தன்னைத் தலித் எழுத்தாளர் என்று அவர் கோராதபோதும் நவீனத் தலித்திலக்கியத்தின் ஆதிமுதல்வியாகப் பூமணியைச் சொல்லமுடியும். பாமா, சிவகாமி, அழகியபெரியவன், கே.எ.குணசேகரன், அபிமானி, விழிபா.இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், அறிவழகன், ஸ்ரீதரகணேசன், ராஜ் கௌதமன் ஆகியோரை முதற்கட்ட தலித் புனைவு எழுத்தாளர்கள் எனலாம். யாத்திரை என்ற கிறிஸ்தவத் தலித் நாவலை எழுதிய மாற்கு பாதிரியார் இப்பட்டியலில் வருவாரா என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன். தய்.கந்தசாமி, மதிவண்ணன், என்.டி.இராஜ்குமார், சுகிர்தராணி போன்றோர் துடியான தலித் கவிதைக்காரர்கள்.
இப்பட்டியல் சுருக்கம் கருதியது. கோடிட்ட இடம் நிரம்ப உண்டு. விடுபடல்களை இணைப்பதில் தயக்கமில்லை. தலித் வாழ்வைப் பிரதானமாக்கல், கலகம், மக்கள்மொழி, சாதிய எதிர்ப்பு, வைதீக, சனாதன எதிர்ப்பு, இழிவுமறுப்பு எல்லாம் இவர்களிடம் உண்டு என்றபோதிலும் வடிவக்கலகமோ மொழிக்கலகமோ இல்லை.
நூறாண்டுகளுக்கு மேலாக வைதீகச் சனாதனம் வளர்த்த படைப்புமொழி (விலகல்கள் சில உண்டு), வடிவம், படைப்பிலக்கணத்தைப் பற்றிக்கொண்டு தலித்திய வாழ்வைக் கொழுக்கட்டைப் பூரணம் போல உட்பொதிந்து பெரும்பாலான படைப்புகள் வந்தன.
படைப்பு என்ற சொல் மேலோர்க்கு மட்டுமுரியதல்ல (தண்டையக்கம்புச் சலங்கை சிணுங்க நண்பகல் உச்சியில் உள்ளூர் சமையல் மாஸ்டர்களால் ஆவிபறக்க ‘மேன்சன் ஹவுஸ்’ முன்னால் போடப்படும் தீம்கறிச்சோறும் ‘படைப்பு’ எனப்படுவதால் புலால் மணம் ஏறியவற்றையும் படைப்பென இவண் கொள்ளலாம்.) படைப்பென்பது சைவக்குழாமுக்கு மட்டுமல்லவாம் என்பர் புலவர். ஆயின் பரந்துபட்ட அதிகார எதிர்ப்பினை ஓர்மையுடன் ஏந்தும் ஒற்றைப் பிரதிநிதியாக ஆதவன் தீட்சண்யா கனவிலும் வருகிறார். நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள் (2016), லிபரல் பாளையத்துக் கதைகள் (2022) ஆகிய தொகுதிகள் கையில் இருந்ததால் அவை இவண் ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் எனக் கொள்ளப்படுகின்றன. இனிவரும் தொகுதிகளை வள்ளல் ஆதவன் அருளுவார் என்ற அரை நம்பிக்கை எனக்கு உண்டு. சமீபத்தில் பொது நலன் கருதிப் பிரசுரிக்கப்படாத கதை (2025) என்ற நூலை அருளினார்.
பின்காலனிய எதிர்ப்பை அடிச்சரட்டில் கோத்துத் தந்தைவழிக் கலாச்சார எதிர்ப்பு, சாதியவன்முறை பெண்ணொடுக்கு முறை எதிர்ப்பு, மையநீரோட்ட அழகியலைப் புறந்தள்ளுதல் போன்ற குத்தூசிகள் ஆதவன் படைப்பில் பின்னப்பட்டிருப்பதால் பலமாகவே பொதுப்புத்தி மேல் அடி விழுகிறது. பொதுப்புத்தியின் குரல்வளையை நெரிக்கவல்ல துஷ்டக்கதைகளாக இவை துள்ளுகின்றன.
நவீன புனைவெழுத்தாளர் (நவீனம் என்ற சொல் ‘இளைஞர் அணித்தலைவர்’ வயதோடு தொடர்புடையது) எவருக்கும் கடன்படாத தீட்சண்யா போட்டு உடைப்பதையும் பகடியையும் புதுமைப்பித்தனிடம் வரித்துக்கொண்டவர். விமர்சனத்தில் ஜெயக்கம்பம் நாட்டிய ராஜ் கௌதமனின் புனைவுகளில் எதிர் அழகியல் மருந்துக்கு மட்டுமே உண்டு. ஆயின், ‘எதிர் அழகியலின் தாய்’ என்ற ஆசிரியத் தேர்வாணையக் கேள்விக்கு ஆதவன் தீட்சண்யாவைத் தவிர வேறு வாய்ப்புக் கிடையாது; தாய்க்கு மகளோ மகனோ இன்னும் பிறக்கவில்லை. கோணங்கியின் அழகியல் இவண் கணக்கில் வரா. எதிர் அழகியலின் தாய் யார்? ஆப்ஷன் இல்லாத விடை ஆதவன்தான்.
அழுக்குப்படாத தியாகசீலர், அப்பழுக்கற்ற அரசியல்வாதியர் (குழந்தை பெற்றவர்களுக்கு இப்பதவி ரத்து) உழைப்பால் மட்டுமே உயர்ந்த உத்தமர், வாழ்வில் ஜெயித்தவர்கள் போன்ற மீசை முளைத்த ஆண்களுக்கு ஆதவன் அருள் பாலிக்காத போக்கிலித் தெய்வம். வட்டார வழக்கு இலக்கியங்கள் வந்தபோது சற்றே ஆண் இடஒதுக்கீடு தளர்வுற்றது. அத்திப்பூக்கள் உண்டு.
பேன் புழுத்துக்கிடக்கும் ஆராயி, பிணமறுக்கும் அன்னையா, பட்டாளத்து உடுப்புப் போட்டுக்கொண்டு கிழங்கு களவாங்கப் போகும் பொன்னி, ஓயாது வீடு மாற்றி இறுதியில் அம்பேத்கர் நகரில் சரணடையும் அருங்கிளி, சாதியைப் பயன்படுத்த எண்ணும் புருஷனிடமிருந்து விலகும் திவ்யா, புரட்சிக்காரி லஜ்ஜாவதி, குடும்பத்தையே கருவறுக்க வருபவனுக்குச் சோறு போடும் அக்கா எனத் தன்னுணர்வு மிக்க பெண்கள் புழங்கும் வெளியாகக் கதைப்பரப்பு விரிந்து கிடக்கிறது. நோன்பு நாளுக்காக இரவெல்லாம் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் சாதுரியமாகப் பூட்டைத் திறக்கும் தளவாடங்களுடன் காத்திருக்கும் நகை எடுப்பாளரும் உண்டு.
பேன் புழுத்தவளை விட்டுவிட்டு ஓடிப்போன கணவனை எண்ணி மருகும் ஆராயி “பேசாம சரவணன்கூட ஓடிப்போயி எங்கனாச்சும் கவுரதையா பொழச்சுருக்கனும். இப்பமும் அவன் கண்ணுல ஏக்கம் காயாம சவலையாட்டம் பாக்கறான் (2008:72)” (மனதில் கற்பிழந்தாள் என்பர் ஒழுக்கச் சிரோன்மணிமார்) என நினைக்கிறாள். என்ன இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு கொழுப்பும் ஆங்காரமும் இருக்கக்கூடாதுன்னோ தெனவெடுத்துத் திரியறாள்னோ நினைக்கிறதைத் தவிர உங்களுக்கு வேறென்ன யோசிக்கத் தெரியும் (2008:143) என்று குப்பைப் பொறுக்கும் ஓர் எளிய பெண் கேட்கிறாள்.“பொதி சுமக்கிற கழுதையைப் போலவும் ஏர் உழுகிற மாட்டைப் போலவும் சம்பாதிக்கிற மிருகமாக உன்னைப் பாவித்துக்கொள்ள உரிமை இருக்கிறது. அருவியைக் குழாயில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைப்படுகிறபோது திருகி விட்டுக் குடிக்கவும் குளிக்கவும் நினைப்பது ஆதிக்கமாக அராஜகமா என்ற தடித்த விவாதத்திற்கு இது இடமில்லை. நாம் காதலர்களாகவே பிரிவோம்” (2008:149) என்கிறாள் ஒருபெண்.
இவை தந்தைவழிக் கலாச்சார மதிப்புகளுக்கு ஒருபோதும் உகந்ததல்ல. உகந்தவற்றை எழுதுவதில் ஆதவனுக்கு உவப்பும் இல்லை.
பாரம் சுமந்துத்
தேயும் தாய்மைச் சித்திரங்களைக் கலைத்துப் போடுகிறார். சங்ககாலத் தாய்மார்
சுமைதாங்கிகளாக இல்லை. நுகத்தடி மாட்டப்பட்ட காலம் அறநூற்காலமாகலாம். பின்னர் தொடர்ந்த
மனைவி, தாய் என்ற ஒழுக்கம் இறுகிய படிமங்கள் வழியாக இப்படித் தொடரும்
பெண்ணொடுக்கு முறையை இயல்பாக்கும் மனநிலையிலிருந்து ஓர்மையுடன் ஆதவன் விடுபட
நினைப்பது ஆறுதல் தருகிறது.
ஆனந்தியம்மா என்ற பார்ப்பன விதவைப் பெண் நாவிதரோடு தன்னைப் பகிர்ந்துகொள்கிறார். பெண்ணைப் பெற்றவளிடம் அது குறித்து ஆண்களைப் பெற்ற குணவதி வருந்தும்போது பெண் பெற்றவள் கூறும் வார்த்தைகள் குடும்ப அமைப்புக்கு எதிரானவை. ஆண் பெற்ற சான்றோள், “பொண்ணாப் பெத்துட்டீங்க கொஞ்சம் உஷாரா இப்பயிருந்தே நகைநட்டு சேர்க்கப் பாருங்க” என்று ஒருமுறை பெரியக்காள் சொன்னதற்கு (அவளுக்கு இரண்டு பையன்கள்) “இப்பமே கம்பானியன்ஷிப்னு காண்ட்ராக்ட் போட்டு மூணுநாலு வருஷம் பொழைச்சிட்டு ஆளுக்கொரு திக்கால பிரிஞ்சுப்போற பழக்கம் வந்துக்கிட்டுருக்கு. இவள் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பருவத்தில் கல்யாணங்கிறது என்ன கதியில் இருக்கும்னு யாருக்குத் தெரியும்?” (2008:170) என்கிறாள் குடும்பத்தலைவி. முதல் கேள்வி கேட்டவள் முகம் போன போக்கு பற்றி தகவல் இல்லை. ஆதவனின் பெண்கள் குடும்ப அமைப்பைப் போற்றாததில் மனக்குறை ஏதும் அவருக்கில்லை.
