திங்கள், நவம்பர் 3

அகமண முறை அபாயங்கள்: சாதி மறுப்புத் திருமணமும், மரபணு எனும் பதினோராம் பொருத்தமும் - ஆதவன் தீட்சண்யா


ஹாப்ஸ்பர்க் தாடை

சாதி என்கிற சமூகக் கட்டமைப்பின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பம் தான் ஒவ்வொரு சாதிக்கும் உரியவர்களைப் பெற்றெடுத்து அந்தந்தச் சாதிக்குரிய குணநலன்களுடன் வளர்த்தெடுக்கிறது. தனக்குள்ள இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் ஒரு குடும்பம் எந்தளவுக்கு முனைப்பாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குடும்பம் அதே சாதியைச் சேர்ந்த மற்ற குடும்பங்களால் மதிக்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் தனக்குள் இன்னொரு சாதியின் ரத்தம் (சரியாகச் சொல்வதெனில் விந்து) கலந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் அந்தச் சாதியின் தூய்மை பாதுகாக்கப்படும் என நம்பப்படுகிறது. எனவேதான் இந்தியா முழுவதிலும் மிகப் பெரும்பான்மையான திருமணங்கள் (சுமார் 94%) குடும்பத்தாரால் சொந்த சாதிக்குள்ளேயே - அதிலும் உட்சாதிக்குள்ளேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்விசயத்தில் மதமும் பொருளாதார நிலையும் சாதிக்கு இணையான பங்கை வகிக்கின்றன.  

ஏற்பாட்டுத் திருமணங்களில் பெரும்பாலானவை தமக்குள் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணையும் ஆணையும் இணைத்துவைப்பவை. ஒரு பெண் இன்னாரை தான் விரும்புவதாக முன்மொழிந்து அவரை தனக்கு மணம் முடித்துவைக்கும்படி கோரும் நிலை பொதுவாக இந்த ஏற்பாட்டுத் திருமணங்களில் இல்லை. ஒருவேளை ஒரு பெண் அவ்வாறு முன்மொழிவாரேயானால் அது ஒழுக்கக்கேடான நடத்யை£கப் பார்க்கப்படும் நிலைதான் இங்கே நிலவுகிறது. இந்திய மனிதவள மேம்பாட்டுக் கணக்கெடுப்பு நடத்திய ஆய்வொன்றில், 65% பெண்கள் திருமணத்தின் போதுதான் தனது வாழ்க்கைத் துணைவனை முதன்முதலில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். முன்பின் அறிமுகமற்ற அவர்களுக்குள் பரஸ்பர புரிதலும் இணக்கமும் உருவாகும் முன்பே அல்லது உருவாகாமலே உடலுறவு, கர்ப்பம், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு என்று இல்வாழ்வின் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நெட்டித்தள்ளுகிற இவ்வகைத் திருமணங்கள் தான் இங்கு இயல்பானவை எனப்படுகின்றன. வரதட்சணைச் சுரண்டல், குடும்ப வன்முறை, மணமுறிவுகள் ஆகிய பாதகங்களும் இவ்வகைத் திருமணங்களின் ஒருபகுதியாக ஏற்கப்படுகின்றன. இங்கு காதலுக்கு அவசியமேயில்லை. 

திருமண வயதை எட்டிய எவரொருவரும் தான் விரும்பியவரை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தாலும் நாடுதழுவிய அளவில் சுமார் ஆறு சதவீத திருமணங்கள் மட்டுமே சொந்தசாதிக்கு வெளியே நடக்கின்றன. எனவே, எங்கு பார்த்தாலும் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்துகொண்டிருப்பதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. சொந்த சாதிக்கு வெளியே திருமணம் நடப்பதற்கு முதன்மையான காரணமாயிருப்பது மனித சுபாவமான காதல். எனவே அந்தக் காதலையே நாடகக்காதல், லவ் ஜிகாத் என்று அவதூறு செய்து அதன் நம்பத்தன்மையைக் குலைப்பதன் மூலம் காதல் திருமணங்கள் பற்றிய ஒருவகை வெறுப்புணர்வு பரவலாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சாதி எல்லையைக் கடந்து காதல் திருமணங்கள் நடக்கவே செய்கின்றன. சாதி மறுப்புத் திருமணங்களில் மிகவும் அரிதாக ஒன்றிரண்டைத் தவிர ஏனையவை இயல்பானவையாக குடும்பத்தினராலும் உறவினர்களாலும் ஏற்கப்படுவதில்லை. கடுமையான எதிர்ப்பையும் தடுப்பையும் மீறி நடக்கும் இத்திருமணங்களில் ஒருபகுதி தொடத்தக்க இரு வேறு சாதிகளுக்குள் நடப்பவை. எஞ்சியவற்றில் இணையரில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். 

காதலிப்பவர்களின் நோக்கம் சேர்ந்து வாழ்வதுதான். மற்றபடி சாதியை மறுப்பதோ ஒழிப்பதோ அவர்களது நிகழ்ச்சிநிரலில் இல்லை. சேர்ந்து வாழும் அவர்களது இயல்புணர்வை அவர்களுடைய  குடும்பம், உறவுகள், சாதி ஆகியவை தடையாகி மறிக்கும்பட்சத்தில் வேறுவழியின்றி அவற்றை மீறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு மீறுவதால் உண்டாகும் இழப்புகளை தமது அன்பினால் ஈடுகட்டிக்கொண்டு வாழ்வதென இரண்டு தனிமனிதர்களாகிய அவர்கள் எடுக்கின்ற முடிவு அவர்களுக்குமப்பால் அவ்விருவருடனும் தொடர்புடைய குடும்பங்கள், உறவுகள், சாதிகள் ஆகியவற்றின்மீது பெரும் தாக்கம் செலுத்துகிறது. சாதிக்கு விசுவாசமான குடும்பம் என்று சொந்த சாதியினரிடையேயுள்ள கௌரவத்திற்கு பங்கம் நேர்வதற்கும் வேறுபட்ட பழக்கவழக்கங்கள் கொண்ட ஒருவரை இழுத்து வந்து தமக்குள் கலந்து மாசடையச் செய்வதற்கும், சொந்த சாதிக்குள் விரும்பியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையேகூட மறுக்கப்பட்டுள்ள பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைச் சுதந்திரமாக தேர்வுசெய்வதன் மூலம் குடும்பத்தின் மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆணாதிக்கத்தை தகர்ப்பதற்கும் வழிவகுக்குமென்ற அச்சத்துடன் இம்முடிவு எதிர்கொள்ளப்படுகிறது. தவிரவும் சாதியடுக்கில் தனது சாதிக்குள்ள இடம், பழக்கவழக்கங்கள், அதிகாரம், சொத்துரிமை, இயற்கை வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் பயன்படுத்தும் உரிமை, பண்பாட்டு நிலை ஆகியவற்றை திடுமென இன்னொருவருடன் பகிர்ந்தாக வேண்டிய நெருக்கடியையும் உருவாக்குகிறது. இவ்விசயத்தில் படிப்பு, செல்வந்த நிலை ஆகியவை பெரிய மனமாற்றங்களைக் கொண்டுவந்துவிடவில்லை என்பதை சில ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. தாமல்லாத இன்னொரு சாதியினரை தம்மவராக ஏற்கமுடியாத மனத்தடைக்குப் பின்னே இப்படியான காரணங்கள் உள்ளதால்தான், முடிந்தமட்டிலும் காதல் திருமணங்கள் நடவாமல் தடுப்பது, கைமீறிப் போனால் ரத்த சம்பந்தம் தவிர மற்ற சம்பந்தம் இல்லை என்று எழுதி வாங்கிக்கொண்டு ஒதுக்கிவிடுவது, அதற்கும் பணியாத நிலையில் கொன்றொழிப்பது என்கிற நிலையை குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் இத்தகைய கொடிய முடிவினை மேற்கொள்வதற்கான புற அழுத்தத்தை உறவினர்களும் சாதியமைப்பினரும் உருவாக்குகின்றனர் என்பதை பல்வேறு  தருணங்களில் நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.   

அச்சுறுத்தலையும் புறக்கணிப்பையும் மீறி சுதந்திரமாக தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காதலர்களைப்  பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உண்டு.  ஆனால் அரசு நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் அரசியல் கட்சிகளிலும் மனிதவுரிமை அமைப்புகளிலும்கூட புரையோடிப் போயிருக்கும் சாதியமானது, சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிரானவையாக இவ்வமைப்புகளை கீழிறக்கம் செய்துள்ளது. காதலர்களை மிரட்டி பிரித்தனுப்புவது தொடங்கி ஆணவக்கொலைகளை தற்கொலைகளாக திரித்து மறைப்பது வரை இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் சாதியமாக உள்ளன. ரோமியோ ஸ்குவாட் என்ற படையை ஒரு அரசே உருவாக்கியிருப்பதெல்லாம் காதலை தடுப்பதற்காக அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைதான். 

இந்தச் சூழலில் சாதியொழிப்பை முதன்மை நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு இயங்கும் அமைப்புகள் தான் காதலர்கள் சேர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையைத் தரமுடியும். காதல் திருமண இணையருக்கான பாதுகாப்பு, வசிப்பிடம், தன்மதிப்புடன் இல்வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாழ்வாதார  உதவிகள், திருமணத்திற்காக சாதியை மீறிய அவர்களைச் சாதியற்றவர்களாக வளர்த்தெடுக்கும் சமூகக்கல்வி, அவர்களது சந்ததியினருக்கு சிறப்பு ஒதுக்கீடு என தம்மளவிலும் அரசின் மூலமாகவும் செய்வதற்குரிய திட்டங்களை  இவ்வமைப்புகள் வகுக்கவேண்டியுள்ளது.  ஏற்கனவே இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. 

