வெள்ளி, ஆகஸ்ட் 26

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா



இன்றைய அதிகாலை அந்த காணொளிக்காட்சியோடு எனக்கு விடிந்திருக்கக்கூடாது. விவரிக்கவியலாத அவமானத்திற்கும் உளைச்சலுக்கும் ஆளாகிப்போனேன். அதுவும் இளைப்பாறிக் கொள்வதற்காக சாலையோரம் இறக்கிவைத்திருந்த தன் அம்மாவின் சடலத்தை அப்பா தூக்கும் போது அந்தச் சிறுமியின் அழுகையைக் கண்ட பிறகு எதுவொன்றையும் செய்வதற்கு மனமொட்டாது    இறுகிப்போய் கிடந்தேன். அந்தச் சிறுமியின் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து இந்த நாட்டையே மூழ்கடித்துவிட்டால்தான் என்ன என்று தோன்றியது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் போல வாழ்க்கை அவ்வளவு வீராவேசத்தோடு இருப்பதில்லை என்று அந்தச் சிறுமி உணர்ந்திருக்கிறாள். அதனால்தான் அவள் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக்கொண்டு பொதிகளை தூக்கிக்கொண்டு அம்மாவின் இறுதிப்பயணத்தில் உடன் சென்றுகொண்டிருக்கிறாள்.

பணம் இல்லை என்பதற்காக ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட நிலையில் தனது மனைவியின் சடலத்தை போர்வையால் சுற்றியெடுத்துக்கொண்டு அந்த மனிதனின் 10 கிலோமீட்டர் தாண்டும் வரையிலும் ஒருவர்கூட அவர்களைப் பார்த்திருக்கவேமாட்டார்களா? ஒடிஷாவில் அவ்வளவுபேரும் செத்தா போனார்கள்?   இந்த நாட்டின் பிரதமர் வேளைக்கொரு வானூர்தியில் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லாமல் போனது ஏன் என்கிற கேள்வியை யாரிடம்தான் கேட்பது? இப்படியெல்லாம் பினாத்திக்கொண்டே ஒசூர் அரசு மருத்துவமனைக்குப் போனவன் அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் ஆற்றமாட்டாத துயரோடு இவ்விசயத்தைச் சொல்லி அவரையும் துயரப்படுத்திவிட்டேன். அரசு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் சாமானியர்களிடம் காட்டும் அலட்சியமும் அரசாங்கத்தின் பொறுப்பின்மையும் இப்படியான அவலங்களை உருவாக்கிவிடுவதாக சொன்ன அவர், பின்வரும் முக்கியமான தகவலொன்றை கூறினார். அதாவது தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காமல் யாரும் இறந்துபோனால் அவர்களது உறவினர் சொல்லும்  இடத்திற்கு சடலத்தைக் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டுவர அமரர் ஊர்தி இலவசமாக தரப்படுகிறது. மாநிலத்தின் எந்தப்பகுதியாக எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் - அண்டை மாநிலமாக இருந்தாலும் - ஒரு பைசா செலவில்லாமல் இறந்தவரை கொண்டு சேர்க்கும் பொறுப்பு அரசுடையதாக இருக்கிறது - என்று அவர் சொன்னது சற்றே ஆறுதலாக இருந்தது.

பிறகு வந்து இணையத்தில் அதுகுறித்து தேடிப் பார்த்த போது , 2010 ஆம் ஆண்டு மக்கள் நலவாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்தப் பேசிய அப்போதைய தி.மு.க. அரசின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தான் அப்படியயொரு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். 2011ல் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதன்முறையாக இலவச அமரர் ஊர்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. தமிழக சுகாதார திட்டப்பணிகள் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்படுகிறது . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் அமலில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. 155377 என்கிற இலவச எண்ணுக்கு அழைத்தால், விவரங்களைக் கேட்டுக்கொண்டு, ‘யாருக்கும் எதற்காகவும் ஒரு பைசா தரவேண்டாம்.. மீறி கேட்டால் இதே எண்ணில் கூப்பிட்டு புகாரளியுங்கள்’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அது சரி, இதெல்லாம் ஒடிஷாவில் செல்லுபடியாகாதா?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...