வியாழன், அக்டோபர் 17

சொந்த ஊர்...? - ஆதவன் தீட்சண்யா


என்விகடன்.காம் இணைய இதழில்  வெளியான "ஒசூரெனப்படுவது யாதெனின்" தொடர் தொகுப்புநூலாக வரவிருக்கிறது. அதற்காக எழுதிச் சேர்க்கப்பட்ட முன்னுரையும் நிறைவுப்பகுதியும்....
சொந்த ஊர் பற்றிய தொடர் ஒன்றினை  என்விகடன்.காம் இணைய இதழில் எழுதுமாறு நண்பர் சஞ்சீவிகுமார் ஒருமுறை கேட்டுக்கொண்டார். எனது தந்தைவழி தாத்தாவின் ஊர் சேலம் அருகேயுள்ள பெரியூர் என்கிற உத்தமசோழபுரம். தாத்தம்மாவின் ஊர் ஓமலூர் அருகேயுள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி. இதுபோன்றே தாய்வழி தாத்தாவின் ஊர் கம்பைநல்லூர் ஈச்சம்பாடி, தாத்தம்மாவுக்கு பாரூர் அருகேயுள்ள பழனம்பாடி.  எங்கம்மா என்னை பெற்றெடுத்தது அவரது தந்தையின் ஊரான ஈச்சம்பாடியில். பிறகு எங்களது தாத்தம்மா தன் சம்பாத்தியத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அலமேலுபுரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கியதையடுத்து நாங்கள் அங்கு குடிபெயர்ந்துவிட்டோம்.

இத்தனை ஊர்களோடு தொடர்புடைய நான் எனது சொந்த ஊர் என்று எதைச்சொல்வது? சொந்த ஊர் என்கிற பதம் உண்மையில் எதைக் குறிக்கிறது? பெற்றெடுக்கிற தாயின் ஊரை நமது சொந்த ஊர் எனச் சொல்லாமல் தந்தையின் ஊரை சொந்த ஊர் எனச் சொல்லிக்கொள்வது எந்தளவுக்கு சரியானது? ஊர் என்றும் சேரியென்றும் பிரிந்திருக்கும் ஒரு சமூகத்தில் ஊர் என்பது எல்லோரையும் உள்ளடக்கிக்கொள்கிற சனநாயகத்தன்மையுடன் எப்போதேனும் இருந்திருக்கிறதா? என்பதான கேள்விகளால் ஏற்கனவே குழப்பமுற்றிருக்கிற என்னால் சொந்த ஊர் பற்றி எந்தவொரு முடிவுக்கும் வந்துசேர முடியவில்லை. தவிரவும் இந்த ஊர்களோடு எனக்கு நெருங்கியத் தொடர்புகள் இப்போதிருப்பதாக சொல்லவும் முடியாது. ஆகவே வாழ்வின் பெரும்பகுதிக்காலத்தை கழித்திருக்கக்கூடிய, எஞ்சிய நாட்களையும் கழிக்க விரும்புகிற ஒசூர் பற்றி எழுத ஒப்புக்கொண்டேன். எழுதியனுப்பியவற்றில் யாதொரு திருத்தமும் செய்யாமல் என்விகடன்.காம் முழுமையாக வெளியிட்டிருந்தது. விடுபடல்களாய் தெரிந்தவற்றை கோர்வை குலையாமல்  இப்போது எழுதிச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல. திட்டமிடுதலோ முன்தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருக்கிறேன், அவ்வளவே. தொடராக எழுதியவற்றை இப்போது தொகுத்துப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் - ஒசூர் பற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு நான் என்னைப் பற்றிதான் பெரிதும் எழுதியிருக்கிறேன் என்பதை.  அதனாலென்ன, என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லத்தானே வேண்டும்…? 

