ஞாயிறு, ஏப்ரல் 30

பெரிதினும் பெரிது கேள்... - ஆதவன் தீட்சண்யா



யானையே மோதினாலும்  அதிராத
அரண்மனையின் கதவு
மரம் இரும்பு கல் மற்றும்
எதற்கும் இளகாத உணர்வினாலானது
  
அங்குலம்தோறும்
புதுப்புது  பூட்டுகளாலும் தாழ்களாலும்
அணிசெய்து வலுவேற்றப்பட்ட
அந்தப் புராதனக்கதவின் பின்னே
வதைபட்டுக்கொண்டிருக்கிறது
நம் ஒவ்வொருவரது உயிரும்

உயிரை மீட்டெடுக்கத் துடிக்கும் நம்மை
அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்திட
ஆயுதங்களேந்தி அணிவகுப்பதிலும்
கதவுக்கு வெகுதொலைவிலேயே நிறுத்திவிட
தடையரண்களை எழுப்புவதிலும்
வாயிற்காப்பாளர்கள்
மும்முரமாயிருக்கும் இவ்வேளையில்
நாம் ஏன்
கதவுக்குப் பதிலாக
அரண்மனையையே தகர்க்கக்கூடாது?


24.04.2017

வெள்ளி, ஏப்ரல் 7

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... ஆதவன் தீட்சண்யா


னிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது,  கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் (1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். உண்மை நிலவரமோ, ஒவ்வொரு அங்குலத்திலும் நொடிக்குநொடி வன்கொடுமைகள் நிகழும் பகுதி என்று ஹரியானா  முழுவதையுமே அறிவிக்குமளவுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஹரியானாவுக்கு சற்றும் குறையாத வன்கொடுமை பூமிதான்.

*
ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்திலுள்ள மிர்ச்பூர் ஏற்கனவே சாதிய வன்கொடுமைக்காக அறிப்பட்டதுதான். 1700 ஜாட் குடும்பங்களும் 525 தலித் குடும்பங்களும் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பார்ப்பனர்களும் மிர்ச்பூரில் வசிக்கிறார்கள். சாதியத்தை ஏற்கிற யாவருமே பார்ப்பனர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறபடியால் அவர்களது எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல.  மிர்ச்பூரின் ஜாட் ஜமீன்தார்களில் ஒருவன் ஹோசியார் சிங். தன் மகனுக்கு ஓரினப்புணர்ச்சியில் நாட்டமிருப்பதையறிந்து அவனது உறவாளிகளைக் காட்டுமாறு அவனை வெளுத்தெடுக்கிறான். உறவாளிகளை காட்டிக்கொடுக்க விரும்பாத மகனோ மூன்று தலித்துகளின் பெயர்களை கூறிவிடுகிறான். ஹோசியார் சிங்கும் அவனது மனைவி நங்கி சிங்கும் தலித் குடியிருப்புக்குள் புகுந்து இரண்டு தலித் இளைஞர்களையும் அவர்களது தாய்மார்கள் மூவரையும் பிடித்து அடித்திருக்கிறார்கள். அவர்களை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்றிருக்கிறார்கள். 2.5.2007 அன்று நடந்த இவ்வன்கொடுமை நாடு தழுவிய கண்டனத்தைப் பெற்றாலும் அதற்காக சாதியவாதிகள் அகங்காரத்தை விட்டுவிடுவார்களா என்ன?


