செவ்வாய், செப்டம்பர் 25

ஒசூரெனப்படுவது யாதெனின்... 2 ஆதவன் தீட்சண்யா


ருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதிக்கு எதிரே கதிர்வேல் என்பவர் ஒரு தையல் கடையைத் திறந்த சிலநாட்களிலேயே எங்களுடைய நண்பர் குழாம் அவரோடு பரிச்சயம் செய்துகொண்டது. திரையில் வரும் நாயகர்களின் ஸ்டைல்களை எல்லாம் நடப்பில் கொண்டுவரும் நவீன பாணிகளின் தூதுவர்களாகிய முடி திருத்துநர்களும் தையல்காரர்களும் கல்லூரி மாணவர்களின் வாழ்வில் வகிக்கும் பாத்திரத்தை நன்கு உணர்ந்திருந்த நாங்கள் அவருடைய நட்பை முக்கியமானதாகக் கருதினோம். ஒரே பேன்ட்டை பெல்ஸ், டைட்ஸ், நேரோ என்று காலத்துக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கும் நுட்பங்கள் அறிந்த ஒருவர் எங்களிடம் மாட்டிய பிறகு, எங்களிடம் இருந்த ஒன்றிரண்டு உடைகள் பல்வேறு வடிவங்களை எடுத்தன. கிட்டத்தட்ட 'அட்டக்கத்தி' படத்தின் கதாநாயகன் தினாவைப் போன்ற ஆறேழு பேர் சேர்ந்தால் என்னென்ன கூத்தும் குளறுபடிகளும் நடக்குமோ அவற்றை எல்லாம் செய்யக்கூடிய எங்கள் குழாம் மீது அவரும் பிரியத்தோடுதான் இருந்தார். விடுதியில் இருந்து இரண்டுமுறை சஸ்பெண்டும் ஒருமுறை நிரந்தர நீக்கமும் செய்யப்பட்ட எங்களுக்கு அவருடைய கடைதான் போக்கிடமாக இருந்தது. பேன்ட், சர்ட் பிட்டுத் துணிகளை மொத்தமாக வாங்கி வந்து தன்னுடைய தையற் கடையைத் துணிக்கடையாகவும் விஸ்தரிக்க அவர் விரும்பியபோது ஏற்கனவே 'ஒ...சூ...ர்...’ வரைக்கும் போய் துணி மணிகள் கொள்முதல் செய்த அனுபவம் எனக்கு மட்டுமே வாய்த்திருந்தபடியால் நான் அவருக்குச் சில பல ஆலோசனைகளை வழங்க வேண்டியதாயிற்று. இப்படியே பிட்டுகளை விற்றுச் சிறுகச் சிறுகச் சேர்த்து தருமபுரி மாவட்டத்திலேயே மிகப்பெரிய துணிக்கடை (அல்ல) துணிக்கடல் முதலாளியாகி உழைப்பால் உயர்ந்த உத்தமர் வரிசையில் கதிர்வேல் பேட்டி கொடுக்கும்போது என் பெயரையும் நன்றியோடு நினைவுகூர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.    

கடைசியில் ஒரு சுபயோகம், சுபமுகூர்த்தம் கூடிய நன்னாளில் நாங்கள் ஒசூருக்குப் பயணப்பட்டோம். அண்ணா போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக இருந்த என்னுடைய தாய்மாமன் கோவிந்தசாமிக்கு ஒசூர் அத்துப்படி என்பதால் அவரும் எங்களோடு வந்து இந்தக் கொள்முதலுக்கு உதவினார். அன்றைக்கும் ஒசூரில் மழை கொட்டிக்கொண்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே இருட்டு மீண்டும் ஊரின்மீது கவிந்துவிட்டதைப் போன்றிருந்தது. நனைந்துகொண்டே போய் பேருந்து நிலையத்தின் பின்புறத்துக் கட்டடத்தில் இயங்கிவந்த பிரிமியர் மில்லின் ஷோரூமில் வேண்டிய மட்டும் துணி பிட்டுகளை வாங்கினோம். அந்தச் சந்தோஷத்தோடு கடையின் மாடியில் இருந்த ஒரு ஹோட்டலில் (செலக்ட்?) புரோட்டாவும் கோழிக்கறியும் சாப்பிடும்போது நான் அந்த கீத்துக் கொட்டகை சோத்துக் கடையை நினைத்துக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்து நூறுமீட்டர் தூரம்கூட தள்ளிப்போகாமல் திரும்பிவிட்டாலும் அது எனது இரண்டாவது ஒசூர் பயணம் என்பதுதான் வரலாறு.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி விடுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தங்கிப் படித்துவந்தாலும் ஓரிருவர் தவிர மற்றவர்கள் சாதி ரீதியாகவே அறைகளையும் நண்பர்களையும் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். சாதி ரீதியாகப் பிரிந்து இருக்கும் குடும்பங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் கிளம்பிவந்திருக்கும் இந்த மாணவர்கள் சாதியைத் துறந்துவிட்டோ மறந்துவிட்டோ சமத்துவம் பேணுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அறை ரீதியிலான இந்தப் பிரிவினை, சாதி ரீதியானதாக இருந்தது, யாருக்கும் உறுத்தவே இல்லை. 'ப' வடிவிலான விடுதி இருவகிடாகப் பிரிந்திருப்பது இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. உணவுக்கூடமும் வகுப்பறையும் ஒன்றுகூடும் இடங்களாக இருந்தபோதிலும் இருக்கைகள் சாதிரீதியில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏற்கெனவே நிலவிய இந்த எழுதப்படாத விதிகளுக்கேற்பவே நான் 44- ம் எண் அறைவாசியாகி இருந்தேன்.                                                                                                                      ஊர்களைப் போலவேதான் இந்த விடுதியும். தனிநபர்களுக்கு இடையிலான சிறு சிறு பிரச்னையும்கூட ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையேயோன பிரச்னையாக இங்கு மாறிக்கொண்டு இருந்தது. இந்தப் புகைச்சல் ஒருநாள் கடும் மோதலாக வெடித்து கடைசியில் விடுதியும் கல்லூரியும் இழுத்து மூடப்பட்டன. பெரும் சேதாரங்களை விளைவித்த இந்த மோதல் விடுதியோடு முடிந்துவிடாமல் ஒட்டப்பட்டி, அம்பேத்கர் தெரு, கோல்டன் ஸ்ட்ரீட், ராஜாபேட்டை என்று அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் எதிரொலித்தது. தப்பித்து ஊர்களுக்கு ஓடும் மாணவர்கள் இங்கெல்லாம் தடுத்து விசாரிக்கப்பட்டு சாதி அடிப்படையில் தாக்கப்பட்டார்கள் அல்லது தைரியம் தரப்பட்டார்கள். நானும் சில நண்பர்களும் இந்தப் பகுதியினரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக ரயில்பாதையிலேயே அதியமான்கோட்டைவரை நடந்துபோய் அங்கே பஸ் ஏறி அவரவர் ஊர்களுக்குத் தப்பிச் சென்றோம்.

சில நாட்களுக்குப்பின் மீண்டும் விடுதி திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பகை முகாம்களைப்போல பிரிந்து இருந்தார்கள். யார்முகத்திலும் நட்பு இல்லை. மனதில் இல்லாதது முகத்தில் எப்படி வரும்? உணவுக் கூடத்தில் நிலவிய இறுக்கமும் அமைதியும் அச்சமூட்டுவதாக இருந்தது. ஒருவரோடு ஒருவர் பேசாமலே ஒருவர் குரல்வளையை மற்றவர் கடித்துவிடுவார்களோ என்பதுபோல் இருந்தது நிலை. அப்போதுதான் விடுதிக்கு அருகாமையில் இருந்த வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்த வணிகவரித்துறை ஊழியர் டி.சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.எம்.ஹரிபட் ஆகியோரது முன் முயற்சியில் எஸ்.திருப்பதி, ஆதிமூலம், வேலுச்சாமி, மாதுதயாளன், நான் ஆகிய ஐவரும் இணைந்து 'இந்திய மாணவர் சங்க அமைப்புக் குழு' என்ற பெயரில் மாணவர் ஒற்றுமையை வலியுறுத்தி துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டோம். பாரபட்சமின்றி இருதரப்பு மாணவர்களிடம் விநியோகித்தோம். ஊறிக் கெட்டித் தட்டிப்போய் கிடக்கிற சாதிய மனங்களை ஒரு துண்டறிக்கை என்ன செய்துவிட முடியும்? என்று எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. சரியாகச் சொன்னால், யோசிக்கத் தெரிந்து இருக்கவில்லை. சாதியம் பற்றிய எவ்விதப் புரிதலும் இன்றி, மாணவர்களுக்குள் ஒற்றுமை தேவை என்கிற நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்களால் எவ்வளவு யோசிக்க முடியுமோ அந்த அளவுக்குத்தான் யோசித்தோம். யாராவது ஒருவர் பேச்சைத் தொடங்கித்தான் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் பேசினோம். 'ஃபர்ஸ்ட் இயர் பசங்களுக்கு, அதுவும் எஸ்.சி. பசங்களுக்கு வந்த நாட்டாமையைப் பார்த்தியா?’ என்று இரு தரப்பிலிருந்தும் வந்த வசைகளையும் மிரட்டல்களையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஞாயிற்றுக் கிழமையொன்றில் மாணவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவதற்காக விடுதிக்கு வந்திருந்த யாரோ ஒரு ஈழப் போராளியிடம் கொடுத்து அனுப்புவதற்காகச் சாப்பாட்டுத் தட்டை ஏந்திப்போய் ஒவ்வொரு அறையின் கதவையும் தட்டி நிதி திரட்டினோம். வலியப்போய் கை குலுக்குவதால் ஏற்பட்ட சில அவமானங்களை மாணவர் ஒற்றுமைக்காக மிகப்பெரும் தியாகம் செய்வது போன்ற நினைப்பில் தாங்கிக்கொண்டோம்.

