வெள்ளி, ஏப்ரல் 25

ஜனநாயகம் என்பது எங்கு வேண்டுமானாலும் விளையக்கூடிய தாவரமல்ல- புதுவிசை - 41வது இதழ்


#னது அறிவின் ஒரு துளியாக இந்தியாவுக்கு  அரசியல் சாசனத்தை வழங்கிச்சென்ற அம்பேத்கர் ‘ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம்’ என்றார். சமுதாயத்தில் கடும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதிருத்தல், எதிர்க்கட்சி செயல்படுவதற்கான சுதந்திரம், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் நிர்வாகத்திலும் சமத்துவப்போக்கை பேணுதல், அரசியல் சாசன நீதிமுறையைக் கடைபிடித்தல், பெரும்பான்மையினரின் ஆட்சியிலும் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எப்போதும் உணருமளவுக்கு சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மை இல்லாதிருத்தல், வாழ்வின் பரந்த அம்சங்களில் சட்டத்தின் குறுக்கீடின்றி மக்கள் தாமாகவே ஒரு தார்மீக ஒழுங்குடன் இயங்குதல், யாருக்கு எத்தகைய அநீதி இழைக்கப்படினும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்படாதவர்களின் மனசாட்சி வீறுகொண்டு கிளர்ச்சியுறுதல் ஆகிய முன்நிபந்தனைகளின் பேரிலேயே ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை உலகளாவிய நிகழ்வுகளிலிருந்து அம்பேத்கர் தொகுத்துக் கூறினார். ஆனால் இந்த முன்நிபந்தனைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என தன்னை அழைத்துக்கொள்கிறது.

ஊராளுமன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரைக்குமாக நடைபெறும் தேர்தல்களில் குடிமக்கள் வாக்களித்து  ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே ஜனநாயகம் எனில்  இலங்கையும்கூட சிறந்த ஜனநாயக நாடு என்று பிழையாக  பொருள்கொள்ளப்பட்டுவிடும். ஆகவே தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஓரம்சம்தானேயன்றி அதுவே ஜனநாயகத்தின் முழுப்பொருளல்ல. அந்தத் தேர்தல் ஜனநாயகமும் கூட இந்தியாவில் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில்  ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும்  கும்பலிடம்/ குடும்பங்களிடம் அரசதிகாரத்தையும் ஒப்படைப்பதற்காக பெரும்பான்மையினரின் ஒப்புதலைப் பெற்றுத்தரவே கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒப்புதல் சாதி, மதம், பாலினம், பணபலம் மூலம் பெறப்படுகிற கேவலத்தை மறைக்கவே தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் அவ்வப்போது ‘கெடுபிடி’ ‘கிடுக்கிப்பிடி’ நாடகமாடுகின்றன.

‘ஜனநாயகம் என்பது எங்கு வேண்டுமானாலும் விளையக்கூடிய ஒரு தாவரமல்ல’ என்கிற அம்பேத்கரின் வாசகம், ஜனநாயகம் என்பதைத் தேர்தலுக்கு அப்பால் விரித்துப் பொருள் கொள்ளவும், ஜனநாயகம் தழைப்பதற்கான சூழலை உருவாக்கிடும் போராட்டத்தினை முன்னெடுக்கவும் நம்மைத் தூண்டுகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தால் செறிவூட்டப்பட்ட ஜனநாயகச் சிந்தனையானது ஒரு வாழ்வியல் பண்பாக - அன்றாட நடப்பியல் வாழ்வில் சக மனிதர்களோடு கடைபிடிக்கக்கூடியதாக  பயிற்றப்படும் போதே இந்தியச் சமூகத்தில் தேர்தலும் ஜனநாயகமாக நடைபெறும் என்கிற புரிதலைத் தருகிறது.

# ஆதிக்கச்சாதியினர் முதலில் தலித் மற்றும் பழங்குடியினரின் வாக்குரிமையை மறுத்தனர். பிறகு தலித்துகளும் பழங்குடிகளும் தமக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டி யிடுவதைத் தடுத்தனர், தடுக்கமுடியாத நிலையில் தமக்கு உகந்தவர்களைக் களமிறக்கி தேர்தலைச் சீர்குலைத்தனர்.  இப்போது 2013 டிசம்பரில் தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்’ நோடா பொத்தானை அதிகளவில் அழுத்தி தலித் / பழங்குடி வேட்பாளர் எவருக்கும் வாக்களிக்காமல் தமது ஒவ்வாமையை வெளிப்படுத்தியுள்ளனர். வாக்காளரை அதிகாரப்படுத்தக்கூடிய சீர்திருத்தம் என்று புகழ்ந்துரைக்கப்பட்ட NOTA ( None of  The  Above மேற்கண்ட வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்கவில்லை) நோடா- அது அறிமுகப் படுத்தப்பட்ட முதல் தேர்தலிலேயே- தலித்/ பழங்குடிகளுக்கு எதிரான மற்றுமோர் ஆயுதமாக - தீண்டாமை வடிவமாக சாதியவாதிகளால் கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட அணிதிரட்டலோ புறத்தூண்டுதலோ இன்றி தலித் மற்றும் பழங்குடியினர் மீது இயல்பாகவே அவர்களுக்குள் மண்டிக்கிடக்கும் வெறுப்புணர்வின் வழிகாட்டுதலில் அனிச்சையாகவே அவர்கள்  நோடாவை சாதியநோக்கில் பயன்படுத்தியுள்ளனர்.  தலித்/ பழங்குடிகள் தமக்கான பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்று ஒதுங்கி நிற்கிற ஆதிக்கச்சாதியினரின் இந்த மனநிலை, அம்பேத்கர் தீண்டப்படாதவர்களுக்கென கோரிய தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை ஆகியவற்றின் நியாயத்தையும் அவற்றை மீளெடுக்கும் தேவையையும் உணர்த்துகிறது.

1996ல் பதானிதோலாவில் 21 பேர், 1997ல் லக்ஷ்மண்பூர் பாதேயில் 58 பேர், 2000ல் மியாப்பூரில் 10 பேர் என்று தலித்துகள் கூட்டாக கொல்லப்பட்ட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் அனைவரையும் பீகார் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஏற்கனவே 1968ல் வெண்மணியில் 44 தலித்துகளை எரித்துக்கொன்ற அனைவரையும் விடுவித்த சென்னை உயர்நீதிமன்றம்தான் இதற்கு முன்னோடி. இப்போதோ, 1991ல் சுண்டூரில் 13 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் ஆந்திர உயர் நீதி மன்றம் விடுவித்துள்ளது. எரித்தும் வெட்டியும் சித்ரவதை செய்தும் தலித்துகள் கொல்லப்பட்டிருக்கும் உண்மைக்கும், போதுமான ஆதாரங்களைத் திரட்டி குற்றத்தை நிரூபிக்க காவல்துறை தவறுவதும் அதையே காரணமாகக் காட்டி சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்குத் தந்து அவர்களை நீதிமன்றம் விடுவிப்பதுமாகிய இந்த நாடகத்திற்கும் நாமெல்லோரும் பார்வையாளர்கள் அல்லது மௌன சாட்சிகள்.

 - ஆசிரியர் குழு, புதுவிசை 

41 வது இதழில்

இந்திய ஊடகங்கள்: ஒரு பார்வை
 - தமிழில்: இரா.சிசுபாலன்

புதியமாதவி தமிழாக்கத்தில்
 நான், நாம்தேவ் பேசுகிறேன் 
நாம்தேவ் தாசல் கவிதைகள்
மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் 

மிசோக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
- வி.ரத்னமாலா

இந்து மதம்: சில புதிர்களும் புரிதல்களும்
- . முத்துமோகன்

சூழலியல் கரிசனமும் சமூகக் கரிசனமும்
- அருண் நெடுஞ்செழியன்

நெஞ்சுக்கொம்பு - .நவீன்

மேடு நோக்கிப் பாயும் நீர் :
வறுமையின் அரசியல் பொருளாதாரம்
- .வி. வெங்கடேஸ்வரன்

மார்க்ஸ் இன்று - எரிக் ஹோப்ஸ்பாம்
தமிழில்: சா. சுரேஷ்

 சர்வாதிகார சாதியரசியல் - கோ.ரகுபதி

கண்டிச் சீமையிலே - இரா.சடகோபன்

ஓவியங்கள்: ஜெகன், கார்த்தி

முகப்போவியம்: கார்த்தி

பிரதிகளுக்கு:
ந.பெரியசாமி  9487646819




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...