19.4.2010. குடிவெறியில் நிதானமிழந்த ஜாட் இளைஞர்களின் கும்பலொன்று இருசக்கர வாகனத்தில் தலித் குடியிருப்புக்குள் நுழைந்திருக்கிறது. கரன்சிங் என்கிற தலித் வளர்க்கும் நாய் (ரூபி) அந்த கும்பலின் கொட்டத்தைப் பார்க்கச் சகியாமல் குரைத்திருக்கிறது. உடனே ராஜீந்தர் பாலி-  ஜமீன்தார் ஒருவரின் மகன், செங்கல்லால் நாயைத் தாக்கியிருக்கிறான். இதை ஆட்சேபித்த கரன்சிங்கின் உறவினரான யோகேஸ் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். அங்கு வந்த கரன்சிங், பிரச்னை பெரிதாகிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் கும்பலிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார். இயல்புக்குத் திரும்பமுடியாத கரன்சிங் தங்களது சமுதாயத்தலைவர் வீர் பானுடன் போய் ஜாட்டுகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் வீர் பான் ஜாட்டுகளால் தாக்கப்பட்டிருக்கிறார். ஜாட்டுகளின் விபரீதத்திட்டத்தை யூகித்த தலித்துகள் நர்னான்ட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 2007ல் வன்கொடுமைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தவரும், மிர்ச்பூர் ஜாட் தலைவன் ஒருவனுடைய மருமகனின் நண்பனுமான வினோத் குமார் காஜல் என்பவன்தான் இப்போதும் காவலதிகாரி. தன் நண்பனோடு தலித் குடியிருப்புக்குப் போன அந்த அதிகாரி புகாரை திரும்பப் பெறுமாறு தலித்துகளை மிரட்டியுள்ளான். 21.4.2010 காலையில் அந்தக் காவலதிகாரியும் வட்டாட்சியரும் அழைத்ததன் பேரில் தலித்துகள் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த நேரத்தில் ஜாட்டுகள் தலித்துகளின் 18 வீடுகளை கொள்ளையடித்துவிட்டு தீயிட்டு பொசுக்கினர். போலியோவினால் நடக்கவியலாத சுமன்(17) என்கிற பெண்ணை வீட்டுக்குள் வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். மகளைக் காப்பாற்ற தாராசந்த் வீட்டுக்குள் ஓடியபோது ஜாட்டுகள் கதவைப் பூட்டி இருவரையும் எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.

தலித்துகளின் போராட்டத்தால் காவலதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டான். குற்றம்சாட்டப்பட்ட 43 பேரில் 29 பேர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே கால்நடைப் பராமரிப்புத்துறை வளாகத்தில் ஜாட்டுகள் மகாபஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்கள். அங்குள்ள அரசாங்க அலுவலகம்கூட சாதிச்சங்க கட்டிடம்போல் இயங்குகிறது. 43 காப் பஞ்சாயத்துகளின் 2000 பேர் அங்கு கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும், காவலதிகாரியை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ரயில் மறியல் செய்வோம் என்றும் அரசையே மிரட்டினார்கள். அதன்படியே பிற்பாடு ரகளையும் செய்தார்கள்.

இனி மிர்ச்பூரில் குடியிருக்கமுடியாது என்பதால் தலித்துகளில் சிலர் அக்கம்பக்கமுள்ள ஊர்களுக்குச் சென்றுவிட, 70 குடும்பங்கள் வேத்பால் தன்வர் என்பவரது இடத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து ஆறுவருடங்களாக வசித்து வருகிறார்கள். தலித்தல்லாத அந்த மனிதாபிமானிக்கும் மிரட்டல்தான்.

இந்த வன்கொடுமை வழக்கு உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சுற்றியலைந்துகொண்டிருக்கிறது. நீதிமன்ற ஆணைப்படி மத்திய பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி ஏந்தி ஊரில் காவல் இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம், மீண்டும் உங்கள் இடத்துக்கு வந்து குடியேறுங்கள் என்று தலித்துகளுக்கு தைரியமூட்டவோ, வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று ஜாட்டுகளை எச்சரிக்கவோ திராணியில்லாமல் மத்திய பாதுகாப்புப்படையினர் அங்கு தண்டத்துக்கு நின்றிருக்கிறார்கள். யாரிடமிருந்தும் அவர்கள்  யாரையும் காப்பாற்றவில்லை. ஒருவேளை ஜாட்டுகள் தங்களையும் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் அவர்கள் தினமும் துப்பாக்கியைத் துடைத்து ரவையை நிரப்பிக்கொள்கிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மிர்ச்பூரின் இந்த வரலாற்றைத்தான் ஜெயக்குமார் ‘சாதிகளிடம் ஜாக்கிரதை’ என்கிற ஆவணப்படமாக எடுத்துள்ளார். பார்ப்பனீயவாதிகள் மனிதத்தன்மையற்றவர்கள், வன்முறையாளர்கள் என்பதற்கான மற்றுமொரு கொடிய சாட்சியம் இப்படம்.  

