே அழித்துக்கொள்கிறது. அந்த அழிவின் விளிம்பில் தள்ளாடும்போதும் ஆணவம் அழியாமல் இதுவரை தன்னால் வெற்றி கொள்ளப்பட்டவற்றின் அதாவது அழிக்கப்பட்டவற்றின் பெயர்களை “துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள்” என்று வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்கும் போது மூன்றிலுமே முதலும் கடைசியுமாக தன் பெயரே இருப்பதைப் பார்த்து அஞ்சுகிறது. தனது அருகில் உயிருள்ள எதுவுமே இல்லாமல் தனிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனைப் பார்த்து அவனைச்  சுற்றிலுமுள்ள சடப்பொருட்கள் சிரிக்கின்றன. அந்தச் சிரிப்பைத் தாள முடியாமல் தடுக்கமுடியாமல் தத்தளிக்கும் சுனில் வேறு யாருமல்ல, நானும் நீங்களும் அவர்களும்தான். 

வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்வது - உருவாக்கிக் கொள்வது, தகவமைத்துக் கொள்வது, எந்தவொரு சூழலுக்குள்ளும் பொருந்துதல் என்கிற வியாக்கியானங்களுடன் வாழும் எந்தவொரு மனிதரும் சுனில்தான். சரியாகச் சொல்வதெனில் இந்த நாவலில் வரும் ஒவ்வொருவரும் சுனிலின் ஒரு பகுதி அல்லது மற்ற அனைவரின் கூட்டுருதான் சுனில். கார்ப்பரேட் உலகத்திற்குள் இருப்பதாக காட்டப்படும் அவன் கரப்பானைப்போல எங்கும் ஊர்ந்தலைகிறான். எனக்கென்னவோ இந்தக் குணத்தை மனிதனிடமிருந்து தான்  அந்த கரப்பான் பெற்றிருக்கக்கூடும் என்று நாவலைப் படித்தப்பின் தோன்றுகிறது. 

நாவலில் வரும் பெண்கள் சுனில்களுக்கு எதிர்த்திசையில் இயங்குகிறார்கள். அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் சுனில்களை கொல்வதில்லை, வாழ்வதற்கு உதவப் பார்க்கிறார்கள். மறுக்கும்போது அவர்களாக சாவைத் தேடிக் கொள்ள அனுமதித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்ட பெண்ணோடு இருக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.

** 

நமது தொல்கதைகளில் மனிதர்களைப் பற்றி மற்ற உயிரினங்களும் சடப்பொருட்களும் பேசுவதைக் கண்டிருக்கிறோம். எனது ‘தீட்டலங்காரம்’ என்ற கதையில் சாதிக் கலவரத்தில் திருடிக் கொண்டுவரப்பட்ட நகைகள் அதை அணிந்திருக்கும் சிறுமியிடம் உண்மையைப் பேசின. இந்தத் தொல்மரபை கரப்பானில் அற்புதமாக கையாண்டுள்ளார் அரிசங்கர். சுனிலின் புழங்குப்பொருட்கள் வழியே அவனுக்கு வெளியேயிருந்து அவனது கதையைச் சொல்லவைக்கிறார். அதேவேளையில் சமகால தகவல் தொடர்பு ஊடகமான வாட்ஸ்அப் குழுக்களுக்குள் நடக்கும் உரையாடலையும் கதையின் பகுதியாக்குகிறார்.  

மனிதவாழ்வின் ஆகப்பெரிய இலக்கு இன்னொரு மனிதரின் அன்பைப் பெறுவதுதான். இதை உணராமல் ஆதிக்கம், வெறுப்பு, செருக்கு, சுரண்டல் என்று சுயமோகத்தில் அலைகிற இந்த மனதை ஒருநிலைப்படுத்துவதன் அவசியத்தை கரப்பான் வழியே யோசிக்கவைத்துள்ள அரிசங்கருக்கு எனது அன்பு.


வியாழன், ஜூலை 23

கனம் கோர்ட்டார் அவர்களே, உங்களது பொன்னான நேரத்தை இனி வீணடிக்கமாட்டோம்.. ஆதவன் தீட்சண்யா



மகாபிரபு ஜகன்னாத்" என்ற படம் நாடுமுழுவதும் 2026 ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கு மாறாக படம் இருப்பதாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், ஜூலை 15 ஆம் தேதி ஒடிஷா உயர் நீதிமன்றம் படத்தை வெளியிடத் தடை விதிக்கிறது. 

மறுநாள் (ஜூலை 16) அந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. அதை அவசர வழக்காக கருதி அன்றைக்கே விசாரிக்கும்படி கோருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உள்ளடங்கிய அமர்வு அடுத்தநாள் (ஜூலை 17) காலையில் முதல் வழக்காக எடுத்து விசாரித்து சுடச்சுட தீர்ப்பளிப்பதாகச் சொல்லி ஆற்றுப்படுத்துகிறது. (தி இந்து, 2026 ஜூலை 17). 

இதுபோன்ற தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த உன்னத வழக்குகளை அவசரமாக விசாரிப்பதற்காக மட்டுமே தனது பொன்னான/பிளாட்டினமான/ வைரவைடூரியமான நேரத்தைச் செலவிடக்கூடியவர் நமது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவரிடம் போய், தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திவரும் கொடிய தாக்குதல் என்கிற அற்ப விசயம் பற்றி முறையிடுவது என்ன நியாயம்?. அந்த எரிச்சலில்தான் "எங்களது நேரத்தை வீணடிக்காதீர், தாக்குதல் பற்றிய வீடியோக்களையும்  நாங்கள் பார்க்க விரும்பவில்லை" என்று சீறியிருக்கிறார். இனிமேலாவது அவருக்கேற்ற முறையீடுகளுடன் அவரிடம் செல்லுங்கள்.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...