ஆதவன் தீட்சண்யா, 
ஒசூர்/  பக்ரீத் நாளில் – 16.10.2013


தொழிலாளி வர்க்கத்தின் போராட்டக்குணத்தாலும் அரசியலுணர்வாலும் செம்பூமியாய் மாறிக்கொண்டிருக்கிறது என மாணவப்பருவத்தில் நான் உருவகித்து வைத்திருந்த  ஒசூர் பகுதி வெளிறிப்போய் இன்று காவிநிறமாய் காட்சியளிக்கிறது. ஒசூர் என்றதும் என் மனதுக்குள் கிளர்ந்தெழுந்து ஆதர்சமூட்டிய சித்திரம் உருக்குலைந்துவிட்டது என்கிற உண்மை அப்பட்டமாக தெரிந்துவிட்டதால் அரற்றும் மனதை தேற்றும் வழியின்றி ஏதோ தனிப்பட்ட முறையில் நானே தோற்றுப் போய்விட்டது போன்ற உணர்வோடுதான் இன்று ஒசூருக்குள் உழன்றுகொண்டிருக்கிறேன். இந்த அழிமானம் திடுமென ஒருநாளில் நிகழவில்லை. 

மக்களின் கடவுள் நம்பிக்கை, வழிபாடு, பழக்கவழக்கங்கள், சாதியப் பிடிமானம், நில உறவு சார்ந்த மதிப்பீடுகள், ஆண் பெண் உறவு ஆகியவற்றோடு தொடர்ச்சியானதொரு உரையாடலை நிகழ்த்தி மாறுதலுக்கு உந்தித்தள்ளும் அமைப்புகள் எதுவும் இங்கு உருவாகவேவில்லை. இப்பகுதியின் நிலவுடமை சார்ந்த ஆதிக்கச் சக்திகளிலிருந்து நவீனக் கல்வியையும் பெங்களூர் போன்ற பெருநகரத் தொடர்புகளையும்  அரசியல் அதிகாரங்களையும் பெற முடிந்தவர்கள் அவற்றைக்கொண்டு தனிப்பட்ட வாழ்வை வளப்படுத்திக் கொண்டார்களேயன்றி நடப்பிலிருந்த பின்தங்கிய நிலைமையை மாற்றுவதற்கான பணிகள் எதையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. வெளியிலிருந்து வந்தவர்களும் இங்கு அதிகாரத்தின் பகுதியாகத்தான் வந்தார்களேயன்றி மக்களிடம் ஒன்றி வாழ்பவர்களாகவோ ஊடாடுகிறவர்களாகவோ வரவில்லை. என்னைப் போன்றவர்களும் கூட பொருளாதார நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தொழிற்சங்க வேலைகளோடு வரம்பு கட்டி நின்றுகொண்டோம். வெகுமக்களின் கலாச்சார வாழ்வில் குறுக்கீடு செய்யும் விதமாக எங்களிடம் வேலைத்திட்டம் என்று எதுவும் இல்லை என்பதை நேர்மையாக சொல்லி விடத்தான் வேண்டும். ( ஆலை / அலுவலக மட்டத்தில் தொழிற்சங்கத்திற்குள் அணிதிரளும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் ஒரு வர்க்கமாக அரசியல்படுத்தும் வேலையைச் செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்கிய இதே காலக்கட்டத்தில்தான் குடும்பவிழா/ சமுதாயப் பெருவிழா என்கிற பெயர்களில் சாதிரீதியாக தொழிலாளர்களை பாகுபடுத்தி திரட்டும் வேலை முனைப்பு பெற்றது என்பதும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது)   

இப்படியான பின்புலம் கொண்டிருந்த வெகுமக்களில் ஒருபகுதியினர் ராமஜென்ம பூமியை முன்வைத்து சங்பரிவாரத்தின் கீழ் அணிதிரண்டதன் ஆபத்தை 1990 அக்டோபர் 10 அன்று உலகம் அறிந்துகொண்டது. ராமனுக்கு கோயில் கட்ட செங்கல் சேகரிப்பதாக சொல்லிக் கொண்டு 10.10.90 அன்று தேன்கனிக்கோட்டையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றினைக் கொண்டு அவர்கள் ஏற்படுத்திய பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நான்கு இளைஞர்களின் உயிரை பலிகொண்டது. பலியான சங்கர் மற்றும் பாபு (தேன்கனிக்கோட்டை), நரசிம்மப்பா (காமனாபாளையம்), ராஜேந்திரன் (திம்மச்சந்திரம்) ஆகிய நால்வருமே எந்தவொரு அமைப்பையும் சாராதவர்கள் - தற்செயலாக அங்கு வந்து கலவரத்தில் சிக்கிக் கொண்டவர்கள்.   ( பிரிட்டிஷ் காலத்து ஆவணங்கள்கூட கிடைக்கும் இணையத்தில் எப்படி தேடியும் தேன்கனிக்கோட்டை கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி யாதொரு பதிவும்  கிட்டவில்லை)   