இருக்கும் சட்டங்களின்படி காதலர்கள்- சாதிமறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வதும், தேவைப்படும் புதிய சட்டங்களை உருவாக்கப் போராடுவதும் அமைப்புகளின் பொறுப்பாகிறது. நடப்பிலுள்ள இந்துத் திருமணச் சட்டம் சாதிமறுப்பு மற்றும் காதல் திருமணங்களுக்கு ஏற்பு வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.  சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி மணம்புரிய விரும்புகிறவர்களின் விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பது நாட்களுக்கு அறிவிக்கைச் செய்யப்படும் நடைமுறையானது, அவர்களது குடும்பத்தினராலும் மதவாத அமைப்பினராலும் அவர்கள் அச்சுறுத்தப்படுவதற்கும் பிரித்துவிடப்படுவதற்குமான ஆபத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த நடைமுறையைத் தடுக்கும் விதமாக சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது. 

தமிழ்நாடு திருமணச் சட்டம், சாதி மறுப்பு மற்றும் காதல்  திருமணம் செய்து கொள்வோருக்கு உகந்ததாக இருக்கிறது. சார்பதிவாளர், விண்ணப்பிக்கும் இணையர்கள் மற்றும் சாட்சிகளிடம் தீர விசாரித்து பதிவு செய்வது இச்சட்டத்தின்படி போதுமானதாயிருக்கிறது. எனினும் பின்னாளில் ஏதேனும் சட்டச் சிக்கல் வந்தால் நீதிமன்றங்களிடம் தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில், மணமக்களின் பெற்றோர்களை சாட்சியாக அழைத்துவரும்படி சார்பதிவாளர் நிபந்தனை விதிக்கின்றார். சட்டத்தில் கோரப்படாத இந்த நிபந்தனை இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானதாக அமைந்து விடுவதை தடுக்கும் விதமாக சார்பதிவாளர்கள் முறையாக அறிவுறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பான வழக்குகளில் சார்பதிவாளர்களைப் பொறுப்பாக்குவதற்கு பதிலாக, பிறழ்நிலையாக உள்ளவர்களை நீதிமன்றம் பொறுப்பாக்க வேண்டும். 

ஒரே சாதிக்குள், நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்கிற அகமண முறையால் ஏற்படும் மரபணு குறைபாடுகள், சந்ததியினருக்கு வரும் பரம்பரை நோய்கள், கருச்சிதைவுகள், இறந்து பிறத்தல், பிறந்ததும் இறத்தல்,  குறைவளர்ச்சியுடன் பிறத்தல் பற்றிய அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தை சமூகத்தில் பரவலாக்கும் பொறுப்பு அரசுக்கும் சமூகநல அமைப்புகளுக்கும் இருக்கிறது. ஸ்பானிஷ் ஹாப்ஸ்பர்க் அரச குடும்பத்தவர் தமக்குள்ளேயே தலைமுறை தலைமுறையாக நடத்திக்கொண்ட மணவுறவினால் மரபணுவில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே விசித்திரமாக மேல்தாடையைவிட கீழ்தாடை பெரிதாகவும் நீண்டும் வாயை மூட முடியாதபடியும்  பற்களும் ஈறுகளும் விகாரமாக வெளித்தெரியும் படியும் பிறந்தார்கள். இவர்களது “ஹாப்ஸ்பர்க் தாடை” மரபணு ஆய்வாளர்களிடையே பிரபலமான ஆய்வுப் பொருளாக உள்ளது. இவர்களது மரபணுவில் நீடித்த குறைபாட்டின் காரணமாக ஒருகட்டத்தில் இனப்பெருக்கத் திறனின்றி வாரீசற்று  முடியாட்சி வீழ்ச்சியடைந்தது. 

மரபணுக் குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு உலகெங்கும் அதிகரித்துள்ளது. எனவே மரபணுப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் பரவலாகிக் கொண்டுள்ளது. பத்து பொருத்தம் பார்த்து கல்யாணம் முடிப்பதாக பீற்றிக்கொள்ளும் இந்தியாவிலும்கூட “ஜீன் பத்ரிகா” என்ற பெயரில் இந்த மரபணுப் பொருத்தம் பார்த்துக் கொடுக்கும் நிறுவனங்கள் வந்துவிட்ட இந்நேரத்தில் சாதியாணவக் கொலைகளைத் தடுப்பதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டே சாதிக்குள்ளேயே முடங்கி நடக்கும் அகமண முறையை ஒழித்துக்கட்ட வேண்டியதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.  

நமது எதிர்காலச் சந்ததியினர் குறைபாடற்ற ஆரோக்கியமான மரபணுக்களைக் கொண்டவர்களாகவும்  பரம்பரை நோய்களால் பீடிக்கப்படாதவர்களாகவும் அறிவுக் கூர்மையுள்ளவர்களாகவும் இனப்பெருக்க ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென  விரும்புகிற எந்தவொரு அரசும் அமைப்பும் தனிமனிதரும் சாதிக்குள் முடங்கி நடக்கும் அகமண முறைக்கு எதிராக இயங்குவதே அறமாகும்.

நன்றி: விகடன்.காம், 30.08.2025 









செவ்வாய், அக்டோபர் 28

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: தோற்றமும் செயல்பாடும் - ஆதவன் தீட்சண்யா

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் வெளியிட்டுவரும் "புதுமலர்" காலாண்டிதழின் 2025 அக்டோபர் - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ள நேர்காணல்.




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதன் பின்னணியை விவரிக்கவும். 

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி 1970ஆம் ஆண்டு தொடங்கிய “செம்மலர்” இலக்கிய இதழை ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வசம் ஒப்படைத்திருக்கிறார்.  செம்மலரில் வெளிவரும் ஆக்கங்கள் பற்றி விவாதித்து செழுமைப்படுத்தும் நோக்கில் அதில் எழுதி வந்த 35 எழுத்தாளர்களின் சந்திப்பு ஒன்று இதழாசிரியர் கே.முத்தையா ஏற்பாட்டில் 1974 நவம்பர் 23, 24 தேதிகளில் மதுரையில் நடந்திருக்கிறது. அக்கூட்டத்தில் கட்சியின் தலைவர்களான என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகிய தோழர்களும் பங்கேற்றுள்ளனர். முற்போக்கு எழுத்தாளர்களுக்கென சங்கம் ஒன்றை அமைக்கலாமென்ற தோழர் என்.சங்கரய்யாவின் முன்மொழிவு அக்கூட்டத்தில் ஏற்கப்பட்டது. இவர்களுடன் 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் தோழர் ச.செந்தில்நாதன், டி.செல்வராஜ், தி.க.சிவசங்கரன், கந்தர்வன், கார்க்கி உள்ளிட்டோரது முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருந்த மக்கள் எழுத்தாளர் சங்கமும் இணைவது என்கிற முடிவு 05.01.1975 அன்று எட்டப்பட்டது.  

1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உறுதிப்படுத்தியிருந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ஊடகங்கள் கடும் தணிக்கைக்கு ஆளாகின. நாடு முழுவதும் மக்களுக்கான ஜனநாயகவெளிகள் சுருங்கிக் கொண்டிருந்தன. எனினும் அந்நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்ததால் ஓரளவுக்கு சுதந்திரமாக இயங்கமுடிந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 1975 ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் அமைப்பு மாநாட்டை நடத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. 

0 தமுஎச-வின் தொடக்ககாலப் பணிகள்

1976 ஜனவரி 31 அன்று திமுக அரசு பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இங்கும் நெருக்கடி முற்றியது. தமுஎச எழுத்தாளர்கள் உரிமைப் பறிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான குரலை கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள் வழியே அந்நாட்களில்  தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.   பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரை முப்பெரும் ஆளுமைகளாக ஏற்று நடத்தப்பட்ட விழாக்கள் பரவலாக கவனம் பெற்றுள்ளன. 1976 அக்டோபர் 1,2,3 தேதிகளில் நாமக்கல்லில் தமுஎச நடத்திய முதல் இலக்கிய முகாமில் எழுத்தாளர்களும் விமர்சகர்களுமாக மாநிலம் முழுவதிலுமிருந்து 170பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். மலையாளத்திலிருந்து பி.கோவிந்தப்பிள்ளை, கன்னடத்திலிருந்து டி.ஆர்.நாகராஜ், கவிஞர் சித்தலிங்கய்யா போன்றோர் கருத்தாளர்களாக பங்கேற்ற இம்முகாம் தனது ஊழியர்களை கருத்தியல்ரீதியாக வளப்படுத்த வேண்டுமென தமுஎச திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட முயற்சி எனலாம். இதேநோக்கில் 1982ஆம் ஆண்டு மதுரையில் 19 தலைப்புகளை முன்வைத்து 5 நாட்கள் மாநில அளவிலான இலக்கிய முகாம் நடத்தப்பட்டுள்ளது. 

மாநிலமெங்கும் இயங்கிக்கொண்டிருந்த நாடகக்குழுக்களை ஒருங்கிணைக்கவும் அவற்றின் ஆக்கங்களை ஒரே இடத்தில் நிகழ்த்திப் பார்க்கவுமாக, 1979 மே 25,26,27 தேதிகளில் தஞ்சையிலும், 1984 செப்டம்பர்  22,23,24 தேதிகளில் சென்னையிலும் தமுஎச நடத்திய நாடகவிழாக்களின் தாக்கம் அரங்கச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்கதாகும். நாடகவியலாளர்கள் எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன் ஆகியோரை நெறிஞர்களாகக் கொண்டு தமுஎச 1986 செப்டம்பரில் மதுரையில் ஐந்துநாட்கள் நடத்திய  நாடகப்பயிற்சி முகாம், நாடகத்தின் வகைமைகளையும் நுட்பங்களையும் கற்றுத்தந்தது. அம்முகாமில் பங்கெடுத்த 139 பேரில் நானும் ஒருவன்.   

இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், கே.ஏ.குணசேகரன் ஆகியோரது வழிநடத்தலில் 1989 ஜனவரியில் ஐந்துநாட்கள் கோவையில் நடத்தப்பட்ட முகாம் இசைக்குழுக்களைச் செழுமைப்படுத்திட உதவியது. இதன் தொடர்ச்சியில் ஒசூரிலும் ஒரு முகாம் நடந்தது.

கலை இலக்கியக் கோட்பாடுகள், வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், சமகாலப் போக்குகள், கருத்துலகத்தில் நடைபெற்றுவரும் விவாதங்கள் ஆகியவற்றில் பங்கெடுப்பதில் தமுஎச  பெரிதும் நாட்டம் கொண்டுள்ளது. இதன்பொருட்டு தமிழிலும், பிற மொழிகளிலும் மதிப்புமிக்க பங்களிப்புச் செய்த-  இலங்கை பேரா.க.சிவத்தம்பி உள்ளிட்ட ஆளுமைகள் பலரையும் அமைப்பின் மாநாடுகளிலும் நிகழ்வுகளிலும் பயிலரங்குகளிலும் கருத்தாளர்களாக பங்கேற்கச் செய்யும் ஏற்பாடு தமுஎசவின் தொடக்கம் முதலே இருக்கிறது. 

0 முதல்வர் எம்ஜிஆர் கொண்டுவந்த திரைப்படத் தணிக்கை மசோதாவை எதிர்த்த தமுஎசவின் போராட்டமும் வெற்றியும்..

அரசியலதிகாரத்தைப் பிடிப்பதற்கு திரைப்படங்களை ஒரு வழியாகக் கண்டிருந்த எம்.ஜி.ஆர், அந்த திரைப்படங்களின் சுதந்திரத்தையே பறிக்கும் நோக்கில் அப்படியொரு சட்ட முன்வரைவைக் கொண்டு வந்ததற்கு பின்புலத் தூண்டுதலாய் இருந்தது 29.03.1987 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியான ஒரு நகைச்சுவைத்துணுக்கும் அதற்கு விவேகானந்தன் என்பவர் வரைந்த கேலிச்சித்திரமும். ஒரு பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்துள்ள பலரையும் காட்டி “இதிலே எம்எல்ஏ யாரு? மந்திரி யாரு?” என்று பொதுமக்களில் ஒருவர் கேட்க, “பிக்பாக்கெட்காரர் மாதிரி இருக்கிறவரு எம்எல்ஏ, கொள்ளைக்காரர் மாதிரி இருக்கறவரு மந்திரி” என்று இன்னொருவர் பதிலளிப்பதாக வரையப்பட்ட அந்த கேலிச்சித்திரத்தை ஆனந்தவிகடன் அட்டைப்படமாக வெளியானது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு ஊழலில் ஊறித் திளைத்திருந்ததை இப்படி அப்பட்டமாகக்  காட்டியது ஆட்சியாளர்களுக்குப் பொறுக்கவில்லை. இதற்காக ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் அடுத்துவரும் இதழில் மன்னிப்புக் கேட்கவேண்டும், இல்லையென்றால் மூன்றுமாத காலம் கடுங்காவல் தண்டனை என்று சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கெடு விதித்தார். ஆனால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஓர் ஊடகத்திற்குள்ள கடமையைச் செய்ததற்காக மன்னிப்புக் கோரமுடியாது என்கிற நிலைப்பாட்டை விகடன் அடுத்துவந்த இதழின் தலையங்கத்தில் அறிவித்துவிட்ட நிலையில் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து தமுஎச மாநில மையம் அறிக்கை வெளியிட்டது. மாநிலம் முழுக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது. சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தமுஎச நடத்திய கண்டனக்கூட்டங்களில் தீபம் நா.பார்த்தசாரதி போன்ற மூத்த எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மக்களிடையே எழுந்த எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய எம்ஜிஆர் அரசு வேறுவழியின்றி விகடன் ஆசிரியரை இரண்டே நாளில் விடுதலை செய்தது. ஆனாலும் கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும் அரசின் மூர்க்கம் தணியவில்லை. அச்சு ஊடகத் துறையை அச்சுறுத்தி பணியவைக்க முடியவில்லை என்கிற ஆத்திரத்திலும் அகங்காரத்திலும் எம்ஜிஆரின் கவனம், தான் உருவெடுத்து வளர்ந்த திரைத்துறை மீதே பாய்ந்தது.  மத்திய தணிக்கைக் குழுவிடம் தணிக்கைச்சான்று பெற்று வெளியாகும் ஒரு படம், எம்எல்ஏக்களையோ அமைச்சர்களையோ அவமதிப்பதாக சட்டமன்ற சபாநாயகர் கருதும்பட்சத்தில் அந்தப் படத்திற்கு தடைவிதிப்பதுடன் அதன் இயக்குநர் உள்ளிட்டோரை கைதுசெய்யலாம் என்பதுதான் அந்த மசோதா. 

தங்களது கலைச்செயல்பாட்டின் மீது எம்ஜிஆர் தொடுத்த தாக்குதலை எதிர்க்க திரைத்துறையினரே  தயங்கிக்கிடந்த நேரத்தில் தமுஎச கண்டன அறிக்கை வெளியிட்டதுடன் 1987 ஜூலை 12 அன்று “திரைப்படக் கலைப் பாதுகாப்பு மாநாட்டை” நடத்தியது. பூனைக்கு மட்டுமல்ல அல்ல, புலிக்கும் மணிகட்டும் தீரமிக்கது தமுஎச என்று தெரிந்தவுடன் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகள் பலரும் மாநாட்டில் பங்கெடுத்தார்கள். அதன் தொடர்ச்சியில் சென்னை உட்பட 24 நகரங்களில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்திலும் அவர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். அந்த சட்ட முன்வரைவு  சட்டமாக்கப்படாமலே திரும்பப்பெறப்பட்டதற்கு தமுஎச ஒருங்கிணைத்தப் போராட்டமே காரணம். 

0 சனாதன சக்திகள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது தமுஎகச-வின் கருத்துரிமைக்கான ஆதரவுப் போராட்டம் பற்றி விளக்கவும்.

சாதியமைப்புகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் படியாகத்தான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் தொடர்பான சர்ச்சை கிளப்பப்பட்டது. 2015 ஜனவரி 12 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை என பெருமாள் முருகனை தனது அலுவலகத்திற்கு வரைவழைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அவரை உளவியல் முற்றுகைக்குட்படுத்தி ஐந்தம்ச  ஒப்பந்தம் ஒன்றுக்கு சம்மதிக்கவைத்தார். அதன் தொடர்ச்சியில்தான் பெருமாள்முருகன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளும் அவலநிலை உருவானது. அவரது அறிவிப்பு கருத்துரிமையில் நம்பிக்கை கொண்ட பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மாதொருபாகன் நூலினை உயர்த்திப்பிடித்தபடி சென்னை புத்தகக் கண்காட்சியில் உடனடியாகவே கண்டன இயக்கத்தை தமுஎகச நடத்தியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாதொருபாகன் நூலின் மின்நூல் பிரதி பரவலாக பகிரப்பட்டது. அத்துடன் நில்லாமல், தமுஎகச இப்பிரச்னையை தோழர் ச.செந்தில்நாதன் மூலமாக சட்டரீதியாகவும் எதிர்கொண்டது. 

பெருமாள் முருகனிடம் பலவந்தமாக கையொப்பம் பெறப்பட்ட ஒப்பந்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(அ)படி சட்டவிரோதமானது, அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கும் படி தமுஎகச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 1215/2015 என்ற அவ்வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும்  அவதூறுக்குமான வேறுபாட்டை துலக்கப்படுத்தியதுடன் ஒரு கலைப்படைப்பு யாருடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்கிற விளக்கத்தையும் கொடுத்துள்ளது. “இலக்கியம் - கலாச்சாரம் போன்ற விசயங்களைத் தீர்மானிப்பதற்கு அரசு, காவல்துறை அதிகாரிகள் சிற்ந்த நபர்களாக இருக்கமாட்டார்கள் என்றும், இத்தகைய விசயங்களை இந்தத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஞானத்திற்கம், தேவைப்பட்டால் நீதிமன்றங்களிடமும் விட்டுவிடுவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என்றே சொல்ல விழைகிறோம்”.. “இந்த நூலாசிரியர் பெருமாள் முருகன் பயத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது. அவர் இனி எழுத முடிவதோடு, தனது எழுத்தின் வீச்சை மேலம் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.. தனக்குள் இருந்த எழுத்தாளர் இறந்துவிட்டார் என்ற அவரது சொந்த முடிவு இதற்கு பதிலாக இருக்கமுடியாது. அதுவும்கூட அவர் சுதந்திரமாக எடுத்த முடிவல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையின் விளைவாகவே அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது..” என்று விவரிக்கும் தீர்ப்பு “அவர் எதில் சிறந்தவரோ, அதைச் செய்ய, அவருள் இருக்கும் எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும்” என்று முடியும். கருத்தியல் தளத்தில் செயல்படும் ஒவ்வொருவர் கையிலும் இந்தத் தீர்ப்பு இருக்கவேண்டும் எனக் கருதியே தமுஎகச தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது. 