***

சாதியாணவப் படுகொலைகள் குறித்து தான் எடுத்துவரும் ஆவணப்படத்திற்காக ஜெயக்குமார் அலைந்த காலத்தில்தான் மிர்ச்பூர் வன்கொடுமையை கேள்விப்பட்டிருக்கிறார். படத்தை அப்படியே நிறுத்திவிட்டு தன் குழுவினரோடு மிர்ச்பூருக்கு விரைந்த அவருக்கு ஊருக்குள் நுழைவதே உயிரச்சம் மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது. ஜாட்டுகள் வாய் திறக்க மறுத்ததோடு அவர்களது நடமாட்டத்தையும் கண்காணித்திருக்கிறார்கள். எனவே ஊருக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகமில்லை. ஆயினும் ஊர் எரிக்கப்பட்டது, மகள் -தந்தை படுகொலை, இடப்பெயர்ச்சி போன்றவற்றுக்கான காணொளித்துண்டுகள் கிடைக்காத நிலையில் அவற்றை அனிமேஷன் செய்து பொருத்தமாக இணைத்திருக்கிறார்.

தலித்துகளுக்கு நிலபுலமென்று பெரிதாக ஏதுமில்லாவிட்டாலும் அருகாமை நகரங்களுக்குப் போய் உழைத்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருந்திருக்கிறார்கள். உள்ளூர் நீர்நிலைகளில் மீன்பிடி உரிமையை ஜாட்டுகளை பின்னுக்குத் தள்ளி ஏலமெடுத்தவர் கரன்சிங். ஐம்பதாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டி உள்ளூர் பூலான் தேவி கோயில் திருவிழாவை நடத்துவதற்கான ஏலத்தை தரம்வீர் என்கிற தலித்தே எடுத்திருக்கிறார். ஜாட்டுகளின் பார்வையில் இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள். ஆகவே நாய் குரைத்ததால் வந்த வினை இது என்று அப்பாவித்தனமாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாய் குரைத்திருக்காவிட்டாலும் ‘அதற்குகூட லாயக்கில்லாதவர்களா நாங்கள்?’ என்று வம்பிழுத்து தாக்கியிருப்பார்கள். தாக்குவது என்கிற தீர்மானத்தை செயல்படுத்திட நாய் குரைத்தது ஒரு சாக்கு, அவ்வளவுதான்.  

பார்ப்பனீயத்தை ஏற்றவர்களின் வசிப்பிடம் ஊர். அதிலிருந்து மாறுபட்ட வாழ்முறை கொண்ட தலித்துகளின் குடியிருப்புகளோ ஊராரின் ஆளுகைக்கு கீழ்ப்பட்ட சேரி/காலனி /அம்பேத்கர் நகர்/ கீழ்த்தெரு என்பதாக பலவந்தமாக பிணைக்கப்பட்டுள்ளது. தனிப்பெயருமின்றி சேரிகள் அந்தந்த ஊரின் பெயரை முன்னொட்டாக கொண்டுள்ளன. வாழ்வாதாரத்திற்கு ஊராரைச் சார்ந்திருக்கும் நிலையும் இதனோடு சேர்ந்திருக்கிறது. ஊர்களிலிருந்து விடுவிக்கப்பட்ட, சுயாதீனமான வாழ்வாதாரங்களையும் அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்ட சுதந்திரமான தனிக் குடியேற்றப்பகுதிகளை - அதாவது தனி ஊர்களை-  தலித்துகளுக்கென அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும் என்றார் அம்பேத்கர். அதற்கான தேவையை சாதியவாதிகளே தீவிரப்படுத்துகிறார்கள் என்பதை மிர்ச்பூரும் உணர்த்துகிறது. 

தாக்குதல் பற்றிய விவரணைகள் மூலம் வெளிப்படும் மூர்க்கத்தையும் ஆணவத்தையும் தந்திரத்தையும் ஏற்கனவே எங்கோ பார்த்திருப்பதுபோல நமக்குத் தோன்றும். ரொம்பவும் மூளையைக் கசக்கவேண்டாம், மிர்ச்பூரில் நடந்ததென்னவோ அதுதான் தருமபுரியிலும் நடந்தது. மிர்ச்பூருக்குச் சென்ற உண்மையறியும் குழுவிடம் ‘அவர்கள் நஷ்ட ஈட்டுக்கு ஆசைப்பட்டு தங்களது வீடுகளை தாங்களே எரித்துக்கொண்டார்கள், அந்தப் பெண்ணையும்  அவளது தகப்பனையும் கொன்றுவிட்டார்கள்’ என ஜாட் வழக்கறிஞர்  அசோக் சிங் தெரிவித்தாராம். பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம்சாட்டும் இந்த உத்தியே தருமபுரியிலும் கையாளப்பட்டது.

