ஞாயிறு, டிசம்பர் 29

முக்காலம் - ஆதவன் தீட்சண்யா

உடலை தளர்வாக வைத்துக்கொண்டு
இறுக மூடிக்கொள்ளுங்கள் கண்களை
இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறீர்கள்
நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
விழித்துக்கொள்கிறது உங்களது ஆழ்மனம்
 
ஆழ்மனதில் உறைந்துள்ள நினைவுகள் கிளர்ந்து 
பால்யகாலத்திற்கு திரும்புகிறீர்கள் நீங்கள்
ஆமாம்... இப்போது உங்கள் வயது
40..25... 10, 9, 8.... 1... 0.9, 0.7...
அதாவது இன்னும் நீங்கள் பிறக்கவேயில்லை
இன்னும் பிறந்திராத நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்?
-கருப்பையில்
நல்லது, கருப்பை எப்படியிருக்கிறது?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு
 
ஆழ்மனதில் தங்கியுள்ள அச்சங்களின் துரத்தலில்
நீங்கள் உங்களது முதுங்காலத்திற்குச் செல்கிறீர்கள்
முதுமைகூடிய நீங்கள் என்னவாகிறீர்கள்...?
- செத்துப்போகிறேன்
சாவுக்குப்பிறகு எங்கேயிருக்கிறீர்கள்?
-குழிக்குள்
குழிவாழ்க்கை எப்படியிருக்கிறது?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு
 
அறிதுயில் நிலைக்குச் சென்ற நீங்கள்
வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராகி
என் கட்டளைப்படி
நிகழ்காலத்திற்குத் திரும்புகிறீர்கள் இப்போது
ரிலாக்ஸ்.... பி ரிலாக்ஸ்.... ரிலாக்ஸ்....
மெதுவாக கண்களைத் திறந்திடுங்கள்... மெதுவாக...
இப்போது என் கண்களைப் பாருங்கள்
குட்...
அப்படியே ஊரை பாருங்கள்
என்ன தெரிகிறது... ?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு.

சக்சஸ்… சக்சஸ்…
நீங்கள் தமிழ்நாட்டுக்கே திரும்பிவிட்டீர்கள். 
நன்றி: ஆனந்தவிகடன், 1.1.2014

1 கருத்து:

  1. அருமை அருமை
    இங்கு வாழ நீங்கள் சொல்வதுபோல்
    ஒன்று (மனத்தளவில் )சவமாய் இருக்கணும்
    இல்லை (அறிவு வளராது ) கருவாகவே இருக்கணும்
    மனம் கவர்ந்த பதிவு
    பதிவிற்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...