சனி, நவம்பர் 12

உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்...* ஆதவன் தீட்சண்யா


1.கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலகவரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக கதையைப் படிக்கத் தொடங்குதல் நலம். இந்த நாடு மூன்றுபக்கமும் சூழ்ந்திருக்கும் கடலில் மூழ்கப் போகிறதா அல்லது நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கடனில் மூழ்கப்போகிறதா என்ற பட்டிமன்றங்களும் பந்தயங்களும் பலகாலமாய் நடந்துகொண்டிருந்த நிலையில், குளோபலாண்டி சுவாமிகளின் அருளுரையின் பேரில் இந்தநாட்டின் பெயர் லிபரல் பாளையம் என்று மாற்றப்பட்டதை தாங்கள் ஏற்கனவே அறிவீர்கள் ( காண்க- லிபரல்பாளையம் கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவனோபா வழங்கியத் தீர்ப்பு- ஆதவன் தீட்சண்யா).

2. கதையின் காலம்- கி.பி.2008 தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அதற்கும் முன்பிருந்தே லிபரல்பாளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆட்சியில் பங்குபற்றியிருந்த பலரும் முயற்சித்தே வந்துள்ளனர். ஆனால் 2008ல் தான் முழுமையாக தமக்குத்தாமே விலைகூறிக்கொள்வதில் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துக் கொள்ள முடிந்துள்ளது.
  
3. கதைமாந்தர்- இப்பத்தியில் குறிப்பிடப்படுபவர்கள்  கதாநாயகர்/வில்லன்/ வில்லனின் கையாள்/ காமெடியன் என்று எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் பாங்குகளை பயின்று பெற்றிருப்பவர்கள். அ) இவர்களில் முதலாவதாய் வருகிற வெளியுறவுத்துறை அமைச்சர் உண்மையில் பரிதாபத்திற்குரியவர். அரசியலில் அவர் எப்போதும் மாப்பிள்ளைத் தோழன் என்றே அழைக்கப்படுகிறவர். தான் ஒருபோதும் மாப்பிள்ளையாக முடியாது என்ற கவலை அவரை நிரந்தரமாய் பீடித்திருக்கிறது. இவரது பெயரை வேண்டுமானால் பி.எம் என்று சுருக்கியழைக்க முடியுமே தவிர ஒருநாளும் இவர் பி.எம்மாக முடியாது என்பது உலகறிந்த ரகசியம். சிக்கலான பிரச்னைகளை விவாதிக்க வேண்டி வரும் போதெல்லாம் நாக்கு சுளுக்கிக்கொண்டதாக ஆஸ்பத்திரியில் போய் பிரதமர் படுத்துக் கொள்ள அவருக்காக இவர் பேசி பலரிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கம் இவரது இயல்பிலேயே இருக்கிறது

.) மத்திய சுகாதார அமைச்சர். பொதுஇடத்தில் தும்மக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவந்ததற்காக பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அவர் முன்வைத்த வாதங்களுக்கு எந்த அஞ்ஞான,விஞ்ஞான, மெய்ஞான அடிப்படையும் இல்லையெனவும், தும்மல் தடுப்பு மருந்துக் கம்பெனியொன்று வழங்கியமொய்ஞானமே காரணமென்றும் புலனாய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதை உலகறியும். எல்லா மந்திரிகளையும்போலவே பாத்ரூமைத் தவிர மற்றெல்லா இடங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ செல்வதையே இவரும் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஏழேழு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்ட நிலையில்இதுவரை சம்பாதித்ததை காப்பாற்றிக்கொள்ளவாவது மந்திரியாக நீடித்திருக்க வேண்டும் என்ற பதைப்பில் இருப்பவர்.

இவரது தந்தையார் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். இவரது பல்வேறு உரைகளை நீங்கள் தொலைக்காட்சிகளின் காமெடி டைம் நிகழ்ச்சிகளில் கண்டு களித்திருக்கலாம். ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என யோசிக்காமல் அம்பது ரூபாயில் ஒரு கட்சியைத் தொடங்கி சகல அதிகாரங்களையும் வருமானங்களையும் அதன்வழியாகவே தேடியடைந்திருக்கும் அரசியல் வித்தகர்

) அடுத்து வருகிற தொலைதொடர்புத்துறை அமைச்சர் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. அவரது கட்சி மந்திரிமார்களின் பெரிய குரூப் போட்டோவின் கடைசிவரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தவர். கட்சித்தலைவரின் பங்காளி பாகாளிச் சண்டையில் திடுமென ஒருநாள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டவர். தொலைத்தொடர்புத்துறைக்கு பொறுப்பேற்றதிலிருந்து அதை தொலைத்துக் கட்டும் ஊழல்களில் ஈடுபடவே நேரம் போதாமல் அல்லாடிக்கிடக்கிற இவரும் இக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறவர்

) உள்துறை அமைச்சரின் பாடு அத்தனை எளிதானதல்லஅவர் முந்நாளைய நிதிமந்திரி என்ற வகையிலும், இந்நாள் உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் நம் கதைக்குத் தேவைப்படுகிறவர். அதிமுக்கியமான கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுவதுதான் அவருடைய சாமர்த்தியமாய் இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரிட்டனில் படித்த அறிவாளியாயிற்றே...? இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா  அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும்? எல்லாப்பயலும் இறுக்கி மூடிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் தானே என்று குயுக்தியாக யோசிப்பவர். நாலேமுக்கால் வருஷம் நிதியமைச்சராயிருந்து நாட்டை கடனாளியாக்கி சிகாமணி. இவரால் உள்துறை எப்படி உளுத்துப் புழுத்து நாறப்போகிறது என்பது இனிதான் தெரியும்

4. திருவாளர் லிபரப்பன்- கஷ்டநஷ்டங்களிலிருந்து காப்பாற்றும் என நம்பி குலதெய்வத்தின் பெயரை சூட்டிக்கொள்கிற நாட்டார் மரபு மற்றும் அதற்கிசைந்த உளவியல்படியே, லிபரலைசேஷன் என்ற வார்த்தையின் சில கூறுகள் இவரது பெயரில் காணக்கிடைக்கின்றன. டீ சர்ட், ஏழெட்டு பாக்கெட் வைத்த பெர்முடா டவுசர் அணிந்து ஸ்டைலாக .டி.எம்மில் நுழைந்து கார்டை சொருகி பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் தான் மிகமிக நவீனமானவனாக மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமித உணர்வில் திளைத்துப் போகிறவர். இவரது துணைவியார் பரிதாபசுந்தரி, மகள் கன்ஸ்யூமரேஸ்வரி, மகன் டாலராண்டி இவர்கள் வழியாகத்தான் இந்த கதையை சொல்லவிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது...  என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையத்தின் கதை இது.

1
ஏடிஎம்மிலிருந்து வெளியே வந்த பணத்தாள்களில் தேசப்பிதாவின் படத்திற்கு பதிலாக புஷ்ஷின் படம் அச்சாகியிருப்பதைக் காணும் ஒருவர் இயல்பாக எந்தளவிற்கு பதற்றமடைய வேண்டுமோ அதைவிடவும் ஆயிரம் மடங்கு கூடுதலாக திருவாளர். லிபரலப்பன் பதறிப் போனதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவரைப் பொறுத்த வரை ஏடிஎம் என்பது வெறும் இயந்திரமல்லஅது பணம் கொட்டும் தெய்வம். கையடக்க அட்டையை உள்ளிழுத்து பணத்தை வெளித்தள்ளும் அற்புதங்களின் பெட்டகம். அவர் ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் வழிபாட்டுத்தலமாகவே பாவித்து வந்திருக்கிறார் இதுகாறும். ரிசர்வ் வங்கியிலிருந்து ஆகாயமார்க்கமாகவோ அதலப்பாதாள வழியாகவோ  ஏடிஎம்முக்குள் அப்பழுக்கற்ற பணம் நேரடியாக நிரப்பப்படுகிறதென்றும் அதில் பழுதான ஒருவிசயமும் நடக்காதென்பதும் அவரது நம்பிக்கை. எனவே தேசப்பிதாவின் படமிருந்த இடத்தில் புஷ்ஷின் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள்களை இயல்பானதொரு நடைமுறைத் தவறாகக் கருதி அவரால் சமாதானம் அடைய முடியவில்லை. கதவுக்கருகில் போய் நின்று கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் நுழைவதைப் போன்ற பாவனையை தனக்குத்தானே வலிந்து உருவாக்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை அட்டையைச் சொருகினால், வெளிவந்த அத்தனைத் தாள்களிலும் புஷ்ஷின் படம்

லிபரலப்பன் கள்ளநோட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரேயன்றி அது கறுப்பா சிவப்பா என்று இதற்குமுன் அறிந்திலர். எனவே வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றும் இவை கள்ளநோட்டுகள் தான் என்ற முடிவுக்கு வர அவருக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. இப்படியும் உண்டா ஓர் அட்டூழியம்? ஏடிஎம்மில் கள்ளநோட்டா? ஒரு இயந்திரம் தனக்குத்தானே கள்ளநோட்டை அச்சடித்துக்கொள்ள முடியுமா? வங்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ? இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது? நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம்? ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப்பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா? .சி, .சி ஆட்சியில் இப்படியெல்லாம்கூட நடக்குமோ...  நோ சான்ஸ் என்று தலையை உலுக்கிக் கொண்டார் லிபரலப்பன். மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்க அட்டையை சொருகிசொருகி இழுத்ததில் அவருடைய இருப்புத்தொகையில் சொற்பம் தவிர முழுவதையும் எடுத்துவிட்டிருந்தார். ஒருநாளைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாதென்ற கட்டுப்பாடும்கூட விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது அவருக்கு.

இன்னொருமுறை சோதித்துப் பார்ப்போம் என்று அவர் இம்முறை தன் மனைவி பரிதாபசுந்தரியின் ஏடிஎம் அட்டையை சொருகினார். (பெண் ஊழியர்களின் ஏடிஎம் அட்டைகள்- அவற்றின் ரகசிய குறியீட்டு எண்ணுடன்- அவர்தம் கணவர்மாரால் கைப்பற்றப்பட்டுவிட்டதை நாடறியும். நவீனமயம் பெண்ணின் சம்பாத்தியத்தியம் முழுவதையும் ஆண்கள் அபகரித்துக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்ற உண்மையை இந்த வரிகளின் மூலம் கண்டறிவது பெண்ணிய நோக்கிலான ஆய்வாளர்களின் வேலை. நான் எழுதுவதை நானே பேசுவது ஜெயமோகத்தனம்). மனைவி தன்னிடம் கொண்டுள்ள அதே பதிபக்தியை, மனைவியின் அட்டையிடமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அவர் அவ்வாறான மனநிலையோடுதான் அட்டையை சொருகினார். ஆனால் ஒன்றும் கதை நடக்கவில்லை. இதற்கு வெளிவந்த பணத்தாள்களிலும் புஷ் படம்தான் அச்சாகியிருந்தது. இம்முறை அவருக்கு கிடைத்த கூடுதல் அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், புதுநோட்டுகள் தீர்ந்துபோன நிலையில் வெளிவந்த பழைய நோட்டுகளிலும் புஷ் படமே இருந்ததுதான். அப்படியானால் புஷ் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறதா.... தான் உட்பட யாருமே இதை கவனிக்காமல் போனதெப்படி? அல்லது இதுதான் இப்போது அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளா?

ஏடிஎம் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை இப்படி நட்டநடுராத்திரியில் பொய்த்துக் கொண்டிருப்பது குறித்து மிகுந்த அலைக்கழிப்புக்குள்ளானது அவரது மனம். தன்கையில் இருக்கும் தாள்கள் தெரிவிக்கிற உண்மை என்னவென்பதை அறியத் துணியாமல் அல்லாடினார்ஏதோவொரு கொடிய மர்மத்தின் பிடியில் மாட்டிக்கொண்டது போன்ற தத்தளிப்பு அவரை பிடித்து விழுத்தாட்டியது. உள்ளேயிருக்கும் தைரியம் வியர்வையாக வெளியேறி உலர்ந்துகொண்டிருந்ததுஇதை உடனடியாக யாரிடமாவது தெரிவிக்கலாமென்றால் அங்கே ஒருவருமில்லை

லிபரலப்பன் திண்டாடித்தான் போனார். வீட்டுக்குத் திரும்பும் எண்ணமெல்லாம் பின்னுக்குப் போய் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற நினைப்பே அவரை ஆட்கொண்டது. விடிந்ததும் பால்வாங்குவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பணம் தேவையாயிருக்கிறபோது இந்த பொம்மைச் சீட்டுகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்...? பணம் எடுத்ததற்கான ரசீதுகளை திரும்பவும் கவனமாகப் படித்துப்பார்த்தார். வங்கியின் பெயர், நாள், நேரம், மொத்தமுள்ள  தொகை- எடுத்தத் தொகை- மீதமுள்ள தொகை என்பதெல்லாம் தெளிவாகத்தான் அச்சாகி வந்திருந்தது. அப்படியானால் எங்கே நடந்திருக்கும் இப்படியான கோளாறு என்று எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரமாக அந்த அறைக்குள்ளேயே இருக்கவும் அவருக்கு பயமாக இருந்தது. புஷ் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு வகையாக சிரிப்பதுபோலிருந்தது. அந்த சிரிப்பில் வெளிப்பட்ட ஏளனமும் இளக்காரமும் அந்த அறை முழுக்க நிரம்பி உன்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று பரிகசித்தபடி பிடறியில் கைவைத்து வெளியே நெட்டித் தள்ளுவதைப்போல உணர்ந்தார் லிபரலப்பன்ஏதேனும் மோசடிவேலைக்காக தான் அங்கேயிருப்பதாக யாராவது நினைத்துக் கொண்டாலும் மானக்கேடாகிவிடுமே என்ற எண்ணம் அவரை மேலும் நடுக்குறச் செய்தது.