பாதிக்கப்பட்ட தலித்துகள் ஊரைவிட்டு வெளியேறி ஆறுவருடங்களாக தங்கியுள்ள இடத்தை மையத்தில் வைத்து முழுவிசயத்தையும் பேசுகிறது படம். நீதிக்கான தலித்துகளின்  போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியவர்களின் நேர்காணல்கள் பிரச்னையின் பரிமாணங்களை உணர்த்துகின்றன. அரசின் அலட்சியம், கட்சிகளின் சவடால், ஒவ்வொரு நாளையும் கழிப்பதிலுள்ள இடர்ப்பாடுகள், கடந்தகாலத்தை திரும்பிப்பார்க்க விரும்பாமை, ஏனிங்கு கிடக்கிறோம் என்பதறியாமல் தமதியல்பில் விளையாடிக் களிக்கும் குழந்தைகள், எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் வாழ்வின் மீதான பற்று- என விரியும் காட்சிகள், தங்களுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை என்று சமாதானம் சொல்லிக்கொண்டு இயல்பான வாழ்க்கைக்குள் சென்றுவிட முடியாதா என்கிற அவர்களின் ஏக்கத்தையும் எத்தனத்தையும் குறிக்கின்றன. 

ஊரின் பெயரை மாற்றிக்கொண்டால் இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் பொருந்தும் தன்மையை படம் கொண்டிருக்கிறது. சடசடத்தெரியும் தீக்குள்ளிருந்து எழும் ஒரு பெண்ணின் தீனமான கதறல் வளர்ச்சி, வல்லரசு என்கிற ஆரவார முழக்கங்களுக்கிடையில் அமுங்கிப்போகலாம். ஆனால் அந்தக் குரலை தனக்குள் பொதித்து வைத்திருந்து வரலாறு மீண்டும் எழுப்புவதற்கு இந்தப் படம் துணை செய்யும்.

டாக்டர் ஷூமேக்கர்

தமிழ்நாட்டில் சில டாக்டர்கள் ஒன்றாக இருக்கும் சமூகத்தை வெட்டிப் பிளக்கிறார்கள். மனங்களில் விஷ ஊசியேற்றுகிறார்கள். சமூகத்தின் நோய்களுக்கு தவறான மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு நேரெதிரானவர் டாக்டர் ஷூமேக்கர் எனப்படும் திரு.இம்மானுவல். அவர் பிரிந்தவற்றை ஒட்டுகிறார், கிழிந்தவற்றை தைக்கிறார், முரண்டினால் லேசாக தட்டவும் செய்கிறார். வில்லிவாக்கம் மண்ணாடி ஒத்தவாடைத்தெருவின் பிரதானச்சாலையோரத்தில் இருக்கிறது அவரது கிளினிக்.

இம்மானுவேல், ஒரு கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்டத்திற்கு காலளவுக்கு முக்கியமானது ஷூ. அவ்வப்போது பழுதாகிப்போகும் ஷூவை செப்பம் செய்ய அலைய நேர்ந்திருக்கிறது. எனவே தானே தனது ஷூவை செப்பம் செய்துகொள்ளத் துணிந்து, அத்தொழிலில் பிரசித்தமான ஒருவரைத் தேடிப்போய் தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் தன்னுடைய ஷூவை மட்டுமே செப்பம் செய்துவந்த அவர் பிறகு நண்பர்களுக்கும் செய்து கொடுத்திருக்கிறார். அவரது பெயர் பரவுகிறது. புதிய ஷூ வாங்க முடியாத ஏழைப்பையன்கள் தங்களது கிழிந்த ஷூவை சரிசெய்து கொடுக்கும்படி அவரைத் தேடி வருகிறார்கள். கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது ஆர்வத்தைப் போற்றும் விதமாக ஷூவை சரிசெய்து கொடுக்கத் தொடங்குகிறார். அவர்கள் மீண்டும் விளையாடுவதற்கு தன்னாலானதைச் செய்துகொடுத்த மனநிறைவு அவரை நிரந்தரமாக ஒரு கடைபோட வைக்கிறது. அவர் வேலை பார்த்துவந்த பின்னிமில் மூடப்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக முழுநேரமாக அந்தக்கடைதான் அவரது வாழ்க்கை.