வரலாறுகளில் தீட்டப்படும் மன்னர் சரித ஓவியம்
மனவடுக்கில் எல்லாருக்கும் ஈரம் காயாமல் மாட்டப்பட்டிருக்கிறது.தானைத்தலைவர்,
தளபதி, இளைஞர் பாசறை, எதிரிகள் நடுங்கப் போர்ப்பரணி பாடல், வீரவாள், மலர்க்கிரீடம்
ஆளுயர வேல்கள், தேர் எனக் கார் அணிவகுப்பு,
விடைபெறுவது இனைபிற பிரயோகங்கள் நாற்றமுடைய எச்சங்கள்தாம். தொண்டைக்குள் போனதைத்
தோண்டிதரும் செம்மூதாய்களை மிஞ்சும் வள்ளல் கதைகள் ஆதவனுக்கு எரிச்சல் ஊட்டுபவை “கொழுகொம்பற்ற
முல்லைக்குத் தேரீந்துவிட்டு நாடு திரும்பும் வழியறியாது கானகத்துக்குள்ளே
கனிகளையுண்டு சுனைகளைக் குடித்து ஓர்நாள் மிருகங்களின் வயிற்றிலிருந்து
புழுக்கையாகவும் லத்தியாகவும் நாறினான் (2008:77)” என்ற
விவரிப்புப் பழந்தமிழ்ப் பற்றாளர்க்குத் தகாத செய்தியாகும்,
எனக்கும்தான்.
‘யானோ அரசன் யானே கள்வன்’ எனத் தீர்ப்புரைத்து அகாலத்தில் மறைந்த பாண்டிய நெடுஞ்செழியனை ஆதவன் விட்டது தவக்குறைவே. மனுநீதிச் சோழனைத் தேர்க்காலில் ஏற்றிவிடுகிறார். இளவரசர் சாவுகளில் திருப்திகொண்ட பசுவும் கன்றுமாகிய பெருங்கூட்டம் மன்னர்களை எதிர்த்தடக்கி மகுடம் தரித்து வேலியையும் சேர்த்தே மேய்ந்து வயிறு வளர்த்தது. மடிநோக்கித் திறந்த மக்களின் வாயில் பாலுக்குப் பதிலாகக் கோமியம் பெய்தன (2008:77) என்ற ஆதவன் கதைகள் மன்னர் பெருமை மீது பெருஞ்சிறுநீர் கழிப்பதாகும். மனுநீதிச் சோழனின் கதையை நடப்பு அரசியலுக்குள் நுழைத்துக் கேலி செய்கிறார் ஆதவன். ஆண்டபரம்பரையின் கோமாளித்தனத்தை மூவேந்தர் பெருங்குடிக்கோ வமிசத்தில் வந்ததாகக் கூறும் ஊர்க்கொளுத்தியான் செய்கிற சாகசங்கள் வழியாகப் பகடி செய்கிறார். குடிசை கொளுத்தும் நவீன எரிப்பு அரசியலை இடையில் சேர்த்தும் விடுகிறார்.
பேராசிரியர்கள் சார்பில் ஆதவன் தீட்சண்யாவுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். ஒருவரிவிடை, ஒருபக்க விடை என வினாத்தாள் தயாரிக்க முடியவில்லை. கதையைச் சுருக்கிச் சொல்லிப் பாடத்தை முடிக்க இயலவில்லை. யாது செய்கேன்? தோற்றம், வளர்ச்சி, முடிவு. தலைமைமாந்தர், எதிர்நிலை மாந்தர், முழுமைக் கதாபாத்திரம், துணைமைக் கதாபாத்திரம், இன்டோலியம் ஈயப்பாத்திரம் நான்ஸ்டிக் எவர்சில்வர் பாத்திரங்கள் கதையில் தெளிவாக இல்லை. நோட்ஸ் எழுத, ஆய்வேடு எழுதச் சிரமத்தைத் தருபவை சொலுயுசன் இல்லை, சைக்கிள் கடைகளும் இல்லை.
அல்புனைவைப் புனைவுக்குள் போட்டு புனைவை அல்புனைவுக்குள் போடுகிறார். ஆதவனின் சிறுகதைத்தலைப்புகளில் வழக்கமான லட்சணங்கள் பொருந்தவில்லை. காணமல் போன கதாநாயகன் அல்லது வில்லன் ராஜ்யம், ஆறுவதற்குள் காப்பியைக் குடி, லிபரல் பாளையத்துக் கட்டப்பஞ்சாயத்தார்க்குக் காவனோவா வழங்கிய தீர்ப்பு, கோயில் இருக்கும் ஊரில் குடியிருக்கவே முடியாது, நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, லிபரல் பாளையத்தில் தேர்தல், ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும், கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும், கையில காசு வாயில தோசை, நியூஸ் தாத்தாவைப் பற்றிய நியூஸ்கள், வருது வருது விருது வருது போன்றவை வழக்கமானவை அன்று.
தலைப்புகள் மட்டுமல்ல வடிவமும்
உள்ளடக்கமும் வரிசை மீறுபவை, நேர்கோட்டுக் கதைகள் அல்ல; வழக்கமான
கதைகள் சில உண்டு என்றபோதிலும். அதிக
மதிப்பெண் பெற்று வாழ்வில் ஜெயிக்க விரும்பும் மாணாக்கர் பாய்ன்ட் பாய்ன்டாக
எழுதுவது போல எண்ணிட்டு எழுதுவது சிறுகதை வடிவத்தில் உடைவை ஏற்படுத்துவதாகும்.
Match the
following வரிசையாக
அட்டவணைப்படுத்திவிட்டீர்களா
(எ_டு)
மாணவர் - கல்வி,கலாட்டா
இளைஞர் - வேலை, காதல்
பெண் - கல்யாணக்
கனவு
வயோதிகம் -பென்சன்,ஈஸிசேர்
விவசாயி - கடன்,
ஜப்தி
என்ற குறிப்பு ஒரு கதையில் வருகிறது.
ஆய்வுப் பின்னிணைப்புப் போல நூற்பட்டிக் குறிப்புகளைக் காட்டுதல் சிறப்பு. பெட்டிச்செய்திகள் பற்றிய குறிப்புகள் உள. ஒரு சிறுகதையின் அடிக்குறிப்பு இப்படி அமைகிறது:
1.
காங்கிரசாரை
பகடி செய்து ரஞ்சித் எழுதிய, "உடல் பொருள்
ஆவி மற்றும் அந்த ஆவியில் அவித்த புட்டு" என்கிற அங்கதக் கட்டுரையிலிருந்து
2. வெடிகுண்டின்
வழிபாடு என்ற காந்தியின் கட்டுரைக்கு வோரா எழுதிய பதிலில் எடுத்தாளப்பட்ட
ரஞ்சித்தின் வரிகள். லக்னோவின் அமினாபாத்தில் இருந்த
பதுங்கிடமான சாலமன் கட்டிடத்திலிருந்து எழுதி பின் இயக்கத்தின்
சார்பில் அச்சானது.
3. முழுநேரப்
புரட்சியாளர்களின் (Professional Revolutionaries) குறுக்கீடுகள்
என்ற
ரஞ்சித்தின்
கட்டுரை
இந்த
வரிகளோடுதான்
முடிகிறது.
4. ‘இந்தியாவில்
புரட்சி இயக்கத்தின் வரலாறு’- ரஞ்சித், பக்க இலக்கம்
16
முதல்
22
வரையானதிலிருந்து
(கையெழுத்தில் உள்ளவாறு)
5. காலின்
கீழ் தொடங்கும் உலகம், கவிதைத்தொகுதி,
நந்தினி,
நூதனா
பதிப்பகம்,
லாகூர்
6. ஊனில்
கலந்தவரை உருக்கிக் கொல்வாயோ, லாகூர்
பல்கலைக்கழக மாணவர் வெளியீடு
7.சாதிமற்றும்வகுப்புவெறியர்களை
அடையாளம் காண்பதில் உள்ள இடர்ப்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட
பிரசுரத்திலிருந்து
- என மேற்கண்ட நூற்குறிப்புகளில் வெளிப்படும் இடக்குச் சொல்லி மாளாதது.
‘காலத்தை தைப்பவனின் விரிசல் என்ற கதை ஐந்து பாகங்களாக எழுத வேண்டிய மனோகர் ராவ் வாழ்க்கைக்கான முன் குறிப்புகள் என தடித்து எழுத்துகளில் கதை தொடங்குகிறதுஇடையில்உட்தலைப்புகள் உள்ளன. உருளும் நூற்கண்டு இடையில் சிறுமுடிச்சு, இடைத்தையல், வளரும் ஊசி, துணியைத் தேடி, காதறுந்த ஊசி என அமைபவை தையலோடு தொடர்புடையவை. கதை தையல்காரனுடையது (2008: 190 – 204) அடைப்புக்குறிக்குள் இருக்கும் இந்தப் பகுதி முழுவதும் வரலாற்றோடு தொடர்புடைய பகுதியாதலின் மிகுந்த கவனம் தேவை என்ற தொடர், சாலை அறிவுப்புகளுடன் பொருந்துகிறது. சொல்லவே முடியாத கதைகளின் கதை என்ற கதையில் இடையிடையே குறிப்புகள் வருகின்றன. அவை நையாண்டிமிக்க பாராக்கள். கேலியின் பரவசத்தைக் கதைகள்தோறும் தொட்டுணரலாம். இன்னமட்டிலும் என்றில்லா எள்ளல். அரசுக்கு எதிரான ஆதவனின் கேலி சர்க்காரிலோ தேசபந்து நடிகர்களின் உருட்டலிலோ உருவாகும் மொக்கையல்ல; பொழுதுபோக்குமல்ல.
பண்பாடு, மொழி, கல்வி வழியாகச் சமத்துவமின்மை சமூகத்தில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் பண்பாட்டு மூலதனத்துக்கு எதிராகக் கேலி அமைகிறது. குறிப்பிட்ட மொழித்திறன், பாணி, கலாச்சார அறிவு உயர்வு எனக் கருதல் இயல்பாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிந்தனை வடிவங்களுக்கு எதிராக ஆதவனின் கதை வடிவங்கள் உள்ளன. கீழ்வர்க்க ரசனை வழியாக மேல்வர்க்க ரசனையைக் கேலி செய்தல் நிகழுகிறது. மேல்தட்டில் இயல்பெனக் கருதப்படும் ரசனைக்கு எதிராக ‘லிபரல் பாளையம்’ நிற்கிறது.
நையாண்டிமொழி, கலாச்சார வடிவங்கள், சிந்தனைகளைப் பயன்படுத்தி மேலோர் உருவாக்கும் ஆதிக்கத்தை ஆதவன் எதிர்க்கிறார். உயர்வு எனக் கருதும் பதவி, பெயர்களைத் திருகிவேறு பொருள் வழியாக எள்ளல் செய்கிறார்.