0 தமுஎசவின் முக்கிய மாநாடுகள் மற்றும் அதன் தொடர் செயல்பாடுகள்

சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பிரச்னைகளின் தீவிரத்தை கணக்கில் கொண்டு அவவ்வப்போது சிறப்பு மாநாடுகளை தமுஎகச நடத்திவருகிறது. அவ்வகையில், சூப்பர் சினிமா தணிக்கைச் சட்டத்திற்கு எதிரான திரைப்படக் கலை பாதுகாப்பு மாநாடு, தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு, நாட்டுப்புறக் கலைஞர்கள் சிறப்பு மாநாடு, தமிழர் உரிமை மாநாடு, மதமாற்றத் தடைச்சட்ட எதிர்ப்பு மாநாடு, கருத்துரிமைப் போற்றுதும் சிறப்பு மாநாடு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு- மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கல்வி உரிமை மாநாடு, சனாதன ஒழிப்பு மாநாடு என தொடர்ந்து நடத்துகிறோம். இவையல்லாமல், பொதுமுடக்கக் காலத்தில் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்கங்களை பெருந்திரள் பங்கேற்புடன் நடத்திய அனுபவத்தில் இப்போதும் கூட தேவை கருதி அவ்வாறு நடத்துகிறோம். 

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மாநில அளவில் பல்வேறு இயக்கங்களை நடத்திய தமுஎகச, இக்கோரிக்கையின் மீதான அழுத்தத்தைக் கூட்டும்பொருட்டு, பெருந்திரளுடன் டெல்லிக்குப் போய் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்தப் பேரணியை நடத்தியது. 

சமூகம் நமக்குள் திணித்துள்ள பொதுப்புத்தியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும்முகத்தான் அம்பேத்கரியம் அறிவோம் பயிலரங்கு, சங்க இலக்கியப் பயிலரங்கு, பாலினச் சமத்துவம் அறிதல் அரங்கு, சிறுபான்மையினர் வாழ்வியல் புரிந்துணர்வு முகாம், புனைவுலகும் புறவுலகும் முகாம், சிந்துவெளிப் பண்பாடு பயிற்சி முகாம் என தொடர்ந்து முகாம்களை நடத்தி தமுஎகச ஊழியர்களின் கருத்துலகத்தை காலப்பொருத்தமுள்ளதாக்குகிறோம். 

தமுஎகச எழுத்துமேசையிலோ புத்தகத்திற்குள்ளோ தலையைக் கவிழ்த்துக் கொண்டு சமூக நடப்புகளை கண்டும்காணாமல் இருப்பவர்களின் அமைப்பல்ல. மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் நான்கு ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவொட்டாமல் சாதியவாதிகள் தடுத்துவந்த நிலையில் அந்த ஊர்களுக்குப் போய் தேர்தலை நடத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு பரப்புரை செய்தோம். மதுரையில் போராட்டமும் நடத்தினோம். தென் மாவட்டங்களில் முனைப்படைந்து வந்த சாதிய மோதல்களுக்கெதிராக 6 நகரங்களில் நடத்திய பட்டினிப் போராட்டம், அந்நேரத்தில் நடந்த முக்கியமான தலையீடாகும். 

0 தமுஎச-வின் பெயர், அதன் இலச்சினை விரிவாக்கப். பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பதிவிடுக!

எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்குமானது என்கிற புரிதலுடன்தான் 1975ஆம் ஆண்டு தமுஎச தொடங்கப்பட்டது. எனினும் பெயரிலும்கூட அந்த உள்ளடக்கியத்தன்மை வெளிப்பட வேண்டும் என்கிற நோக்கில் 2008 ஆம் நடைபெற்ற 11ஆவது மாநில மாநாட்டில் அமைப்பின் பெயரில் கலைஞர்களையும் சேர்த்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” என்றானது. 

0 பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய ஆளுமைகளை மக்களிடம் கொண்டு செல்லத் தமுஎகச ஆற்றிய பணிகள்.

சங்கம் தொடங்கிய காலத்தில் நெருக்கடிநிலை நிலவிய சூழலில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரது படைப்புகளை முன்வைத்து ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக்குணம், விடுதலையுணர்வு, பகுத்தறிவு மற்றும் பொதுவுடமைக்கருத்துக்கள் ஆகியவற்றைப் பேசுவதற்குமான வாய்ப்பாக தோழர்கள் பயன்படுத்தியுள்ளனர். இம்மூவருக்குமான விழாக்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன. அமைப்பின் முன்னோடிகளாக இவர்களை ஏற்பது இயல்பாக நடந்தேறியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகளாவியப் பார்வையால் தமிழில் முற்போக்கு இலக்கியத்திற்கு பெரும்பங்காற்றிய தோழர் தமிழ்ஒளியையும், சமூகத்தடைகளைத் தாண்டி நாட்டியக்கலையில் அருஞ்சாதனைகள் புரிந்த பாலசரஸ்தியையும் கடந்த மாநாட்டின்போது இணைத்து ஐம்பேராளுமைகள் என்றாக்கிக்கொண்டோம். 

 0 கவிஞர் தமிழ்ஒளி குறித்த தமுஎகச அமைப்பின் முன்னெடுப்புகள்...

தமிழ்ப் பண்பாடு, தமிழர் நலன், பகுத்தறிவு, பொதுவுடமை நோக்கிய சமூக மாற்றம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து படைப்பிலக்கியத்திலும் கருத்தியல் தளத்திலும் களத்திலும் செயல்பட்டவர் தோழர் தமிழ்ஒளி. சாதிய ஒடுக்குமுறை, வேதப்பண்பாடு மற்றும் இந்தியின் ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றுக்கெதிரான அவரது நிலைப்பாடுகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கி அதன் முதல் செயலாளராகவும் இருந்தவர் என்ற முறையில் அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒரு கொள்கையறிக்கைக்கு நிகரானது. எனவே அவர் பாரதி, பாரதிதாசன், வரிசையில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர். அவரது பிறந்த நாளையும் நினைவு நாளையும் அரசு நிகழ்வாக நடத்தவேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசை இணங்கவைத்து சாத்தியப்படுத்தியதில் புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு தீர்மானகரமான பங்குண்டு. தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடங்குவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நூற்றாண்டு விழாக்குழுவை அமைத்து அதனூடே தொடர்ச்சியாக அவரது படைப்புகளை வெகுமக்களிடையே கொண்டு செல்வதற்கு தமுஎகச தோழர்கள் உள்ளுறையாக இருந்தியங்கினர். தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது, அவருக்கு தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிலை வைப்பது, அவருடைய படைப்புகளை மாணவர்களிடையே பரப்புவதற்கு நிதி ஒதுக்கீடு என்கிற முடிவினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதற்குப் பின்னே தமுஎகச உருவாக்கிய தாக்கமும் ஒரு காரணம்.   

0 நாட்டுப்புறக் கலைகளைப் பேணி வளர்ப்பதில் தமுஎகசவின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிடுக!

தமுஎகச திருவண்ணாமலை தோழர்கள் உருவாக்கிய கலை இரவு என்கிற கொண்டாட்டம் பெரிதும் நாட்டுப்புறக்கலைகளையே மையப்படுத்தியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களிடையே பெரும் மேடையில் நிகழ்த்திக்காட்டப்பட்ட இக்கலைவடிவங்களுக்கு மக்கள் காட்டிய ஈடுபாடும் ஆரவாரமும் அந்தக் கலைஞர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கின. கலை இரவு மாநிலம் முழுவதும் பரவியபோது அந்தந்த வட்டாரத்தின் வாழ்வியலோடு தொடர்புடைய நாட்டுப்புறக் கலைவடிவங்கள் கவனப்படுத்தப்பட்டன. தமுஎகச தவிர்த்து வேறுபல அமைப்புகளும் கலை இரவு வடிவத்தைக் கைக்கொண்டு நடத்துகிறார்கள். 

நாட்டுப்புறக் கலைஞர்கள் முழுநேரமாக இயங்கமுடிவதில்லை. அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண் கூலிகளாகவும் வேறுபல தொழில்களில் முறைசாரா தொழிலாளிகளாகவும் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வாழ்வாதாரம் சார்ந்த தீராக்கவலையுடன் மனநிறைவற்ற நிலையில் கலைப்பணியும் ஆற்றுகின்றனர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமுஎகச சிறப்பு மாநாடும் பேரணியும் நடத்தியதன் பேரில் திமுக அரசு நாட்டுப்புறக்லைஞர்கள் நலவாரியத்தை அமைத்தது. அடுத்துவந்த அதிமுக அரசு அந்த வாரியத்தைக் கூட்டாமலே முடக்கிப் போட்டது. கொரானா பொதுமுடக்கக் காலத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் எங்கும் நிகழ்ச்சி நடத்த வழியற்று வாழ்வாதாரம் இழந்திருந்த நிலையில் தமுஎகச மூலமாக மாநிலம் முழுக்க அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தோம்.  இணையவழியில் அவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டில் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்று சில வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதேபோல் நடத்திய மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று நம்பிக்கையளித்தார். நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் உயிர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்களது தேவைகளை நிறைவு செய்யக் கூடிய நிலையில் வாரியம் இல்லை. வாரியத்திற்கு ஒதுக்கப்படும் சொற்ப நிதியை வைத்துக்கொண்டு மாநிலத்தில் உள்ள ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்த்துக் கலைஞர்களுக்கு குண்டூசிகூட வழங்க முடியாது. நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்வது முதற்கொண்டு ஐநூறு ஆயிரம் என்ற  அற்பத்தொகையை நிவாரணமாகப் பெறுவது வரைக்குமாக அவர்களை அலைக்கழிக்கும் அலுவலக நடைமுறைகளில் தீவிரமான மாற்றங்கள் தேவை. கலைஞர்களை இரவலர்கள் போல நடத்தும் நிலை சமூகத்தில் இருப்பது போலவே அரசுத்துறைகளிலும் இருப்பதை மாற்றுவதற்கு கலை பண்பாட்டுத் துறையும் வாரியமும் கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்துச் செயல்பட முன்வருவதுதான் இதற்கு ஓரளவுக்குத் தீர்வாக இருக்கமுடியும்.  