அவசரமாக வெளியேறி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். தான் நிதானத்தில் இல்லை என்பது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. இந்நேரத்திற்கு வந்தால்தான் ஏடிஎம்மில் கூட்டம் இருக்காது என்று நினைத்து 12 மணிக்கு வந்து இப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள நேர்ந்ததே என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். வங்கிக்குள் போய் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் கொடுக்கவும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் செய்வதில் எரிச்சலுற்று, எதிர்ப்படும் ஊழியர் ஒருவரிடமாவது சண்டையிட்டு, சமாதானமாகாமல் வீட்டுக்கு வந்து வீட்டிலிருப்பவர்களிடமும் எரிந்துவிழும் சள்ளையிலிருந்து விடுபடும் பொருட்டு தமது நிதிசார் நடவடிக்கைகளை இப்படி ஏடிஎம்முக்கு மாற்றிக்கொண்ட முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இந்த லிபரலப்பன். ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதும், போய் சீக்கிரமா செலவழிச்சுட்டு பத்திரமா திரும்பி வரணும் என்று ஏடிஎம் மிஷினே வாசல்வரை வந்து கையாட்டி வழியனுப்பிவைப்பதைப் போன்ற பிரமைக்குள் லிபரலப்பன் வாழ்ந்துவந்த காலம் ஒன்றிருந்தது

எதற்கும் இருக்கட்டுமே என்று ஆயிரம் ஐநூறை கையில் வைத்துக்கொள்ளும் பழக்கம் .டி.எம்.முக்கு மாறிய பிறகு லிபரலப்பனிடம் அடியோடு இல்லாமல் போய்விட்டிருந்தது. ‘முக்குக்கொரு ஏடிஎம் இருக்கிறப்ப சேஃப்டி இல்லாம பணத்தை ஏன் கையில் வச்சிருக்கணும்.... தேவைன்னா ஒரு நிமிஷத்துல எடுத்துக்கலாம்...’ என்று வியாக்கியானம் செய்துகொண்டிருந்த காலமாக அது இருந்தது. வங்கிக்குப் போய் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், இன்னும் இப்படி கட்டுக்குடுமி  ஆசாமிகளாய் இருக்கிறார்களே என்று  இவருக்கு கடுப்பாக இருக்கும். தன்னைப்போல் நவீனத்துக்கு மாறாமல் இப்படி லோல்படுகிறார்களே என்று அடுத்தவர்களை இளக்காரமாய்ப் பார்க்கும் இவரது பெருமித உணர்வு நெடுநாள் நீடிக்காமல் சடுதியில் காணாமல் போகத்தொடங்கியது. ஏடிஎம் மையங்களில் எப்போதும் நீண்டவரிசைகள் தென்படத் தொடங்கின. சம்பள பட்டுவாடாவிற்காக தனியே எதற்கு பணியாட்கள் என்று கம்பனி நிர்வாகங்களும் அரசாங்கங்களும் தங்களது ஊழியர்கள் கையில் ஏடிஎம் கார்டைத் திணித்துவிட்டதில் ஆரம்பித்ததுதான் இந்த கெடுதலின் தொடக்கம். அவர்களோடு நில்லாது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருமே கையில் கார்டையும் வைத்திருந்தனர். கணக்கில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஏடிஎம்முக்குள் நுழைந்து கார்டைச் சொருகி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே வருவது அவர்களது வாடிக்கையாயிருந்தது

முன்புபோல் நினைத்தநேரத்திற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வரமுடியாத நிலை உருவாகி விட்டது. வங்கியில் என்றால் நிழலாவது இருக்கும். மெத்துமெத்தென்ற இருக்கைகள் இருக்கும். இங்கு எதுவுமில்லை. இயந்திரம் மட்டும் குளிரூட்டப்பட்ட அறையில். தன்னைப்போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், மழையோ வெயிலோ வெட்டவெளியில் கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொண்டபடியே தனக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் வரிசையில் கரைந்துபோவதைத் தவிர அவருக்கு வழியொன்றும் இருந்திருக்கவில்லை. ச்சே... நம்ம பணத்தை எடுக்க நாய்போல காத்துக்கிடக்க வேண்டியிருக்கே... என்று நினைத்து நினைத்து மருகத் தொடங்கினார்

கண்டவனுக்கெல்லாம் கார்டு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்... மினிமம் பேலன்ஸ் பத்தாயிரம் இருபதாயிரம்னு வைக்கணும். அப்பத்தான் இந்த சில்லரைகளெல்லாம் கழியும். அப்படி கழித்துக் கட்டும் துணிச்சல் இல்லையென்றால் வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு கூடுதலான இடங்களில் இயந்திரங்களை நிறுவணும் என்று வங்கி நிர்வாகத்துக்கு புகார் கடிதங்களை அனுப்பிவிட்டு அதன் நகல்களை ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு அனுப்புவதும் அவரது வேலைகளில் ஒன்றாகியது. எவ்வளவு அற்புதமானதொரு இயந்திரத்தை இப்படி எடைபார்க்கிற மிஷின்போலவும் ஜாதகம் கணிக்கிற கம்ப்யூட்டர் போலவும் ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் சிலநேரங்களில் ரத்தக்கொதிப்பு வந்தவர்போலக்கூட ஆகிவிடுவதுமுண்டு. தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த ஏடிஎம்மை தராதரமில்லாத மற்றவர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதாக பாவித்துக்கொண்டு எப்போதும் பொருமும் மனநிலைக்குள் அவர் வீழ்ந்தது இந்தகாலத்தில்தான். எனவே யாருமறியாமல் தன் ஆசைக்கிழத்தியை கண்டு வருகிறவரைப்போல, இரவு உணவுக்குப் பிறகு சற்றே கண்ணயர்ந்துவிட்டு நடுநிசி வேளையில் எழுந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்குக்கு கிளம்புவார். யாருமற்ற கண்ணாடிஅறைக்குள் இவருக்காகவே தனித்தேங்கிக் காத்திருப்பதைப் போன்று நிற்கும் ஏடிஎம்முக்குள் நுழைந்து, இப்படி அளவளாவிக் கிடந்த நம்மை பிரித்துவிட்டார்களே பாவிகள் என்று புலம்புவார். இந்த புலம்பல் உச்சமாகி ஏடிஎம் இயந்திரத்தை ஆதூரமாய் தடவிக்கொடுத்துவிட்டு பணம் எடுக்காமலேகூட திரும்பிவிட்ட நாட்களுமுண்டு

ஆனால் எல்லாவற்றுக்கும் இன்று ஒரு முடிவு வந்துவிட்டதுபோல் உணர்ந்தார்தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் படம் அச்சடிக்கப்பட்ட அந்த தாளைப் பார்க்கப்பார்க்க அவருக்கு பைத்தியம் பிடிப்பது போலானது. பலவிதமான யோசனைகளின் நெருக்குதலில் தன்னிலை மறந்து பிதற்றம் கண்டுவிட்டது அவருக்கு. புத்தம்புது தாள்களாயிருந்தால்கூட இப்போதுதான் இந்த தவறு நடந்திருக்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனையும் பழைய நோட்டுகள். அப்படியானால் வெகுநாட்களாய் இந்த நோட்டுகள் புழக்கத்திலிருப்பதாகத்தானே அர்த்தம்? என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை? கள்ளநோட்டு என்றால் ராத்திரியில் எங்காவது மூத்திரச்சந்தில் அரைவெளிச்சத்தில் புழங்கக்கூடியது என்று கேள்விப்பட்டிருந்த நிலை மாறி இப்படி ஜகஜ்ஜோதியாய் அலங்கரிக்கப்பட்டுள்ள  ஏடிஎம்முக்குள் இருக்கக்கூடியதாக மாறியிருக்கிறதென்றால் என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தாறுமாறாய் ஓடின பல கேள்விகள்.

தனது ஆதங்கம் பணத்தாளில் புஷ் படம் இருப்பது குறித்ததா அல்லது அது கள்ளநோட்டாய் இருப்பது குறித்ததா என்ற அடுத்தக்கேள்வி அவரை மறித்தது. அவரைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் புஷ் அபிமானிதான். புஷ்ஷைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்கத் தலைவன் லோகத்திலேயே இல்லை என்பது அவரது அபிப்ராயம். ஒரு அஞ்சு வருஷம் மிலிட்டிரி ரூல் வந்தாத்தான் நாடு உருப்படும் என்றோ, மறுபடி ஒரு தடவை எமர்ஜென்சி வந்தாத்தான் எல்லாம் கரெக்டாகும் என்றோ உளறித் திரியும் அரசியல் அரைவேக்காடுகளை மிஞ்சும் வகையில் இவர், உலகத்தையே ஒரு அஞ்சு வருஷத்துக்கு புஷ் கையில் ஒப்படைக்கணும் என்று வாதிடுகிற கட்சிக்காரர். அஞ்சு வருஷத்தில் புஷ் உலகத்தையே வல்லரசாக்கிவிடுவாராம். அதன்பிறகு நாடுகளுக்குள் சண்டைகள் வராமல் சமாதானம் நிலவுமாம். இந்த உலகத்துக்கும் வேறு உலகத்துக்கும்தான் சண்டை நடக்குமாம். ஆப்கன், ஈராக் என்று அடுத்தடுத்து பலநாடுகளை ஆக்ரமிப்பது இந்த நோக்கத்திற்காகத்தானாம்.... அதுவும்கூட, சண்டை சச்சரவில்லாமல் பலநாடுகளில் உள்ளேநுழையும்இரண்டாம் பாதைதிட்டத்தை அவர்கள் ஏற்க மறுத்ததால்தான் போர்தொடுக்க வேண்டியிருந்ததாகவும் மற்றபடி புஷ்ஷைப் போன்ற ஒரு சமாதான விரும்பியை இந்த பூலோகத்தில் காணமுடியாது என்பதும் அவரது வாதம். உலகம் முழுவதும் சுடுகாட்டு அமைதியை புஷ் நிறுவத்துடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பிவந்த நிலையிலும்கூட, புஷ்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்பதும் அவரது தனிப்பட்டக் கருத்தாயிருந்தது. எனவே அவர் ஒரு புஷ் எதிர்ப்பாளரல்ல என்பதை எடுத்தயெடுப்பிலேயே புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்லாமல், புஷ்ஷின் சீட்டு டர்ராகி ஒபாமா வந்துவிட்டப் பின்னும்கூட அவரது மனவுலகத்தில் அமெரிக்காவுக்கும் அகில உலகத்துக்கும் புஷ்ஷே ஜனாதிபதியாக வீற்றிருந்தார்.

இந்த நோட்டு, தேசப்பிதாவையும் தனது அபிமானத் தலைவரான புஷ்ஷையும் ஒருசேர அவமதிக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருப்பது குறித்த தனது புகாரைத் தெரிவிக்க காவல் நிலையம் சென்றார். காவல்நிலையம் பகலில் உள்ளதைவிட சுறுசுறுப்பாக இருந்தது. இரவுநேரங்களில் பெண்களை மட்டுமே இழுத்துவருவதை பொதுலட்சணமாய்க் கொண்டிருக்கும் இந்த காவல் நிலையங்களுக்கு அவரது வம்சத்தில் இதுவரை யாரும் படியேறியதில்லை. எனவே அவருக்குள் ஒரு நடுக்கம் பரவியது. வளர்த்ததா ஒட்டவைத்ததா என்று பிரித்தறிய முடியாதபடி பெரிய மீசையுடன் இருந்தவர்- அவர்தான் அதிகாரியாயிருக்கக்கூடும்என்னய்யா உனக்கு இந்நேரத்துல என்று மரியாதையாகக் கேட்டார். அவரது தோரணையில் நிலைகுலைந்த லிபரலப்பன் சர்வமும் ஒடுங்கிய நிலையில் பணத்தாள்களை எடுத்து மேசைமேல் விரித்தார். மேசைக்கு கீழாகவே பணம் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த அதிகாரி, மேசைமேல் துளியும் கூச்சமின்றி பரப்பிவைக்கப்பட்ட பணத்தை முதன்முதலாகப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் முழித்தார். ஏதோ பெரிய குற்றத்திலிருந்து தப்புவதற்காகத்தான் இவ்வளவுத் தொகையை வைத்து ஆசைகாட்டுகிறான் இந்த ஆள் என்று அனுமானித்த அதிகாரி என்ன விசயம் என்பதுபோல புருவத்தை நெரித்தார். பதற்றமும் பயமும் கலந்த குரலில் நடந்தவற்றை விவரித்தார் லிபரலப்பன்.

(சினிமாக்களில் கண்ட கண்டிப்பான/ கொடுமைக்கார/ மெயின்வில்லனின் கையாளான ஒரு காவல் அதிகாரியை இவ்விடத்தில் கற்பனை செய்துகொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும்) அதிகாரியின் முகம் இறுகியது. லிபரலப்பனின் ஏடிஎம் கார்டு, பணம் எடுத்ததற்கான ரசீது, இவரின் தோற்றம் மற்றும் தொனி எல்லாவற்றையும் ஒரு தேர்ந்த புலனாய்வு நிபுணரைப்போல பரிசோதித்தப்பின் தானொரு ஸ்காட்லாந்து யார்டு பரம்பரையைச் சேர்ந்தவனாக்கும் என்கிற தோரணையில் விசாரணையைத் தொடக்கினார். ‘ஏண்டா, சின்னப்பசங்க செட்டு சேர்த்து விளையாடற பொம்மை நோட்டுங்களக் கொண்டாந்து ஏடிஎம்முல இருந்து எடுத்ததுன்னு சொல்லி பேங்க்ல பணம் புடுங்க ட்ரை பண்றியாஎன்று எடுத்தயெடுப்பிலேயே ஒரு அறை விழுந்தது. (போலிஸ் மொழியில் இதை அட்மிஷன் அடி என்று சொல்வது வழக்கம். இப்படி அடி கொடுப்பதன் மூலம் ஏதேனும் புகார் கொடுக்க வருகிறவர்கள் எல்லா தவறையும் தாமே செய்துவிட்டதாகவும் அதற்குத்தான் இந்த தண்டனை கிடைத்திருக்கிறதென்றும் நம்பிக்கொண்டுஅய்யா சொல்றத கேட்டுக்கிறேங்க.. என்று பணிந்து நிற்கும் மனநிலையை உருவாக்கமுடியும்) ‘இல்ல சார், அதுவந்து...’ என்று லிபரலப்பன் பதில்சொல்ல முயன்றபோதுஎதுத்தா பேசறே ங்கோத்தாஎன்று மரியாதையாக மறு அறைவிழுந்தது. ‘புகார் கொடுக்க வந்தா அடிப்பீங்களோ... நான் இதை லேசில் விடப்போறதில்ல.. மனித உரிமை ஆணையத்துல முறையிடப் போறேன்என்றவரிடம், ‘மனித உரிமை ஆணையமாவது ... மயிர் புடுங்குற ஆணையமாவது... ஹைகோர்ட்டுக்குள்ள பூந்து ஜட்ஜ்க்கே லாடம் கட்டுனவங்க நாங்க... மூடிக்கிட்டு இருடா...’ என்று தாக்குதல் தொடர்ந்தது

இந்த தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒரேவழி இதுதான் என்று இங்கிலீசுக்குத் தாவினார் லிபரலப்பன். அதிகாரியும் இப்போது கொஞ்சம் மிரண்டுபோய் காதுகொடுக்கத் தலைப்பட்டார். ராபர்ட் கிளைவ் தொடங்கி, ஹர்ஷத்மேத்தா, டெல்ஜி, ‘சத்யம்ராமலிங்க ராஜூ, சுக்ராம்  வரை எல்லா ஃப்ராடுகளுக்கும் இங்கிலிஷ் தெரியும் என்கிற விசயம் அந்த கணத்தில் ஞாபகம் வராமல் போய்த்தொலையவே, இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவர் இப்படியான மோசடிகளில் ஈடுபடமாட்டார் என்ற மூடநம்பிக்கை அவரை வழிநடத்தியது. எல்லாவற்றையும் கேட்டு முடித்ததற்கு ஒப்புதல் போலவும் தனக்கும் ஆங்கிலம் புரியும் அல்லது தெரியும் என்பதைக் காட்டவும் ஸீ...’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவைத்தார் அதிகாரி. அதற்குப் பிறகு கனத்த மௌனம். ‘வாங்க அந்த ஸ்பாட்டுக்குப் போய்ட்டு வருவோம்என்று லிபரலப்பனையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஜீப்பைக் கிளப்பினார். மறக்காமல் ஒரு காலை வெளியே தொங்க விட்டுக் கொண்டார். அப்படி போனால்தானே அவர் அவசரமாகப் போகிறார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும்

அந்நேரத்துக்கு ஏடிஎம்மில் ஒருவருமில்லை. எவ்வளவோ வாஞ்சையொடு வந்துபோய்க் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு அறை இப்போது ஒரு திகில்மாளிகைபோல பயமூட்டியது லிபரலப்பனுக்கு. நானிருக்கேன் தைரியமா உள்ளே வாங்க என்று காவல் அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வற்புறுத்திய பிறகே அரைமனதோடு உள்ளே நுழைந்த லிபரலப்பன் இம்முறை தன்மகள் கன்ஸ்யூமரேஸ்வரியின் கார்டை சொருகி ரகசிய எண்ணையும் அழுத்தினார். தொடுதிரையில் எல்லாமே கச்சிதமாக மின்னின. ஆனால் வெளிவந்ததென்னவோ புஷ் படம் அச்சடிக்கப்பட்ட பணத்தாள்கள்தான். அதிகாரி குழம்பித்தான் போனார். ஓருவேளை அந்த ஏடிஎம் கார்டு போலியாகவே இருந்தாலும் அதற்காக நோட்டு எப்படி மாற முடியும் என்று யோசித்தபடியே அதிகாரி தனது கார்டை எடுத்து சொருகினார். அவருக்கு வந்த நோட்டிலும் அதேகதிதான்.  

