ஞாயிறு, டிசம்பர் 30

குழந்தைகளுக்கு புகட்டப்படும் நஞ்சு...




னேகமாக எல்லா நாளிதழ்களுமே வாரத்தில் ஒருநாள் சிறுவர்களுக்கான இதழை இலவச இணைப்பாக வெளியிடுகின்றன.  குழந்தைகளை ஈர்க்கும் வகையான வண்ணங்களிலும் வடிவங்களிலும் வெளியாகும் இவ்விதழ்கள் நமது குழந்தைகள் வாசிப்பதற்கென  எதைக் கொடுக்கின்றன என்பது குறித்து நாம் கவனம் கொள்வதில்லை.    

பத்திரிகை நிறுவனங்களின்/ ஆசிரியர்களின் சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டு சார்புநிலைக்கு ஆதரவாக குழந்தைகளின் மனதை தகவமைப்பதற்காகவே இந்த சிறுவர் இதழ்கள் வெளியாகின்றன. எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் இச்சமூக அமைப்பிற்கு இசைவான மதிப்பீடுகள்,  நீதிக்கதை, பாடல் ஓவியம் கேலிச்சித்திரங்கள் வழியாக திணிக்கப்படுகின்றன. சாதிய பேதங்களையும் பால்மைப் பாகுபாடுகளையும் மததுவேஷங்களையும் நியாயப்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்டு வெளியாகும் இந்த இதழ்கள் வரலாற்றையும் திரிக்கின்றன. 

தினமணி நாளிதழ் 22.9.2012 அன்று வெளியிட்டுள்ள சிறுவர் மணியில் இடம் பெற்றுள்ள “சிலந்தி வலையும் கேடயமாகும்!” என்ற கதை இதனால் உணர்த்தப்படும் நீதி யாதெனில் “இறைவனிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தால், சிலந்திவலை கூடக் கேடயமாகி நம்மைக் காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை!” என்று கூறி முடிக்கிறது. இந்த மகத்தான நீதியைச் (?) சொல்வதற்காக எழுதப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தக்கதை உண்மையில் களப்பிரர் மீதான எதிர்மறை எண்ணங்களையும் வெறுப்பையும் உருவாக்குவதற்காவே எழுதப்பட்டுள்ளது. 

" கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாட்டை ஆண்ட களப்பிர விக்ராந்தன், மிகப் பெரிய கொடுங்கோலன். சமயங்களை அழிப்பதே அவன் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. விக்ராந்தனின் காட்டாட்சியில் பைந்தமிழ் பாண்டிய மண்டலமே நடுநடுங்கியது. பாண்டிய நாட்டில் உள்ள கோயில்களில் பூஜையே நிகழக்கூடாது என்று ஆணை பிறப்பித்தான். கோயில்கள் அனைத்தையும் இழுத்துப் பூட்டினான். அவனுடைய தீய செயல்களால் சனாதன தர்மத்தை தம் கண்ணென நேசித்த பாண்டிய நாட்டுத் தமிழ் மக்கள் தாங்க முடியாத துயரத்தில் வாடினர்." - என்று தொடங்கும் கதை,  கடுங்கோன் என்ற பாண்டிய நாட்டு இளைஞன் "களப்பிரர்களிடமிருந்து தமிழ்மண் விடுதலை பெறும்வரை, இங்கிருந்து நகரமாட்டேன்; எனக்கு வாழ்வானாலும் சாவானாலும் இதே மண்ணில்தான்'' என்று சூளுரைத்து படைதிரட்டி வெற்றிபெறுவதாகவும் அதற்கு கடவுளே துணைபுரிவதாகவும்  முடிகிறது.

களப்பிரர்மீது பார்ப்பனர்களுக்குள்ள வன்மம் வரலாற்றுரீதியானது. மநுஸ்மிருதியின் கெடுதிசையில் சமூகத்தை செலுத்திய மூவேந்தர்களையும் வென்று தமிழகத்தை கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள் களப்பிரர்கள். மூவேந்தர்களும் பார்ப்பனர்களுக்கு வழங்கியிருந்த சிறப்புரிமைகள் அனைத்தையும் ரத்துசெய்த களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தைப் பற்றி எழுதவந்த பார்ப்பன வரலாற்றாசிரியர்கள் பலரும் அந்த காலக்கட்டத்தை “ இருண்டகாலம்” என்றே குறிப்பிட்டு வருகின்றனர். 