0 சாதி ஒழிப்பு மற்றும் மகளிர் விடுதலை குறித்த தமுஎகசவின் தொடர் செயல்பாடுகள்.

சாதியொழிப்பின் உடனடி சாத்தியங்கள் பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, அதற்கும் முன்னதாகவே ஒவ்வொரு தனிமனிதரும் தன்னளவில் சிந்தனை மற்றும் செயல்பூர்வமாக சாதியை மறுத்து வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதை தமுஎகச தோழர்கள் தவறவிட்டுவிடக்கூடாது. சாதியாதிக்க, மதவாத அமைப்புகளில் இணையக்கூடாது. சனாதன, சாதியக் கருத்துகள் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் எதிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் உறுப்பியம் வகிப்பது இந்நோக்கில்தான். இங்கே நிலவும் பாலினப்பாகுபாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் சாதியமே அடிப்படையாக இருக்கிறது. சாதியம் இங்குள்ள பொருளியல் உறவுகளுடனும் பின்னிப்பிணைந்திருக்கிறது. எனவே ஓர் ஒருங்கிணைந்தப் பார்வையும் போராட்டமும் தேவை. அது நடந்தால் இதெல்லாம் மாறிவிடும் என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், தமுஎகச தோழர்கள் ஆணாதிக்கக் கண்ணோட்டம் துறந்தவர்களாகவும் பாலினச் சமத்துவம் பேணக்கூடியவர்களாகவும் பெண்களும் மாறும் பாலினத்தவரும் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு துணைநிற்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் இந்த நிலைப்பாடுகளை தோழர்கள் அனைவரும் மனமார ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. அதற்காக அவர்கள் தம்மளவில் தயாராவதற்கான முயற்சியை இடைவிடாது நடத்த வேண்டியுள்ளது.

அமைப்பின் கிளை முதல் மாநிலம் வரை குறைந்தபட்சம் 20% நிர்வாகிகள் பெண்களாக இருக்க வேண்டும், பெண்கள் பங்கேற்கும் விதமாக அமைப்பின் நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும், பெண்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளில் தமக்குள்ள தடைகளைக் கடக்க  உதவுதல், பாலியல் தொந்தரவுகள் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் நடவடிக்கை என்பதில் அமைப்பு உறுதியாக இருக்கிறது.  

0 தமுஎகச-வின் விருதுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்களைத் தொகுத்தளிக்கவும்.

எழுத்திலக்கியத்தின் பல்வேறு வகைமைகளில் வெளியாகும் நூல்களுக்கென 11 விருதுகள். நாடகச்சுடர், இசைச்சுடர், நுண்கலைச்சுடர், நாட்டுப்புறக் கலைச்சுடர், பெண் படைப்பாளுமை என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. 10 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுப் பட்டயம் ஒவ்வொரு விருதுக்கும் வழங்கப்படுகிறது. முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்புச் செய்த ஆளுமைக்கான விருது ஒருவருக்கு வழங்கப்படுகிறது. விருதுத்தொகை ஒரு இலட்சம் ரூபாய். ஆண்டுதோறும் ஒரு குறும்படத்திற்கும் ஒரு ஆவணப்படத்திற்கும் மூன்று திரைப்படங்களுக்கும் விருதளிக்கப்படுகிறது. இவ்விருதுகள் அனைத்தும், தமுஎகச மீது ஈடுபாடுள்ள தோழர்களால் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள தொகையை வங்கியில் வைப்புநிதியாக வைத்து அதிலிருந்து வழங்கப்படுவதாகும். 

விருதுக்குரிய நூல்கள் படங்கள் ஆளுமைகள் பற்றிய கருத்தரங்கம் பகலிலும் மாலையில் கலை இரவு பொதுமேடையில் விருதளிப்பும் நடக்கும். விருதுபெற்ற நூல்கள் தமுஎகசவின் வாசிப்பு இயக்கம் மூலம் பரவலாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. 

0 தமுஎகச-வின் பொன்விழா ஆண்டின் செயல்திட்டம் பற்றித் தெளிவாக்கவும்.

வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக என்கிற முழக்கத்துடன் அடுத்த மூன்றாண்டுகளுக்கு எமது கலை இலக்கிய, களச் செயல்பாடுகள் அமையும். தமுஎகச நிகழ்ச்சி நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை என்கிற அளவுக்கு கருத்துலகத்தில் இயங்கிவரும் தமுஎகச காலத்தின் தேவையை நிறைவு செய்வதில் இன்னும் தீவிரமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

 

திங்கள், செப்டம்பர் 1

எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் வெளிப்படையான கொள்கையும் அதனை அடைவதற்கு துல்லியமான செயற்திட்டமும் இருந்தாலும்கூட அப்படி ஒட்டுமொத்த மக்களையும் திரட்டுவதில் கட்சிகள் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றன. எனவே, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் திரட்டுவதற்குப் பதிலாக, ஏற்கனவே வெவ்வேறு காரணங்களுக்காக சமூகக்குழுக்களை அணிதிரட்டியுள்ள கட்சிகளை  அடையாளம் கண்டு அவற்றை வளைத்துப் பிடித்து தமது ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்துவதை ஓர் உத்தியாக அரசியல் கட்சிகள் கைக்கொள்கின்றன. தேர்தல் கூட்டணிகள் இவ்வகையானவை. 

ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் என்கிற ஆர்.எஸ்.எஸ் தேர்தலில் போட்டியிடும் அமைப்பல்ல. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறையான பார்ப்பனீயத்தின் கீழ் சமூகத்தை மறுகட்டுமானம் செய்யத் துடிக்கின்ற ஓர் அமைப்பாகும். அதாவது, அது சமூக நீதிக்காவும் சமத்துவத்திற்காகவுமான நெடிய போராட்டங்களினால் பார்ப்பனீயத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைச் சரிசெய்து முன்னிலும் இறுக்கமானதாக இந்தியச் சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிறது. இந்த நோக்கத்தை எட்டுவதற்கு அரசியல் அதிகாரமும் தேவை என்பதால் ஆர்.எஸ்.எஸ். முன்பு ஜனசங்கம் என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வந்தது. பிறகு ஜனசங்கத்தை பாரதிய ஜனதா கட்சியாக்கியது. 

சுதந்திரப் போராட்டத்திலோ நாட்டின் மரியாதையை உயர்த்தும் நடவடிக்கைகளிலோ மக்களின் விருப்பார்வங்களை நிறைவேற்றுவதிலோ ஆக்கப்பூர்வமான பங்களிப்பு எதையும் செய்திராத ஆர்.எஸ்.எஸ். அழிவுப்பூர்வமானது என்றே மக்களின் நினைவில் பதிந்துள்ளது. எனவே  ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையைச் செயல்படுத்த அதிகாரம் வேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னால் ஆதரவு கிடைக்காதென்பதால் இந்து என்கிற மத அடையாளத்தை முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டப் பார்க்கிறது பாஜக. இதன் மூலம் அது இந்துக்களல்லாத மதச் சிறுபான்மையினரை திட்டமிட்டே தனது ஆதரவுத்தளத்திற்கு வெளியே நிறுத்துகிறது. எனவே அதன் கொள்கை ஒட்டுமொத்த சமூகத்திற்குமானது அல்ல என்பதும் அது இந்துக்களை மட்டுமே திரட்ட முயற்சிக்கிறது என்பதும் வெளிப்படை. எனினும் இந்து என்கிற பெரும்பான்மை அடையாளத்துக்குள் தள்ளப்பட்டவர்கள் தமக்குள் ஒன்றுபடவியலாமல் முரண்படும் சாதியக்குழுக்களாக இருக்கின்றனர். 

இந்து என்கிற பொது அடையாளத்துக்குள் இருக்கும் உள்முரண்களைத் தீர்த்து வைப்பதற்கு பதிலாக அந்த முரண்களை அப்படியப்படியே பேணிக்கொண்டு ஒவ்வொரு குழுவுக்கும் வேண்டிய சிலவற்றை செய்துகொடுத்தோ அல்லது செய்வதாக வாக்குறுதியளித்தோ அவர்களை தனது ஆதரவாளர்களாக தனிப்பட்ட முறையில் இணைத்துக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. அத்தோடும் நில்லாமல் அத்தகைய முரண்பாடுகளை முரண்பாடுகளாக கருதாமல் அவற்றை இந்துமதத்தின் தனித்துவம் என்று ஏற்கும்படியாக கூர்மைப்படுத்தவும் பாஜக முனைகிறது. இதற்காக அது அந்தந்த வட்டாரத்தின் சூழலுக்கேற்ப சாதி/ உட்சாதி/ வட்டாரம்/ தேசிய இனம் சார்ந்த பல்வேறு குழுக்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தனது ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்துகிறது. இவ்வாறு விரிவுபடும் ஆதரவுத் தளத்தை தனது வாக்குவங்கியாக மடைமாற்றிக்கொள்ளும் முயற்சியை சமூகப் பொறியியல் என்கிறது பாஜக. மக்களின் மனவோட்டங்களைப் பகுத்தாய்ந்து பெறும் தரவுகளின் அடிப்படையில் அவர்களை அணுகுவதற்குரிய சமூகப்பொறியியலை உருவாக்குகிறது பாஜக. 