இப்படித்தான் ஆகும் என்ற முன்னனுபவம் இருந்ததால் லிபரலப்பன் இதை எதிர்பார்த்துதானிருந்தார். பதற்றமும் கொஞ்சம் தணிந்தவராயிருந்தார். ஆனால் அதிகாரியால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இப்படியொரு மோசடி நடப்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் அவர் மூச்சுத்திணறல் கண்டவர் போலாகி மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு இந்தாளை வேறு அடிச்சுத் தொலைச்சிட்டமே... என்று சித்தம் கலங்கியது. ‘எதற்கும் இன்னொரு ஏடிஎம்மில் ட்ரை பண்ணலாமா?’ என்று ஜீப்பை அடுத்த தெருவுக்கு விட்டார். அங்கும் புஷ்தான் பல்லிளித்தார்

இதற்கு வங்கியின் பொறுப்பான அதிகாரிகள் தான் பதில் சொல்லவேண்டும். ஆனால் இந்நேரத்துக்கு யாரைப் பிடிப்பது என்று காவல் அதிகாரிக்குத் தெரியவில்லை. வண்டி காவல்நிலையத்திற்கே திரும்பியது. பெரிய வேட்டைக்குப் போன அய்யா திரும்பி வந்துட்டாங்க என்று ஆவல்பொங்க ஓடிவந்த ஏட்டய்யாவிடம் நடந்ததை சொல்லும்போது அதிகாரியின் குரல் மிகவும் பலவீனமாயிருந்தது. அவ்வளவுதானா எல்லாம்... இனி நல்ல நோட்டையே பார்க்க முடியாதா... என்று பிதற்றியவாறே தன் சட்டைப்பையில் சாயங்காலம் திணித்துவைத்திருந்த பணத்தை எடுத்தவர் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தது. அந்த நோட்டுகள் பூராவும் இந்த புஷ் நோட்டுக்களாக மாறியிருந்தன. பதற்றத்தோடு இன்னொரு பாக்கெட்டிலிருந்ததையும் எடுத்துப்பார்த்தால் அவையும் தப்பவில்லை.

ஏடிஎம்மில் எடுத்த நோட்டுதான் கள்ளநோட்டென்றால் தன் சட்டைப்பையிலிருக்கிறவை எப்படி இப்படி மாறமுடியும்? ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது? ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா? அப்படி மட்டும் ஏமாத்தியிருந்தா அவனுங்கள என்கவுண்டர்ல போட்டுத்தள்ளிட வேண்டியதுதான் என்று குறுக்கும்மறுக்குமாக ஓடியது யோசனை. ‘சார் அந்த பெஞ்ச்ல கொஞ்சநேரம் படுங்க... எதுவா இருந்தாலும் விடிஞ்சாத்தான் பதில் கிடைக்கும்போலஎன்று   லிபரலப்பனிடம் கூறிவிட்டு தன் இருக்கையில் சரிந்து தொய்வாக உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார் அதிகாரி. திடீரென நினைப்பு வந்தவர்போல, சார் நீங்க எதுக்கும் ஒரு கம்ப்ளய்ண்டு  எழுதிக் குடுத்துட்டு தூங்குங்களேன் என்ற அதிகாரி, கார்பன் வைத்த வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.

மற்றவர்கள் மீது ஓயாமல் புகார் சொல்லிக்கொள்வது லிபரலப்பனுக்கு வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் அவர் இதுவரையிலும் யார்மீதும் காவல் நிலையத்தில் புகாரிட்டவரில்லை. ஆனால் இன்று வேறுவழியுமில்லை. யார் என்றே தெரியாத எதிரிமீது புகார் தருவதும் ஒருவகையில் பாதுகாப்பானதுதான் என்ற சமாதானத்தோடு தாளின் தலைப்பில் பிள்ளையார் சுழி இட்டபோது அது சிறு கலங்கலுக்குப்பின் ஒரு கிராபிக்ஸ் எஃபக்டுடன்புஷ்என்று தானே மாறிக்கொண்டது. ஏதோ ஒரு மாந்திரீக வலைக்குள் மாட்டிக்கொண்டதைப்போல நடுக்கம் கொண்ட லிபரலப்பன் பெருத்த  குரலெடுத்து அதிகாரியை விளித்து தாளைக் காட்டினார். அவரது நடுக்கம் அதிகாரியையும், அவரது சகாக்களையும், தேவைப்படும்போது வல்லாங்கு செய்வதற்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களையும், இன்னபிற கைதிகளையும் பீடித்துக் கொண்டது.  

லிபரலப்பன் வெடவெடத்துக்கொண்டிருந்தார். அவருக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு கசிந்தது. பள்ளிக்கூட மாணவனைப்போல சுண்டுவிரலை நீட்டினார் அதிகாரியைப் பார்த்து. மற்ற நேரமாயிருந்தால் ஒரு சட்டியைக் கொடுத்து அதிலேயே பெய்யவைத்து தாகமெடுக்கிறபோது அதையே குடிக்கவும் வைக்குமளவுக்கு கருணை கொண்டிருக்கும் அந்த அதிகாரி இப்போது தன்னிலை பிறழ்ந்திருந்ததால், போய்ட்டுவாங்க என்பதுபோல் தலையை ஆட்டினார். வெளியே போக பயமாயிருக்கு சார், துணைக்கு வர முடியுமா என்றார் லிபரலப்பன். அது ஒன்னுதான் பாக்கி, வாங்க... என்று எரிச்சலோடு அழைத்துப்போனார் ஒரு காவலர். கழிப்பறைச் சுவற்றில் ஆண்கள் பிரிவுக்கு திரும்புமிடத்தில் வரையப்பட்டிருந்த படம் புஷ்சினுடையதாகவும் பெண்ணின் படம் காண்டலிசா ரைஸ்ஸினுடையதாகவும் மாறியிருந்ததைக் கண்டு காவலர் அலறியதில், பயத்தின் அளவுகூடி லிபரலப்பன் தன்மீதே மூத்திரம் பெய்துகொண்டார் என்பது ஒரு முக்கிய விசயமல்ல. அதற்கடுத்து நடந்தவைதான் பிரச்னையின் தீவிரத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைத்தன.  

நனைந்துவிட்டிருந்த கீழாடைகளை காயவைத்துக்கொண்டு காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த லிபரலப்பனுக்கு தன் மனைவி பரிதாபசுந்தரியுடன் உடனடியாக பேச வேண்டும் போலிருந்தது. ஒருவேளை இந்த இரவு இப்படியே என்றென்றைக்குமாக நீண்டு அவளை இனி பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து விரட்ட அவசரமாய் செல்போனை எடுத்து வீட்டின் எண்களை அமுக்கியபோதுதான் அடுத்த வில்லங்கம் தொடங்கியது. அவர் அமுக்கிய தொலைபேசி எண்களுக்கு முன்பாக 0011 என்ற ஐஎஸ்டி எண்ணும் தானாகவே சேர்ந்து கொண்டு திரையில் மின்னியது. ஆனால் அவருக்கு அது உறைக்கவேயில்லை. பழக்கதோஷத்தில் அமெரிக்காவில் இருக்கிற தன் மகன் எண்ணை டயல் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. எனவே அவர் மீண்டும் மீண்டும் ராங் நம்பராகவே வருகிறதென்று அழித்தழித்து எண்களை அமுக்கிக் கொண்டிருந்தார். பதறின காரியம் சிதறத்தானே செய்யும் என்றுஆர்ட் ஆஃப் டையிங்ஆன்மீக முகாமில் சுவாமி சுருட்டலானந்தா சொன்னதை நினைத்துக் கொண்டவர் சிறிதுநேரம் கண்களை மூடி அமைதியாய் இருந்தார். பின் முக்தியடைந்தவரின் முகபாவத்தோடு ஒரு தெளிவு பெற்றுவிட்டதான நினைப்போடு மீண்டும் எண்களை அழுத்தினார். 0011 என்றேதான் மாறின. தொழில்நுட்ப மொழியில் சொல்வதாயிருந்தால் அமெரிக்காவின் தொடர்பு எல்லைக்குட்பட்ட ஒரு பிராந்தியமாக லிபரல்பாளையம் மாறிவிட்டிருந்தது

காவல் அதிகாரி இந்த தொலைபேசி எண் மாற்றம் குறித்தும் ஒரு புகாரை எழுதித்தரும்படி கோரினார். இம்முறை பிள்ளையார் சுழிக்குப் பதிலாக சிவமயம் என்று தொடங்கினார் லிபரலப்பன். அவர் எதிர்பார்த்து பயந்தது போலவோ அல்லது பயந்து எதிர்பார்த்தது போலவோ புகாரின் கடைசிவரியை எழுதி முடித்தபோது சிவமயம் தானே புஷ்மயம் என மாறிக்கொண்டது. இதற்குமேல் தன்னால் எதுவும் முடியாது என்று பேனாவை விசிறியடித்துவிட்டு லிபரலப்பன் அழத்தொடங்கிவிட்டார். கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை? என்று வாய்விட்டுக் கதற, தன்னிடமிருந்த லஞ்சப்பணமெல்லாம் கள்ளப்பணமாய் மாறிவிட்ட சோகத்தை எண்ணி காவல் அதிகாரியும் கதற, அதிகாரி அழும்போது தாங்கள் சும்மா இருப்பது மரியாதைக் குறைவான செயல் என்று காவலர்களும் அழத்தொடங்கினர். ஸ்டேசனுக்குள் இதுவரை தாங்கள் மட்டுமே அழுதுவந்த நிலைமை மாறி போலிஸ்காரர்கள் அழத் தொடங்கியிருப்பது நல்லமாற்றத்திற்கான அறிகுறிதான் என நினைத்த கைதிகள் தமக்குள் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்

அழுதுமுடித்து ஆசுவாசம் கண்ட அதிகாரி வயர்லஸ்சில் தலைமையிடத்துடன் தொடர்புகொண்டு விலாவாரியாக விவரித்த  நொடியிலிருந்து அங்கும் களேபரம் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதையும் உஷார்படுத்தி தகவல்களும் ஆணைகளும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எல்லாவிடங்களிலும் பீதி பரவிவிட்டிருந்தது. நைட் ரவுண்ட்ஸ் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேருக்குநேராய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முச்சந்தியில் இருந்த தேசப்பிதா சிலை புஷ் சிலையாக உருமாறுவதைக் கண்டு மூர்ச்சையாகி இன்னும் மயக்கம் தெளியாமல் பிதற்றிக் கொண்டிருப்பதாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. போலிஸ் தலைமையகத்தின் சுவற்றில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் சிரிக்கத் தொடங்கியிருந்தார். ரூபாய் நோட்டில் இருந்த அதேபடம். காவல் நிலைய கக்கூஸ் சுவற்றில் சிரித்த அதே படம். எங்கும் எங்கும் புஷ். காற்றும்கூட விஷ் என்று வீசுவதற்கு பதிலாக புஷ்சென்று வீசுவதாக ஒரு குறுஞ்செய்தி கவித்திலகம் தன் அரைவேக்காட்டை அதற்குள்ளாகவே அவிழ்த்துக்கொட்டியது

விடிவதற்குள் விஷயம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பரவிவிட்டிருந்தது. ஊடகக்காரர்கள் லிபரலப்பனை மொய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்மீது  வீசும் முத்திரவாடையையும் பொருட்படுத்தாமல் அவரை ரவுண்டு கட்டி பேட்டியெடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அவரும் பெருமிதம் பிடிபடாமல் விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் அவரது பேட்டிதான். ஹெச்1பி விசாவை வாயில் கவ்விக்கொண்டு பிறந்து எல்ஐடியில் (லிபரல்பாளையம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) படித்து அதன் நியமத்திற்கேற்ப அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த அவரது மகனிடம் வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்று பேட்டி கண்டு வெளியிட்டது.

2.
எங்கும் புஷ்மயமாகி ஊரும் நாடும் உருண்டு புரண்டு கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு பெண்ணின் மரணஓலம் நிகர்த்த கதறல் யாரைத்தான் நிம்மதியாக உறங்கவிடும்? அலறியடித்து விழித்தெழுந்து ஓடிவந்தனர் அக்கம்பக்கத்தவர். லிபரப்பனின் மகள் கன்ஸ்யூமரேஸ்வரிதான் அப்படி கதறிக் கொண்டிருந்தவள். பிரம்மமுகூர்த்தத்தில் கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவளது கணவன், என்ன நடந்தது என்று விளங்காமல் மலங்க மலங்க முழித்தபடி தன் ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தான். அவளது கதறலும் நின்றபாடில்லை. லிபரப்பனின் ஏடிஎம் புகாரை விசாரிக்கும் அதே காவல்துறையினரும் மருத்துவக்குழுவினரும் வந்துவிட்டிருந்தனர். கலவியின் உச்சத்தில் தன்னுறுப்பை வெறிநாயொன்று கவ்வியதுபோலிருந்தது என்றும் அப்போதிருந்து கடுத்துக் கடுத்து ஏற்படும் வலியில் உயிர்போகிறதென்றும் அழுகையினூடாக தெரிவித்தாள். தீவிர பரிசோதனைக்குப் பிறகு அவளது உறுப்பின் ஓரங்களில் பற்கள் பதிந்திருப்பதை கண்டறிந்தது மருத்துவக்குழு. அவளது கணவன் மீது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் அவனை தனியே அழைத்து விசாரித்தபோது, அண்டைநாட்டிலிருந்து வெளியாகும் இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு அதிமுக்கிய ஆய்வுக்குப் பிறகு ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தனக்கிருந்தாலும் தன் மனைவி அதற்கு இணங்குவதில்லையாதலால் அவ்வாறான முயற்சியில் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று பிள்ளைகள் மீது சத்தியம் செய்து வாக்குமூலம் தந்தான். அவ்வாறானால் பற்குறி பதிந்தது எவ்வாறென்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்கிய மருத்துவர்குழு, அவன் பயன்படுத்தியிருந்த ஆணுறையின் மீது புஷ் உருவம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தது

அன்றிரவு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆணுறைகளை தேடியெடுத்து நுண்ணோக்கி வழியாக கூர்ந்து கவனித்ததில் புஷ்ஷின் கடைவாயில் கோரைப்பற்கள் முளைத்திருந்ததை காணமுடிந்தது. குறிப்பிட்ட அந்தநேரத்தில் கலவிகொண்டிருந்த பெண்கள் அனைவருமே கன்ஸ்யூமரேஸ்வரிக்கு நேர்ந்து போன்றே தம்முறுப்பையும் திடீரென ஒரு வெறிநாய் கவ்வியதைப்போல் வலிகண்டு அலறியதாக கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வலிக்கான காரணம் புஷ் படம்தான் என்ற முடிவுக்கு வந்தது நிபுணர்குழு.