பதினென் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் வீரசோழியம் உள்ளிட்ட இலக்கண நூல்களும் உருவான களப்பிரர் காலம் தமிழுக்கு இருண்டகாலமல்ல. பார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து சமூகத்தை விடுவித்த-தாலும்,  வேதமந்திரங்களையும் சடங்குகளையும் யாகங்களையும் முன்னிறுத்தி நடந்துவந்த பார்ப்பனச் சுரண்டலை தடுத்ததாலும் அது தமிழர்களுக்கும் இருண்டகாலமல்ல.  ஆனால் சமூகத்தின்மீது எல்லாவகையிலும் மேலாதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனர்கள் அந்த நிலையை இழக்கவேண்டி வந்தது. எனவே களப்பிரர் ஆட்சி ஒழியவேண்டும் என்பதே அவர்களது பிரார்த்தனையாகவும் ஒற்றை செயற்திட்டமாகவும் இருந்தது. 

களப்பிரர் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் மீண்டும் ஆதிக்கம் பெற்றுவிட்டாலும், அதிகாரத்தை இழந்திருந்த அந்த காலக்கட்டத்தின் மீதும் களப்பிரர்கள் மீதும் 1500 ஆண்டுகள் கழித்தும் அடங்காத ஆத்திரம் கொண்டுள்ளனர் பார்ப்பனர்கள். களப்பிரர்கள் மீது பார்ப்பனர்களுக்குள்ள இந்த பகையுணர்ச்சி அவர்களுக்கு இயல்பான ஒரு உள்ளுணர்வாகவே மாறிவிட்டிருக்கிறது. எனவே அவர்கள் களப்பிரர்கள் மீதான தமது பகையுணர்ச்சியை ஒட்டுமொத்த சமூகத்தின் பகையுணர்ச்சியாக மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். “சிலந்தி வலையும் கேடயமாகும்!” என்ற கதையை சுமந்திரன் என்பவர் எழுதியதற்கும் தினமணி அதை வெளியிட்டதற்கும் பின்புலமாகவும் இந்த பகையுணர்ச்சியே இயங்குகிறது.

குழந்தைகளுக்கு புகட்டப்படும் இந்த நஞ்சினை எப்படி தடுக்கப்போகிறோம்...?

- ஆதவன் தீட்சண்யா

நச்சுக்கதை முழுவதையும் படிக்க:
http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article1271955.ece



சனி, டிசம்பர் 29

போதிமரத்தின் வேரில் பூணூல்

காலையில் எழுந்ததும் நான் இன்னாரின் பிள்ளை என்றோ இதுதான் என்வீடு என்றோ யாரும் யாரிடமும் கூறிக்கொண்டிருப்பதில்லை. அப்படி யாராவது கூறிக்கொண்டிருந்தால் அது அவரது பிறப்பு பூர்வீகம் பற்றி அவருக்கே இருக்கிற சந்தேகத்திற்கு அவரே சொல்லிக்கொள்கிற  சமாதானமாக இருக்கலாம். அல்லது, வேறுவகையான தேவைக்கு ஒரு ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆரியக்குஞ்சுகள்/ கொழுந்துகளின் நிலையும் அதுதான். அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாமும் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டும்கூட ‘இந்தியா ஆரியர்களின் நாடு. ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்களின் தாயகம்/ தந்தையர்நாடு  இந்தியா’ என்கிற பொய்களை திரும்பத்திரும்பக்கூறி உரிமை கோருகிறார்கள். அதற்காக அவர்கள் கம்யூட்டர் கிராபிக்ஸில் காளையை குதிரையாக்குவது, செத்தவர்களை சாட்சியாக்குவது என்று வரலாற்றைத் திரிக்கும் விதவிதமான மோசடியில் ஓயாதுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாய்க்கால் வரப்பு தகராறில் கவனம் திரும்பி வெட்டுக்குத்து நடத்திக் கொண்டிருக்கிற தொல்குடிகள், இப்படியொரு கும்பல் இந்தியாவையே அபேஸ் பண்ணும் மோசடியை காண மறுக்கிறார்கள்.