குறிப்பிட்ட சமூகக்குழுவைக் குறிவைத்து தொடர்புகொள்வது, அதற்குள் ஊடுருவுவது, அக்குழுவில் உள்ளவர்களை ஈர்ப்பதற்கான முழக்கங்களை உருவாக்குவது, அவர்களின் மதிப்பிற்குரிய ஆளுமைகள், நம்பிக்கைகள், சடங்குகள், பண்டிகைகள் ஆகியவற்றை மதிப்பதாக காட்டிக்கொள்வது, அந்தக் குழு இந்துமதத்தின் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்ட பகுதி என்று சித்தரிப்பது, அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை உட்செரித்து பார்ப்பனியத்தன்மையுடன் இணைப்பது ஆகிய உள்ளடி வேலைகள் மூலம் இந்தச் சமூகப் பொறியியல் இயங்குகிறது. நேரடியாகவும் ஊடகங்கள் மூலமாகவும் உயிரோட்டமான தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் அக்குழுவில் உள்ள மக்களது கருத்துலகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி அவர்களது முடிவெடுக்கும் மனோநிலையை தமக்குச் சாதகமாக மாற்றியமைப்பதற்கு உகந்த சமூகப் பொறியியலை ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலுடன் பாஜக கைக்கொள்கிறது. 

சமூகக்குழுக்களால் வழிபடப்படும் நாட்டார் தெய்வங்களை சிவன் பார்வதி விஷ்ணு லஷ்மி ஆகிய பெருந்தெய்வங்களின் அம்சங்களாக காட்டும் புனைகதைகளை உருவாக்கிப் பரப்புவது, ஒவ்வொரு சாதியக்குழுவும் வம்ச வரலாறு என நம்பும் கதையை / தோற்றக்கதையை உண்மையென அங்கீகரிப்பது அல்லது கதையை உருவாக்கிக் கொடுப்பது, கலை இலக்கியங்களையும் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளையும் இந்து மதத்தின் பங்களிப்பாக சித்தரிப்பது, இந்தியாவின் நெடிய வரலாற்றுக்குப் பெருமைமிக்கப் பங்களிப்புச் செய்தமைக்காக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆளுமைகளை தம்மவர் என உரிமை கொண்டாடுவது, சாதியாக இருப்பதைப் பெருமிதமாக கருதவைப்பது, சாதியாக இருப்பதனால் கிடைக்கும் ஆதாயங்களை இந்து மத்தின் கொடையாகவும் பாதகங்களை அன்னியர்களின் ஊடுருவல்/ தாக்கமாக காட்டுவது, சமூகத்தின் ஒருதரப்பை ஆபத்தான அன்னியர்களெனச் சித்தரித்து அவர்களை எதிர்க்க வேண்டியவர்களெனக் காட்டுவது, படிநிலையையும் பாகுபாட்டையும் இயல்பானதாக பரப்புவது, சமத்துவம் என்னும் கருத்தாக்கத்தை சாதியமைப்பைச் சிதைக்கும் ஆபத்தாக முன்னிறுத்துவது என்று பீஹார், உ.பி, ம.பி, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் கைக்கொண்டு ஓரளவு ஆதாயமீட்டிய சமூகப் பொறியியலை தமிழ்நாட்டிற்கேற்றாற் போல பாஜக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டம். 

தமிழ்ச்சமூகத்தின் பின்தங்கிய மனநிலையையும் பிற்போக்கான கண்ணோட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற சக்திகளை, அமைப்புகளை, கட்சிகளை அதனதன் சீரழிவுத்தன்மைகளோடு ஒருங்கிணைத்து தலைமை தாங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்திக் கொடுப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் உடனடி நோக்கமாக இருக்கலாம். ஆனால் தேர்தல், வாக்கு, அரசியல் அதிகாரம் என்பவற்றுக்கும் அப்பால் பார்ப்பனீயத்திற்கு விசுவாசமானதாக மனித மனங்களைத் தகவமைப்பதே அதன் மெய்யான இலக்கு. அதன்பொருட்டு குடியிருப்போர் நலன், கல்வி, சுற்றுச்சூழல், யோகா, குழந்தை வளர்ப்பு, மகளிர் நலன், கலை இலக்கியம், பண்பாடு, விளையாட்டு, பாரம்பரியம், மரபு, தொல்லியல் ஆய்வு, ஊடகம் சார்ந்தியங்கும் அமைப்புகளில் ஊடுருவி தன்வயப்படுத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.   

தெருச்சண்டைகள் மதக்கலவரங்களில் தெரிவது மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அல்ல. அது உள்ளூர் சமூகத்தில் தவிர்க்கமுடியாத வகையில் மக்களுடன் பிணைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான பொறுமையுடன் இயங்குகின்ற, நேரடியாக அரசியல் பேசாமல் நடுநிலைத் தோற்றம் காட்டுகிற பல்வேறு புதிய நிழலமைப்புகளை பெரும் முதலீட்டில் களமிறக்கியுள்ளது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கிழுக்க ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்தச் சமூகப் பொறியியலை முறியடிக்க விரும்பும் சக்திகள், அதற்கேற்ற நுட்பமும் வலுவும் கொண்ட நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் கைக்கொண்டாக வேண்டிய தருணமிது.

நன்றி: தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் 5ஆவது மாநில மாநாட்டு மலர்

 


செவ்வாய், ஆகஸ்ட் 19

மிபூ - ஆதவன் தீட்சண்யா

 


ஓவியம்: அரஸ், நன்றி: ஆனந்தவிகடன், 31.08.2025

மிதமான வெப்பத்துடன் தகதகவென சுடர்ந்துகொண்டிருந்த சூரியன் மறைந்து கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் தண்ணென்று ஒளிர்ந்தபடி மேலெழுந்து வந்தது நிலவு. கண்ணுக்கு இதமான அந்த ஒளியே தொட்டுத்தழுவது போல குளிர்ந்தக் காற்று எங்கும் பரவியது. மிபூ என்னும் அந்தக் கோளத்தின் மக்களாகிய மிபூக்கள் ஓய்வுக்கும் உல்லாசத்திற்கும் சற்றே உறக்கத்திற்குமாக ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கி வைத்திருக்கும் நேரம் அப்போதிருந்து தொடங்கிவிட்டது.     

தெருக்கள் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்களாய் மாறியிருந்தன. உற்சாகத்தில் பீறிடும் அவர்களது சிரிப்பும் கும்மாளச் சத்தங்களும் இரவின் ஒலிபோல கேட்கிறது. கடற்கரைகளும் பூங்காக்களும் காதலர்களின் கொஞ்சுமொழியால் கிறங்கித் தவித்தன. கலைஞர்கள் வெட்டவெளிகளிலும் அரங்குகளிலும் பாடியும் இசைத்தும் நடித்தும் நடனமாடியும் சூழலை பரவசமாக்கிக் கொண்டிருந்தனர். நேயர்களின் ஆரவாரம் வேறு எங்கெங்கோ இருந்தவர்களையும் அங்கு வரும்படி இழுத்தெடுத்து வந்து ஆடவைத்தது. கொஞ்சம்பேர் வீட்டின் முற்றங்களில் சாய்ந்து இரவுச்சூரியனின் குளிர்மையில் தோய்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பசித்தபோது ஆங்காங்கே இருந்த பொது உணவகங்களில் ஏதேனுமொன்றுக்குப் போய் அங்கு ரோபோசெஃப்கள் சமைத்துத்தரும் வகைவகையான உணவுகளிலிருந்து தேவையானவற்றை உண்டு பசியாறினர். அளவுக்கட்டுப்பாடு ஏதும் இல்லையென்றாலும் மிபூக்களுக்கு குறைவான மதுவே போதுமாயிருந்தது.      

உறக்கம் என்பதையே அறிந்திராதவர்கள் போல மிபூக்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களில் திளைத்திருந்த அவ்வேளையில் யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் கோளதிர ஒலிக்கத் தொடங்கியது ஆனந்த மணி. மகிழ்ச்சிக்குரிய நற்செய்திகளைக் கேட்க மக்களை ஆயத்தப்படுத்தும் அந்த மணி ஒலிப்பது மிபூ வரலாற்றில் இதுவொன்றும் முதல்முறையல்ல. நினைவுக்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக அது சமையலறை ஒழிப்பு – பொது உணவுக்கூடம், கட்டணமில்லா மருத்துவம், கட்டாயக்கல்வி, சீரான வேலைவாய்ப்பு என்று எத்தனையோ நற்செய்திகளைச் சொல்வதற்காக அவர்களை அழைத்திருக்கிறது. கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒலித்தபோது குழந்தைகள் கற்பதுதான் முக்கியமே தவிர தகுதி திறமை என்கிற ஏமாற்றுத்தேர்வுகள் அவசியமில்லை என்று அரசு அறிவித்தது. அதற்கும் முந்தைய அழைப்பில், அதிரடியாக ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் சோபெ வரவு வைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவைவரி ரத்து, சுங்கச்சாவடி மூடல், புழக்கத்திலிருக்கும் பணநோட்டுகளை செல்லாதது என அறிவிப்பதற்கு நிரந்தரத் தடைவிதிக்கும் அரசியல் சட்டத்திருத்தம், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் என்று ஆனந்த மணியோசைக்குப் பின்னே வந்த அறிவிப்புகள் ஒன்றா இரண்டா?   

இன்றைய அழைப்பு எதற்கானதாக இருக்கும் என்று யூகிக்கும் குறுகுறுப்பில் மிதமிஞ்சிய கற்பனையில் மிபூக்கள் மிதந்துகொண்டிருந்த அவ்வேளையில் மிபூ கோளாளுமன்ற வளாகம் பரபரப்பின் உச்சத்திலிருந்தது. இவ்வளவு அவசரமாக இந்த அகாலத்தில் அறிவிக்கும் நற்செய்தி என்னவாக இருக்கும் என்கிற குழப்பத்தில் கோளாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஹெலிகார்களில் பறந்து வந்திறங்கி கூட்ட அரங்கிற்கு விரைந்தனர். கோளாளுமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பில் காண்பதற்காக மிபூக்கள் தகவல் தொடர்பு தொடுதிரையான உள்ளங்கையை உயிர்ப்பித்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கையடக்கத் திரையில் பார்க்க விரும்பாதவர்களுக்காக ஆங்காங்கே வெட்டவெளியில் ஒளிரத் தொடங்கின அகன்ற மெய்நிகர் திரைகள். 