வீட்டின் அலமாரிகளில் பிள்ளைகளின் கண்ணுக்குப்படாமல் ஒளித்துவைத்திருந்த ஆணுறைகளைத் தேடியெடுத்து சோதித்தபோது பயன்படுத்தப்படாத அவற்றிலும் புஷ் உருவம் அச்சாகிவிட்டிருந்தது தெரியவந்தது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆணுறைகளும் அதேகதிக்கு மாறியிருந்தனஅந்த உறையை மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் தன் மனைவியோடு கூடுவது தான்தானா அல்லது உறைமீது அச்சாகியிருக்கும் புஷ்ஷா என்ற கேள்வி எல்லா ஆண்களையும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டது. எல்லா ஆண்களும் ஒரேமாதிரியான உளைச்சலில் வெந்து கந்தலாகிக் கொண்டிருந்தார்கள். வெறும் படம் என்கிற நிலையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக பேருருவெடுத்து புஷ் தன்வீட்டு படுக்கையறையை ஆக்கிரமித்துக் கொண்டதாக நினைத்து நடுங்கத் தொடங்கினர்

பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டாமல் ஆண்களை பக்கம் சேர்ப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். படுக்க வருகிறவன் கூடவே இன்னொருத்தனையும் இழுத்துவந்திருப்பதைப்போல புருசனை பரிகாசமாகவும் அருவறுப்பாகவும் பார்க்கத்தொடங்கினர். இது கூட்டிக்கொடுக்கிற வேலையா அல்லது தன் மனைவியின் அந்தரங்க உறுப்பைக் காட்டிக்கொடுக்கிற வேலையா என்று கிணற்றடியிலும் பணியிடங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி அனல் பறந்துகொண்டிருந்தது. முதல்ல அவனை விரட்டி வெளியேத்திட்டு வாடா ஆம்பிளை என்பது போன்ற பார்வையின் உக்கிரம் தாங்காமல் தலைகவிழ்ந்து திரிவது ஆண்களின் இயல்பாயிற்று.   வீட்டில்தான் அண்டமுடியாமல் போய்விட்டதே என்று வெளியே போனால், ‘அமெரிக்காவுடன் கூட்டு, தொழிலில் பங்குதாரர்னு இதைத்தான் இத்தனைநாளா பீத்திக்கிட்டு திரிஞ்சிங்களாடாஎன்று பாலியல் தொழிலாளிகள் அடித்த நக்கலில் நாண்டுக்கொண்டு சாகலாம் போலிருந்தது.

பணத்தாளில் குளறுபடி ஏற்பட்ட அதேநேரத்திலிருந்துதான் ஆணுறைப் பிரச்னையும் தொடங்கியிருக்கக்கூடும் என்று மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்

பிள்ளையை பெறுவதே அமெரிக்கா அனுப்பத்தான் என்ற கனவில் சஞ்சரிக்கிறவர்களாக கிட்டதட்ட எல்லோருமே இருந்தபடியால் பணத்தாளிலும் கக்கூஸ் சுவற்றிலும் இன்னோரன்ன பொதுஇடங்களிலும் புஷ்ஷின் படம் தென்படத் தொடங்கியதும் பலரும் உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். தங்கள் வீட்டு தொலைபேசி எண் அமெரிக்காவின் எண்ணாக மாறிவிட்டதை, தங்கள் நாடு  அமெரிக்காவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுவிட்டதற்கான சமிக்ஞையாகவே பாவித்து அவர்கள் உள்ளூர மகிழ்ச்சிதான் கொண்டார்களேயன்றி வித்தியாசமாக எதையும் உணராமல்தானிருந்தனர். ஆனால் இந்த ஆணுறை விவகாரம் அப்படியல்லவே?

ஏற்கனவே கற்பு என்கிற காப்புவேலிக்குள் அடைக்கப்பட்ட தன்வீட்டுப் பெண்களின் குறிக்குள் ஒரு அயலான் சென்று வருவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அது என்னதான் புகைப்படமாய் இருந்தாலும்கூட தாங்கள் போற்றிவந்த கற்புநெறிக்கு பங்கம் விளைவிக்கிற மானக்கேடுதான் என்று ஆண்களின் குமைச்சல்  பெரும் அரசியல் சிக்கலாக மாறிவிட்டிருந்தது நாட்டுக்குள். காணும் இடங்கள் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத அந்தரங்கம் வரை புஷ்ஷால் ஊடுருவ முடிந்ததென்றால் அது ஆட்சியாளர்களின் துணையின்றி சாத்தியமாகி இருக்க முடியாது என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆணுறைகளிலிருக்கும் புஷ் படத்தை உடனே நீக்கவேண்டும் அல்லது அவற்றை எரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன் இருபத்திநான்கு மணிநேரமும் இடையறாத முழக்கங்கள் ஒலிக்கத்தொடங்கின. மக்களை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சரகத்திலேயே முடங்கிக் கிடந்த சுகாதார மந்திரி பின்வாசல் வழியாக தப்பியோட முயற்சிக்கும்போது அவரது வாகனத்திற்கு முன்பும் பக்கவாட்டிலும் திரண்டு புரள்கிறது பெருங்கூட்டம். வண்டியை மேற்கொண்டு ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியாதபடி கூட்டம் சூழ்ந்தேறியது. மந்திரியின் காரை மறித்தது மந்தையாய் அலைகிற மாடுகளோ எருமைகளோ அல்ல. மக்கள். குறிப்பாக பெண்கள். அப்பன் தயவில் ராஜ்யசபா எம்பியாகவோ மாமனார் தயவில் பத்திரிகையாசிரியராகவோ ஆவதற்கு வக்கற்றுப்போன வெறும் பெண்கள். மந்திரி மீது அவர்கள் சரமாரியாய் வீசிய அத்தனையும் ஆணுறைகள். அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள். சகித்துக்கொள்ள முடியாத துர்வாடையுடன் தன்மீது வந்து விழுகிற ஆணுறைகளை தடுக்க அவர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. காயாமல் உறைகளுக்குள் தேங்கியிருந்த விந்துத்துளிகள் அவரது முகமெங்கம் தெறித்து வழிந்ததை நல்லவேளையாக அவரது குடும்பத் தொலைக்காட்சி படம் பிடிக்கவில்லை. ஆனால் புஷ் மீது முண்டாஸர் ஷூ வீசியதற்கு இணையாக இந்த ஆணுறை வீச்சும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது. தாக்குதலால் நிலைகுலைந்த அமைச்சர் நட்டநடுரோட்டில் கூட்டத்தின் முன்னே மண்டியிட்டு அழத்தொடங்கினார். ‘இப்படி ஆணுறைகள் மீது புஷ் படம் பொறிக்கப்படுவதற்கு நானோ என் தந்தையோ என் குடும்பத்தாரோ இதில் சம்பந்தப்பட்டிருந்தால் நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து சவுக்கால் வெளுத்து தண்டியுங்கள்...’ என்றார். உனக்கும் உங்கொப்பனுக்கும் இதைவிட்டா வேற பொய்யே தெரியாதா என்று எரிச்சலோடு கத்தியக் கூட்டம் கைவசம் மிச்சமிருந்த ஆணுறைகளை அவர்மீது எறிந்துவிட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட கிளம்பியது.   

தன் ஆண்மைக்கும் மனைவியின் கற்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக புஷ் மாறிவிட்டதாக  அன்னாடங்காய்ச்சி தொடங்கி அமைச்சர் பெருமக்கள்வரை எல்லோருமே அஞ்சத் தொடங்கியதால் விஷயம் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கும் வந்துவிட்டிருந்தது. இதற்கென கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தொடர் உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தது.

3.
லிபரல் பாளையத்தின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பணம் வாங்காமலே கேள்வி கேட்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகியிருந்தனர். பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட நாளுக்குப் பிறகு  அவையின் மொத்த உறுப்பினர்களும் பங்கேற்கிற கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊடக ஆய்வாளர்கள் வியப்பு தெரிவித்தனர். பார்வையாளர் மாடங்களில் இருந்து யாரேனும் ஆணுறைகளை வீசிவிடுவார்களோ என்ற பயம் எல்லோரையுமே பீடித்திருந்தது. அவை உறுப்பினராயிருந்த பெண்கள்இது ஆம்பிளைங்க சமாச்சாரம்என்பதுபோல அமைதிகாத்தனர். அரங்குநிறைந்த காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும் களமாக பாராளுமன்றம் மாறிக்கொண்டிருந்தது.

சபாநாயகர் பழக்கதோஷத்தில்ப்ளீஸ் டேக் யுவர் சீட்என்று தொண்டைத்தண்ணீர் வற்ற கத்திக்கொண்டிருந்த போதும் புஷ் எதிர்ப்பாளர்கள் சிலரைத் தவிர பிரதமர் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் நின்றுகொண்டே இருந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு பின்புறமிருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புஷ்ஷின் புகைப்படத்திற்கு முன்பாக உட்காருவது மரியாதைக்குறைவான செயல் என்பதாலேயே தாங்கள் நின்று கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி கொறடா தெரிவித்தக் கருத்தை எதிர்க்கட்சிக் கொறடாவும் ஆமோதித்தார். கடைசியில், புஷ்ஷின் புகைப்படத்துக்கு முன்பு இருக்கையில் உட்கார மறுக்குமளவுக்கு விசுவாசம் கொண்டவர்கள், வேண்டுமானால் தரையில் முட்டி போட்டுக்கொண்டு பங்கேற்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வீட்டுப்பாடம் முடிக்காத பள்ளிக்கூட பிள்ளைகளைப்போல முட்டி போட்டிக்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கெடுத்த அக்கூட்டத்தொடரின் லட்சணங்கள் உலகில் முன்னெப்போதும் நடந்திராதவை

லிபரல்பாளையம் நாடாளுமன்ற அலுவல்விதி பன்னிரண்டின் கீழ் ஏழின்படி விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர்தான் துவக்கிவைத்துப் பேசவேண்டியிருந்தது. ‘எங்கள் ஆட்சியில் இந்தியா டாலடிக்கிறதுஎன்று அவர் சொன்னதைஎங்கள் ஆட்சியில் இந்தியா டல்லடிக்கிறதுஎன்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததாகப் புரிந்துகொண்டு கடந்தத்தேர்தலில் மக்கள் அவரது கட்சியை தோற்கடித்துவிட்டதால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துவிட்ட சோகம் அவரை நிரந்தரமாய் பீடித்திருந்தது. எனவே இப்போதெல்லாம் அவருக்குப்  பேசுவதில் பெரிய அளவுக்கு நாட்டம் இருப்பதில்லை. தூக்கத்திலிருந்து விழித்தவர்போல அவ்வப்போதுகொல்லை தாண்டிய குதர்க்கவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும்என்று அறிக்கைவிடுவதோடு தன் அரசியல்பணி முடிந்துவிட்டதாக அமைதி பூண்டிருந்தவர், விரைவில் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு கொஞ்சம் சுறுசுறுப்படைந்துவிட்டார். எனவே அமெரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்னையில் தங்கள் கட்சியின் விசுவாசத்தை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கக்கூடிய வல்லமை தனக்கு மட்டுமே உண்டென வாதிட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு

இந்த நாட்டின் தந்தையென்றும் குழந்தைகளால் தாத்தா என்றும் ஏற்கனவே அறியப்பட்டிருந்த நபர்மீது உண்மையில் எனக்கோ என் இயக்கத்திற்கோ எந்த மரியாதையும் எப்போதும் இருந்தது கிடையாது. இதேகாரணத்தால்தான் எங்களது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிப்பதில் நாங்கள் எப்போதும் பெருமைகொண்டிருக்கிறோம். ஆனாலும் புகைப்படமாகவும் சிலையாகவும் நாட்டின் பலபாகங்களிலும் நீடித்திருந்து அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்த உறுத்தலை எங்களது அன்புக்குரிய புஷ் வந்து  இப்போது மாற்றிவிட்டார் என்ற செய்தி ஆயிரம் மசூதிகளை இடித்த மகிழ்ச்சியைத் தருகிறது. நேற்றுவரை இருந்த ஒன்றை இன்று அப்பட்டமாக வேறொன்றாக மாற்றிவிடும் மோசடியை எங்களைப் போலவே புஷ்சும் திறம்பட செய்து முடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டுகிறோம்

நாங்கள் இங்கேயிருக்கிறவர்களுக்குத்தான் எதிர்க்கட்சியேயொழிய புஷ்சையோ அல்லது இப்போது ஜெயித்து வந்திருக்கக்கூடிய ஒபாமாவையோ- அவ்வளவு ஏன்- பிற்காலத்தில் அமெரிக்காவை ஆளக்கூடிய யாரோவொரு மிஸ்டர் எக்ஸ்சையோ எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இன்னும் சொல்லப்போனால், ‘அகண்ட’ , ‘ஒற்றைஆகிய எங்களின் கனவு அவர்களின் கனவுடன் மிக இயல்பாகவே ஒத்துப்போவதால் நாங்களும் அமெரிக்க ஆட்சியாளர்களும்தான் இயல்பான கூட்டாளிகளாக இருக்கமுடியும். ஒரு பழிபாவமும் அறியாத அப்பாவிகளை கொன்றொழிக்கும் மனோதிடத்தை நாங்கள் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் என்பதை    இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எல்லாக்கட்சிகளும் இந்த ஆணுறை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு திடீரென சுதேசிவெறியை கிளப்பிவிட்டு நாடகமாடுவதை எங்கள் கட்சி ஏற்கவில்லை. வழக்கமாய் அந்த நாடகத்தை நடத்துகிற நாங்களே சும்மாயிருக்கும்போது மற்ற கட்சிகளெல்லாம் இப்படி நடந்துகொள்வது ஓவர் ஆக்டாகத் தெரிகிறது. எங்களைப்போல அவர்களுக்கு இயல்பாக நடிக்கத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு ஆணுறையின் மீது படம் அச்சடிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே பல நிறுவனங்கள் ரிப், டாட்டேட், சென்டேட் என்றெல்லாம் பல பெயர்களில் அறிமுகப்படுத்தியிருக்கும்போது நமது பிரியத்திற்குரிய தலைவர் புஷ்சின் படம் அச்சடிக்கப்பட்ட ஆணுறைகளை பிரிண்டட் காண்டம்ஸ் என்று புழக்கத்திற்கு விடலாமே? நமது அண்டைநாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், புஷ்சை சந்திக்க தன்நாட்டு மக்கள் பேராவலுடன் காத்திருப்பதாக கூறியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் புஷ்சுக்காக இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் லிபரல்பாளையத்தின்மீது பெருமதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிற புஷ் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் படுக்கையறையிலும் வெட்கத்தை விட்டுச் சொல்வதாயிருந்தால் நம்நாட்டுப் பெண்களின் யோனிக்குள்ளும் விஜயம் செய்யும் தாராள மனம் கொண்டவராயிருப்பது கொண்டாட்டத்திற்குரிய விசயமில்லையா?

எதிர்க்கட்சித் தலைவரின் தொடக்கவுரையால் எரிச்சலடைந்த உறுப்பினர்கள் பலரும்அமெரிக்கான்னு வந்துட்டா ஆளுங்கட்சி எது எதிர்க்கட்சி எதுன்னு வித்தியாசமில்லாம ஆயிடுதே என்று குழம்பிப்போயினர். நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த அசம்பாவிதங்களின் பின்னே இருக்கும் மர்மங்கள் குறித்து அடுத்தநாள் அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு அவை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தநாள் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பில் நாடும் உலகமும் பார்த்துக்கொண்டிருக்க, அறிக்கையுடன் வந்த மேற்படி 3 ( ,,,) அமைச்சர்கள் உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தனர்.  

அமைச்சர்கள் தந்த விளக்கங்கள் யாருக்கும் திருப்தியளிக்கவில்லை என்ற நிலையில் அவையின் ஆயுட்காலமே முடிவடைந்துவிட்டது. அன்று நள்ளிரவில் அவை தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தருவாயில், இப்பிரச்னை முழுக்க முழுக்க புஷ் சம்பந்தப்பட்டதால் அமெரிக்காதான் விளக்கமளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஒபாமாவுக்கு அனுப்பிவைத்தது. ஒபாமாவின் பதிலுக்காக உலகமும் லிபரலப்பனும் காத்துக்கிடந்தனர்.

