புதன், பிப்ரவரி 22

‘இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறது.... ’ - ஆதவன் தீட்சண்யா

பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்தால் கூட உடனே அதை ஒரு பயணக்கட்டுரையாக எழுதிவிடும் சிலரைக்கண்டு நான் மலைத்துப்போவதுண்டு. கை ஈரம் காய்வதற்குள் அங்கு முக்கியது முணகியது மூக்கை நோண்டியது என்று எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதி பிரசுரித்துவிடுகிற அந்த சாமர்த்தியம் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராதுபோல என்று என்னை நானே நொந்து கொள்வதுண்டு.  சுட்டுப்போட்ட பிறகு வந்தால் என்ன வராதொழிந்தால் என்ன என்று சமாதானப்படுத்திக்கொண்டு எழுதாமலே விட்டுவிடுவதுண்டு. இப்படித்தான் இங்கிலாந்து, இலங்கை பயணங்கள் குறித்து எதுவுமே எழுதாமல் விட்டுத்தொலைத்தேன். என் பிரியத்திற்குரிய தோழி நந்தினி இருக்கப்போய் ஆனந்தவிகடனிலும், சூரியக்கதிரிலும் அந்தப் பயணங்களை மையப்படுத்தி இரண்டு பேட்டிகள் வந்தன. தோழர் பழனியப்பன் முயற்சியில் சண்டே இண்டியனில் ஒருபக்க பேட்டி வந்தது. மற்றபடி எழுதுவதற்கு அனேகம் இருந்தும் இன்றுவரை எழுதவேயில்லை.  இதேகதிதான் மலேசிய சிங்கப்பூர் பயணத்திற்கும் நேரப்போகிறது என்று நினைத்திருந்த வேளையில் நண்பர் பாலமுருகனும் தோழி.மாலா நாயுடுவும் புகைப்படங்களை வெளியிட்டு எழுதியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கிவிட்டனர்.

முன்பொருமுறை தனது வலைப்பதிவு ஒன்றில் எனது எழுத்துகளைப் பற்றி நண்பர் நவீன் குறிப்பிட்டிருந்தார். அதற்குப்பிறகு நீண்டநாட்கள் கழித்தே நாங்கள் தொலைவழி நண்பர்களானோம். கடந்த ஆண்டு இங்கு வந்திருந்த அவரை சந்திக்க முடியாமலே போய்விட்டது பற்றிய உளைச்சல் ஒருபக்கம் இருந்தது. அவரிடம் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக நான் நடத்தியிருந்த நேர்காணல் வேறு இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தது. (இந்நேர்காணலின் முதற்பகுதி இம்மாத அம்ருதாவில் வெளியாகியுள்ளது). இதனிடையே ‘இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை’ என்ற எனது சிறுகதையைப் படித்துவிட்டு பாலமுருகன் எனக்கு நண்பரானார். பிறகு அந்தக்கதை எழுதப்பட்ட விதம் குறித்து அவர் என்னிடம் நடத்திய நேர்காணல் வல்லினம்.காம் இணைய இதழில் வெளியானது. இருவரும் மலேசியாவுக்கு ஒருமுறை வந்துபோங்களேன் என்று அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு மின்னல்வேக பயணம் வந்திருந்த பாலமுருகன் ஒசூருக்கே வந்து அழைப்பு விடுத்துப்போனார்.

மலேசியாவின் மூத்த பத்திரிகையாளரும் பெரியாரில் தொண்டருமான முனைவர்.பெரு.தமிழ்மணி அவர்களின் முன்முயற்சியில் 2012 ஜனவரி 27-29 வரை கோலாலம்பூரில் பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு. தோழர்கள் வே.ஆனைமுத்து, சுபவீ, விடுதலை ராசேந்திரன், திருமாவளவன், ஓவியா, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் வாகை சந்திரசேகர் என்று விரியும் இம்மாநாட்டு கருத்துரையாளர்கள் பட்டியலில் என்னையும் அ.மார்க்ஸையும் இடம்பெறச் செய்து வரவழைப்பதில் நவீனும் வல்லினம் குழுவும் தீவிர முயற்சி எடுத்திருந்தனர். எங்களையெல்லாம் சந்திப்பதற்கென்று இலங்கையிலிருந்து தோழர்.தேவாவும் (குழந்தைப்போராளி மற்றும் அனொனிமா மொழிபெயர்ப்பாளர்)  மலேசியாவுக்கு வந்துவிட்டிருந்தார்.

பெரும் தொண்டர்குழு அசரவைக்கும் ஏற்பாடுகளை செய்திருந்தது. மலேசியாவில் இவ்வளவு பேர் பகுத்தறிவின் வழி நின்று வாழ்கிறார்களா என்று வியந்துபோகுமளவுக்கு அரங்கு கொள்ளாத திரள். கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டவர்களே 600 பேர். அதைவிடவும் கூடுதல் எண்ணிக்கையில் பங்கேற்பு இருந்தது. மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். குறிப்பிடத்தக்க அளவில் பெண்களின் பங்கேற்பு இருந்ததை இங்கு சொல்லத்தான் வேண்டும்.

எல்லாம் ஒழுங்காக போய்க் கொண்டிருக்கிறதா என்பதைப்போல மேடையின் பின்னே கட்டப்பட்டிருந்த பதாகையிலிருந்து பெரியார் பார்த்துக்கொண்டிருந்தார். மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் டத்தோ பழனிவேலு இப்படி ஆரம்பித்தார்- ‘இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறது.... ’.

இப்படி பேசியதற்காக அந்த அமைச்சரையோ  அல்லது இப்படியானவரை அழைத்தமைக்காக மாநாட்டு ஏற்றபாட்டளர்களையோ பேனரில் இருந்த பெரியார் தனது கைத்தடியால் கொட்டுவார் என்று எதிர்பார்த்தேன். தன்னை வைத்துக் கொண்டே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர்களையும் மஞ்சத்துண்டு மகாத்மியம் பேசுகிறவர்களையும் கொல்லூர் மூகாம்பிகையை கும்பிட்டவர்களையும் பார்த்து பழக்கப்பட்டிருந்த அவரோ என்னமும் உளறித்தொலையுங்கள் என்பதுபோலவோ, இதுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதுபோலவோ தெரிந்தார்.

( தொடரும்...)

1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...