யாரப் தர்காவின் உரூஸ் விழாவையும் பேட்ராயசாமி கோவில் விழாவையும் ஊர்கூடி நடத்துவது போல ஒற்றுமை முகம் காட்டிய தேன்கனிக்கோட்டையில் மதத்தை முன்னிட்டு ஒரு துப்பாக்கிச்சூடா? ஒரு நபரோ ஒரு அமைப்போ தூண்டிவிட்டால் உதிர்ந்து விடுமளவுக்கு பலவீனமாகத்தான் அங்கு ஒற்றுமை நிலவிவந்ததா? அல்லது அங்கு நிலவிவந்த வேற்றுமைகளை பார்த்தறிவதற்கு எனக்குத்தான் தெரியாமல் போய்விட்டதா? – என்றெல்லாம் பலவாறாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  

கலவரத்தில் சிக்கி உயிரிழந்த அப்பாவிகள்  “ராமஜென்ம பூமி மீட்பு” போராட்டத்தின் தியாகிகள் என்றே சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அசோக் சிங்கால் தேன்கனிக்கோட்டை வந்ததையடுத்து ஒசூரிலும் பதற்றம். கலவரக்காரர்களை தப்பவிட்ட போலிசார் ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் வளைத்துப் பிடித்து தாக்கி வண்டிக்குள் தூக்கிவீசுவதும் விரட்டியடிப்பதுமாக வெறியாட்டம் ஆடினர். இப்படி காந்தி சிலைக்கருகில் போலிசிடம் சிக்கிக்கொண்ட எனது நண்பர் ‘கோத்தாரி’ இளங்கோவின் மண்டையை உடைத்த போலிஸ் அதற்குரிய சிகிச்சையைக்கூட கொடுக்காமல் “இந்து பயங்கரவாதியாக” காட்டி ரிமாண்ட் செய்து சேலம் மத்தியச் சிறையில் அடைத்தது. 

அடுத்துவந்த நாட்கள் அச்சமூட்டக்கூடியவை. விநாயகர் சதுர்த்தியை சாக்காக வைத்துக்கொண்டு இப்பகுதி முழுவதிலும் சங்பரிவாரம் ஊடுருவியது. வீட்டுக்குள் இருந்த பிள்ளையாரை வீதிக்கு கொண்டுவருவதில் அதற்கு அரசியல் ஆதாயமிருந்தது. ஒவ்வொரு வீதியையும் அடைத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய்களில் பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. இதற்காக அந்தந்த பகுதிகளில் குடியிருப்போரிடமும் வணிகர்களிடமும் கட்டாய வசூலில் இறங்குகிற – பணம் தராதவர்களை வேறுவகையாக மிரட்டிப் பறிக்கிற முரட்டுத்தனத்தோடு இளைஞர் பட்டாளமொன்றை சங் பரிவாரம் உருவாக்கியது அல்லது அப்படியானவர்களை அது இணைத்துக்கொண்டது. இதில் பக்தியுமில்லை பரவசமும் இல்லை, அராஜகம் மட்டுமே திமிறிக்கொண்டுள்ளது என்று விமர்சிக்கிறவர்களை மதவுணர்வை புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி திசைதிருப்புகிற தந்திரமும் கையாளப்பட்டது. உள்ளூர் மட்டத்தில் ஏதாவதொரு குழுவை தனக்காதரவாக நிறுத்திக்கொள்ள விரும்பும் மார்வாரிகள், தொழில்முனைவோர், வணிகர்கள் இப்படியான குழுக்களுக்கு உதவி செய்தனர். பா.ஜ.க ஆளுங்கட்சியான போது இப்பகுதியின் தொழிலதிபர்கள் பல்வேறு ஆதாயங்களை முன்னிட்டு வெளிப்படையாகவே இந்துத்வ அரசியலோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். 

