சனி, ஜூன் 3

ஆளுநரின் ஆன்மிகப்பொய் அல்லது ஆன்மிகமே பொய் - ஆதவன் தீட்சண்யா


லகமே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த மே 1 அன்று முன்னெப்போதுமில்லாத வழக்கமாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் உருவான நாளை ஆளுநர் மாளிகை கொண்டாடியிருக்கிறது. மற்ற மாநிலங்கள் உருவான தினங்களை ரவி இவ்வாறு  கொண்டாடுகிறாரா, தமிழ்நாடு அல்லது வேறு மாநிலங்கள் உருவான தினங்களை மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் கொண்டாடுகிறார்களா என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்நாடு ஆளுநரின் இந்தக் கொண்டாட்டத்திற்கு தேவை என்ன வந்தது?   

இந்நிகழ்வில் சாதியத்திற்கெதிராகவும் சமத்துவத்திற்கும் போராடிய மகாத்மா ஜோதிராவ் பூலே, நாட்டின் முதலாவது ஆசிரியை சாவித்திரிபாய், சமூகநீதியின் ஓரங்கமாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய சாகு மகராஜ், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகிற்கே ஒளிபாய்ச்சும் அண்ணல் அம்பேத்கர், சுதந்திரப் போராட்டத்தில் மராட்டியரின் பங்கு, மும்பையை தம்முழைப்பால் வளப்படுத்திக் கொண்டிருக்கும் தாராவி தமிழ்மக்கள் – பற்றியெல்லாம் ஆளுநர் பேசியிருந்தால் இந்நிகழ்வை நடத்தியதற்கான நியாயம் இருந்திருக்கும். ரவியோ “சத்ரபதி சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தார். ஆனால், உண்மையாக அவா் ஆங்கிலேயரிடமிருந்து ஆன்மிகம், கலாசாரத்தை பாதுகாக்க படையெடுத்தார்” என்று பேசியுள்ளார். உண்மையில் சிவாஜி ஆங்கிலேயர்மீது படையெடுத்தாரா, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுத்தாரா? 

1674 ஜூனில் நடந்த சிவாஜியின் முடிசூடும் விழாவை நேரில் பார்த்த டாக்டர் ஃபிரையர் “ராஜா, இந்து மரபுப்படி தராசுத்தட்டில் தங்கத்தால் நிறுக்கப்பட்டார். அவரது எடை சுமார் 16000 வராகன்கள். இத்துடன் மேலும் ஒரு இலட்சம் வராகன்கள் சேர்த்து அவரது நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருந்த பிராமணர்களுக்கு அவர் முடிசூட்டிக் கொண்ட மறுநாள் விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கிறார். 

1676ஆம் ஆண்டின் இறுதியில் மராட்டியத்திலிருந்து பெரும்படையுடன் கீழை கர்நாடகம் நோக்கி புறப்பட்டார் சிவாஜி. இதற்கான காரணம் பற்றி “சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ்” என்ற நூலில் ஜதுநாத் சர்கார் விரிவாக விவாதிக்கிறார்.  முடிசூடும் விழாவினால் சிவாஜியின் கருவூலம் பெருமளவு காலியாகியிருந்தது. அடுத்தடுத்த படையெடுப்புகள் செலவைத்தான் இழுத்துவிட்டனவேயன்றி, சொல்லிக்கொள்ளும்படியான வருவாயை ஈட்டித் தரவில்லை. ஏற்கனவே இரண்டுமுறை சூரத்தின் வளம் முழுவதையும் உறிஞ்சியெடுத்தாகிவிட்டது. (இந்தச் சூறையாடலின் கொடூரத்தை அருணன் ‘காலம்தோறும் பிராமணியம்’ நூலில் ‘சூரத் கொள்ளை’ என்ற தலைப்பில் பதைபதைக்க விவரித்துள்ளார்). அருகாமை நாடுகளிலும் இனி கொள்ளையடிக்க வளப்பமில்லை. எனவே செல்வவளம் கொழிக்கும் புதிய பகுதிகள் தேவையாயிருந்தது சிவாஜிக்கு. 

கீழை கர்நாடகம் என்பது தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரப்பகுதி வரை நீள்கிறது. இப்பெரும்பரப்பின் வளம், துறைமுகங்களில் நடக்கும் அன்னிய வர்த்தகம், கனிமச்சுரங்கங்கள், அரசுகளின் பொறாமைப்படத்தக்க ஆண்டு வருமானம், தங்கத்தை பூமியில் புதைத்துவைக்கும் கர்நாடகத்தவர்களின் வழக்கத்தால் கிடைக்கும் புதையல்கள், பெருஞ்சொத்துடைய கோவில்கள், வெள்ளாமை கொழிக்கும் வயல்கள்– இவையெல்லாம் சேர்ந்து தங்கபூமி என்று அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இப்பகுதி சிவாஜியை சுண்டியிழுத்தது. 

வழிநெடுக உள்ள ஆட்சியாளர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சிவாஜியின் வருகை தூதுவர்கள் மூலம் முன்கூட்டியே தரப்பட்டது. சிவாஜியின் படை ஊருக்குள் புகுந்தால் என்ன கதியாகும் என்கிற அச்சம் பரவியிருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. இடைவழியில், 1677 பிப்ரவரியில் ஹைதராபாத்தில் கோல்கொண்டா சுல்தானை சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டார் சிவாஜி. அரச மரியாதையுடனும் விழாக்கோலம் பூண்டு  கொண்டாட்டத்துடனும் சுல்தானால் வரவேற்கப்பட்ட சிவாஜி அவரது விருந்தினராக மார்ச் முற்பகுதிவரை – சுமார் ஒருமாதம் தங்கியிருந்தார். 

பிஜப்பூர் சுல்தானின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளைத் தாக்கி  கைப்பற்றினால் அதிலொரு பகுதியை கோல்கொண்டா சுல்தானுக்கு தருவதாக சிவாஜி வாக்குறுதியளித்தார். இதற்கான ராணுவச்செலவினங்களை ஈடுகட்ட நாளொன்றுக்கு 3000 ஹன் தொகை மானியம், ஆண்டுதோறும் அன்பளிப்பாக ஒரு இலட்சம் ஹன், மராட்டியத்தின் தூதுவருக்கு சுல்தானகத்தில் இடம், 5000 பேர்கொண்ட படை, ஆயுதங்கள் ஆகியவற்றை தருவதற்கு சுல்தான் சம்மதித்துள்ளார். அங்கிருந்த செல்வந்தர்களும் மக்களும் சிவாஜிக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளனர். 

எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலான ஆதாயங்களுடன் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய சிவாஜிக்கு கர்நூலில் 5இலட்சம் ஹன் திறையாக கிடைத்துள்ளது. பின் நல்லமலா காடுகளூடாக பயணித்தவர், இந்துக்களுக்கு மிகப்புனிதமான நிவ்ரிடி சங்கமத்தில் (கிருஷ்ணா நதியுடன் பவனிஷா நதி கலக்குமிடம்) நீராடி வழிபட்டிருக்கிறார். படைகளை அனந்தப்பூருக்கு அனுப்பிவைத்துவிட்டு தென்னிந்தியாவின் மிகத்தொன்மையான சிவத்தலமான ஸ்ரீசைலத்திற்கு 1677 மார்ச் 24 சென்று ஒன்பது நாட்கள் தங்கியிருந்து சிவனை வழிபட்டிருக்கிறார். ‘கைலாஷ்த்வாரா – கைலாயத்தின் நுழைவாயில்’ என்றழைக்கப்படும் அப்பகுதியின் இயற்கையழகிலும் அங்கு தவழ்ந்த அமைதியிலும் மனம் தோய்ந்த சிவாஜி, தான் இறப்பதற்கு இதைவிடவும் புனிதமான இடம் வேறெங்கும் இருக்கமுடியாது என்றெண்ணி அங்கேயே தன் தலையை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக (நவகண்டம்) படைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த அமைச்சர்கள் அவர் இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துரைத்து தடுத்துவிட்டதால், அவர் அங்கு ஸ்ரீகங்கேஷா என்ற மடாலயத்தைக் கட்டி லட்சக்கணக்கான பார்ப்பனர்களுக்கு உணவளிக்க பெருந்தொகையையும் கொடுத்திருக்கிறார். ஒருவேளை இதைத்தான், இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுக்கும் செயல் என்கிறாரா ஆளுநர்? 

1677 ஏப்ரல் முதல்வாரத்தில் ஸ்ரீசைலத்திலிருந்து அனந்தப்பூர் சென்று அங்கிருந்த தன் படையுடன் நந்தியால் கடப்பா திருப்பதி காளஹஸ்தி வழியாக திறை வசூலித்தபடி மே முதல்வாரத்தில் சென்னைக்கு மேற்கே ஏழுமைல் தொலைவிலுள்ள பெட்டபாலம் என்கிற ஊரை அடைந்த சிவாஜி அங்கு முகாமிட்டிருக்கிறார். அங்கிருந்துகொண்டே, மே9 அன்று முன்னோட்டப்படையாக 5000 பேரடங்கிய குதிரைப்படையை காஞ்சிபுரம் வழியாக பீஜப்பூர் சுல்தானின் வசமிருந்த செஞ்சிக்கு அனுப்பியிருக்கிறார். பின்பு நேரில் சென்ற சிவாஜி, பீஜப்பூர் படைகளின் தளபதிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு எளிதாக செஞ்சியைக் கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் மே 23ஆம் தேதி வேலூரை வந்தடைந்த சிவாஜி அங்கு பீஜப்பூர் சுல்தானின் கீழிருந்த கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். (14 மாதங்களுக்குப் பிறகு வசமானது).    

புதிதாக கைப்பற்றிய பகுதிகளை தனக்கு விட்டுக்கொடுக்காமல் சிவாஜியே வைத்துக் கொண்டதை ஒப்பந்த மீறலாக கருதிய கோல்கொண்டா சுல்தான், சிவாஜிக்கு கொடுத்துவந்த பணம் உள்ளிட்ட உதவிகளை நிறுத்திக் கொண்டார். இதனால் ஏற்பட்ட பணமுடையைச் சமாளிக்க சென்னை, பழவேற்காடு பகுதிகளின் செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் 2இலட்சம் ரூபாய் கடன் கேட்டு சிவாஜி கடிதங்களை அனுப்பினார். இவர்களில் யாரும் தப்பமுடியாதபடி சிவாஜியுடன் வந்தவர்கள் மிரட்டி பலவந்தமாக வசூல் செய்தனர். அதுவும் போதாமல் தவித்த சிவாஜியின் பார்வை, தஞ்சாவூர் பக்கம் திரும்பியது. தஞ்சாவூரை அப்போது ஆண்டு கொண்டிருந்தது வேறு யாருமல்ல, சிவாஜியின் சொந்த தம்பி - அவரது தந்தையின் இரண்டாம் தாரத்துக்குப் பிறந்த எகோஜி என்கிற வெங்கோஜி. 

பீஜப்பூர் சுல்தானின் தளபதியான எகோஜி, சிவாஜிக்கு முன்பே தமிழ்நாட்டிற்குள் வந்து, 1676ஆம் ஆண்டு நாயக்கர்களிடமிருந்து தஞ்சையை கைப்பற்றி இங்கு மராத்தியர் ஆட்சியை நிறுவியிருந்தார். “…தனது நிலையை வலுப்படுத்த எண்ணிய அவர் வடக்கிலுள்ள மராத்தியர்களையும் அந்தணர்களையும் பதவியில் அமர்த்தி நிர்வாகத்தை மாற்றியமைத்தார். விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இப்புதிய எஜமானர்கள் நல்ல நிலங்களை தங்களுக்கு வைத்துக்கொண்டு தமிழ் விவசாயிகளை குத்தகையாளர் நிலைக்கு மாற்றினர்… எகோஜி விளைச்சலில் நான்கில் மூன்று பகுதியை வரியாக வசூலித்தார்; செலுத்தவேண்டிய தொகையை பணமாக வசூலித்து, வரிகளை அதிகரிக்க பொருள்களின் விலையை தன்னிச்சைப்படி உயர்த்தி, தனக்கென பொக்கிஷங்களை கோயில்களில் ஒதுக்கிவைத்தார்…”. இதுதான் எகோஜி ஆட்சியின் லட்சணம். 

தம்பியைச் சந்திக்க தஞ்சாவூர் வரும் வழியில் வாலிகண்டபுரம் ஆளுநரான ஷெர்கானைத் தோற்கடித்த சிவாஜி, கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமால்வாடியில் முகாமிட்டார். அங்கு பிரஞ்ச் தூதர் எம்.ஜெர்மைன் சிவாஜியுடன் மூன்றுநாட்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் (ஆனாலும் சிவாஜி படையின் கொள்ளையிலிருந்து பிரஞ்ச் பகுதிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை). தஞ்சாவூரிலிருந்து வந்துகொண்டிருந்த தம்பியை திருமானூருக்குச் சென்று எதிர்கொண்டு வரவேற்றிருக்கிறார் சிவாஜி. அண்ணனும் தம்பியும் திருமால்வாடியில் எட்டுநாட்கள் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். தங்களது தந்தை பாகப்பிரிவினையை பாரபட்சமாக செய்து தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக மனத்தாங்கல் கொண்டிருந்த சிவாஜி, இப்போது தனக்குரிய பங்கை நேர்செய்து தரும்படி தம்பியிடம் கேட்டிருக்கிறார். பணம், நகை, குதிரைகள், படை, ஆளுகைப்பரப்பு அனைத்திலும் நான்கில் மூன்று பங்கினைக் கோரிய அண்ணனிடம் மறுத்துப் பேசினால் தன் கதி என்னவாகும் என்றுணர்ந்த தம்பி ஜூலை 23 அன்று இரவோடிரவாக கொள்ளிடம் தாண்டி தஞ்சைக்கு தப்பியோடிவிட்டார். ஆத்திரத்திமுற்ற சிவாஜி, கொள்ளிடத்தின் வடகரையில் இருந்த எகோஜியின் பகுதிகளைக் கைப்பற்றினார். 

1677 ஜூலை 27 அங்கிருந்து கிளம்பி திட்டக்குடியில் இடைத்தங்கலிட்டவர், படையினரை எலவனாசூர் மீது ஏவியுள்ளார். பட்டுத்துணிகள், சந்தனக்கட்டைகள், வாசனை திரவியங்கள், மாலத்தீவு தேங்காய்கள், கையுறைகள், கூர்வாட்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளுடன் வந்திருந்த தேவனாம்பட்டணம் டச்சு தலைமை அதிகாரியைச் சந்தித்துள்ளார். பின் அங்கிருந்து தன் பரிவாரத்தினருடன் விருத்தாச்சலம் சென்று ஆகஸ்ட் 1-3 வரை தங்கி சிவன் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். (ரவி சொல்லும் ஆன்மிகத் தேடல் தலைப்பில் இதை வரவு வைப்போம்). இதனூடே சிதம்பரமும் விருத்தாச்சலமும் அடுத்த சில வாரங்களில் பரங்கிப்பேட்டையும் (போர்டோ நோவா), அக்டோபரில் ஆரணியும் சிவாஜியின் வசமானதையடுத்து தென்னாற்காடு, வடாற்காடு முழுவதும் அவரது ஆளுகைக்குள் வந்தது. 

***

தமிழ்நாட்டில் சுல்தான்களின் ஆளுநர்களுடனும் சொந்தத் தம்பியுடனும் போரிட்ட சிவாஜி ஆங்கிலேயர்களிடமிருந்து ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க போரிட்ட வரலாற்றைப் பார்ப்போம். 

சிவாஜி சென்னைக்குள் வந்தார் என்பதை நேரடியாக குறிப்பிடும் ஆவணம் எதுவும் இல்லை. “…வழியில் அவர் மதராஸ் வழியாக கடந்து சென்றார்…” என்கிற குறிப்பு சுட்டும் காலகட்டம் 1677 மே. சென்னைக்கு அருகாமையில் சிவாஜி முகாமிட்டிருந்ததற்கு பலநூல்களிலும் ஆதாரங்கள் உள்ளன. (இங்கு ஓர் இடைத்தகவல்: சென்னையில் தம்பிசெட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு 1677 அக்டோபர் 3 அன்று சிவாஜி வந்து அம்மனை தரிசித்துச் சென்றதாக கோவிலில் ஒரு கல்பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்நாளில் இரண்டுநாட்கள் நடையில் சென்னையை எட்டும் தொலைவில் சிவாஜி இருந்திருக்கிறார்.)   

