வெள்ளி, நவம்பர் 18

நுரையின் மைந்தர்கள் மற்றும் கூழாங்கற்களுக்கு - ஆதவன் தீட்சண்யா

கொலையாயுதம் ஏந்தாத ஒருவரும் காணக்கிடையாத துர்வெளியில்
யாருக்கும் நேரத்தகாத சொந்தத் துயரங்களில்
யாமே மருகிப் பொசுங்குமாறு தனித்துவிடப்பட்டுள்ளோம்

இழந்தவை உயிர்த்துவரும் வழி முடங்கிய சாம்பல்வனத்தில்
அனாதைகளாய் உழன்றலையுமாறு அனுமதிக்கப்பட்டுள்ளோம்

வம்சமே சூறையாடப்பட்ட பிறகு
இடிக்கப்பட்ட வீட்டின் சுவற்றில் தெறித்து
இன்னும் துடிக்கும் குழந்தையின் சதையிணுக்குகளை
கொத்தித் தின்கிறது வலியறியாத காகம்

குப்பைவண்டியில் அள்ளிப்போய் குமித்துப் புதைத்தது போக
தெருமருங்கில் வீசியெறியப்பட்ட எமது மீதிப் பிணங்களுக்காக
நரபட்சிணிகள் நகரம் முழுக்க வெறிகொண்டலைகின்றன

நேற்றுவரை நாங்களும் சுதந்திரமாய் இருந்த வரலாற்றை
என்றென்றைக்குமாய் மறக்கடிக்க
குரோத்தின் கூரேறிய வல்லாயுதங்கொண்டு
எதிராளி தனது குலக்குறியை
நினைவின் ஆழடுக்குகளில் பொறித்துப் போயிருக்கிறான்

வெற்றிகொண்ட அவனது சந்ததிகளை கர்ப்பம் சுமக்கும் எம் பெண்டிர்
அவமானத்தின் கொடுங்கங்கில் அக்கணமே மரித்தனர்
பிறக்கவிருக்கும் குழந்தைகளின் புனிதம்
இன்னொருமுறை ஆயுதங்களால் தீர்மானிக்கப்படும்வரை
எங்கள் மீதான வெற்றிக்கு
அவலமிக்க சாட்சியாயிருக்கும் நிபந்தனையின்பேரில்
கொல்லப்படாதிருக்க வாய்ப்புண்டு

நிராதரவின் பெருஞ்சுழிக்குள் நாங்கள் வீழ்த்தப்படுகையிலும்
பதுங்குகுழி விட்டு வெளிவரத் தயங்கியோரின்
கோழைகரமான ஆறுதல் வார்த்தைகள்
திராவகமாய் எரிக்கிறது

எமது உயிர்த்தலத்தில் செருகப்படும் கொலைவாளை
ஓடிவந்து தடுக்கத் துணியாதோரின் கண்டன அறிக்கைகள்
எதை மீட்டுத் தரப்போகிறது எங்களுக்கு?

இன்றிரவுக்குள் எங்களைப் பின்னுக்குத் தள்ளி
அதிகாலை வந்தெழுப்பும் புதிய பரபரப்பில் திளைத்து
ஏற்கனவே படியெடுத்து வைத்திருக்கும்
"பலத்த ஆட்சேப'' அல்லது "கடும் கண்டன'' அறிக்கை வெளியிடும்
வீரஞ்செறிந்த போராளிகள்
நேரத்தே தூங்கச் செல்லவும்
அல்லது
எதிலுமே தலையிட்டுத் தடுக்கமுடியாத
தங்களின் இருப்பு நீடிக்க என்ன நியாயமுண்டு என்பதை
இப்போதாவது முதல்முறையாக யோசிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...