சிறைக் கைதிகளுக்குச்  செலவழிப்பதைவிடவும் குறைந்த அளவேயான தொகையைத்தான் வளர் இளம் பருவத்தில் இருந்த மாணவர்களான எங்களுக்காக அரசாங்கம் செலவிட்டது. மாணவர்களுக்காகச் செலவிடப்படும் தொகையை அறிவார்ந்த ஒரு எதிர்காலச் சந்ததிக்கான முதலீடாகக் கருதும் அரசியல் ஆர்வம் அற்றதாக இருந்தது அரசாங்கம். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு எப்போதும் தரமற்றதாகவே இருந்தது. புழுக்கள் செத்து மிதக்கிற, நாயும் முகரத் துணியாத அளவுக்கு நாற்றமடிக்கிற கொட்டையரிசி சோற்றைத் தின்றுதான் நாங்கள் உயிரும் உடலும் வளர்த்துப் படிக்கவேண்டி இருந்தது. வெள்ளைக் குண்டு (இட்லி), கடலை ரசம் (சட்னி), தூக்க மருந்து என்று கேலி செய்தாலும் அவற்றைத் தவிர வேறு உணவேது எங்களுக்கு? இத்தனைப் பிரச்னைகள் பொதுவாக இருப்பதை உருக்கமாகச் சுட்டிக் காட்டினால் 'மாணவர் சமுதாயம்' என்ற ஒற்றை அடையாளத்தின்கீழ் எல்லோரும் ஒன்றுபட்டுவிடுவார்கள் என்கிற குழந்தைத் தனமான புரிதலுடன்கூடிய எங்களுடைய முயற்சிகள் உடனடிப் பலன் எதையும் தந்துவிடவில்லை. அதற்கு அப்புறமும் மாணவர்கள் சாதியாகத்தான் இருந்தார்கள் என்றாலும் அவர்களிடம் ஒருவகையான  இணக்கம் உருவாகிவிட்டிருந்தது. அந்த இணக்கம் எங்களால் மட்டுமே வந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான முதல் தப்படி எங்களுடையது. ஆனால் அந்த இணக்கம் மீண்டும் ஒரு மோதல் உருவாகுவதைத் தடுக்கும் அளவுக்குத்தான் இருந்ததே அன்றி சாதிப் பிரிவினையைக் கைவிடுமாறு மாணவர்களைத் தூண்டும் வலுவற்று இருந்தது.

காலம் எங்களை வெவ்வேறு இடங்களுக்குக் கூப்பிட்டுக்கொண்டது என்றாலும் பயணங்களினூடே அந்த விடுதியைக் கடக்கும்போது எல்லாம் நினைவுகள் அந்த மோதலின் மீது நிலை கொள்வதைத்  தவிர்க்க முடிவதில்லை. கல்வி அறிவு சாதியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பது மாதிரியான வாதங்களைக் கேட்கும்போது எல்லாம்  எனக்கு அன்றைய மோதல் சட்டென நினைவுக்கு வந்துவிடுகிறது. தடதடவென யாராவது கதவைத் தட்டினால், தாக்கிவிட்டு ஓடிப்போய் தாழிட்டுக் கொண்டவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக 20 -ம் எண் அறையின் கதவு உடைக்கப்பட்ட சத்தம் காதைக் குடைகிறது இப்போதும். (நெடுநாளைக்குப் பிறகு, இப்போது  போயிருந்தபோதும் அந்தக் கதவின் மேற்புறம் அதே ஒட்டுப்போட்ட  பலகையுடன் இருந்ததைப் பார்க்கமுடிந்தது.)  கல்லூரி மாணவர்களிடையே மோதல் என்று வரும் ஒருவரிச் செய்திகூட அன்றைய மனநிலையை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது. முன் தயாரிப்புடன் விறகுக் கட்டைகளையும் மிளகாய்ப் பொடியையும் சேகரித்து அறைகளில் பதுக்கி வைத்தவர்களாக ஒருதரப்பும் திடீர்த் தாக்குதலை கற்களை வீசி எதிர்கொண்ட மறுதரப்புமாக மாணவர் சமூகம் பிளவுபட்டுக் கிடந்தது எல்லாம் எங்கள் தலைமுறையோடு போனது என்று சொல்லி முடிக்கத்தான் ஆசை. ஆனால், ஒரு தலித் ஆயா சமைத்த சத்துணவைச் சாப்பிடக்கூடாது என்று தீண்டாமை வெறியேற்றி தம் குழந்தைகளை வளர்க்கும் இந்தச் சமூகத்தில் அப்படி ஒரு பொய்யைச் சொல்லத்தான் வேண்டுமா?

(சொல்வேன்...)

நன்றி: en.vikatan.com


வியாழன், செப்டம்பர் 20

ஒசூரெனப்படுவது யாதெனின்... 1 - ஆதவன் தீட்சண்யா


'ழை சன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு, எங்களுக்கு எங்களது பிழைப்பு மேலேயே...’ என்ற என்னுடைய கவிதைக்குப் பின்புலம் எங்களுடைய கூரைவீடுதான். அதை வீடு என்று நாங்கள் யாரும் அப்போது சொல்லிக்கொண்டதாக நினைவில் இல்லை. கொட்டாய் என்றுதான் சொல்வோம். கரும்புச்சோகை, தென்னங்கீத்து என்று எதுகொண்டு வேய்ந்தாலும் எளிதில் மக்கி கூளமாகிப் பொடியாக உதிரும் அந்தக் கூரையின் கீழ்தான் என் பால்யம் கழிந்தது. மழை பெய்யத் தொடங்கிவிட்டால் நனைவதற்கு நாங்கள் வெளியே செல்ல வேண்டியதில்லை. எங்களை எல்லாம் தனக்குள்ளே அனுமதித்துக் கொண்டதைப் போலவே மழையையும் அனுமதிக்கும் பெருந்தன்மை கொண்டதாக இருந்தது அந்தக்கூரை. மழைக் காலம் முழுவதும் சேக்கம் கண்டு ஓதமேறி ஈரத்தின் சில்லிப்பு விறுவிறுவென பரவிக் கிடக்கும் அந்தக் கொட்டாய்க்குள் அடுப்புத்திட்டு மட்டும்தான் சிலவேளைகளில் சூடாக இருக்கும். கணப்புக்காக நெருப்பு மூட்டச் சொன்னால் 'கஞ்சி காய்ச்சவே விறகில்லை, இதுல குளிர் காயணும்னு ஆசையப் பாரு’ என்று அம்மா முறைக்கும். 'கஞ்சி காய்ச்சத்தான் ஒண்ணுமில்லையே, அடுப்பைப் பத்தவெச்சா குளிராவது காயலாமில்ல’ என்பது பிள்ளைகளான எங்களுடைய முணுமுணுப்பாக இருக்கும்.

மழைமோடம் கழியும்வரை ஒவ்வொரு இரவும் கொடும் தண்டனைதான். மேலிருந்து சொட்டும் மழைக்கும் கீழே பரவிக்கிடக்கும் ஈரத்துக்கும் நடுவிலே படுத்திருப்பது ஒரு கொடிய வாதையே. வெடவெடக்கும் குளிரைத் தாங்கமுடியாமல் திடீர்திடீரென உடம்பு  சிலிர்த்து அடங்கும். ஈரம் சேராமல் கடுத்துக்கடுத்து ஊறிவிடும் சிறுநீரைக் கழிக்க சவ்வுக் காகிதத்தைக் கொங்காடையாக மாட்டிக்கொண்டு வெளியே வந்து போனாலும் அரைவாசியாவது நனைந்துதான் கொட்டாய்க்குள் திரும்புவோம். விரைத்தும் மரத்தும் களைத்தும் போய் அனத்திக்கொண்டே ஒருவித மயக்கம் போலத்தான் தூங்கிப்போவோம். காத்துக்கும் மழைக்கும் தாங்குகிற தெக்கத்திக் கவுண்டர்களின் கொட்டாய்களைப்போல நெல்லந்தாள் படர்த்தி அடர்த்தியான கூரை வேய வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் மிகப்பெரும் கூட்டுக் கனவாக இருந்தது. ஆனால், திடுமென்று ஒருநாள் எங்கப்பா, புது வீடு கட்டப்போவதாக அதுவும் பில்லவீடு (ஓட்டுவீடு) கட்டப்போவதாகக் கூறியபோது நாங்கள் அப்போதே அந்த கட்டப்படாத புதுவீட்டுக்குள் குடிபோய்விட்டதாக மகிழ்ச்சிகொண்டோம். எங்களைப் பொறுத்தவரை, கொட்டாய்க்கும் வீட்டுக்குமான வித்தியாசம் கூரைக்கும் ஓட்டுக்குமானதாக மட்டுமல்ல... ஓதமேறாத, ஈரமண்டாத காரை மெழுகிய தரையாகவும் இருந்தது.   

வீடுகட்டப் போவதாகச் சொல்லிவிட்டாரே தவிர அதற்கான பணமொன்றும் எங்கப்பாவிடம் இல்லை. அவர் வீட்டுவசதிக்கடன் வழங்கும் சொசைட்டி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார். அந்தக் கடன்தொகை கைக்கு வரும் நாளில் அந்தத் தொகையில் இருந்து எனக்கு ஒரு பேன்ட், சர்ட் எடுத்துத் தருவதாக அவர் சொன்னதிலிருந்து என்னுடைய கனவில் பில்லவீட்டுக்குப் பதிலாக புதிய பேன்ட்டும் சட்டையும் வரத்தொடங்கின. காக்கி, வெள்ளை பள்ளிச்சீருடை தவிர்த்து கலரில் ஒரே ஒரு மாற்றுடுப்பு வைத்து இருந்த ப்ளஸ் டூ மாணவன் ஒருவனது வாழ்வில் புதுத்துணி வரப்போவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஒரே பாட்டுக்கு 14முறை உடுப்பு மாற்றிக்கொண்டு ஆடும் சினிமாக் கதாநாயகர்கள் கூட, 'உன் புது உடுப்பைக் கொடேன், ஒருவாட்டி போட்டுப் பார்த்துட்டு தந்துடுறேன்' என்று என்னிடம் கெஞ்சுவதுபோல் எனக்கு கனவு வந்தது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் கனவெல்லாம் நனவாகும் ஒருநாளும் வரத்தான் செய்தது. கடன் தொகையின் முதல் தவணையை வாங்குவதற்குச் சென்ற எங்கப்பா என்னையும் உடன்வருமாறு அழைத்தபோது நான் திக்குமுக்காடிப் போனேன். தூக்கமும் முழிப்புமாக விடிய விடிய உருண்டு கிடந்துவிட்டு அதிகாலையில் கிளம்பினோம். இன்றைக்கெல்லாம் பிசாத்துக் காசு என்று சொல்லத்தக்க  சொற்பத்தொகையை வாங்குவதற்கு நாங்கள் அலமேலுபுரத்தில் இருந்து ஐந்துமணி நேரப் பயணம் செய்து மாவட்டத்தின் கடைக்கோடியில் இருந்த ஒசூருக்குப் போகவேண்டி இருந்தது. ஆமாம், அங்குதான் அந்த சொசைட்டி இருந்தது. ஆனால், புதுத்துணியின் மீதான கிளர்ச்சியில் இதுவெல்லாம் ஒரு தூரமா என்பதைப் போல் இருந்தது என்னுடைய மனநிலை.