அமைச்சர்களும் மன்ற உறுப்பினர்களும் ஆர்வம் மேலிட காத்திருக்கும் கூட்ட அரங்கிற்குள் மிகுந்த உற்சாகத்துடன் நுழைந்தார் கோளரசுத்தலைவர் நீனெல். மிபூக்களின் வரலாற்றில் முன்னெப்போதும் கேள்விப்பட்டிராத ஒரு செய்தியை அறிவிக்கும் மகத்தான வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது குறித்த பெருமிதம் அவருடைய முகத்தில் பிரகாசித்தது.  

“அடியும் முடியுமறியாத இந்த அண்டவெளியில் மிபூ என்கிற நம் கோளம் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுதியானது என்று இதுகாறும் நம்மிடையே நிலவிவந்த பத்தாம்பசலியான கருத்தை விட்டொழிக்க வேண்டிய நற்தருணம் வந்துவிட்டது. அண்டவெளியில் சுழன்றுகொண்டிருக்கும் நம்முடைய ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள், நமது மிபூவைப் போலவே உயிரினங்கள் வாழும் சூழமைவு கொண்ட கோள் ஒன்று நம்மிடமிருந்து 1,127 லட்சம் கோடி கிலோமீட்டர் அருகாமையில் இருப்பதை சற்றுமுன் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிபூவை விட இரண்டரை மடங்குச் சிறியதான அந்தக் கோளுக்கு அவர்கள் – மிபூவை தலைகீழாக்கி - பூமி என்று பெயரிட்டிருக்கிறார்கள். தங்களது ஆய்வின் எல்லையை விரிவுபடுத்தியதன் மூலம் மிபூவின் எல்லையை பல லட்சம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பாலும் விரிவுபடுத்தியுள்ள நமது ஆராய்ச்சியாளர்களுக்கு மிபூக்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு நமது பாராட்டுகள்..” 

–நீனெல் இப்படி அறிவித்ததும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் மட்டுமல்ல, அவை நடவடிக்கையை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மிபூக்கள் அனைவருமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.   

** 

மிபூவைப் போலவே காற்றும் ஒளியும் தண்ணீருமுள்ள பூமி என்கிற அந்த இன்னொரு கோளும் சேர்ந்து மிபூக்களின் நிலப்பரப்பு விரிவதைப் போன்ற கனவு இப்போதெல்லாம் நீனெலுக்கு அடிக்கடி வந்து அவரை திக்குமுக்காடச் செய்தது. அந்தப் பரவசத்தில், ஆராய்ச்சியாளர்கள் பூமியை நெருங்கிப்போய் கவனிக்கத் தோதாக விண்வெளி ஆய்வகத்தை நவீனப்படுத்துவதற்கு தாராளமாக பெருந்தொகையை ஒதுக்கினார். அண்டவெளியை ஊடுருவிப் போய் பூமிக்கு நேர் மேலாக நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தி தகவல் சேகரிக்கும் விண்வெளி தொலைநோக்கி ஒன்றை ஏவியிருந்தனர் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் அல்லும்பகலும் அயராது ஆய்வுசெய்து பூமியைப் பற்றி திரட்டும் அரிதான பல தகவல்களை அறியும் ஆர்வம் மிபூக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருந்தது. 

இதே வேகத்தில் ஆய்வுகள் நடக்குமானால் இன்றில்லாவிட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் பூமிக்குச் சென்றுவரும் நிலைமை உருவாகிவிடும் என்கிற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது. மிபூக்களின் இந்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக ஒரு நிறுவனம் “பூமிக்குப் போய்வருவோம்” என்கிற பெயரில் இன்பச்சுற்றுலாவுக்கு மாதாந்திரச் சேமிப்புச்சீட்டு கட்டும் திட்டத்தை அறிவித்தது. போக்குவரத்து, சாப்பாடு, தங்குமிடம், பூமியின் முக்கிய இடங்களைச் சுற்றிக்காட்டுவது, பயணத்திற்கு உடலையும் மனதையும் தகவமைக்கும் பயிற்சி வகுப்பு ஆகியவற்றுக்கென அந்நிறுவனம் அறிவித்ததைவிடவும் சற்றே குறைந்த தொகையில் “பூமிக்குப் பொன்னுலா” என்னும் மலிவான திட்டத்தை மற்றொரு நிறுவனம் அறிவித்தது. எங்கு பார்த்தாலும் பூமியைப் பற்றிய பேச்சாகவே இருப்பதைப் பார்த்து உற்சாகமடைந்த நிலத்தரகு நிறுவனம் ஒன்று “இனி பூமியிலும் உங்களுக்கொரு வீடு!” என்னும் ஈர்ப்பான முழக்கத்துடன் களமிறங்கியது. அது “மிபூவுக்கு வெகு அருகில், பூமியில் உங்களது ஓய்வுக்காலத்தை இனிதே கழிக்க இப்போதே முதலீடு செய்யுங்கள்” என்று சொல்லி முன்பதிவுத் திட்டத்தைத் தொடங்கி தவணை முறையில் வசூலிலும் இறங்கிய போதுதான் கோளரசுத் தலைவர் நீனெலுக்கு விபரீதம் உறைத்தது. பூமியைப் பற்றிய ஆய்வுகள் முழுமையடையாத நிலையில் ஆர்வக்கோளாறில் அரைவேக்காட்டுத்தனமாக அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும் யாரும் ஆதரிக்க வேண்டாம் என்று உடனடியாக அறிக்கையின் மூலம் மக்களை அவர் எச்சரிக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் ஆய்வுகளை துரிதமாக முடித்து உண்மை நிலையைச் சொல்ல வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே வலுத்தது. இந்தக் களேபரங்களுக்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் என்கிற பதைப்பில் விண்வெளி ஆய்வகத்திற்கு தானே நேரில் சென்று ஆய்வுநிலவரத்தை மேற்பார்வையிட விரும்பினார் நீனெல். 

மிபூ வரலாற்றில் விண்வெளி ஆய்வகத்திற்கு கோளரசுத்தலைவர் நேரடியாக வருவது இதுவே முதல்முறை என்பதால் ஆராய்ச்சியாளர்கள் அவரை விமரிசையாக வரவேற்றார்கள். அவர்கள் தங்களுடையதைப் போன்ற பிரத்யேகச் சீருடையை அவருக்கு வழங்கி அணியவைத்தபோது அவர் இந்தப் பொருத்தமற்ற அலங்காரத்தில் தான் கேலிக்குரியவனாகிவிட்டதைப் போல உணர்ந்தார். என்றாலும் அது அங்குள்ளவர்களின் ராஜ்ஜியம், அங்கு அவர்கள் சொல்படி நடப்பதே சரியென்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து மிதந்தபடியே ஆய்வகத்தின் அதிரகசிய அறைக்குள் நுழைந்தார். 

அண்டசராசரத்தில் பல லட்சங்கோடி ஒளியாண்டுகள் தொலைவில் சுழலும் கோள்கள் பலவற்றையும் தொலைநோக்கியில் கண்டபோது அவருக்கு கலைடாஸ்கோப்பில் கண்குவித்துப் பார்த்தக் காட்சிகளும் வினோதமான சிறுவயதுக் கனவுகளும் நினைவுக்கு வந்தன. இவ்வளவு அதிசயங்களைக் கொண்டதா இந்த அண்டவெளி என்கிற ஆச்சர்யத்தில் திகைத்துப் போனார். அந்தக் கணமே ஓடிப்போய் மிபூவின் குழந்தைகள் அனைவரையும் கூட்டி வந்து இந்த அதிசயங்களைக் காட்டவேண்டும், அவர்கள் அடையும் ஆனந்தத்தைக் காணவேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது. காட்சியின்பத்தில் திளைத்திருந்த அவரை ஒருவாறாக சமநிலைப் படுத்திய ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர், தொலைநோக்கியை துல்லியமாக பூமியின் மீது நிலைகுத்தி நிறுத்தி நீனெல் காணும்படி செய்தார். நீனெலிடம் பகிர்வதற்கென அவர்கள் திரட்டி வைத்திருக்கும் தகவல்களால் அவர்களது மனம் தளும்பித்தளும்பி உடைந்துவிடுவது போலிருந்தது.

விண்வெளி ஆய்வகத்தை மேற்பார்வையிட்டுவிட்டு தரையிறங்கிய கோளரசுத்தலைவர் நீனெலை மிபூக்கள் கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் வரவேற்றார்கள். பூமியைப் பற்றி அவர் அறிந்துவந்துள்ள புதிய செய்திகளைக் கேட்க அவர்கள் வெகுவாக ஆவல் கொண்டிருந்தனர். ஆனால் அவரோ அந்தக் கொண்டாட்டங்கள் எதிலும் பங்கெடுக்காமல் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டியிருந்தார். 

அமைச்சரவைக் கூட்ட அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு அகன்ற திரை உயிர்ப்பிக்கபட்டது. விண்வெளி ஆய்வகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் காணொளியை அமைச்சர்கள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அண்டத்தில் கொசகொசவென ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள், விண்கலங்கள், விண்வெளி ஆய்வகங்களுக்கிடையே சுழன்றுகொண்டிருக்கும் அந்தக் கோளம் தான் பூமி என்ற வாசகம் திரையில் தெரிந்ததுமே அமைச்சர்கள் உற்சாகமிகுதியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அண்டவெளியில் அந்தரத்தில் ஒரு அச்சின்மீது பொருத்தப்பட்டது போன்ற ஒழுங்கில் அது சுழலும் அழகைப் பார்க்கப்பார்க்க அவர்களுக்கு வியப்பாக இருந்தது. மேகமண்டலத்தை ஊடுருவி பூமியைக் கீழ்நோக்கிப் பார்த்துக் குவியும் நுண்ணோக்கியில் பிடிபடும் காட்சிகள் சட்டென திரையில் விரிகிறது. இன்னும் குவிந்து பூமியைக் கிட்டத்தில் காட்டும்போது அவர்களால் பூமியின் தரையைத் துல்லியமாக பார்க்க முடிந்தது.    