புஷ்சுக்கும் தனக்கும் தோலைத்தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை என்று நிரூபிப்பதா அல்லது இருவருக்குமிடையில் தோல் மட்டுமே வித்தியாசமில்லை என்று நிரூபிப்பதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்த ஒபாமா லிபரல்பாளையத்தின் தீர்மானம் புதிய தலைவலியாக வந்து சேர்ந்திருந்தது. வெள்ளைமாளிகையின் புல்வெளியில் சர்வதேச செய்தியாளர்கள் குவிந்துநிறைந்தனர். சற்றே இறுகிய முகத்துடன் காணப்பட்ட ஒபாமா அதிகம் பேசவில்லை

வெள்ளைமாளிகை சார்பாக செய்தியாளர்களுக்கு பத்திரிகைச் செய்திக் குறிப்புடன், ஒப்பந்தம் ஒன்றின் நகலும் பூதக்கண்ணாடியொன்றும் தரப்பட்டது. முந்தைய அதிபர் புஷ்சும், லிபரல்பாளையம் சார்பாக .சியும் .சியும் கையெழுத்திட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தின் நகல் அதுஒப்பந்தத்தின் முதற்பக்கத்து கடைசிவரியில் பொடியாக ஒரு நட்சத்திரத்தைப் போட்டுடெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளைஎன்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் பக்கத்திலிருந்து தொடங்கி அடுத்துவந்த 900 பக்கங்களிலும் பொடி எழுத்தில் டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் நிரம்பிக்கிடந்தது. அவற்றைப் படித்துப்பார்க்கத்தான் பூதக்கண்ணாடி கொடுத்திருந்தார்கள்

லிபரல்பாளையத்தில் நடந்துவரும் மாற்றங்கள் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று அந்நாட்டின் அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. குறிப்பிட்ட நாளின் நள்ளிரவு 12 மணியிலிருந்து லிபரல்பாளையத்தின் எல்லாமே அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டு அதன் நேரடி கண்காணிப்பில் இயங்குவதற்கு சம்மதம் என்று அந்நாட்டு அமைச்சரவை சார்பாக இந்த ஒப்பந்தத்தில் .சியும் .சியும் கையெழுத்துப் போட்டிருப்பதை நீங்களே பாருங்கள். அந்தநாள் வந்ததும் ஒப்பந்தப்படி தானாகவே எல்லாம் மாறத்தொடங்கி விட்டன. இனி புஷ்சே நினைத்தாலும் அதை மாற்றவோ தடுக்கவோ முடியாது. நிபந்தனைகளைப் படிக்காமல் காட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்கான்னு குற்றம்சாட்டும் பொறுப்பற்ற செயலை லிபரல்பாளைய அமைச்சர்கள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்என்று ஒபாமா சொல்லி முடித்தபோது டிவி பார்த்துக்கொண்டிருந்த மேற்படி அமைச்சர்கள்யெஸ் பாஸ்என்று எழுந்துநின்று சல்யூட் அடித்தனர்

இன்னும் என்னென்ன அழிமானங்களுக்கு கையெழுத்துப் போட்டிருக்காங்களோ தெரியல. இப்பவாச்சும் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முழுசா படிச்சுப் பார்ப்போம் என்று  லிபரல்பாளையத்தின் தேர்தல் களத்தில் சூடாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் பங்கெடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் நமது லிபரலப்பனும் அவரது குடும்பத்தாரும்.

---------------------------------------------------------------
*உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது...  என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையம் என்ற நாட்டின் கதை இது.

புதன், நவம்பர் 9

சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது..! - ஆதவன் தீட்சண்யா

 சகோதரி யோகி எடுத்த இந்நேர்காணல் மலேசியாவின் தென்றல் வார இதழில் (6.11.2016) வெளியாகியுள்ளது. 


1.மலேசியாவுக்கு இது உங்களின் நான்காவது பயணம்.  இந்த நாட்டைப் பற்றிய உங்களது பார்வை என்ன?

நான்கு முறை வந்திருக்கிறேன் என்றாலும் ஒரு நாட்டைப் பற்றி அபிப்ராயம் சொல்லுமளவுக்கு இங்கு எதையும் உற்று கவனித்திருக்கிறேனா என்கிற சந்தேகம் எனக்குள்ளது.  அழைத்துவந்த நண்பர்கள் கூட்டிப்போகும் இடங்களையும் மனிதர்களையும் பார்த்தேன் என்பதன்றி சுயேச்சையாக நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை என்கிற உண்மையை கணக்கில்கொண்டால் இந்த சந்தேகம் சரியெனவேப்படுகிறது. ஆனால் எடுத்தயெடுப்பில் சொல்வதானால், மிக அழகான இயற்கையமைப்பைக் கொண்டதாக தெரிகிறது மலேசியா. எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் சாப்பாட்டுக்கடைகள், அவற்றில் நிரம்பி வழியும் கூட்டம், வகைவகையான உணவுவகைகளையும் பானங்களையும் கொண்டாடி உண்ணும் ரசனை, ஒருவரை பார்த்ததும் ‘பசியாறியாச்சா?’ என்று விசாரிக்கும் உபசரணை என்று எனக்கு பிடித்த விசயங்கள் அநேகம் உள்ளன.

தலைநகரத்திலும் நாடு நெடுகிலும் அகன்று நீண்டிருக்கும் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், தொடர்வண்டிப்பாதைகள், கார் உள்ளிட்ட வாகனங்கள், விண்ணை முட்டும் கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் வணிகப் பெருவளாகங்கள் ஆகியவையெல்லாம் ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால் உங்கள் நாடு வளர்ந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இந்த வளங்கள், சொத்துகள், கட்டமைப்புகள், வசதிகள், அதிகாரங்கள் போன்றவற்றை நீதியாக பகிர்ந்துகொள்வதை நோக்கி உங்கள் சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் அக்கறையோடு ஈடுபடும் அமைப்புகளைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது. 

பொதுவெளியில் பெண்களின் நடமாட்டத்தை பெருமளவில் காணமுடிகிறது. இது பெண்கள் சுயேச்சையாக தேர்ந்துகொண்டதா அல்லது பெருகிவரும் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கான கட்டாயத்தில் ஏற்றுக் கொண்டதா என்பதை நீங்கள்தான் சொல்லமுடியும்.

பல்லினங்கள் வாழும் மலேசியச் சமூகத்தில் அவ்வவற்றுக்குள்ளும் அவற்றுக்கிடையிலுமான இணக்கமும் பிணக்கும் எவற்றின் அடிப்படையிலானது,   அவற்றினூடாக உங்கள் சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்வதற்கு எனது விருந்தாளிப் பயண அனுபவங்கள் போதுமானவையல்ல.

2. சிறுகதை, கட்டுரை, கவிதைகள்,  புதுவிசை ஆசிரியர் குழுவில் அங்கம் என  தொடரும் உங்கள் பணிகளில் பேச்சாளராகவும் களப்போராளியாகவும் இருக்கீங்க. எழுதுவதற்கும் களத்தில் இயங்குவதற்குமான செயற்பாட்டை குறித்து சொல்லுங்க.

பேச்சாளர் என்ற வகைமைக்குள் நான் வரமாட்டேன். எனது அனுபவங்களையும் படித்து உள்வாங்கியவற்றையும் பகிர்ந்து கொள்வதிலும் அது சார்ந்து உரையாடுவதிலுமே நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். களப்போராளி என்று குறிப்பிடும்படியாகவும் நான் எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்கிற அப்பட்டமான உண்மையை உங்கள் வழியாகவாவது சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறேன். அதிகாரம், அடக்குமுறை, மனிதவுரிமை மீறல் எங்கெங்கு நடந்தாலும் தலையிலே தீப்பிடித்துக் கொண்டாற்போன்ற பதற்றத்துடன் களத்திற்கு செல்கிற போராளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், அவர்களுக்கு தாங்கள்தான் போராளிகள் என்று சொல்லிக்கொள்ள தெரிவதில்லை அல்லது உரிமை கோர அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது நேரடிப் போராட்டங்களைப் பற்றி எப்போதாவது எழுதுவதாலோ என்னவோ என்னைப் போன்றவர்களுக்கு களப்போராளி  என்கிற பட்டம் சிரமமின்றி இலவசமாக கிடைத்துவிடுகிறது.   

வருடத்தில் 52 ஞாயிற்றுக்கிழமைகள், 12 நாட்கள் தற்செயல் விடுப்பு, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 15 நாட்களுக்கு அரைச்சம்பள விடுப்பு, 17 நாட்கள் பொதுவிடுமுறை என்று  எவ்வித வருமான இழப்புமின்றி ஊர் சுற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வார ஓய்வுநாள் அல்லது விடுமுறை நாட்களில் மிக அரிதாகவே வீட்டில் இருப்பேன். (மற்ற நாட்களில் வீட்டில்தானே இருக்கிறேன்?). இலக்கிய அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாளாவது வெளியூர்களுக்கு சென்றுவருகிறேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் போக்குவரத்து நிலைமைகளை அனுசரித்துப் போய் நிகழ்வுகளில் பங்கெடுத்துவிட்டு திரும்புவதில் ஏற்படும் அற்பச்சிரமங்களை சிலர் களப்போராட்டம் என்று மிகைப்படுத்தி அலட்டிக்கொள்கிறார்கள். பயணம் போவதையும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதையுமே போராட்டம் என்பதாக புரிந்துகொண்டிருப்பவர்கள், அதில் ஏற்படும் சில அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்வதையே தியாகம் போல கற்பிதம் செய்து கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, புதிய நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் அனுபவங்களையும் தருகிற பயணங்களும் சந்திப்புகளும் உவப்பானவை. இப்படி ஊர் சுற்றகிற நேரத்தில் உட்கார்ந்து உருப்படியாக எழுதலாம்தானே என்று கேட்கலாம். உருப்படியாக எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் நான் எழுதவதற்கே முன்னுரிமை கொடுத்துவருகிறேன். தவிரவும், உருப்படியில்லாத வேலைகளுக்கென்று நான் ஊர் சுற்றுகிறவனுமில்லை.

நூற்றாண்டைத் தாண்டி வளரும் ரப்பர் மரத்தினடியில்
3. இதற்கு முன்பு மலேசிய  இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த நீங்கள் இம்முறை ‘சாதியம் அறிவோம்-துறப்பதற்கு’ என்று உரை நிகழ்த்த வந்தீர்கள். மலேசியாவில் இம்மாதிரியான உரை நிகழ்த்துவதற்கான காரணம் என்ன?

தமிழ்நாட்டிலிருந்து காலனியர்களால் கப்பலிலும் பன்றிப்படகுகளிலும் அள்ளிப்போட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளுக்கும் தமிழர்கள்  கொண்டு செல்லப்பட்டு கொடியச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டதற்கு பின்புலமாக இருப்பது சாதியமே. சொந்தபந்தங்களையும் பிறந்த மண்ணையும் விட்டுவிட்டு வரமுடிந்த இவர்களில் தாயகத்தோடு இன்னமும் தொடர்பினை பேணி வருகிறவர்களால் நூற்றாண்டுகளைக் கடந்தும் சாதியை விட்டுவிட முடியவில்லை என்பது பேரவலம்தான். பெருந்தோட்டங்கள், பணப்பயிர் சாகுபடி, சுரங்கங்கள், கட்டுமானம் ஆகியவற்றுக்காக கொண்டுவரப்பட்ட விதம், பணியிடச்சூழல், வாழ்விடம், வருமானம், சுரண்டல், ஒடுக்குமுறை, இனப்பாகுபாடு உள்ளிட்டவை இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை தான் என்றாலும் அவற்றுக்கூடாக இவர்கள் சாதியுணர்வை கைவிடாமல் பேணிவருகிறார்கள். தாயகத்தில் சொந்த ஊர் எதுவெனத் தெரியாதவர்கள்கூட தமது சாதியை சந்தேகத்திற்கிடமற்ற வகையில் அறிந்துவைத்திருக்கிறார்கள். இவர்கள் தமக்கென உருவாக்கிக்கொண்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை இங்கள்ள நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடிய மலேசிய கம்யூனிஸ்ட் படையினருக்கு  சிகிச்சையளித்து, ஜப்பானியரின் சிறைக்கொடுமைகளுக்கு ஆளான
Sybil Medan Kathigasu அவர்களின் நினைவிடம், இபோ
தமிழ்நாட்டிலும் இந்தியாவெங்கிலும் கடைபிடிக்கப்படுவதைப் போன்ற தீண்டாமைகளையோ வன்கொடுமைகளையோ இவர்கள் கைக்கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதியை மறுவுற்பத்தி செய்துவிடுகிறார்கள். மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது குறைவான விகிதத்திலேயே நடக்கின்றன என்றாலும், புலம்பெயர் நாடுகளின் பூர்வகுடியினர்/ வேறு இனத்தவர் / நாட்டவர் அல்லது ஒருவேளை சாதிக்கு வெளியே திருமண உறவு ஏற்படுமாயின் அதை கலவரம் அல்லது கௌரவக்கொலையாக மாற்றாமல் கடந்துபோகிற ஒரு பக்குவத்தை எட்டியிருக்கிறார்கள். அடிப்படையில் தொழிலாளிகளாகிய இவர்களைத் தொடர்ந்து இன்னுமொரு தொகையான தமிழர்கள் வியாபாரம் அல்லது பெருநகரம் சார்ந்த நவீனத்தொழில்களுக்கான வேலைகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களனைவரும் புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகத்தவர்தான். சிறுபான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய தமிழர்கள் புலம்பெயர் நாட்டின் குடிமக்கள் என்கிற வகையிலான உரிமைகளுக்காகவும் வாழ்வியல் நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் தமக்குள்ளும், பிற இந்தியர்களோடும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் தொடர்ந்து இருத்தப்பட்டுள்ளனர் என்பதை என்னைவிடவும் நீங்கள் நேரடி அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். 

இவ்வளவுக்கிடையிலும் தாயகத்தொடர்பை பேணும் விதமாகவும் தமது சுயேச்சையான வளர்ச்சியை தாயகத்திற்கு தெரிவிக்கத் தோதாகவும் தமிழகத்திலிருந்து கலை இலக்கியவாதிகளையும் சமூக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் ஆளுமைகளையும் தங்களிடத்திற்கு அழைத்து உபசரித்து உரையாடி வருவதை தொடர்கின்றனர். ஆனால் சமீப காலமாக, தமிழகத்தில் மிகக்கொடிய சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்தி சமூகத்தை பதற்றத்தில் மூழ்கடித்து வருகிற அமைப்புகளின் தலைவர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து தங்கள் சாதியினரை அணிதிரட்டி உசுப்பேற்றும் சீர்குலைவு வேலைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சமூக நல்லிணக்கத்திலும் ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பல நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த ஆபத்தை தடுப்பதற்கான தொடக்கநிலை முயற்சிகளில் ஒன்றாக மணிமொழி ஏற்பாடு செய்த சாதியம் குறித்த விவாதத்தில் பங்கெடுக்க வந்தேன். நான் நினைத்துக்கொண்டு வந்ததைவிடவும் கேடான விதங்களில் இங்கு சாதியவாதிகளின் கைங்கர்யம் இருப்பதை உரையாடல்களினூடாக உணர்ந்து கொண்டேன்.

இபோவிலுள்ள ஈயத்தொழில் அருங்காட்சியகத்தில்
4. மலேசியத் திராவிடர் கழக ஏற்பாட்டில் நடந்த கருத்துக்களத்திலும் கலந்துகொண்டீர்கள். மலேசியத் திராவிடர் கழகத்தினரின் திராவிடக் கொள்கைகள்  அல்லது அவர்களின் திராவிட புரிதல்கள் ஏற்புடையதாக இருக்கிறதா?