2013 ஜனவரி மாத ஆழம் இதழின் கடைசிப்பக்கத்தில் நூல் அறிமுகம் இடம் பெற்றுள்ளது. அசோகன் நாகமுத்து எழுதி அந்திமழை வெளியிட்டுள்ள ‘போதியின் நிழல்’ என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி தனுஜா என்பவர் எழுதியிருக்கிறார். யுவான் சுவாங்கின் இந்தியப் பயணம் பற்றிய இந்நூலுக்கு ஒரு அறிமுகம் வருவது நல்லதுதானே என்கிறீர்களா... பொறுங்கள்.

‘‘ பட்டுப்பாதை என்று இன்று அழைக்கப்படும் வழித்தடத்தில் கன்ஃபூஷியஸின் நிலத்தில் இருந்து புறப்பட்டு ஆரியர்களின் நிலத்தை வந்தடைந்த யுவான் சுவாங் போதிமரத்தின் ஞானநிழலைத் தரிசித்தார். இந்தத் தரிசனத்தின் கதை அல்லது  தரிசனம்தான் போதியின் நிழல்...’’ இந்தியாவை ‘ஆரியர் நிலமாக’ அசோகன் நாகமுத்து சித்தரித்திருந்தாலும் தனுஜா சித்தரித்திருந்தாலும் அது போதிமரத்தின் வேரில் பூணூல் மாட்டும் மோசடியே.

இரண்டாம்தாரத்துக்குப் பிறந்த பிள்ளை தகப்பன் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதில் உள்ள உளவியல் பற்றி யாரோ (விமலாதித்து மாமல்லன்?) எழுதியது இவ்விடத்தில் ஏனோ நினைவுக்கு வருகிறது. கூடவே, தலித்துகளுக்கு எதிரான பூர்வகுடி- தமிழ்ச்சாதிகளின் பட்டியலில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கும் பொங்கலூர் மணிகண்டன்- ராமதாஸ் வகையறாவும் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறார்கள்.

- ஆதவன் தீட்சண்யா

ஞாயிறு, டிசம்பர் 16

கடவுள், சாத்தான், மரியா, நீங்கள், நான் மற்றும் சம்பு - ஆதவன் தீட்சண்யா



  சந்தியா பதிப்பகம் வெளியீடாக வரவிருக்கும்
சம்புவின் "அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி" என்ற  கவிதைத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை

‘‘ஜோசப்பு செத்துட்டானாம்’’

‘‘எந்த ஜோசப்?’’ 

இது பக்கத்துத்தெரு ஜோசப். மனைவியையும் இழந்து போனவருஷம் ஒரு விபத்தில் தனது மகளையும் இழந்து காசநோயுடன் தனியாக வாழ்ந்துவந்த ஜோசப். ஐந்தாறு வருசங்களுக்கு முன்னால் ஒரு ஜோசப் செத்துப்போனான். அவன் நோய் வந்து சாகவில்லை. இதுபோன்ற ஒரு கோடைக்காலத்தில்தான் என்னால் கொலை செய்யப்பட்டு இறந்துபோனான்...

- என்று தொடங்கும் ஜி.முருகனின் கதையைப்போலவே சம்புவின் கவிதைகளும் ஜோசஃப்புகளால் நிறைக்கப்பட்டவை. யாரோ ஒருத்தர்உம்கொட்டியபடியே உடன் வருகிற தைரியத்தில் ஏழேழு லோகங்களுக்குள்ளும் அண்டசராசரங்களுக்குள்ளும் நுழைந்து தன்கதையை வளர்த்தும் விரித்தும் கொண்டு செல்வதற்கான தைரியத்தை பாட்டி பெற்றுவிடுவதைப்போல தன்னோடு உரையாட எங்காவது சில  ஜோசஃப்புகள் காத்திருப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கைதான் சம்புவை எழுத வைக்கிறது. ஜோசஃப்புகள் மட்டுமல்ல, ஜோசஃப்பை போலவே இருக்கிற கடவுள், சாத்தான், மரியா, நீங்கள், நான் என்று எல்லோருடனும் அவர் நிகழ்த்த விரும்பும் உரையாடல்தான் இக்கவிதைகள். தன்னிலையாக பேசிக்கொள்வது போன்ற தோற்றத்தைக்காட்டினாலும் உண்மையில்  அது நம்மை நோக்கிப் பேசுகின்றன. நம்மை நோக்கிப் பேசுவதாக காட்டிக்கொண்டே அவை இன்னொரு தளத்தில் தனக்குள்ளேயே தனக்காக முணுமுணுக்கவும் செய்கின்றன. தன்னிலையையும் முன்னிலையையும் இணைக்கிற புள்ளியாக இருக்கிற ஜோசஃப்புகள் யாரோபோல் தெரிகிற நம்மின் பிரதிகள்