சுப்பையா நாயுடு பிள்ளை, பரதேசி முதலிச் செட்டி அருந்ததிய வேளாளன், சாம்பத்தேவ சாஸ்திரி நாடார், மனிதவள ஒழிப்புத்துறை, கக்காநாடு இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி (கே.ஐடி), நிதியமைச்சர் வட்டியப்பன், கவர்னர் காசுநாதன், குளோபலாண்டி சுவாமிகள், கன்ஸ்யூமரேஸ்வரி, லிபரலப்பன், சாராய சாஸ்திரி, சுவாமி சுருட்டலானந்தா, லிபரல் பாளையம், துட்டுஸ்தான், கஞ்சா விற்கிற சர்மா போன்ற பெயர்கள் நகைப்புக்குரியன. எல்லாப்பெயரும் அரசியல் குறித்தனவே.
எவ்வித மனவுறுத்தலுமின்றி நீங்கள் வழக்கமான அம்புலி மாமா அல்லது அக்ரகாரத்து அம்மாஞ்சிகளின் கதைகளையோ, கிராமக்கதைகள் என்ற பெயரில் கம்மாயில் குளிக்கும் பெண்களின் கக்கத்தில் எத்தனை மயிர் என்கிற ஆய்வுகளையோ படித்துப் பொழுதை எப்படியோ போக்குமாறு நேர்ந்துவிடப்படுகிறீர்கள் (2008:142) என்பது போல பல குறிப்புகள் இடையிடையே அமைகின்றன. மார்க்ஸை மருட்டிய ரயில் கதையில் முதலிலேயே குறிப்பு வருகிறது.
லிபரல் பாளையத்துக் கட்டப்பஞ்சாயத்தார்க்குக் காவனோபா வழங்கிய தீர்ப்பு என்ற கதையில் கட்டம் கட்டி இந்த அத்தியாயத்தில் செல்போன் என்ற சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கவனமாகப் படிக்கவும் முடிவில் எண்ணிக்கைக்கேற்ப ராசி பலன் இருக்கிறது (2016: 241) என்கிறார் ஆதவன்.
கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் என்ற கதையில் புகைப்படங்கள், வரைபடங்கள், அதற்குக் கீழ் செய்தித்தலைப்புகள், அட்டவணைகள் இடம் பெற்றுக் கதைக்கு வரலாற்றுத்தன்மையையும் வரலாற்றுக்குக் கதைத்தன்மையையும் ஆதவன் அளிக்கிறார்.
‘ஓரக்கழூத்தர் என்றோர் இனமுண்டு அதற்குஉலகில் தனியே குணமுண்டு’ - என்ற அகப்புற ஆதியந்தத்தின் 0.7ஆவது பாடலைத் தமது தேசிய கீதமாகக் கொண்டுள்ளது இந்நாடு என்ற குறிப்பு புனிதமானதாகக் கொண்டாடப்படும் பழமையான வரிகளைக் கவிழ்த்துப் போடுகிறது.
நாட்டிலொரு நாடகம் நடக்குது என்ற கதைக்குள் நாடகம் நடைபெறுகிறது. நாடகக்குறிப்புகள், நாடகத்தைத் தொடங்கும் விதம் கதாபாத்திரங்களை உறுதி செய்தல் நிகழ்கிறது. கதைக்குள் ஐந்து காட்சிகள் நிகழுகின்றன. குற்றம் குறைகண்டு குமுறுவோர் கூட்டியக்கத்தின் (குகுகுகூ) மனுவும் உண்டு.
கடவுள் வாழ்த்தோடு லிபரல்பாளையத்தில்
தேர்தல் என்ற கதை தொடங்குகிறது. கடவுள் வாழ்த்தின் முடிவில் ‘இந்தக்
கதையையாவது எழுதுவதற்கான வல்லமையை அல்லது கருணையை எனக்கு கடவுள் வழங்குவாராக.
அப்படி வழங்குவதற்கு சத்தும் சாமர்த்தியமும் இல்லாதிருக்கும் பட்சத்தில் கடவுள்
என்ற ஸ்தானத்தில் என்ன மயித்துக்கு இருக்கணும் என்று தற்கொலை செய்துகொள்ளும்
துணிச்சலாவது அந்த கடவுளுக்கு வந்து தொலைப்பதாகுக’ (2022:43)
எனக் கடவுளுக்கு உவப்பில்லாமல் முடிகிறது. கசப்பைத் தந்த கடவுளுக்கு
விஷமூட்டுகிறார். கதைக்குள் ஜேம்ஸ்பான்ட் 00007777.5 ஆப்ரேஷன் எல்.பி,
மோசக்காரனுக்கு மோசக்காரன் அல்லது திருடப்போன இடத்தில் தேள்கொட்டிய கதை,
லிபரல்
பாளையத்தில்
உய்யலாலா, உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே, தன்
மக்கள் பேராயம் அல்லது பொறுப்பு வாய்ந்த போக்கிரிகள் நடுவம் ஆகிய தலைப்புகள் உள்ளன
(2022:
43 – 58)
ஆள்வோர் பேசும் தேசபக்தி;
சட்டங்களைக் கதைகள் வழி பரிகசிப்பது அதிகாரத்துக்கு எதிரானது.
அதிகார மொழியின் உள்ளீடற்றத்தன்மையை
மக்கள் மொழியால் இட்டு நிரப்புவதும் எதிர்ப்பே ஆகும். உடை, மரியாதை, உட்காரும்,
விதம், உடலசைவுகள், குரல், பேச்சுப்பாணியை நக்கலடித்தலும் இதனுள் அடங்கும்.
ஆட்சி ஒழுங்கு, சமூக ஒழுங்கு, பால் ஒழுங்கு, சாதிமத ஒழுங்கு, நிர்மாணம், அறிவதிகாரம் போன்றவற்றை உடைக்கிற அரசியல் பகடி ஆதவனுடையது. இந்தக் கேலி ‘அப்பாசாமி படம் எடுக்கிறார்’, ‘வாஷிங்டனில் திருமணம்’ மாதிரி ஆ.வி.வகையான பொழுது போக்குக் கேலியன்று. கருத்தியல் அமைப்புகளைச் சவாலுக்கழைக்கக் கூடியது.
கேலி மூலம் உருப்பெறும் எதிர்ப்பண்பாடு என்கிற மாற்றுப்பண்பாடு, வீதியில் நிகழும் பருண்மையான போராட்டம் அல்ல. அது உள்ளியங்கும் அரசியல் மனத்துள் வீழ்ப்படிந்துக் கிடக்கும் கசடுகளை மறுப்பது. ஆனாலும் இலக்கியம் நேரடியாக அதிகாரத்தைத் தாக்குவதில்லை; தாக்குவனவற்றை மறுப்பதில்லை. அரவமில்லாமல் அதிகார மமதையை அது குலைப்பதாகும். அதிகாரத்துக்கு எதிரான சமர் ஆயுதம் ஏந்துதல், கிளர்ச்சி மட்டுமாக இருக்க வேண்டியதில்லை. கண்ணுக்குப் புலப்படாப் பனுவல் அரசியல் மூலமும் அமையும். தொழிலாளி X முதலாளி, தொழிற்சங்கம், செங்கொடி, ரத்தபுஷ்பங்கள், முஷ்டி உயர்த்தல் ஆதவனிடம் இல்லை. வெளிப்படையாகக் கம்யூனிசம் பேசுபவை அல்ல. ஆனால் கம்யூனிசத்தை வன்மையாகப் பேசுபவை.
உயர் விழுமியங்களின் முகமூடியைத் திரித்து நிற்கும் அதிகாரம் விறைப்புடன் தொடர்புடையது; தந்தைவழிப்பட்ட கலாச்சாரத்தையும் பாலின விதிமுறைகளையும் பேணுவது ; தேசம் காத்தல், வீரத்தாய், முனிவர் பெருமை, புராணம் போற்றுதல் எனப் பல நிலைத்தகவல்களைக் கைக்கொண்டிருப்பது. அதிகாரம் படை வன்மையுடையது அதன் மூர்க்கத்தைச் சிரிப்பு, கேலி, கிண்டல், பரிகாசம், இடக்கு, எள்ளல், நையாண்டி, கோமாளித்தனம் வழியாக மேலாண்மையைக்கேள்விக்குட்படுத்தவியலும். ஆழ்மனப் புனிதத்தைக் காலி செய்யும் உத்தி அது என்மனார் புலவர்.
பெருமையைச் சிறுமையுடன் இணைத்தல், தூய்மையைக் கீழ்மையுடன் சேர்த்தல், அதிகார மொழியைக் கிராமிய மொழி மூலம் பகடிக்குள்ளாக்குதல், தவ விழுமியங்களுக்கு மாறாக உடல் வியர்வை, புலால், குடி, குசு, காமம், இடையசைவு போன்றவற்றைச் சுழற்றுதல், கட்டளைக்கு முன்பு விளையாடுதல், உயர்ந்த பாத்திரத்தைக் கோமாளி ஆக்குதல், புராண மாந்தரைக் கீழிறக்குதல், போலியான நாட்டுப்பற்றை மேலெடுத்தல், சட்டமொழியைப் பரிகசித்தல், உடை, உடல்மொழியைக் கிண்டலடித்தல் என எல்லையற்றுக் கேலி அமையும்.
மேற்கூறிய எல்லா வகைமைக்கும் ஆதவனின் கதைகளில் சான்றுகள் உண்டு.
பொய்யான பணிவு, எதிர்ப்புக்கதைகளைப் பரப்பிவிடுதல், வதந்திகளை உருவாக்கல், சோம்பித்திரிதல், ஒத்துழைக்க மறுத்தல், மெத்தனம், தாமதம், மௌனம், கசப்பான சிரிப்பு, சிறுதிருட்டு என்பன கூட அதிகாரத்துக்கு எதிரான குறியீட்டுப் பொருண்மையுடையவையேயாம்.
மேட்டிமையாக்கக் கலை நையாண்டியை விரும்புவதில்லை. நையாண்டி என்பது தீவிரமான அரசியல்;அரசுக்கதைகளுக்கு எதிராக மக்கள் கதைகளை அது உருவாக்கும். போராட்டத்தை வன்முறை கொண்டு ஒடுக்கலாம். சிரிப்பை என்ன செய்ய ? பொய்மை, வன்முறை, பண்பாடு, ஊழலை நகைப்பு கேள்விக்கு உட்படுத்தும்.
புதிய சொற்கள், உடைந்த கதையமைப்பு, புதிய வடிவங்களில் அனுபவத்தை நிகழ்வை எழுதிக்காட்டுதல் ஆதவனுக்குரியது. கதாநாயகர்களை வீழ்த்தி வேலைக்காரர்களை முன்னிலைப்படுத்திக் கீழ்த்தட்டு மொழியை கலையாக்கும் நகாசு கைவரப் பெற்றவர் ஆதவன் தீட்சண்யா.