அவர்களோடு இதுகுறித்து நான் அவ்வளவாக எதையும் உரையாடவில்லை. திராவிடம் என்கிற சொல் ஆரியர்களுக்கும் முன்பே இந்தியாவிற்குள் வந்த ஓர் இனம், பூர்வகுடிகளாகிய நாகர்களோடு கலந்து உருவாக்கிய ஒரு பண்பாட்டைக் குறிக்கிறது. பெரியார் ஒரு புகைப்படமோ சிலையோ டிரஸ்டோ அல்ல, ஆரிய வழிப்பட்ட வேதங்கள், யாகங்கள், பூஜைபுனஸ்காரங்கள், பார்ப்பனீயக் கருத்தியலை உள்ளுறையாகக் கொண்ட சாதியம், சாதியத்தின் தொகுப்பாக இருக்கிற இந்துமதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு கருத்தியல். 

தமிழர் என்பதற்கு மறுசொல்லாகவோ அல்லது இணையாகவோ இந்து என்கிற சொல் மலேசியத் தமிழர்களால் பாவிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வந்துள்ள முஸ்லிம்களை இந்து முஸ்லிம் என்றே சுட்டுமளவுக்கு அதன் பயன்பாடு விரிகிறது. மேலும் இந்து என்பது வெறும் சொல்லாக சுருங்கிவிடாமல் சாதி, சடங்குகள், பரிகாரப் பூஜைகள், மூடநம்பிக்கைகள், அவற்றை முன்னிட்ட பணவிரயம் நேரவிரயம் என்பனவாக தமிழர்களின் மனங்களில் தங்கி அவர்களது அன்றாட வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவர் கோவிலுக்குள் நுழையும் போதே ஒரு வழிபாட்டிடம் என்கிற வகையில் அங்கு நிலவும் பாகுபாடுகள், புறக்கணிப்புகள், ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றுவேலைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வதாக மாறிவிடுகிறது. அதன் நீட்சியாக சமூகத்தில் நிலவும் பாரபட்சங்களையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்வதற்குரிய மழுங்கல்தான்மை புத்தியில் படிந்துவிடுகிறது. திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் குறுக்கீடு செய்யவேண்டிய இடம் இதுதான் என்பதை சொன்னேன். கலந்துரையாடலின் போது மிகுந்த அக்கறையோடு  எழுப்பப்பட்ட கேள்விகள், நாத்திகம் என்பது பகுத்தறிவின் ஒரு பகுதிதானேயன்றி அதுவே முழுமையானதல்ல  என்று விவாதத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.   

5. இலக்கியத்திற்காக கொடுக்கப்பட்ட  அல்லது கொடுக்கப்படும் விருதுகள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் விருதுகளை  மறுதளிப்பதும் அதை நகைப்பு  ஆக்குவதும்  தொடர்கிறதே?  விருதுகளின் தாத்பரியம் என்ன?

இந்த தொங்குபாலத்தின் சங்கிலியில் "காதலுக்காக" நேர்ந்து கட்டப்பட்டுள்ள பூட்டுகள்
விருதுகளை இலக்கிய ஆர்வமுள்ள சில நிறுவனங்கள்/ பத்திரிகைகள்/ அரசின் கீழுள்ள கலை பண்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்புகள் வழங்குகின்றன. இதற்கான தேர்வுக்குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவற்றில் இடம்பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் எவை என்பதெல்லாம் மூடுமந்திரம்தான். பலநேரங்களில் தேர்வுக்குழு நியமனத்திலேயே ஊழல் தொடங்கிவிடுகிற போது, அந்தக்குழுவின் பரிந்துரை எந்தளவுக்கு நடுநிலையானதாக இருக்கமுடியும்?

பொதுவாக மூத்த / பிரபல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள்/ விருது வழங்கும் நிறுவனத்திற்கு வேண்டியவர்களைக் கொண்டே விருது தேர்வுக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறான எந்தவொரு குழுவும், குறிப்பிட்ட துறையில் வெளியான அத்தனை நூல்களையும் நுணுகிப் பரிசீலித்து விருதுக்கு பரிந்துரைப்பதில்லை. விருதுக்கென அனுப்பி வைக்கப்படுகிறவற்றில் இந்த தேர்வுக்குழுவினர் தமது அப்போதைய மனச்சாய்வுகளுக்கு இயைபான நூலுக்கு அல்லது எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. மனச்சாய்வை பால், சாதி, மதம், பிரதேசம், அரசியல் போன்ற காரணிகள் உருவாக்குகின்றன. எனவே எழுத்தை விடவும் பலநேரங்களில் எழுத்தாளரே பரிசீலிக்கப்படுகிறார்.   ஆகவே, இன்னாரிடம் நைச்சியமாக இளித்துக்கிடந்தால் எதிர்காலத்தில் ஏதாவதொரு விருதுக்கு பரிந்துரைக்கப்படுவோம் என்று தனிப்பட்ட தொடர்புகளைப் பேணுவது, போலியாக விசுவாசம் காட்டுவது,  இந்த மூத்த / பிரபல எழுத்தாளர்களின் அபத்தக் கிறுக்கல்களைக்கூட ஆஹாஓஹோவென பாராட்டித் தள்ளுவது, பேராசிரியர்களின் சாரமற்ற ஆய்வுகளை நுண்மான் நுழைபுலம் மிக்கது எனப் புகழ்வது போன்ற கொல்லைப்புற வழிகளை சில எழுத்தாளர்கள் கையாள்வதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தேர்வுக்குழுவினரை கண்ணி வைத்துப் பிடித்தோ குழுவிலிருப்பவரே சக உறுப்பினர்களை தமக்கு சாதகமாக வளைத்தோ தான் ஒருவருக்கு விருது தரப்படும் என்றால் அதன் மதிப்பு அந்தளவுக்கானதுதான் என்று ஒதுக்கிவிட்டுப் போகவேண்டியதுதான்.  விருதுகளால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அல்லது நூல் மீது வாசகர்களின் கவனம் குவிவது போல தோன்றினாலும் உண்மையில் அவர்கள் சொந்த வாசிப்பின் மூலமே அதன் இலக்கியப் பெறுமதியை தீர்மானிக்கிறார்கள்.

ஞாயிறு, நவம்பர் 6

ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆதவன் தீட்சண்யா

ருபாலினரையும் குறிப்பிடும்போது எல்லாம் `ஆண், பெண்' என்றுதான் நமக்குச் சொல்ல வருகிறதே தவிர, `பெண், ஆண்' எனச் சொல்ல வராது. ஆணுக்குப் பிறகுதான் பெண், ஆண்தான் முதல் பாலினம் என்பதே இயல்பு என மனதார நம்புகிறோம். ‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை’ என்பதும்கூட, ஒருவகையில் பெண் அடையவேண்டிய இலக்கு ஆண்தான் என்றே சுட்டுகிறது. ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும் என்கின்றன மத இலக்கியங்கள். இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும்.


பள்ளி ஒன்றில் தங்கிப் படிக்கும் எனது நண்பரின் மகனையும் மகளையும் பார்க்கப் போயிருந்தோம். அடுத்தடுத்த வகுப்பறையில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாதாம். அக்கா-தம்பிதான் என்றாலும் அந்த வளாகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெவ்வேறு பாலினத்தவர். எனவே, பேசினால் பிரம்படியோடு அபராதமும் விதிக்கப்படுமாம். `நேருக்குநேர் பார்த்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். `ஆசிரியர்கள் யாரும் கவனிக்காதபட்சத்தில் சிரித்துக்கொள்வோம். இல்லையேல், பிறரது கவனத்தை ஈர்க்காதபடி சைகையால் ஏதேனும் விசாரித்துக் கொள்வோம். மற்றபடி பேசிக்கொள்ள முடியாது' என்றார்கள். அந்தப் பள்ளிக்கூடம் மட்டும் அல்ல, பல தனியார் கல்லூரிகள்கூட ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் இவ்வாறான தடைகளையும் தண்டனைகளையும் அபராதங்களையும் கடைப்பிடிக்கின்றன. 

`பெண்கள், சபலபுத்தி கொண்டவர்கள். தந்தை, சகோதரன், மகன் யாராக இருந்தாலும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்ற மநுஸ்மிருதியின் துர்போதனையை இன்றளவும் கடைப்பிடிக்கும் கேவலம் கல்வி நிலையங்களிலேயே நீடிக்கிறது என்றால், அதற்கு பெற்றோர்களும் கல்வித் துறையும் அரசும் உடந்தை என்றுதானே பொருள்! 

ஒரு பெண்ணும் ஆணும் பேசிக்கொண்டாலே அடுத்த காட்சியில் அவர்களை படுக்கையறைக்குள் தள்ளிவிட்டு, `பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும்தானே!' என்கிற தமிழ் சினிமாவின் பழங்கஞ்சிப் பார்வைக்குள்தான் இந்தச் சமூகம் மொத்தமும் ஊறி நொதித்துக் கொண்டிருக்கிறது.


சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, கணவன்மார்களைத் தாக்குவதில் எகிப்தியப் பெண்கள் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தது. கடந்த சில ஆண்டு களாக பெண்கள் மீது தொடர்ந்து அதிகரித்து வந்த வன்கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல், கணவன்மார்களின் அராஜகத்துக் கான எதிர்வினையே இந்தத் தாக்குதல் என்பதை இந்த ஆய்வுகள் வசதியாக மறந்துவிடுகின்றன. 

காற்றின் சலசலப்புக்குக்கூடக் கலங்கிவிடும் மெல்லிதயம் படைத்தவர்களாக அல்லது அதிகாரம் எவ்வளவு நுண்ணியதாக வெளிப் பட்டாலும் அதை எதிர்க்கக் கூடியவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர், மனைவியை உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்கித் துன்புறுத்து வதில் தம்மிடம் எந்த முரணையும் காண்பது இல்லை. காரணம், மனைவியை அடித்து உதைப் பதை அவர் தனது உரிமையாகக் கருதுகிறார். ‘ஆம்பளைன்னுகூட பார்க்காம சரிக்குச் சரி எதுத்துப் பேசிக்கிட்டே இருந்தா, நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது? அதான், பொட்டச்சிக்கு இவ்வளவு வாயான்னு போட்டேன் நாலு’ என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார். 

குடும்பத்துக்குள்ளும் பொதுவெளியிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டாத நாம், பெண்களைத் தாக்குவதிலும் கொல்வதிலும் தீவிர வெறியோடு இருக்கிறோம். இதே நிலை நீடிக்குமானால், இன்றைக்கு இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 944 பெண்கள் என்று உள்ள விகிதம், இனி வரும் காலங்களில் அஞ்சத்தக்க வகையில் மோசம் அடையக்கூடும். 


இன்றைக்கும் `ஜல்லிக்காரிச்சி' என்றே ஊர்க்காரர்களால் நினைவுகூரப்படும் எனது தாத்தம்மா (அப்பா வழிப் பாட்டி) மாரிமுத்தம்மாள், நூறு பேருக்கும் குறையாத ‘கேங்’குடன் ஜல்லி உடைக்கவும், அதைக்கொண்டு தார்ச்சாலை போடவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்தவர். 

இன்றைய தங்க நாற்கரச் சாலைகளுக்கு அடியில் மறைந்துகிடக்கும் பழஞ்சாலைகளில் அவரது உழைப்பும் புதைந்திருக்கிறது. காடு, மலை, ரோட்டோரம் என வேலைக்காடுகளில் கேங் ஆட்கள் முகாம் அடிக்கும்போது, தனக்கும் அங்கு ஒரு ‘சாளை’ (கொட்டகை) அமைத்து தங்கிக்கொள்வது அவர் வழக்கம். பள்ளிக்கூட விடுமுறை நாள் ஒன்றில், மஞ்சவாடிக் கணவாய் வேலைக்காட்டில் அவரைப் பார்க்கப் போனேன். அன்றிரவு அவரோடே சாளையில் தங்கியபோது, `பயமா இல்லையாம்மா?' என்று கேட்டேன். `எதுக்குப் பயப்படணும்?' என்று திருப்பிக் கேட்டார். ஆமாம், அவர் எதற்கும் பயப்பட்டு நான் பார்த்தது இல்லை.

கொத்துக்காரி என்கிற கித்தாப்பில் அதட்டி வேலைவாங்கிவிட்டு, உடல் நோகாமல் அதிகாரம் செய்யக்கூடியவராக அவர் ஒருபோதும் இருந்ததே இல்லை. வேலைக்கு ஆட்களைத் திரட்டுவது, முன்பணம் கொடுத்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது, கல் உடைப்பதற்கான குன்றுகளைத் தெரிவுசெய்வது, பாறைகளைப் பிளக்க கருவிகளையும் கரிமருந்தையும் கையாள்வது, கொட்லான் பிடித்து ஜல்லி உடைப்பது, மால் வைத்து மட்டம் பிடித்து ஜல்லிக்குட்டானை அளப்பது, பதமாகத் தார்  காய்ச்சுவது, கலவையின் திடத்தைச் சோதிப்பது என, சாலை போடும் வேலையின் அத்தனை நுட்பங்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார். 

அனைத்தையும் அறிந்திருந்த அவர், நேரடி உழைப்பிலும் பங்கெடுப்பவராக இருந்தார். வாரச்சந்தை நாட்களில் வேலையாட்களிடம் பட்டுவாடா செய்வதற்கான பெருந்தொகையை பெல்ட் மாதிரி நீளமான ஒரு பையில் வைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டி, அதன் மீதே சீலை கட்டுவார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர் என யாரிடமும் அச்சத்துடனோ, தயக்கத்துடனோ பேசக்கூடியவர் அல்ல. 

கல் உடைத்தும் கலவையைத் தூக்கியும் தார்ச்சூட்டில் வெந்தும் தான் ஈட்டிய சொந்த சம்பாத்தியத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி என் தந்தைக்குக் கொடுத்திருந்தார். வெற்றிலை, புகையிலை காரமும் தார் நெடியும் கலந்த வாசனையோடு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சாலையோரங்களில் கழித்த அவர், பின்னாளில் அந்த வேலையைக் கைவிட்டுவிட்ட பிறகும்கூட அதே மிடுக்கோடு உழைத்து வாழ்ந்து மறைந்தார். 

என் தாத்தம்மாவை நினைவுகூரும் எவர் ஒருவரும் அவரை, ‘ஆம்பிளையாட்டம் உழைக்கக் கூடியவள். பத்து ஆம்பளைங்களுக்குச் சமமானவள். நெஞ்சை நிமிர்த்தி ஆம்பளையாட்டம் நடக்கிற தைரியசாலி. வீராதிவீரன்கூட அவகிட்ட நாலடி தள்ளிதான் நிற்கணும்’ என்று ஆண்களோடு ஒப்பிட்டுத்தான் சொல்வார்களே தவிர, அவர் தன் சுயத்தில் தேர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார் எனச் சொல்லி நான் கேட்டது இல்லை. 

தாத்தம்மா யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் என்றால், அது அவருடைய தாயார். ஏனென்றால், ஆண்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆண் போலவே வாழவேண்டும் என்பது அல்ல அவரது தெரிவு. அவரைப்போலவே இன்னும் பல பெண்கள் தாம் தேர்ந்துகொண்ட வாழ்க்கையை சமரசம் இன்றி தன்மதிப்போடு வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். ஆனால், அவர்களை ‘விதிவிலக்குகள்’ என முத்திரை குத்தி, சமூகத்துக்கு வெளியே நிறுத்திவிடும் தந்திரத்தைக் கையாள்கிறோம். 