வழிநெடுக ஓசூருக்கும் தனக்கும் இருந்த தொடர்புகளைப் பற்றி துண்டுத் துண்டாக எங்கப்பா என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார். தளி, கெலமங்கலம், பேரண்டப்பள்ளி காடு, அத்திப்பள்ளி பார்டர் என்று பல இடங்களிலும் ரோடுபோடும் வேலைக்காகத் தன் தாயாரோடு வந்திருந்தது, குந்துமாரனப்பள்ளி என்கிற கிராமத்திலும் மத்திகிரி கால்நடைப் பண்ணையிலும் கால்நடைத்துறை பணியாளராக இருந்தது, பண்ணைக்குச் சொந்தமான தோண்டியைக் கிணற்றில் போட்டுவிட்டதற்காகத் திட்டிய மேற்பார்வையாளரை அடித்துவிட்டு 'எங்கம்மாகிட்ட 100பேர் வேலை செய்யறாங்க... நான் உன்கிட்ட கைகட்டி நிக்கணுமா?’ என்று பீற்றிவிட்டு வேலையை விட்டு வெளியேறியது... என்று நினைவைத் திரட்டித் திரட்டிச் சொல்லிக்கொண்டு வந்தார். ' நீ பதினோரு மாசக் கொழந்தையா இருக்கிறப்ப உன்னையும் அம்மாவையும் இங்கு கூட்டிவந்து அக்கொண்டப்பள்ளியில் வீடெடுத்து கொஞ்சகாலம் தங்கி இருந்தோம். அன்னிக்குக் கொஞ்சம் சுதாரிச்சு இருந்திருந்தா, இன்னிக்கெல்லாம் ஒரு எல்.ஐ (லைவ்ஸ்டாக் இன்ஸ்பெக்டர்) ஆகி இருப்பேன். நம்ம குடும்பம் இவ்வளவு கஷ்டத்துக்கு ஆளாகி இருக்காது’ என்று காலங்கடந்து பொங்கிய ஞானத்தின் அலைக்கழிப்பு தாளாது கண்களை மூடிக்கொண்டார். நானோ கண்களை அகலவிரித்து சாலையின் இருமருங்கும் அடர்ந்திருந்த காடுகளையும் அடுக்கடுக்கான மலைகளையும் ஒருவிதப் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு வந்தேன். சமதளத்தில் இருந்த எங்களுடைய பயணம் ஒரு மலைப் பயணமாக மாறிவிட்டிருந்தது. இளப்பு நோவெடுத்த ஒரு முதியவரைப்போல திணறித்திணறி மேடும் பள்ளமுமான சாலையில் பஸ் உருளத் தொடங்கியது. சாலையோரத்து  வயல்களில் விளைந்திருந்த முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிச் செடிகளை அவற்றின் பெயர் தெரியாமலே அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். ஹள்ளி, பள்ளி என்று முடியும் சிறுசிறு ஊர்களின்  ஊடாக நாங்கள் ஓசூரை நெருங்கும்போது மழை பிடித்துக் கொண்டது.  'இந்த ஓசூர் பக்கமெல்லாம் இப்படித்தான், மழ பேஞ்சிக்கிட்டே இருக்கும்... எப்பவும் ஊதக்காத்து விசுவிசுனு அடிக்கும்’ என்றவாறே தன்னுடைய மேல்துண்டை விரித்து எனக்குப் போர்த்திவிட்டார் அப்பா. வெடவெடக்க வைத்துக் கொண்டு இருந்த அந்தக் குளிருக்கு இந்தத் துண்டு எம்மாத்திரம்?  இரவை நோக்கி விரையும் ஒரு பகலைப்போல இருண்டுகொண்டிருந்த சாலையில் மின்னாம்பூச்சியைப் போல மங்கலாக ஒளிர்ந்தபடி ஊர்ந்து சென்ற பஸ் ஓசூரில் எங்களை இறக்கிவிட்டபோது காலை 11 மணி.

எனக்குப் புதிய உலகத்துக்கு வந்துவிட்டதுபோல் இருந்தது. பட்டப்பகலில் இருள் அண்டியிருந்த ஒரு ஊரை இப்போதுதான் நான் பார்க்கிறேன். எதிர்ப்படும் மனிதர்களில் அனேகரும் ஸ்வெட்டரும் குல்லாவும் போட்டுக் கொண்டோ எதையாவது போர்த்திக்கொண்டோ இருப்பதைப் பார்க்கவே எனக்கு விநோதமாக இருந்தது. மழை தணிந்து நசநசக்கும் தூறலின் ஊடாகக் கிளம்பினோம். மேட்டிலிருந்து மழைநீர் ஆற்றைப்போல ஓடிவந்துகொண்டு இருந்த அந்தச் சாலையின் முடிவில் தாலுகா ஆபீஸ் இருந்தது.  அந்த வளாகத்திலேயே இருந்த காவல் நிலையத்தில் காவலராக இருந்த தன்னுடைய  தாய்மாமன் மகன் கிருஷ்ணனைப் பார்த்து அவரையும் அழைத்துக்கொண்டு சொசைட்டிக்குப் போவதுதான் எங்கப்பாவின் திட்டமாக இருந்தது. திடீர் விருந்தாளிகளான எங்களை வரவேற்ற கிருஷ்ணன் மாமா,  அவசர அவசரமாக எங்களை வளாகத்துக்கு வெளியே இருந்த புளியமரத்தடி கொட்டகை ஒன்றுக்கு அழைத்துப்போனார். அங்கே இருந்த நடுத்தர வயசாளி ஒருவரிடம் 'திடீர்னு ஒறம்பரைங்க வந்துட்டாங்க. எப்படியாச்சும் அட்ஜஸ்ட் பண்ணி இவங்களுக்கும் ரெண்டு சாப்பாடு தரணும்’ என்று மிகவும் நயமாக வேண்டிக்கொண்டார். 'இப்படி திடீர்னு சொன்னா நான் எப்படி அட்ஜஸ்ட் பண்றது?’ என்று சலித்துக்கொண்ட கடைக்காரர், 'கேரன்ட்டியா சொல்ல முடியாது... எதுக்கும் ஒருமணிக்கு வந்து பாருங்க’ என்றார். லோன் வாங்குவதை விடவும் துணி வாங்குவதைவிடவும் மத்தியானம் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்பதாக என்னுடைய கவலை அப்போது மாறிவிட்டிருந்தது. காலை ஆகாரத்தை வரும் வழியில் தருமபுரியில் முடித்துக் கொண்டுதான் வந்திருந்தோம் என்றாலும் எனக்கு அப்போதே பசிப்பதுபோல் இருந்தது.  

முன்கூட்டியே சொன்னால்கூடக் கூடுதலாக இரண்டுபேருக்குச் சாப்பாடு கொடுக்க உத்திரவாதம் சொல்லமுடியாத ஒரு கீத்துக்கொட்டாய் சோத்துக்கடை இருந்த அந்த தாலுகா ஆபீஸ் வளாகத்தைச் சுற்றி மட்டுமே இன்றைக்கு சின்னதும் பெரியதுமாக 20-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை பரபரவென இயங்குகின்றன. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்கான கௌரிசங்கர், மீனாட்சிபவன், ஜனனி, அறுசுவை போன்ற பெரிய ஹோட்டல்களை இன்றைக்கு நகரத்தின் பல பகுதிகளிலும் காணமுடிகிறது. மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றும்கூட வந்துவிட்டது. பிக் சிக்கன், மெக்டோனால்ட் மாதிரியான பன்னாட்டு ஓட்டல்களின் கிளைகளும்கூட இப்பகுதிக்கு வந்துவிட்டன. ஆனால், மழைமோடத்து இருளுக்குள் மங்கித்தெரிந்த ஊரில், அந்த இருளின் ஒருபகுதிபோல என் மனதில் பதிந்துவிட்ட அந்த கீத்துக்கொட்டகை சோத்துக்கடையின் சித்திரம் மட்டும் 32 வருடங்களுக்குப் பிறகும் இன்னும் அன்று பார்த்தக் கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே உருக்குலையாமல் இருக்கிறது. கூரையில் இருந்து ஒழுகி இலையில் விழுந்த மழைநீரையும் சேர்த்துப் பிசைந்து உண்ட அந்தக் கணத்தில், ஒருவேளை அந்த சோத்துக்கடையை நான் எங்களது கொட்டாயாகவே உள்வாங்கி இருக்கக்கூடும். 
                                                                                                                                                                                                                                           பகிர்வேன்...                                                                                                                                           நன்றி: http://en.vikatan.com

செவ்வாய், செப்டம்பர் 18

கரை தட்டியவர்கள் -ஆதவன் தீட்சண்யா




தோ வந்துவிட்டன முப்படைகளும்
ஐந்தாம்படையும்கூட அவர்களுடனேயேதான் இருக்கிறது

"...இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்ப நிலவியது" என்று
எம் உயிர் கரையும் ஒவ்வொரு நொடியையும்
துல்லியமாய் ஒளியொலி பரப்பிட 
24X7 செய்திச்சேனல்களும் குவிந்துவிட்டன

நைந்த சொற்களை இரந்து
முன்கூட்டியே எழுதிவைத்திருக்கும்
கண்டன அறிக்கையோடு காத்திருக்கிறார்கள்
கட்சித்தலைவர்களும்கூட

கணினித்திரையே கருகிப்போகுமளவுக்கு
அரசியல்வாதிகளைத் திட்டி நிலைத்தகவல் எழுதிவிட்டு
அடுத்த பரபரப்புக்குத் தாவும் அவசரத்துடன் 
முகப்புத்தகப் போராளிகளால் திரட்டப்படுகின்றன
கார்ட்டூன்களும் வசைகளும்

ஏதொன்றையும் பிராஜக்டாக காட்டி
பெருந்தொகைப் பெயர்த்துவிடும் ஆசையில் 
ஏதேதோ பெயர்களில்  பதுங்கியலையும் என்.ஜி.ஓக்கள்
எம்மிலும் தீவரமாய் பேசுகின்றன எம்மைப்பற்றி

கறிகாய் வாங்கி ஆக்கியவித்து தின்றுவிட்டு
கவலைகொண்டதான பாவனையோடு வந்திருக்கும் இந்த ஆதவனோ
சந்தடிச்சாக்கில் எம்மைக் கச்சாப்பொருளாக்கி
கவிதையொன்றை யாத்துவிடும் எத்தனிப்பிலிருக்கிறான்

கடலிறங்கிப் போராடும் எமக்கான ஆதரவாய்
அவரவர் ஊரின் குளம்குட்டையில் இறங்கவோ
ஆங்காங்கே மணலுக்குள் புதையவோ  முயலாது 
கரையிலிருந்தே கர்ஜிக்கிறார்கள் இவர்கள்

கடல்மூழ்கிச் சாகும் எம்மை கணக்கெடுத்து அறிவிக்க
மறுகரையில் காத்திருக்கிறது அரசாங்கம்.