பழுப்பேறி மங்கிய புகைப்பட ஆல்பத்தை பார்த்துப்பார்த்து தன் பால்யத்தையும் ஊரையும் உறவையும் பிரிவையும் எண்ணி விம்மியழுவதையெல்லாம் கவிதையென முன்வைக்கிற லகுவான உத்தியை சம்பு கைக்கொள்ளாதிருப்பது ஆறுதலாயிருக்கிறது. அவ்வாறு எழுதப்படுகிற கவிதைகளைக் காட்டிலும் அந்த புகைப்படங்கள் கவித்துவமானவை என்கிற தெளிவு இதற்கொரு காரணமாயிருக்கலாம். அல்லது, சொற்களைக் குழைத்து ஒரு சித்திரத்தை வரைந்து அதன் கதையை வண்ணங்களால் ஒளிரவிடத் தெரிந்திருக்கிற அவருக்கு, படம் பார்த்து கதை சொல்கிற இரவல் நிலையின் மீது ஏற்படும் ஒம்பாமையும் குமட்டலும்கூட காரணமாயிருக்கலாம். புகையைப்போல அலைகிற நினைவுகளைப் பின்தொடர்ந்துப்போய் அந்திரத்தில் கரைந்து மிதந்தபடி பூமியிலிருப்பவர்களையெல்லாம் அற்பமென குனிந்து பார்க்கும் மனோபாவம் அண்டாத சம்பு, மிக இயல்பானதொரு மனிதராக நாம் நடக்கும்போது நடந்தும் பறக்கும்போது பறந்தும் உடனிருந்து நம்மோடு சமனிலைப் பேணுகிறார். அவர் எதற்குள்ளும் போய் பதுங்கிகொள்ளாமல் சமகாலத்தை அதனதன் கதியில் தன் கவிதைகளின் வழியே எதிர்கொள்கிறார். மற்றுமொரு விசயம், சமகாலம் என்று அவரது கவிதைகளில் முன்னிறுத்துவது வெறும் அன்றாடத்தை அல்ல. எண்திசைகளையும் ஏககாலத்தில் கண்திருப்பி பார்த்திட வாய்க்கப்பெற்றவர் எதையெல்லாம் சொல்லத்தகுமோ அதையெல்லாம் சொல்ல விழைகிறார்.

கவிதையின் கோருதலை  விடவும் கவிஞர் என்கிற தோரணையை கட்டியெழுப்புவதற்கான கச்சாக்களை எழுதுவதற்கே வசக்கப்பட்டுள்ள மரபான சூழலுக்கு வெளியே நின்றுகொள்கின்ற சம்புவின் கவிதைகள் வேறு எதைத்தான் பேசுகின்றன? அவை, கட்டவே முடியாத மாளிகைக்கான வரைபடத்தை ஒருவர் கனவில் வரைந்தும் திருத்தியும் அழித்துக்கொண்டேயும் இருப்பதைப்போல வாழ்ந்தேயிராத வாழ்க்கையின் மீதான பெருவிருப்பங்களையும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் அததற்கான சுரவொழுங்கில் இடையறாமல் முன்வைத்தபடியே இருக்கின்றன. ஆகவே அவை நடப்புலகத்தின் புழங்குமொழியைத் தவிர்த்து அமானுஷ்யங்களைப் பேசும் மறைநூல்களுக்குள்ளும் மந்திர தந்திரக் கதைகளுக்குள்ளும் கொழித்திருக்கும் மொழியையும் குறியீடுகளையும் சொற்கட்டையும் தன்வயமாக்கிக்கொண்டு வெளிப்படுகின்றன. ஆர்டரின் பேரில் மொத்தமாகவோ சில்லறையாகவோ எழுதிக்குவிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு தன்னை இரையாக்கிக்கொள்ளாமல் எழுதுவதற்கான உந்துதலை இயல்பாக பெறும்போது மட்டுமே எழுதுகிறவராக இருப்பதால் அவர் தேர்ந்துகொள்ளும் விசயங்களும் பொதுப்பட இல்லாமல் தனிப்பட இருக்கின்றன