ஒரு பெண் கிளம்பிப் போய் மாப்பிள்ளையைப் பார்த்து முடிவெடுக்கும் நிலை, இப்போது போலவே 1993-ம் ஆண்டிலும் இல்லை. எனவே, நான்தான் அரூருக்குப் போய் மீனாவைப் பார்த்து இறுதிப்படுத்தினேன். அந்த நாளில் இருந்தே மீனாவை நான் ‘அவள்’ என்றும், மீனா என்னை ‘அவர்’ என்றும் சொல்லப் பழகி இருந்தோம். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து நான் வேலை பார்க்கும் ஓசூருக்குக் கிளம்பி வந்தோம். சோற்றை வடித்து தக்காளியை வதக்கிக் கொட்டினால் தக்காளிச் சோறு ரெடி என்கிற அளவில் எனக்கு சமையல் தெரியும். மீனாவின் சமையல் அறிவும் மோசம் எனச் சொல்ல முடியாது. வெந்நீர் வைக்கவும் முட்டையை வேகவைக்கவும் தெரிந்திருந்தது. எனவே, பரஸ்பரக் கருணையின் அடிப்படையில் சமைக்கும் முடிவை இருவருமே கைவிட்டோம். முதல் இரண்டு நாட்கள் கடைச் சாப்பாடு. அதைவிட அப்படி ஒன்றும் மோசமாகச் சமைத்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையில் சமைக்கத் தொடங்கினோம். மிகக் குறுகிய காலத்திலேயே `உன் கைப்பக்குவமே தனி ருசி!' எனப் பாராட்டத்தக்க அளவுக்கு அவர் மிகத் தேர்ந்த சமையலராக மாறியிருக்க, நானோ வெறும் டீ, காபி மாஸ்டராக ஆகியிருக்கிறேன். 

சமைக்கும் வேலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டதைப்போலவே துணி துவைப்பது, வீட்டைத் துப்புரப்படுத்துவது, குழந்தையைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளையும் மீனாவிடம் தள்ளிவிடுவதற்கு நான் பெரிதாக ஏதும் மெனக்கெடவில்லை. ஆண், அதுவும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆண் என்கிற அடையாளம் இவை அனைத்தையும் எனக்கு எளிதாக சாதித்துக் கொடுத்திருக்கிறது. (வறட்சி மிகுந்த மாநிலங்களில் நெடுந்தூரம் அலைந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதற்காகவே ‘தண்ணீர் மனைவிகள்’ என்ற பெயரில் பலரைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது.) 

வேலை நேர நிர்ணயம் இல்லாமல், ஓய்வொழிச்சல் இல்லாமல் மீனா செய்து கொண்டிருக்கும் நச்சரிப்பான இந்த வீட்டு வேலைகளுக்கு ஊதியம் நிர்ணயிப்பதாக இருந்தால்? நிச்சயம் அது எனது ஊதியத்தை விட கூடுதலாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர் வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என்கிற நினைப்பில் இருந்து நான் முற்றாக விடுபட்டுவிட்டதாகச் சொல்விவிட முடியாது. ஏனென்றால், சம்பளம் என்று ஈட்டித்தராத எந்த வேலையையும் `வேலை' என்று மதிப்பதற்கான பழக்கமோ, பயிற்சியோ நமக்கு இல்லை. என்னுடைய அரசியல்ரீதியான பிரக்ஞை மட்டும்தான் மீனாவை சமமாகப் பார்க்க வைக்கிறதே தவிர, இயல்பில் ஒரு சராசரி ஆணாகவே மிஞ்சுகிறேன். 

பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்ததற்காகவே `பள்ளிக்கூடத்தாள்' என்ற செல்லப்பெயர் பெற்ற என் அம்மாவும், பட்டதாரியான என் இணையரும் `பெண்' என்ற வகையில் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் பெற்றிருக்கிறார்கள். எனக்குள்ளும் என் தந்தைக்குள்ளும் இயங்குவது ஒரே ஆண்தான் என்றால், காலமாற்றம், தலைமுறை இடைவெளி, கல்வி, அரசியல் புரிதல் என்பனவற்றுக்குப் பொருள்தான் என்ன? 


1849-ம் ஆண்டில் பிரசவம் பார்ப்பவராக பணியாற்றும் ஜீன் டெராயின் என்கிற பெண், பிரெஞ்சு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுகிறார். ஆண்களில் பலரும் அவரைக் கேலி செய்கின்றனர். ‘ஒரு பெண் சட்டசபை உறுப்பினராக இருப்பது என்பது, குழந்தைகளுக்குப் பாலூட்டும் வேலையில் ஒரு ஆண் இருப்பதற்கு சமமாகும்’ என்கிற விநோதமான வாதத்தை முன்வைத்து, அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறார் பியர் ஜோசப் ப்ரூதான் என்பவர். 

அவருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஜீன் டெராயின் ‘இந்த வர்ணனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களால்தான் பிரசவிக்க முடியும். எங்கள் உடல்வாகு அப்படி. ஆனால், ஆண் உடலில் எந்தப் பகுதி நாடாளு மன்ற உறுப்பினராவதற்குத் தேவைப்படுகிறது என்று பியர் ஜோசப் எனக்குச் சொல்லட்டும்’ என்று கேட்டிருக்கிறார். உடலையும் உறுப்பையும் வைத்து சகஜீவியின் ஆளுமையையும் உரிமைகளையும் மதிப்பிடுவதற்கு எதிராக ஜீன் டெராயின் போன்றோர் எழுப்பிவந்த இப்படியான கேள்விகள்தான் இன்றைக்கு உள்ளாட்சி தொடங்கி குடியரசுத் தலைவர் வரையிலான பொறுப்புகளை பெண்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. ஆனால், கண்டம் கடந்து காலம் கடந்து இன்னமும் பல பியர் ஜோசப்கள் ‘நின்னுக்கிட்டே சுவர் மேல ஒண்ணுக்கு அடிக்க என்னால் முடியும். உன்னால் முடியுமா?’ என்று நாயிடம் கேட்கவேண்டிய கேள்வியைத் தவறாக பெண்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


லிவிங்ஸ்மைல் வித்யா ஒருமுறை ‘மாற்றுப் பாலினத்தவரை `மூன்றாம் பாலினத்தவர்' எனக் குறிப்பிடுகிறீர்களே, முதல் பாலினம் யார் என்று முடிவுசெய்துவிட்டீர்களா?’ என்று எழுப்பிய வன்மையான கேள்வி, இந்தச் சமூகத்துக்கு உறைக்கவே இல்லை. `பெண் பின்னமானவள், ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும்' என்கின்றன மத இலக்கியங்கள். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதன் மூலம் பெண்ணானவள் மீட்டர்கணக்கில் வளர்ந்தாலும் பயன் இல்லை என்றாகிறது. இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும். 

நமக்கான ஆண், பெண் முன்மாதிரிகளை நாம் குடும்பத்தில் இருந்தே பெறுகிறோம். எனில், குடும்ப அமைப்பு எப்படி இருக்கிறது? அரிதான ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் சம வயதினர் இல்லை. அவர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஐந்து வருட வயது வித்தியாசம் பேணப்படுகிறது. கர்ப்பம், பிரசவம், பாலூட்டல் போன்ற ‘தாய்மைச் செயல்பாடுகளால்’ உடற்கட்டு குலைந்து, கணவனைவிட மூத்தவள் போன்ற தோற்றத்தைப் பெறாமல் இருப்பதற்கு ஆணைவிட பெண் இளையவளாக இருத்தல் அவசியம் என வியாக்கியானம் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மனைவியைவிட மூத்தவன் என்ற நினைப்பே ஆணுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. 

அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஆணின் சௌகர்யம் சார்ந்ததாக - ஆணை மையப்படுத்தியதாக இருக்கிறது. இது ஏதோ புராண காலத்து விஷயம் என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வயதான பெற்றோரை விட்டுப் பிரிந்து `தனிக்குடித்தனம் போகலாம்' என, கணவனை வற்புறுத்துவது குரூரமானது என்றும், அத்தகைய மனைவியை விவாகரத்து செய்ய கணவனுக்கு உரிமை உள்ளது என்றும் கொந்தளிக்கும் நமது நீதிமன்றங்கள், இதுகாறும் நம் நாட்டுப் பெண்கள் தம் பெற்றோரைப் பிரிந்துதான் வேறு ஒரு குடும்பத்தில் வாழ்நாள் முழுக்க இருந்து மடிவது தொடர்பாகவோ, அவளது பெற்றோரும் முதுமையில் தனிமையில் ஆதரவின்றி அல்லாடுவது குறித்தோ வாய் திறக்காமல் இருப்பதற்கு, இந்த ஆண் மையச் சிந்தனைதான் காரணம். 

மனைவியை ஒருமையிலோ, கண்ணியக் குறைவாகவோ விளிப்பது, கடுஞ்சொற்களால் திட்டுவது, தாக்கி வன்முறைக்கு ஆட்படுத்துவது, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வது, ஓயாத வீட்டுவேலைகளைச் சுமத்துவது, குழந்தை வளர்ப்பு, முதியோர் நலம் பேணல், நோயாளி களைப் பராமரித்தல், தண்ணீர் எரிபொருள் சேகரிப்பு, சமையல் ஆகியவற்றை அவளது தனிப்பொறுப்பாக மாற்றுவது, அவளுக்கு என தனித்த ஆர்வங்களும் தேவைகளும் செலவுகளும் பொழுதுபோக்கும் இருப்பதை ஏற்க மறுப்பது, அவளது கையில் பணப்புழக்கம் இல்லாமல் தடுப்பது, அவளது வருமானத்தை அபகரித்துக் கொள்வது, எந்தவொரு விஷயத்திலும் அவளிடம் கலக்காமலே தன்னிச்சையாக முடிவு எடுப்பது, அவளாக முன்வந்து சொல்லும் யோசனைகளையும் இளக்காரத்துடன் நிராகரிப்பது என ஆணின் கை ஓங்கியுள்ள குடும்பங்களே இங்கு மிகுந்துள்ளன. இந்த ஆதிக்கத்தை அதட்டி உருட்டி மட்டுமே செய்ய வேண்டிய தேவையின்றி, அன்பின் பேராலும் ஓர் ஆணால் நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகைய சூழலுக்குள் வளரும் குழந்தைகள் எந்தவிதத் தனித்த போதனையோ பயிற்சியோ இன்றி, தத்தமக்கான இடத்தைக் கண்டடைகின்றனர். 

பெண் என்பவள், இரண்டாம்பட்சமானவள்; குடும்பச் சொத்தில் பங்குபெற உரிமையற்றவள்; ஆணின் விருப்பத்துக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்பதை இன்றைய குழந்தைகள் வெகு இயல்பாக உள்வாங்கிக் கொள்கின்றன. 

இந்த நிலையை மேலும் மேலும் இறுக்கிப் பிணைக்கும் வகையில் வீட்டுக்குள் அவர்களது புழங்கிடம், உடை, உணவு, கல்வி, நட்புவட்டம், நடமாட்ட நேரம், பங்கெடுக்கும் நிகழ்வுகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை குடும்பம் தீர்மானிக்கிறது. அவர்கள் வளர்ந்து உருவாக்கும் அடுத்த தலைமுறை குடும்பங்கள், முன்சொன்ன குடும்பத்தின் நகல்களாக தன்னியல்பாகவே மாறிவிடுகின்றன. விதிவிலக்காக சற்றே ஜனநாயகத்தன்மையுடனும் சமத்துவப் பார்வையுடனும் நடந்துகொள்ள முயற்சிக்கும் ஆண்கள்கூட `பொண்டாட்டிதாசன்' என்பதான ஏளனத்துக்கு அஞ்சும் மானஸ்தர்களாகி, தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

`உங்க வீட்டில் சிதம்பரமா... மதுரையா?' எனக் கேலியாகக் கேட்கும் வழக்கம் எல்லாம், 
`நீ ஆம்பளையா... இல்லையா?' என முண்டா தட்டச் சீண்டிவிடுவதுதான். ஆண் தன் நிலையில் இருந்து சற்றே விலகினாலும், ஆளை மயக்கி, முந்தானையில் முடிந்தவள், குடும்பத்தைப் பிரிப்பவள் போன்ற அவதூறுகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதை இதன் தொடர்ச்சியில் வைத்தே விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது. 

குடும்பத்துக்கு வெளியேகூட ஆணைவிட பெண் தாழ்வானவள், பலம் குன்றியவள், தீட்டானவள், ஆணைச் சார்ந்தே காலம் தள்ளவேண்டியவள், ஆணின் போகத்துக்காகவே படைக்கப்பட்டவள், பெற்றோர் பார்த்து எவ்வளவு குணக்கேடான ஒருவனைக் கட்டி வைத்தாலும் மனம் கோணாது ஏற்றுக்கொண்டு அவன் வழியாக (கவனம், அவன் வழியாக) குழந்தைகளைப் பெற்று, வளர்த்து வாழ்ந்துவிட்டு, பூ பொட்டுடன் போய்ச் சேர்வதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் என்ற போதனையை, குழந்தைகள் இடைவிடாது பெறு கிறார்கள். கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள், மதங்கள், சடங்குகள், போக்குவரத்து வாகனங்கள், பணியிடங்கள், ஊடகங்கள், கலை இலக்கியம், அரசுத் திட்டங்கள், விளம்பரங்கள் போன்றவை இந்த போதனையை செவ்வனே செய்து பெண் மீதான ஆணின் உரிமையை நிலைநிறுத்துகின்றன. ஏனென்றால், இந்தத் தளங்களில் இயங்கும் நான் உள்பட பலரும் இதே கருத்தியலால் பீடிக்கப்பட்டவர்கள் தான். 

இருபாலரும் தம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் கொண்டிருக்கும் பார்வையும் அதன் பேரிலான நடத்தையும் தனிப்பட்ட மனிதர்களின் குணாதியசங்கள் அல்ல. இன்றைய சமூக அமைப்பு வடிவமைக்கும் கருத்துக்களையே அவர்கள் தமது சொந்தக் கருத்துபோல பாவித்துக் கடைப்பிடிக்கிறார்கள். 


எல்லா வகைகளிலும் ஏற்றத்தாழ்வைப் பேணும் சமூகத்தில், இதன் அடிப்படை அலகான குடும்பத்துக்குள் மட்டும் சமத்துவம் நிலவும் என எதிர்பார்க்க முடியாது. சொந்த சாதிக்குள் மணம் முடித்து ரத்தத் தூய்மையையும், சாதிப் புனிதத்தையும் காப்பாற்றுவதே மானமுள்ள குடும்பத்தின் கடமை என்றாகிவிட்ட சூழலில், அதன் முழுப்பொறுப்பும் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு அவள் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும்படுகிறாள். 
அவளை நோக்கி காதலோடு பூங்கொத்தை நீட்டும் `பிற சாதிக்காரன்', தனக்குத்தானே மலர்வளையம் வைத்துக்கொள்ளும் நிலைக்குச் சாய்க்கப்படுகிறான். 

பெண் என்பவள், தன்னளவில் சுதந்திரமானவள். ஆணின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவள் பிறக்கவில்லை. தான் விரும்பியபடி வாழ்வதற்கான முழு உரிமையும் அவளுக்கு உண்டு. ஆணோடு ஒப்பிட்டுக் கொள்ளும் அவசியம் ஏதும் இன்றி, தனக்கான தேவைகளைத்தானே தீர்மானிக்கவும் தேடிக்கொள்ளவும் சக்தி உள்ளவள். இந்தக் கட்டுரை உள்பட எதுவொன்றையும் கிளுகிளுப்பாக்கும் கச்சாப்பொருள் அல்ல `அவள்' - என்பதான கருத்தியலை, குடும்பமும் சமூகமும் கடுமையாக எதிர்கொள்கின்றன. 

நாமும் அதே குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும்தான் இருக்கிறோம் என்ற உண்மை, இப்போது ஏன் நினைவுக்கு வந்துதொலைக்க வேண்டும்?