ஞாயிறு, செப்டம்பர் 16

டாக்டர்.அனில் ககொட்கருக்கு சில கேள்விகள் - விவேக் மொன்டீரோ, தமிழில்: எஸ்.செந்தில்

விவேக் மொன்டீரோ:
1977 முதல் மகாராஷ்டிராவில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) முழுநேர ஊழியர். இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். ஜைத்தாபூர் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் ‘கொங்கன் காப்போம் சங்கத்தின்’ செயற்பாட்டாளர். அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர். கருத்தியல் மற்றும் கணித இயற்பியலில் அமெரிக்க மாநில பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அணுசக்திக்கழகத் தலைவர் அனில் ககொட்கருக்கு www.dianuke.org வழியே அவர் எழுப்பியுள்ள கேள்விகள், வலிந்து கண்டுபிடித்த காரணங்களையும் வியாக்கியானங்களையும் முன்வைத்து அணு உலைகளை ஆதரிக்கிற யாவரையும் நோக்கியவை. தாடிக்கொரு சீயக்காய் தலைக்கொரு சீயக்காய் என்பதைப் போலவே அணுஉலை விசயத்தில் ஊருக்கொரு நிலைபாட்டை மேற்கொள்வதும் அபத்தமானது என்பதை உணர்த்தும் இக்கேள்விகள் இன்னும் எவராலும் எதிர்கொள்ளப்படாதவை.

அணுசக்தி குறித்து அதிகம் கேட்கப்படாத கேள்விகளுக்கு
http://thecolloquium.net ல் திரு.மொன்டீரோ அளித்த பதில்கள் இங்கு இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

I
டாக்டர்.அனில் ககொட்கர் நீங்கள் ஒரு விஞ்ஞானி, நானோ மத்பனின் சாதாரண குடிமகன். நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருப்பதால், ஜைத்தாபூர் அணுமின் திட்டம் பற்றிய என் கேள்விகளுக்கு பதில் தர தயாராக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொன்றாக கேட்கலாம் என்று இருக்கிறேன். முதலில் அணுக்கதிர்வீச்சு பற்றி சில கேள்விகள்.

1) இந்திய அணுமின் கழகம் சமீபத்தில் அணுக்கதிர்வீச்சு 'மனிதனின் நண்பன்' என்று ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டது. அணுக்கதிர்வீச்சு நமக்கு ஆபத்தானது என்பது உண்மைதானே? அதிக கதிர்வீச்சு இன்னும் அதிக ஆபத்துதானே?. அணுக்கதிர்வீச்சு நமக்கு புற்றுநோயை உண்டு பண்ணும் என்பதும் உண்மைதானே?. அதிக கதிர்வீச்சு நிறையபேருக்கு புற்றுநோயை உண்டுபண்ணும் என்பதும் உண்மைதானே?. அணுக்கதிர் வீச்சு மார்பகம், மூளை, கணையம், இரத்தம், கல்லீரல் போன்றவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் என்பதும் உண்மைதானே?. தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு முக்கியமாக ஆபத்தானது என்பதும் உண்மைதானே?. இதெல்லாம் உண்மை என்றால் இந்திய அணுமின் கழகம் இந்த புத்தகத்தை திரும்பப் பெறுமா? திருத்துமா?

2) மற்ற விபத்துகளைவிட, அணுவிபத்து ஆபத்தானதாக இருப்பது அணுக்கதிர்வீச்சால் தானே? போபால் விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். ஆனால் இன்னும் அப்பகுதியில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அருகில் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் 1986 செர்னோபில் விபத்துக்குப் பிறகு, ப்ரியபத் நகரை விட்டுச்சென்ற யாரும் இன்னும் திரும்பிப் போகமுடியவில்லை. ஒரு நகரமே காலியாக இருக்கிறது. இன்றும் விபத்து பகுதியைச் சுற்றி, 4000 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு, அணுக்கதிர்வீச்சு காரணமாக, யாரும் வாழமுடியாது என்று 'கொங்கன் காப்போம் சங்கத்தை' சேர்ந்த நிபுணர்கள் கூறினார்களே, அதுவும் உண்மைதானே டாக்டர்.ககொட்கர்?
இது உண்மையானால் இந்தத் தகவல்களை ஏன் உங்கள் விரிவுரைகளில் மறைக்கிறீர்கள்? 4000 சதுர கிலோ மீட்டர் என்பது ரத்னகிரி மாவட்டத்தில் பாதி. ரத்னகிரியை விட்டு நாங்கள் காலி செய்தாக வேண்டுமானால், நாங்கள் எங்கு செல்வது?
3) செர்னோபில் விபத்து நடந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னும், நகரைச் சுற்றி ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் சதுர பரப்பளவிற்கு,  விவசாயம் அனுமதிக்க படுவதில்லை என்பதும் உண்மைதானே. ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கிலோமீட்டர் சதுர பரப்பளவு என்பது கோலாப்பூர், சத்தாரா, சாங்கிலி, பூனா, சிந்துதுர்க், ரத்தின கிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களின் மொத்தப் பரப்ப ளவைவிட அதிகம். டாக்டர்.ககொட்கர், நம்முடைய மத்ப னில் செர்னோபில்போல ஒரு விபத்து ஏற்படுமானால், 100 ஆண்டுகளுக்கு விவசாயமும் பழ உற்பத்தியும் அழியுமானால்  நம் அருமை மகாராஷ்டிரத்தின் கதி என்ன?

4) டாக்டர்.ககொட்கர்,உங்கள் விரிவுரையில் , நீங்கள் ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும், அணுசக்தித்துறை பாடம் கற்றுக்கொள்கிறது என்று கூறினீர்கள். செர்னோபில் விபத்துக்குப் பிறகு பல பாதுகாப்பு அம்சங்கள் அணுசக்தி நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினீர்கள். பின்னர் ஏன் இத்தனை மோசமான விபத்து ஃபுகுஷிமா அணுசக்தி நிலையங்களில் நிகழ்ந்தது?

5) நீங்களும் அணுசக்தித்துறையை சேர்ந்த மற்ற நிபுணர்களும், மத்பன் பீடபூமியாக இருப்பதால், கடல் மட்டத்திற்கு மேல் உயர்வாக இருப்பதால் சுனாமியால் பாதிக்கப்படாது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொரு வருடமும் கொங்கன் ரயில்பாதை நிலச்சரிவினாலும், மழைக்குப் பின் நிலம் தாழ்வதாலும் பாதிக்கப்படுகிறது. அடர்மழைக்குப் பின் நம் மத்பன் மேட்டில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பாறைகளாலான பகுதி என்பதால் சுரங்க ரயில் பாதை அமைக்க இப்பகுதி தகுதியற்றதாக கருதப்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் கனரக அணு உலைகள் கட்ட இப்பகுதி எப்படி சரிப்படும் என்ற கேள்வியும் எங்கள் மனதில் இருக்கிறது. மழை காரணமாக அணுஉலைக்கு கீழேயுள்ள நிலம் விரிசல் விடத் துவங்குமானால் என்ன செய்வது?

6) ஹிரோஷிமா நாகசாகி பற்றி நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் அங்கே அணுகுண்டு வீச்சில் இறந்துபோனார்கள் என்றும், அப்படி இறந்தவர்களில் நாற்பதாயிரம் பேர், அதாவது அதில் ஐந்தில் ஒருபங்கு பேர் இறந்தது அணுக்கதிர் வீச்சால் என்பதும் உண்மைதானே டாக்டர்.ககொட்கர்?

7) 300 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமான கதிர் இயக்கத்தினை செர்னோபில் விபத்து வெளியிட்டது என்றும், இது ஒரு அணுஉலைக்குள் இருக்கும் கதிர்வீச்சின் அளவில் பத்து சதவிகிதம் மட்டுமே என்றும் கூறப்படுவது உண்மைதானா டாக்டர்.ககொட்கர்?

8) பாதிக்கப்பட்ட செர்னோபில் அணுஉலை ஆயிரம் மெகாவாட் திறன் கொண்டது. ஜெய்தாப்பூர் திட்டமோ பத்தாயிரம் மெகாவாட் திட்டம். பாதிக்கப்பட்ட செர்னோபில் அணுஉலையைவிட பத்து மடங்கு பெரியது. ஆறு அணுஉலைகளும் கட்டப்படுமானால் மூவாயிரம் ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமான கதிரியக்கம் இருக்கும் என்பதும் உண்மைதானே? இந்த கணக்கு சரியா தப்பா?

9) அணுஉலை இயங்கத் துவங்கியபின், அது மேலும் அபாயகரமான கதிர்வீச்சினை உருவாக்கும் என்பது உண்மை இல்லையா? கதிரியக்கத்தின் மொத்தஅளவு கூடும்தானே? எரிந்து தீர்ந்த எரிகோல்கள் அகற்றப்பட்டு பல ஆண்டுகள் தண்ணீர்த்தொட்டிகளில் குளிரவைக்கப்படுகின்றன. அணு உலைகளில் இருப்பதைவிட இந்த எரிக்கப்பட்ட எரிகோல்களை வைக்கும் தொட்டிகளில் ஆண்டுகள் செல்லசெல்ல கதிரியக்கம் அதிகமிருக்கும் என்பதும் உண்மைதானே?