தைப்பதற்கான ஷூக்களும் பந்துகளும் சூழ்ந்திருக்க அயராது ஒவ்வொன்றாக தைத்தபடி இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஷூவைக்கூட பத்திரமாக வைத்திருக்கிறார். ‘எல்லாரும் ஏழைப்பசங்கதானே, வந்து வாங்கிப்போக காசு இருந்திருக்காது’ என்கிறபோது அவரது குரலில் வெளிப்படும் கவலை கூலி பற்றியதல்ல.  புதிய ‘பூட் கட்டுவதிலும்’ தேர்ந்தவரான அவர் தனது வாடிக்கையாளர்களாகிய ஏழைச்சிறார்களிடமிருந்து அன்னியப்படாதிருப்பதற்காக அந்தக் கடையை பிடிவாதமாக நடத்திவருகிறார். ‘எப்பேர்ப்பட்ட கந்தலானாலும் சரிசெய்து கொடுத்துவிடுவார், அவர் ஒரு டாக்டர்’ என்று தயா சொன்னது அப்படியே பரவிவிட்டது. சென்னை மட்டுமல்லாது அண்டை நகரங்களிலிருந்தும் அவரைத் தேடி வந்தவண்ணமிருக்கும் கால்பந்தாட்ட வீரர்கள், கோச்சுகள் அனைவருக்குமே அவர் இப்போது டாக்டர்.

***

இன்னின்ன தொழிலை இன்னின்ன சாதிகள்தான் செய்யவேண்டும் என்பார்கள். ராக்கெட் விடுறதுக்கும் ரயில் ஓட்டுறதுக்கும் எந்த சாதியை நேர்ந்துவிட்டிருக்கிறது? கட்டணக் கழிப்பிடத்தை பல சாதியினரும் ஏலமெடுத்து காசு பார்ப்பார்கள். பிந்தேஸ்வர் பதக் என்கிற பார்ப்பனரால் தொடங்கப்பட்ட சுலாப் இன்டர்நேஷனல் 600 நகரங்களில் குளிப்பறை கழிப்பறைகளை நடத்திவருகிறது. தோல் தொழிற்சாலை நடத்துவார்கள், தோல் பொருட்களை விற்பனை செய்வார்கள். இதற்காக இவர்களது சாதி அந்தஸ்து குறைந்துவிடுவிடுவதில்லை. ஆனால் இதே வேலையை தலித் பார்த்தால் கேவலம் என்று ஒதுக்கிவைப்பார்கள். இம்மானுவல் தனது சாதிக்குரியதாக அல்லாத  ஷூ தைக்கும் தொழிலை உவப்போடு செய்துவருகிறார். தனது தொழில் தெரிவு குறித்து அவருக்கு தாழ்வுணர்ச்சியில்லை. ஏன் அந்த சாதிக்காரன் தொழிலை செய்கிறாய் என்று தொடக்கத்தில் அவரது அக்கா கண்டித்திருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினரிடம் இப்போது எந்தப் புகாரும் இல்லை. ‘அவர் தனக்கு விருப்பமான இந்த வேலையை செய்யட்டும், முடியாத காலத்தில் பேரப்பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக இருக்கட்டும்’ என்கிற அவரது மகனின் கூற்று இப்படத்தின் முக்கியமான செய்தி. 56 வயதிலும் இம்மானுவல் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் சற்றும் குன்றாமல் திடலில் இறங்கி ஆடுகிறார். விருப்பங்களைக் கொண்டாடி வாழத் துணிந்த அவருக்கு நூல், தோல். ஊசி, பந்து என எல்லாவற்றையும்  ஒன்றுபோல் தெரிவது இயல்புதானே?

***

வெளியுலகத்தின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களின்மீது அன்போடு இயங்கும் இமானுவல் போன்ற ஒருவரது வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்று பாண்டியராஜ், வினோத் குழுவினர் அக்கறை காட்டியுள்ளனர். தனிப்பட்ட ஓர் ஆளுமையைப் பற்றிய ஆவணப்படத்திற்கான உதாரணமாக காட்டுமளவுக்கு டாக்டர். ஷூ மேக்கர் முழுமைப்பட்டிருக்கிறார்.

***
திரையுலகில் தனிக்கவனம் பெற்றுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்முயற்சியில் உருவான நீலம் அமைப்பு இவ்விரண்டு படங்களையும் தயாரித்துள்ளது. இதேபோல உதவ வாய்ப்புள்ளவர்கள்  முன்வருவார்களேயானால்  இளைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்கி பல மிர்ச்பூர்களை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரக்கூடும். 