அதிமுகவின் முந்தைய அரசு நிறைவேற்றியிருந்த மதமாற்ற தடைச்சட்டத்தையும், ஆடு கோழி பலியிடுவதை தடுக்கும் சட்டத்தையும் எதிர்த்து தமுஎகச நடத்திய கருத்தரங்கத்திற்கு சங் பரிவாரத்தினர் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அன்று மாலை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இதுகுறித்து ஏற்பாடு செய்திருந்த நேரலைக்காட்சியில் தோழர்.கே.கங்காதரனுடன் பங்கேற்றிருந்த என்னை தொலைபேசியில் அழைத்து ‘உன்னை கொல்லாமல் விடப் போவதில்லை’ என்று  மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலும் நேரலையில் ஒலிபரப்பானது. இந்துத்வ கருத்தியலுக்கு எதிரான நடவடிக்கைகளை சங்பரிவாரம் எவ்வாறு அராஜகமாக எதிர்கொள்ளும் என்கிற விசயம் பரவலாக போய்ச் சேர்வதற்கு இந்த ஒலிபரப்பை அவர்கள் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

யோகா, தியானம், ஆன்மீகம், விவேகானந்தர் சிந்தனைகள், பாரம்பரியம், வாழும் கலை என்று ஏதேதோ பெயர்களில் கல்விநிலையங்களிலும் அரசாங்க அலுவலங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஊடுருவியுள்ள சங்பரிவாரத்தினர் இன்று ஒசூரையே தம் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் பிள்ளையார் சிலைகளின் உயரமும் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அவர்களது செல்வாக்கின் குறியீடாக காட்டப்படுகிறது. சிலைவைப்பு நாள் முதல் எடுப்பது வரையான காலம் முழுவதும் ஒசூரும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் சங்பரிவாரத்தினால் கட்டுப்படுத்துவதை தடுக்கவோ எதிர்க்கவோ இங்கு அரசுரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ யாரும் முன்வருவதில்லை.  

நியாயமான கோரிக்கைகளின் பேரில் ஏதேனும் உண்ணாவிரதமோ ஊர்வலமோ நடத்தப்போனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் போக்குவரத்துக்கு தடங்கல் என்று சொத்தையான காரணங்களைச் சொல்லி சுடுகாட்டில் நடத்திக்கொள்ளுமாறு விரட்டியடிக்கிற போலிசும் அரசு நிர்வாகமும் இவ்வளவு எண்ணிக்கையிலும் பெருத்த அளவுகளிலும் ஆத்திரமூட்டும் வடிவங்களிலும் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படுவதை அனுமதித்துக் கொண்டேயிருக்கின்றன. கலைநிகழ்ச்சிகளுக்கான விளம்பரத்தட்டிகளுக்கு கூட முன் அனுமதி பெறவேண்டும் என்கிற கெடுபிடியை சங்பரிவாரத்திடம் காட்டுவதில்லை. இவர்களது தட்டிகளிலும் சுவரொட்டிகளிலும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கிற படங்களும் வாசகங்களும் இடம் பெறுவதைக்கூட காவல்துறை ஆட்சேபிப்பதில்லை. ஏதேனும் வன்முறைகள் நடந்துவிடும் இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அரசியல் கட்சித்தலைவர்கள் / மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நுழைவதற்குகூட அனுமதிக்காமல் தடையுத்தரவு பிறப்பிக்கிற நிர்வாகமும் காவல்துறையும் இவ்வாண்டு ஒசூரில் இருக்கிற பிள்ளையார் சிலை எடுப்பு நிகழ்வில் அசோக் சிங்கால் பங்கேற்க அனுமதித்தது. பாபர் மசூதி இடிப்பை நினைவூட்டி இஸ்லாமியரிடையே பீதியையும் அமைதியின்மையையும் உருவாக்குவதற்காகவே  “அயோத்தியின் நாயகனே” என்கிற வரவேற்பு பேனர்கள் இப்பகுதி முழுவதும் கணக்கு வழக்கின்றி வைக்கப்பட்டதை போலிசும் நிர்வாகமும் அனுமதித்தன. 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே அசோக் சிங்கால் வந்தபோது கலவரம் நடந்ததையும், உ.பி. முசாபர் நகரில் மதக்கலவரம் நடந்துகொண்டிருந்த நிலைமையையும் கணக்கில் கொள்ளாது அனுமதித்ததன் மூலம் அரசு நிர்வாகமும் போலிசும் ஆட்சியாளர்களும் இந்துத்வ கருத்தியலுக்கு உடந்தையாக இருப்பது அம்பலமானது. 

