செவ்வாய், நவம்பர் 22

வேட்டை - ஆதவன் தீட்சண்யா

ந்தியில் கிளம்புது சேனை
பம்மி வருகிறது இருட்டு

நிலவு வருமோ
அமாவாசையாகத்தானிருக்கட்டுமே
கண்கள் ஜொலிக்கிறது
திமிர்க்கிறது கால்களும் தோள்களும்

எங்கோ விலகி நெளிந்துக்கிடந்த பாதை
அடங்கியசைகிறது பாதங்களுக்கடியில்
இலக்கை முன்னறிந்து

தாழங்குத்திலிருந்து
ஓசையற்று இறங்கிவரும் பூநாகங்கள்
தீண்டும் முன்பே மிதிபட்டுச் சுருள
காரை சூரைப் புதர் விலக்கி கடக்கிறோம்

வெந்துகொண்டிருக்கும் பிணத்தை
எட்டுக்கையாலும் பிய்த்துத் தின்னும் ஓங்காரி
எதிர் நேர்வோரை காவு கொண்டுவிடுமென்று
பயங்காட்டி மறித்தோரை உதைத்தோட்டிவிட்டு
சுடலைகள் வழியேயும் தொடர்கிறது பயணம்

சில்வண்டுகளும் காட்டுராசிகளும் சதங்கையென ஜதியூட்ட
மோகினியோவென அஞ்சிக் கிளர்ச்சியுற்று
மல்லியப்பூ வாசத்துக்கு அலைகிறது நாசி

கக்கிவைத்த மாணிக்கக்கல்லொளியில்
இரைதேடிய முதிர்நாகம்
அச்சத்தில் விழுங்கி மறைகிறது புற்றுக்குள்

உருவிய உடைவாளை
உறைக்குள் சொருகிக் கொள்ளவே நேரமில்லை

குழியிலும் சுழியிலும் இறங்கிய புனித அழுக்குகளை
சொந்த நதிகளில் கழுவிக்கொண்டு
கடல்மேல் நடந்து மலைகளைப் பிளக்கிறோம்

வெள்ளி முளைக்கையில்
சிறகுகள் பொசுங்கப் பொசுங்க
கிரணமண்டலத்துள் பாயும்
எங்களது முகமும் காலடியும்
தகித்து வரும் சூரியனில் தெரியும்

சூரியனாகவும் நாங்களிருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...