வெள்ளி, டிசம்பர் 16

விசாரணை- ஆதவன் தீட்சண்யா

நெடுக்குச் சட்டங்களாலாகி
மலைவாசஸ்தலமொன்றின்
தற்கொலைமுனை வடிவை ஞாபகமூட்டும்
விசாரணைக்கூண்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டேன்
சட்டம் குடித்த விழியின்போதை
கண்ணாடிக்கு வெளிப்பிதுங்கித் தொங்க
பிரிட்டிஷ்கால இருக்கையில் மார்வரை புதைந்து
மூட்டைப்பூச்சி கடி தாளாது
கால்களை அகட்டியகட்டி
தொடையிடுக்கை நிமிண்டும் உயிரோடிருந்த பிணம்
நீதிபதியென்றே அறியப்பட்டது
சம்மட்டி அடியாலும் சைலன்ஸ் ஓலத்தாலும்
பறவைகளற்று உறைந்த அமைதி கிழிந்து
காற்றின் வயிறு முன்தள்ளியது
நீதியை எரித்துப் படிந்த புகையில்
சாம்பல் நிறமான கருங்கோட்டணிந்தவர்கள்
எமதூதராய் வாதப்பிரதிவாதங்களிட்டு
முடிவாய் அறிவித்தனர்
எனக்காக வக்காலத்து பெறுவதில்லையென்று
குரலற்றவன் குர-ல்
எனக்காக நானே வழக்காடுவதென்றான பின்
விசாரணை துவங்கி பிரமாணம் எடுக்கையில்
"சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை...
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை...
அதுசரி, நீங்கள் சொல்வதும் உண்மைதானே'' என்றதும்
கண்ணவித்திருந்த கரும் படுதா விலக்கி
துலாக்கோலை என்பக்கம் சாய்த்து
"சபாஷ் சரியான கேள்வி...'' என்
நீதிதேவதை மேல் வீசப்பட்டன
சட்டப்புத்தகங்களும் கேஸ்கட்டுகளும்
உணர்ச்சிவசப்பட்ட ஒன்றிரண்டு செருப்புகளும்
(செருப்புகள் சிலதில் எங்கள் பரம்பரையின் தையலும் மொழுக்கும் இருந்தன)
நீதிதேவதையைக் கட்சிமாற்றியதாய்
மேலும் இரண்டு கடும் பிரிவுகளின்கீழ்
நீதிபதியே குற்றஞ்சாட்ட
பதில்களை மட்டுமே சொல்லவேண்டிய
கூண்டிலிருந்து
கேள்வியெழுப்பியக் கடுங்குற்றத்திற்காகவும்
ஒளிமரித்த கொட்டடி நோக்கி
இழுத்துச் செல்லப்படுகிறேன்
என் நிழலடி ஒண்டிய நீதிதேவதையோடு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...