- ஆனந்த விகடன் 2.11.2016


சனி, நவம்பர் 5

நவம்பர் 9: நண்பர்களின் பரிசீலனைக்கான முன்மொழிவு - ஆதவன் தீட்சண்யா

PC:Scroll.in
'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான தடையும் தணிக்கையும் நாளை எல்லா ஊடகங்களுக்கும் தனிநபர்களுக்கும் பரவும். மட்டுமல்ல, அரசின் பொல்லாப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்கிற அச்சத்தில் சுயதணிக்கைக்கும் வழிவகுக்கும். இந்த நிலை ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளுக்கே எதிரானது.
எனவே, என்.டி.டி.வி ஒளிபரப்பை மத்திய அரசு முடக்கும் அதே நவம்பர் 9ம் தேதியை அரசின் இம்முயற்சிக்கு எதிரான கண்டனம் தெரிவிக்கும் நாளாக மாற்றுவது அவசியமாகிறது. அதன்பொருட்டு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஓர் இயக்கத்தை முன்னெடுக்கலாமா என்பதை பரிசீலியுங்கள். 


செவ்வாய், அக்டோபர் 11

சாதி ஒழியும் போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும் -ஆதவன் தீட்சண்யா

1.தலித்துகள் மீது தாக்குதலுக்கான நோக்கம் என்ன?

தலித்துகள் தமக்கு சமமானவர்கள் அல்ல என்கிற இழிநோக்கும், தமக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற ஆதிக்க மனநிலையும் கொண்ட சாதி இந்துக்களால்  அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். 

* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தி முன்னேறுவது
*  ஒடுக்குமுறைகளை எதிர்த்து அமைப்புரீதியாக திரள்வது
* சமூகரீதியாகவும் சட்டரீதியாகவும் சமவுரிமை கோருவது  
- என தன்மதிப்போடு வாழ்வதற்கு தலித்துகள் மேற்கொள்ளும் எத்தனங்களை தடுப்பதற்காகவே தாக்கப்படுகின்றனர். இவ்வாறான எத்தனங்களை மேற்கொள்ளாத சாதிஇந்துக்களை அண்டியடங்கிய தலித்துகளும் இருக்கிறார்கள். அதேநிலையில் நீடிக்கச்செய்வதற்காக அவர்களும் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.  தலித்துகள் மீது எவ்வளவு கொடிய தாக்குதலை நடத்தினாலும் அதற்காக தண்டிக்கப்படமாட்டோம் என்கிற தைரியம் இதற்கெல்லாம் பின்புலமாகவுள்ளது.

2. இன்றைய நவீன யுகத்தில் தலித்துகள் மீது தாக்குதல் மற்றும் புறக்கணிப்பு எத்தகைய வடிவங்களில் நடைபெறுகிறது?

நவீன கருவிகளும் தொழில்நுட்பங்களும் புழக்கத்திலிருப்பதை வைத்து இதை நவீன யுகம் என்று அழைத்துவிட முடியாது. நவீன கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் வைத்துக்கொண்டு காலத்தால்  வெகுவாக பின்தங்கிய அல்லது எந்தக்காலத்திற்கும் ஒவ்வாத கருத்துகளை பரப்பி காப்பாற்றும் வேலைதான் இங்கு ஜோராக நடந்துவருகிறது.

தலித்துகள் மீதான தாக்குதலும் புறக்கணிப்பும் இன்று நேற்றல்ல, சாதியம் தோன்றிய காலம்தொட்டே நடந்து கொண்டுதானிருக்கின்றன. நாடு முழுவதும், நாடுகடந்து இந்துக்கள் உள்ள இடங்களிலும் இந்தத் தாக்குதலும் புறக்கணிப்பும் சில பொதுவான வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. கல்வியை மறுப்பது, வழிபாட்டுரிமையை பறிப்பது, பொதுவளங்களைப் பயன்படுத்துவதிலிருந்து தடுப்பது, நடமாட்டத்தையும் புழங்குவெளியையும் மட்டுப்படுத்துவது, அதிகார அமைப்புகளில் பங்கெடுக்கவிடாமல் செய்வது, நிலங்களையும் உற்பத்திப் பொருட்களையும் அபகரித்துக்கொள்வது, ஊரை எரிப்பது, உடைமைகளை கொள்ளையடிப்பது, மாட்டுத்தோலை உரித்தார்கள் என்று கல்லால் அடித்துக் கொல்வது, கட்டிவைத்து அடிப்பது, மாட்டுக்கறி உண்டிருப்பார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்குவது என்பதெல்லாம் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் வன்கொடுமை வடிவங்கள்தான். இவையன்றி, அந்தந்த வட்டாரம் சார்ந்த- பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையில் தலித்துகளை விழுந்து புரளச்செய்யும் மடஸ்நானா போன்ற - தனித்த வடிவங்களையும் கொண்டிருக்கின்றன.

தலித்துகளின் வாழிடங்களில் குடியேறி வசிப்பதை 100 சதவீதம் தவிர்ப்பது, உலகின் எந்த மொழியில் வெளியாகிற அரசியல் அறிவியல் பொருளாதாரம் தத்துவம் சார்ந்த நூல்களையும் உடனுக்குடனே படித்துவிடக்கூடியவர்கள்கூட இன்னமும் அம்பேத்கர் நூல்களை படிக்காமல் ஒதுக்கி வைத்திருப்பது, அம்பேத்கரைப் பற்றி பேசுவதற்கு தலித்துகளையே அழைப்பது (உங்க ஆளைப் பற்றி நீயே வந்து பேசிவிட்டுப் போ என்பது போல), அமைப்புகளில் துணை இணை உதவி என்கிற நிலையைத் தாண்டி வேறு பொறுப்புகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வது என தீண்டாமை பலவடிவங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு வடிவத்தை ஒழித்தால் அதனிலும் நுட்பமும் மூர்க்கமுமான மற்றொரு வடிவம் வெளியாகி ஒடுக்குகிறது.

3. சாதியத்திற்கு எதிராக வெஞ்சமர் புரிந்த பெரியார் பிறந்த மண்ணில் சாதிய சக்திகள் தங்கள் தாக்குதல்களை வெளிப்படையாக நடத்துவதற்கான துணிச்சல்  எவ்வாறு வந்தது?

பெரியார் தன் காலத்தில் சாதியத்தை ஒழித்துவிடவில்லை, அதன் ஒடுக்குமுறையையும் பாரபட்சத்தையும் பார்ப்பன மேலாதிக்கத்தையும் தனது முன்னுவமையற்ற போராட்டங்களால் கட்டுக்குள் நிறுத்தினார். பார்ப்பரனரல்லாத சாதியினரின் புழங்குவெளியை விரிவுபடுத்தினார். அவர்களது உள்ளக ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை திறந்துவிட்டார். அதேவேளையில் பார்ப்பனரல்லாதார் என்கிற அடையாளத்தின் கீழ் திரண்டவர்களிடம் புரையோடிக் கிடந்த சாதியவாதத்தை அம்பலப்படுத்தி அவர்களை மனிதர்களாக்குவதற்கான போராட்டத்தை தன்னால் இயன்றமட்டிலும் நடத்திப் பார்த்தவர் பெரியார். ஒரு தனிமனிதர் தான் மேற்கொண்ட லட்சியங்களுக்காக தன் ஆயுட்காலத்தில் செய்யத்தகுந்தது எவ்வளவோ அவ்வளவையும் செய்துவிட்டே அவர் மறைந்தார்.

பெரியாரின் கருத்தியல் வாரிசாக தம்மை அறிவித்துக்கொண்ட பலரும் அவரிருந்த போதே சாதியத்தை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்காதது மட்டுமல்ல, சாதியச்சக்திகளோடு சமரசமும் செய்து கொண்டார்கள். பெரியாரது கருத்தியல் மற்றும் களப்போராட்டங்களால் உந்துதல் பெற்று பல்வேறு சாதிகளிலிருந்தும் உருவாகிவந்த சாதியெதிர்ப்பு- பகுத்தறிவுச்சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, வாக்காளர்கள் என்கிற பெரும்பான்மையின் பின்தங்கிய உணர்வுகளோடு- அதாவது சாதி மதம் கடவுள் மூடநம்பிக்கை பெண்ணயடிமைத்தனம் போன்றவற்றை கடைபிடிக்கிறவர்களோடு தம்மை இணைத்துக்கொண்டார்கள். ஏற்கனவே சாதியம் கொடுத்திருந்த அதிகாரத்தின் பெயரால் பார்ப்பனர்களைப்போலவே வன்கொடுமைகளை நிகழ்த்திவந்த பார்ப்பனரல்லாத சாதிஇந்துக்கள் கைக்கு அரசியல் அதிகாரத்தையும் கொண்டு சேர்ப்பது திராவிடக்கட்சிகளின் நிகழ்ச்சிநிரலில் இல்லையென்றாலும் நடப்பில் அதுவே நிகழ்ந்தது. கிட்டத்தட்ட இதேகாலகட்டத்தில்தான் இந்தியா முழுமையிலும்கூட இந்த நிலை ஏற்பட்டது. ஊராட்சிமன்ற உறுப்பினர் தொடங்கி மத்திய மாநில அமைச்சரவை வரையான அதிகாரமையங்கள் அனைத்தையும் ஓரளவுக்கு அரசு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ள அவர்கள் நடத்தும் தாக்குதலை பெரியாரின் ஆவி வந்து தடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. எனினும் இன்னமும் ஒருபகுதி பெரியாரியவாதிகள் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தொடரவே செய்கிறார்கள். ஆனால், இங்கு கவனப்படுத்த வேண்டியது என்னவென்றால் சாதியத்தை எதிர்ப்பது, மறுப்பது, ஒழிப்பது என்பதெல்லாம் வெறுமனே பெரியாரியத்தின் நிகழ்ச்சிநிரல் மட்டுமல்ல என்பதுதான்.  

4. அரசாங்கமும் அரசு இயந்திரமும் சாதி ஆதிக்கச்சக்திகளுக்கு எந்த வகையில் துணைபோகின்றன?

இரண்டுமே தலித்தல்லாதாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே அவை ஊரும் சேரியும்  நிரந்தரமாக பிரிந்திருப்பதை உறுதிசெய்கின்றன. தலித்துகளின் வாழிடத்தில் அரசு சார்ந்த அலுவலகமோ தொழிற்சாலையோ கல்விக்கூடமோ வணிகவளாகமோ குறைந்தபட்சம் டாஸ்மாக் கூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. தலித்துகள் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அப்பட்டமாக வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாக தத்தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. தலித்துகளுக்கு சட்டப்பூர்வமாக உள்ள இட ஒதுக்கீடு, கட்டுமான ஒப்பந்தங்கள், பெட்ரோல் நிலையங்கள், மானியங்கள் உள்ளிட்ட உரிமைகள் நடப்புண்மையாக மாறுவதைத் தடுக்கின்றன. தலித்துகளுக்குரிய பஞ்சமி நிலங்களை வகைமாற்றம் செய்தும் மோசடிகள் மூலமாக அபகரிப்பதற்கும் துணைபுரிகின்றன. துணைத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கென ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்காமலே திருப்பி அனுப்புகின்றன அல்லது தலித்துகளுக்கு தொடர்பற்ற திட்டங்களுக்கு திருப்பிவிடுகின்றன.

5. தமிழகத்தில் சாதி வெறி இயக்கமாவதை எப்படி எதிர்கொள்வது?

தங்களது சாதியினரால் தலைமை தாங்கப்படக்கூடிய இந்த இயக்கமாவது தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்து கண்ணியமான  வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிடாதா என்கிற ஏக்கத்துடன் தான் சாமானிய மக்கள் சாதிய அமைப்புகளுக்குள் அணிதிரள்கிறார்கள். ஆனால் சாதிய அமைப்புகளோ இவர்களது சக்தியை இந்த விருப்பார்வங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டங்களை நோக்கித் திருப்பாமல் சாதிப்பெருமை என்னும் கற்பிதத்திற்குள் மூழ்கடிக்கின்றன. அன்னாடங்காய்ச்சியான எதார்த்தம் ஆண்ட பரம்பரை, மேல்சாதி என்பதான கற்பிதத்தால் மறைக்கப்பட்டு சாதியுணர்வு சாதி வெறியாக்கப்படுகிறது. தமது குலப்பெருமை மற்றும் சாதித்தூய்மையைப் பாதுகாப்பதை விடவும் உயர்வானது எதுவுமில்லை என்று உசுப்பேற்றப்படுகிற இவர்களுக்கு தலித்துகளைத் தவிர வேறெவரும் எதிரியாக காட்டப்படுவதில்லை.

சாதி இயக்கங்கள் உங்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை என்று பிரசங்கம் அல்லது உபதேசம் செய்வதனால் இம்மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டுவிட மாட்டார்கள்.  அவர்கள் தமது இயல்பான வாழ்வை நடத்திச் செல்வதற்குத் தேவையான உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்து அதற்காக ஓர் அணிதிரட்டலை வேறெந்த அமைப்பும் சக்தியாக நடத்தாதவரை அவர்கள் சாதிய இயக்கங்களில் அணிதிரண்டு சாதிவெறியர்களாக மாறிக்கொண்டுதானிருப்பார்கள்.

7. தலித் மக்களின்  விடுதலைக்கான தீர்வு எது? அதை நோக்கிய போராட்டம் எத்தகையது?

சாதியொழிப்புதான். சாதியத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் விடுபடாமல் தலித்துகள் மட்டும் தம்மைத்தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தால் கூட சாதி இந்துக்களின் ஆதரவை இழந்துவிடுவோம் என்று நடுங்கிச்சாகிற அமைப்புகள் மலிந்து கிடக்கும் இச்சமூகத்தில் சாதியொழிப்பு என்பது அதன் முழுப்பொருளில் இன்று யாருடைய அல்லது எந்த அமைப்பினுடைய நிகழ்ச்சிநிரலிலாவது இருக்கிறதா?

சாதியை மட்டும் தனியாக ஒழித்துவிடவும் முடியாது. ஏனென்றால் அது, இங்கு நிலம், சொத்து, தொழில், வணிகம், மதம், அதிகாரம், பண்பாடு ஆகியவை வழிவழியாக யாருடைய கையில் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்பதை தீர்மானிப்பதாக இருக்கிறது. ‘இந்த வழிவழியாக’ என்பதை உறுதிப்படுத்தவே சாதியம் அகமணமுறையை கைக்கொண்டிருக்கிறது. எனவே சாதியை ஒழிப்பது என்றால் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் ஒழிப்பதே என்று விளங்கிக்கொண்டோமானால், அதற்கோர் தொடக்கமாக அகமணமுறையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கும். இதை தனிநபர்கள் தமது சொந்த வாழ்விலிருந்து தொடங்கலாம். இயக்கங்கள் தமது உறுப்பினர்களின் வாழ்முறையாக மாற்றலாம். அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் குடிமக்களிடையே இதை சாத்தியப்படுத்தலாம். ஆனால் அப்படியொரு சட்டத்தினை நிறைவேற்றும் அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் அரசாங்கத்திற்காக காத்திருக்கப் போகிறோமா அல்லது  இருக்கின்ற அரசாங்கத்தையே அதுநோக்கி நெட்டித்தள்ளும் போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறோமா என்பது நம்முடைய அரசியல் விருப்புறுதி சார்ந்தது.

( இந்துமதம் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிற கேள்வி எழலாம், சாதி ஒழியும் போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும். சாதிய சமூகத்தில் நீங்கள் எத்தனை மதங்களுக்கு மாறினாலும் அங்கெல்லாமும் சாதியாகவே அடையாளம் காணப்படுவீர்கள்.)

நன்றி: இளைஞர் முழக்கம் , அக்டோபர் 2016 


எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப...