ஞாயிறு, ஜனவரி 11

மீசை என்பது வெறும் மயிர் : மீபுனைவு - பிரளயன்

அண்மையில் ,ஆதவன் தீட்சண்யாவின் “மீசை என்பது வெறும் மயிர்” படித்தேன்........


“மீசைகள்” என்பது நான் மிகவும் மதிக்கும் மறைந்த கந்தர்வனின் கவிதைத்தொகுப்பு. முப்பதாண்டுகளுக்கு முன் வெளியானதிது. அதில் ‘விதம் விதமா மீசை வச்சோம்! வீரத்தை எங்கே வச்சோம்’ என்று ஒரு கவிதை நிறைவுறும். குட்டக்குட்ட குனிந்து கொண்டிருக்காதீர்கள்! உங்கள் உரிமைகளுக்காக போராட வாருங்கள்!! என்று உழைக்கும் மக்களை தொழிற்சங்கங்களில் அணிதிரள அறைகூவும் கவிதை இது. எனினும் அக்கவிதை “மீசை என்பது வீரத்தின் அடையாளம்’ என்பதை ஏற்றுக்கொண்டுவிடுகிறது. 

அதற்கு முப்பதாண்டுகள் கழித்து அண்மையில் வெளியான ஆதவன் தீட்சண்யாவின் புதிய நாவல் “ மீசை என்பது வெறும் மயிர்” என்கிறது. மறைந்த தோழர் கந்தர்வனும், ஆதவன் தீட்சண்யாவும் ஒரே அமைப்பைச்சேர்ந்தவர்கள்தாம் . ஒரே சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம். மீசை என்பது ஆதிக்க சாதித்திமிரின் அடையாளமாய்க் கருதப்படும் இன்றைய சூழலில்,உண்மையிலேயே ஒரு அமைப்பினது முப்பதாண்டுகாலச் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்தியல் வளர்ச்சியையும், சிந்தனைகளின் விரிவினையும் குறிப்பதாகக்கூட நாம் இப்போக்கினைக்கருதலாம்.

இந்த அளவீடுகளையும் தாண்டி ‘மீசை என்பது வெறும் மயிர்” தவிர்க்கமுடியாத தமிழின் மிக முக்கியமான நாவல்.

பெரும்பாலும் புனைவு என்பது பதிப்புரை,முன்னுரை,அணிந்துரை என எல்லா உரைகளையும் தாண்டி முதல் அத்தியாயத்திலிருந்துதான் தொடங்கும். இதில் ‘புனைவு’ என்பது அட்டைப்படத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது.

”மீசை என்பது மயிர்” ‘மீபுனைவு [மெட்டா-பிக்ஷன்] வகையினைச்சார்ந்தது. ‘Metafiction’ என்றால் என்ன என்பதையறிய நமது ‘பின்- நவீனத்துவ’ ஆசான்களின் பொழிப்புரைகளை தேடி சிரமத்துக்குள்ளாகவேண்டாம். ’விக்கிபீடியாவில்’ தேடினாலே போதுமானது.

உண்மையிலேயே ‘கோணங்கி’ வந்து சேர்ந்திருக்கவேண்டிய இடம் இது.ஆனால் ஆதவன் தீட்சண்யா வந்து சேர்ந்திருக்கிறார்.

எதார்த்தம், வரலாறு, புனைவு இவற்றின் எல்லைகளைக் கலைத்துப்போட்டு அவை வேர்கொண்டிருக்கும் அடியாழங்களுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது இந்நாவல்.

வசீகரமிக்க இறுகக்காய்ச்சிய ஒரு மொழிநடை ஆதவனுக்கு கைவந்திருக்கிறது. அது நம்மை வாசிக்கத்தூண்டுகிறது.

வாழ்த்துகள்! ஆதவன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...