பெட்டபாலத்தில் தங்கியிருக்கையில் சென்னையிலிருந்த ஆங்கிலேயர் கவுன்சிலுக்கு சிவாஜி தனது தூதுவர்களை (மகத்ஜி பந்த்) இரண்டுமுறை அனுப்பிவைத்திருக்கிறார். “14 மே 1677, இன்று ஒரு அந்தணர்  மற்றும் வேறு இரண்டு பிரஜைகள் மூலம் சிவாஜி மன்னரிடமிருந்து சில கிளர்ச்சியூட்டும் கற்களையும் விஷத்தை முறிக்கும் மருந்துகளையும் கேட்டு ஒரு செய்தியும் கடிதமும் கிடைத்தன. நாங்கள் எங்கள் தூதர் மூலமாக எங்கள் தோட்டங்களில் கிடைக்கும் சில பழங்களோடு அவர் கேட்டதையும் ஒரு உள்நாட்டுக் கடிதத்துடன் அனுப்பத் தீர்மானித்துள்ளோம். அந்தண தூதருக்கு மூன்று கெஜம் அகன்ற துணியையும் கொஞ்சம் சந்தனக்கட்டையையும் அளிக்க முடிவெடுத்துள்ளோம். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும் இந்தச் சிறிய காணிக்கைகளுக்காக பணம்பெறுவது சரியல்ல என்று கருதுகிறோம். அவர் எவ்வளவு பெரிய நபர் என்றும் அவர் மேன்மேலும் வளரவளர மதிப்புமிக்க கம்பனிக்கு அவரது நட்பு எவ்வளவு பொருளுடையதாக இருக்கும் என்பதையும் கருத்தில்கொண்டே இவ்வாறு முடிவுக்கு வந்தோம்” என்கிறது பிரிட்டிஷ் ஆவணமொன்று. சிவாஜிக்கு அனுப்பப்பட்ட  இக்காணிக்கைகளின் மதிப்பு அறுபது வராகன்கள். இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்துடன் இதேவகைப் பொருள்களை மீண்டும் கேட்டு மே 25ஆம் தேதி சிவாஜி வேலூரிலிருந்து ஆட்களை அனுப்பியுள்ளார். 52 வராகன் மதிப்பில் ஆங்கிலேயர்கள் கொடுத்தனுப்பியுள்ளனர். 

தென்னாற்காட்டிலிருந்து 1677 செப்டம்பர் 22ஆம் தேதி வாணியம்பாடி வந்தடைந்த சிவாஜி அங்கிருந்தபடியே சென்னையிலிருந்த ஆங்கிலேய கவர்னருக்கு கடிதமொன்றை எழுதினார். “கர்நாடகப்பகுதியில் புதிதாக பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்ட திட்டமிட்டுள்ளேன். துப்பாக்கி, வெடிபொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளைக் கட்டுவது, சுரங்கங்களைத் தோண்டுவது, கற்சுவர்களை தகர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கான நிபுணத்துவம் வாய்ந்த ஆட்கள் உங்களிடமிருந்தால் 20-25 பேரை குறைந்தபட்சம் 10 அல்லது 5 பேரையாவது அனுப்புங்கள். அவர்களுக்கு நல்ல ஊதியத்தைக் கொடுத்து எனது கோட்டைகளில் தங்கவைத்து  கவனித்துக்கொள்கிறேன்”. நடுநிலை வகிக்க வேண்டிய வணிகர்களாகிய தங்களால் இக்கோரிக்கையை ஏற்கவியலாது என்று பணிவுடன் மறுத்து பதில் வந்திருக்கிறது. அதன்பிறகு சிவாஜி ஆங்கிலேயர்களிடம் எதையும் கேட்கவில்லை. 

சிவாஜிக்கு செஞ்சி மற்றும் வேலூரில் இரண்டு வலுவான அரண்மனைகள், (இவற்றின் ஆண்டு வருமானம் 550 ஆயிரம் பவுண்ட்கள்), 72 மலைகள், சமதளத்தில் 14 கோட்டைகள், வீரர்கள், குதிரைகள், பெரும் நிலப்பரப்பு சொந்தமாகியிருந்தன. ஆனால் நிலத்தைவிடவும் தங்கம்தான் சிவாஜியின் இலக்கு. இதற்காக இப்பகுதி எலும்புவரைக்கும் உரிக்கப்பட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இவ்வளவு பெரும் ஆதாயங்களுடன் 1677 நவம்பரில் – சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு- தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து தனது சொந்த நாட்டை நோக்கிப் புறப்பட்ட சிவாஜி ஆங்கிலேயர்களுடன் எங்குமே போரிடவில்லை. ஒன்றிரண்டு கோவில்களுக்குப் போனதெல்லாம் ஆளுநர் சொல்வதுபோல ‘ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் மீட்கும்’ கணக்கில் வராது. 

சிவாஜியால் தமிழ்நாட்டில் விட்டுச்செல்லப்பட்ட அவரது மகன் புதிய சிவாஜியின் படைகள் “காஞ்சீவரத்தைச் சூறையாடி ஏறத்தாழ 500 பேர்களைக் கொன்று நகரத்தைப் பாழாக்கிவிட்டதாகவும், அங்கு குடியிருந்தவர்களை ஊரைவிட்டு ஓடச்செய்ததாகவும் அவர்கள் இங்கும் அங்குமாக சிதறி ஓடியதாகவும் செய்தி வந்தது… கொள்ளையடிப்பவர்களே சொத்துக்களை வைத்துக்கொள்ளலாம் என்று ஊக்குவித்திருப்பதாகவும்”. சிவாஜிகளிடமிருந்து பெற்ற இந்த ஊக்குவிப்பை சங்பரிவாரத்தினர் நடத்தும் கலவரங்களில் காணமுடிகிறது. கோவில்நகரமாம் காஞ்சியில் நடத்திய கொலையும் கொள்ளையும் ஆன்மிகத்தில் வருமா? 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கெதிரான போரில் கொல்லப்பட்ட திப்புவை தேசத்துரோகி என்றும் ஆங்கிலேயர்களுடன் இணக்கம் பேணி காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சிவாஜியை தேசபக்தராகவும் காட்டுவதன் காரணம், சிவாஜி பார்ப்பனீயக் கருத்தியலுக்கு  அடிமையூழியம் செய்தார் என்பதுதான். சிவாஜியின் படையெடுப்பால் அழிவையும் கொள்ளையையும் தவிர தமிழ்நாடு கண்ட பலன் என்னவென்று ஆளுநர் சொல்வாரா? 

உதவிய நூல்கள்:

1.    பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள் - ஜெ.டால்பாய்ஸ் வீலர்

2.    தமிழக வரலாறு - கு.ராஜய்யன் 

3.    சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ் - ஜதுநாத் சர்கார்

 

நன்றி: செம்மலர், 2023 ஜூன் இதழ்

 

புதன், மே 31

ஆளுநரே, நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி? -ஆதவன் தீட்சண்யா

தானொரு சனாதனவாதி என்று கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்தளவுக்கு சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவராக இருக்கிறார்?

பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி 1916ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘சனாதன தர்மம்’ என்கிற நூலின்படி, சனாதனம் என்றால் நித்திய மதம். ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதால் இம்மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரியர்களின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்றழைக்கப்படும் நிலத்தின் வடக்குப்பகுதியில் குடியேறின. ஆரியர்கள் குடியேறியதால் ஆரிய வர்தம் என்றான இந்நிலப்பரப்பு, கிழக்குப் பெருங்கடலில் இருந்து மேற்குப் பெருங்கடல் வரை, இரண்டு மலைகளுக்கு இடையே (ஹிமவான் மற்றும் விந்திய) பரவியுள்ளது. 

-இதன்படி, சனாதனம் ஆரியவர்தத்தில், ஆரியர்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. விந்திய மலைத்தொடருக்கு அப்பாலுள்ள கேரளத்திற்கும் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்திருப்பதன் மூலம் ஆளுநர் ரவி, சனாதனத்தின் எல்லையை மீறிய குற்றத்தைச் செய்திருப்பதுடன், சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழ்நாடுதான் என்று பொய்யுமுரைக்கிறார்.  

சனாதனத்தை நித்திய மதம் என்கின்றனர். அந்தப் பெயர்கூட அநித்தியமாகி பின்னாளில் இந்துமதம் என மாறிப்போனது. சனாதனம் என்பதை ஒரு கோட்டையாகவோ குட்டிச்சுவராகவோ உருவகப்படுத்திக்கொண்டோமானல் அதன் அடித்தளம் ஸ்ருதி. அதன் நான்குச்சுவர்கள் ஸ்மிருதிகள். நான்கு வேதங்களிலிருந்து தேவர்களால் சொல்லப்பட்டு ஞானிகளாலும் ரிஷிகளாலும் கேட்டறியப்பட்டது ஸ்ருதி,. இவ்வாறு கேட்டறிந்து நினைவில் வைத்து சொல்லப்பட்டவை ஸ்மிருதிகள். தேவர்கள் எங்கிருந்து என்ன மொழியில் எதைச் சொன்னார்கள், ரிஷிகளும் ஞானிகளும் அதை எங்கிருந்து கேட்டு என்னவாக விளங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு என்ன மொழியில் போதித்தார்கள், போதனையின் மொழியும் பொருளும் கேட்டுக்கொண்டவர்களுக்கு புரிந்தனவா என்கிற கேள்விகள் ரவிகளுக்கு தேவைப்படுவதில்லை. ஏனெனில் கேள்விகள் பகுத்தறிவுடன் தொடர்புடையவை. சரி அந்தத் தேவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. ‘அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லீறாதிய’ என்கிற கதைதான். 

ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்கள், நான்கு ரிஷிகளால் எழுதப்பட்ட நான்கு ஸ்மிருதிகள் (மநு ஸ்மிருதி, யாக்ஞவல்லிய ஸ்மிருதி, ஷங்க லிகிதா ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி), இரண்டு இதிகாசங்கள், வேதங்களைப் படிக்க முடியாதவர்களுக்காக/ கூடாதவர்களுக்காக(?) புனைந்துரைக்கப்பட்ட 18 புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்து சொல்லப்படும் சட்டங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பின்பற்றி வாழ்வதுதான் சனாதன தர்மத்தின்படியான வாழ்க்கையாகும். இந்தச் சனாதன தர்மத்திற்கு எதிராக வாழ்வதற்கு வரலாறு நெடுகிலும் நடந்த போராட்டங்களின் ஊடாகத்தான் சமூகத்தின் இன்றைய எல்லா முன்னேற்றங்களும் சாதனைகளும் எய்தப்பட்டன. இதன் தொடர்ச்சியில்தான் ஆர்.என்.ரவியால் ஆட்சிப்பணி அதிகாரியாகவும் ஆளுநராகவும் ஆக முடிந்திருக்கிறது. ஆனால் இந்த நாடு சனாதனத்தாலும் ரிஷிகளாலும்தான் கட்டியெழுப்பப்பட்டது என்று உண்மைக்கு மாறாக கதையளக்கிறார். 

சனாதன தர்மம் ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்தது. இந்த வர்ணங்கள் ஆரியப்பெண்களுக்குக் கிடையாது. அவர்கள் திருமணத்திற்கு முன் தகப்பனின் வர்ணத்தையும் திருமணத்திற்குப் பிறகு கணவனின் வர்ணத்தையும், கணவனுக்குப் பிறகு மகனின் வர்ணத்தையும் சேர்ந்தவர்கள். படிநிலையான இந்த வர்ணப்பிரிவினை அந்தந்த வர்ணத்திற்கென வகுத்துள்ள வேலைகளைத்தான் செய்யவேண்டும் என்கிற நிலை இப்போதும் நீடித்திருந்திருந்தால் ஆர்.என்.ரவி என்ன படித்திருப்பார், என்ன வேலை செய்து கொண்டிருந்திருப்பார்? 

ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்த சனாதனம், தனிமனித வாழ்க்கையை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு ஆஸ்ரமங்களாகப் பிரித்தது. ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வேலைப்பரிவினை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரொருவரும் எந்தக் கட்டத்தையும் இன்பத்தையும் விலக்கிச்செல்லக்கூடாது என்கிறது. 

ஆஸ்ரமத்தின் முதலாவது கட்டமான பிரம்மச்சரிய காலத்தில் உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து இருபிறப்பாளராவது அவசியம். இந்த உபநயனச் சடங்கினை பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமேயானதாக ஆக்கியதன் மூலம் பெண்களும் இதர வர்ணத்தவரும் கல்வி பெறுவதை சனாதனம் தடுத்துள்ளதை ரவியால் மறுக்கமுடியுமா? "வேதங்களையோ, இரண்டு வேதங்களையோ, ஒரு வேதத்தையோ முறைப்படி, மீறாமல் படித்தல் பிரம்மச்சரியம்” என்கிறது சனாதனம். இதன்படி, வேதங்களைத் தவிர மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், என்டயர் பொலிடிகல் சயின்ஸ் போன்ற வேறெதையும் படிக்கக்கூடாது; ஐஐடி, ஐஐஎம், மருத்துவக்கல்லூரி போன்றவற்றிலிருந்து வெளியேறுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன் ரவி!. 

“மாணவர் மது, இறைச்சி, வாசனை திரவியங்கள், மாலைகள், சுவையான - காரமான உணவுகள், பெண்கள், அமிலங்கள் ஆகிய உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் விசயங்களைத் தவிர்க்கட்டும்” என்கிற உபதேசத்தில் பெண்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை ரவி ஏற்கிறாரா? மாணவர்கள் தவிர்க்கவேண்டிய பட்டியலில் காமம், கோபம்,  பேராசை ஆகியவற்றுடன் நடனம், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல் போன்றவற்றையும் சேர்க்கிறது சனாதனம். எனில், இசை/ நடன/ நாடக/ திரை/ ஓவிய/ நுண்கலைப்பள்ளிகளை மூடிவிடலாமா ரவி? “வதந்திகள், அவதூறு, பொய்யிலிருந்து விலகியிருத்தல்” என்னும் சனாதனத்திற்கு விசுவாசமாக இருப்பதாக இருந்தால் முதலில் மாணவர் அமைப்பான ஏபிவிபியை மட்டுமல்ல ஒட்டுமொத்த சங்பரிவார அமைப்புகளையும் கலைக்க வேண்டியிருக்கும். ரவியேகூட பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். 

***

நான்கு ஆஸ்ரமங்களில் மற்ற மூன்றுக்கும் ஆதாரம் இரண்டாவதான இல்லற வாழ்வுதான் (கிருகஸ்தம்). எல்லா உயிரினங்களும் காற்றின் ஆதரவில் வாழ்வதுபோல, மற்ற ஆஸ்ரமத்தார் அனைவரும் குடும்பஸ்தர்களின் ஆதரவில்தான் வாழ்கின்றனர். அவர் மற்ற மூன்றையும் உண்மையாக ஆதரிக்கிறார். அனைத்து நீரோடைகளும் ஆறுகளும் ஓய்வெடுக்க கடல் நோக்கிப் பாய்வதுபோல், அனைத்து ஆஸிரமத்தாரும் ஓய்வெடுக்க இவர்களை நோக்கியே ஓடுகின்றனர்… தேவர்களை வழிபடுதல், கல்வி, தாங்கள் இருந்ததைப் போல ஒரு குடும்பத்தை வளர்ப்பதன் மூலமும் புதிய வாழ்க்கைக்கு உதவுவதன் மூலமும் பித்ருகளுக்குரிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமைகளிலிருந்து விலகக்கூடாது. இந்தக் கடமைகளின் கடுமையான சுமையைத் தாங்குங்கள் என்கிறது சனாதனம்.  வீட்டை விட்டு ஓடுபவர்களின் வேலை பாவத்தில் விழுகிறது. துறவு வாழ்க்கை நடத்துவதற்காக, உரிய காலத்திற்கு முன்பே இல்லற வாழ்விலிருந்து வெளியேறி காடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மீது பரிதாபப்பட்ட இந்திரன் ஒரு தங்கப்பறவையாக வடிவெடுத்து வந்து "இல்வாழ்வைப் பின்தொடருங்கள்” என்று வழிகாட்டியுள்ளார். ஆஸ்ரமங்கள்  அனைத்திலும் இல்லறத்தாரே உயர்ந்தவர் என்கிறது வேதம். 