நன்றி : தடம் இதழ், நவம்பர் 2016

புதன், ஏப்ரல் 5

மனவூற்று இச்செடிக்கு நீராகட்டும்... - ஆதவன் தீட்சண்யா




தோழர் அன்புசெல்வம் தொகுத்துபுலம் வெளியீடாக வரவிருக்கும் " டாக்டர் அம்பேத்கர் டைரி" என்ற நூலுக்கான முன்னுரை

 1.
‘‘அளவுமிகுந்த பாதுகாப்புணர்வை மேற்கொண்டு அழிந்துபோவதைவிட, அக்கறை மிகுந்த ஐயப்பாடுகளை எழுப்பிப் பிறர் பழிப்பதற்கு ஆளாவது மேலானது’’ - அறிஞர் எட்மண்ட் பர்க் அவர்களின் இவ்வரிகளை ஓரிடத்தில் மேற்கோளாக காட்டிய அண்ணல் அம்பேத்கர், உண்மையிலும் இவ்வரிகளின் உயிர்பெற்ற வடிவாக தன்னை உணர்ந்திருக்க வேண்டும். நிலவும் சூழலுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்வது அல்லது இணங்கிப்போய்விடுவது என்கிற சமரசப்பண்பு அறவே அண்டமுடியாத அளவுக்கு தகித்துக்கொண்டிருந்த அவரது போர்க்குணம் இந்த அக்கறைமிகுந்த ஐயங்களின் வழியாகவே வளர்ந்திருக்கக்கூடும். அறிவின் வலுவேறி ஆழ்ந்தகன்ற பார்வையால் முக்காலத்தையும் குறுக்குவெட்டாகவும் செங்குத்தாகவும் பகுத்தறிந்து அவர் எழுப்பிய ஐயங்கள் புறக்ணிக்க முடியாததாக, பதிலளித்தாக வேண்டிய நெருக்கடிகளைத் தரக்கூடியதாக அமைந்திருந்தன. பொத்தாம்பொதுவாக, இயல்பானதாக, தாயாப்புள்ளையாக தோற்றம் காட்டிய எல்லாவற்றையும் தோலுரித்துக்காட்டி அவற்றின் சார்புத்தன்மைகளை வெளிக்கொணர்வதால் ஒரு தனிமனிதர் என்கிற வகையில் தனக்கு நேரப்போகும் கெடுதிகள் எல்லாவற்றையும் அவர் அறிந்தே இருந்தார். பணிந்துபோய் தனிப்பட்ட முறையில் ஆதாயமடைகிற ஈனத்தனங்களை முற்றாக நிராகரித்து அதிகாரத்தை நோக்கி இடையறாது அக்கறை மிகுந்த சந்தேகங்களை எழுப்பி பழிச்சொற்களுக்கு ஆளாவதென்பதை அம்பேத்கர் விரும்பியே ஏற்றிருந்தார். எவ்வித தொந்தரவுமற்றுசௌஜன்யமாக(?)’ போய்க்கொண்டிருந்த ஆதிக்க கருத்தியல்கள் மீது அவர் இடையறாது எழுப்பிக்கொண்டே இருந்த இந்த அக்கறை மிகுந்த ஐயங்களின் வழியாகத்ததான் வரலாறு, பண்பாடு, மதம், அரசியல், தேசியம், அறிவியல், பொருளாதாரம் என்று எல்லாவற்றைப் பற்றியும் தனித்தறியும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டம் உருப்பெற்றது எனலாம்