காணொளிக் காட்சியை இடைநிறுத்தி “இனிமேல் வரும் காட்சிகள், நம்மோட ஆராய்ச்சியாளர்கள் குழு பறக்கும் தட்டுகள் மூலமா பூமிக்கு நேரடியா போய் அங்கேயே பதுங்கியிருந்து படமாக்கி கொண்டுவந்தவை” என்கிற முன்னறிமுகத்தை நீனெல் சொன்ன பிறகு திரையிடல் தொடர்ந்தது. 

திரையிடல் முடிவடைந்து அரங்கின் விளக்குகள் எரியவிடப்பட்ட பிறகும்கூட அமைச்சர்கள் இயல்புக்குத் திரும்பாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். ஒட்டுமொத்த அமைச்சரவையுமே வாயடைத்துப் போயிருந்த்து. அந்த மெளனத்தை உடைக்கும் விதமாக அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் “உயிரினங்கள் வாழத்தகுந்த சூழமைவு இருக்கிறதா சொன்னப்பவே அங்க மரம், செடி கொடி, புல் பூண்டு, புழு பூச்சி, விலங்கினங்கள் இருக்கும்னு நான் யூகிக்கத் தான் செஞ்சேன். ஆனா இதுங்க எல்லாத்தையுமே வேட்டையாடுற “மனிதர்கள்”னு ஒரு விலங்கினம் அங்கு கடைசியா வந்து சேர்ந்திருக்கும்னு நான் நினைச்சிருக்கல” என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார். 

அவரை குறுக்கிட்ட கோளரசுத்தலைவர் நீனெல் “அவங்களோட வேட்டை வெறிக்கு உயிரினங்கள் மட்டுமே பலியானதா நினைச்சுக்காதீங்க.  மலைகள், ஆறுகள், கடல்கள், காற்று எதுவும் தப்பல. பென்னம்பெரிய மலைகளையெல்லாம் வெடி வச்சு சிதறடிச்சிருக்காங்க. ஆறு கடல் ஏரின்னு நீர்நிலைகள் மொத்தத்தையும் மாசுபடுத்தி பாழடிச்சிருக்காங்க. ஆகாயத்தயும் கூட அவங்க விட்டு வைக்கல. நீங்களே பார்த்தீங்க தானே எங்கு பார்த்தாலும் எவ்வளவு செயற்கைக்கோள்கள்.. விண்வெளி ஆய்வுக்கூடங்கள்….”    

அமைச்சர்களின் கவலை தோய்ந்த முகங்களைப் பார்த்தபடியே தொடர்ந்த நீனெல், “பூமியில் இருக்கிறதையெல்லாம் அழிக்க ஆரம்பிச்ச அவங்க இப்போ பூமியவே பலமுறை அழிக்கக்கூடிய ஆயுதங்களை வச்சிருக்காங்க.  புதுப்புது ஆயுதங்களை அன்னாடம் கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்காங்க.” என்றார். அவரிடம் கேட்பது போன்றோ தனக்குள்ளேயே அங்கலாய்த்துக் கொள்வது போன்றோ குறுக்கிட்ட மூத்த அமைச்சர் ஒருவர் “ஆயுதங்களை கையில வச்சிக்கிட்டு எப்படி அமைதியா இருக்கமுடியும்?” என்று கவலை தெரிவித்தார். அதற்கு நீனெல் “உங்களோட கணிப்பு சரிதான்.” என்றார். 

அப்போது “இந்தப் பேச்சை இத்தோட நிறுத்துங்க” என்று சீற்றத்துடன் எழுந்தார் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர். “போர், மோதல், கொலை, சாவு, ரத்தம், பஞ்சம் பட்டினி, ஓலம், அலறல்… அப்பப்பா, திரையில பாத்ததுக்கே உடம்பும் மனசும் பதறுதே, அந்த அவலத்துக்குள்ளயே மனுசங்க எப்படி வாழுறாங்க? குழந்தைகளையும் கூட சித்ரவதை செய்து கொல்வதை வெற்றினு கொண்டாடுற அந்த மனுசங்கள பத்தின ஆராய்ச்சிய இத்தோட நிறுத்திக்குவோம்” என்றார் நடுங்கும் குரலில். 

அவரை ஆசுவாசப்படுத்திய நீனெல் “800 கோடிபேரா இருக்குற அவங்க மனிதர்கள்ன்ற ஒரு அடையாளத்தோட ஒற்றுமையா இல்லை. பாலினம், நாடு, இனம், மதம், சாதி, வர்க்கம்ன்னு பலவாறா பிளவுபட்டு பகையேறிக் கிடக்குறாங்க. யார் மேலானவங்க- புனிதமானவங்கன்னு ஓயாத சண்டை. இயற்கையா சாகுறதே அங்கே பெரிய கொடுப்பினை தான். அந்தளவுக்கு வெறுப்பும் வன்முறையும் உயிரழிப்பும்” என்றார்.   

“அவங்க வாடை பட்டால்கூட நம்ம மிபூ மாசடைஞ்சிடும்” என்று எச்சரிக்கும் குரலில் சொன்னார் உள்துறை அமைச்சர். வேறு சில அமைச்சர்களும் தங்களது அச்சத்தை கருத்தெனச் சொல்லி முடித்தப் பிறகு எழுந்த நீனெல் “இதுவரைக்கும் நீங்க பார்த்ததைவிடவும் படுபயங்கரமான ஒரு விசயம் இருக்கு” என்கிற பீடிகையுடன் ஆரம்பித்த அவர் குரலில் இருந்த பீதி அமைச்சர்களுக்கும் பரவியது. என்ன சொல்லப்போகிறாரோ என்று அவர்கள் திகிலுடன் பார்த்தார்கள். 

‘உயிரினங்கள் வாழத் தகுதியான வேறு கோள்கள் இருக்கான்னு நம்மள மாதிரியே அந்த மனிதர்களும் ரொம்பநாளா ஆய்வு செய்துக்கிட்டு இருந்திருக்காங்க. அதுல ஒரு டீம் 1,127 லட்சம் கோடி கிலோமீட்டர் அருகாமையில நம்ம மிபூ இருக்கிறதை எப்படியோ இப்ப கண்டுபிடிச்சிருக்கு.  பூமியைவிட இரண்டரை மடங்கு பெரியதான மிபூவுக்கு அவங்க K2-18bன்னு பேரும்கூட வச்சிருக்காங்க. மிபூவுல என்னென்ன உயிரினங்கள் இருக்கக் கூடும்னு அடுத்தக்கட்ட ஆய்வுல அவங்க மும்முரமா இறங்கினா அது நமக்கு பேராபத்தைக் கொண்டு வந்துடும். புதிய கிரகத்துக்குப் போய்வர முடியும்னு ஆயிட்டா அங்கயிருக்குற கனிமவளங்களை வெட்டியெடுக்கிற கான்ட்ராக்டை தனக்கே  தரணும்னு இப்பவே தொழிலதிபர் ஒருத்தர் தனக்கு வேண்டிய ஒரு பிரதமர்கிட்ட கோரிக்கை வச்சதா பூமியில ஒரு செய்தி இருக்கு. எப்பாடு பட்டாவது அந்த மனிதர்கள்ட்டயிருந்து நம்ம மிபூவையும் மிபூக்களையும் நாம காப்பாற்றியாகணும். அதுக்குண்டான ஆலோசனைகளை சொல்லுங்க…”. 

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு எதுவாயினும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குவதை தன் பணிகளின் ஒருபகுதியாக கருதுபவர் நீனெல். எனவே கூட்ட அரங்கத்திற்கு வெளியே புல்தரையில் வெகுநேரமாக செய்தியாளர்கள் ஆர்வம் மேலிட காத்திருந்தனர். பொழுது புலரும் வேளையில் கூட்ட அரங்கிலிருந்து அமைச்சர்கள் புடைசூழ வெளியே வந்த நீனெல் “நாம் புதிய வரலாற்றுக்கட்டத்துக்குள் நுழைகிறோம். நமக்கு வெளியே மனிதர்கள் என்பவர்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளோம். மனிதர்கள் ஊடுருவும் ஆபத்தைத் தடுக்க மிபூ கோளத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கவிருக்கிறோம். தற்காப்புக்காக பூமியை நோக்கி கண்காணிப்பு ரேடார்களையும் ஆளில்லா ஏவுகணைகளை நிறுவப் போகிறோம்” என்று அமைச்சரவை முடிவுகளை விளக்கிக்கொண்டிருந்தார். இந்த அறிவிப்பினை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த விண்வெளி ஆய்வுக்கூடத் தலைவர் “இவ்வளவு சீக்கிரத்தில் நமக்கும் மனுசப்புத்தி தொற்றிக் கொண்டதே” என்று தலையிலடித்துக்கொண்டார்.  

அகமண முறை அபாயங்கள்: சாதி மறுப்புத் திருமணமும், மரபணு எனும் பதினோராம் பொருத்தமும் - ஆதவன் தீட்சண்யா

ஹாப்ஸ்பர்க் தாடை சா தி என்கிற சமூகக் கட்டமைப்பின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பம் தான் ஒவ்வொரு சாதிக்கும் உரியவர்களைப் பெற்றெடுத்து அந்தந...