10) அணு எரிபொருள் அணுஉலைக்குள் எரியும்போது அது புளுட்டோனியத்தை உருவாக்கும் என்பதும் உண்மைதானே? இந்த புளுட்டோனியம் தானே நாகசாகி அணுகுண்டு செய்ய பயன்படுத்தப்பட்டது?

எரிந்த எரிகோல்கள்  அதிக அளவு புளுட்டோனியத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மைதானே? இந்த ஆறு அரிவா (AREVA) அணுஉலைகளும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இலட்சம் நாகசாகி குண்டுகளைவிட அதிக புளுட்டோனிய கதிரியக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உண்மைதானே? இந்தக் கதிரியக்கம் முழுவதும் மத்பனில் அமையவிருக்கும் தண்ணீர்த்தொட்டிகளில் சேமிக்கப்படும் என்பதும் உண்மைதானே. இந்தத் தண்ணீர்த்தொட்டிகள் ஒழுகத் தொடங்கினால் என்னாவது?

11) ஃபுகுஷிமாவில் எரிந்த எரிகோல்களைச்  சேமிக்கும் தண்ணீர்த்தொட்டிகள் உயரத்தில் கட்டப்பட்டதால் சேதமடைந்து, முழுக்கவும் வெளியேறியது என்பதும் உண்மைதானே? இன்றுவரை யாரும் அந்த சேதமடைந்த தொட்டிகளை, ஓட்டைகளை அடைக்க அணுக முடியவில்லை என்பதும் உண்மைதானே? தீர்ந்த எரிகோல்களை  தொடர்ந்து நீர் தெளித்து குளிரவைக்க வேண்டும் என்பதும் உண்மைதானே?  இப்படி தெளிக்கப்படும் நீர், தெளித்தப்பின் கதிரியக்கத்தன்மை கொள்ளும் என்பதும், அதை தனியாக ஒழுகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதும் உண்மைதானே. இதுவரை ஒரு இலட்சம் டன் கதிரியக்கத் தன்மை கொண்ட நீர் ஃபுகுஷிமாவில் சேர்ந்திருக்கிறது என்பதும் இதில் ஒருபகுதி நிலத்தடியில் புகுந்து, கிணற்றுநீரையும் பாதித்திருக்கிறது என்பதும் உண்மைதானே. இதில் ஒருபகுதி கடலில் கொட்டப்பட்டு, மீன்களையும் பாதித்திருக்கிறது என்பதும் உண்மைதானே? மீன்தொழிலும் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மைதானே?
12) டாக்டர்.கடொட்கர், எரிந்து தீர்ந்த எரிகோல்களிலிருந்து உருவாகும் புளுடோனியத்தை, எத்தனை ஆண்டு காலம் அதிகபட்ச பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லமுடியுமா? கொங்கன் காப்போம் சங்கத்தைச் சேர்ந்த நிபுணர்கள் புளுடோனியத்தின் ஆயுள் 25,000 ஆண்டுகள் என்றும், இதை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்காவது பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்றும் கூறுகிறார்களே, இது சரியா தப்பா? டாக்டர் ஐயா, இது உண்மையானால் முதல் 1,000 ஆண்டுகளுக்கு 1,00,000 நாகசாகி குண்டுகள் அளவு புளுடோனியத்தை பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பு யாருடையது?

13) தாங்களும், இந்திய அணுமின் கழகத்தைச் சேர்ந்தவர்களும், உங்களது திட்டத்தால் மீன்கள் பாதிக்கப்படாது என்று கூறுகிறீர்கள். ஆனால் தாராப்பூர் பகுதி மக்கள் எங் களை சந்திக்க வந்தபோது தாராப்பூர் அணுமின் திட்டத்தால் தங்கள் மீன்தொழில் பாதிக்கப் பட்டதாக தெரிவித்தார்கள். நாங்களும் தாராப்பூர் சென்று கிவாளி பகுதி மீனவர்களுடன் உரையாடினோம். நாங்கள் யாரை நம்புவது, 40 வருடங்களாக மீன்தொழில் அனுபவம் உள்ளவர்களையா? அல்லது உங்கள் கணிப்புகளையா? நீங்கள் ஒரு விஞ்ஞானி. நீங்கள் யாரை நம்புகிறீர்கள், உங்கள் நிபுணர்களையா மீன்பிடி தொழிலாளரின் அனுபவத்தையா? ஒரு விஞ்ஞானியாக எங்களுடன் வந்து நீங்கள் மீன்தொழில் செய்யும் மக்களுடன் பேசத்தயாரா?

14) டாக்டர் ககொட்கர், ஒவ்வொரு இந்தியனும் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமானால் மின் உற்பத்தியை பத்துமடங்கு உயர்த்தவேண்டும் என்று உங்கள் விரிவுரையில் கூறினீர்கள். இதைப் பற்றி நான் யோசித்தேன். என் வீட்டு மின்சீட்டை எடுத்துப் பார்த்தேன். மாதம் ஒன்றுக்கு 120 யூனிட் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் வீட்டில் மின்விசிறி, மின்விளக்கு, தொலைக்காட்சி எல்லாம் இருக்கிறது. என் மகன் கணிப்பொறி மற்றும் இணையம் பயன்படுத்துகிறான். கடவுள் புண்ணியத்தால் நாங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 120 யூனிட் மின்சாரம் தேவையென்றாலும் நாம் உற்பத்தியை பத்து மடங்கு உயர்த்தவேண்டுமா என்பதே என் கேள்வி?

15) முகேஷ் அம்பானி மலபார் மலைப்பகுதியில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பெரிய வீடு கட்டியிருப்பதாக செய்தித்தாள்களின் மூலம் அறிந்தேன். அந்த வீட்டிற்கு மாதம் 6 இலட்சம் யூனிட் பொது மின்சாரம் தேவைப்படுமாம். ஒரு நல்ல வாழ்க்கை வாழத் தேவைப்படும் மின்சார அளவு எவ்வளவு? சிலருக்கு மும்பாயிலே இவ்வளவு மின்சாரம் தேவையானால் இந்த அணுமின் நிலையத்தை ஏன் மலபார் ஹில்ஸில் கவர்னர் மாளிகை இருக்கும் மேட்டுப்பகுதியில் அமைக்கக்கூடாது. நீங்கள் சொல்வதைப்போல அணு மின்சாரம் பாதுகாப்பானதாக, மலிவானதாக, தூய்மையானதாக இருக்குமானால், நாங்கள் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருப்போமானால் ஏன் இதை நீங்கள் மெத்தப்படித்த மலபார் ஹில்ஸ் படித்தவர்களிடம் புரியவைத்து அங்கேயே அமைப்பது எளிதாக இருக்கும் தானே?  
II
அணுசக்தி குறித்து அதிகம் கேட்கப்படாத கேள்விகளுக்கு http://thecolloquium.net வழியே விவேக் மொன்டீரோ அளித்த பதில்கள்

இந்திய அரசோ அணுசக்தித்துறையோ ஜைதாப்பூர் அணுமின் திட்டத்தின் பயன் - செலவு குறித்த ஆய்வை  மேற்கொண்டார்களா?

ஆச்சர்யம், ஆனால் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பிரஞ்சு கம்பெனிகளிடமிருந்து 10,000 மெகாவாட் திறன் கொண்ட அணுஉலைகளை வாங்கிக் கொள்வதாக  பிரஞ்சு அரசுக்கு மன்மோகன்சிங் அரசு உறுதிமொழி அளித்தது. இந்த உறுதிமொழி மட்டுமே இந்த திட்டத்துக்கான காரணம். எந்தச்செலவும் பயனும் கணக்கிடப்படவில்லை.

இத்திட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்ற வேண்டிய விசயமாகவே அணுசக்தித் துறைக்கு முன்வைக்கப் பட்டது. எல்லாம் முடிந்த பின்னால் இப்பொழுது புதிய வாதங்களை உருவாக்கி அணுசக்தித்துறை இத்திட்டத்திற்கான நியாயங்களை கற்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இவ்வாதங்கள் அறிவியல் நுண்ணாய்வுக்கு உட்படாதவை.

1990களின் கடைசியில் என்ரான் திட்டமும் இதேபோன்று எந்த பயன்-செலவு ஆய்வுமின்றி முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் தோற்றதோடு மட்டுமன்றி, திட்டமிடப்பட்ட 9,000 கோடியைத் தாண்டி, இதைக் காப்பாற்ற 30,000 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. ஜைதாபூர் திட்டம் என்ரான் திட்டத்தைவிட 5 மடங்கு பெரியது.

உலகின் இதுபோன்ற திட்டங்களை ஒப்புநோக்கினால் இதன் செலவு 2,00,000 கோடியாக இருக்கக்கூடும் ( இந்த திட்டத்தின் செலவுக்கணக்கைத் தர இந்திய அரசும், இந்திய அணு சக்திக்கழகமும் மறுத்துவிட்டன). இவ்வளவு அதிகமான செலவாக இருந்தபோதும், பயன்-செலவு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

இப்படிப்பட்ட திட்டங்களின் செலவை கணக்கிட முடியுமா?

ஆம். அறிவியல்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி கணக்கிடலாம். செலவை கணக்கிடும் போது நாம் சுற்றுச்சூழலின் விலையையும் பொருளாதார/ நிதிச்செலவையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.
சுற்றுசூழல் விலை அல்லது செலவினை எப்படி கணக்கிடுவது?

இது மிக விரிவான ஒரு கணக்கு.

1) இயல்பான நிலையில் உலைகள் இயங்கும்போது, அணு மின் திட்டம் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பில் உண்டாக்கும் பாதிப்பின் விலை.

2) ஆயுட்காலம் முடிந்த அணுஉலைகளை முடக்கவும், கதிரியக்க அணுக்கழிவுகள் தொடர்பிலும் ஆகக்கூடிய நீண்டகால செலவுகளையும் கணக்கிட வேண்டும்.

3) விபத்து, இயற்கைச் சீற்றம், நாசவேலை போன்றவையால் எதிர்பாராதபடி கதிரியக்கம் வெளியாவதால் உருவாகும் கதிரியக்க மாசு சம்பந்தப்பட்ட இந்தக் கடைசி கணக்கீடு ஆபத்து பற்றிய மதிப்பீடாகும்.

எதிர்பாராத வகையில் வெளிப்பட்டுவிடும் கதிரியக்க ஆபத்து மற்றும் செலவை நாம் எப்படி மதிப்பிடுவது?

இந்த அம்சத்தைப் பற்றிய பதிவுகள்தான் நம்நாட்டு அணு சக்தித்துறையிடமோ, மற்ற நாட்டு அணுசக்தி நிறுவனங்களிடமோ காணக்கிடைக்காதது. இந்தக் கணக்கீட்டைத் செய்யாது தவிர்க்கவே அவர்கள் முயற்சிக்கிறார்கள். முதலில் 1986ல் ஏற்பட்ட செர்னோபில் அணுப் பேரழிவின் ஒரு விளைவை மட்டும் எடுத்துக் கொள்வோம். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் உக்ரைன், பெலாரஸ், ரஷ்யா ஆகிய நாடுகளிலுள்ள 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கதிரியக்க மாசு காரணமாக ‘தவிர்ப்பு வலயமாக’  இருக்கிறது. மக்கள் இந்தப்பகுதியில் வாழ அனுமதி கிடையாது. 4000 ச.கி.மீ என்பது ஜைதாபூர் அணுமின் திட்டம் அமையவுள்ள ரத்தினகிரி மாவட்டத்தின் பாதி என்பதை நினைவிற்கொள்வோம். இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 17,00,000பேர். சுமார் 8,50,000 பேரை வெளியேற்ற, மறுவாழ்வளிக்க நாம் தயாராக இருக்கவேண்டும். மேலும் இந்த நாடுகளில் 1,00,000 ச.கி.மீ. நிலம் மற்றும் நீர் மாசுபட்டதால் விவசாயத்திற்கு 100 ஆண்டுகளுக்கு லாயக்கற்றதாகி இருக்கிறது. 1,00,000 ச.கி.மீ என்பது கேரளாவைவிட பெரியது, இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா போன்ற சிறிய மாநிலங்களைவிட பெரியது. இந்தியாவில் ஒரு ச.கி.மீ தூரத்தில் சுமார் 380 பேர் சராசரியாக வாழ்கிறார்கள். ஆகவே ஒரு பேரிடர் ஏற்படுமானால் 3,80,000 பேருக்கான உணவு வெளியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும்.

செர்னோபில்லுக்கு பிறகு அனேக அணு நிறுவனங்கள் தாங்கள் கற்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொண்டுவிட்டதாகவும், இனி செர்னோபில் போன்ற ஒன்று நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்கள். ஃபுகுஷிமா இந்த வாதத்தை பொய் என நிரூபித்திருக்கிறது. ஃபுகுஷிமா பேரிடர் ஏற்படுத்திய சுற்றுசூழல் இழப்பின் விலை என்ன?

இன்னும் ஃபுகஷிமா அணு உலைகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் கதிரியக்கத்தை நிறுத்த முடியவில்லை, இது இன்னும் பல மாதங்களுக்கு தொடரும். கடந்த மூன்று மாதங்களாக டோக்கியோவில் கதிரியக்க அளவு, இயல்பான  அளவைவிட 25% அதிகமாக உள்ளது. இது ஜைதாபூர் அணுமின் திட்டத்தின் ஒரு இ.பி.ஆர் உலை எல்லைக்கு, அதிகபட்சம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு என்று அணுசக்தி கட்டுப்பாட்டுத்துறை நிர்ணயம் செய்ததை விட 6 மடங்கு அதிகம். ஃபுகுஷிமாவில் இருந்து 300 கி.மீ தூரத்தில் டோக்கியோ உள்ளது, இதன் அர்த்தம் ஜப்பானின் பெரும் பகுதி திரும்ப சரிசெய்யமுடியாத வகையில் மாசுபட்டிருக்கிறது என்பதாகும். புற்றுநோயால் பாதிக்கப்படுவோர், மற்றும் புற்றுநோய் இறப்புகளில் அளவிடத்தக்க உயர்வு இருக்கும்.

(டோக்கியோ கதிரியக்க அளவு ஜைதாபூரில் இருக்குமானால், திட்டமிடப்பட்ட ஆறு அணுஉலைகளும் நிறுத்தப்பட வேண்டும் )

ஃபுகுஷிமாவில் கதிரியக்க வெளியீட்டின் மூலம் என்ன?

ஜப்பானிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 4 அணுஉலைகளின் கொள்கலங்களும் பாதிப்பின்றி இருப்பதாக கூறுகிறார்கள். ஆகையால் இது தீர்ந்த எரிபொருள் அதாவது புளுடோனியம் மாசில் இருந்து உண்டான மாசாக இருக்கவேண்டும். தீர்ந்த எரிபொருளால் உண்டாகும் ஆபத்து அணுஉலை ஆபத்தைவிட எந்த அளவிலும் குறைவானதில்லை.

புளுடோனியம் மாசு எவ்வாறு எற்படுகிறது?


அணுஉலைக்குள்ளே எரிகோல்கள் எரியும்போது ஏற்படும் அணுப்பிளவின் விளைவாய், அதிக கதிரியக்கம் கொண்ட பல்வேறு உபபொருள்கள் உருவாகின்றன. இந்த எரிகோல்களில் மூன்றிலொரு பங்கு தீர்ந்த எரிகோல்களாக  ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன. இதற்கு பதிலாக புதிய எரிகோல் கற்றைகள் உட்செலுத்தப்படும். இந்த தீர்ந்த எரிகோல்கள் புளுடோனியம் உள்ளிட்ட  பல்வேறு கதிரியக்கப் பொருள்களைக் கொண்டிருக்கும். அனைத்தும் மிக ஆபத்தானவை. ஆனால் புளுடோனியம் தான் அதிக ஆபத்து நிறைந்தது. புளுடோனியமே தன்னளவில் பிளவுறும் தன்மை கொண்டுள்ளதால் இதை அணு உலைகளில் எரிசக்தியாகவோ, குண்டு தயாரிக்கவோ பயன்படுத்த முடியும். இல்லையானால் இதை அணுக்கழிவாக, தீர்ந்த எரிபொருளாக விடவும் முடியும்.

புளுடோனியத்தை பொருத்தவரை அது உருவாகும் நேரம் முதல், கதிரியக்கச் சிதைவு காரணமாக கதிரியக்கமற்ற ஒரு பொருளாக மாறும்வரை அதில் ஆபத்து இருக்கிறது. புளுடோனியம் 239ன் கதிரியக்கம் பாதியாக குறைய  24,400 ஆண்டுகள் செல்லும். 1000 மடங்கு குறைய 2,44,000 ஆண்டுகளாகும். ஆயிரம் ஆண்டுகளாவது புளுடோனியத்தைப் பாதுகாப்பது எப்படி? யாருக்கும் தெரியாது என்பதுதான் விடை. அணுசக்தித்துறையாவது 1000 ஆண்டு கள் இருக்குமா என்று நாம் உறுதிகூற முடியுமா? ஆனால் உருவாக்கப்பட்ட புளுடோனியமோ 1000 ஆண்டுகளுக்குப் பின்னாலும் இயற்கைக்கு பெரும் ஆபத்தை விளைவித்தபடி பத்திரமாக இருக்கும். இப்படி சேமிக்கப்படும் புளுடோனியத்தை பாதுகாக்கும் பொறுப்பு யாருடையது? இந்த புளுடோனியத்தால் ஏதேனும் அசம்பவத்தால்   துடைத்தழிக்கப்படாமல் வருங்கால சந்ததியினரை பாதுகாக்கும் பொறுப்பு யாருடையது? அணுசக்தியை விற்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை கூறுவதிருக்கட்டும், இத்தகைய கேள்விகளை எழுப்புவதையே அனுமதிப்பதில்லை.

அணு எரிபொருளாக எரிப்பதன் மூலம் புளுடோனிய பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. மீண்டும் அணு எரிபொருளாக எரிப்பதென்பது, மீண்டும் அணுப்பிளவையும் அதன் மூலம் கதிரியக்கம் கொண்ட பல உபபொருட்களையும் உண்டாக்கும். சில விஞ்ஞானிகள் வேகமான ஈனுலைகள் Fast breeder reactors (FBR) மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம் என்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு இது ஒரு பெரும் யூகமான கூற்றுதான். இன்றைய நிலையில், ஈனுலை தொழில்நுட்பம், ஒரு வணிக தொழில்நுட்பமாக, சாத்தியப்பாடுள்ள தொழில்நுட்பமாக இல்லை. அதிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறோம் என்று நாம் உணரவேண்டும். அமெ ரிக்கா, பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகளில் பலவருடங்கள் இயங்கிய ஈனுலைகள் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவில் ஒரு ஈனுலை செயல்படுகிறது. ஆனால் இது  மின்சாரம் தயாரிக்கும் வணிக உலையல்ல, ஆராய்ச்சிக்கான ஒரு அணுஉலை. கல்பாக்கத்தில் அடுத்தவருடம் 500 மெகாவாட் திறன்கொண்ட ஒரு ஈனுலை துவங்க இருக்கிறது. ஆனால் இதுவரையான சர்வதேச அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஈனுலைகளின் செயல்பாட்டை இன்னும் சிலவருடங்கள் கவனித்த பின் முடிவெடுப்பது சரியாக இருக்கும். இதுவரையான ஈனுலை அனுபவம் தோல்வி சார்ந்தது என்பதை பற்றி நாம் கண்களை மூடிக்கொள்வது மடத்தனமானதும் ஆபத்தானதுமாக இருக்கலாம்.

மேலும் தீர்ந்த எரிகோல்களை திரும்ப பயன்படுத்தும் போதோ அல்லது அணுக்கழிவாக விடும்போதோ உண்டாகும் சுற்றுசூழல் தீங்கு மிக அதிகமானதாகும்.

தீர்ந்த எரிபொருள் அதிக வெப்பமான, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ஒரு பொருள். அதை குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தானே தீப்பிடித்துக் கொள்ளும். எனவே இந்த தீர்ந்த எரிபொருளை  ஒரு தனி கட்டிடத்தில் 5-10 வருடங்கள் தொடர்ந்து தண்ணீருக்கடியில் வைத்திருக்க வேண்டும். விபத்தினாலோ நாச வேலையினாலோ  இந்தத் தண்ணீர் இல்லாது போகுமானால் இந்த தீர்ந்த எரிகோல்கள் தீப்பிடித்து எரியும். அப்படி எரியும் போது கதிரியக்க வாயு உண்டாகி பல நூறு கிலோமீட்டர் தூரம் பரவும்.