2.  
தனது நலன்களுக்கான முழக்கங்களையும் நிகழ்ச்சிநிரல்களையும் ஒட்டுமொத்த தேசம்/ இனத்துக்கும் உரியது போன்ற தோற்றத்தோடு ஆதிக்கச்சக்திகள் முன்வைக்கும்போது அவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலும் அரசியல் நேர்மையும் இன்றி பெரும்போக்குக்குள் கரைந்தும் முழுகியும் கும்பலில் கோவிந்தா போடும் சரணாகதிப்போக்கு பெருகிவரும் நாளில்அக்கறை மிகுந்த ஐயங்களை/ கேள்விகளை எழுப்பும் அம்பேத்கரின் பண்புமிகுந்த முக்கியத்துவமுடையதாகிறது. தனிமைப்பட்டுவிடக்கூடாது என்கிற சாரமற்றக் காரணத்தை சொல்லிக்கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் ஆதிக்கச்சக்தியினர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்தும் நெளிந்தும் தமது சொந்த நிகழ்ச்சிநிரல்களை அமைத்துக்கொள்ளும் போக்கில் ஒரு பெரும் முறிப்பு தேவைப்படுகிறது. அம்பேத்கர் ஓரிடத்தில் குறிப்பிடுவதுபோலஉருகி மறையாமல் உயர்ந்து நின்று போக்கையே மாற்றுகிற ஆற்றின் பாறையாக சுயமான நிகழ்ச்சிநிரல்களை முன்வைத்து அதன்மீது காலச்சக்கரத்தை சுழலவிடுகிற வல்லமையை அடைந்தேயாக வேண்டியுள்ளது. சொல்பேச்சு கேளாதவர்கள், கீழ்ப்படியாதவர்கள், குதர்க்கவாதிகள், விதண்டாவாதிகள், குட்டையைக் குழப்புகிறவர்கள், நிம்மதியைக் கெடுப்பவர்கள், சீர்குலைவுவாதிகள், துரோகிகள், கோடாரிக்காம்புகள், சந்தேகப்பேர்வழிகள் என்கிற அவப்பெயர்களையும் பழிச்சொற்களையும் ஆதிக்கச் சக்திகளிடமிருந்து பெறுவதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒவ்வொருவரும் அவர்களது அமைப்புகளும் தயாராக வேண்டியிருக்கிறது.  

3.  
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றை ஆதாரமாக கொண்டு  கருத்தியல் தளத்திலும் களத்திலும் ஒரு முழுநேரப் போராளியாக இயங்கிய அம்பேத்கரது தனிப்பட்ட வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இந்த நாட்டின் அரைநூற்றாண்டுகால நிகழ்ச்சிநிரலை தீர்மானிப்பதாயிருந்தன. எனவே அவரது வாழ்க்கை வரலாற்றை எந்தப்புள்ளியிலிருந்து வாசிக்கத் தொடங்கினாலும் அது இந்த நாட்டின் வரலாற்றின் ஒருபகுதியாக இருப்பதை கவனப்படுத்தும் தொடர்முயற்சியின் ஒரு கண்ணியாகஅம்பேத்கர் டைரிவெளிவருகிறது

4.  
இந்த சாதியச்சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைத்துவரும் அநீதிகள் புறக்கணிப்புகள் அவமானங்களின் ஒருபகுதியையே தனக்கும் இழைத்துவருகிறது என்பதை பரந்ததளத்தில் வைத்து ஏற்படுத்திக்கொண்ட புரிதலின் அடிப்படையில் - பாதிக்கப்பட்டவரின் செயற்பாட்டுணர்வை அவர் எட்டினார். அதாவது பாதிக்கப்பட்ட தன்னுணர்வை தன்னொத்தவர்களது கூட்டுணர்வின் பகுதியாக கண்டுணர்ந்து அதன்பேரில் தனது செயற்புலங்களை தீர்மானித்து தேர்ந்து கொண்டார். ஆகவே கல்வியாளராகவும் தத்துவவாதியாகவும் வரலாற்றாளராகவும் பொருளியல் அறிஞராகவும் சட்ட வல்லுனநராகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அணிதிரட்டுகிறவராகவும் சமத்துவத்தை முன்வைத்த அரசியற் செயற்பாட்டாளராகவும் பௌத்த மீட்டுருவாக்கியாகவும் அம்பேத்கர் பன்முக ஆளுமை கொண்டவராக திரள்பெற்றது விதிவசத்தாலோ தற்செயலாகவோ அல்ல என்பதை விளங்கிக்கொள்ள இந்த டைரி துணைசெய்கிறது. அம்பேத்கர் என்கிற தனிமனிதரின் ஆளுமைப்பண்புகளை வடிவமைப்பதில் புறச்சூழலின் தாக்கங்களுக்கு நிகராக புறச்சூழலை வடிவமைப்பதில் தனிமனிதரின் ஆளுமைப்பண்புகள் செலுத்திய தாக்கங்களையும் குறுக்கீடுகளையும் உரியவகையில் மதிப்பீடு செய்வதற்கான தரவுகளைப்போல அவரது வாழ்வின் தெறிப்பான புள்ளிகளை அடிக்கோடிட்டு ஒளிரச்செய்யும் வகையில் அன்புச்செல்வம் தொகுத்திருக்கிறார். பொறுமையான உழைப்பு, அறிவாற்றல் ஆகியவற்றின் பயனாய் விளைந்த தனது திறத்தையும் சிறப்பியல்புகளையும் கொண்டு அம்பேத்கர் ஒவ்வொரு நாளையும் எத்தகைய விளைதிறனோடு (Productive?)  நிறைவடையச் செய்திருக்கிறார் என்பதை இவ்வாறு தொகுத்துப் பார்க்கும்போது நாளையும் பொழுதையும் பயனற்ற விசயங்களிலும் வேலைகளிலும் வீணழிப்பது குறித்த குற்றஉணர்ச்சி சட்டென பற்றிப்பரவுகிறது