ஏழைகளுக்கு உதவிய பிறகு எஞ்சிய உணவை உண்பதே உண்மையாக உண்பதாகும். தான் மட்டும் காளான் இறக்குமதி செய்து உண்பதெல்லாம் சனாதனத்தில் வராது. இல்லற வாழ்வைத் துறந்தவர்கள், பாதியில் கைவிட்டு ஓடியவர்கள் குறித்து சனாதனியான ரவியின் நிலைப்பாடு என்ன? இல்லற வாழ்வை மேற்கொள்ளாத மடாதிபதிகள், பீடாதிபதிகள், லோககுருக்கள், லோக்கல் குருக்களை சனாதன விரோதிகள் என்று எப்போது அறிவிக்கப்போகிறீர் ரவி? துறவொழுக்கத்தை கேலிக்குள்ளாக்கும்விதமாக ஆடம்பரத்திலும் சட்டவிரோதச் செயல்களிலும் திளைக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் நிகழ்வுகளில் பங்கெடுக்கும் தலைவர்களை ரவி கண்டிப்பாரா? வாழ்வின் ஒரு கட்டத்தைக் கடந்தவர்கள் முந்தையக் கட்டத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறது சனாதனம். ஆனால் வரிசைக்கிரமமாக அல்லாமல் எடுத்தயெடுப்பில் நேரடியாக தட்கல் முறையில் சந்நியாசம் போய்விட்டு பின்னர் கிருகஸ்த நிலையை ஏக்கத்துடன் திரும்பிப்பார்த்து ரகசிய கேமராவில் சிக்கிக்கொண்டவர்கள், மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் இழுத்துவரப்பட்டவர்கள் சனாதனத்துக்கு ஏற்படுத்திய இழுக்கு பற்றி ரவி வாய்திறப்பாரா? 

*** 

இல்வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் தனது கடமைகளின் முழுச்சுமையையும் தன் மகன்களால் சுமக்க முடிவதைக் காணும்போது, மூப்பின் அறிகுறிகள் தோன்றும் போது, தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் தன்னைச் சுற்றி வருவதைக் காணும்போது, அவரும் அவரது மனைவியும் வீட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து, சுறுசுறுப்பான  உலகியல் வாழ்க்கையிலிருந்து விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணரவேண்டும். தத்துவார்த்த நூல்களைப் படிப்பதற்காகவும், பிறருக்காக தியாகம் செய்யவும், நல்வழிப்படுத்தவும் கொடுக்கப்பட்ட அமைதியான, சற்றே ஒதுங்கிய வாழ்க்கையே மூன்றாவது ஆஸிரமமான வானப்ரஸ்தம்.  இந்த ஒரு விசயத்திலாவது சனாதன தர்மத்தை ஏற்று ரவி, மோடி, அமித்ஷா, மோகன் பகவத் போன்றவர்கள் அரசியலிலிருந்தும் பதவிகளிலிருந்தும் ஒதுங்கி காடுகளுக்குச் சென்று தவவாழ்வு மேற்கொண்டு சனாதனத்தில் தமக்குள்ள பற்றினை நிரூபிப்பார்களா? ஒருவேளை காடுகளுக்குப் போய் பழங்குடிகளுக்கு தொல்லை தரவேண்டாம் என்கிற நல்லெண்ணம் உதிக்குமாயின் காசி, ராமேஸ்வரம், கைலாயம் என்று எங்காவது ஆன்மிகப்பயணம் மேற்கொள்வது அவர்களது வீட்டுக்கு எப்படியாயினும், நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக அமையும். (அதற்குள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு விலகல் கடிதம் எழுதுகிறீர்கள் ரவி? கொஞ்சம் பொறுங்கள், நான் சனாதனத்தின் அத்தனை விசயங்களையும் பேசப்போவதில்லை, கட்டுரை முடியப்போகிறது). 

இறுதியாக, தனது தோலில் சுருக்கத்தையும், தலையில் நரையின் வெண்மையையும், குடும்பம் அடுத்தடுத்த சந்ததியினரால் நிறைந்திருப்பதையும் காணும் ஒருவர் அனைத்து பந்தங்களையும் துறந்து செல்போன், கேமரா எதுவுமின்றி காட்டிற்குச் சென்று தியானத்திலும் வழிபாட்டிலும் தனது கடைசி நாட்களைக் கழிக்கவேண்டும் என்கிறது சனாதனம். எப்போது கிளம்பப் போகிறீர்கள் ரவி?

நன்றி: 

தீக்கதிர் 2023 மே 7

விடுதலை 2023 மே 9


 


புதன், ஏப்ரல் 26

சிஐடியு - ஏஐடியுசி மே தினச் சூளுரை



தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!  ஒன்றிய எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுக்கும் கூட்டறிக்கை வருமாறு:

1886இல் சிகாகோவில் நடைபெற்ற 8 மணிநேர வேலைக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடு, மரண தண்டனை ஆகியவற்றின் நினைவாக மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1889இல் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில் நடந்த இரண்டாம் அகிலம் இதை உலகத் தொழிலாளர் உரிமை நாளாகப் பிரகடனம் செய்தது.

சென்னை மேதினம்-100

இந்தியாவில் முதல்முதலாக தமிழகத்தில், சென்னை கடற்கரையில் சிந்தனைச்சிற்பி தோழர் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் செங்கொடியேற்றி மே தினத்தைக் கொண்டாடினார். அது நிகழ்ந்து நூற்றாண்டு நிறைகிறது. பெருமைக்குரிய அந்த நிகழ்வை நினைவிலேந்தி தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் அனைவரும் மே தினத்தை, செங்கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுவோம். வரலாறு காணாத உலக முதலாளித்துவ நெருக்கடியினால் வேலையிழப்பு, கதவடைப்பு, லேஆப், ஊதிய வெட்டு அதிகரித்து வருகிறது. நெருக்கடிச் சுமைகள் முழுவதும் சாதாரண உழைப்பாளி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகளுக்கு மீட்புத் திட்டங்கள் என்ற பெயரால் பெருமளவு சலுகைகள், தொழிலாளிகளுக்கோ துன்ப துயரங்கள்.  இக் கொடுமைகளுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் அலைஅலையான வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. போராடும் உழைப்பாளிகளுக்கு மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், கடந்த காலங்களை விட பெருமளவு அதிகரித்துள்ளன. தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறது. இந்தச் சட்டங்களை எதிர்த்து தொழிலா ளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் விதிகளை உரு வாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வருகின்றன. சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு போன்றவை பறிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்துப் போராடும் உரிமைகளும் கூட தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. 

பெருகி வரும் வேலையின்மை

கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு பழைய உற்பத்தி நிலைக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றிய அரசு இந்தத் தொழில்களை செயலூக்கப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்  உருப்படியான பலன் எதையும்  தரவில்லை.  பெருகிவரும் மோசமான வேலையின்மை கவலை அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலை இழப்பும், ஆலை மூடலும், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி ஐடி துறையிலும் பெருகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புச் சந்தையில் 80 லட்சம் இளைஞர் கள் சேருகிறார்கள். வேலையின்மை 34 சதவீதம் என அதன் உச்சத்தை தொட்டுவிட்டது. கிராமப்புறப் பொருளாதாரத்தை ஓரளவுக்கு பாதுகாத்து வந்த தேசிய கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத் தொழிலாளர் களுக்கான நிதி 30 சதவீதம் அளவுக்கு வெகுவாக  குறைக்கப்பட்டதால் அவர்களது வேலை பெறும் உரிமையும் பறிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் 19 கோடியாக இருந்த வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை, 2022இல் 35 கோடியாக அதிகரித்துள்ளது. பசியின் கொடுமையால் 5  வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 65 சதவீதமாக பெருகி உள்ளது என ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கிறது. அதேசமயம் நாட்டின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து 27.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் முதல் 5 பேரிடம் 72 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளன.

அனைத்துத் துறையிலும் தோல்வி

அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் அதிகரிப்பு,  நிலக்கரி, தொழில்துறை உதிரி பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றில் கட் டாய இறக்குமதி போன்றவற்றால் பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் உள்ளடக்கம் அபரிமிதமாக அதிக ரித்து; ஏற்றுமதியில் நாட்டிற்கு வர வேண்டிய பலனை முழுவதுமாக பறித்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு  ரூ.82 க்கும் மேல் எப்போதும் இல்லாத  அளவிற்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் தங்கக் கையிருப்புகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தி யாவின் வெளிநாட்டு கையிருப்பு 564 பில்லியன் டாலர்களாக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பெரும் தொகைகள் அதானி குழும நிறுவனத்திற்கு அள்ளி வழங்கப்பட்டுள்ள உண்மையை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் தனிப்பட்ட ஆர்வத்துடன் அதானி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டதும்,  தன்னுடன் கௌதம் அதானியை எப்போதும் அழைத்துச் சென்றதும் உலகம் முழுதும் அப்பட்டமாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்த ஒன்றிய  அரசு நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பை முற்றிலுமாக சிதைக்க முற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவை ஒரு பெரும் பான்மை வகுப்புவாத இந்து ராஷ்டிரம் ஆக மாற்றும் திசையில் வேகமாக முன்னேறி வருகிறது. டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக எதிர்க்கிறது. அதோடு சட்டத்தை கையிலெடுத்துக் கொள்கிறது. ராமநவமி தினத்தன்று பல்வேறு இடங்களில் இக்கும்பல் நடத்திய வன்முறை  வெறியாட்டத்தை கூச்சமில்லாமல் மத நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்கிறது.  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சிக் கொள்கை கடுமையாகத் தகர்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் நான்கு அடிப்படை தூண்க ளான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தேசிய சொத்துகளைக் கொள்ளையடிப்பது, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, தேசிய பணமாக்கல் திட்டம் இவை அனைத்தும் கார்ப்ப ரேட்டுகளுக்கு தேசத்தின் சொத்துகளை கொள்ளைய டிப்பதற்காகவே வழிவகுத்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் நலன்களை பாதுகாப்பது தேசத்தை அழிவுப்பாதைக்கு  இட்டுச்செல்லும்  மக்கள் விரோத,  தேச விரோத பாசிச அரசை அகற்றுவதே இந்த மே நாள் சபதமாகட்டும்.

தமிழ்நாட்டில்...

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 60 சதவீதம் பங்களிக்கின்ற மொத்த தொழிலாளர்களில் 94 சதவீதம்  தொழிலாளர்களை கொண்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.  மாநில நல வாரியங்கள் புரட்டிப் போடப்படுகின்றன. நல வரி வசூல் அதிகாரத்தையும் நிதி பலன் வழங்கும் திட்டங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது.  இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் கட்டிடத் தொழிலாளர் நலவாரிய நிதியாக வசூலிக்கப்பட்டு செலவிடப்படாமல் ரூ.38 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  நாட்டிலேயே மிக அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம்,  உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. சுமார் 2 கோடி தொழிலாளர்கள் நேர்முகமாகவும் இதர 2 கோடி பேர் மறைமுகமாகவும்  பணி செய்கிறார்கள். இவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை தரக்கூடிய சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்வதும், சமூகப் பாதுகாப்பு தருவதும் அரசின் இன்றியமையாத கடமையாகும். நிலவும் வேலையின்மை பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணி புரிகின்றனர். அவர்கள் மீது  தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான வீடியோக்களை, தனது அரசியல் ஆதாயத்திற்கு பாஜக பயன்படுத்தியதையும் அதன் விளைவாக நாடு முழுவதும் அச்ச உணர்வை உரு வாக்கிய கொடூரத்தையும் நாம் நன்கு அறிவோம். 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்நாள் முழுக்க வேலை பார்த்தும் நிரந்தரம் செய்யப்படாமல் காண்ட்ராக்ட் என்ற பெயரிலும் அவுட்சோர்சிங் என்ற பெயரிலும் தினக் கூலிகளாகவே வைக்கப்பட்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயரில் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி,  தொழிலாளர் துறை போன்றவற்றில் கீழ் நிலையில் பணி புரியும் சி அன்ட் டி பிரிவு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் புதிய ஆட்களை நியமிப்பதற்கு பதிலாக அவுட்சோர்சிங் என அரசாணை வெளியிடப்பட்டது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன்மொழிந்துள்ள 87 மற்றும் 89 விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. ஆளும் வர்க்கமும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. மீறி சங்கம் அமைத்தால் தொழிலாளர்கள் பணி நீக்கம்,  இட மாற்றம் பொய் வழக்கு என பழிவாங்கப்படுகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள், தலையிட வேண்டிய தொழிலாளர் துறையோ செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தகவல் தொடர்புத்துறையில் தற்போது உலக மந்த நிலையை காரணம்காட்டி தமிழகத்தில் இளம் தொழிலாளர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் வேகப்படுத் தப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவிதமான சட்டவிதிகளையும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. 

பணி நிரந்தரமின்மை

பல்லாயிரக்கணக்கான இளம் தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதோடு அல்லாமல் வாய்மூடி மௌ னியாகவும் இருக்கிறது. அதே போன்று ஆப் மூலமாக பணிபுரியும் கீக் ஊழியர்கள் பணி பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார்கள். இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் இவர்களுக்குப் பொருந்தாதாம். இவர்களை தொழிலாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய தொழிலாளர் துறை இவர்களது முதலாளி யார் என்று தேடுகிற தாம். இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் போனால் அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிலாளர்களை கீக் தொழிலாளியாக மாற்றும் ஆபத்து உள்ளது.  தமிழகத்தில் திட்ட ஊழியர்களாக பணியாற்றும் அங்கன்வாடி, ஆஷா,  மக்களை தேடி மருத்துவம், என்சிபிஎல் போன்ற ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளித்தல் சட்டம் 1982 கூறுகிறது. இந்த மானியக் கோரிக்கையில் கூட அந்த சட்டப்படி 237 தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டார்களா என்பது பற்றி சட்டமன்ற கொள்கைக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை.

குறைந்தபட்ச ஊதியம்...

இந்தியாவிலேயே மிக குறைவாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.  எல்ஐசி முடிவுப்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கான தொகையை குறைந்தபட்ச ஊதியமாக வழங்கிடல் வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங் காமல் வேலை அளிப்பவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்தடிப்புச் செய்கிறார்கள். இவைகளுக்கு சிறந்த உதாரணம் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை தொழிலாளர் துறையினால் அமலாக்க முடியவில்லை. தோட்டம் போன்ற துறைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதாரரீதியாக  வளர்ந்த மாநிலங்களில் இரண்டாமிடத்தை வகித்தாலும், தொழிலாளர்களின் ஊதியம் இந்தியாவின் சராசரி யிலிருந்து ரூ.2500 குறைவாக உள்ள போதும் சமூக நீதி பொருளாதாரக்கொள்கை என்பது வாய் வார்த்தையாகவே உள்ளது. ஒன்றிய அரசின் பொதுத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும் அதே வேளையில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை  தனியார் மயமாக்கும் நடவடிக்கை களில் முனைப்புக் காட்டுவது தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கே விரோதமானதாகும். 

சட்டமீறல்கள் பெருமிதமா?

தமிழக போக்குவரத்துத்துறைக்கு நெடிய வரலாறு உண்டு இத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க அதிமுக முயற்சித்தபோது அதை எதிர்த்து நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாதுகாத்தோம். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வேண்டுமென்றால் தனியார்மயத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பதும் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு ஒத்திசைவாகவே உள்ளது.  மாநில அரசை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலும் உள் ளாட்சி மற்றும் இசேவை துறைகளிலும் தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்படுவதில்லை. இந்த சட்ட மீறல்கள் செய்வதை அதிகாரிகள் பெருமிதமாக கருது கிறார்கள். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொய்வின்றி வாதாடுகிறது. இவைகளை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் ஒன்றிய அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களின் உரிமையை பறிப்ப தற்கும் 44 சட்டங்களை சுருக்கி நான்கு சட்டத் தொகுப்பு, வெளியிட்டது. ஒன்றிய ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இதனை எதிர்க்கின்றன. தமிழ்நாடு அரசு இயல்பாகவே சட்ட தொகுப்புகளை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த சட்ட தொகுப்புக ளுக்கு வரைவு விதிகளை தமிழ்நாடு அரசு தொழி லாளர் துறை வெளியிட்டது.  அந்த விதிகளை உறுதி செய்யாமல் தடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துச் சங்கங்களும் ஒரே குரலில் அரசுக்கு எடுத்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் சட்டத்தொகுப்பு இதுவரை அமல் நடத்தப்படவில்லை என்பதால், அதிலுள்ள வேலை நேரத்தில் மாறுதல்

உள்ளிட்ட விசயங்களை முன்னதாகவே செயல்படுத்தும் வகையில் தொழிற்சாலைச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா 12.04.2023இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பன்னிரெண்டு மணி நேரமாக்கிட, முதலாளிகளின் முப்பது ஆண்டு கால கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. 75 ஆண்டுகாலம் எந்த அரசும் செய்யத் துணியாத தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செய்து தமிழக உழைப்பாளிகளுக்கு ஊறு விளைவித்துள்ளது.  

மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உட்பட பல்வேறு முத்தரப்புக் குழுக்கள் உள்ளன. கடந்த காலத்தில் பத்து ஆண்டுகளாக இந்த குழுக்கள் அனைத்தும் கூட்டப்படாமலேயே இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்த குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொழிலையும், தொழிலாளர்களையும் பாது காப்பதற்கான பல்வேறு கருத்துக்கள் இவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் உரிய முயற்சிகள் உண்டா எனில் கேள்விக்குறியே. எனவே ஒன்றிய,மாநில அரசுகளிடமிருந்து  தொழிற்சங்க இயக்கத்தின் கூட்டுபேர உரிமை, ஜனநாயக  உரிமை, சுதந்திர  உரிமைகளை மீட்டெடுப்போம். தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம். ஒன்றிய சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று  இந்த மே நாளில் சபதமேற்போம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! 

தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!

மே தினம் நீடூழி வாழ்க! புரட்சி ஓங்குக!


நன்றி: https://theekkathir.in

திங்கள், ஏப்ரல் 24

சூரியனையே பார்க்கமுடியாதபடி செய்துவிடாதீர் - ஆதவன் தீட்சண்யா

மிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப் 21 அன்று திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அன்றைக்கு காலை சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி போன்ற தோழர்கள் முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டாமென்றும், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சரும் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடமிருந்தும் தோழமைக்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தச் சட்டத்திருத்தம் பற்றி இன்று தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப் போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வந்து அரசுடன் கலந்துபேசியதை மட்டும் வைத்துக்கொண்டு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப்போவதாக அறிவித்திருப்பதானது மிகவும் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற நடவடிக்கை. எதிர்ப்புக்கு செவிமடுக்கிற ஜனநாயகப்பண்பு இந்த அரசிடம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த அழைப்பை ஓர் அளவுகோலாக கருதமுடியாது. அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது.  

 முதலீட்டாளர்களுக்கு அரசு கொட்டிக்கொடுக்கிற சலுகைகளையெல்லாம் இங்கிருக்கிற ஒரு எருமைக்குக் கொடுத்தால்கூட அது தொழிலதிபராகிவிடும். அதற்கு மேலும் முதலீட்டாளர்கள் இப்படியானதொரு சட்டத்திருத்தத்தை கோரியதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வாயும் வயிறுமின்றி உடல்முழுக்க கை முளைத்தவர்களாக தொழிலாளர்கள் இருந்துவிட்டால் உற்பத்தியைப் பெருக்கி குமித்துவிடலாமே என்கிற அங்கலாய்ப்பு அவர்களுக்கு எப்போதுமே இருந்து வருவதுதான். நாளையே அப்படியொரு கோரிக்கையை வைத்தால், தொழிலாளிகளை ஆய்வுமேசையில் கிடத்தி அறுவைச்சிகிச்சையைத் தொடங்குமா அரசு?

எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்தே அதை தகர்த்ததன் மூலம் திமுக அரசு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே துரோகம் செய்துள்ளது. இதைச் சொன்னதுமே சீனாவில் இல்லையா என்கிற கேள்வி சாமர்த்தியமாக முன்வைக்கப்படுகிறது. சீன அரசு தொழிலாளர் விரோதப் பாதையில் செல்லுமானால் அதை அந்நாட்டின் தொழிலாளிகள் எதிர்ப்பார்கள். ஒருமைப்பாட்டுணர்வில் நாமும் எதிர்ப்போம். தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமென சீனாவிலிருந்து பின்பற்றத்தக்க எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது அங்கு தோல்வியடைந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட ஒரு விசயத்தைத்தான் திமுக அரசு பின்பற்ற வேண்டுமா? (இந்த ஆண்டு அங்கு மேதினக் கொண்டாட்டத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)   

996 வேலைநாள் – அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை – 6 நாட்கள் - என்கிற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது. இது, நாளொன்றுக்கு எட்டுமணி நேரம், அதிகப்படியாக வாரத்திற்கு 44 மணிநேரம் என்கிற சீனாவின் வேலைநாள் சட்டத்திற்கு விரோதமானது, தாராளவாதக் கொள்கையை நோக்கி சீன அரசு சரிகிறது என்று அறிமுக நிலையிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் இந்த 996 வேலைமுறையை ஏற்கவிரும்பும் நிறுவனம் அதன் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 996 வேலைமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு பணப்பயன்கள் உறுதிசெய்யப்பட்டிருந்த போதும் பணிச்சுமையின் காரணமாக கடும் மனச்சோர்வுக்கும் உடல்ரீதியான பல துன்பங்களுக்கும் ஆளாகிவந்தனர்.  நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன், சூரியவெளிச்சத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவிலில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 996ஐசியூ.காம் போன்ற இணையதளங்கள் (996 வேலைநாள் என்பது தொழிலாளர்களை ஐ.சி.யூ. சிகிச்சைக்கு அனுப்புவதுடன்தான் முடிகிறது என்பதைச் சுட்டும்விதமாக இப்பெயர்) எதிர்ப்புணர்வுகளை ஒருங்கிணைத்தன. கடைசியில், தொழிலாளர்களின் உடல், மனநலப் பிரச்னைகளில் சமரசமில்லை என்று பாதுகாப்புச் சட்டங்களை தீவிரமாக செயல்படுத்தப் போவதாக சீன அரசு அறிவிக்கவேண்டிவந்தது. இந்தச் சூழலில்தான் அங்கிருந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்துகொண்டு சீனாவின் 996 போல இங்கும் வேலைநாளை மாற்றும்படி கோருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் பாஜக அரசு ஆளைக் கொல்லும் இந்தத் திட்டத்தை நெகிழ்வான வேலைநாள் என்று வஞ்சகமாக ஏவியுள்ளது.      

இந்தியாவில் ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். நாட்டின் சட்டப்பூர்வ வேலைநாளுக்கு விரோதமான இந்த உழைப்புச்சுரண்டல் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் போர்க்குணமும் அமைப்புரீதியாக திரளும் வாய்ப்பும் அற்றவர்களாக உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலைநாளுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு பொருளற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியக்கூடும். 8 மணி நேர வேலைநாள் என்பதன் வரலாற்றையோ அதற்கான தியாகத்தையோ அறியாதவர்களுக்கு அது தேவையற்றதாகக்கூட தோன்றலாம். நியோ நார்மல் என்கிற பெயரில் எல்லா ஒழுங்கீனங்களையும் விதிமீறல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு அதற்குள் சாதகமானதைத் தேடியடைந்து  சமாதானமடைகிற, பீயிலே பொறுக்கிய அரிசியில் பிரியாணி ஆக்கித் தின்பதை பெருமிதமிதமாய் பேசியலைகிறவர்களும் கூட மனிதர்கள்தான். அவர்களது உடல்/மனநலனுக்கும் இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது கெடுதலானதே. எட்டு மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வு போன்ற அடிப்படையான கோரிக்கைகள் இவர்களுக்கும் தேவையானவையே.

8மணிநேர வேலை என்பதே 8 மணிநேரத்துடன் முடிந்துபோவதில்லை. உணவுத் தயாரிப்பது, -பணியிடத்திற்கு சென்று திரும்புதல் உட்பட அதற்கான முன்தயாரிப்புக்கென கூடுதலாக சிலமணி நேரங்களை – உறக்கத்திற்கும் ஓய்வுக்குமென இருக்கும் தமது சொந்த நேரத்திலிருந்து செலவிட வேண்டியிருக்கிறது. ஒருவர் எட்டுமணி நேரம் உழைப்பதனால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதில் ஓய்வும் உறக்கமும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தே அவற்றுக்கென தனியாக நேரப்பங்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை வாழ்வில் உறக்கம் என்பதே ஓய்வு என்று திரிக்கப்பட்டுவிட்டதால் உழைப்புக்கும் உறக்கத்திற்கும் அப்பால் இன்னொரு வாழ்வு இருப்பதையே அறியாதவர்களாக அல்லது அறிந்தும் துய்க்கும் வாய்ப்பற்றவர்களாக தொழிலாளர்கள் நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 12 மணிநேரம் வேலை என்பது 12 மணிநேரத்துடன் முடியக்கூடியதா? முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு ஒவ்வொரு தொழிலாளியின் சொந்த நேரத்திலிருந்தும் மேலும் நான்கு மணிநேரங்களை அபகரித்துக்கொடுக்கப் போவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.

மூன்றாவது ஷிப்ட் என்பதே இல்லாமல் போகும் நிலையில் ஒரு ஷிப்டுக்குத் தேவையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படாமலே போகும் நிலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கதி என்ன என்பது ஒருபுறமிருக்க, அந்த ஷிப்டுக்கென தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை குறையுமா நீடிக்குமா? இரண்டு ஷிப்டு தொழிலாளர்களைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிவிட முடியும் என்கிற வகையில் அரசின் செல்லப்பிள்ளைகளான முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபம். வாரத்தில் மூன்று நாட்கள் நிறுவனத்தை மூடிவைப்பதனால் அந்த நாட்களில் (உணவு, வாகனம், மின் கட்டணம், தண்ணீர், இயந்திரத் தேய்மானம் போன்ற  நடைமுறைச் செலவுகள் மிச்சம் என்கிற வகையில் மற்றொரு லாபம் என்பதும் உண்மைதான். ஆனால் வாராவாரம் மூன்றுநாட்களுக்கு ஆலையை மூடிவைக்கவா முதலீட்டாளர்கள் ஆலைகளைத் திறப்பார்கள்? அது அவர்களின் வர்க்க இயல்புக்கு ஏற்புடையதல்ல. எனில் அந்த மூன்று நாட்களிலும் வேறு வகையாக ஆலையை இயக்குவதற்கான திட்டம் அவர்களுக்கு இருக்கும். 12 மணிநேரம் அமலானால் அப்போது அந்தத் திட்டமும் தன் கோரமுகத்துடன் வெளிப்படக்கூடும். ஒருவேளை நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளர்களையும் எஞ்சிய மூன்றுநாட்களில் தற்காலிக/ ஒப்பந்த/ பயிற்சி/ தொழிலாளர்களையும் கொண்டு ஆலையை இயக்குவது அவர்களது திட்டமாக இருக்கலாம். வேலையின்மையைக் காட்டி தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களைக்காட்டி நிரந்தரத் தொழிலாளர்களையும் பணியவைத்துச் சுரண்டுவதில் இந்திய முதலாளிகள் ஏற்கனவே மோசமான பல முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.   

ஒவ்வொரு வாரமும் வேலையற்று இருக்கப்போகிற மூன்றுநாட்களையும் என்னவிதமான ஆக்கப் பணிகளில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்கிற முன்கணிப்பு ஏதும் அரசுக்கு இருக்கிறதா? நான்குநாள் உழைப்பின் அலுப்பை சேர்த்துவைத்து மூன்றுநாட்களில் தீர்த்துக் கொள்வது சாத்தியமா? இவ்விசயத்தில் ஒசூர் தொழிற்பேட்டையின் அனுபவம் ஒன்றினை பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

 ***

கனப்படுப்பை ஏன் மூட்டவில்லை? 

வீட்டில் நிலக்கரி இல்லை.

ஏன் நிலக்கரி இல்லை?

நிலக்கரி வாங்க பணமில்லை

ஏன் பணமில்லை?

அப்பாவுக்கு வேலை இல்லை.

அப்பாவுக்கு ஏன் வேலையில்லை?

அவர் வேலை செய்யும் சுரங்கத்தில் அதிகப்படியான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதாம்.

-குழந்தைக்கும் தாயுக்குமிடையே மார்க்ஸ் காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த உரையாடல் காலங்கள் தாண்டி 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடியதே. முதலாளிகள், தொழிலாளிகளை வதைத்து அதிகப்படியான உற்பத்தியைப் பெற்றுவிடுவார்கள். சந்தையின் தேவையை விடவும் கூடுதலாக கையிருப்பில் உள்ள சரக்கு தேங்கிவிடும் பட்சத்தில் அந்தச் சுமையைத் தொழிலாளிகள் மீது ஏற்றிவிடும் தந்திரமாக கதவடைப்பு செய்து உற்பத்தியை முடக்கிவிடுவார்கள். அம்மாதிரியான நேரங்களில் “ஆஹா, மூடிய ஆலையைத் திறக்கும் வரை வேலையே இல்லை… ஜாலியோ ஜாலி…” என்று எந்தத் தொழிலாளியும் கும்மாளம் போடுவதில்லை. உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களைக் கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.

 ஒசூரில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று, 2008-09ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக போதுமான விற்பனை இல்லை என்றும் கையிருப்பு தீரும்வரை உற்பத்தியை முடக்கி வைப்பதாகவும் கூறிக்கொண்டு வாரத்தில் மூன்றுநாட்கள் கதவடைப்பு செய்தது. தொடக்கத்தில் சொந்தவேலைகள் சிலவற்றை முடித்துக் கொள்ள இந்த விடுமுறை நாட்கள் தொழிலாளிகளுக்கு பயன்பட்டதென்னவோ உண்மை தான். ஆனால், அடுத்தடுத்த வாரங்களும் அதேநிலை என்றபோது தொழிலாளிகள் சேர்ந்தாற்போல மூன்று நாட்களை ஒவ்வொரு வாரமும் எவ்வாறு கழிப்பது என்று தடுமாறிப்போயினர். எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும் வேலையின்றி வெறுமனே இருப்பதனால் தாறுமாறாக யோசிப்பதுமாக தொழிலாளர்கள் கடும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகினர். ஆலை வளாகத்திலேயே சில தற்கொலை முயற்சிகள் நடந்தன. சிறந்த தொழிலாளி என்று பணிக்காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட விருதுகள் சான்றிதழ் ஆகியவற்றை நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து வேலை தருமாறு கதறியவர்களும் உண்டு. உறக்கமின்றி அகாலத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் உலாத்துவது, மின்கம்பத்தை அல்லது ஓடும் சாக்கடையை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்றெல்லாம் சமனிலை இழந்த தொழிலாளர்களை   வீட்டுக்கு அழைத்துப்போய் படுக்க வைக்கும் பணியை தொழிற்சங்க ஊழியர்கள் இரவுதோறும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆலை நிரந்தரமாக இயங்கிய பின்னும்கூட இயல்புக்குத் திரும்ப அவர்களுக்கு காலம் தேவைப்பட்டது. (அந்த ஆண்டில் கையெழுத்தாக வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர் தரப்பை பலவீனப்படுத்த இந்த அச்சவுணர்வையும் நிச்சயமற்றத்தன்மையை நிர்வாகம் பயன்படுத்தப் பார்த்தது)

ஒரு தற்காலிக கதவடைப்பின் மூலம் வாராவாரம் வந்த மூன்றுநாள் விடுமுறையே தொழிலாளிகளின் ஆளுமையைச் சிதைக்குமென்றால் நிரந்தரமாகவே வாராவாரம் மூன்றுநாள் விடுமுறையில் அவர்கள் என்னவாகப் போகிறார்கள்? சும்மா இருக்கவொட்டாமல் வேறு இன்னுமொரு நிறுவனத்திற்கு தங்களை விற்றுக்கொள்ளும்படி அரசு விரட்டுகிறதா? அல்லது முதல் நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளியாகவும் அடுத்த நாட்களில் அத்துக்கூலியாகவும் வேலை பார்க்கும்படி நெட்டித்தள்ளுகிறதா? அப்படியும்தான் வேலை பார்த்து சம்பாதிக்கட்டுமே என்றும் கூட இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சொல்லக்கூடும். ஆனால் சம்பாதித்துக் கொண்டேயிருந்தால் வாழ்வது எப்போது என்று தொழிலாளர்கள் நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடையைத் தேடி கண்டையும் வரை வேலைநேரத்தை மாற்றமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பது குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லையானால் சீனத் தொழிலாளி சொன்னதையே அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சொல்வோம்: சூரியனையே பார்க்க முடியாதபடி செய்துவிடாதீர். 

நாட்டையே நாம் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சியின் சின்னம் என்பதற்காகவேனும் சூரியனை அன்றாடம் பார்க்கும்படியாக தொழிலாளிகளின் வேலைநேரம் மாற்றமின்றி நீடிப்பதை உறுதிசெய்யவேண்டும். அல்லது இன்னும் கூடுதல் நேரம் சூரியனைப் பார்க்கும்விதமாக வேலைநேரத்தை ஆறுமணிநேரமாகக் குறைத்து தன் தந்தையின் கனவை நனவாக்கவேண்டும். 