ஃபுகுஷிமாவில் 3,4ஆம் எண் அணுஉலைக் கட்டிடங்கள் வெடித்ததால் தொட்டிகளில் தேக்கப்பட்டிருந்த நீர்வடிந்து அதனுள்ளிருந்த தீர்ந்த எரிகோல்கள் வெளிப்பட்டதால் கதிரியக்க மாசு உருவாகியிருப்பதாக தெரிகிறது.

ஜைதாப்பூர் அணுஉலை எவ்வளவு தீர்ந்த எரிபொருளை உருவாக்கும்?

ஜைதாபூர் அணு உலை தடுக்கப்படாத பட்சத்தில் பல நூறு டன் தீர்ந்த எரிபொருள் சில ஆண்டுகளில் உருவாகும். மத்பனில் சேமிக்கப்படும் கதிரியக்கம் செர்னோபிலை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

ஜைதாபூர் அணுஉலையின் தீர்ந்த எரிபொருள் வைப்பிலிருந்து ‘கதிரியக்கம்’ வெளிப்படுமானால் அதன் ஆபத்துகள் என்ன?

தீர்ந்த எரிபொருள் வைப்பகத்தின் மீது, ஒரு நாசவேலை அல்லது வெற்றிகரமான ஒரு பயங்கரவாத நடவடிக்கை (உலகளாவிய முக்கிய ஆபத்து என அமெரிக்க தேசிய அறிவியல் அகாதமியால் இது சுட்டப்பட்டுள்ளது) செர்னோபிலை விட பல மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தும். இந்தியாவின் கைகா அணுஉலையில் சின்ன நாசவேலையால் கதிரியக்கம் வெளிப்பட்ட நிகழ்விருக்கிறது.

ஜைதாபூர் அணுஉலை தடுக்கப்படாவிட்டால், அது செயல்படும் சில ஆண்டுகளில், ஹிரொஷிமா, நாகசாகியை விட அதிகம் கதிரியக்க மாசு கொண்ட ஒரு மோசாமான அணு குண்டை உருவாக்கும் சாத்தியம் இருக்கும். இந்தியர்களாக நாம் ஜைதாபூரை பற்றி கவலைப்படும் அதேநேரத்தில்  தாராப்பூர் அணுஉலையில் சேர்ந்திருக்கும் தீர்ந்த எரிபொருள் பற்றியும் கவலைப்பட வேண்டும்.

தீர்ந்த எரிபொருள் அணுக்கழிவாக அகற்றப்பட்டுவிட்டால்தான் என்ன?

ஆயிரமாயிரமாண்டுகளுக்கு அதி-கதிரியக்கக் கழிவை பாதுகாக்கும் ஒரு புவியியல் களஞ்சியத்தை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டது. 1982ல் இந்தக் களஞ்சியத்தை உருவாக்குவதற்கென ரீகன் அரசு ஒரு புதிய சட்டத்தையும் நிறைவேற்றியது. நிவாதா பகுதியில் யுக்கா மலையின் கீழ் இதை உருவாக்க 1982 முதல் 2010 வரை 50,000 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அணுக்கழிவிலிருந்து மிக நீண்டகாலத்திற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்கிற உறுதிமொழியைத்  தரமுடியாது என்று பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்ததால் கடந்த வருடம் ஒபாமாவால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இன்றைய தேதிவரை உலகின் எந்தப்பகுதியிலும், உயர்நிலை அணுக்கழிவை ஒழிக்கவோ, தீர்ந்த எரிபொருளை சேமிக்கும் போது உண்டாகும் ஆபத்துகளை தவிர்க்கவோ எந்த தீர்வும் இல்லை. என்றாவது ஒருநாள் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் நாடுகள் அணுக்கழிவை வெறுமனே சேமித்துக்கொண்டிருக்கின்றன. கதிரியக்கச் சேமிப்பிலிருந்து கசிவு என்பது இன்று அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இது மேற்கத்திய நாடுகளில் அணு சக்தியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதன் விளைவாய் மக்கள் எதிர்ப்பும் வளர்ந்து வருகிறது.

ஜைதாபூர் அணுமின் திட்டத்தின் முக்கியப் பிரச்சனைகள், ஆபத்துகள் என்ன?

இந்தத் திட்டதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதை விரிவாக சொல்ல இங்கு இடம் போதாது. இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடு, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு கதிரியக்க ஆபத்து பற்றிய நிபுணத்து வமோ, சிறப்பு அறிவோ இல்லை. இந்த ஆய்வை இந்தியாவில் செய்யக்கூடிய, அனுமதிக்கப்பட்டிருக்கிற ஒரே நிறுவனம் அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகம் மட்டுமே. இறக்குமதியாக இருக்கும் அரிவா (AREVA) பிரஞ்சு நிறுவனத்தின் இ.பி.ஆர் உலைகளின் வடிவமைப்பை அணுசக்தி கட்டுப்பாட்டுக்கழகம் இன்னும் மதிப்பீடு செய்யவோ ஒப்புதல் தரவோ இல்லை. ஆனாலும் அரிவா நிறுவனத்திற்கும், தேசிய அணுசக்தி நிறுவனத்திற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, அணுசக்தி கட்டுப்பாட்டுக்  கழகம் கதிரியக்க ஆபத்தை ஆய்வுசெய்து ஒப்புதல் தரும் முன்னரே, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை இத்திட்டத்தின் கதிரியக்க பாதிப்பு பற்றி எந்த ஒரு தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் தீர்ந்த எரிபொருள் மறு சுழற்சி பற்றியோ கதிரியக்கக் கழிவை அகற்றுவது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. தேசிய அணுசக்தி நிறுவனம் கொங்கன் காப்போம் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் - தீர்ந்த எரிபொருள் இந்திய அரசின் சொத்து எனவும் அதற்கும் தேசிய அணுசக்தி நிறுவனத்திற்கும் சம்பந்தமுமில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக கூறி இருக்கிறது. இதே சந்திப்பில் ஜைதாப்பூர் திட்டம் எந்த உயர்நிலை அணுக்கழிவையும் உண்டாக்காது என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

ஃபுகுஷிமா பேரிடர் ஒரே இடத்தில் நிறைய அணு உலைகளை நிறுவுவதன் பிரச்னையை எடுத்துக்காட்டி இருக்கிறது. ஒரு உலையில் கதிரியக்கம் வெளிப்பட்டால், மற்ற உலைகளுக்கும் நாம் போக முடியாமல் தடுக்கும். இது தொடர் தோல்விகளுக்கும், பல பாதுகாப்பு அமைப்புகள் செயல் இழப்பதற்கும் கரணமாக அமையும். ஒரே இடத்தில் ஆறு உலைகள் நிறுவுவது ஜைதாபூரில் திட்டம்.

தீர்ந்த எரிபொருள் சேமிப்பினால் உண்டாகும் பாதிப்பு பற்றியும் ஃபுகுஷிமா எடுத்துக் காட்டியுள்ளது. ஜைதாபூரிலும் கொள்கலன் வைப்பறைக்கு வெளியேதான் தீர்ந்த எரி பொருளைச் சேமிக்கும் திட்டமிருக்கிறது. இது ஆபத்து நிறைந்தது.

இன்னொரு பெரிய பிரச்சனை அதிக விலை தந்து இறக்குமதி செய்யப்படும் இ.பி.ஆர் உலைகள் உலகில் எங்கும் பரிசோதிக்கப்படவில்லை என்பது. பின்லாந்தில் உள்ள ஒக்கிகிட்டோவில் முதலில் நிறுவப்பட்ட இந்த உலை பாதுகாப்பு, அதிக விலை, கட்டுவதற்கு நான்காண்டு தாமதம் போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

இத்திட்டத்தின் பொருளாதாரப் பயன்கள் என்ன?


இத்திட்டத்தின் செலவுகளை முதலில் வெளியிட்டால்தான் நாம் இந்த கணக்கைப் போடமுடியும். தேசிய அணுசக்தி நிறுவனமும், இந்திய அரசும், அரிவா நிறுவனத்துடன்  ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் நிதி விவரங்களை வெளியிட மறுத்துவிட்டன. இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் கொங்கன் காப்போம் சங்கமும் மற்ற சங்கங்களும் போட்ட கணக்கின்படி இதுவரை மகாராஷ்டிரத்தில் இருப்பதிலேயே மிக விலை உயர்ந்த என்ரான் மின்சாரத்தை விட விலை கூடுதலாக இருக்கும்.

நமக்கு எவ்வளவு மின்சார சக்தி தேவை?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை என்றால் இந்தியாவின் அணுசக்தி திறன் மீதான தாக்கம் என்னவாக இருக்கும் என்று அக்டோபர் 2007ஆம் ஆண்டு டாக்டர். அனில் ககொட்கரிடம் கேட்கப்பட்டது. அவர் 6,000 மெகாவாட் பற்றாக்குறை இருக்கும் என்று தெரிவித்தார். இந்திய அமெரிக்க அணுஒப்பந்தத்திற்குப் பிறகு 6,000 மெகாவாட் அல்ல, 40,000 மெகாவாட் தேவைக்கான உலைகள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற ஒரு புதிய வாதத்தை அவர் முன்வைக்கத் துவங்கினார். இது அறிவியல்பூர்வமான ஆய்விற்கு முன்னால் பல்வேறு வழிகளில் தாக்குப்பிடிக்காத வாதமாகவே இருக்கிறது.

இந்த இறக்குமதியை நியாயப்படுத்த அவர் ஒவ்வொரு இந்தியனின் சராசரி பயனீட்டு அளவை வருடதிற்கு 5,000 யூனிட்டுகள், அதாவது 8 மடங்கு உயர்த்தவேண்டும் என்றும்  நிறுவப்பட்டுள்ள பயனளவை பத்துமடங்கு உயர்த்தவேண்டும் என்றும் அறிவித்தார் (தற்போதைய சராசரி பயன் அளவு 650 யூனிட்). ஒவ்வொரு குடிமகனின் உயர்தர வாழ்விற்கு வருடம் 2,000 யூனிட் இருந்தால் போதுமானது. இதை மரபான பல வழிமுறைகளின் மூலமாகவே நாம் சாதித்துக் கொள்ள முடியும்.