5.  
தொந்தரவில்லாத ஒரு பொம்மையாக புகைப்படமாக சிலையாக சினிமா பிம்பமாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே அம்பேத்கரை திரித்துச் சொருகும் வேலை பலமுனையங்களில் மும்முரமாக நடக்கிறது. ஆனால் ஆதிக்கச்சாதியினர் அம்பேத்கர் என்கிற பெயரை அவரது சிலையை அல்லது வேறு எவ்வடிவிலான அவரது பிம்பத்தையும் தங்களுக்கு எதிரான ஒரு கருத்தியலாக மிகச்சரியாகவே கருதுகின்றனர். அதனாலேயே தங்களது சகிப்பின்மையையும் துவேஷத்தையும் ஓயாது வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர்.  கொக்கோகம் முதல் குவாண்டம் தியரி வரை, சரோஜாதேவி புத்தகம் முதல் சார்த்தர் வரை எது கிடைத்தாலும் உடனே படித்து தீர்த்துவிடுவதாக பம்மாத்து செய்யும் தீவிர வாசகர்களும், தனக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் கொட்டிக்கிடந்தாலும் சீந்தமாட்டார்- ஆனால் அரதப்பழசான ஒரு புத்தகம் கிடந்தாலும்கூடகாயிதத்தைக்கண்ட கழுதையைப்போலஉடனே லபக்கென எடுத்துக்கொள்வார் என்கிற புகழ்மொழிகளுக்குரிய புத்தகப்பிரியர்களும் அம்பேத்கர் எழுதிய ஒரு கட்டுரையைக்கூட வாசிக்காமல் இருப்பதோ அவரது தொகுப்பு நூல்களை வாங்காமலிருப்பதோ தற்செயலானதல்ல. எனது அலமாரியில் உள்ள அம்பேத்கரின் தொகுப்புநூல்களில் ஒரு தொகுதிகூட இன்னும் யாராலும் கடன் கேட்கப்படவுமில்லை, களவாடப்படவுமில்லை

இந்நிலையில் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அம்பேத்கர் வழங்கிய மேதமைமிக்க பங்களிப்புகளின் சுருக்கத்தையாவது உடனடியாக பரந்துபட்ட மக்கள்திரளுக்கு கொண்டுசென்றாக வேண்டியுள்ளது.  அதற்காக அம்பேத்கரின் பேச்சும் எழுத்துமாக பதிவாகியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குறிப்புகளை கோர்வைப்படுத்தி வெளியாகும் அம்பேத்கர் டைரி, அவரை ஆழ்ந்து கற்பதற்கான ஆர்வத்தை தூண்டும் ஈர்ப்பினைக் கொண்டுள்ளன.

6.  
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குரியதல்ல என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். ஆனாலும் இந்த டைரி குறிப்பிடுவதுபோல 1933 ஏப்ரல் 14 அன்று மகாராஷ்ட்ராவில் பரவலான அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நாடு கடந்தும் பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றன. ஆனால், இந்நூல் அவரது பிறந்தநாளில் வெளியாவது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அல்ல எனவும் அம்பேத்கரை பரவலாக்கும் பேராவலில் விளைந்த எளிய முயற்சி எனவும் கருதுகிறேன். ‘‘நான் ஒரு மரம் நட்டுள்ளேன். அதற்கு நீங்கள் நீருற்றி வளர்த்தால் அதன் நிழலும் பழங்களும் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையேல் நீங்கள் வெயிலில் காயவேண்டியதுதான்...’’ என்று அம்பேத்கர் ஒரு சாபம்போல விடுத்துப்போன எச்சரிக்கையை உரியவகையில் உள்வாங்கிக்கொண்ட அன்புச்செல்வம் தன் பங்கிற்கு ஊற்றிய நீராக இந்நூலை ஏந்திக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்
ஆதவன் தீட்சண்யா
9.4.13, ஒசூர் - 635109





இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...