கற்பனைக்கெட்டாத காலம்தொட்டு இயங்கி வருகிற இச்சமூகத்தின் சிந்தனைகளாலும் மொழியாலும் அர்த்தங்களாலும் அனர்த்தங்களாலும் மதிப்பீடுகளாலும் அதிகாரத்தினாலும் சட்டதிட்டங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னை சுதந்திரவானாக அறிவித்துக் கொள்வதில் உள்ள அபத்தங்களையும் முரண்களையுமே சம்புவின் கவிதைகள் பேசுகின்றன. அவ்வாறு அறிவித்துக்கொண்ட யாரோ ஒரு ஜோசஃப்பையோ அல்லது தன்னையோ பற்றி அவருக்குள் ஊறி கொப்பளிக்கிற இரக்கம், கோபம், பகடி, இளக்காரம் போன்றவைதான் இக்கவிதைகளோ என்பதான ஐயத்தை திட்டமிட்டே படரவிடுகிற அவர், உண்மையில் நம் ஒவ்வொருவரையும்தான் வம்புக்கிழுக்கிறார் என்பது வாசிப்பில் பிடிபிடுகிறது. ஆனால் அவரிடம் வாங்கிய ஊமைக்குத்துகளை வெளிக்காட்ட முடியாமல் அவமானத்தில் குமைந்தபடியே அடுத்தப்பக்கத்திற்கு நகரவேண்டியுள்ளது. எல்லாமே இயல்பாக போய்க்கொண்டிருக்கிறது என்கிற பித்தத்தை தெளியவைத்து தெளியவைத்து அவர் விடுகிற குத்துகள், நம்மொத்த சராசரிகள் கண்திறந்து நம்மே நாமே பார்த்துக்கொள்ளத் தூண்டுகின்றன.  அவரவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவரவரே வாழ்வதாக கொண்டிருக்கும் நம்பிக்கையின் போலித்தன்மையை சிதறடித்துவிடுகிற சம்பு, நாம் திகைத்துச் சோரும் வேளையில் வாழ்க்கை எவ்வளவு கொண்டாடத்தகுந்தது என்பதையும் அதற்கென தீவிரத்தோடு மேற்கொள்ளும் எந்தவொரு சிறுமுயற்சியும் பெருஞ்சவாலாக மாறிப்போவதையும் கவனப்படுத்துகிறார்