இந்தியாவின் எதிர்காலத்திற்கான, புத்திசாலித்தனமான, அறிவியல்பூர்வமான பார்வை என்பது ஆற்றல் மற்றும் மின்சாரத்தை நாம் தண்ணீரைப்போல கருதுவது. ஒரு வரையறைக்குட்பட்ட இந்த வளத்தை நாம் அளவில்லாமல் எடுத்துக்கொண்டே இருக்க முடியாது. தண்ணீரைப் போலவே நம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு அத்தியாவசியப் பொருளாக மின்சாரத்தையும் நாம் கவனமாக பயன்படுத்தவேண்டும். வீணான, ஆடம்பரத் தேவைகளை நாம் தடை செய்ய வேண்டும்.

ஆற்றல் கொள்கை பற்றிய ஒரு புதிய பார்வை நமக்கு வேண்டுமா?

நிச்சயமாக. உலக வங்கி அறிமுகப்படுத்திய ‘புதிய மின்சாரக் கொள்கை’ சமூக விரோதமானது, காலாவதியானது. இந்த புதிய கொள்கையின் கீழ், மின்சாரம் தனியார்மயப்படுத்தப்பட்டு, சந்தைக்கொள்கையின் அடிப்படையில், யார் அதிகம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு குறைந்த விலை என்று விற்கப்படுகிறது. மும்பையில் முகேஷ் அம்பானியின் ஒரு குடும்பத்திற்கு, 27 மாடி வீட்டிற்கு, மாதம் 6 லட்சம் யூனிட் பொதுமின்சாரம் பயன்படுவதை இது அனுமதிக்கிறது.

மின்சாரத்தின் இத்தகைய தவறான பயன்பாடு சமூக விரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மின்சாரம் வழங்கும் முறைகளை மாற்றுவதன் மூலம் இதை சாத்தியமில்லாததாக ஆக்கவேண்டும். ஒரு ரேஷன் அமைப்பின் மூலம், 5 பேர் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் (அம்பானி குடும்பம் உட்பட) 150 யூனிட் மின்சாரம் தருவோமானால், நம் உள் நாட்டு , வணிக, தொழில்துறை, விவசாய மின்சாரத் தேவைகளை ஒரு புதிய அணுஉலைகூட இல்லாமல் நாம் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

நம் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகளான சூரிய, சக்தி, சிறிய அணை, உயிர்ம வழிகளை பயன்படுத்த முடியும். இன்று ஜெர்மனி 20,000 மெகாவாட் திறனை சூரியசக்தி மூலமாக சேர்த்துள்ளது. இது ஜைதாபூர் திட்டத்தைவிட இரண்டுமடங்கு பெரியது. இந்தியாவில் ஜெர்மனியைவிட சூரிய ஆற்றல் அதிகமிருக்கிறது.

இதற்கு நம் அரசியல் பார்வையில் ஒரு மாற்றம் தேவையா?

ஆம். முற்றிலும். புதிய கொள்கைகளுக்கு புதிய அரசியல் பார்வை நிச்சயம் அவசியம். எத்தனைக்காலம் தான் நாம் ஏழைகளைப் பாதிக்கும் விதத்தில் பணக்காரர்களுக்கு மானியம் வழங்கிக்கொண்டே இருப்பது?

உள்ளுரில் ஜைதாபூர் திட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறதா?
மகாராஷ்டிர அரசின் கடுமையான அடக்குமுறையையும் மீறி உள்ளூர் மீனவர்களும், விவசாயிகளும் ‘ஜன் ஹித் சேவா சமிதி’ என்ற பதாகையின் கீழ் தைரியமாக போராடி வருகி றார்கள். மத்பனை சுற்றி முழுப்பகுதியும் ஒரு போலீஸ் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி தப்ரேஸ் சைய்கர் என்ற ஏழை மீனவர் போலிஸ் துப்பாக்கிசூட்டில் மரணமடைந்து தியாகியானார். மூதாட்டிகள் உட்பட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலிஸ் தொல்லை என்பது ஒரு தினசரி நிகழ்வாகும். உள்ளூர்வாசிகளை பயமுறுத்த கைதுகள் இரவில் செய்யப்படுகின்றன.

இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னும் ஏக்கருக்கு 10 லட்சம் என்று அரசாங்கம் உயர்த்தி வழங்கிய இழப்பீட்டை, திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். எதிர்ப்பு பரவி வருகிறது. மகாராஷ்டிரத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன, இடதுசாரி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மற்ற கட்சிகள் என்று பலரும் பங்கேற்றிருக்கிறார்கள்.

திட்டத்தால் பாதிக்கப்பட்ட மத்பன், சாக்ரி-நாட்டே, மித்காவனே ஆகிய கிராமங்களின் வீரத்தோடு போராடும் மக்களுக்கு, உடனடியாக, இந்தியா முழுவதும் இருக்கும் மாணவர்களின் ஆதரவு தேவை. அவர்கள் அனைத்து இந்தியர்களின் சார்பாக பெரும் அடக்குமுறையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜைதாபூர் அணுமின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு உள்ளூர் போராட்டமாக மட்டும் இருக்க முடியாது, இது ஒரு உள்ளூர் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு தேசிய போராட்டமாக உருவெடுக்க வேண்டும், இதில் மாணவர்கள் தங்கள் உரிய பங்கை ஆற்றவேண்டும்.

விஞ்ஞானப்பூர்வமற்ற மின்சக்தி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், ஜைதாப்பூர் அணுமின் திட்டத்தை எதிர்ப்பதில்,  பகுத்தறிவு சார்ந்த ஒரு மாற்றான ஆற்றல் கொள்கையை வகுப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன?

நாம் இதுவரை செய்த விவாத்தில் ஒன்று தெளிவாகிறது. பகுத்தறிவு சார்ந்த, மக்கள் சார்ந்த, ஒரு மாற்றான ஆற்றல் கொள்கையை வகுக்கும் வேலை என்பது அறிவியல் சார்ந்த, அரசியல்சார்ந்த வேலை. கொள்ளை விலை இறக்குமதி அணுசக்திக்கெதிரான போராட்டமானது அரசியல் சார்ந்ததும் அறிவியல் சார்ந்ததுமாகும். பொதுமக்கள் குழுக்கள் பரந்த மேடைகளை உருவாக்கி மக்களுக்கு அணு சக்தியை ஒட்டியிருக்கும் ஆபத்து பற்றி விளக்கவேண்டும். இது மட்டுமல்ல நம் அறிவியல் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு உருவாகும் ஆபத்து பற்றியும் சொல்ல வேண்டும்.

முடிவாக, எர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் அணுக்கருவை கண்டு பிடித்ததன் நூறாமாண்டு இது. இத்தனை ஆண்டுகளில் அணு அறிவியல் பல உயரங்களைத் தாண்டியுள்ளது. அணுப்பிளப்பு மற்றும் இணைவு உலகின் எரிசக்தி தேவை களை தீர்க்கமுடியும் என்று நம்பப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை உண்மையாகவில்லை. பிழையற்ற உண்மை என்று பின்வரும் விஷயங்களை நாம் நிச்சயமாக கூறமுடியும். அணுசக்தி விலை உயர்ந்தது. பல விபத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளதைப்போல, நம் சுற்றுச்சூழலுக்கு திரும்ப சரி செய்ய முடியாத ஆபத்தை எற்படுத்தும் ஆற்றல் கொண்டது. அணுசக்தி ஆதரவு வட்டம் என்பது, ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு ஆதிக்கக்கூட்டு. இந்தக் கூட்டிற்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதென இந்திய ஆட்சியாளர்கள் இங்கு உறுதியளித்திருக்கிறார்கள். ஜைதாபூரில் நடக்கும் போராட்டம் மக்களுக்கும் உலக ஏகாதிபத்திய நலன்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.

நம்மை நிர்மூலமாக்கும் இந்த கொள்ளையடிக்கும் படைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வது, நாட்டுப்பற்றுள்ள, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரின் கடமை.

நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகள், ஆபத்துகள் ஜைதாபூருக்கு மட்டுமல்லாது எல்லா அணு உலைகளுக்கும் பொதுவானதுதானே?

ஆம். ஃபுகுஷிமாவுக்குப் பிறகு எல்லா அணுஉலை பயன்-செலவு கணக்கையும் திரும்ப சரிபார்க்க வேண்டியிருக்கிறது. நிறைய அணுஉலைகளில் தீர்ந்த எரிபொருள் தொட்டிகள் கொள்கலப்பகுதியில் இல்லை. கதிரியக்க கசிவு மற்றும் தீர்ந்த எரிபொருள் கழிவு இரண்டும் சுற்றுச்சூழலையும் நம்மையும் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. தீவிரவாதிகள் இப்பகுதிகளை தாக்கலாம் என்பதும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. விலை மிக அதிகம் என்று தெளிவாக தெரிகிறது. கொடுக்க வேண்டிய விலை இவ்வளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அணுசக்தி தகுதியற்றதாக கூட இருக்கக்கூடும்.

புதுவிசை- இதழ்:35, ஏப்ரல் 2012

சனி, செப்டம்பர் 15

பிழை - ஆதவன் தீட்சண்யா



ழுகுகளை விரட்டிவிட்டு
கொன்றவர்களே தின்றுகொண்டிருக்கிறார்கள் பிணங்களை
அடங்காப்பசி மூர்த்த அவர்களின் மேசைகளில்
வெட்டிவைக்கப்பட்டுள்ளது
சற்றைக்கு முன் பிடிபட்ட குழந்தையின் தலையும்
கொப்பளித்துவரும் சுடுரத்தத்தின் ருசிவேண்டி
இதோ என் குரல்வளையை அறுத்து
கோப்பையை நிறைத்துக்கொண்டவர்கள்
அறுத்தெடுத்து தொப்பிக்குள் மறைத்துவைத்திருந்த 
எமது பெண்களின் குறிகளை வெறித்தபடி
களைகின்றனர் தமது கீழாடைகளை

புலராப்பொழுதின் செய்திகளில்
எங்கள் பெயர் பயங்கரவாதிகள்
அவர்கள் பெயர் போலிஸ் அல்லது ராணுவம்.


இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...