அசோக் சிங்கால் வருகிறார் என்று அன்றைய தினம் முழுவதும் நகரத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியிலும் நகரத்துக்குள் நுழைவதற்குரிய பிரதானச் சாலைகளிலும் கடைவீதியிலும் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடைவிதித்தது போலிஸ். அதாவது அவர் வருவதை நகரத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக பொதுமக்களது உளவியலுக்குள் பதியவைக்கும் சங்பரிவாரத்தின் ஆசையை போலிஸ் நிறைவேற்றி வைத்தது. நடக்கக்கூடாத ஏதோவொரு விபரீதம் நடக்கப்போகிறது என்கிற பதற்றத்தை போலிசே உருவாக்கியது.  குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலிசைக் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை குலையாத வண்ணம் சிலைஎடுப்பை நடத்திக்கொள்ளுமாறு சங்பரிவாரத்தினரை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக,  பொதுமக்கள் நடமாட்டத்தை தடுத்து ஒட்டுமொத்த நகரத்தையும் சங்பரிவார் கையில் ஒப்படைத்தது. ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ்காரரும் அண்டையில் தளி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக  இந்திய கம்யூனிஸ்டும் இருந்தாலும்கூட ஒரேயொரு அமைப்பின் நிகழ்ச்சிக்காக ஒரு ஊரின் இயல்பான நடமாட்டத்தை ஏன் முடக்குகிறாய் என்கிற கேள்வியை எழுப்பக்கூட துப்பில்லாமல் கிடக்கிறார்கள். மற்ற கட்சிகளும் கூட இதேநிலையில்தான்- அரசியலைப்  பேசாமல் அமைப்புகளை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்கு எடுத்துப்போன ஊர்வலத்தில் 15- 25 வயதிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றிருந்ததைப் பார்க்கும்போது இனம்புரியாத அச்சமே மேலோங்கியது. குடும்பத்திற்கும் உள்ளூர் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்வதற்காக அணிதிரட்டப்பட வேண்டிய இவர்கள் அவற்றுக்கு எதிர்நோக்கம் கொண்டவர்களால் அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள். ஏழு தொழிலாளர்களைப் பிடித்து சங்கம் கட்டுவதையும் பொருளாதார நலன்களை முன்னிட்டப் போராட்டங்களை நடத்துவதையுமே புரட்சிகர நடவடிக்கை என்கிற புரிதலோடு என்னைப் போன்றவர்கள் முடங்கிக்கிடக்கும்போது வெகுமக்களை யார் வேண்டுமானாலும் எந்த அரசியலுக்காகவும் அணிதிரட்டிக்கொள்ள முடியும் என்கிற பாடத்தை ஒசூர் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. ( ஒசூர் போலவே கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் சங்பரிவாரம் பரவுவதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகள் தேவை) 

தேன்கனிக்கோட்டையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில்தான் (1984-1986) இப்பகுதி மக்களை இந்துத்துவ அமைப்புகளுக்குள் அணிதிரட்டுவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.சின் முதல் முழுநேர ஊழியர் ஒருவரும் (செந்தில்குமார்) வந்து சேர்ந்தார். மக்களின் எளிய கடவுள் நம்பிக்கையை மதவெறியாக மாற்றுவதையும், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரோடு இந்துக்கள் பேணிவரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதையும் தவிர வேறென்ன பணியை ஆற்றிவிடப்போகிறீர் என்று அவரை  அன்றைக்கு விமர்சித்துக்கொண்டிருந்தேன். அவரும் அவரது அமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலோடு அச்சம்தரத்தக்க வகையில் மக்களிடையே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று இன்றைக்கு விசனத்தோடு வியாக்கியானம் செய்து கொண்டுமிருக்கிறேன். 

வெறுமனே விமர்சிப்பதையும் விசனத்தோடு வியாக்கியானம் செய்வதையும் நிறுத்திக் கொண்டு களமிறங்கிச் செயலாற்றுவதன் மூலமே விரும்பத்தக்க மாற்றம் நிகழும் என்கிற உண்மை என்னையும் ஒசூரையும் வழிநடத்தட்டும்.

2 கருத்துகள்:

  1. ஓசூரின் இன்றைய நிலை வருத்தம் தருகிறது. இது எங்கு போய் முடியப்போகிறதோ!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    பதிவு நன்று மேலும் பல பதிவுகள் வலைப்பூவில் மலர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...