ஞாயிறு, டிசம்பர் 27

நெனப்பு பொழப்பை கெடுத்தக் கதை

உங்களுக்கு ஏற்கனவே  தெரிந்த   இந்தக் கதையின் நாயகன் திருவாளர் எகச்சு.உண்மையில் அவரது பெயர் எக்ஸ். ஆனால் தீவிர வடமொழி புறக்கணிப்பு உணர்வினால் ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று விளிக்கும் பாரம்பரியத்தில் வந்தவராதலால் தன் பெயரை எகச்சு என்று மாற்றிக்கொண்டார்.

ஆளை விழுங்கும் அளவுக்கான பசியில் கிறுகிறுவென மயக்கம் வந்தது திருவாளர் எகச்சு.  அவர்களுக்கு. சாலையோர மோரிக்கல் ( பாலம்) ஒன்றில் தலைசாய்த்து அப்படியே படுத்துவிட்டார். அன்னாடம் இப்படி அடுத்த வேளை வயித்துப்பாட்டுக்கு அல்லாடும் நிலையில் இருநது தப்பிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அரணாக்கயிறு கோமணமில்லாம அலைந்த அம்பானி, அதானியெல்லாம் ஏதேதோ தில்லாலங்கடி திலுப்பாமாரி வேலை செய்து இன்னிக்கு பெரிய பணக்காரனுங்களா இருக்கறப்ப தன்னால் ஏன் ஆகமுடியாது என்று யோசிச்சுக்கிட்டே இருந்தவர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

ஊரில் இரண்டு கல்யாணம். ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு கல்யாணத்தில் சாப்பாட்டைபொட்டலமாக கட்டிக்கொண்டு வந்து யாருக்காவது விற்று அதில் வருகிற காசில் ஒரு கோழிக்குஞ்சு வாங்கி வளர்த்து, அது முட்டையிட்டு குஞ்சுபொறிச்சால் அஞ்சாறு உறுப்படியாகிவிடும். அதுகளை விற்று வருகிற காசில் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வளர்த்து அது சினையாகி குட்டிப்போட்டு அப்படியே பல்கிப்பெருகிவிடும். ஆடுகளை விற்று மாடு வாங்கி அது விருத்தியான பின்பு விற்று காடுகழனி வாங்கவேண்டும். ஆடு, மாடு, காடு எல்லாம் கண்டதற்குப் பிறகு வீடொன்று கட்டிவிட்டால்  இப்படி பாலத்துமேல் படுத்துக்கிடக்க வேண்டியதில்லை. வீடு கட்டியதும் தேக்குமரத்தில் கட்டில் செய்து இலவம் பஞ்சு மெத்தை போடவேண்டும். இவ்வளவு சொகுசும் வந்தப் பிறகு ஒத்தையில் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? லட்சணமான பெண்ணொருத்தியை கல்யாணம் செய்துகொள்ளனும். முதல் இரவில் படுக்கையறைக்குள் நுழைகிற அவள், இப்படி மொத்த கட்டில்லயும் ஒத்தையாளா படுத்துக்கிட்டா நான் எங்கே படுக்குறதாம்? கொஞ்சம் நகர்ந்து படுங்கன்னு சிணுங்கனும். உனக்கில்லாத இடமாடி செல்லம்னு நான் இப்படி தள்ளிப் படுப்பேனாம்... என்று தள்ளிப்படுத்த அவர் பாலத்தின் மீதிருந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டாராம். வீ ணுக்கு யோசனை பண்ணி இப்படி விழுந்து தொலைச்சிட்டோமேன்னு அங்கலாய்ச்சுக்கிட்டே ஆ ற்றுக்குள்ளே முழுகிப்போனாராம்.

இந்தக் கதைக்கும் " அன்புமணி முதல்வர், பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர்" என்கிற பாகப்பிரிவினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நீங்க ஒத்துக்கவா போறீங்க?
- ஆதவன் தீட்சண்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...