ஞாயிறு, நவம்பர் 13

அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும் - ஆதவன் தீட்சண்யா

ப்பனை முடிந்ததும் திரைச்சீலை விலக்கி
மேடையில் பிரவேசிக்கும் ஓர் ஆடல்காரனாய்
தீக்குண்டம் பிளந்து
சுடர்க்கீற்றாய் பிரசன்னமாகுமென்னை  நந்தனென்றறிக.

கள்ளத்தோணிகளும் கபடவாகனங்களும் மலிந்த
கர்ப்பகிரஹத்திற்கு
மூலவரையும் இழுத்துவந்திருக்கிறேன்
முறையான கடவுச்சீட்டோடு

மீண்டும்
ஜோதிக்குள் கலந்துவிடும் சூழ்ச்சிகளிருப்பதாய்
கடவுளின் ஒற்றர்கள் கணித்ததன் நிமித்தம்
முன்கூட்டியே அறிவிக்கப்படாத என் பயணத்திட்டத்தை
மோப்பத்தாலறிந்த செய்தியாளர்கள்
கொலையாளிகளுக்கிடையிலேயே
கொலையுண்டவன் உலவப்போகும் சாகசம் காண
கோயிலின் தூண்கள் பின்னே கண்பதுக்கியிருக்கின்றனர்
காமிராக்களோடு

2.
தில்லையில் எரிமூழ்கிய
திருநாளைப்போவார் மீண்டதில் அரண்டு
எல்லாக்கோயில்களின் அகழிகளிலும்
பசித்த முதலைகள் விடப்படுகின்றன
உயர்த்தப்பட்ட மதில்களில் பதிக்கப்படுகின்றன
உயிரைக்கிழிக்கும் கண்ணாடிச்சில்லுகள்
மாடங்களில் மறைந்திருந்து
எண்திசையும் குறிபார்க்கும் இயந்திரத்துப்பாக்கிகள்
தில்லைவிடங்கன் வெட்டிவந்த விறகெடுத்து
முகவர்ணப்பித்தன் மூட்டிய குண்டத்திலிருந்து
திகுதிகுவென்றெழுகிறது மீண்டுமொரு வேள்வித்தீ

நீதிமன்றத் தடையாணை ஒட்டப்பட்டிருந்த கோயிற்கதவை
எத்தியும் எரித்தும் திறக்க முயன்ற கடவுளை
நான்தான் தடுத்தாட்கொள்ள வேண்டியிருந்தது
கோயில்கள் இன்னும் கொலைக்களமாகவே இருப்பதாய்
அலுத்துக்கொண்ட கடவுள்
தீர்த்த விருந்தொன்றின்போது மட்டுமீறிய போதையில்
வீட்டுக்கு ஆட்டோ அனுப்பியோ என்கவுன்டரிலோ
வேண்டாதாரைப் போட்டுத்தள்ளும் கொலைநுட்பங்கள்
கைவரப்பெறாத காலத்தில்
கழுவேற்றமும் ஜோதியேற்றமுமே
கதைமுடிக்கும் உபாயங்களென்று உளறிக்கொட்டியதில்
அம்பலமாயின சிதம்பர ரகசியங்கள்

3.
தற்காப்பிற்கும்
அப்ரூவராகி
இதோ இப்போது ஒரு வளர்ப்புப்பிராணிபோல
என் மகிமைகள் பாடி
என்பின்னேயே அலையும் இக்கடவுளைக் காக்கவும்
ஆயுதங்களாலான உடலெடுத்து அவதரித்துள்ள என்னை
மீண்டும் எரிக்க முடியாத ஆத்திரம்
24 மணிநேரமும் 64 சேனல்களிலும்
அபவாதமாய் இரைகிறது தலைப்புச்செய்திகளில்

நான் வெளிவந்த கணத்தில்
துஷ்ட நட்சத்திரமொன்று
திசையற்ற வெளியில் தெறித்து விழுந்ததாய்
சகுனக்கதைகள் புனையத் தொடங்கினர்

ஜோதியில் கலக்கப்பட்டவன் மீண்டுவர ஏலாதென்று
இப்போது மட்டும் பகுத்தறிவு பேசுவோரை
நிராகரிப்பதாயிருக்கிறது என் வருகை
தம் கைவசமிருக்கும் கதை மூட்டைகளை அவிழ்ப்பார்களேயாயின்
என்வருகையின் சாத்தியம் புலப்படக்கூடும்

4.
தாத்தாவின் தோளேறி திருவிழா காணும் சிறுவனாக
கடவுளின் மீதேறி காண்கிறேன் உலகத்தை
படுத்திருந்த பழைய நந்தி எழுந்துநின்று மறைக்கிறது இப்போது
தனக்கும் மனிதனுக்குமிடையே
எப்போதும் ஒரு நந்தி எதற்கெனும் கேள்வி
திருப்புன்கூரிலிருந்தே கடவுளுக்குமிருப்பதால்
அதன் திமிலில்
நான் கட்டாரி பாய்ச்சிக் கொன்றதை கண்டிக்காததோடு
இரவு விருந்தில் பரிமாறப்பட்ட நந்தியின் மாமிசத்தை
 விரும்பியும் உண்டார் என்னோடு

தாம்பூலம் தரித்தபடியும் பல்குத்திக்கொண்டும்
குஷாலாக பேசிக்கொண்டிருந்த கடவுளைக் கொல்ல
ஆயிரம் நந்திகள் கொம்பாட்டி எழுந்த அவ்விரவில்
யாவற்றையும் கொன்று பாடனம் செய்தோம்
இனிவரும் நாட்களின் உணவுகென்று.

5.
என் உபதேசத்தின் பேரில் சாந்தம் பூண்டிருக்கும் கடவுள்
தரிசனம் தரவிருக்கும் பக்தர்களுக்குப் படையலிட
தானே அறுத்தெடுத்த மூவாயிரம் தில்லைநாக்குகளை
சுரைக்கொடியோடிய கூரையின் கீழிருக்கும்
எங்கள் ஆதனூர் புலைப்பாடியில்
அடுப்புமூட்டி வேகவைத்துக் கொண்டிருக்கிறார்
உப்பும் உறைப்பும் மணக்க

குழம்புச்சட்டியில் கொதி பொறுக்காது
கூக்குரலெழுகிறது தேவபாஷையில்
அபயமும் தராமல் அசரீரியும் பகராமல்
ஊதாங்குழலால் அடுப்பை ஊதிக்கொண்டேயிருக்கிறார் கடவுள்.


2 கருத்துகள்:

  1. முந்தையை வஞ்சக கொலை முறைக்கும், பின் இன்றைய கொலை முறைக்கும் சற்றும் வித்தியாசமில்லை.

    'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என்ற நேற்றைய அபயம், இன்று கட்டாரியைக் கொண்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

    எழுத்து நம் வசம் வந்தபோதுதான் கோபம் எழுத்தில் வந்தது.

    இனிவரும் கவிதைகளும் விதையாகவே பிறக்கட்டும்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நந்திக் கறி எனக்கும் கொஞ்சம் வைத்திருங்கள்.

    ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று என பாரதி எது நடக்க வேண்டுமென்று விரும்பினானோ அது நடந்துவிட்டதாகக் கற்பித்து எழுதினான்.

    தேவ பாஷையில் வசைபாடும் நாக்குகள் கொதியுலையில் அவிக்கப்படுவதும் நடக்கும். அப்புறம் கடவுள் கறை நீங்கியவனாவான்.
    -அ. குமரேசன்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...