செவ்வாய், ஏப்ரல் 18

ஜனநாயகம் இல்லாத சமூகம் கலை இலக்கியவாதிகளுக்கு ஏற்புடையதல்ல –ஆதவன் தீட்சண்யா


1.    ஒரு நபரை அல்லது ஒரு குழுவை அவர்கள் யார் என்பதன் அடிப்படையில் - வேறுவிதமாகக் கூறினால், அவர்களின் மதம், இனம், தேசியம், நிறம், வம்சாவளி, பாலினம் அல்லது பிற அடையாளக் காரணிகளின் அடிப்படையில் பாகுபடுத்துவது, பகைமை கொள்வது அல்லது வன்முறையை கைக்கொள்வதற்கான - சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிரான - மனநிலையை ‘வெறுப்பு’ என்கிற உத்தேசமான வரையறைத் தருகிறது ஐ.நா.சபையின் ஆவணமொன்று1.  பேச்சு, செயல், நடத்தையின் வழியே வெளிப்படும் இந்த வெறுப்பும் அதனையொட்டி சமூகத்தைப் பிளவுபடுத்துவதுமாகிய போக்கு இந்தியாவில் வலதுசாரிகள் அரசியல் பலம்பெற்ற நாளின் அதிகாலையில் திடுமென  தோன்றிவிட்டதாகவும் அதற்கு முன்புவரை இங்கு அனைவருமே அந்நியோன்னியமாக ஆரத்தழுவி வாழ்ந்துவந்தது போலவும் கற்பிதம் செய்துகொள்கிற மேம்போக்கான பார்வை ஒன்றுள்ளது. இதன்பொருட்டு வரலாற்றுண்மைகளைப் பேசப் புகுந்தோமானால் ‘பழங்கதைகள் எதற்கு? நடப்புக்காலத்தின் உடனடிப்பிரச்னைகளைப் பேசுவோமே’ என்று அலுத்துக் கொள்ளும் ஆபத்தான போக்கும் மிகுந்துவருகிறது. நடப்புலகம் உண்டாக்கும் நெருக்கடிகளுக்கு காரணத்தைத் தேடும் எவரொருவரும் தவிர்க்கமுடியாமல் வரலாற்றுக்குள் நுழைகின்றனர். வேறொரு பண்பாட்டுப் பின்புலமுள்ளவர் தமது அண்டைவீட்டில் வசிப்பதை சகித்துக்கொள்ள முடியாத2 வெறுப்புணர்வு பெரும்பாலான இந்தியர்களை ஆட்டிப்படைப்பதற்கான காரணத்தை தேடிப் போனால் மற்றவர்களை வெறுப்பதில் இந்தியர்களுக்கு குறைந்தபட்சம் 3500 வருடப் பயிற்சி இருக்கிறது என்கிற உண்மை புலப்படுகிறது. ஆம், சக மனிதரை மனிதத்தன்மையிலிருந்து கீழறக்கியோ மேலேற்றியோ பார்க்கும் கண்ணோட்டம் கஜகஸ்தான் பகுதியிலிருந்து இந்தியப் பெருநிலப்பரப்புக்குள் அலைகுடிகளாக ஆரியர்கள் நுழைந்தபோதிலிருந்தே தொடங்கிவிட்டது. 

ஆரியர்கள் இங்கு வருவதற்கு சற்றேறக்குறைய 2500ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரிகம் பரவியிருந்த குடியிருப்புப்பகுதிகளில் ஒருவகையான படிநிலை அமைப்பு காணப்பட்டாலும் அதற்கு புனிதம் தீட்டு என்பது அடிப்படையாய் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ஆரியர்கள் தங்களது பூர்விக நிலப்பரப்பு, காலநிலை, பண்பாடு ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட இந்தியப்பரப்புக்குள் வந்தபோது அவர்கள் இங்கிருந்த பூர்வகுடிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள நிறத்தை முன்னிறுத்தினர். நிறம், உருவ அமைப்பு, வாழ்க்கைமுறை ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட பூர்வகுடிகளை அவர்கள் சமமாகப் பார்க்கவில்லை. “ஆரியர்களின் முதன்மையான எதிரிகள் ஆரியர்களல்லாத பூர்வகுடி மக்கள்தான். பானிகள் என்று அறியப்படும் மக்கள் மீது பொதுவாக ஒரு விரோத உணர்வை வெளிப்படுத்தும் பல பத்திகள் ரிக் வேதத்தில் இருக்கின்றன...”3.   

2.    கடவுள் மனிதர்களைக் காப்பாற்றுகிறவர் என்று சொல்லிக்கொண்டு கடவுளைக் காப்பாற்ற மனிதர்கள் மோதி மடிவதை உலகெங்கும் வரலாறு நெடுகிலும் பார்க்கமுடிகிறது. இங்கேயும் மனிதர்களுக்குள் நடந்த மோதல்களில் பலவும் கடவுள்களின் பெயரால் நடந்தவைதான். இந்தியப் பூர்வகுடிகளின் தொல்தெய்வங்கள் பலவற்றை பின்னுக்குத் தள்ளியோ உட்செரித்தோ ஆரியக்கடவுள்கள் முன்னுக்கு வந்தன. ஒருகட்டத்தில் பூர்வீகர்களின் தாய்த்தெய்வங்களும் ஆரியக்கடவுள்களான இந்திரனும் சோமனும் அக்னியும் கைவிடப்பட்டன அல்லது பின்னாளில் பெருந் தெய்வங்களாக உருவெடுத்த சிவன், விஷ்ணு, பார்வதி, லஷ்மி ஆகிவற்றின் அவதாரங்களாக்கப்பட்டன. சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையேயான மோதல் பிரசித்தமானதுதான். தமக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டாலும் சைவமும் வைணவமும் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக எவ்வளவு கொடிய அணுகுமுறையைக் கையாண்டன என்பதனை நாயன்மார்களும் ஆழ்வார்களும் எழுதியவற்றிலிருந்து அறியமுடியும்.

3. வேதமதத்தின் வர்ணாஸ்ரம, சாதிய, சடங்கியல் கொடுங்கோன்மைக்கு எதிராக பரவிய அவேதிக மதங்கள் ஆரிய வழித்தோன்றல்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகின. இந்த வெறுப்பின் விளைவாக சமணர்கள் கழுவேற்றப்பட்டதை வரலாறு நினைவூட்டியபடியே இருக்கிறது. இந்திய வரலாறு என்பது பவுத்த மதத்திற்கும் பிராமணீய மதத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் வரலாறுதான் என்று அம்பேத்கர் குறிப்பிடுமளவுக்கு4 நிலைமை இருந்திருக்கிறது. மௌரிய வம்சத்தின் மன்னர் அசோகர் பவுத்தம் தழுவியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களால் அடுத்துவந்த 140 ஆண்டுகள் வேதமதத்தின் புரோகிதப் பிரிவினராகிய பார்ப்பனர்கள் செல்வாக்கிழந்து கடும் இழப்புகளைச் சந்தித்தனர். இதிலிருந்து மீளும் எதிர்ப்புரட்சியாகவே கி.மு.185ஆம் ஆண்டு மௌரிய மன்னனைக் கொன்று புஷ்யமித்ர சுங்கன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான். ஒவ்வொரு பவுத்தபிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்து அழித்தொழிக்குமளவுக்கு அவனிடம் வெறுப்பு மண்டியிருந்தது5. ‘வைதீக வெறியும் பிறமத வெறுப்பும் கொண்ட சுங்கப் பேரரசர்களின் ஆட்சியில் பௌத்தர்களின் நிலைமை எப்படியிருந்தது என்பதை கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. பல பௌத்தர்கள் இப்போதும்கூட புஷ்யமித்திரன் பெயரை மிகவும் வெறுப்போடு சாபமிடும் முறையில்தான் உச்சரிக்கிறார்கள் என்று சீன ஆதாரங்களிலிருந்து தெரிகிறது.’6 

‘அடிபட்ட விலங்கின் சீற்றத்துடன்’பௌத்தத்தை அழித்தொழித்த புஷ்யமித்திர சுங்கன், பவுத்தம் போன்ற அவைதீக மதங்கள் மீண்டும் தோன்றிவிடாதபடி இறுக்கமான வடிவில் நால்வருண முறையை மீண்டும் கொண்டுவருவதற்கான புதிய சட்டத்தொகுப்பினை கி.மு.170ஆம் ஆண்டுக்கும் கி.மு.150ஆம் ஆண்டுக்கும் இடையில் சுமதி பார்கவா என்பவனைக் கொண்டு எழுதினான். இந்தச் சட்டத்தொகுப்புதான்  மனுஸ்மிருதி என்கிற பெயரில் அறியப்படுகிறது. 

‘...மதநெறிகளுக்கு மாறான வழியைப் பின்பற்றும் மனிதர்களை தன் நாட்டிலிருந்து மன்னன் வெளியேற்ற வேண்டும்’,

‘... மதத்துக்குப் புறம்பான பிரிவுகளில் சேர்ந்த பெண்களுக்கு நீர்க்கடன் இயற்றக்கூடாது’,

‘(குடும்பத்தலைவன்) மதத்துக்குப் புறம்பானவர்களை (வேதத்துக்குப் புறம்பாக வாதிடும்) தர்க்கவாதிகளை முகமன்கூறும் செயலால் கவுரவிக்கக்கூடாது’,

‘...வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாத சம்பிரதாயங்கள் எல்லாம், வெறுக்கத்தக்க தத்துவமுறைகள் எல்லாம் மரணத்துக்குப்பின் எந்தப் பேற்றையும் அளிக்கமாட்டா. ஏனென்றால் அவை இருளில் கால்கொண்டவை என அறிவிக்கப் பட்டுள்ளது’,

‘ (வேதத்துக்கு)  மாறுபடும் அவை (அந்தக் கொள்கைகள்) எல்லாம் தோன்றி (விரைவில்) அழிபவை. புதிதாக வந்த அவை பயனற்றவை, பொய்யானவை’

- இவ்வாறெல்லாம் வேதமறுப்பு மதங்கள் - குறிப்பாக புத்தமதம் பற்றி அன்றைக்கு மனுஸ்மிருதி வெறுப்புடன் உமிழ்ந்த சொற்களைத்தான் இன்றைக்கு  இந்துத்துவாவினர் கிறிஸ்தவத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் எய்கிறார்கள்.  

4. கி.மு.முதலாம் நூற்றாண்டில் கேரள கடற்கரையிலிருந்த முசிறி துறைமுகத்தில் வந்திறங்கி அங்கிருந்து சீனா வரை சென்று கிறித்துவ மதபோதகம் செய்து சென்னைக்குத் திரும்பியவர் புனித தாமஸ். திரும்பும் வழியில் இவர் வடமேற்கு இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பாலவர்கள் அல்லது இந்தோ பார்த்தியர்கள் வம்சத்தைச் சேர்ந்த கோன்டோபார்னெஸ் என்ற மன்னனின் அரசவைக்குச் சென்று  அங்கும் கிறித்துவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர் மூலமாகத்தான் இந்தியாவில் கிறிஸ்தவம் அறிமுகமாகியது7. இதேபோல கேரள, குஜராத் கடற்கரை நகரங்களுக்கு வந்த அரபுவணிகர்கள் மூலமாக இங்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவியது. ஆகவே இந்திய மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக பரிச்சயமான கிறிஸ்தவத்தையும் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்தே அறிமுகமாகிய இஸ்லாத்தையும் பின்னாளில் வந்த படையெடுப்பாளர்களுடனும் அல்லது ஆக்ரமிப்பாளர்களுடனும் இணைத்துக் காட்டுவது வரலாற்றுக்குப் புறம்பானது.  

ஆரியர்களைப் போலவே வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்தியாவின் வடமேற்கு எல்லை வழியாக இந்திய நிலப்பரப்புக்குள் பஞ்சம் பிழைக்கவும் படையெடுத்தும் வந்த அயலவர்களின் பட்டியல் மிக நீண்டது. அவர்களில் ஒரு தரப்பான மொகலாயர்களின் பல்வேறு பிரிவினர் இந்தியாவை ஏறத்தாழ எண்ணூறாண்டுகள் ஆண்டிருக்கின்றனர். இவ்வளவு நீண்டகாலத்தில் அவர்கள் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வாள்முனையில் இங்கிருந்தவர்களை மதம் மாற்றும் முயற்சியை மேற்கொண்டிருந்தால் மொத்த இந்தியாவும் முஸ்லிம் இந்தியாவாக மாறிப்போயிருக்கும். ஆனால், இந்தியாவை ஆள்வதுதான் அவர்களின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறதேயன்றி இஸ்லாத்தைப் பரப்புவதல்ல. எட்டாண்டுகால மோடி ஆட்சியில் இந்துத்வாவினர் இவ்வளவு துள்ளுகிறார்கள். ஆனால் எண்ணூறாண்டுகால ஆட்சியில் விதிவிலக்கான சில அத்துமீறல்களைத் தவிர்த்து பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இங்கிருந்த தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றில் குறுக்கிடவில்லை என்பதுடன் இவற்றுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து நல்லிணக்கம் பேணுகிறவர்களாக இருந்தார்கள் என்பதற்கு அக்பர் தொடங்கி திப்பு சுல்தான் வரையாக உதாரணங்களைக் காட்டமுடியும். மராத்திய இராணுவத்தளபதி ரகுநாதராவ் சிருங்கேரி மடத்தை கொள்ளையடித்திருக்கிறான்; திப்புவோ மடத்தை மீண்டும் கட்டுவதற்கு உதவியிருக்கிறார். குருவாயூர் கோவிலுக்கு 613.2 ஏக்கர் நிலமும் 1428 ரூபாய் 9 அணா 2 பைசா வருடாந்திர மானியமும் கொடுத்திருக்கிறார்8.   

5. இஸ்லாமிய ஆட்சியாளர்களுடன் வந்தவர்கள், அவர்களது வம்சாவளிகள் எல்லைப்புறங்களில் அல்லது அரசவைப்பகுதிகளில் குடியேறியிருக்கிறார்கள். எனில் நாட்டின் உள்பகுதிகளில் பரவியிருக்கும் இஸ்லாமியர்கள் யார் என்கிற கேள்விக்கு, அவர்கள் வேதமதத்தின் கொடுமை தாளாமல் மதம் மாறிய பௌத்தர்கள், சூத்திரர்கள் மற்றும் அடிநிலைச்சாதியினர் என்று வரலாற்றாளர்கள் பதிலளிக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடங்கி டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என்று பலர் இங்கு வந்தபோதும் அவர்களது முதன்மை நோக்கம் வணிகமாகவும் பின்னாளில் கூடக்குறைய நிலப்பரப்பை தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதும் என்பதாகவே இருந்தது. மதத்தைப் பரப்புவது நோக்கமாய் இருக்கவில்லை. மதப்பிரச்சாரத்திற்காக வந்த தொடக்கால கிறிஸ்தவ போதகர்கள், சாதியடுக்கின் மேலே இருப்பவர்களை மதம் மாற்றினால் அடிநிலையில் இருப்பவர்கள் பின்தொடர்ந்து வந்துவிடுவார்கள் என்று  கொண்டிருந்த தவறான கணிப்பு பொய்த்துப்போன நிலையில் அவர்களது கவனம் அடிநிலைச் சாதியினரிடம் திரும்பிய பின் கிறிஸ்தவம் இங்கே வேகமாகப் பரவியது. இவ்வாறு இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடிநிலைச் சாதியினரை பிரித்தெடுத்துக்கொண்டு போனதை பொறுமலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேத மதத்தினர், அவர்களை தமது மதத்திற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள தேவையான சீர்திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்துகொள்வதற்குப் பதிலாக இஸ்லாமும் கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் என்று அவதூறு பரப்பினர். இந்தியர்களுக்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் என்றால் அதேயளவுக்கு வேதமதமும் அந்நியமானதுதான். (இந்த பதிலடியை எதிர்கொள்ள முடியாத திணறலில், வேதமதத்தை - பின்னாளைய இந்துமதத்தை விமர்சிப்பவர்களும் மதம் மாறுகிறவர்களும் இந்துவிரோதிகள்,  அந்நிய கைக்கூலிகள், கோடிக்கணக்கில் அந்நிய நிதியைப் பெற்றுக்கொண்டு ஆதாயம் அடைகிறவர்கள் என்று ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகள் அவதூறு கிளப்புகிறார்கள்). 