தேசியம் உருவாக்கும் தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்தித் தலைவர்கள் பற்றிய மதிப்பீடுகளை நொறுக்குவது அரசியல் கலாச்சாரச் செயல்பாடாகும்.
எளியோரை ஒடுக்கும் அதிகாரத்தை, பண்பாட்டுரீதியான மனங்களைக் கைவசப்படுத்துகிற சட்டம், கண்காணிப்பு, நீதிபரிபாலனம், தண்டனை, உடல், பாலினம், குடும்பம், மொழி, நம்பிக்கை, பண்பாடு போன்றவற்றை நுண்ணிய அலகுகளாகக் கட்டமைத்துக் கல்வி, இலக்கியம், பனுவலாக்கம் வழியாகக் கையளிப்போரை இவற்றை வரையறுக்கும் உயர்ந்தோர் என்போரை உடைக்கக் கேலியே உதவும், இத்தகைய தந்தையாதிக்கப் பண்பாட்டுச் சுற்றுச்சுவர்களை மீறவும் உடைக்கவும் ஆதவன் எழுதுகிறார்.
எளிய சாதியினர், வேலைக்காரர்,
மனநோயாளர், திருநங்கையர், பெண்களை வைத்தே தமிழ்ப் பொதுப்புத்தி சார்ந்த கேலி
பெரிதும் நிகழ்கிறது. இவர்கள் மீதான கேலி,
அதிகாரத்துக்கு ஆதரவானது. சபாபதி முதல் வடிவேலு வரை
வேலைக்காரர் எள்ளல் இயல்பாக்கப்பட்டுள்ளது. விகடன் வகையறாக்களால் சமைக்காத மனைவி,
கபாலி ஜோக்குகள் பரிசளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. மனநோயாளிகள்,
திருநங்கையரின் உடல்மொழிகள் தமிழ்மன நகைப்புக்கு ஏதுவானவை. அதிகாரம் எதற்குச்
சிரிக்கலாம் என்று சொல்லாது; ஆனால்
பயிற்றுவிக்கப்பட்ட மனம் அதை யூகித்து நடந்துகொள்ளும். எதைப் பற்றிச் சிரிக்கலாம்
என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஏகாதிபத்தியமும் வைதிகமும் இணைந்த அதிகாரத்தின் இரு கண்களுக்கு ரகசியமாகவும் வெளிப்படையாகவும் சுண்ணாம்பு வைக்கிறார் ஆதவன். “வேலைக்குப் போற பொம்மனாட்டிகளில் தொண்ணூறு சதம் பேர் ஒழுக்கங்கெட்டவங்கன்னு பெரியவா (பெரியவான்னாகாண்டாமிருகத்துக்கோ யானைக்கோ பொறந்தவர்னு நீங்க நினைச்சுங்க மாட்டீங்கதானே)” (2008:143) என்கிறார். அடைப்புக்குறிக்குள் ஆப்புச் செருகிறார் ஆதவன். தடித்த எழுத்துக்கள் எம்மால் இடப்பட்டவை. எம் என்பது எத்தனை பேர் எனக் கேட்பது இலக்கண விரோதம். “லோககுரு என தன்னைத்தானே சொல்லிக்கொள்கிற மட முதலாளிக்கே (அதாவது மடாதிபதிக்கே) வெளிக்கியிருக்க வாழையிலை கொடுத்ததோடு அதை பவ்யமாய் வாரிவழித்து சுத்தமும் செய்த பாரம்பரியம் கொண்ட காவல்துறைக்கு, இந்த லோகத்தை மட்டுமல்லாது ஏழேழு லோகத்தையும் கட்டியாளும் மெய்யான கடவுளை நடத்தும் விதமா தெரியாது?” (2016:88) என்பதில் சமய அதிகாரம் கேலிக்குள்ளாகிறது.
எல்பிஜி எனப்படும் தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தை ஏற்று இறையாண்மையை நாடு இழந்ததாக எண்ணும் ஆதவன் நாட்டை லிபரல் பாளையம் என்கிறார்; ஆங்கிலேயர்க்கு அடிபணிந்து வரிவசூல் செய்யும் பாளையக்காரர் போல இந்திய முதலாளித்துவம் ஆகிவிட்டதாகக் கருதுகிறார்.
‘உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்’ என்ற கதையில் “எங்கும் ‘புஷ்’மயமாகி ஊரும் நாடும் உருண்டுபுரண்டுக் கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில்.... அமெரிக்காவுடன் இணைந்து ஒரு குட்டி வல்லரசாக, வல்லரசுக் குஞ்சாகிவிட்ட இந்தியாவில் வாழும் பெருமிதத்தில் இந்திய நாய் கூட ‘லொள் லொள்’ என்பதற்குப் பதிலாக ‘வல்வல்’ என்றே குரைக்கப் பழகியிருந்தது” (2022:60 – 81) என்கிறார்.
தேசப்பிதாவுக்குப் பதிலாகப் புஷ் படம் இந்தியப் பணத்தாளில் அச்சடிக்கப்படுகிறது. கழிப்பறையில் ஆண்கள் பிரிவில் ‘புஷ்’ (அமெரிக்க முன்னாள் அதிபர்) படமும் பெண்கள் பிரிவில் ‘காண்டலிசா ரைஸ்’ (அமெரிக்க அரசுச் செயலர்) படமும் வரையப்பட்டிருக்கின்றன. ஆணுறையில் புஷ்ஷின் படம் வரையப்பட்டதால் தன் ஆண்மைக்கும் மனைவியின் கற்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் புஷ் மாறிவிட்டதாக (2022:77) அமைச்சர் வரை அஞ்சுகிறார்கள். பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளில் புஷ்ஷின் கடைவாயில் கோரைப்பற்கள் முளைத்திருப்பதைக் கண்டு கன்ஸ்யூமரேஸ்வரி தம்முறுப்பை வெறிநாய் கவ்வியதைப் போல வலிகண்டு அலறுகிறார் (2022:75) என்ற பகுதிகள் அமெரிக்க வல்லாண்மை மீதான உச்சபட்சக் கேலியாக அமைகின்றன. கதை முழுதும் நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாகக் கேலி செய்யப்படுகின்றனர்.
காலனித்துவத்தின் கசடுகள் பொது மனத்தில் அழுத்திக் கிடக்கின்றன. காலனித்துவப் பொருளாதார அரசியல் ஆள்வோரைப் பிடித்தாட்டுகிறது. பன்னாட்டு மூலதன ஆற்றுவெள்ளப்புரளலில் இந்திய முதலாளிகள் குளித்துக் கும்மாளம் போடுகின்றனர். “கனவைக்கூடத் தனியாகக் காண்பதற்கான சுயமரியாதையை இழந்து ஏதேனுமொரு பன்னாட்டுக் கம்பெனியொடு சேர்ந்து கூட்டாகக் காண்பதற்குப் பழகிப்போய்விட்டிருந்த லிபரல்பாளைய முதலாளிகள்” (2016:101) இடக்குக்கு ஆளாகிறார்கள்.
லிபரல் பாளையத்தின் புதிய பிரதமர் டெவலப்பன், கக்கா நாட்டுப் பிரதமர் தரகுமணி நாதன் ஆகியோர் எந்நாட்டைச் சார்ந்தவர் என்பதை அறிய ஆய்வுகள் தேவை.
ஆதவன் தீட்சண்யாவின் அழகியல் சோசலிச எதார்த்தவாத அழகியல் அல்ல. தலித் அழகியலை ஏற்றுக்கொண்ட மாற்று அழகியல் எனப்படும் எதிர் அழகியல். இனிமை, சீர்மை, ஒத்திசைவு, மரபான வடிவம் போன்ற மரபுவழி அளவுகோல்களால் தீர்மானிக்காமல் கருத்ததிர்ச்சி, சிதைவு, அரசியல், சமூகவியல் உணர்வுகளை முன்னிறுத்தும் மொழி சார்ந்த பனுவலாக்கமே எதிர் அழகியலாகும்.
அழகியலின் இலக்கணத்தைச் சிதைப்பதன் வழியாக ‘இன்மைக்கு’ அழைத்துச் செல்லாத ஆதவன் எழுத்துகள், அபத்தம், குரூரம், நம்பிக்கை வறட்சி போன்றவற்றை உதறிய அழகியல். ஆதவனின் அழகியல் சமூக வயப்பட்ட விமர்சன உணர்வுடையது. அது சர்ரியலிச அணுகுமுறை அல்ல; கலைக்குள் நிகழும் மாற்றமாக இதைக் கொள்ளாது இடது அரசியலைப் பின்பற்றியே அரசியலின் பகுதியாகவே எழுதுகிறார்.
வழக்கமான உன்னத அழகியலுக்கு முரணான அழகியல், பொதுப்புத்தியைக் கலங்கடிக்கிற ஆணாதிக்கத் தகர்ப்பு, சாதியாதிக்க எதிர்ப்பு, தந்தைவழி ஒழுக்க எதிர்ப்பு, நிறுவன எதிர்ப்பு போன்ற கூறுகளைக் கொண்ட எதிர் அழகியல் ஆதவன் நெய்த பனுவல்களில் காணக்கிடைக்கின்றன.
புழக்கத்தில் இல்லாத கதையமைப்பு, வன்முறை, நினைவுகள், துர்மரணங்கள், உடைந்த வடிவம், எள்ளல் கொண்ட சொல்முறை, காட்சிப்படிமங்கள், அரசியல் கோபமாக ஆதவனிடம் குவிகின்றன. வழமையான அழகியல் அதிகார ஒடுக்குமுறையை இயல்பாக்குகிறது; ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. மாற்று அழகியல் அதனைக் கேள்விக்குள்ளாக்கிப் பகடி செய்கிறது.
பின்நவீனத்துவக் கதைசொல்லல் கூறுகளை ஏற்கும் தீவிரமான மார்க்சியக் கட்சிச் செயல்பாட்டாளர் ஆதவன், பின்நவீனத்துவக் கருத்துப்பள்ளியை ஆதரிப்பவர் அல்லர். நேர்கோடல்லாக் கதை சொல்லல் முறை, கலாச்சார மேலாதிக்கத்தை உடைக்கும் உள்ளடக்கம் கொண்டு ஆதவன் தரும் கடின உண்மை விழுங்கமுடியாமல் தொண்டைக்குழியில் நிற்கிறது.
உயர்ந்தவை என்று கற்பிக்கப்படும் விழுமியங்களுக்கு எதிராக எதிர் அழகியல் வினையாற்றும்; அது பொதுப்புத்திக் கொண்டாடும் அனைத்தையும் கவிழ்த்துக் கலகம் செய்யும். பின்நவீனத்துவக் கூறுகளை வரித்துக்கொண்டு கடவுள், புனிதம், உயர்வு, அதிகாரம், அறிவு எனப்படுவற்றின் மீது கேள்விகளை எழுப்புகிறது எதிர் அழகியல். நிறுவனங்கள் மீதான தாக்குதலை நனவுநிலையிலும்ஆழ்மனநிலையிலும் ஆதவன் கொண்டுள்ளார். அவசரநிலைக்காலம் நாட்டின் வளர்ச்சிக்கு என்ற பேருண்மையை நொறுக்கிறார். “ஆட்கள் வேலை செய்கிறார்கள் வேறுபாதையில் செல்லவும்’, ‘பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர்’ என்ற இருபதம்சத் திட்டத்தையும் மீறுகிற குற்றமாகவும் கருத இடமுண்டாகையால் கதை இப்போது துவங்க முடியாமல் நிற்கப்போகிறது.” என்று நாட்டின் முன்னேற்றம் என்ற முழக்கத்தோடு வெளிப்போந்த இருபதம்சத் திட்டத்தை நகைப்புக்கு ஆளாக்குகிறார். குடும்பக்கட்டுப்பாடு தீவிரமாக இருந்த அக்காலத்தைக் குறித்து, “அப்புறம் புல்டோசரோடும் விருத்தி நரம்பை வெட்டியெடுக்கக் கத்தரியோடும் சஞ்சய்காந்தி வரக்கூடும். ஆமாம் தாய் எட்டி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும். பசுவும் கன்றும் முட்டிப் பரலோகம் போனவர்களின் லிஸ்ட்டைப்பார்க்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி” ( 2008 :140) என்ற வரிகள் நையாண்டியின் உச்சம். அன்னை இந்திரா என்ற பசு முட்டிப் பலியானோர் ஏராளம்.
நாட்டின் தேசியக் கொண்டாட்டமான கிரிக்கெட் அரசியலை நுட்பமாக ஆராய்கிறார். தொடர்ந்து பேணப்படும் சனாதனரீதியான தொடாமையைக் கைக்கொண்டுள்ளதால் ‘மேலோரல்’ கிரிக்கெட் ஆடப்படுகிறது. தொட்டும் தொடர்ந்தும் ஆடிய விளையாட்டிலிருந்து யாரும் யாரையும் தொட்டு உறவாட அவசியமில்லாத கிரிக்கெட் மாதிரியான ஆட்டங்களுக்கு அவர்கள் தாவிக் கொண்டுள்ளனர் (2008:211) என்கிறார்.
தரம் முக்கியம் என்ற கதையாடல்கள்
குறிப்பிட்ட திறமைசாலிகளால் குறிப்பிட்ட செயல்களுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகின்றன.
தரத்தில் பெருந்தனக்காரரின் திறமைகள் தரத்தில் போடும் கிழிசல்கள் தைக்க இயலாமல்
கண்டுகொள்ளப் படுவதில்லை. எளியவர்கள் மேலேறும்போது எழும் கூச்சல்களுக்கு எதிராக
அமரிடுகிறார் ஆதவன். “இட ஒதுக்கீடு இல்லாமல் மெரிட்டில்
படித்தவர்களால் ஏவப்படுகிற ராக்கெட்டுகள் வானில் பாயாமல் கடலுக்குள் விழுந்து
முழுகுவது பற்றியோ இட ஒதுக்கீடே இல்லாத விளையாட்டுத்துறை ஈயம் பித்தாளைப் பதக்கம்
வாங்கக்கூட லாயக்கில்லாமல் கிடைப்பது பற்றியோ வாய் திறப்பதில்லை (2016:91)
என்ற கூற்று அரசியல் சார்ந்தது. உடலோடு உடல் மோதும் விளையாட்டுகள் தவிர்க்கப்பட்ட
போதும் மேற்சாதி ஆதிக்கங்கொண்ட விளையாட்டுகள் மண்ணைக் கவ்வுவதைக் காட்டுகிறார்.”
நிறுவனங்களுக்கு எதிரான அரசியல் குரல் பனுவலாக நெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இந்தப் பக்கத்தில் இந்தக் கதையில் என்று எடுத்துக்காட்ட இயலாவண்ணம் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது. அரசு அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், சட்டம், ராணுவம், நாடாளுமன்றம் ஆகிய அரசு உறுப்புகளும் குடும்பம், சமயம், மொழி, பாலினம், பண்பாடு என்ற நுண்ணலகு அரசியலும் மூர்க்கமாக எதிர்க்கப்படுகின்றன.
குடும்ப உறவுகளின் வன்முறையிலிருந்து தப்பித்துச் செல்கிறாள் ஒருத்தி. “ராணுவக் கேந்திராலயத்தின் மதிலோரம் சுருண்டு கிடந்தவளை டெண்ட்டுக்குள் தூக்கிப்போகப் பார்த்த சிப்பாய்களிடமிருந்து தப்பியோடி வந்து இந்த இல்லத்துக்குள் தஞ்சம் புகுந்து கிட்டத்தட்ட எழுபத்திரண்டு வருடங்களாகி விட்டன” (2008:160) என்ற தொடர்கள் நாம் உருவாக்கி வைத்திருக்கும் இராணுவம் மேலான மதிப்புகளைச் சல்லி சல்லியாக்குகிறது.
காவல் நிலையங்கள் பற்றி எளிய அரசியல் பேசும் கதையாளர்களுக்கு உயர் மதிப்பு இல்லை; சினிமாக்காரர்கள் எப்படியாவது நிமிர்த்தத் துடிக்கிறார்கள். போதுமான அரசியலறிவு அற்ற திரைத் தற்குறிகளால் அவ்வாறுதான் சிந்திக்க முடியும். பற்றாக்குறைச் சிந்தனை பாதகம் செய்யும் என்பது பழமொழி. எனவேதான் “அர்ஜூன், விஜய்காந்த், விக்ரம், விஜய், விஷால், சிம்பு, சூர்யா போன்ற நடிகர்களைக் காவல் அதிகாரிகளாகப் பார்த்துத் தானும் தறுதலையாகிப் போன இன்ஸ்பெக்டர் இரும்புள்ளன் இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் என்கவுண்டர் என்கிற கதியில் மாநகரத்தையே கலங்கடித்துக் கொண்டிருக்கும் இவர்தான் இக்கதையின் நாயகனாக வந்திருக்க வேண்டும்” (2016:73) என்று கேலி செய்கிறார்.
போலிஸின் ஆழ்மன வைதிகம் தாடியைக் குறியீடாகக் கருதுகிறது. தாடியுடனிருக்கும் என்னைப் பார்த்ததுமே போலிஸின் துப்பறியும் ஏழாவது அறிவு விழித்துக்கொள்கிறது. தீவிரவாதியாய் ஒருவனிருக்கும் பட்சத்தில் அவனிடம் கட்டாயம் வெடிகுண்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவுடனே தேசபக்தி பொங்கிவிடுகிறது போலிசுக்கு (2008:212) என்ற கேலி பல அர்த்தங்களுக்கு அழைத்துச் செல்கிறது.
ஜனநாயகத்தின் தூண்களை நம்பாமல் எப்படிப் புதிய பாரதத்தைப் படைக்க முடியும்? ஆதவனோ தேர்தலை எள்ளி நகையாடுகிறார். ஓட்டைத் (vote) தோசை எனக் கருதி கையில காசு வாயில தோசை என்கிறார். “டப்புஸ்தானின் ஒரு மாநிலம் துட்டுஸ்தான், துட்டுஸ்தானின் தலைநகரம் காசுக்கோட்டை, காசுக்கோட்டையில் இருக்கிறது சட்டமன்றம். அங்கு நடந்தாகனும் நேர்தல். நேர்தல் என்றால் நேர்தலல்ல திருடுவதற்கும் தில்லுமுல்லு செய்வதற்கும் என்றே ஐந்தாண்டுகளுக்கு நேர்ந்து விடுவது. நேர்தலை நடத்தப்போவது நேர்தல் ஆணையம் (நேர்தல் ஆணையத்தை நடத்துவது யார் என்று கேட்கும் இடக்குவாயர்களே, அதற்காகத்தான் தேர்தலே நடக்கிறது என்பதை அறியாத மூடர்களா நீங்கள்? காரை நாம வச்சிருக்கோம். காரை வச்சிருந்த நடிகைய இப்ப யார் வச்சிருக்காங்க என்று கேட்கிற செந்தில் கவுண்டமணி வகையறாவில் என்று சேர்ந்தீர்கள்?” (2022:31) என்று கதை தொடங்குகிறது. துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப்பேரவை ஓட்டை ஏலம் விடுவதற்காக நடத்தும் செயல்முறைகளே கதை. இந்த அளவுக்குத் தேர்தல் ஆணையத்தைப் படுகாயப்படுத்தும் ஆதவனுக்கு மெமோ கொடுக்க வாய்ப்பில்லை வி.ஆர்.எஸ் பெற்றுவிட்டார்.
லிபரல் பாளையத்தின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாகப் பணம் வாங்காமலே கேள்வி கேட்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகியிருந்தனர். சபாநாயகர் இருக்கைக்குப் பின்புறம் தொங்கிக்கொண்டிருந்த புஷ்ஷின் புகைப்படத்திற்கு முன்பாக உறுப்பினர்கள் நின்றுகொண்டே இருந்தனர். உட்காருவது மரியாதையற்ற செயல் என ஆளுங்கட்சிக் கொறடா தெரிவித்தார் (2022:77_78) என்று நாடாளுமன்றமும் தாக்குதலுக்குத் தப்பவில்லை.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டப்படி தான் அறிந்து செய்வது குற்றம் என்பதை ஆதவன் அறியாதிருக்கிறார். லிபரல்பாளையத்தில் கதை நடப்பதால் தப்பித்தார். தண்ணீருக்குப் பணம் கட்டவேண்டும் என்பதை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி நடக்கிறது. பணம் கட்டாத விரும்பாத ஒருவர் காட்டாற்றில் நீர் அருந்துகிறார். அப்போது, நமக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கறாராக வசூலிக்காமல் விடும் போது பொலிவியாவின் கொச்சம்பா நகரில் நடப்பதைப் போல சமூக அமைதி கெடும் வாய்ப்பு உள்ளது. மக்கள் கிளர்ச்சி வலுக்குமானால் மேன்மை தாங்கிய நீதிமானாகிய நீங்கள் உட்பட நாமெல்லாம் நமது ஊரைப்பார்த்து ஓடவேண்டும் (2008:252) என்ற பகுதி நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது. எல்லாப் பரிவர்த்தனையும் டாலரில் தான் என்கிறார். மற்றொரு நீதிமான் (2008:251).
இடஒதுக்கீடு குறித்த கேலி அபாரமானது. கொல்கத்தா மேம்பாலம் இடிகிறது. கோட்டாவில் படித்துவிட்டு வருகிற என்ஜினியர்கள் பாலம் கட்டினால் அது இடியத்தானே செய்யும் என்று ஆன்டிகோட்டா ஆசாமி கருத்துச் சொல்லியிருந்தார். “லட்சக்கணக்கில் கொட்டிக்கொடுத்துக் கொல்லைப்புற வழியான மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்கிற தத்திப் பிள்ளைகளைத் தான் அந்த ஆசாமி குற்றஞ்சாட்டுகிறாரோ என்று பார்த்தால் அதுதானில்லை. வருஷத்துக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் பிடுங்கிக்கொண்டு அதிக மார்க் எடுக்கும் மோசடி நுணுக்கங்களைக் கற்றுத் தருகிற ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் படிக்கிறவர்களைத்தான் குற்றம் சாட்டுகிறாரா என்று பார்த்தால் அதுவுமில்லை. அந்தாள் இட ஒதுக்கீடு என்ற கோட்டாவில் படிக்கிறவர்களைத் தான் குற்றம் சாட்டுகிறார்” (2016:90 -91) என்கிற பகுதிகள் இடஒதுக்கீடுக்கு எதிரான அரசியலை எள்ளுகிறது.
நவீன மரபு எழுத்தாளர் எவருக்கும் கடன்படா வாழ்வு நடத்தும் ஆதவன் கதைகளில் புதுமைப்பித்தனைத் தேடிப் பார்க்கும் திட்டம் பகுதியளவில் நிறைவேறுகிறது. தமிழ்நாட்டின் வடபகுதியிலிருந்து பெஜவாடாவுக்குக் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளில் கட்டுண்டு கல்லுடைக்க வந்த மக்களின் துயரம் சொல்லிமாளாது. அலமேலு, ஆராயி, சின்னச்சாமிக்கு இழைக்கப்படும் இன்னல்கள் துன்பக்கேணி மருதியை நினைவூட்டுகின்றன. ஆனால் மருதியைப் போல எல்லாவற்றையும் இழந்து துயருறவில்லை. குட்டக்கடப்பாறையால் கங்காணியின் குடலைச் சரிக்கிறாள். உடுப்புக்காரனைச் சூரியால் காளியப்பன் செருகுகிறான். சட்டுமுட்டுச் சாமான்களைக் கைவிட்டுவிட்டு டெலிபோன் லைனுக்குக் குழியெடுக்கவோ செங்கல் அறுக்கவோ வேறு ஊருக்குச் செல்கிறார்கள். துன்பக்கேணி சுரக்கிறது. ‘பொங்காரம்’ பொங்குகிறது.
கண்ணாடிப் பளிங்கெனத் தளும்பிக் கிடந்த பெரிய குளமுடைய ஊர்க்காரர்கள் நவீன வேளாண்மையால் தண்ணீர் இழந்து தவிப்பதைச் சொர்ணகுப்பத்தின் துர்க்கனவு என்ற கதை சொல்கிறது. இங்குப் பால்கஞ்சி காய்ச்ச இருளுக்குள் மறையவில்லை. பொன்னகரத் தலைப்பு சொர்ணகுப்பத்தோடு ஒட்டுகிறது. சொர்ணம், கனகம், ஹேமா, பங்காரு எல்லாம் தங்கத்தின் உறவுக்காரர்கள்.
ஆபிஸில் பசுவாகவும் வீட்டில் ஹிட்லராகவும் இருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மினி சவலைப்பிள்ளையைப் போஷிக்கப் பால்மாடு வாங்கக் கோருகிறார். அதைச் சட்டை செய்யவில்லை பிள்ளை. சகதர்மினி மேல்வீட்டு அண்ணாச்சி உதவியுடன் கைக்காப்புகளை விற்று பசுவுங்கன்றும் வாங்கி வருகிறார். அன்றிலிருந்து புதுப்பால் காப்பியும் மோரும் பிள்ளையவர்கள் அருந்தவில்லை. மனைவியை வஞ்சம் தீர்க்க அறுபது ரூபாய் பெறுமானமுள்ள மாட்டை இருபத்தைந்து ரூபாய்க்குச் சுப்புக்கோனாரிடம் விற்றுவிட்டு என் புள்ளைகள் நீத்தண்ணி குடிச்சி வளர்ந்துக்கிடும் என்று சொல்லிச் சும்மாக்கெட சவமே என்று மகனை ஏசும் புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளையை ஒத்த கதை ஆதவனிடம் உண்டு.
மினுமினுப்பாக இருக்கும் மாடு. அம்மாதான் பால் கறப்பாள். காய்ச்சினால் ஊர் மணக்கும் நெய்யை மாடு தந்தது. அது கோமாதாவா சாதாமாதாவா எனத் தெரியவில்லை. சனி ஞாயிறுகளில் சந்தோஷமாகச் சீனு மாடு மேய்க்கிறான். கடும் மழையில் மாட்டை உள்ளாற கட்டனும்னு நினைக்கிறான். வற்றிப் போன மாட்டை யாரிடமும் கேட்காமல் ஞாயிற்றுக்கிழமை அறுப்புக்கு வெள்ளிக்கிழமை அட்வான்ஸ் வாங்கும் சத்தம் வாசலில் கேட்கிறது. பால் சுரக்கும் சத்தமும் மோர் சிலுப்பும் சத்தமும் பேரோசையாகிக் காதடைக்க பழைய நெய்ச்சட்டியை வெறித்துப் பார்க்கிறான் சீனு. வெளியே மாடு கத்திக்கொண்டிருக்கிறது என்பதாக ஆதவன் கதை அமைகிறது. குடும்பத்தைக் கேட்காமல் மாட்டை விற்பதும் மாட்டுக்காகக் குடும்பம் வருந்துவதுமான கருப்பொருள் இரண்டிலும் தட்டுப்படுகிறது.
‘ஆனாலும் இது கதையல்ல’ என்ற கதையில் புதுமைப்பித்தனின் பைலார்கஸ் என்ற சிற்பியை நினைவுறுத்தும் ஓவியன் வருகிறார். இரவும் பகலும் தன்னையே உருக்கித் தருவித்துக்கொண்ட பயிற்சியில் கலாதேவியின் பரிபூரண கடாட்சம் விரல்நுனியில் தங்கி ஜாலம் புரிவதாய் தேசாதிதேசங்களில் பரவியிருந்தது அவனது கீர்த்தி. உண்மையில் அவன் ஓவியனே அல்லவென்றும் அவனின் ஒரு பாகமே ஓவியமாய் வருகிறதென்றும் அதனாலேயே அவை அத்தனை தத்ரூபமாயிருப்பதாகவும் நிலவும் நம்பிக்கையை அதீதமென்று மறுக்க யாரும் துணியவில்லை. வண்ணங்களைத் தன்னுயிரில் குழைத்து வரைவதே அவன் பாணி (2008:231). ஆனால் அவனே இனி எதனிமித்தாயும் தூரிகையைத் தொடுவதில்லை என்று திடமாயிருந்தான். இனியொரு ஒற்றைப் புள்ளியையும் தன்னால் வரைய முடியாததென்ற தீர்மானத்திற்கு அவன் வரவேண்டியிருந்தது (2008:232). வர்ணத்தட்டையும் தூரிகையும் உதறியெறிந்தான், குழைத்திருந்த வண்ணங்கள் குருதியாகிக் கொப்பளிப்பதாகத் தோன்றியது. தூபக் கிண்ணத்திலிருந்து பிணவாடை பொங்கித் திணறடிப்பதாய் மிரண்டான் (230). தூரிகை எடுக்கும் தைரியமற்றுப் பீதியோடு தளர்ந்து கூட்டத்திற்குள்ளே (233) திரிந்தான் என ஆதவன் சித்திரிக்கிறார். பலர் போற்றும் சிற்பங்களை உருவாக்கிய பைலார்கஸ் சிற்பங்களை உடைத்து எறிவது போல ஓவியனும் நடந்து கொள்கிறான்.
மொழியின் இழுப்பில் ஆதவன் தடுமாறும்
இடங்களும் உண்டு. தொடக்கக் கால கதையான ‘வஞ்ச’த்தில்
ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த பராக்கிரமத் தாத்தா பற்றிப் பேசுகிறார். நீ கெட்ட
கேட்டுக்கு எங்க ஜாதியில் கூத்தியா வேணுமா என்று ஒருவர் கேட்கிறார். அவர் சாதி விபரம்
பனுவலில் இல்லை. மேற்படித் தாத்தாவுக்காகத் தாத்தம்மாவையும் தொடுப்பு
ரஞ்சிதத்தையும் அவர் நினைவுநாளில் ஆதவன் காவு கொடுப்பது ஒப்பவில்லை. இது நவீன சதி
வடிவம் தான். தற்கொலையாகவும் மருகிச் சாவதுமாகப்
பெண்டிர் இருவர் கதையில் உள்ளனர் ஆயின் அங்ஙனம் விரும்பாமை
வேண்டுவதே ஆதவனின் அரசியல். மேலும்
மேங்காட்டுச் சின்னப்பன் பொண்டாட்டி கனகி, வகுரன் மவ பொன்னுருவி, முத்தம்பட்டிப்
பிரிவு ரோடு பெட்டிக்கடைக்காரி வசந்தா, வண்டிக்காரன் கொழுந்தியா ஜெயக்கொடின்னு
யாராச்சுமொரு வாளிப்பான பொம்பளைங்களோட அப்பப்ப அவருக்கிருந்த சகவாசம் (2008:38)
பற்றிச் சீரும் சிறப்புமாக விளக்கிறார். பாட்டியின் தொடுப்புகளே பேசத் தக்கவை(எதிர்
அரசியலில்).
வேசிகளைப் பற்றி இரு இடங்களில்வெளிப்படும் குறிப்புகள் உவப்பானவை அல்ல. அழகும் அகங்காரமும் கொண்டு ஆடித் திரிந்த வேசியொருத்தியின் பிணத்தையோ கல்லறையையோ பார்ப்பதான குறுகுறுப்பு (2008:230) தவிர்க்கத்தக்கது.
திராவிட இயக்க அரசியலை மூர்க்கமாக வகைதொகையின்றி எதிர்க்கும் புரட்சிக்காரர்கள் பெருகிவரும் இந்நாளில் கலைஞரைப்பற்றி இலேசான கிண்டல் உண்டு. ஆயின் கேரளா, மேற்குவங்கம், திரிபுரா சாலைகளில் ஆதவன் உலவுவதில்லை. தகாத எதையும் ஆங்கண் அவர் கண்கொண்டு பார்க்கவில்லை. அந்த அரசியல் ஆதவனுக்கு உகந்த அரசியல்தாம்.
மூவேந்தர்களைப் போட்டுத் தள்ளுதல் பழம் பெருமை மீதான தாக்குதல். கூடவே ஆண்ட பரம்பரைக்காரர்கள் தரும் வீராவேசம் ஆதவனைத் துன்புறுத்துகிறது. நான் முதுகலை படித்தபோது (படித்தேனா) பாதிவழியில், பஸ்ஸை நிறுத்திய பிஆர்ஸி டிரைவருக்கும் பாரிக்கும் மூளையில் ஒரே பாதிப்பு என்று பி.எச்டி படித்த அண்ணன் ந.ம.வீ. ரவி ஒரு கவிதை எழுதியிருந்தார். எம்.ஏ. படிக்கையில் அந்த அதிர்ச்சியில் வியப்பு இருந்தது. பின்னாளில் அது உரைத்தது. மூவேந்தர் x இனக்குழுத்தலைவர் என்ற முரணில் இடதுசாரிகள் இனக்குழு அணியிலேயே கூட்டணி வைக்கவேண்டும். வேந்தரை வெறுக்கலாம். பாரியோ வேந்தன் அல்லன். இனக்குழுத் தலைவன். வாழ்வில் உள்ள குலச்சின்னங்களைப் பாதுகாப்பது இயல்பானது; நன்னன் காத்த மாம்பழமும் இத்தகையதே. சுரைக்காய் தின்னமாட்டேன் ஓங்கோல் தின்னமாட்டேன் என்பதெல்லாம் குலச்சின்னக்காப்பு (Totemism). அங்கவையும் சங்கவையும் நம்பிள்ளைகள். அவர்கள் முகத்தில் கரி பூசி, பழகியவர்களுக்கு எல்லாம் அனுப்புவேன் என்று சொல்லும் கயவாளித்தனத்தை நான் வன்மையாக எதிர்ப்பேன். பாரியைக் காக்கலாம் நாம். பாரி நம்மவன்தான்..
மனுநீதிச் சோழன் அல்வைதீகன். பசுவைக்காத்தல் பௌத்தம். ஆயின் கோமிய அரசியலில் ஆராய்ச்சி மணிகளை அகற்றலாம்தான். மனுநீதி என்ற பெயர் தரும் எரிச்சல் ஒன்றே போதும் எதிர்க்க.
பால்புதுமையினர், திருநங்கையர், விளிம்புநிலைப் பாலியல் அரசியல் குறித்து ஆதவன் இனிப் பேசுவார் என்று அவர் சார்பில் உத்திரவாதமளிக்கிறேன்.
கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் என்பது கதையின் உச்சம். (உச்சம் என்பது ஆணாதிக்கப்பாலியல் வகைப்பட்டதென்பர். பிழை பொறுத்தருள்க) கக்கா நாட்டின் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்தில் பதவி விலகிவிட்டார். ஜனாதிபதிக்கு வழங்குவதைவிட நாட்டுக்கு மிகவும் அவசியமான தூய்மைப் பணியாளருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வழங்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டு ஜனாதிபதி பேசியதால் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் 301 அறைகளைக் கொண்ட தூய்மைப் பணியாளர் குடியிருப்பு வழங்கப்பட்டது. குடியிருப்பில் திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கு உதவியாளர்கள் சைரனும் சிவப்புச் சுழல்விளக்குப் பொருத்திய காரில் தொரட்டி ஏந்திக் கரண்டியுடன் பணிக்குச் செல்கின்றனர். அணிவகுத்துச் செல்லும் வண்டிகளுக்குச் சிறார்கள் பூங்கொத்து ஆட்டி வணங்குகின்றனர். சுகாதார அமைச்சரின் மாநாடுகளை தொடங்கி வைத்துப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கின்றனர் அவர்கள்.
யூ.எஸ். செல்ல விருப்பமில்லாமல் ஸ்கேவஞ்சர் வேலைக்குத் தயாராகின்றனர் மேலோர். கக்காநாடு இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (கே.ஐ.டி) உருவாக்கப்படுகிறது. பலபட்டறைச் சாதியாரும் கே.ஐ.டிக்கள் மீது கவனஞ் செலுத்துகின்றனர். கிருந்ததியரல்லா மாணவர்கள் கே.ஐ.டியில் இளக்காரமாக நடத்தப்படுகின்றனர். தங்களாலும் செருப்புத் தைக்க முடியுமென கிருந்ததியரல்லாதோர் தொடர்ப் போராட்டம் நடத்துகின்றனர் என நீளும் கதை படிப்பவர் மூஞ்சியில் மலத்தை வாரி இறைக்கிறது; சமூக நாற்றங்களை நம் முன்பு கொட்டுகிறது.
மனதின் அடியாழத்தில் உறைந்திருக்கும் வலிதான் மிக வன்மையான இத்தகைய கேலியாக வெளிப்பட முடியும். மட்கும் குப்பை மட்காத குப்பை எனப் பிரித்துத் தர நோகும் மத்தியதர சாதிய மமதை கொண்ட சமூகம் குப்பையள்ளும் தோட்டி, சக்கிலி என்ற சொற்களைச் சர்வ சாதரணமாக உதிர்க்கின்றது. இதற்கு எதிரான பண்பாட்டுப் போராக இக்கதையைக் கொள்ள முடியும். பல பவுன் நகைகளைக் கண்டெடுத்துத் தந்த பத்மாக்காவைத் துப்புரவுத் தொழிலாளி உடையுடன் தானே அங்கீகரிக்கிறோம். எதுவும் உறுத்தவில்லையே. இன்னும் நூறு பீக்கதைகளை எழுதி தமிழ்ச்சமூக மனதிற்குள் ஆதவன் கொட்டத்தான் வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களைத் தொகுப்பூதியத்துக்குள் தள்ளி வாழ்வை அழிக்க எண்ணியபோது கரப்பான் பூச்சிகளும் அணில்களும் கொந்தளிக்கவில்லையே? பொது மன அமைதியைக் குலைக்கத்தான் வேண்டும். சமன் குலைக்க ஆதவனைத் தவிர இப்போதைக்கு ஆட்களில்லை. ஆதவனின் ஆகச்சிறந்த கதைகளில் முதலாவதாக இதைக் கொள்ளலாம்.
கிளாஸிக் எனப்படும் செவ்வியல் கதைகள் பல்கலைக்கழகம் உருவாக்கும் பண்பாட்டு மூலதனத்துக்கு வலு சேர்ப்பவை. துஷ்ட கதைகளை அப்பேழைக்குள் தள்ளிவிட முடியாது. பண்பாட்டு மூலதனத்துக்கு எதிரான விளிம்புநிலை எழுத்துக்களின் கலகம் கண்ணில் விழுந்த தூசியைப் போலக் கலக்கத்தைத் தந்துவிடும். கலக்கமே கலகம். கலகவகை எழுத்துக்கள் தேசியப்புனிதங்களாகக் கொண்டாட இயலாத வன்மையுடையவை. இவ்வகை எழுத்துக்கள் இரண்டாம் அலைக்கு உகந்தவை. மேற்கோள் தன்மையற்றவை. மருட்டுபவை. மருட்பாக்கள் தாமே கலகத்தின் முதன்மை. ஆதவனின் கலகத்தைக் கொண்டாடுவதன் வழியே தான் இளம் வாசகப் பரப்பை பொதுவெளியில் நுழைக்க இயலும். பழம் தின்னாமல் கொட்டை போடும் நடுத்தர இயல்பு மனங்கள் பலன் நல்காதவை.
இந்துத்துவ மதவெறி, தலித்துகளின் அவலம், கார்ப்பரேட் அரசியல் என அதிகாரத்தின் நுண் இடுக்குகளில் ஒளிந்திருப்பனவற்றைத் தேடியெடுத்து நசுக்குகிறார் ஆதவன் என்பது மிகையல்ல.
போலிஸ் வன்முறை, நீதிபரிபாலன வீழ்ச்சி, எளியோரை ஒடுக்கும் நாடாளுமன்ற இந்திய முதலாளித்துவம், பன்னாட்டு ஏகபோகம், சாதியம், பெண்ணொடுக்குமுறை, இஸ்லாமிய வெறுப்பு போன்ற புள்ளிகளைத் தொடும் ஆதவனின் எழுத்துக்கள் சமன் குலைப்பவை. அசௌகரியத்துள் வாசிப்பவரைத் தள்ளி அல்லலுறச் செய்பவை.
எதிர் அழகியல் வழிச் சென்றாலும் புதர்வழிச் செல்லும் அடர்கானகப் பல்திசை வழியில் செல்பவை அல்ல; புரிந்துகொள்ள ஏதுவானவை. பழைய ஒடுக்குமுறையைக் கூர் தீட்டிக்கொண்டே புதிய ஆட்சிக் கட்டமைப்புப் போவதை லிபரல் பாளையத்துக் கதைகள், நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள் ஆகிய தொகுப்புகளில் காணமுடியும். ஆதவன் மேற்கொள்வது கோணங்கி வகைப்பட்ட பின்னல் எழுத்தல்ல; பக்கம் மாற்றி வாசித்தாலும் மையச்சரடை ஊடாகப் பின்னிக் கொண்டவை. எத்திசைச் செல்லினும் அத்திசை அரசியலே.
புனித இடத்தைக் கைக்கொண்டு வழக்கமான கலை நகரும். அழகுடன் அவமானம் வெளிப்பட்டு மனநிறைவைத் தந்துவிடும். ஆயின் ஆதவன் எழுத்துக்கள் கேலியை ஆயுதமாகக் கொண்டு ஆதிக்க அழகியலை பொருளை உடைத்துப் போடுகிறது. அதிகாரத்தின் பாசாங்கு கள் வெளிப்படுகின்றன. புத்தரை விழுங்கியது போல ஆதவனை விழுங்குவது கல்விக்கூடங்களுக்குச் சிரமம் என்பதாலே அவர் எழுத்தைச் சமன் குலைக்கும் துஷ்ட எழுத்துக்கள் என்று கூறுவது தவறாகாது. தவறானாலும் ஆகட்டும் அதனால் ஒன்றும் ஆகாது.
‘கடைசியில் நாமெல்லோரும் ஒரு நாளில் கதைகளாகிவிடுவோம் என்று எங்கோ படித்த நினைவு. அந்த ஒருநாள் எந்நாள் யார் சொல்லும் கதைகளின் நான் என்னவாக இருப்பேன்’ என்ற ஆதவனின் பின்னட்டைக் குறிப்பு அவரின் இலக்கிய அரசியல் பிரகடனம்.
பிறர் எழுதும் கதைகளில் தான் இல்லாமல் போவதும், மட்டமாக வருவதும் மனிதத்தரத்துக்குக் கீழாக இறக்குவதும் எப்படி சாலும் என்று உள்ளடங்கிய அவர் கேள்வி நியாயமானதுதான். தான் எழுதிய கதைகளுக்குள் நீங்களும் இருக்கக்கூடும் என்ற ஆதவனின் அறிவிப்பு ஆறுதல் தரக்கூடியது. மற்றவர் கதையில் நான் வராதபோது என்னை யாரும் பேசாதபோது நான் மூர்க்கமாக வெளிப்பட்டுத் தீரத்தானே வேண்டும் என்பது அவர் கட்சி.
‘கண்காணிப்பின் அரசியல்’ என்று தொண்ணூறுகளில் படித்த தொடர் ஆதவன் கதைகளில் கண்ணி போல பின்னிக் கிடக்கிறது; எங்கும் தப்ப முடியாத பின்னலுக்குள் வீழ்ந்துக் கிடக்கிறோம் என்கிறது; மூச்சு விடுபவர்களுக்குத் தாம் பிரச்சனைகள் என்கிறது.
அனகராதி என்ற கதையில், “தேசவிரோதிகளின் பட்டியலில் உன் பெயர் இருக்கிறது. தப்பியோடிய குற்றமும் சேர்ந்துள்ளது. நாட்டின் எந்த மூலையில் கால் வைத்தாலும் உன்னைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. நிலத்திலும் வான்வெளியிலும் அங்குலத்துக்கொரு காமிரா கண்காணித்துக் கொண்டிருக்கிறது (2011:11)” என்ற கூற்று உள்ளது. கதைக்குள் இருந்தாலும் இது ஓர் அரசியல் தொடர். மீளமுடியாத துயரம் இக்கதையில் வரும் பெண் ஓடிக்கொண்டே இருக்கிறார். கொரோனாக் காலத்தில் நிற்காமல் ஓடிய ரயில் இங்கும் ஓடுகிறது.
கேள்வி – பதில், பேட்டி என வரும் கதைகளுக்குள் ஆதவனும் நுழைகிறார்; வாசகருடன் பேசுகிறார். கதைமாந்தருடன் உரையாடுகிறார்; ‘பொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை’ என்கிற கதையில் இருபத்தைந்து கேள்விகள், அவற்றுக்கான பதில்கள், அறுபதுக்கும் மேற்பட்ட விளக்கம் தேவைப்படாத வினாக்கள் எனக் கதை முழுக்க நிறையும் தேர்வுப்பாணிக் கேள்விகளால் வாசகர் அலுப்படையும் போது, ‘நண்பரே கதையென்று ஆரம்பித்து நீளும் இக்கேள்விகளைப் படிப்பதற்கே உங்களுக்கு அலுப்பாக இருக்குமானால் இன்னும் பன்மடங்குக் கேள்விகளை இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சுமந்தலைகிற எங்களது மனநிலை எப்படி இருக்குமென நீங்கள் ஒருபோதும் யோசிக்கவே போவதில்லை’ என்று குறுக்கே நின்று கதையின் முடிவில் பேசும் ஆதவனின் தர்க்கம் ஈரமுள்ள மனதை அசைத்துவிடுகிறது.
வீடுகளைக் கொள்ளையிட்டுப் பிடுங்கிய தங்கத்தால் செய்த நகைகளை அணிய மறுக்கிற ஓர் இளம்பெண் ‘தீட்டலங்காரம்’ கதையில் வருகிறாள். திருடிய பொருளை மறுக்கும் அறநெறி இங்குப் போதிக்கப்படவில்லை; மாறாகப் பாதிக்கப்பட்டோர்க்கு எதிர்த்தரப்பில் உள்ளவர்களை இணைக்கும் உள்ளடக்கும் அரசியலாகவே இதைக் கொள்ள முடியும்.
நோயின் பொருட்டோ அவசரத்தினாலோ இருதொடை இடுக்கில் கசியும் மல அவஸ்தை நமக்குச் சொல்லிமாளாது. நவதுவாரங்களின் வழியாக வாயிலும் மூக்கிலும் கண்ணிலும் மலம் தெறிக்கும் ஒருவனின் கதையை ஆதவன் சொல்கிறார். அவன் அம்மா அப்பாவின் நவதுவாரங்களிலும் பீ பீய்ச்சியடிக்கிறது. இது இயல்பல்லாக் கதை. மாயாஜாலக்கதை இல்லை மலஜலக் கதை. கதை இறுதியில் தர்க்கப்பூர்வமான முரணைக்காட்டி கதையை முடிக்கும் உத்தி பல கதைகளில் உண்டு. இந்தக் கதையை முடிக்கும்போது, “அடுத்தவர் மாண்பைக் குலைக்கவும் சிறுமைப்படுத்தவும் மலத்தைப் பயன்படுத்திவிட்டு யாரிடமும் சிக்காமல் தப்பித்து விட்டவர்களுக்கும் இயற்கை இப்படியொரு தண்டனையைக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது” என்று குறுக்கே ‘கேட்’ போட்டு கதை படிப்பவரை ஆதவன் நிறுத்துகிறார். திண்ணியத்தில் கொடியங்குளத்தில் வேங்கை வயலில் பெயரறியா ஊர்களில் எடுப்புக் கக்கூஸில் ஆழ்புதைச் சாக்கடையில் தெறிந்த மலத்தையெல்லாம் எந்தப் பாவக்கணக்கில் சேர்ப்பது? ஒடுக்கப்பட்ட மனிதர்மேல் படியும் மலமெல்லாம் மனதுக்குள் வந்துவிடுகின்றன.
பொதுநலன் கருதிப் பிரசுரிக்கப்படாத கதை (2025), கடுங்காலத்தின் கதை ஆகிய இரண்டிலும் பீக்கதைகள் உண்டு.
பீக்கதை முன்னோடி பெருமாள் முருகன் என்றபோதிலும் ஆதவனின் பீக்கதைகள் தீவிர மலஅரசியல் பேசுபவை. எதிர் பரிமாணம் கதையில் குடும்ப உறுப்பினர் குதத்தில் மட்டுமல்ல வாய் வழியேயும் வெளியேறுகிறது மலம். கடுங்காலத்தின் கதைகள் தொகுப்பில் உள்ள கோய்லெட் என்ற கதை கோயில் தலமனைத்தும் கக்கூஸ் ஆக்கிய கதையைச் சொல்கிறது. இது ‘கதையின் தலைப்புக் கடைசியில் இருக்கக்கூடும்’ என்ற கதையின் இரண்டாம் பாகம். இதை வேண்டாமென்போர் கக்கூஸ் கடவுளைப் பிரார்த்திக்க.
கோயில்களைவிடக் கழிப்பறைகளைக் கட்டுவதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன் எனத் தெரியாத்தனமாக விரிமார்பன்ஜி சொல்லி விடுகிறார். அது அப்படி இப்படிப் பரவி கோயில்கள் எல்லாம் கழிப்பறைகளாக மாற்றப்படுகின்றன. மலஜல நிவர்த்திக்காகப் புரோகிதம் நடக்கிறது. கோயிலும் டாய்லெட்டும் இணைந்து கோய்லெட் ஆகிறது.
கர்ப்பகிரஹத்தில் உயர் சாதியினர் கக்கூஸுக்கு அடுத்தடுத்துச் சாதிப்படி அடுத்தடுத்த இடங்கள் கழிப்பறைக்கு ஒதுக்கப்படுகின்றன. வழக்கம் போல இக்கதையிலும் குசும்பு கொப்பளிக்கிறது. கோயில் புனிதமான இடம் என்ற மத்தியதர மனம் துணுக்குறும் வண்ணம் ஆதவன் அதைத் தீட்டுக்குரியதாக மாற்றுகிறார். கலகம் எனும் கலக்கம்.
காமியதேசத்தில் ஒரு நாளைக்கு இருபது மணிநேரம் உழைக்கிறார்கள், இன்போசிஸ் சாஸ்திரி சொன்னதால் என்னவோ!. காலை எழுந்தவுடன் காப்பி இல்லை. இளஞ்சூடான கோமியத்தைக் காமியதேசக் குடிமக்கள் மிடறுமிடறாகப் பருகுகிறார்கள். பெண்கள் வேலைக்குச் செல்ல அத்தேசத்தில் தடை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குறைந்தபட்சம் பத்துக் குழந்தைகளைப் பெற்றெடுக்கவேண்டும் என்று முற்றும் துறந்தோர் முன்னேற்ற சங் தீர்மானம் போடுகிறது. அத்தீர்மானத்தால் அடிவயிறு பலருக்குக் கலங்கிவிடுகிறது.
புஷ்டி பானமாகக் கோமியத்தைத் தேசிய ஒழுங்காற்று ஆணையம் ஆக்குகிறது. கணவன் மனைவி கூடுவதற்கு உகந்த நேரத்தை உத்தம சந்ததித் திட்டத்தின்படி, தேசிய பள்ளியறை பரிபாலன் சேவா சமிதியைச் சேர்ந்தவர் வீட்டுக்குள் நுழைந்து குறித்துத் தருகிறார். ‘அதற்குப் பிறகும் அவர் இருந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்’ என்று ஆதவன் சொல்லவில்லை. ஆனால் ஆதவன் கூறும் கதை நடப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இல்லை.
தர்க்கம் அற்ற கதை எனும் கதையில் தாசில்தார் அலுவலகம், நீதிமன்றங்களில் மர்மமாகப் பிணங்கள் வந்து விழுகின்றன. பதினேழு பிணங்கள் தாசில்தார் அறையில் கண்டெடுக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றுப் படுகொலையில் உயிர் நீத்தோர் எண்ணிக்கை என்னவென்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதையை நகர்த்திச் செல்லும் அபிதா, பாகீரதி, கிரிஜா, அபிராமி ஆகியோர் துப்புரவுத் தொழிலாளிகள். இக்கதையில் இடம்பெறும் பெயர்கள், இடையீடாக வரும் பிராமண மொழி வாசகம் பல்லிடை நெசவுப் பிரதியாகக் கதையை மாற்றுகிறது.
ஆதவனின் பிற்காலக்கதைகளில் லிபரல் பாளைய அதிபர் மாண்புமிகு இரும்பு ஆண்மணி செல்லம் கொஞ்சப்படுகிறார். இந்தச்செல்லம் அவர் பெருமைக்கு அழகல்ல என்பர் சான்றோர்.
இனி ஆதவன் எழுதப்போகும் கதைகள் இந்தத் தளத்திலிருந்து மேலேறும்போது அடக்குமுறையைச் சந்திக்க நேரிடும் என கோமூத்ரி சாஸ்திரம் சொல்கிறது. எல்லா வகைக்கதைகளையும் பரீட்சித்துப் பார்த்துவிட்ட ஆதவனுக்கு இன்னும் வேறுவிதமாக எழுதுவது பெரும் சவாலாக இருக்கும். அதற்கு நாம் ஏன் கவலைப் படவேண்டும். ஆதவனின் ஊற்று வற்றாது என்கின்றார் ஸ்ரீலஸ்ரீ லெப்டானந்தா ஸ்வாமிஜி.
க.
காசிமாரியப்பன்
தமிழ்
இணைப்பேராசிரியர்
தந்தை
பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி
திருச்சிராப்பள்ளி
– 620 023.
9965029909
meemariyappan@gmail.com