கட்டுத்தளையற்ற சுதந்திரத்தைக் கோருகிற அல்லது அப்படியானதொரு சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாய் நம்புகிற ஒரு எழுத்தாளர் மிக அடிப்படையிலேயே எல்லாவகையான ஒடுக்குமுறைகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிரானவராக இயங்க வேண்டியிருக்கிறது. அரசியல் பூர்வமான இந்த நிலைப்பாட்டை மேற்கொள்வதில் பொதுநலனுமில்லை ஒரு புண்ணாக்கும் இல்லை, தான் கொண்டாடும் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பும் ஒருவர் சுயநலன் சார்ந்தே இந்த நிலைப்பாட்டுக்கு வந்தாக வேண்டியுள்ளது. அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அதை இழையிழையாக பிரித்து சிதைக்க வேண்டியிருக்கிறது. கவிதையின் செயல் எல்லையும்கூட அதுதான். அதற்கும் மேலாக கவிதை அதைச் செய்யும் இதைச் செய்யும் என்பதெல்லாம் வெற்று அலட்டல்கள்தான். அதிகாரத்தை பீடங்களில் வீற்றிருக்கும் ஒன்றாக பார்க்கின்ற மரபான மனப்பாங்கிலிருந்து தம்மை வலுவந்தமாக விடுவித்துக் கொள்கிற சம்புவின் கவிதைகள், அதிகாரம் என்பது திட்டவட்டமான வடிவங்களிலும் நிறங்களிலும் இடங்களிலும் மட்டுமே இருக்கக்கூடியது என்பதற்கும் அப்பால் சென்று அது தங்கியிருந்து ஆட்டுவிக்கும் நுண்ணடுக்குகளையும் வடிவங்களையும் அரூபங்களையும் காட்டித்தருகின்றன. ஒடுக்குமுறையாளர் ஒடுங்குகிறவர் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற இரட்டைநிலைகளில் ஒன்றை மறைத்து இன்னொன்றாய் காட்டிக் கொள்கிற அருவருப்பை    அம்பலப்படுத்துவதன் மூலம், அதிகாரத்தை எதிர்த்த கலகமானது தன்னைத்தானே கழுவேற்றிக்கொள்வதில்தான் நிறைவடைகிறது என்பது இக்கவிதைகளால் உணர்த்தப்படுகிறது. ஆகவே இங்கு கவிதை தானாக தன்னை எழுதிக்கொள்ளவில்லை. சம்பு என்கிற ஒருவர் தன் முழு அரசியல் பிரக்ஞையோடு கவிதை எழுதும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். வேலை நடக்கிறது வேறுபாதையில் செல்லவும் என்கிற எச்சரிக்கை எழுத்திற்கு பொருந்தாது. சம்புவின் கவிதைகள் நமது பொதுப்பயன்பாட்டுக்கும் நடமாட்டத்திற்கும் திறந்தே இருக்கின்றன. 

***
ஏதாவதொரு பதிப்பகத்திற்கு வெளிப்படையாக கவிதைகளையும் அவற்றை நூலாக வெளியிடுவதற்கான தொகையை கையூட்டாக ரகசியமாகவும் கொடுத்து கவிஞர் என்று தன்னைத்தானே நம்புவதற்கு வெட்கமன்றி பல முயற்சிகள் நடக்கின்ற காலமிது. ஊர்ஊராகப்போய் டெண்ட் அடித்து வித்தை காட்டுகிறவர்களைப்போலவும் வயக்காடுகளில் கிடை போடுகிறவர்களைப் போலவும் சிலர் ஒரு குழுவாக கிளம்பிப்போய் அறிமுக/ விமர்சனக் கூட்டங்களை நடத்திஇன்னின்னாரது கவிதைகள்தான் இந்தக் காலத்தின் குரல்என்று நிறுவத்துடிக்கிற முயற்சியும்கூட இவ்வகையானதே.  இந்தக்கூட்டங்களில் வாசிப்பதற்கென்றுநிரந்தர வாத்தியக்காரர்களும்’ ‘சபாஷ் வாரே ...வாஹ்...’ என்று தொடைதட்டி ரசிக்கிற நிரந்தர பார்வையாளர்களும்கூட கிடைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செட்டப் கூட்டங்களை இயல்பானவை போல காட்டுமளவுக்கு இவர்கள் தேர்ந்த நடிகர்களாகவும் பிரச்சார பீரங்கிகளாகவும் மாறியுள்ளதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஒலி ஒளி அமைப்பதற்காக மைக்செட் உள்ளிட்ட கூட்டத்தளவாடங்களை சொந்தமாக கொண்டுள்ள கவிக்குழுக்கள் விரைவில் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான குழுக்கள் எதிலும் இல்லாதவர் சம்பு. சடக்கென ஒரு இடத்திற்கு கிளம்பிப்போய் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் தந்திரங்கள் அறியாதவர். நாலு இடங்களுக்கு வலிய போய் அறிமுகம் செய்துகொண்டு தன் கவிதைகளைக் காட்டி கவிஞர் என்கிற அங்கீகாரத்தை யாசகம் கேட்கிற மலிவான உத்திகளைப் பழகாத சம்பு தன் கவிதைகளை மட்டும்தான் நம்பியிருக்கிறார். ஆமாம், சுயமரியாதையுள்ள அசலான ஒரு கவிஞர் வேறு எதை நம்பமுடியும்?
ஆதவன் தீட்சண்யா
13.12.12


இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...