6. இந்து என்ற சொல்லே மிகவும் காலங்கடந்து கி.பி.இரண்டாவது ஆயிரமாம் ஆண்டுகளில் தான் புழக்கத்திற்கு வந்தது9. அச்சொல் முதலில் நிலப்பரப்பையும்,  பிறகு மக்களையும் மிகப்பின்னாளில் மதத்தையும் சுட்டியது. ஆகவே, சிலர் புனைந்துரைப்பதுபோல இந்து மதம்  என்றென்றுமாக இருந்துவருவதல்ல. அது இஸ்லாம், கிறித்துவம், சமணம், பவுத்தம், சீக்கியம், ஜொராஸ்ட்ரியம் ஆகியவற்றைத் தவிர்த்த பல மதங்களின் பொது அடையாளமாக காலனியாட்சியாளர்களால் சுட்டப்பட்டது. இவ்வாறாகத்தான் வலிந்துருவாக்கப்பட்ட இந்து மதம் இந்தியாவின் பெரும்பான்மையரது மதமாக ஆக்கப்பட்டது. இந்துக்கள் என்று சேர்த்துக் கட்டப்பட்டவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை, சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள்வது மட்டும்தான்.  

7. முதலாவது சுதந்திரப்போர் எனப் போற்றப்பட வேண்டிய 1806ஆம் ஆண்டு வெடித்த வேலூர் கிளர்ச்சி தொடங்கி காலனியாட்சியை அகற்றிட இந்தியர்கள் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் போராடிக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷாரை எதிர்த்து தீரமுடன் போராடி திப்பு சுல்தான் போன்ற இஸ்லாமிய மன்னர்கள் உயிரையுமிழந்தனர். 

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்காமலும் காலனியாட்சியுடன் இணக்கமாக இருந்துகொண்டும், மக்கள் ஒற்றுமையைக் குலைக்க இந்துக்களின் எதிரிகளாக முஸ்லிம்களைக் கட்டமைக்கும் போக்கு 19ஆம் நூற்றாண்டில் முனைப்படைந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு அமையும் ஆட்சியின் அரசியல் சாசனமாக மநுஸ்மிருதி, இடைக்காலத்தில் சீர்குலைந்துப்போன வர்ணாஸ்ரம தர்மத்தின்படி சமூகம் மறுகட்டமைப்பு, தேசியக்கொடியாக மராட்டிய பேஷ்வாக்களின் பகவத்ஜம் கொடி, இந்தியாவை ஓர் இந்து நாடாக அறிவித்தல், பசுவதைக்கு தடை என்பதான கருத்துகளை வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்திவந்த அமைப்புகளின் கூட்டுமுகமாக இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இயங்கின. இத்தகைய கருத்துகளை இந்துத்துவம் என வளர்த்தெடுத்த இந்த அமைப்புகளின் தலைவர்களான பாய் பரமானந்தருக்கும் சாவர்க்கருக்கும் தங்களது சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த  நிலப்பரப்பு தேவையாயிருந்தது. அதனாலேயே அவர்கள், இந்தியா மத அடிப்படையில் இருநாடுகளாக பிரிக்கப்பட வேண்டும் என்று பிரிவினைவாதத்தை முதலில் முன்வைத்ததுடன் அதற்கான அக, புற நெருக்கடியையும் உருவாக்கினார்கள். இதன் தொடர்ச்சியில்தான் 1940ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை ஜின்னா எழுப்பும் நிலை உருவானது.

8. உலகமே உறங்கும் நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெற்றதையும், சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டதையும் இந்துத்வாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பும் மதத்தைத் தழுவவும் அதை பரப்பவும் தமது பண்பாட்டையும் மொழியையும் பாதுகாத்துக் கொள்ளவும் குடிமக்கள் யாவருக்கும் உறுதிசெய்யப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் இந்துமதத்தை அழிப்பதற்கான சதியென துர்பிரச்சாரம் செய்தனர். நாட்டின் பன்முகத் தன்மையை ஒழித்துக் கட்டி இந்தியாவை ஓர் இந்து ராஷ்ட்ரமாக ஆக்குவதற்கு தடையாக உள்ள அனைவரையும் தீர்த்துக்கட்டும் வெறியில் காந்தியடிகள் உள்ளிட்ட பல்லாயிரம் பேரை கொன்று குவித்தனர். அரசியல் விடுதலையின் தொடர்ச்சியில் சமூக விடுதலையையும் பொருளாதார விடுதலையையும் அடைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டிய நிலையிலிருந்த மக்களை இந்துத்துவாவினர் மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டனர்.

 9. 1992ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பெளத்தர்கள், ஜொராஸ்ட்ரர் (பார்சி) ஆகியோரை மதச்சிறுபான்மையர் என அறிவித்தது. 2004ஆம் ஆண்டு இப்பட்டியலில் ஜைனர்களும் சேர்க்கப்பட்டனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுக்கின்படி இவர்களது எண்ணிக்கை முறையே 14.2%, 2.3%, 1.7%, 0.7%, 0.006%, 0.4%.   ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 193 பேர் மதச்சிறுபான்மையர். இவர்களில் 1000 பேருக்கு 142 பேர் இஸ்லாமியர்கள். இந்தோனேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தியா உள்ளது. 

நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் சிறுபான்மையராக இருக்கும் நிலையில் அவர்களைப் பற்றி பெரும்பான்மையினரான இந்துக்களின் புரிதல் என்ன? இந்துமதம் என்பதன் வரலாற்றையும், சிறுபான்மையினர் என்ற வகைமையினர் உருவாவதற்கும் நீடிப்பதற்குமான வரலாற்றுக் காரணங்களையும் அவர்கள் அறிந்துள்ளனரா? நாட்டை கட்டியெழுப்புவதிலும் பாதுகாப்பதிலும் சிறுபான்மையினரது பங்களிப்பை இந்துக்கள் உணர்ந்தேற்கின்றனரா? அரசியல் சாசனத்தால் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகள் சிறுபான்மையினருக்கும் உண்டு என்பதை உளமார ஏற்கிறார்களா? அவர்களது அன்றாட வாழ்வில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள இடம் யாது? சிறுபான்மையினரின் வேறுபட்ட பண்பாட்டை அவர்களது தனித்துவமாக கருதி ஏற்கின்ற புரிதலும் ஜனநாயக எண்ணமும் இந்துக்களுக்கு இருக்கின்றனவா? மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றி என்ன கருதுகிறார்கள்? – இதுபோன்ற கேள்விகளுக்குரிய விளக்கத்தைத் தருவதில் நிலவுகின்ற போதாமையைத்தான் இந்துத்வாவினர் தமது வரலாற்றுப் பகைமை நிறைந்த அவதூறுகளால் இட்டுநிரப்புகின்றனர். ஒரு சட்ட வகைமை என்ற அளவில் மட்டுமே தன்னை இந்து என்று கருதிக்கொள்ளும் ஒருவர், இந்து என்பதை ஓர் அந்தரங்கமான அடையாளமாக நம்புவதற்கும், தானல்லாத மற்றவர்களை வெறுப்பதற்கும் இந்துத்வாவினரின் பிரச்சாரம் அவரை நெட்டித்தள்ளுகிறது. ஒரு இஸ்லாமியரையோ கிறித்துவரையோ வாழ்நாளில் சந்தித்திராதவர் கூட அவர்களை வெறுக்கும்படியாக- முடிந்தால் தாக்கும்படி தூண்டக்கூடிய அவதூறுகளை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றனர். அசீமானந்தா போன்றவர்கள் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றுவிட்டு அப்பழியை இஸ்லாமியர் மீது சுமத்தி தேசவிரோதிகளாக, அமைதியைக் குலைப்பவர்களாக சித்தரிக்கும் அவர்களின் சதிவேலையை “தி கேரவன்” இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இன அழித்தொழிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல், கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் ஆட்களைத் திரட்டுவதற்கு இந்து மதப்பற்றினையோ ராமவிசுவாசத்தையோ முதலீடாக வைக்கவில்லை. சிறுபான்மையர் மீதான வெறுப்பைத்தான் முதன்மைப்படுத்தினர். 

10. இன அழிப்புக்கு எதிரான கூட்டணி (Genocide Watch) என்கிற அமைப்பு, இன அழிப்பு நிகழவிருக்கும் அபாயத்தை முன்னனுமானித்து தடுத்து நிறுத்துவது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது ஆகிய நோக்கங்களுடன் இயங்கிவருகிறது. இன அழிப்பு குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்ட இவ்வமைப்பு, I.வகைப்பாடு ii.அடையாளப்படுத்தல் iii.பாகுபாடு iv.மனிதாபிமானமின்மை v.அமைப்பாக்கம் vi.துருவப்படுத்தல் vii.முன்தயாரிப்பு viii.துன்புறுத்தல் ix.அழித்தல் x.அழிப்பை மறுத்து மறைத்தல் ஆகிய 10 கட்டங்களினூடாக ஒரு நாட்டில் இன அழிப்பு நிகழ்வதாக தெரிவிக்கிறது. 

இந்த ஆய்வறிவிலிருந்து ருவான்டாவின் நிலைமைகளை உற்றுநோக்கி அங்கு மிகக்கொடிய இன அழிப்பு நடக்கக்கூடும் என்று 1994ஆம் ஆண்டில் அழித்தொழிப்பு நடப்பதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த இந்த அமைப்பு, இஸ்லாமிய வெறுப்பினை கைக்கொண்டுள்ள இந்தியா இன அழிப்பின் ஐந்தாம் கட்டதைத் தாண்டிவிட்டதாகவும் அடுத்தடுத்துள்ள கட்டங்களை நோக்கி அச்சமூட்டும் வேகத்தில் விரைவதாகவும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வமைப்பின் நிறுவனரான கிரிகோரி ஸ்டேன்டன், ருவான்டாவில் டுட்ஸி இனத்தவரை கரப்பான்பூச்சிகள் என்றும் அவர்களை நசுக்கி அழிப்பதில் தவறில்லை என்றும் வெறுப்பினைப் பரப்பி கொலைசெய்யத் தூண்டிய அந்நாட்டு ஊடகங்களை விடவும் பன்மடங்கு வெறியுடன் இந்திய ஊடகங்கள் இஸ்லாமிய வெறுப்பை பரப்புவதாக ஒரு நேர்காணலில்10 தெரிவிக்கிறார். சமுதாயத்தின் சில குழுக்கள் பற்றிய பாரபட்சமான கருத்துகள் பொதுப்புத்தியில் நொதித்திருப்பதும், பாரபட்சமான அக்கருத்துகளின் பேரில் வெறுப்பை கட்டமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் தலைமை உருவாவதும் இன அழிப்புக்கு இட்டுச்செல்லும் காரணிகள் என்றும் இந்தியாவில் தற்போது இவ்விரண்டு காரணிகளுமே இயங்குவதாகவும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இப்படியான எச்சரிக்கைகளை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி, இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல் பரப்பப்படும் அவதூறு, நாட்டின் பெருமையைச் சிறுமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று இந்துத்வாவினர் மறுத்து விடுகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கை சுட்டும் அபாயத்தின் உண்மைத்தன்மையை சிறுபான்மையினர் அன்றாடம் சொந்த வாழ்வில் எதிர்கொள்கின்றனர். முற்றுகையிடப்பட்ட மனநிலையுடன் அவர்கள் இங்கு ஒவ்வொரு அங்குலத்தையும் ஒவ்வொரு நொடியையும் துயரத்துடனும் அச்சத்துடனும் கடக்க வேண்டியுள்ளது. அவர்களது உயிருக்கும் உடைமைகளுக்கும் எதிராக அரசும் அரசின் ஆதரவில் இயங்கும் சட்டவிரோத கும்பல்களும் நடத்தும் திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களது உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், தொழில், வழிபாடு, புழங்குவெளி என எல்லாமே கேள்விக்குள்ளாகியுள்ளன. இப்படியான ஒரு அவலநிலை அவர்களுக்குத் தேவையானதுதான் என்று கருதுகிறவர்கள் இந்துத்துவ அமைப்புகளில் மட்டுமே இருப்பதாக நாம் கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அவ்வமைப்புகளை வெறுத்து ஒதுக்குகிறவர்கள்கூட அந்த அமைப்புகளின் இஸ்லாமிய கிறித்துவ வெறுப்புக்கருத்தியலை  ஆதரிக்கிறவர்களாக, பரப்புகிறவர்களாக இருக்கின்றனர்.  

11. மோடி ஆட்சிக்கு வந்ததை புஸ்யமித்திர சுங்கன் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு இணையாக வேத மதவாதிகளான இந்துத்வாவினர் பார்க்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரை அச்சுறுத்தி இந்துமதத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பணிந்து வாழும் நிலைக்கு இணங்கிவரச் செய்வதற்கான அவர்களது நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பின்புலத்தில்தான் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தலையீடு, ஹிஜாப் தடை போன்றவற்றை பார்க்க வேண்டும். லவ் ஜிகாத், லேன்ட் ஜிகாத், அகாதமி ஜிகாத் என அவதூறு கிளப்புவதும், வாழ்வாதாரங்களையும் குடியிருப்புகளையும் புல்டோசர்களால் இடித்துத்தள்ளி சிறுபான்மையினரை நிர்கதியாக்குவதும் இதே நோக்கில்தான். 

அகண்ட பாரதத்திற்கான அரசியல் சாசனத்தை எழுதக் கிளம்பியுள்ள ஒரு கும்பல் சிறுபான்மையினர் வாக்குரிமை அற்றவர்களாக, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள உரிமையற்றவர்களாக, சொந்தப் பண்பாட்டுத் தனித்துவத்தை கைவிட்டு இந்துப்பண்பாட்டை ஏற்றுக்கொண்டு இங்கு இருந்துவிட்டுப் போகட்டும் என கொக்கரிக்கிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாமியரை அழித்தொழிக்க ஆயுதமேந்த அறைகூவல் விடுக்கிறார்கள். இப்படி அடுக்கிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை. சிறுபான்மையினர் அச்சமற்று சுதந்திரமாக வாழும் நிலையை, ஜனநாயகம் நீடிப்பதற்கான முன்னிபந்தனைகளில் ஒன்று என்பார் அம்பேத்கர். சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதென்றால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வருகிறது என்று பொருள். ஜனநாயகம் இல்லாத  சமூகம் கலை இலக்கியவாதிகளுக்கு ஏற்புடையதல்ல.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற முழக்கம் தானாகவே ஒற்றுமையைக் கொண்டுவந்துவிடாது. வேறுபாட்டுடன் இருப்பதை இந்த நாட்டின் பன்முகத்தன்மை என்று நாம் உரத்துச் சொல்லியாக வேண்டும். உரத்துச் சொல்வதென்றால் ஒத்தக்கருத்துள்ளவர்களிடம் பரஸ்பரம் உக்கிரமாக சொல்லிக்கொள்வதல்ல. வெறுப்பரசியலால் நஞ்சேறிவரும் மனங்களை ஊடுருவிச் சென்று உரையாடி குணப்படுத்தும் வல்லமையுள்ள கலை இலக்கிய ஆக்கங்களை உருவாக்க வேண்டியுள்ளது. 

சிறுபான்மையினருக்கு எதிராக பொதுப்புத்தியில் படிந்துள்ள கசடுகளை நீக்குவது, நம்மிடமுள்ள வெறுப்புக் கருத்தியலை அடையாளம் கண்டு கைவிடுவது, இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானதாகவும் நாட்டின் பன்மைத்துவ பாரம்பரியத்தினை உள்வாங்கியதாகவும் கருத்துலகை வளப்படுத்திக்கொண்டு வெளிப்படுத்துவது என காலம் பணித்துள்ள பணிகளைக் காலம் கடந்தேனும் கண்டுணர்வதே இம்முகாமின் நோக்கம். 

1. https://www.un.org/en/hate-speech/understanding-hate-speech/what-is-hate-speech

2.  https://theprint.in/india/indians-support-religious-tolerance-but-prefer-to-live-marry-within-community-pew-survey/684523/

 3. டி.என்.ஜா, பண்டையக்கால இந்தியா, பக்:50

4,5,6. அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 7

7. டி.என்.ஜா, பண்டையக்கால இந்தியா, பக்:142

8. தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் - கா.அ.மணிக்குமார்

9.  முற்கால இந்தியா - ரொமிலா தாப்பர்

10. https://www.youtube.com/watch?v=M9ovHqv_k-g 


(தமுஎகச திண்டுக்கல்லில் 2023 மார்ச் 25,26 நாட்களில் நடத்திய சிறுபான்மையினர் வாழ்வியல் - புரிந்துணர்வு முகாமின் நோக்கவுரை, செம்மலர் ஏப்ரல் 2023 இதழில் வெளியாகியுள்ளது )

 

புதன், ஏப்ரல் 5

எதிர் பரிணாமம் - ஆதவன் தீட்சண்யா

கழிவறைக்குள்ளேயே அடைந்து கிடந்த அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். அவனைத் தவிர உயிருள்ள வேறெதுவுமேயின்றி வீடு உறைந்துபோயிருந்தது. பண்டபாத்திரம் சட்டுமுட்டு சாமான்கள் அனைத்தின் மீதும் வெறுமை மண்டியிருந்தது. சன்னல் விளிம்பில் பறவைகளுக்கென்று கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்தத் தண்ணீர் வீணே வெயிலில் சுண்டிக் கொண்டிருந்தது.  வேறெவருடைய வீட்டுக்கோ பதுங்க வந்தவன் போல வீடெங்கும் தயங்கித்தயங்கி பார்த்து முடித்தான். அவனது குடும்பத்தார் அனைவருமே வெளியேறிப் போய்விட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவன் அம்மா அப்பா தம்பி தங்கை என்று ஒவ்வொருவரையும் உறவுமுறை சொல்லியும் பெயரிட்டும் அழைத்துப் பார்த்தான். ஒருவரும் வரப்போவதில்லை என்பதும் தெரிந்ததுதான். இருந்தாலும் ‘நீ கூப்பிட்டதும் வந்துடலாம்னுதான் காத்திருந்தேன்’ என்று சொல்லிக் கொண்டு எங்கிருந்தாவது யாரேனும் ஒருவராவது வந்துவிடமாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பு அவனை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. இது தினமும் அவனே நடத்தி அவனே பார்த்துக்கொள்ளும் நாடகம்.  

வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் வாசலுக்கு வந்ததுமே வாலையாட்டிக் கொண்டு ஓடிவந்து கும்மாளமாக தாவியேறிக் கொஞ்சுகின்ற மணியைக்கூட காணவில்லை. ஒருவருமற்று புழுதியும் அடங்கிக்கிடந்த அத்தெருவில் வீடுகள் கேட்பாரற்று திறந்துகிடந்தன. திரும்ப வரப்போவதேயில்லை என்றான பிறகு பூட்டு எதற்கென அவதியவதியாக கிளம்பிப் போயிருக்கிறார்கள்போல. வீட்டோர மரத்தடிகளில் ஆடுகளுக்கு கட்டியிருந்த வேப்பங்குழைகள் காய்ந்துச் சருகாகி உதிர்ந்து கிடந்தன.  அப்படியே தெருவிலிறங்கி காளியாயி கோயில் வரை போனான். கோயிலுக்கு கிழக்கே இருந்த ஊரின் மற்ற தெருக்களும் இதேரீதியில் கிடந்ததைப் பார்த்ததும் அவனது துக்கம் பெருகியது. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஊரைவிட்டு மொத்த பேரும் வெளியேறிப் போவதற்கு தான் காரணமாகிப் போனது குறித்து அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பஞ்சம் பிழைக்க சுத்துப்பக்க ஊர்களெல்லாம் காலி செய்துகொண்டு பட்டணங்களுக்கு ஓடிய கொடுங்காலத்திலும்கூட முருங்கைக்கீரையை அவித்துத் தின்று கொண்டு இங்கேயே பிடிவாதமாக இருந்த இந்த ஊர்மக்கள் இப்போது வெளியேறிப் போயிருக்கிறார்கள். பஞ்சத்தைவிடவும் கொடிய வாதையை அவர்களுக்கு தான் கொடுத்துவிட்டதாக எண்ணியெண்ணி மருகி அழுதான். தன் அழுகையால் திரும்பக் கூட்டிவந்துவிட முடியாத தொலைவுக்கு ஊராட்கள் போய்விட்டார்களா? ஊருக்காக ஒருவன் அழியலாம் என்கிற கருத்து தன் விசயத்தில் எதிர்மறையாகிப் பொய்த்துப் போய்விட்டதே; எவரொருவரும் அழிந்திடாத நிலைதானே சரி என்று இந்நாட்களில் தான் வந்தடைந்த முடிவை தனக்குள் சொல்லி தலையாட்டி ஆமோதித்தான். 

அவனது யோசனையின் பெரும்பகுதியை தற்கொலை எண்ணம் ஆக்கிரமித்திருந்தது. ஒருவேளை தான் தற்கொலை செய்துகொண்டால், பிரச்னை தீர்ந்தது என்று ஊரார் திரும்பி வந்து அவரவர் பிழைப்பைப் பார்த்துக்கொள்வார்கள் அல்லவா? ஆனால் அப்படி தற்கொலை செய்துகொண்டாலும் அந்தச் செய்தியை ஊராரிடம் போய்ச்சொல்ல யாருமற்ற பாழ்வெளியாய் இருக்கிறதே ஊர்? 

வீட்டுக்குத் திரும்பி என்ன செய்யப்போகிறோம் என்று ரெட்டைப்புளியமரத்தடியில் குந்தினான். அவனும் அவனது நண்பர்களும் வழக்கமாகக் கூடும் அந்த இடத்தில் இப்போது ஈயெறும்புகூட இல்லை. அவர்களுடன் கழித்தப் பொழுதுகளெல்லாம் அலையலையாக அவனுக்குள் எழுந்து இனம் புரியாத உணர்வுக்குள் அமிழ்த்தி வெளியே தூக்கி வீசின. பாவம், எங்கே எப்படியிருக்கிறார்களோ? ஒரு வார்த்தைகூட சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய்விட்ட அவர்களை நினைத்து வருந்துவது அவசியமா என்று தோன்றியது அவனுக்கு. தன்னை விட்டு ஊரே கிளம்பி ஓடியபோது அவனுங்க மட்டும் என்ன செய்திருக்கமுடியும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சமாதானம் நீண்டநேரம் நீடிக்காமல் அவனை அலைக்கழித்தது. அவனது மனவோட்டத்தின் சித்திரத்தை வரைவதுபோல ஓட்டுச்சில்லால் தரையில் தாறுமாறாக எதையெதையோ கிறுக்கிக்கிறுக்கி அழித்துக்கொண்டிருந்தான்.  

ஆற்றங்கரையில் நள்ளிரவைத் தாண்டியும் நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு அளவற்ற உற்சாகத்தில் வீடுதிரும்பிய அந்த மறைநிலவு நாள் இப்போதும் அவனுக்கு நன்கு நினைவிலிருக்கிறது.   காலையில் நேரத்திலேயே எழுந்தவன் வேலைக்கு கிளம்பும் அன்றாடங்களின் அவசரத்தில் இருந்தான். கழிப்பறைக்குள் நுழைந்தவனுக்கு வெகுநேரமாகியும் வயிறு அசைவின்றி கிடந்தது. இதற்குமுன் அவனுக்கு இப்படி நடந்ததில்லை. இரவு சாப்பிட்ட உணவுவகைளாலும் தூக்கம் கெட்டதாலும் இப்படியாக இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டவன், போகும் வழியிலோ வேலையிடத்தில் வயிற்றைக் கலக்கினால் எங்கே போவது என்று யோசித்து இன்னும் கொஞ்சநேரம் உட்கார்ந்து பார்த்தான். பலனில்லை. நேரமாகிவிட்டதால் மேலுக்குத் தண்ணீர் வார்த்துக்கொள்ளாமல் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு ஓடவும் எட்டரை வண்டி நின்று கிளம்பவும் சரியாக இருந்தது. இவனோடு காரை வேலை செய்யும் கூட்டாளிகள் இவனுக்காக சீட் பிடித்து வைத்திருந்தார்கள். ஒரு நிமிடம் தாமதமாகி பஸ்ஸை விட்டிருந்தாலும் ஒருநாள் கூலி போயிருக்கும். வாரத்தில் ஒரு முழுநாள் கூலியை இழப்பதால் குடும்பத்தில் உண்டாகும் சங்கடங்களோடு ஒப்பிட்டால் ஒருநாள் மலம் கழிக்காமல் போவதானால் உண்டாகும் உபாதைகள் அவனுக்கொரு பொருட்டல்ல. ஆனால், சாலையின் மேடுபள்ளங்களில் திடும்திடுமென வண்டி ஏறியிறங்கும் போதெல்லாம் குடல் இளக்கம் கண்டு வெளிக்கி வந்துவிடுமோ என்று பதட்டமடைந்தளவுக்கு கெடுங்காரியம் ஏதுவும் நடந்துவிடவில்லை. பிறகு வேலை மும்முரத்தில் மறந்தே போகுமளவுக்கு வயிறு தொந்தரவின்றி இருந்தது. 

முன்னிரவில் வீடு திரும்பி குளிப்பதற்குப் போகும்போதுதான் நாள்முழுக்க வெளிக்கி இருக்காமல் இருப்பதே அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் வயிறு எவ்வித தொந்தரவும் தராமல் அமைதியாகக் கிடந்தது. குடலை இளக்கிக்கொடுக்கும் என்று ஒரு சொம்புத்தண்ணியைக் குடித்துவிட்டு கொஞ்சநேரம் உலாத்திப் பார்த்தும் அசையவில்லை. பிறகு காபி பதத்தில் வெந்நீர் குடித்ததும் வீண்தான். சரி வரும்போது அதுவாக வரட்டும், எங்கே போய்விடப் போகிறது என்று விட்டுவிட்டான். இரவு படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான பசும்பாலில் நாலுசொட்டு விளக்கெண்ணெய் விட்டு அம்மா கொடுத்ததை வேண்டாவெறுப்பாக குமட்டலுடன் குடித்து முடித்தான். இந்த வைத்தியத்திற்கு இயல்பாகவே அதிகாலையில் வயிற்றை கலக்கியெடுத்துவிடும். ஆனால் இவனுக்கு ஒன்றுமாகாமல் வயிறு கல்போல கிடந்தது. 

வெளியேறும் வழி அடைபட்டிருக்கும் போது உள்ளே தள்ளிக்கொண்டிருப்பது சரியா என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ளாமலே அடுத்தடுத்த நாட்களிலும் அவன் எப்போதும் போலவே சாப்பிட்டு வந்தான். இன்னும் சொன்னால், வயிற்றுக்குள் அதிகப்படியான உணவை தள்ளத்தள்ள ஒருகட்டத்தில் வயிறு தானாகவே கழிவை வெளித்தள்ளும் அழுத்தத்தைப் பெற்றுவிடும் என்று இவனாக ஒரு தர்க்கத்தை கற்பித்துக் கொண்டு வழக்கத்தைவிடவும் கூடுதலாக சாப்பிட்டான். ஆனால், என்னமும் பண்ணிக்கிட்டு போடா என்பது போலிருந்தது வயிறு.  

விசயம் தெரிந்து பாட்டியொருத்தி மலத்துவாரத்திற்குள் செருகிக்கொள்ளும்படி புகையிலைக்குச்சியைக் கொடுத்தனுப்பியிருந்தாள். புகையிலையின் காரம், மலத்துவாரத்திற்குள்ளும் சுற்றுச்சதைகளிலும் லேசான எரிச்சலை உண்டாக்கி காந்தும் என்றாலும் அடைப்பெடுத்த குழாய்போல பீய்ச்சியடிக்க வைத்துவிடும் என்று அவள் சொன்னதைப்போல நடந்துவிட்டால் அவளுக்கு தாராபுரம் தலைப்பொகலை ஒரு கட்டும் வெத்திலை ஒரு கவுளியும் வாங்கித்தருவதாக அம்மா சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். ஏன் அப்படியே வெத்தலைப்பாக்கும் கொஞ்சம் சுண்ணாம்பும் வாங்கியாந்திருந்தால் நல்லா செவக்க வச்சிருக்கலாமே என்று கடிந்துகொண்ட அப்பா அப்போதே அவனை நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.   

பெயர் பதிந்து கட்டணம் பெற்றுக்கொண்ட செவிலிப்பெண், என்ன தொந்தரவு என்று வினவியபோது இவன் தனக்கு ஒரு தொந்தரவும் இல்லையே என்றான். அவன் சொல்வதற்கு சங்கடப்பட்டு அவ்வாறு மறுப்பதாய் எண்ணிய அவனது அப்பா தான், ‘என்னமோ தெரியலம்மா, பையன் அஞ்சாறு நாளா வெளிக்கிப் போகாம இருக்கான்’ என்றதும் அந்தப்பெண் என்னமோ அவளது மேசை மீதேறி இவன் வெளிக்கிருந்து விட்டதைப் போன்ற அசூயையுடன் இயல்பாக பேசுவதற்கு தடுமாறினாள். இதற்கான சிறப்பு மருத்துவர் பெயரைச் சொல்லி காத்திருக்கவேண்டிய அறை எண்ணையும் சொல்லி அனுப்பிவைத்தாள். மருத்துவரின் அறைக்குப் போய்க்கொண்டிருந்தவன் சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான். அந்தக் கணத்தில் அவள் அதுவரை மறைத்திருந்த அருவருப்புணர்வை பார்வையிலேற்றிக் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.     

அவனை இயல்பானதொரு மனநிலைக்குக் கொண்டுவந்துவிட்டு பரிசோதனைகளைத் தொடங்க விரும்பிய மருத்துவர் உணவுப்பழக்கம், வேலை முறை, தூக்க அளவு என்று சம்பிரதாயமாகவும் குறிப்பாகவும் சில கேள்விகளைக் கேட்டார். அவனது பதில்களில் தெரிந்த அலட்சியம், அவன் மலச்சிக்கலை இன்னமும் ஒரு பிரச்னையாக உணரவில்லை என்பதைக் காட்டியது. அடிவயிற்றையும் அள்ளையையும் அழுத்திப் பார்ப்பது, நாக்கை நீட்டச்சொல்லியும் கண்ணில் டார்ச் அடித்தும் பார்ப்பது, மார்பிலும் முதுகிலும் ஸ்டெத்தாஸ்கோப் வைத்து மூச்சை இழுத்துவிடச்சொல்லிப் பார்ப்பது என்று மேலுடம்பில் பூர்வாங்கமாக சில சோதனைகளைச் செய்த அவர் சில மாத்திரைகளைக் கொடுத்தார். மாத்திரைகளை விழுங்கிவிட்டு படு, விடியகாலையில் கலக்கியெடுத்து பீய்ச்சியடிச்சிரும் என்று மருத்துவர் சொன்னதை முகபாவத்தில் எவ்வித மாறுதலுன்றி கேட்டுக்கொண்டான். 

வேலைக்காட்டிலிருந்து திரும்பியிருந்த அவனது சேக்காளிகள் ஆஸ்பத்ரிக்குப் போகுமளவுக்கு என்னடா பிரச்னை என்று கேட்டறிய வந்திருந்தார்கள். லேசான வயிற்றுவலி, நாளைக்கு சரியாகிவிடும் என்று மழுப்பி அனுப்பிவைத்தான். ஆனால் அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. விழுங்கிய மாத்திரைகளை எங்கோ ஆழத்தில் புதைத்துவைத்துக்கொண்ட வயிறு முன்னிலும் மர்மமாக இருந்தது. 

மருத்துவர் மறுபடியும் அவனையும் அவனது தந்தையையும் கண்டதும் குணமாகி நன்றி சொல்ல வந்திருப்பார்களாக்கும் என்று நினைத்துக்கொண்டார். அவனோ மாத்திரைகளால் பயனேதும் இல்லை என்றான். ‘அப்படியானால் எனிமா தான் கொடுக்கணும். அதுக்கும் சரியாகலேன்னா டிஜிடல் எவாகுவேஷன் செய்திட வேண்டியதுதான்’ என்றார். டிஜிடல் எவாகுவேஷன் என்றதும் ஏதாவது நவீனமான கருவி மூலமாக இருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டதற்கு மாறாக, அது களிம்பு தடவி மலத்துவாரத்தை விரிவடையச் செய்து விரலை உள்ளேவிட்டு மலக்குடலில் இறுகியிருக்கும் மலத்தை நோண்டி எடுத்து அடைப்பை நீக்கும் முறை என்று மருத்துவர் விளங்கப்படுத்தினார். எனிமா கொடுப்பதற்காக கீழாடைகளைக் களைந்துகொண்டு அங்கிருந்த படுக்கையில் படுக்கும்படி அவர் சொன்னதும் கூச்ச சுபாவியான அவன் படபடப்பாகி பெரும் மனப்போராட்டத்தினூடே படுத்துக்கொண்டான். 

முகக்கவசத்தையும் கையுறைகளையும் மாட்டிக்கொண்டு எனிமா குழாயின் கூர்முனையைச் சொருகுவதற்காக மலத்துவாரத்தை விரலால் நிரடியபோது அந்தத் துவாரம் அவரது விரலுக்குத் தட்டுப்படவேயில்லை. இறுகிய மலம் துவாரத்தின் நுனிவரை இறங்கி அடைத்துக்கொண்டிருக்கிறது போல என்றெண்ணி குனிந்துப் பார்த்தவர் அடைந்த அதிர்ச்சியும் குழப்பமும் மருத்துவ உலகம் இதுவரை காணாதது. ஒருமுறைக்குப் பலமுறை கைவிளக்கடித்து உற்றுப்பார்த்தும் அவனுக்கு மலத்துவாரம் என்கிற ஒன்றே இல்லாமலிருப்பது கண்டு இதென்ன மாயம் என்று விதிர்விதிர்த்துப் போனார். அப்படியொரு துவாரம் அவனுக்கு இருந்ததற்கான எந்தச் சுவடுமில்லை. புதிதாக உள்சதை வளர்ந்து தூர்ந்தது போன்றோ அல்லது வெளிச்சதை வளர்ந்து மூடியது போன்றோ அல்லாமல் பிறக்கும்போதே இல்லாததுபோல  அவ்விடத்தில் ஒரே சீரான தோல் தெரிந்தது. 

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சிலவற்றுக்கு உடம்பின் ஒன்பது துவாரங்களில் சிலது திறவாமலே போய்விடுவதும் அறுவை சிகிச்சை மூலமாக கிழித்துத் திறந்து தையலிடுவதும் அவர் அறியாததல்ல. மலத்துவாரத்தில் புற்று கண்டவர்களுக்கு அத்துவாரத்தை தைத்து மூடி மலம் வெளியேற மாற்றுப்பாதை அமைப்பதெல்லாமும் கூட அவர் அறிந்ததுதான். ஆனால் இவன் பிரச்னை அத்தகையதல்லவே. பிறந்ததிலிருந்து ஆறேழு நாட்களுக்கு முன்புவரை இருந்த ஓர் அவயம் இப்போது எப்படி திடுமென இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போகும்? 

மனித உடலை அணுவணுவாக பகுத்தும் தொகுத்தும் ஊடுருவியும் காட்டும் திறன்வாய்ந்த அதிநவீனக் கருவிகள் கொண்டு அவனைப் பலவாறாக சோதித்தும் மருத்துவரால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. அவனுக்கு பசி இயல்பாக இருக்கிறது, சாப்பிடுகிறான். உண்டது செரிமானமாகி சீராக மலக்குடலுக்குச் செல்கிறது. ஆனால், வெளியேறும் வழி அடைபட்டிருக்கிறது. அப்படி அடைபட்டிருப்பது பற்றி அவனுக்கு எந்த புகாருமில்லை. மலச்சிக்கலால் பலர் மனச்சிக்கலுக்கும் ஆளாகிவிடும் நிலையில் அவனுக்கோ வெளிக்கியிருக்க முடியவில்லை என்கிற நினைப்பைத் தவிர உடல்ரீதியாக எந்தத் தொந்தரவும் இல்லை என்பது அமானுஷ்யக் கதைகளிலும்கூட கேள்விப்பட்டிராத அதிசயம்.  

சிகிச்சை சார்ந்து தெளிவு தேவைப்படும் சமயங்களில் தொடர்புகொள்ளக்கூடிய மூத்த மருத்துவ நிபுணர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த மருத்துவர், இப்படியொரு நோயாளி வந்திருக்கும் விசயத்தைச் சொல்லாமல், தனக்கு கற்பனையாகத் தோன்றிய ஒரு சந்தேகம் என்பதுபோல இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டார். அந்த நிபுணரோ, ‘உங்க கற்பனைக்கும் சந்தேகத்துக்கும் ஒரு அளவில்லையா சார்? அதெப்படி சார் பொச்சு காணாமல் போகும்? கிணறு காணம்கிற  வடிவேல் ஜோக்கு மாதிரியில்ல இருக்கு’ என்று கேலியாகச் சிரித்தார். ‘இத்தனை லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவாகியிருக்கிற இந்த மனித உடற்கூறு ஒருவேளை எதிர் பரிணாமம் காண்கிற நிலை வந்தால்கூட போஜன வாயும் ஆசனவாயும் மறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படியெல்லாம் ஏடாகூடமா யோசிக்கிறதை நிப்பாட்டுங்க சார்’ என்றார். ‘என்னது, ஏடாகூடமா யோசிக்கிறனா? என் முன்னாடி ஒருத்தன் உட்கார்ந்திருக்கான் சார்’ என்று சொல்ல வந்தவர் சட்டென சுதாரித்து சொல்லாமல் நிறுத்திக்கொண்டார். 

தனக்கு மட்டுமே தெரிந்த இந்த விசயத்தை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அவனை அவனது தொந்தரவோடே இங்கிருந்து அனுப்பிவைத்துவிடுவது அறமாகாது என்று கருதிய மருத்துவர், தன்னுடைய மருத்துவ அறிவுக்கு  கடும் சவாலாக அமைந்துவிட்ட அவனது பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று உறுதிகொண்டார். அதற்கான முன்தயாரிப்புக்கு கால அவகாசம் தேவை என்றுணர்ந்த மருத்துவர், அவனுக்கு மருந்து மாத்திரைகளால் பயனில்லை என்று தெரிந்தும், அதிகத் திறனுள்ளவை என்று சொல்லி சில மலமிளக்கி மாத்திரைகளையும் நீர்மங்களையும் கொடுத்து இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பவும் வருமாறு அனுப்பிவைத்தார். ஆனால் அவன் திரும்பவும் வரவே போவதில்லை என்பதை அப்போதைக்கு ஒருவரும் அறிந்திருக்கவில்லை. 

அப்பாவை நகரத்திலேயே விட்டுவிட்டு அந்தியில் வீட்டுக்குத் திரும்பிய அவனுக்கு வயிறு பெருக்க ஆரம்பித்தது. சற்றைக்கெல்லாம் சட்டைப்பொத்தான்கள் தெறித்துவிழுமளவுக்கு ஒவ்வொரு சுற்றாக உப்பியது வயிறு. கட்டியிருந்த லுங்கியும் கழன்று விழுந்து மானக்கேடாகிப் போனது. வயிற்றின் இரைச்சலும் பொருமலும் அடுக்களையில் இருந்த அம்மாவுக்கே கேட்டது. என்னடா வயித்துக்குள்ள வண்டியோடுதா என்று கேலியாக கேட்டுக்கொண்டே அம்மா அருகில் வரும்போதுதான், குடலைப் பிரட்டும்படியான நாற்றத்துடன் அவனது வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் கண்ணுக்குள்ளிருந்தும் காதுகளிலிருந்தும் மலம் பீய்ச்சியடிக்கத் தொடங்கியது. ‘அய்யோ எம்புள்ள யாருக்கு என்ன கெடுதல் செஞ்சதுன்னு இப்படி சித்திரவதை செய்யுற கடவுளே...’ என்று ஓலமிட்டுக்கொண்டு வந்த அம்மாவின் மேலெல்லாம் தெறித்து வழிந்தது. அந்த நாற்றம் தன் சுவாசத்தில் ஏறி உடல் முழுக்க ஊடுருவித் தாக்குவதாக அலறிய அவள் மூச்சுவிடத் திணறினாள். உள்வரைக்கும் ஏறிவிட்ட நாற்றத்தை வெளியே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என்கிற பதைப்பில் ஓங்கரித்து ஓங்கரித்து துப்பிக்கொண்டே நேராக பொடக்காலிக்கு ஓடிய அவள் தொட்டியிலிருந்த தண்ணியை பித்து பிடித்தாற்போல மோந்துமோந்து ஊற்றிக்கொண்டே இருந்தாள், ஆனாலும் நாற்றத்தின் கடுமை தணியவில்லை.   

நகரத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அவனது அப்பா ஊரை நெருங்கநெருங்க காற்றில்  சகிக்ககொண்ணாத நாற்றம் பரவித் தாக்குவதை உணர்ந்தார். எதிர்ப்பட்ட பலரைப் போலவே அவரும் மூக்கைப் பொத்தியபடி வீட்டை நெருங்கும்போதே இந்த நாற்றம் தனது வீட்டிலிருந்துதான் பாய்கிறது என்பதை அனுமானிக்க முடிந்தது. நாற்றம் ஒரு ஊசியைப் போல உள்ளேறுவதைப் பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் புகுந்தவர் மகனின் நிலை கண்டு பேதலித்துப் போனார். அய்யோ இதென்ன கொடுமை என்று அலறியபடி தண்ணீர் கொண்டுவர பொடக்காலிக்கு ஓடியவர் அங்கு ஈரத்துணியுடன் மனைவி மூர்ச்சையாகி விழுந்திருப்பதைக் கண்டார். ஓடிப்போய் அவளைத் தூக்கியபோது அவளுக்கும் வாய்வழியாகவும் மூக்கு வழியாகவும் கண்ணுக்குள்ளிருந்தும் காதுகளிலிருந்தும் மலம் கசிந்து வழிவதைக் கண்டார். நாற்றமெல்லாம் மரத்துப்போய் மகனுக்கும் மனைவிக்கும் நேர்ந்திருக்கிற அவலகதியைப் பார்த்து வாய்விட்டுக் கதறியவருக்கு கண்ணீருக்குப் பதிலாக மலம் வழியத் தொடங்கியது. டியூசன் முடித்து வரப்போகும் இளைய மகனையும் மகளையுமாவது காப்பாற்றிவிட வேண்டுமே என்று நினைத்தபடியே அவரும் மயங்கிச் சரிந்தார்.  

**

தகவல் கிடைத்து கவச உடைகளில் தற்காப்பு உபகரணங்களுடன் ஊருக்குள் வந்திறங்கிய பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு கண்ட காட்சிகளால் நிலைகுலைந்து போயினர். அவர்களுக்கு செல்பேசியில் தகவல் கொடுத்தவரது எண்ணைத் திரும்ப அழைத்தபோது அங்கு கொத்துகொத்தாய் செத்துக்கிடந்த மக்களிடையே அவரது போன் ஒலித்ததைக் கண்டனர். போர்க்கால வேகத்தில் அவசர சிகிச்சை முகாம்களுக்கு கொண்டுபோய் காப்பாற்றும் நிலையில் அங்கு யாருமிருக்கிறார்களா என்று வீடுதோறும் சோதனையிட்டவர்களுக்கு பிணங்கள்தான் கிடைத்தனவேயன்றி மனிதர்கள் யாரும் கிட்டவில்லை. மன உளைச்சலும் மூச்சுத்திணறலும் தாளமுடியாத ஒருகட்டத்தில், ஒட்டுமொத்த ஊருமே செத்தொழிந்துக் கிடக்கையில் வீடுவீடாக சோதித்து யாரைக் காப்பாற்றப் போகிறோம் என்று சோதனையிடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு அதுவரை கிடைத்த பிணங்களை அங்கேயே வெட்டவெளியில் பிணக்கூராய்வு செய்தனர். கடுமையான மூச்சுத்திணறலால் தான் இவ்வளவுபேருடைய மரணமும் சம்பவித்திருப்பதாக தெரிவித்தது பிணக்கூராய்வு அறிக்கை. பிணங்களுக்கு உரிமைகோர யாரும் இல்லாத நிலையில் ஊரோரம் இருந்த இடுகாட்டில் பொக்லைன் விட்டு ஆழக்குழியெடுத்து அவ்வளவுபேரையும் புதைத்துவிட்டுக் கிளம்பினர். அவர்களால் சோதனையிடப்படாமல் கைவிடப்பட்ட வீடுகளில் ஒன்றுக்குள்தான் இந்தப் பேரழிவினைத் தொடங்கிவைத்த அவன் மலத்தேக்கத்திற்கிடையே அமர்ந்திருந்தான்.

போபால் விஷவாயுக் கசிவைப் போன்றதொரு கொடிய பேரழிவுத் தாக்குதல் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிற முடிவுக்கு வந்த தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவு நிபுணர்கள், மலப்புழை தவிர்த்த எட்டு துவாரங்கள் வழியாக மலம் வெளியேறும் வினோதம் குறித்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாமல் திண்டாடினர். அவனது பார்வையில் நேரடியாக பட்ட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவனைப் போலவே மலப்புழை தவிர்த்த உடம்பின் மற்ற எண்துவாரங்கள் வழியாகவும் மலத்தை வெளியேறச் செய்த புதுவகைத் தொற்று, அடுத்த சிலமணி நேரங்களில் காற்றில் கலந்திருக்கும் அந்த நாற்றத்தின் வழியாகவும் பரவி அதே பாதிப்பை உண்டாக்கவல்லதாய் உருமாற்றம் அடைந்து சுவாசமண்டலத்தைச் சிதறடித்து காவு வாங்கியிருக்கிறது என்கிற உண்மையை அவர்களது நிபுணத்துவம் நெருங்கவேயில்லை. இந்த ஊரையொட்டி -ஆனால் ஊருக்குப் புறத்தே- இருக்கிற ஒரு குடியிருப்பினர் இந்தக் கொடிய பேரழிவின் சிறு பாதிப்பிற்கும்கூட ஆளாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பதன் சூட்சுமத்தை அறிந்திட அவர்கள் முயற்சித்திருந்தால், ஒருவேளை தீர்வு புலப்பட்டிருக்கக்கூடும்.

“மனிதர்கள் வாழத்தகாத பகுதி” என்கிற அறிவிப்புப்பலகையுடன் தகரத்தாலும் மின்சார முள்வேலியினாலும் தடுத்தடைக்கப்பட்ட ஊருக்குள் இப்போது அவன் மட்டுமே இருக்கிறான். தடுப்பரணுக்கு அப்பால் புறக்குடியிலிருந்து காற்றினை மயக்கி சன்னமாய் மிதந்துவரும் இசையும் பாட்டும் குழந்தைகளின் ஆரவார ஒலிகளும் உண்டாக்கும் மனக்கிளர்ச்சியால் மனிதர்களோடு சேர்ந்து வாழும் ஏக்கம் பெருகி அவனை உருக்குகிறது. அவனால் அவனது பெற்றோரும் சகோதரர்களும் ஒத்தாசையாக இருந்த நண்பர்களும் ஒட்டுமொத்த ஊராரும் தமது உயிரையே இழக்க வேண்டியதாகிவிட்டது என்பதையறியாமல் அவர்கள் தொற்றுக்கு அஞ்சி ஓடிப்போய்விட்டதாகத்தான் அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்மீது மலவாடை வீசாமல் இருந்தால் அவர்கள் திரும்ப வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் சேந்துக்கிணற்றில் தண்ணீர் இறைத்து தன்மேல் ஊற்றிக்கொண்டு ஓடிப்போய் காளியாயி கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏறி அவர்கள் வருகிறார்களா என்று வெற்றுவெளியை நாலாப்பக்கமும் கண்ணயரும்வரை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். எதையாவது உட்கொண்டால் எண்துவாரங்களிலும் மலம் வழியுமே என்கிற அச்சத்தில் சமீபநாட்களாய் எச்சிலைக்கூட விழுங்காமலிருக்கும் அவன் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்குவான் என்று தெரியவில்லை. ‘அய்யோ எம்புள்ள யாருக்கு என்ன கெடுதல் செஞ்சதுன்னு இப்படி சித்திரவதை செய்யுற கடவுளே...’ என்று அரற்றியபடி ஓடிய அம்மா திரும்பி வந்தால், தான் யாருக்கு என்ன கெடுதல் செய்ததற்காக இயற்கை இந்தத் தண்டனையை வழங்கியிருக்கிறது என்று சொல்லிவிட வேண்டும் என்பதுதான் அவனது இறுதி விருப்பமாக இருக்கிறது.    

**

அடுத்தவர் மாண்பைக் குலைக்கவும் சிறுமைப்படுத்தவும் மலத்தைப் பயன்படுத்திவிட்டு யாரிடமும் சிக்காமல் தப்பித்துவிட்டவர்களுக்கும் இயற்கை இப்படியொரு தண்டனையைக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இயற்கையிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு நீங்கள் என்னத்தைப்...

 ***

நன்றி: நீலம், 2023 மார்ச் இதழ்

 

 

 

ஆளுநரின் ஆன்மிகப்பொய் அல்லது ஆன்மிகமே பொய் - ஆதவன் தீட்சண்யா

உ லகமே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த மே 1 அன்று முன்னெப்போதுமில்லாத வழக்கமாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் உருவான நாளை ஆளுநர் ...