வெள்ளி, ஆகஸ்ட் 18

தர்க்கம் அற்ற கதை - ஆதவன் தீட்சண்யா


உங்களைப் பின்தொடர்ந்ததில் கிடைத்த இந்தக் கதையை இப்பதான் முடிச்சேன். யாராவதொருத்தர் படிச்சுப் பார்த்து சரியா வந்திருக்கான்னு சொல்ல முடியுமா?

ஏய் பாகீரதி, தொடப்பத்த அப்படி ஓரமா போட்டுட்டு இதை வாங்கி சத்தமா படி. நாங்களும் கேட்கிறோம் என்றாள் அபிதா. அய்யய்யோ, நான் ஸான்ஸ்கிரிட்ல படிச்சதால எனக்கு தமிழ்ல அவ்வளவா படிக்க வராது. நீ படியேன்டி என்று கிரிஜாவிடம் தள்ளிவிட்டாள் பாகீரதி. ஏய்,  ஹவ் கேன் ஐ...  செகண்ட் லாங்வேஜ் ஜெர்மன் படிச்ச நான் எப்படிடி தமிழ்ல படிப்பேன் என்று கிரிஜாவும் நழுவிவிட அபிராமி வெடுக்கெனப் பிடுங்கி படிக்கத் தொடங்குகிறாள். நீங்களும் கேளுங்கள்.

***
யோவ் எழுத்தாளரே, நீ எழுதப்போற இந்தக் கதையில நாங்க யார்?
தூய்மைப் பணியாளர்
ஓ... இப்படி தூயத்தமிழ்ல சொன்னா தொடப்ப வேலை மாறிடுமா?’
அதெப்படி மாறும்?’
கதையில கூட எங்களுக்கு வேற வேலை தரமாட்டே?’
கதையில மாற்றி எழுதிட்டா நிஜத்துல மாறிடுமா?’
நிஜத்த மாத்துற மாதிரி கதைய எழுத உனக்கு ஏலாதுன்னு சொல்லு.’
அடியே, வேலை நேரத்துல எதுக்குடி அந்தாளோட வீண் பேச்சு?’
நீ போடா தம்பி, போய் ஒரு ஓரமா என்னமாச்சும் கிறுக்கிக்கிட்டு கிட...’
ஆமா, தோகை விரிச்ச மயிலாட்டம் தொடப்பம் இருக்குது... அது துப்புரவா ஊரையெல்லாம் கூட்டிப் பெருக்குதுன்னு எழுது...’
ஏன்டி நம்ம கதையை எழுதவந்திருக்கிற இந்த ஆளையும் விரட்டுறியே, பொறவு யாருதான் நம்மை கதைய எழுதுவாங்க?’
அடி போடி இவளே, இடைத்தரகு இல்லாம நம்மக் கதைய நாமளே சொல்லமுடியாதா?  இந்தாளுக்கு கதை வேணும்னா நாம பேசிக்கிற வேறு கதைகளைக் கேட்டு எழுதிப் பிழைச்சிக்கட்டும்...’

சொச்ச பாரத் மிச்ச பாரத்துன்னு ஷோ காட்டி பிலுக்கிக்கிட்டுத் திரியற எந்த நாயும் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கிறதில்ல. எப்பவும்போல நாமதான் ஊரையே கூட்டியள்ளி சுத்தம் பண்ண வேண்டியிருக்கு என்று காலங்காத்தால ஆரம்பித்தாள் அபிராமி (பெயரையாவது மாற்றும் திட்டத்தின் கீழ் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கதையில் இடம்பெறும் மற்றப் பெயர்களும் இத்திட்டத்தன்கீழ் வருபவையே). இந்தக் கங்காட்சியெல்லாம் இங்கென்ன புதுசா? நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டுக்கு பொழப்பு மாறாதுன்னு அந்தக் காலத்துலியே நம்மவங்க சும்மாவா சொன்னாங்க என்று தன்பங்குக்கு சலித்துக்கொண்டாள் பாகீரதி. தோ, ஊரூருக்கு சமத்துவபுரம்னு கட்டுனாங்களே, அங்கெல்லாம் வாரம் ஒரு சாதியா தெருக்கூட்டுது? சும்மா ஊரை ஏமாத்தப் பேரு வைப்பாங்க... நீ வேலைய பாருடி என்றாள் அபிராமி. ஏய், மெதுவா பேசுடி யார் காதுலயாவது வுழுந்துடப் போவுது. அப்புறம் குப்பைக் கூட்டுற பொட்டைக பேசுற பேச்சா இதுன்னு எகத்தாளம் பேசுவானுங்க என்றாள் பாகீரதி. இந்தா இதை எழுதிக்கிட்டிக்கிற இந்தாளுக்குக்கூட இவளுகள இவ்ளோ பேசவுடலாமா வேணாமாங்கிற குழப்பம் இருக்கத்தான் செய்யும். குப்பைக் கூட்டுறவளுக இப்படியெல்லாம் யதார்த்தத்துல பேசவேமாட்டாங்க, இது கதாசிரியர் வலிந்து எழுதியிருக்கார்னு எந்த இலக்கியப்புடுங்கியாவது தம்மேல பொல்லாப்பு சொல்லிருவாங்கன்னு தயங்கித்தயங்கிதான் அடுத்த வரிய எழுதறார். குப்பைக்கூட்டிக இன்னின்னதுதான் பேசணும்னு சட்டம் கிட்டம் ஏதாச்சும் இருக்கா? அட அப்படி ஒரு சட்டமே இருக்குதுன்னு வை, அதை சீவக்கட்டையால சிங்காரிச்சு விரட்டுவமா இல்லை நாவடங்கிப் பொழைப்பமா? யதார்த்தத்துல பேசாதவங்க கதையிலாவது இஷ்டம்போல பேசட்டும்னு எங்கள பேசவிட்டுட்டு அப்பால நகருங்க கதாசிரியரே என்று  என்று இளக்காரம் பொங்கச் சொன்னாள் அபிராமி. மான அவமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு கதையொன்றை இழந்துவிடக்கூடாது என்பதால் நான் குறுக்கிட்டு ஏதும் பேசாமல் அவர்களை பின்தொடர்ந்தேன். 

நகராட்சி ஆணையர், வட்டாட்சியர், வேளாண் இணை இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டப் பொறியாளர் ஆகியோரது அலுவலகங்களைக் கொண்டது அந்த பெரிய வளாகம். காவல் நிலையமும், கீழமை மேலமை நீதிமன்றங்களும், மின்னாளுமை சேவை மையமும்கூட அந்த வளாகத்திற்குள்தான் இருக்கின்றன. அந்த வளாகத்தவர்களுக்கென்று கோவிலொன்றும்கூட அங்குண்டு ( மசூதியும் சர்ச்சும் ஏன் இல்லை என்று கேட்டு “தாயாப்புள்ளையா இருக்குற இடத்துல” அமைதியை குலைக்க வேண்டாமென வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்). அலுவலக வேலைநேரம் தொடங்குவதற்கு முன்பாக உள்ளும் புறமுமாக ஒட்டுமொத்த வளாகத்தையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் ஹவுஸ் கீப்பிங் வேலை இவர்களது சுயஉதவிக்குழுவுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டிருந்தது.

ஊருக்கு குந்தகம் பண்றவங்க எல்லாரும் ஒரே இடத்தில் இருந்துத் தொலையட்டும்னு தான் இத்தினி ஆபிசுங்களையும் இங்கேயே கட்டியிருப்பாங்க போல என்று ஆரம்பித்தாள் அபிராமி. கவர்மென்ட் ஆபிஸ்ல குப்பைக் கொட்றேன்னு இவங்க சொல்றது நெசம்தான் போல, ஒவ்வொரு ரூம்லயும் ஒரு வண்டி குப்பை. பாவம், யாரார் கொடுத்த மனுங்களோ இந்தா இங்க இழுபடுது என்று சொல்லியபடியே முதல் அலுவலகத்தை கூட்டிக் கொண்டிருந்தார்கள் இருவரும். கோவில் பக்கம் கூட்டப்போயிருந்த கிரிஜாவும் அபிதாவும் பதைபதைக்க இவர்களிடம் ஓடிவந்து அந்தக் கோயில் பக்கம் போகவே முடியல, பயங்கர நாத்தம் என்றார்கள். உள்ளே இருக்கிற சாமிகீமி செத்துப் போய் நாறுதோ என்னமோ என்றாள் அபிராமி. அட சும்மா இருடி, இவ வேற நேரங்காலம் தெரியாம அரசியல் பேசிக்கிட்டு... மெய்யாலுமே நாத்தம்டி என்றாள் கிரிஜா.

பின்னால எங்கியாச்சும் சாக்கடை அடைச்சிருக்கும், ஹரிஹர ஸர்மாவும் ஷிவ்ராம் சாஸ்திரியும் பக்கத்துலதான் எங்கியாச்சும் இருப்பானுங்க, கூப்புட்டு அடைப்ப எடுக்கச் சொல்லுடி...

அய்யோ, சாக்கடை நாத்தமா இருந்தா எங்களுக்கு தெரியாதாடி?  இது வேற மாதிரி அடிக்குது.

கோவில் பக்கம் நால்வரும் விரைந்தார்கள். நாற்றம் கோவிலுக்குள்ளிருந்து வரவில்லை, அது கோவிலுக்கு அள்ளையில் இருக்கிற தாலுகாபீஸிலிருந்து வருகிறது என்பதை பாகீரதிதான் துல்லியமாக கண்டு சொன்னாள். பெருச்சாளி ஏதாவது செத்திருக்குமோ என்று கேட்டாள் அபிராமி. நல்லவேளை, ஊழல் பெருச்சாளின்னு உன்னோட வழக்கமான பாணியில் சொல்லாமப் போனியே என்று பதிலடி கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை கிரிஜாவும் அபிதாவும் வேண்டுமென்றே நழுவவிட்டார்கள்.

வட்டாட்சியர் அலுவலகம் பிரதான நுழைவாயிலிருந்து உட்பக்கம் தள்ளி ஒதுங்கியிருந்தது. அலுவலகத்தை நெருங்கநெருங்க துர்நாற்றம் வலுத்து குடலைப் புரட்டியது. நால்வரும் மூக்கைப் பொத்திக்கொண்டு பக்கம் போனார்கள். அந்த அலுவலகத்தின் கதவு சன்னல் எல்லாமே சாத்தப் பட்டிருந்தன. அரசாங்க ரகசியம் எதுவும் வெளியே போயிடக்கூடாதுன்னு இப்படி பூட்டிருக்காங்க போல என்றாள் பாகீரதி. ஓய், சும்மா தொணதொணக்காதடி என்று கடிந்துகொண்ட அபிராமி, வடப்புற சன்னல் கண்ணாடி ஒன்று உள்ளங்கையளவு உடைந்து ஓட்டையுடன் இருப்பதைக் கண்டு ஓடிப்போய் அதில் கண்வைத்தாள். அலறுவதற்கு திறந்த வாயை அவளே தன் கைகொண்டு பொத்தியபடி மற்றவர்களை சைகையில் அழைத்தாள். கதையில் ஏதோ முக்கியமான திருப்பம் உருவாகிறதுபோல என்கிற பரபரப்பில் நானும் எட்டிப் பார்த்தேன்.

***
வட்டாட்சியர் அலுவலகத்தில், அதுவும் அவரது மேசையில் நான்கு பிணங்கள் கிடப்பதாக பரவிய செய்தி ஊரையே திரட்டி அங்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டிருந்தது. ஏதேனுமொரு தேவைக்காக வரும் சாமானியர்களை அலைக்கழித்து மனதளவில் சாகடித்து நடைப்பிணமாக அனுப்பிவிடும் சுபாவம் பெற்றிருந்த அந்த அலுவலகத்தில் உண்மையிலேயே நான்கு பிணங்கள் இருக்கிறதென்றால் பார்ப்பற்கு கூட்டம் அலைமோதத்தானே செய்யும்? தங்களது உதவியில்லாமலே நால்வர் செத்துப்போய் தப்பித்துவிட்டதால் ஆத்திரமடைந்த போலிஸார் பெரும் களேபரம் செய்து அங்கு அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆள் நடமாட்டமில்லாத ரயில் ரோட்டோரம், கண்மாய், பாறையிடுக்கு, புதர் மண்டிய பூங்காக்கள், பாழடைந்த கிணறுகள், புகழ்பெற்ற மடங்கள், உயர்கல்வி நிறுவனத்தின் விடுதிகள் மாதிரியான இடங்களில் பிணங்கள் கிடப்பது ஊரில் வழமைதான். ஆனால் தாலுகாபீசில், அதுவும் தாசில்தார் மேசையில் பிணங்கள் கிடப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதால் இவ்விசயத்தை தொலைக்காட்சிகள் பெருஞ்செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் திருவாளர் பொதுசனத்தாலும் அன்றாடம் குப்பைமேடாகி விடும் அலுவலக வளாகத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதற்காக அதிகாலையே வந்துவிட்டிருந்த நால்வரில் அபிராமி என்பவர்தான் பிணங்களை முதலில் பார்த்திருக்கிறார். அந்த அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக தனது சகதோழிகள் கூறியதால் சந்தேகப்பட்டு வடப்புற சன்னலின் உடைந்தக் கண்ணாடி இடுக்கில் பார்த்த போதுதான் பிணங்கள் கண்ணில்பட்டதாக எமது செய்தியாளரிடம் தெரிவிக்கிறார் அபிராமி. அவரது பேட்டியை நேயர்கள் இப்போது எமது நேரலையில் காணலாம்.’’ அபிராமியுடன் இருந்து அடுத்தடுத்து பிணத்தைக் கண்டவர்கள் என்ற அடிப்படையில் பாகீரதி, கிரிஜா, அபிதா ஆகியோரது பேட்டிகளும் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன.

குற்றவாளிகளை பிடிப்பதைவிடவும் குற்றத்திற்கு யாரையாவது பொறுப்பாக்கி விடுவதில் காவல்துறையினர் சமர்த்தர்கள். விசாரணை வளையத்திற்குள் கொண்டுபோய் ‘வழக்கமான பாணியில்விசாரித்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக்கொள்ள வைக்கும் அவர்களது கொடூரப்பார்வையை எங்கள் மீது திருப்பிவிடக்கூடாது என்று ஆரம்பித்து தாங்கள் கண்டதை விலாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் நான்கு பெண்களும். எனக்கு தெரிந்த செய்தியாளர் ஒருவர் நீங்கள் இதுபற்றி கருத்து ஏதும் சொல்லவிரும்புகிறீர்களா என்றார். இல்லை, கதாபாத்திரங்களை பேசவிட்டு கதாசிரியர் ஒதுங்கிக் கொள்வதே சரி, அவர்கள் பேசியதே போதும் என்று மறுத்துவிட்டேன். 

***

அலுவல்பூர்வமாகவும் அதற்கு புறம்பானதுமான வேலைகள் முடிந்து அலுவலகத்தைப் பூட்டும் போது உள்ளே யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பூட்டுவதுதான் வழக்கம். நேற்றும் அவ்வாறுதான் பூட்டப்பட்டது. பூட்டும்போது உள்ளே ஒருவரும் இல்லை என்பதை ஊழியர்கள் பலரும் உறுதி செய்தனர். தாசில்தாருக்கும்கூட இந்த நடைமுறையில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் பூட்டிவிட்டுப் போன அலுவலகம் பூட்டிய நிலையிலேயே இருக்க, பிணங்கள் எப்படி உள்ளே போயிருக்க முடியும்? மேசையில் கிடத்தியது யார்? உள்ளாள் ஒத்தாசை இல்லாமல் பிணங்கள் உள்ளே வந்திருக்கவே முடியாது. அப்படியானால் அந்த கருப்பாடு யார்? குழம்பிப்போன தாசில்தார் தனது பணியாளரைக் கொண்டு காவல் துறையினர் முன்னிலையில் கதவைத் திறக்கச் செய்தார்.  போலிசாருடன் சேர்ந்து உள்ளே நுழைய முயன்ற பலரும் குபீரெனத் தாக்கிய துர்நாற்றத்தால் பின்வாங்கிவிட, சுதாரித்துக் கொண்ட சில போலிசார் மூக்கைப் பொத்திக்கொண்டு முன்னேறினர். 

உள்ளே நுழைந்த போலிசார் முதலில் அறைக்குள் வேறு யாரும் பதுங்கியிருக்கிறார்களா என்று சோதித்தனர். யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள், பிணங்கள் உள்ளே வந்திருப்பதற்கான வழிவகைகள் பற்றியே துருவித்துருவி ஆராய்ந்தனர். சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுவதும் உண்டுதானே. அவர்கள் ஒரு இண்டுஇடுக்கையும் விட்டுவிடாமல் சோதித்தனர். கைரேகை நிபுணர்களும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு புலன் விசாரணை தீவிரமாகியது. அடையாளம் காணவியலாத படி பிணங்கள் உருக்குலைந்து அழுகிப் போயிருந்தன. அடையாளம் காணவியலாத அல்லது காணக்கூடாதென தாங்கள் கருதுகிற எத்தனையோ பிணங்களை அநாதைப் பிணங்கள் என்று கணக்குத் தீர்ப்பதில் நீண்ட அனுபவமுள்ள காவல்துறை இவ்விசயத்தில் சற்றே திணறித்தான் போனது. மேற்கூரையும் கூட பிரிக்கப்படாத நிலையில், பூட்டிக் கிடந்த இந்த அறைக்குள் பிணங்கள் எப்படி யாரால் வந்தன? ஒருவேளை பூட்டும் போதே பிணங்கள் உள்ளே இருந்தனவா? அலுவலகம் பூட்டப்பட்டதற்கும் பிணங்கள் காணப்பட்டதற்கும் இடைப்பட்ட இந்த குறுகிய நேரத்திற்குள் பிணங்கள் எப்படி இந்தளவிற்கு அழுகிப் போயிருக்க முடியும்? வேறெங்கோ செத்து நாள்பட்ட பிணங்களை பூட்டிக்கிடந்த இந்த அறைக்குள் யாரும் கொண்டு வந்து போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்களா?

***

தாசில்தார் அறைக்குள் பிணங்கள் எப்படி வந்தன என்பதையே கண்டறிய முடியாமல் போலிஸ் திண்டாடிக்கொண்டிருக்கும் போதே அண்டை மாவட்டத்தின் ஆட்சியரது அலுவலகத்திலும் வீட்டிலுமாக மொத்தம் 17 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. குடும்பத்தோடு உல்லாசப் பயணம் சென்றிருந்த அவர் வீடு திரும்பியபோது வாசற்படியில் ஒன்றும் வரவேற்பறையில் மற்றொன்றுமாக இரண்டு பிணங்களைக் கண்டார். படுக்கையில் இரண்டும் பாத்ரூமில் ஒன்றுமாக அவர் அடுத்தடுத்தப் பிணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே தனது பொம்மைகளுக்கிடையே குழந்தையின் பிணம் ஒன்று இருப்பதாக அவரது மகள் அலறினாள். பயத்திலிருந்த அவளை தேற்றிக் கொண்டிருக்கும் போதே அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அங்கும் பிணங்கள் இருப்பதாக அரற்றியது. கலெக்டரின் இருக்கையில் அவரைப்போலவே அமர்ந்திருந்த பிணமொன்றை அகற்றியெடுப்பது பெரும்பாடாகிவிட்டதாகவும் படித்து கலெக்டராகும் ஆசையோடு இருக்கும்போதே செத்திருக்கக்கூடும் என்றும் அவரது நேர்முக உதவியாளர் திகிலுடன் விவரித்தார். 

அனல்போல வெயில் தீய்க்கும் அவ்வூரில் இந்தப் பிணங்கள் மட்டும் ஆற்றிலிருந்து இழுத்துப் போட்டது போல ஈரம் காயாமல் சொதசொதவென நீரும் நிணமும் கசிந்தபடியே கிடந்தன.  ஆண்கள் பெண்கள் பால்குடி மறவா பச்சிளம் பாலகர்கள் என்றிருந்த இந்த பதினேழு பிணங்களும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போது, அவற்றுக்கு உரிமை கோரி ஒருவருமே வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே பொக்லைனில் குழிவெட்டி கூட்டாகப் புதைத்துவிட்டு நள்ளிரவில் பங்களாவுக்கு திரும்பினார். வாசலிலேயே காத்திருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் இன்னமும் அங்கிங்கெனாதபடி பங்களா முழுக்க பிணங்களே நிறைந்திருப்பதாகவும் அவை தங்களை பழிவாங்கக்கூடும் என்று அஞ்சுவதாகவும் அரற்றினர். ஒரு மாறுதலுக்காக வெகுதூரம் தள்ளியிருந்த தங்களது சொந்த ஊருக்கு அவர்களை அழைத்துப்போன ஆட்சியர், மறுநாள் அதிகாலையில் தனக்கருகில் ஆணும் பெண்ணுமாக இரண்டு பிணங்கள் படுத்திருப்பதைக் கண்டார். அவற்றின் காதுகளில் ஊற்றப்பட்டிருந்த விஷம் வழிந்து அவரது படுக்கையை நனைத்துவிட்டிருந்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாமென வாய் திறப்பதற்குள் அந்தப் பிணங்கள் இரண்டும் சடசடவெனக் கருகத்தொடங்கின. வேகும் உடல்கள் பாளம்பாளமாக வெடித்து அந்த அறை முழுவதும் சதைக்கொத்துகளாக சிதறத் தொடங்கின. 707 கலெக்டர்கள் உள்ள இந்த நாட்டில் உன்னை மட்டும் பிணங்கள் இப்படி பின்தொடருமளவுக்கு என்ன பாவம் செய்தாய் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் சரமாரியாக துளைத்தெடுத்த கேள்விகளுக்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை. தனது பணிக்காலத்தில் கொல்லப்பட்டவர்களில் யாராவது இப்படி பிணங்களாக வந்து மிரட்டுகிறார்களா, அப்படிதானென்றால் மீதிப் பிணங்களும் வீடு புகுந்தால் தன் கதி என்னவாகும் என்பதைத் தவிர அவருக்கு வேறு யோசனையே இல்லாமல் போனது.

***

வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய இடங்களில் பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக எந்த அலுவலகத்தில் பிணங்கள் கிடைக்கும் என்று சனங்களிடையே காரசாரமான விவாதம் நடக்கத் தொடங்கியது. அடுத்தது இன்னார் அலுவலகத்தில் தான் என்று சிலரும் அதில் இத்தனை பிணங்கள் கிடைக்கக்கூடும் என்று வேறு சிலரும் பந்தயம் கட்டி சூதாடுமளவுக்கு விசயம் முற்றிக்கொண்டிருந்தது. ஆனால் இவர்கள் யூகித்ததற்கு மாறாக இம்முறை அலுவலகங்களில் அல்லாமல், எரிந்து கரிக்கட்டையாகிப்போன 22 பிணங்களை ஒரு வீட்டிலும் அதேரீதியில் கருகிப் போன மேலும் 22 பிணங்களை மற்றொரு வீட்டிலுமாக காண வேண்டியதாயிற்று. விசாரித்துப் பார்த்ததில் அந்த வீடுகளில் வசிப்பவர்கள், 1973ஆம் வருடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாய் இருந்த இருவரின் வாரிசுகள் எனத் தெரியவந்தது. அலுவலகங்களை விட்டுவிட்டு இப்படி தனிநபர்களின் வீடுகளுக்குள் பிணங்கள் விழத் தொடங்கிவிட்டதால், இனி அடுத்து யாருடைய வீட்டில் வேண்டுமானாலும் பிணங்கள் கண்டெடுக்கப்படலாம் என்கிற அச்சம் நாடுபூராவும் பரவிக் கொண்டிருந்த வேளையில் வடமாநிலம் ஒன்றின் உயர் நீதிமன்றத்தில் 21 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு மறுநாளே அதே நீதிமன்றத்தில் 58 பிணங்கள் ஒருசேர குவிந்திருக்கும் செய்தி வெளியாகி உலகத்தையே அதிரச்செய்தது. 27 பெண்கள் 16 குழந்தைகள் 15 ஆண்கள் என இந்த 58 பிணங்களும் முன்பு கண்டெடுக்கப்பட்ட பிணங்களைப் போலல்லாமல் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் இருந்தன. 1912ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் அந்தப் பழமையான நீதிமன்றம் பல பேருடைய சாவுக்கு காரணமாக இருந்து வந்துள்ள போதிலும் அதில் இதற்குமுன் பிணம் ஏதும் கண்டெடுக்கப்பட்டிருக்கவில்லை. இப்போதோ நுழைவாயில் தொடங்கி, நீதிபதியின் மேசை, அவரது இருக்கை, வழக்கறிஞர்கள் அமருமிடம், விசாரணைக்கூண்டு, நீதிபதி அவ்வப்போது குட்டித்தூக்கம் போடும் தனியறை என்று எங்கெங்கு பார்த்தாலும் பிணங்கள். வழக்காவணங்களும் வாய்தா கட்டுகளும் அடுக்கியிருந்த அலமாரிகளில்கூட மடிந்தும் சுருண்டும் பிணங்கள் கிடந்தன. பிணங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அலறியவர்களை அடக்குவதற்காக நீதிபதி சுத்தியலை அறைந்த அதிர்வு தாங்காமல் கூரையிலிருந்தும் சில பிணங்கள் விழுந்தன.

இவ்விசயத்தில் தானாக முன்வந்து அவசர வழக்கொன்றை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றமானது, நீதிமன்றங்களுக்கு வருகிற மனிதர்களுக்கே நீதி கிடைப்பதில்லை என்கிற உண்மை தெரிந்திருந்தும் இந்தப் பிணங்கள் இங்கு வருவதானது, நீதிமான்களின் மனவுறுதியைக் குலைத்து அவர்களை பணிசெய்ய விடாமல் தடுக்கும் தேசவிரோதச் செயலாகும் என்று கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் இதற்காக பிணங்களுக்கு எப்படி என்ன தண்டனை கொடுப்பது என்கிற முடிவுக்கு உடனடியாக வரமுடியவில்லை என்கிற வருத்தத்தையும் பகிர்ந்துகொண்ட நீதிபதிகள், இந்தப் புதிய சூழலை மனதிற்கொண்டு ‘பொடா( Prevention of Deadbody Act)  என்கிற சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

***

நாட்டில் அரசோடு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் அசாதாரணச்சூழல் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு பிரதமர் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தது. அரசாங்கத்திற்கும் குடிமக்கள் பிணங்களாவதற்கும் நேரடித் தொடர்பிருப்பது இயல்புக்கு மாறானதோ அசாதாரணமோ அல்ல என்றும், அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க இவ்விசயத்தை சில எதிர்க்கட்சிகளும் சமூக (விரோத) ஊடகங்களும் மிகைப்படுத்துவதாகவும் ஆளுங்கட்சி பதிலடி கொடுத்தது. இருப்பினும் மடியிலே கனமில்லாததால் வழியிலே பயமில்லை என்ற கூறிக்கொண்ட ஆளுங்கட்சியின் தேசிய தலைவர், பிரதமர் பூமி திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டப்படும் என்றார். இனி சுற்றியடிக்க ஒரு நாடும் மிச்சமில்லை என்கிற நிலையில் விமானத்தை விட்டிறங்கி ராக்கெட்டில் ஏறி வெவ்வேறு கிரகங்களுக்கும் சுற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் எப்போது பூமி திரும்புவார் என்பதுதான் ஒருவருக்கும் தெரியவில்லை.

***

கதையைப் படித்துக்கொண்டிருந்த அபிதாவை இடைமறித்த பாகீரதி கேட்டாள்: ‘நாட்டுல இப்படியொரு பிரச்னை நடந்துக்கிட்டிருக்கிற விசயமாச்சும் பிரதமருக்கு தெரியுமா?’
கீழேயிருந்து சொல்லாமலா இருப்பார்கள்?’ அபிராமி.
தகவல் தெரிந்து பிணங்களைப் பார்க்க பயந்துக்கிட்டு மேலயே சுத்திக்கிட்டிருப்பராக்கும்கிரிஜா.
அடியே, பிணங்கள்தான் அவரைப் பார்க்க பயப்படணும். அவர் பிரதமரானதே பிணங்களால தான்அபிதா.
அப்போ, ஒரு நடை வந்து அதுகளுக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரி கதையில ஒரு ட்விஸ்ட் வையுங்க எழுத்தாளரே...’ பாகீரதி.

***

பிரதமர் பூமி திரும்பாமலிருப்பதற்கு நம்பத்தகுந்த காரணம் என்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. அதாவது பிரதமராலும் அவரது கூட்டாளிகளாலும் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்களின் பிணங்கள் அவர் தரையிறங்கும் நாளில் ராக்கெட் ஏவுதளத்தில் குவிந்து மறித்து பெரும் விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறதாம். விண்வெளிக்கு ஏவப்படும் பலவும் நடுவானில் வெடித்து கடலில் விழுவது இங்கு வாராந்திர வாடிக்கைதான் என்றாலும் அவையெல்லாம் ‘தோல்வியடைந்த தொழில்நுட்ப முயற்சிகள்என்கிற தலைப்பில் கணக்கு வைக்கப்பட்டு விடும். ஆனால் இது அப்படியானதல்லவே. ஒரு போராட்டத்தால் ராக்கெட் தரையிறங்க முடியவில்லை என்று செய்தி வெளியாவது நல்லதல்ல என விண்வெளியியலாளர்கள் கருதுவதால், பிரதமரை இப்போதைக்கு தரையிறங்கவிடாமல் மேலேயே சுற்றவிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்த விவரம் தெரியாமல் அடுத்தடுத்த கிரகத்திற்கு உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறாராம் பிரதமர். இந்த வாட்ஸ் அப் செய்திக்கு வந்த கமென்ட் ஒன்று: ‘கிரங்கங்களுக்கு கிரகம் பிடிச்சிருச்சேய்...’

ஜனாதிபதி மாளிகையில் அவரைத்தவிர வேறு பிணங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பலமான மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிணங்களைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு பொருட்டேயில்லை. செத்தொழியட்டும் என்று பிணமாக்கினால், பிணங்களாகி தொல்லை கொடுப்பதை எப்படி சமாளிப்பதென ஆய்வு செய்ய ஜஸ்டிஸ் பாரபட்சன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அரசு அமைத்தது.

ஆணையம் தனது பூர்வாங்க விசாரணையை துவக்கவிருந்த தினத்தில் அதன் அலுவலகத்திலேயே நூற்றுக்கணக்கான பிணங்கள் விழுந்திருந்தன. இதற்கு முந்தைய பிணங்களைப் போலல்லாமல் இந்தப் பிணக்குவியலில் பல்வேறு மாநிலத்துப் பிணங்களும் இருந்தன. அவற்றை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராத திசையிலிருந்தெல்லாம் பிணங்கள் வந்து அலுவலகத்தில் விழுந்தன. துப்பாக்கி பேனட்டாலும் லத்திக்கம்பினாலும் பிறப்புறுப்பு கிழிக்கப்பட்ட பெண்களின் பிணங்கள், பெல்லட் குண்டு தாக்கி தசை கிழிந்து கன்றிப்போன குழந்தையின் பிணம், கைகால்கள் கட்டப்பட்டு நெற்றியில் சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டைவெட்டியின் பிணம், தலை வேறு முண்டம் வேறாக தரிக்கப்பட்ட செய்தியாளரின் பிணம், குண்டுவெடிப்பில் சிக்கி சதையிணுக்குகளாக சிதறிப்போன முதியவரின் பிணம், பூச்சிக்கொல்லி விஷத்தால் மாய்ந்த உழவரின் பிணம் என்று வகைப்படுத்தவே முடியாதபடிக்கு விகாரமாக பிணங்கள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ஜஸ்டிஸ் மனமாச்சர்யன், சராசரியாக 11 நிமிடங்களுக்கு ஒரு பிணம் என்கிற அளவில் விழுந்துகொண்டிருக்கும் இப்போதைய நிலையே இனியும் தொடர்ந்தாலும் கூட நிர்ணயிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள் விசாரணை முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிணங்களுக்கிடையே பணியாற்றுவது தங்களுக்கு அப்படியொன்றும் புதிதல்ல என்பதற்கு தங்களது கடந்தகால விசாரணை அறிக்கைகளே போதுமான சாட்சி என்று அவர் மேலும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆரவாரமாக அறிவித்திருந்தாலும் ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர், சாட்சியமளிக்க முன்வந்த குடிமக்களில் ஒருவரையும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே வெளியான ஏதாவதொரு ஆணையத்தின் அறிக்கையில் தேதி, இடம், பெயர் ஆகியவற்றை மாற்றிப் போட்டு புதுசு போல தயாரித்தளிப்பதில் நீண்டகால அனுபவம் பெற்றிருந்த அவர்கள் விரும்பிய இடங்களை உல்லாசமாக சுற்றிப் பார்ப்பதிலேயே பொழுதைக் கழித்தனர்.

பிரேக்கிங் நியூஸ் - 1: அருவியில் குளித்துவிட்டு திரும்பிய ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர் மீது அழுகிய மனிதச்சதைகளை வீசி மர்மநபர்கள் தாக்குதல். 

பிரேக்கிங் நியூஸ் - 2 : ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. உள்துறை அமைச்சர் காட்டம்.

பிக் பிரேக்கிங் நியூஸ்: ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணையத்தினர் தாக்கப்பட்டதற்கு ‘நீதிக்கான குடிமக்கள் நடுவம்என்கிற அமைப்பு பொறுப்பேற்பு. எனவே ‘தாக்குதலின் பின்னணியில் யார்?’ என்கிற தலைப்பில் இன்றிரவு 9 மணிக்கு பிரபல சிந்தனையாளர் சாறு, பிராப்ல சிந்தனையாளர் பீணூல் நாராயணன், கவிஞர் கோமியன் ஆகியோர் பங்கேற்கும் வாடகைவாயர்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. 

ஜஸ்டிஸ் பாரபட்சன் ஆணைய அலுவலகம். நீதிபதிகளுக்கு எதிரே உட்கார்ந்திருந்த எழுவரில் ஒருத்தி ‘உங்களை நம்பி கொடுத்த வேலையை நீங்கள் ஒழுங்காகச் செய்து நீதி வழங்கி விடுவீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு துளியும் கிடையாது. ஆனால் பாதிக்கப்பட்ட நாங்கள் இத்தனை பேர் இங்கேயே இருந்தும் எங்களில் ஒருவரைக்கூட சந்திக்காமல் அறிக்கை எழுதத் துணிந்த குற்றத்திற்காகத்தான் உங்கள் மீது இந்த பலப்பிரயோகம். இப்போதாவது எங்களது வாக்குமூலங்களை பதிய முன்வந்தமைக்கு நன்றி. தொடங்கலாமா?’ என்றாள்.  ஆமோதிப்பதை தவிர தங்களுக்கு வேறு மார்க்கமில்லை என்பதை அறிந்திருந்தனர் நீதிபதிகள்.

* முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட நான்கு பிணங்களும் எங்களது உறவினர்கள்தான். பத்து நாட்களுக்கு முந்தைய மழைமோடத்தில் செத்துப் போனார்கள். அவர்களை புதைக்க மயானத்திற்கு எடுத்துப்போன எங்களை ஊர்ச்சாதிக்காரர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். எங்களது பிணங்களை அங்கே புதைத்தால் அவர்களது பிணங்கள் தீட்டாகிவிடுமாம். சரி, உங்கள் புனிதத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சாலையோரம் அல்லது மலையடிவாரத்தில் ஏதாவதொரு இடத்தைத் தேடி புதைக்கலாமெனப் பிணங்களைத் தூக்கிக்கொண்டு போனோம். அவர்களோ ஊர் தீட்டாகிவிடும் என்று பாதையை மறித்து முள்வேலி போட்டுவிட்டார்கள். வேலியை அப்புறப்படுத்த முயற்சித்த எங்களை கடுமையாக தாக்கினார்கள். எனவே கொட்டும் மழையில் அங்கேயே பாடைகளை இறக்கிவைத்துவிட்டு நாங்கள் இந்த தாசில்தாரையும் காவல் துறையினரையும் சந்தித்து மன்றாடினோம். அவர்கள் ஊர்க்காரர்களோடு சேர்ந்துகொண்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகஎங்களில் பலர் மீதும் பொய்வழக்கு ஜோடித்து உள்ளே தள்ளிவிட்டார்கள். ஜாமீன் கிடைத்து நாங்கள் வந்து பார்ப்பதற்குள், எடுத்துப் புதைக்க ஆளில்லாமல் சதைத்துண்டுகளை வழித்தெடுத்து உங்கள் மீது வீசுமளவுக்கு அவர்களது உடல்கள் அழுகி நொதித்துப்போய்விட்டன. இப்படி நாட்கணக்கில் பிணங்களை வைத்துக்கொண்டு ஊர்க்காரர்களோடும் அரசு நிர்வாகத்தோடும் மல்லுக்கட்டிக் கிடப்பதே எங்களுக்கு வேலையா? வாழ்வதற்குதான் போராட வேண்டியிருக்கிறது என்றால், செத்து எங்களை புதைத்துக்கொள்ளவும் நாங்கள் போராடிக் கொண்டேயிருக்க வேண்டுமா?

எதை உண்ண வேண்டும் எதை உடுத்த வேண்டும் யார்கூட படுக்கவேண்டும் என்று எல்லாவற்றையும் தீர்மானிக்க தனக்கு உரிமை இருப்பதாய் சொல்லும் இந்த அரசாங்கம் நாங்கள் செத்துப்போனால் அடக்கம் பண்ணுகிற பொறுப்பையும் ஏற்கத்தான் வேண்டும். இனிமேல் நாங்கள் மயானமும் கேட்கமாட்டோம், பாதையும் கேட்கமாட்டோம். எங்கள் சேரியில் இனி யார் செத்தாலும் பிணங்கள் தாசில்தார் அலுவலகத்தில் இருக்கும்படியாய் செய்து விடுவோம். தாசில்தாருக்கு நேரமிருக்கிற போது அவர் எங்கு வேண்டுமானாலும் புதைத்துக்கொள்ளட்டும்.

2. எங்கள் பெயரை பதினேழு பிணங்கள் என்றே பதிந்துகொள்ளுங்கள். நெடுங்காலம் வாழ்ந்திருக்க வேண்டிய எங்களை அந்தக் கலெக்டரின் ஒரு வார்த்தை கொன்றுவிட்டது. ஆமாம், நீதிகேட்டு நிராயுதபாணிகளாய் வந்த எங்களை சுட்டுக்கொல்ல தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அந்தாள் ஒரு கொலைகாரன். மனித உருவில் மறைந்தலையும் ஒரு பிணந்தின்னி. ஆற்றங்கரையில் எங்களை மடியில் கிடத்திக்கொண்டு கல்லும் கரைந்துருகும் படியாக எங்களது சொந்தங்கள் கதறிக்கொண்டிருந்தார்கள். சைரன் பொருத்திய தனது வாகனத்தில் ஜம்பமாய் வந்திறங்கிய அந்த கலெக்டர், வெடுக்கென எங்களை பிடுங்கிக் கொண்டுபோய் பிணவறையில் போட்டு அழுக வைத்தான். பிறகொரு நாள் ஒரு ஆளம்புக்குத் தெரியாமல் அவனே எங்களை அள்ளிப்போய் அநாதைப் பிணங்களைப் போல புதைத்து விட்டான். புதைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது என்கிற அவனது நினைப்பை பொய்யாக்காவிட்டால் அவன் அடுத்தடுத்தும் பலரை கொல்வான். மனித உயிர்களைப் பறிக்கும் கொடுஞ்செயலை தனது நிர்வாக நடவடிக்கையின் தவிர்க்கமுடியாத ஓரம்சம் போல நினைத்து தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ளவும் துணிவான். எனவேதான் அவனை மட்டுமல்லாது அவனைப்போன்ற அதிகாரிகளை பின்தொடர்ந்து கண்காணிப்பதென்று முடிவெடுத்திருக்கிறோம். அவனது குற்றங்களுக்காக அவனது குடும்பத்தினரை பீதியூட்டலாமா என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியொரு கொலைகாரனின் அதிகாரத்தையும் அதன் வழியான சொகுசுகளையும் அனுபவித்துக்கொண்டு அவனோடு சேர்ந்து வாழ்வதற்கான தண்டனையை அவர்கள் பெற்றுத்தானேயாக வேண்டும்?

3. ஐயா, இந்த நாட்டின் நீதி உங்களது பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களைப் போன்றவர்கள் யாருக்கு நீதி வழங்குகிறீர்கள்? அலுவல்ரீதியாக உங்களுக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளுக்கிடையிலும் நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. நீதிமன்றத்தின் கதவுகள் யாராலும் தட்டப்படாத நிலையிலும்கூட சில பிரச்னைகளில் நீங்களே தானாக முன்வந்து தலையிட்டு நீதிவழங்கலை உறுதிசெய்கிறீர்கள். ஆனால், நீங்களே பாதிக்கப்பட்டதாக உணர்ந்து உங்களை வாதியாக்கிக் கொள்ளும் இந்த விழிப்பு மனநிலை, 18 நிமிடங்களுக்கொரு முறை  நாங்கள் வன்கொடுமைக்கு ஆளாகும் போதோ அன்றாடம் எங்களில் மூவர் கொல்லப்படும் போதோ உறைநிலைக்குச் சென்று விடுகிறது என்பது குற்றச்சாட்டல்ல, உண்மை. நீங்களாக முன்வருவதிருக்கட்டும், நாங்களாக ஓடிவந்து கதறி கூப்பாடு போட்டாலும் கண்ணும் காதுமற்றவர்கள் போல நடந்து கொள்கிறீர்கள்.

நீதியின் சின்னமென நீங்கள் ஒரு கள்ளத்தராசினை ஏந்தியிருக்கிறீர்கள். நீங்கள் வழங்கும் தீர்ப்புகள் இந்தியாவின் சாதி பரிபாலன முறையை நினைவூட்டுகின்றன. நாங்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட வழக்குகளில் கூட கொலையாளிகள் பக்கம் அப்பட்டமாக சாய்ந்து அவர்கள் அனைவரையும் விடுவித்து நிரபராதியாக்குகிறீர்கள். எங்களை நாங்களே மாய்த்துக் கொள்ளவில்லை என்பது உண்மை. நாங்கள் கொல்லப்பட்டு உங்கள் முன் பிணமாகக் கிடப்பதும் உண்மை. ஆனால் நீங்களோ நீதிக்காக காத்துக் கிடக்கும் எங்களது பிணங்களை எவ்வித உறுத்தலுமற்று தாண்டிப்போய்  கொலையாளி என்று யாருமில்லை எனத் தீர்ப்பளிப்பளிக்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை இப்போது நீங்களே கொலையாளிகள். உங்களாலும் கொல்லப்பட்டுவிட்ட நாங்கள் வேறிடத்திற்கு செல்லப் போவதில்லை. ஏற்கெனவே நீதி செத்துக்கிடக்கும் உங்களது நீதிமன்றங்கள் அதன் மெய்யான பொருளில்- மயானங்களாக இருப்பதை உலகுக்கு உணர்த்தவே நீதிமன்றங்களை பிணங்களால் நிறைக்கத் தொடங்கியுள்ளோம்.
.....
....

***

கதை சரியா வந்திருக்கிறாப்ல தான் இருக்கு என்றார்கள் பெண்கள் நால்வரும். கிரிஜா மட்டும் கடைசிப் பத்தியை திரும்பவும் படிக்கச் சொன்னாள்.

...நமஸ்காரம். அடியேனை நோக்கு நன்னா தெரியும். சின்ன பெரியவாளை ஸேவிக்க மடத்துக்கு வர்றச்சே என்னை பாத்திருப்பேள். தோப்பனார் காலத்துலேர்ந்து அங்கதானே சுத்திண்டிருந்தேன், பார்த்திருப்பேள். ஆனா இப்போ முன்னபின்ன பரிச்சயம் இல்லாதவா மாதிரி மூஞ்சை திருப்பிக்கிறேள். என்னைக் கொன்னது யார்னு இந்த லோகத்துக்கே தெரிஞ்சிருக்கு. ஆனா, உங்களாட்டம் நீதிபதிகளுக்குத்தான் கண்ணவிஞ்சுப் போச்சு. அவாளை நிரபராதின்னு விடுவிச்சுட்டேள். இதோ இவங்கள்லாம்தான், இவன் தானே தன்னை வெட்டி மாய்ச்சு பொணமாயிட்டானான்னு தைரியமா கேட்டாங்க, கேட்கிறாங்க. என்னது, பொணமோட பொணமா இப்படி கண்டநிண்ட ஆட்களோட சேர்ந்து நான் வந்தது ஆசாரக்கேடா? அப்போ பகவானோட சந்நிதானத்துல வச்சு என்னை கொன்னுப் போட்டானுங்களே, அது என்ன ஆசார சீலமா?’

நீதி மறுக்கப்பட்டவங்கள்ல ஒருத்தரா இவரையும் சேர்த்து இந்த இடத்தில் கதையை முடித்தது சரிதான் என்றாள் பாகீரதி.

ஆனால், பூட்டிக் கிடக்கும் அலுவலகங்களுக்குள் பிணங்கள் போனது எப்படின்னு எங்கேயும் சொல்லாம விட்டிருக்கேன். லாஜிக் இடிக்குதேன்னு வாசகர்கள் கேட்கமாட்டாங்களா?’

ஏய்யா எழுத்தாளரே, லாஜிக் இல்லாத எந்த விசயத்தையும் உன் வாசகர்கள் ஏத்துக்கவே மாட்டங்களா? இத்தனை அப்பாவிங்க பொணமாக்கப்பட்டதுல என்னய்யா லாஜிக் இருக்கு? கொத்துகொத்தா அவங்கள கொன்னுப் போட்டவங்கள நிரபராதின்னு விடுவிச்ச தீர்ப்புகள்ல என்ன லாஜிக்கை கண்டுபிடிச்சி அமைதியா இருக்கீங்க? வருஷாவருஷம் சட்டவிரோதமா 22 ஆயிரம் பேரை மலக்குழியில இறக்கி கொலை பண்றாங்க. இதுவரைக்கும் ஒருத்தர்கூட தண்டிக்கப்படாததுல என்ன தர்க்கமிருக்கு? முற்றுப்புள்ளி வச்சிட்டு மூடிக்கிட்டுப் போய்யா என்றாள் அபிராமி. மற்றவர்களும் கூட அதையே தான் சொல்ல நினைக்கிறார்கள் போல.

12.07.17

நன்றி: உயிர் எழுத்து , ஆகஸ்ட் 2017
ஓவியங்கள் : கார்த்தி

வியாழன், ஆகஸ்ட் 17

ஆஹா ஓஹோ ஆய்வுகளுக்கு அணுகவும்: தமிழ் இந்து - ஆதவன் தீட்சண்யா

வெற்றி பெற்றவன் சொல்வதை உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க ஒருவரும் துணியமாட்டார் என்று ஹிட்லர் சொன்னதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் செய்தித்தாளே உண்டு என்பதை இப்போதுதான் தமிழ் இந்து மூலமாக அறிகிறேன்.
தமிழ் இந்துவில் வெளியாகும் கட்டுரைகள் எந்தளவுக்கு ஆய்வுப்பூர்வமானவை என்கிற கேள்வி வாஞ்சிநாதன் விசயத்தில் சந்தி சிரிக்கிறது. இதற்கு முன் கடந்த 03.08.2017 அன்று வெளியான "வீரத்தால் வெற்றி கொள்ளமுடியாத வீரன்: தீரன் சின்னமலை" http://tamil.thehindu.com/opinion/blogs/article19413439.ece என்ற கட்டுரையிலும் இப்படியான தகவல் பிழைகளைக் காணமுடியும்.
//1790களின் பிற்பகுதியில் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டிணம் ஆகிய மூன்று இடங்களிலும் சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவித்து, வெற்றிவாகையும் சூடியது.// என்கிறார் கட்டுரையாளர் க.சே.ரமணி பிரபா தேவி.
1790களின் பிற்பகுதி என்பதால் 1799ல் நடந்த நான்காம் ஆங்கிலோ -மைசூர் போரையே இக்கட்டுரை குறிப்பதாக கொள்ளலாம். சித்தேஸ்வரத்தில் 1799 மார்ச் 6 அன்றும், 1799 மார்ச் 27 அனறு மழவல்லியிலும் 1799 ஏப்ரல் மே மாதங்களில் சீரங்கப்பட்டிணத்திலும் தி்ப்புவுடன் ஆங்கிலேயர் நடத்திய போரின் இறுதியில் திப்பு கொல்லப்பட்டார். அவரது ஆளுகைப்பரப்பையும் ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்டனர். இதுகுறித்து https://en.wikipedia.org/wiki/Battle_of_Mallavelly, https://en.wikipedia.org/wiki/Fourth_Anglo-Mysore_War http://journals.sagepub.com/d…/full/10.1177/2158244013482836 - போன்ற சுட்டிகளில் ஏராளமான விவரங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

இந்த ஆவணங்கள் யாவுமே, திப்பு வீழ்த்தப்பட்டது பற்றியே விவரிக்கின்றன. ஆனால் தமிழ் இந்துவோ "சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவித்து, வெற்றிவாகையும் சூடியது" என்கிறது. இவ்வாறு வெற்றிவாகை சூடியிருந்தால் திப்பு ஏன் ராஜ்ஜியத்தையும் உயிரையும் ஏன் அப்போரில் இறந்தார் என்பதை தமிழ் இந்து விளக்குமா?
தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர்பாக வெளியிடும் ஒரு கட்டுரையில் அவரது குணநலன்களையும் பெருமைகளையும் பகிர்வது சரிதான். ஆனால், வரலாற்றை திரித்து இட்டுக்கட்டி புகழ்வது சரிதானா? அந்தந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ள இடைநிலைச்சாதியினரின் மரியாதைக்குரிய தலைவர்கள் குறித்து ஆஹாஓஹோ என்று அளந்துவிட்டு சந்தையை விரிவுபடுத்தும் வணிகநோக்கத்திற்காக தமிழ் இந்து இவ்வாறு செய்கிறதா அல்லது தன்னியல்பாகவே அது வரலாற்றை திரிப்பதை ஓர் ஊடக அறமாக கைக்கொண்டுள்ளதா?
( திரிக்கப்பட்ட இந்த வரலாறு வேறு சில இதழ்களிலும் தலைவர்கள் சிலரது அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளது.)

ஞாயிறு, ஆகஸ்ட் 13

காமிய தேசத்தில் ஒருநாள் - ஆதவன் தீட்சண்யா


அதிகாலை 2.31 மணி.
அதிகாரப்பூர்வமாக கண்விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டி தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாய் நகரும் நோவாகி தன்னை பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான்.

நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால் சாலைகளில் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல். திருத்தியமைக்கப் பட்ட புதிய வேலைநேரம் அமலுக்கு வந்த கடந்த 18ஆம் தேதியிலிருந்து இதே அக்கப்போர் தான். வேலைக்கு வரும்போதும் திரும்பும் போதும் சாலையின் ஒவ்வொரு அங்குலத்திலும் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. புகையும் அழுக்கும் படிந்த உடம்பை நசநசப்பு தீர கழுவிக்கொள்ளவும் முடியாத அசதி. தூளியில் உறங்கும் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கத் தோன்றவில்லை. சாப்பிட்டு முடித்தக் கையோடு படுக்கையில் விழுகையில் மணி ஒன்றை தொட்டிருந்தது. உடலும் மனமும் இயல்புக்குத் திரும்பினால்தானே ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்லமுடியும்? ஆனால் அதற்குள்ளாகவே நேரம் தீர்ந்து பதறியடித்துக் கொண்டு விழிக்க வேண்டியதாகிவிட்டது.

படுக்கைக்கு நேர்மேலே கூரையின் உட்புறத்தில் பதிக்கப்பட்டிருந்த டிஜிடல் கடியாரம் 2.31 மணி எனக் காட்டியது. மல்லாந்து படுத்திருந்தால் பார்க்கத் தோதானது அது. எந்தப்பக்கம் திரும்பினாலும் பார்ப்பதற்காக நாற்புறச் சுவர்களிலும் பதிக்கப்பட்டிருந்த கடியாரங்களும் அதே நேரத்தைத்தான் காட்டினஅடுத்த 29வது நிமிடத்தில் அவை எழுப்பப்போகும் ஒலிக்காக அவன் காத்திருக்கத்தான் வேண்டும். அதிகப்படியான நேரம் தூங்குவதைப் போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாக கண்விழிப்பதும் அரச நிந்தனை என்பதை அறியாதவனல்ல அவன். அந்தக் குற்றத்திற்குரிய அபராதத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிக்கும் உபாயமாக, தான் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டான். மட்டுமன்றி, அவன் தானே தன்னை நம்புவதற்காக வேண்டுமேன்றே செயற்கையாக குறட்டைவிடவும் பழகியிருந்தான். ஆனால் தூங்கிவிடக்கூடாது என்பதில் கவனம் தோய்த்து அலாரத்திற்காக காத்திருந்தான்.  

கோமிய தேசியத்தின் முதல்வர் ஒருவர் அன்றாடம் 18-20 மணிநேரம் வேலை செய்ய முடியாத அரசு ஊழியர்கள் தாங்களாகவே பணியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உளறியதற்கு ஊடகங்களில் கிடைத்த பரவலான வரவேற்பை பார்த்து காமிய தேசத்தின் பிரதமர் உலகளந்தான் பரவசமாகிப் போனார். தேசத்தில் நிலவுகிற பொறுப்பற்ற பணிக்கலாச்சாரத்தின் மீது துல்லியத் தாக்குதல் ஒன்றை இங்கு நடத்த இதுவே உகந்த தருணம் என்று முதலாளிகள் சங்கமும் நச்சரிக்கத் தொடங்கியது. அதன்பேரில் அவர் அமைத்த தேசிய வேலைநேர சீரமைப்புக்குழுவின் பரிந்துரைப்படியே அதிகாலை 4மணி முதல் நள்ளிரவு 12 வரை நாடு முழுவதும் வேலை நேரமாகியது.

வேலைக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 4 மணி நேரத்தை நொடிவாரியாக பிரித்து திறமையாக பயன்படுத்தும் திட்டமொன்றை தேசிய ஓய்வுநேர மேலாண்மை வாரியம் வகுத்தளித்திருந்தது. அதன்படி அவன் இந்நேரம் தூங்கிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் குறித்த நேரத்தில் விழித்துவிட வேண்டும் என்கிற நினைப்பின் அழுத்தம் அவனை தூங்கவொட்டாமல் செய்துவிடுகிறது. எவ்வாளவு நேரத்திற்கு தூங்கப்போனாலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்தேயாக வேண்டும். அப்படியானால்தான் தயாராகி 3.59 மணிக்கு அலுவலகத்தில் நுழைய முடியும். ஒரு நிமிட தாமதத்திற்கும் பாய்கிற ஒழுங்கு நடவடிக்கையை தவிர்ப்பதற்காகவே தூங்காமலே தூங்கியதான கற்பனையை அவன் நம்பிக் கொண்டிருந்தான். அன்றிலிருந்து உறங்கவே உறங்காத அவன் உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டதாக நம்பிக் கொண்டிருக்கிறான். வெளியில் சொன்னால் நல்ல கதை என்று கேலிதான் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுதான். தொடர்ந்து இருபது மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே கிடப்பதால், இப்போதெல்லாம் அவன் படுத்திருக்கும் போதும்கூட, தான் உட்கார்ந்தே இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.

முன்பாக இருந்தால் ஒலிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இழுத்துப் போர்த்தி தூங்கி விடுவான். இப்போதோ அலாரம் அடிக்கத்தொடங்கிய முப்பதாவது நொடிக்குள் எழுந்தாக வேண்டும். இல்லாவிடில், கட்டிலோடு இணைக்கப்பட்டிருக்கும் மின்னதிர்க் கருவி தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும். சுரீலென அதிலிருந்து பாய்ந்த மின்சாரம் உடலின் ஒவ்வொரு அணுவையும் வெடுக்கென தாக்கும் வாதையை அவன் முதல்நாளே அனுபவித்திருக்கிறான். மறுபடி மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையோடு இருந்தான்.

அருகில் படுத்திருந்த அவனது மனைவி 1111 2222 3333 4444.1 கூட முன்பே விழித்து விட்டாள். ஆனால் இஷ்டப்பட்ட நேரத்திற்கு எழுந்துவிட முடியாதல்லவா. கடந்த ஞாயிறன்று நள்ளிரவு படுக்கைக்குச் செல்லும்முன் வெளியாகியிருந்த அரசாணையின் படி அவள் எழுவதற்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் 14 நிமிடங்கள் இருந்தன. பின்தூங்கி முன்னெழும் வழக்கத்தை பெண்கள்  கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கிற அவ்வுத்தரவுப்படி அவள் தன் கணவன் 1111 2222 3333 4444 எழுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து சிசிடிவியில் முகம் காட்டவேண்டும். அந்த 15 நிமிடங்களுக்குள் செய்து முடித்தேயாக வேண்டிய வேலைகளை மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி எழுவதற்கு தயாராக படுத்திருந்தாள். வேட்டுச்சத்தம் கேட்டதும் பாய்ந்தோடுவதற்கு மைதானத்தில் ஆயத்தமாயிருக்கும் ஒரு வீராங்கனையைப் போல அவள் தன்னை நினைத்துக்கொண்டாள்.

அதிகாலை 2.46 மணி.
அவளுக்கான அலாரம் பிங்க் நிற ஒளியுடன் ஒலிக்கத் தொடங்கியது. அவ்வளவுதான், அவள் விசை முடுக்கப்பட்ட ஓர் இயந்திரம்போல் பரபரவென தனது வேலைகளைத் தொடங்கினாள். துள்ளியெழுந்து கட்டிலை விட்டிறங்கிய அவள், கணவனது காலைத்தொட்டு வணங்குவதையும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வதையும் செல்ஃபி எடுத்தாள். அந்த புகைப்படங்களை தேசிய பண்பாட்டு மீட்டெடுப்பு ஆணையத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டு அவள் தேநீர் தயாரிக்க அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அதிகாலை 2.48 மணி.
பழக்கதோஷத்தில் அடுக்களைக்குள் போய்விட்ட அவளுக்கு சட்டென்று சுதேசி அமலாக்கம் மற்றும் கண்காணிப்புச் சங் வெளியிட்ட 64வது புதிய சட்டம்  நினைவுக்கு வந்தது. நல்ல வேளையாக அடுப்பை மூட்டாமல் இருந்ததால் தப்பித்தாள். ஒருவேளை அடுப்பை மூட்டியிருப்பாளேயானால்  சிசிடிவி அவளை சங் அதிகாரிகளிடம் கையும்களவுமாக காட்டிக் கொடுத்திருக்கும். அன்னிய பானமான தேநீரை தயாரித்தது, அருந்தத் தூண்டியது, அருந்தியது என அடுக்கடுக்கான தேசவிரோதக் குற்றங்களை இழைத்திருப்பாள். அவள் மட்டுமல்லாமல் குடித்த குற்றத்திற்காக அவளது கணவனும் தண்டனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும். சீனப் பொருட்களை சந்தையிலிருந்தும் சனங்களின் மனங்களிலிருந்தும் முற்றாக ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரசாங்கம்  சீன பானமான தேநீரை தயாரிப்பதோ அருந்துவதோ அருந்துவதற்கு தூண்டுவதோ ஏழ்பிறப்பிலும் மரணதண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது. (மறுபிறவியில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதால் அனைத்துச் சட்டங்களும் ஏழ்பிறப்புக்கும் சேர்த்தே நிறைவேற்றப்படுகின்றன). சட்டத்திற்கு புறம்பாக தேநீர் குடிப்பவர்களைக் கண்டறிந்து களையெடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் குடிமக்கள் தமது மலஜலத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி நிரூபித்துக்கொள்வது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தை ஏமாற்றிவிடுகிறவர்கள்கூட ஆளுங்கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'மோப்ப சங்கிடம் தப்பித்துவிட முடியாது. அவர்கள் நடத்தும் அதிரடி சோதனைகளின்போது சந்தேகத்திற்குரியவர்கள் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் 27 பேரை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். இவ்வாறு கொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை கூடக்கூட சம்பந்தப்பட்ட சங்கிகளுக்கு அரசில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும் என்பதால் அவர்கள் மிகத் தீவிரமாக மோப்பம் பிடித்தார்கள்.

பெரும் இக்கட்டிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் தப்பிக்கவைத்த தனது சமயோசிதப் புத்தியை மெச்சிக்கொண்டபடியே பழைய பால்குண்டாவை எடுத்துக்கொண்டு பின்கட்டிலிருந்த தொழுவத்திற்கு ஓடியவள் 0085 6219 3941 4316 முதல் 0085 6219 3941 4320 வரை எண்ணுள்ள காளைகளை வணங்கி அவை பெய்யும் காமியத்திற்காக காத்திருந்தாள் (கோமியமல்ல, காமியம்). அந்தக் காளைகள் இவளது வீட்டிற்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டிருந்த போதிலும் இன்னும் அவை இவளை இணக்கமற்றே பார்த்தன. காளைக்கறி உண்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே இரவோடிரவாக விவசாயிகள் தமது காளைகளை ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்குள் விரட்டியடித்து விட்டார்கள். அப்படியான காளைகளில் ஐந்தை வளர்க்கும் பொறுப்பை அரசாங்கம் இவர்களது குடும்பத்திடம் ஒப்படைத்திருக்கிறது. காமியம் பெய்யும்வரை காத்திருந்து பிடித்துக்கொண்டு வந்து கணவனை எழுப்பினாள். வெறும் வயிற்றில் குடிக்கவேண்டிய ஆகாரமென அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காமியத்தை கணவனுக்கு பெரிய தம்ளரில் கொடுத்தது போக மீதியில் தான் கொஞ்சம் குடித்துவிட்டு மிச்சத்தை குழந்தைக்கு சங்கடையில் எடுத்துவைத்தாள். குழந்தைக்கு சட்டம் தெரியாதல்லவா, அதனால் அது புகட்டுகிற காமியத்தை குமட்டிகுமட்டி வெளியே துப்பியது. சிசிடிவியில் சிக்கிவிட்டால் குழந்தைக்கும் தங்களுக்கும் கடும் தண்டனை கிடைக்கும் என்பதால் அவள் குழந்தைக்குப் புகுட்டும்போது வீட்டுக்குள்ளேயே மறைவிடம் ஒன்றை உண்டாக்கியிருந்தாள். இவளுமே கூட காமியத்தில் உலைவைத்து காய்ச்சும் கஞ்சியை குடிக்க ஒம்பாமல் திணறிக்கொண்டுதானிருந்தாள்.

கணவனைப் போலவே இவளும் ஓர் அரசாங்க ஊழியர்தான். இவளுக்கு இது தலைச்சன் பிள்ளைபச்சையுடம்பு தேறி முன்புபோல வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கியிருந்தாள். 26 வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்த மகப்பேறு விடுப்பு முடிய நேற்றிரவு 11.59மணியோடு முடிந்தவிட்டது. உலகிலேயே கனடாவுக்கும் நார்வேவுக்கும் அடுத்தபடியாக அதிகமான நாட்களை மகப்பேறு விடுமுறையாக தருவது இந்த நாடுதான் என்பதில் இவளுக்கு சற்றே பெருமிதமிருந்தது. குழந்தையைப் பார்ப்பதற்கென்று வீட்டுக்கு வரும் சக ஊழியர்கள், நீ இல்லாமல் ஆபிஸ் ஆபிஸாகவே இல்லை சீக்கிரம்  வந்து சேர்... என்று அவளை கிளப்பிவிட்டுப் போனார்கள். இதோ முடியப்போகுது, வந்துவிடுகிறேன் என்று ஆசையோடு சொல்லி இவளும் அவர்களை அனுப்பி வைப்பாள். அலுவலகம் போகத் தொடங்குவதற்கு முன்பு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பலவற்றையும் செய்து கொண்டிருக்கும் போதே நாட்கள் கரைந்துவிட்டன. அவ்வளவுதான், விடிந்தால் காலையில் மீண்டும் வேலையில் சேரப்போகிறோம் என்கிற பரவசத்திலும் திரும்பி வரும்வரை குழந்தை எப்படி தாங்குமோ என்கிற கவலையிலுமாக தூக்கம் வராமல் புரண்டு கொண்டேயிருந்தாள். கணவனைப்போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே விழித்துவிட்டிருந்தாள். தனக்கான அலாரம் அடித்ததுமே எழுந்தவளுக்கு நிமிரக்கூட நேரமின்றி அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தன. கணவனை தயார்படுத்தி அனுப்பிவிட்டு தானும் தயாராகி அலுவலகம் செல்ல வேண்டுமே என்கிற நினைப்பு அவளை அவ்வளவு வேகமாக இயக்கியது.

அதிகாலை 3.31 மணி.
மூன்று மணிக்கு எழுந்து மனைவி தந்த இளஞ்சூடான காமியத்தை மிடறுமிடறாக குடித்துவிட்டு கழிப்பறைக்குள் ஓடியவன் வெகுநேரமாக வெளியில் வரவேயில்லை. தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், தொடர்ந்து உட்கார்ந்தே இருப்பதால் வரும் முதுகுவலி, அடுத்தடுத்து வெளியாகும் அரசாங்க உத்தரவுகளால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அலைக்கழிந்துக் கொண்டிருந்தவனை புதிதாக மூலநோய் வந்து மேலும் படுத்தியெடுத்தது. அலுவலகத்தில் இருந்தாக வேண்டிய இருபது மணி நேரம் போக எஞ்சியுள்ள நான்கே மணி நேரத்தில் பெரும்பகுதியும் இப்படி கழிப்பறையிலேயே கழிகிறதே என்கிற கவலையும் அவனை வாட்டத் தொடங்கியது.

குளியல் என்கிற பெயரில் தண்ணீரில் முங்கியெழுந்து வந்த கணவன் 1111 2222 3333 4444 அவதியவதியாக வாயில் எதையோ பிட்டு போட்டுக்கொண்டு மத்தியானத்துக்கும் அந்திக்குமான சோத்துக் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது மணி 3.31 ஆகிவிட்டிருந்தது. வீட்டிலிருந்து குறித்த நேரத்தில் அலுவலகம் கிளம்பிவிட்டதற்கு அடையாளமாய் வீட்டின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ரேகை பதித்துவிட்டு அவன் கிளம்பினான்.

அவனைத் தொடர்ந்து அவளும் பரபரவென அலுவலகத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கு அந்த வாட்ஸ்அப் செய்தி வந்தது. ராஜதுறவியர் தேசிய சபை பரிந்துரையின் பேரில் அரசாங்கம் அன்றைக்கு ஊரடங்கிய பின் நிறைவேற்றிய அவசரச் சட்டம் பற்றிய அச்செய்தி அவளை நிலைகுலையச் செய்தது. கணவனுக்கு பணிவிடை செய்வதையும் குடும்பம் மற்றும் குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காளைகளைப் பராமரிப்பதையும் மட்டுமே பெண்கள் தமது கடமையாகக் கொள்ளவேண்டும் என்கிற அந்த புதிய சட்டத்தின்படி இனி தன்னால் வேலைக்குப் போகவேமுடியாது என்கிற உண்மையை ஏற்கவியலாமல் அவள் தத்தளித்தாள். குழந்தை அழுவதும் கூட உறைக்காமல் பேதிலித்துக் கிடந்தாள்.

விற்கிற விலைவாசிக்கு ஈடுகொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமானால் இருவரும் சம்பாதித்து தானாக வேண்டும் என்பதற்காக வேலையில் சேர்ந்தவளில்லை அவள். நினைவுக்கு எட்டியவரை அவளது சொந்தபந்தங்களில் அவள்தான் முதலில் படிக்கப்போனாள். அவளைப் பார்த்துதான் வேறுசிலரும் பெண்குழந்தைகளை படிக்க அனுப்பினார்கள். படித்தாலும் வீட்டோடு தான் கிடக்க வேண்டும் என்றாகிவிட்டால் பிறகு யார் பிள்ளைகளை படிக்க அனுப்புவார்கள் என்று யோசித்து தான் அவள் வேலையில் சேர்ந்தாள். கூலிநாழிக்குப் போய் பெற்றோர்கள் தமக்கு கொடுக்கும் கல்வியை பெண்கள் வீணடித்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்தாள்ஆண்களால் நிறைக்கப்பட்டிருக்கும் பொதுவெளிகளில் பெண்ணின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நமக்கு படிப்பும் வேலையும் அவசியம் என்று தன் நட்புவட்டத்து பெண்களிடம் ஓயாமல் சொல்லிவந்தாள்.

சம்பளம் கிடைக்கிறது என்பதற்கும் அப்பால் வீட்டைவிட்டு வெளியே வேலைக்குப் போய் வருவது அவளுக்கு பலவிதமான அனுகூலங்களைக் கொடுப்பதாக இருந்தது. குடும்பத்திற்கு வெளியேயும் நம்மை மதிக்கிற விரும்புகிற அன்பு செலுத்துகிற மனிதர்கள் இருப்பதை படிக்கிற காலத்திலிருந்தே அவள் கண்கூடாக பார்த்தவள்தானே? எனவே அவள் அலுவலகத்திலும் அப்படியானவர்களைக் கண்டறிந்தாள். அவர்களோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சொந்தப் பிரச்னையொன்றை பேசிக்கொள்வதைப் போல நாட்டு நடப்புகளை விவாதிக்க முடிந்தது. வீடும் குடும்பமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்தாத எந்தவொரு அவமானத்தையும் கண்ணியக்குறைவையும் பொதுவெளி ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று  அவளுக்குள் ஆழப்பட்டிருந்த கருத்தை இவனும் ஏற்றுக்கொண்டிருந்தான். தன்மதிப்போடு வாழ விரும்பும் பெண் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குப் போவது அவசியம் என்பதில் இருவருக்கும் ஒருமித்திருந்தனர். ஆனால் இப்படியொரு அவசரச் சட்டம் வந்து தனது வேலையைப் பறித்து வீட்டோடு முடக்கிப்போடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அதிகாலை மணி 4.
அலாரம் அடித்தபோது அய்யய்யோ இது நான் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டிய நேரமாச்சே என்றெண்ணி அவளது வேதனை பன்மடங்காகியது. வேலை பறிபோன விசயத்தை கணவனிடம் சொல்லலாமென்றால் அவன் இப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருப்பான், காலையிலேயே அவனுக்கு மேலும் பதற்றம் எதற்கு என்று தனது அலுவலகத்தோழிகளை தொலைபேசியில் கூப்பிட்டாள். இவளைப்போலவே வேலையை இழந்துவிட்ட அங்கலாய்ப்பில் தான்  அவர்களுமிருந்தார்கள்.

சரி, இனி வீட்டிலிருந்து குழந்தையை வளர்க்கிற வேலையையாவது உருப்படியாய் செய்வோம் என்று தன்னைத்தானே அவள் தேற்றிக்கொண்டிருந்த வேளையில்தான் அடுத்தும் ஓர் அதிர்ச்சி உத்தரவு வெளியானது. உள்நாட்டு தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அவளது மதத்தைச் சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் 10 குழந்தைகளை பெற்றெடுத்தாக வேண்டும் என்றுமுற்றும் துறந்தோர் முன்னேற்றச் சங்நிறைவேற்றிய தீர்மானத்தின் படியானது அவ்வுத்தரவு. இன்னமும் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டியிருக்கிறது என்கிற நினைப்பே அவளுக்கு கடும் அச்சத்தையும் ஆயாசத்தையும் தந்தது. இந்தத் தீராத வாதையிலிருந்து விடுபடுவதற்காகவேனும் வேறு மதத்திற்கு தப்பியோடி விடலாமா என்று தோழியொருத்தி போனில் யோசனை கேட்டாள். இப்பவாவது பிள்ளை பெத்துக்க சொல்றாங்க, வேற மதத்துக்குப் போனா ஏதாச்சும் சாக்குப்போக்கு சொல்லி இவனுங்க அடிச்சே கொன்னுருவாங்க, இப்போதைக்கு பேசாம இரு, பிறகு யோசிப்போம் என்று இவள் வாயை அடக்கினாள். அது அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பதிலாகவும் இருந்தது.

இரவு 12.14  மணி.
அலுவலகம் முடிந்து கணவன் 1111 2222 3333 4444 வரக்கூடிய நேரம். அவனுக்குரிய இரவுச் சாப்பாட்டை தயார் செய்தாள். தேசிய குடும்ப ஒழுங்காற்று ஆணையத்தின் விதி 311/34ன் படி வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனுக்கு அருந்தக் கொடுக்கவேண்டிய புஷ்டிபானம் என்பதால் தொழுவத்திற்குப் போய் குவளை நிறைய சூடாக காமியம் பிடித்துவந்தாள். இன்னும் சில மணித்துளிகளில் வந்துவிடுவான். வெளி லைட்டை எரியவிட்டுக்கொண்டு கதவைத் திறந்து வாசற்படியில் தான் அமர்ந்திருந்த காட்சி ஐம்பதறுபது ஆண்டுகளுக்கு முன்பு கருப்புவெள்ளை சினிமாவில் கணவனை வரவேற்க காத்திருந்த மனைவியின் சாயலை ஒத்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனேக வீடுகளிலும்  பெண்கள் அவளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு வாசற்படியில் காத்திருந்தார்கள். நூற்றாண்டுகளாக முயன்று ஈட்டிய முன்னேற்றங்கள் அனைத்தையும் ஒரேயொரு உத்தரவில் பறித்தெடுத்துவிட்ட இந்த அரசாங்கம் பெண்களை வெறும் மனைவியராக முடக்கிப் போட்டுவிட்டதே என்று அவளுக்கு பொறுமலாயிருந்தது

12.29 மணி.
அவளது கணவனின் வண்டி வரும் சத்தம் அவளுக்கு துல்லியமாகக் கேட்டது. ஆனால் அவனுக்கு பதிலாக வேறு யாரோ ஓராள் வந்திறங்கினான். இன்று பிற்பகல் 5.46 மணி 32 வினாடிக்கு தேசிய நடத்தைவிதிகள் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி அன்னிய ஆடவன் முன்னால் பெண்கள் நடமாடுவது சட்டரோதம் என்பதால் அவள் பதைபதைப்போடு வீட்டுக்குள் ஓடினாள். அந்த ஆடவனோ ஓடாதே நில் என்றான். அது அவளது கணவனின் குரல்தான். மிகவும் குழம்பிப் போனவளாய் அவசரமாக தலைக்கு முக்காடிட்டு முகத்தை மூடியபடி கதவுக்குப் பின்னே மறைந்து நின்று அவனை விளக்கொளியில் கவனித்தாள். அடக்கொடுமையே, அவளது கணவன் 1111 2222 3333 4444 தான். ஆனால் அவனது தோற்றத்தில் ஏன் இத்தனை மாறுபாடு? வீட்டுக்குள் வந்த அவன் ஏன் என்னை அடையாளம் தெரியலியா என்று நடுங்கும் குரலில் கேட்டான். எப்படி தெரியும்? காலையில் போன மாதிரியா வந்திருக்கே? உன் தலையை யார் இப்படி அலங்கோலம் பண்ணினது? என்று அவள் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தாள். அவனோ சொற்களை தொலைத்தவன் போல் பதிலேதும் சொல்லாமல் மனமும் முகமும் இறுகிப்போய் சுவற்றோடு சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். ஒயிலான சிகையலங்காரம் கொண்டிருந்த அவனது தலை கரண்டியெடுக்கப்பட்டு மொட்டையடித்து மூன்று நாட்களானாற்போல காட்சியளித்தது இப்போது. முதல்வர் தலையில் இருப்பதைவிடவும் நீளமாக முடிவளர்த்திருக்கும் ஆண்களை மடக்கிப் பிடித்து இப்படி சிரைத்து அனுப்புவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதேசிய சிகை சீர்திருத்தச் சங்கிடம் மாட்டிக்கொண்டதனால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை அவனுக்கு.

தனக்கு வேலை பறிபோன துக்கத்தை கணவனிடம் பகிர்வதற்காக காலையிலிருந்து காத்துக் கிடந்தவளுக்கு அவனிருந்த நிலைமையைப் பார்த்து வாயடைந்துப் போனது. அவனை ஆசுவாசப்படுத்தும் இரக்கம் பெருகியவளாகி தலையைக் கோதி தோள் தொட்டு எழுப்பி சாப்பிட அழைத்துப்போனாள். சினிமாவில் வருவதுபோல, அவன் முதல் கவளத்தை வாயிலிடப் போகும் போதுதான் பெரும் சத்தத்தோடு அந்த அரசாங்க வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றது. காவல்துறையின் இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவரும் போலிஸ் இல்லை. நெற்றியிலும் புஜத்திலும் ஆளுங்கட்சியின் கொடியை பட்டையாக கட்டியிருந்த அவர்கள்கல்வி, கலைஇலக்கியம் மற்றும் கலாச்சார போலிஸ் - ...’ என்கிற உலோக வில்லையை சட்டைப்பையின் மேற்புறம் பதக்கம் போல குத்தியிருந்தார்கள். முறைப்படியான அனுமதியைக்கூட கோராமல் அழுக்கும் புழுதியும் படிந்த காலணிகளோடு வீட்டின் நடுக்கூடத்திற்குள் நுழைந்தவர்கள் தாறுமாறாக நாற்காலிகளை இழுத்துப்போட்டு அமர்ந்தார்கள். வந்தவர்களது தலைவனைப் போலிருந்தவன் உரத்தக் குரலில் வீட்டாள்களுக்கு கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கினான். உறக்கத்திலிருந்த குழந்தை 1111 2222 3333 4444.2, வழக்கத்திற்கு மாறான திடீர் சந்தடியால் விழித்துக் கொண்டு அழத் தொடங்கியது. அதுபற்றி சற்றும் துணுக்குறாத அவர்கள் அடுத்தடுத்த வீடுகளுக்குள் வரிசையாக நுழைந்து இதேவிதமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு போனார்கள்.

இரவு 12.43 மணி.
1111 2222 3333 4444 உள்ளிட்ட அந்தப் பகுதியின் குடிமக்கள் அனைவரும் தமக்கு விதித்திருந்த கெடுவுக்கும் முன்னதாகவே வீட்டிலிருந்த புத்தகங்களையும் துணிமணிகளையும் மூட்டையாக கட்டி சுமந்துகொண்டு மணிக்கூண்டு சதுக்கத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ...போலிஸாரால் கவனமாக சோதனையிடப்பட்ட அம்மூட்டைகள் அனைத்தும் அங்கிருந்த தகனமேடை மீது மலை போல் குவிக்கப்பட்டன. குடிமக்கள் அணிந்திருந்த ஜீன்ஸ், டீசர்ட், பேண்ட், சட்டை, சார்ட்ஸ், ஜட்டி, பனியன் ஆகிய உடைகளையும் கழற்றி வாங்கிய ...போலிஸார் அவற்றையும் அந்த தகன மேடையில் எறிந்தார்கள். வெட்டவெளியில் இப்படி எங்களை நிர்வாணமாக நிறுத்தி அவமதிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்ட முதியவர் ஒருவரை ...போலிசார் நையப்புடைத்ததைப் பார்த்த மற்றவர்கள் தமக்குள்ளேயே ஒடுங்கி நின்றார்கள்உங்கள் உடம்பும் அரசாங்கத்திற்குரியது தான். அது அம்மணமாக இருக்கணுமா ஆடையோடு இருக்கணுமா என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்யும். எதிர்த்து கேள்வி கேட்டு இப்படி அடிவாங்கிச் சாகத் துணியாதீர்கள் என்று எச்சரித்தபடியே தாக்கினார்கள். எல்லோரது உடுப்பும் கழற்றியாகிவிட்டதை உறுதிபடுத்திக் கொண்ட  ... போலிஸின் தலைவர் தமது படையினரின் பெரும் ஆரவாரத்துக்கிடையே அந்த மூட்டைகளுக்கு தீவைத்தார்.

தாங்கள் ஆசையாசையாய் வாங்கிச் சேர்த்த துணிமணிகளும் புத்தகங்களும் சடசடத்து எரிவதை காணச்சாகியாத குடிமக்கள் தளுதளுக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தார்கள். ‘நமது தொன்மையான கலாச்சாரத்திற்குப் புறம்பான ஆடைகளை நானோ எனது குடும்பத்தவரோ இனி வாங்கவோ உடுத்தவோ மாட்டோம். இஸ்லாமியரிடமிருந்து பரவிய - துணியை மூட்டி உடுத்தும் (அங்குராக்) வழக்கத்தையும் கைவிடுகிறோம். நமது நம்பிக்கைகளை சந்தேகிக்கவும் கேள்வி கேட்கவும் தூண்டுகிற எந்தவொரு புத்தகத்தையும் வாங்குவதும் வாசிப்பதுமாகிய தேசவிரோதச் செயலில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்என்று எரியும் தீ மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு அவர்கள் கூட்டாக பணிக்கப்பட்டார்கள். உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு குடிமக்கள் எல்லோருக்கும் இரண்டு ஜதை மாற்றுடுப்பு கொடுக்கப்பட்டது. அதுவரையிலும் அம்மணமாய் கூனிக்குறுகி நின்றிருந்த அவர்கள், உடனடியாய் உடுத்துக் கொண்டார்கள். அரையில் கோவணம் தலையில் உருமால் என்று அவர்களும் இப்போது அவர்களது முதல்வருக்கு இணையான தேசிய உடைக்கு மாறியிருந்தார்கள்.

இரவு மணி 1.01.
தகன மேடையிலிருந்த வீடு திரும்பிய 1111 2222 3333 4444, அந்த நெருப்பில் தனது தசையே பொசுங்கிவிட்டது போலிருக்கிறது என்றான். அதே மனநிலையால் பீடிக்கப்பட்டு இறுகிப் போயிருந்த அவனது மனைவி 1111 2222 3333 4444.1 பதிலேதும் சொல்லாமல் அவனருகில் அமர்ந்துகொண்டாள். துக்கத்தோடு துக்கமாய் இதுவும் சேர்ந்துகொள்ளட்டும் என்று நினைத்து, தனக்கு வேலை பறிபோய்விட்ட விசயத்தையும், பெண்கள் பத்துக்குழந்தை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகியிருப்பதையும் அவனுக்கு தெரிவித்தாள். இது காலையில் அலுவலகத்தில் நுழைந்ததுமே தனக்கு தெரிந்துவிட்ட தகவல்தான் என்று கூறிய அவன், அது தொடர்பான அரசாணையின் நகல் ஒன்றை வாட்ஸ் அப்பிலிருந்து எடுத்து அவளுக்கு படிக்கக் கொடுத்தான். பெண்களின் வேலை பறிக்கப்பட்டதற்கும் ஆண்களின் வேலைநேரம் இருபது மணி நேரமாக மாற்றப்பட்டதற்கும் உள்ள தொடர்பை அந்த அரசாணை வெளிப்படையாக தெரிவித்தது. ஏதோவொரு பெருந்திட்டத்தை நோக்கி மக்களை விரட்டிக்கொண்டு போவதற்காகத்தான் அரசாங்கம் இப்படியான ஆணைகளை அடுத்தடுத்து வெளியிடுகிறதா எனக் கேட்டாள். ஆமாம், அதற்காக தான் நமது ஒவ்வொரு நொடியையும் நகர்வையும் அரசாங்கம் கட்டுப்படுத்தி கண்காணிக்கிறது என்றான் அவன். மேற்கொண்டும் உரையாட அநேகமிருந்தாலும்  அதற்கான மனநிலையை இருவருமே இழந்திருந்தார்கள். உணவருந்தாமலே துக்கத்தில் சொடுங்கி தூக்கத்திற்குள் அவர்கள் விழத்தொடங்கிய வேளையில்தான்  கதவை யாரோ தட்டினார்கள்.

வந்திருந்தவர், இரவு ரோந்துப்பணியிலிருந்த போலிஸ்காரர். மனிதவள அபிவிருத்தியில் தேசிய இலக்கை எட்டுவதற்காக கலவியில் ஈடுபட்டிருக்க வேண்டிய இந்த நேரத்தில் இவர்களது வீட்டில் ஏன் எல்லா விளக்குகளும் எரிந்தபடியே இருக்கின்றன என விசாரிப்பதற்காக வந்திருந்தார். உடலும் மனமும் சோர்ந்துபோய் விட்டதால் தூங்கிவிட்டோம் என்றான் 1111 2222 3333 4444. எந்தவொரு நல்ல தேசபக்த குடிமகனும் இப்படியான பொறுப்பற்ற பதிலை கூறமாட்டான் என்று அந்த போலிஸ்காரர் சலித்துக்கொண்டார். சால்ஜாப்புகளை சொல்லி நேரத்தைக் கடத்தாதீர்கள். இதில் உங்கள் விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. அரசாங்கத்திற்கு சொந்தமான உங்களின் உடல்கள் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து நழுவி தண்டனைக்கு ஆளாகிவிடாதீர்கள் என்று எச்சரித்துவிட்டுப் போனார்

நேரம் இரவு மணி 1.33.
காவலர் வெளியேறியதுமே வீட்டுக்குள் நுழைந்தவர், தன்னைதேசிய பள்ளியறை பரிபாலன சேவா சமிதியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். திடகாத்திரமும் ஆரோக்கியமும் வனப்பும் நிறமும் அறிவுக்கூர்மையும் உள்ளவர்களாக குழந்தைகளை பெற்றெடுக்க வைக்கும்உத்தம சந்ததிதிட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அவர் வந்திருந்தார். இத்திட்டத்தில் முன்னோடியென அறியப்பட்டிருந்த இந்தியாவின்ஆரோக்கிய பாரதிஅமைப்பிடம் பயிற்சி பெற்று திரும்பியிருந்த அவர் இதற்கென இங்கு அரசின் அங்கீகாரம் பெற்றவர். பஞ்சாங்கத்தின்படி இன்றைக்கு 1.41 மணிக்கு 1111 2222 3333 4444 தன் மனைவி 1111 2222 3333 4444.1உடன் கூடுவதற்கு உகந்த நேரம் என்று கூறிய அவர் அதற்கான முன்னேற்பாடுகளை உடனே தொடங்கும்படி ஆணையிட்டார். கலவி செய்வதற்கான கால அட்டவணையைக்கூட ஓர் அரசாங்கம் பிறப்பிக்குமா என்ற நினைப்பின்  அச்சத்தால் அவளது உடல் பலமுறை அதிர்ந்தடங்கியது. நட்டுநடு வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டும்... நான் பயிற்சி செய்து காட்டுவதைப்போல என் மேற்பார்வையில் கலவி செய்யுங்கள்என்று ஆணையிடுகிற ஒருவனை எதுவும் செய்ய முடியாமல் அவமானத்தில் குன்றிப்போகவா பிறந்தோம் என்கிற கேள்வியால் அந்தத் தம்பதியர் நிலைகுலைந்து கொண்டிருந்தார்கள்.

நேரம் அதிகாலை 3.31.
வீட்டை விட்டு கிளம்பியிருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் வாசலில் உள்ள பயோ மெட்ரிக்கில் இன்னமும் ரேகை பதிக்கவில்லை.
நேரம் அதிகாலை 3மணி 41 நிமிடங்கள் 01 நொடிகள்.
அலுவலகத்திற்கு பாதிவழியில் வந்துகொண்டிருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் ஏழாம் எண் சிசிடிவிக்கு இன்னமும் முகம் காட்டவில்லை.  
நேரம் அதிகாலை 3.59மணி.
அலுவலகத்தில் இந்நேரம் நுழைந்திருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் பயோ மெட்ரிக்கில் இன்னமும் ரேகை பதிக்கவில்லை.
நேரம் அதிகாலை 4.05 மணி.
அலுவலகத்தின் முதல் வேலையை இந்நேரம் தொடங்கியதற்கு அத்தாட்சியாக நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் காமியக்குடுவையை 1111 2222 3333 இன்னமும் காலி செய்யாமல் இருக்கிறார். தேசபக்தியை வெளிப்படுத்துவதில் 5 நிமிடங்கள் தாமதம்.
நேரம் அதிகாலை 4மணி 10நிமிடங்கள் 7 நொடிகள்.
1111 2222 3333 4444 இன்னமும் வேலைக்கு வராமலிருப்பது உறுதிசெய்யப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முன்னிட்டு அவரைத் தேடுவதற்கு உளவுப்படை முடுக்கிவிடப்படுகிறது.

நேரம் 5 மணி.
1111 2222 3333 4444 மற்றும் அவரது மனைவி 1111 2222 3333 4444.1 ஆகியோரது வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்திருக்கிறது போலிஸ்.

* உத்தம சந்தானத்திட்டத்தை பயிற்றுவிப்பதற்காக வந்திருந்ததேசிய பள்ளியறை பரிபாலன சேவா சமிதியைச் சார்ந்த சந்நியாசி டிரிபிள்ஸ்ரீ குருஜியின் குறியை ஒட்ட அறுத்து காக்காவுக்கு வீசியது

* ‘அறிவியலுக்குப் புறம்பான, உலகத் தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைக்கு எதிரான புதிய வேலைநாளை ஒழித்துக்கட்டுவோம். அளப்பரிய தியாகத்தால் ஈட்டிய எட்டுமணி நேர வேலை எட்டுமணி நேர ஓய்வு எட்டுமணி நேர உறக்கம் ஆகிய உரிமைகளை மீட்டெடுப்போம், பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக, சம்பளமில்லா கூலிகளாக மாற்றும் பழமைவாதத்தை முறியடிப்போம்- என்கிற சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் சட்டவிரோதமாக தயாரித்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது.

* புதிய ஆட்சியின் மோசடித்திட்டங்களை விமர்சித்து டைரி எழுதியது
 - ஆகிய தேசவிரோதக் குற்றங்களுக்காக அவர்களிருவரும்என்கவுண்டரில்சுட்டுக் கொல்லப்படுவது தான் இந்தக் கதைக்கு இயல்பான முடிவாக இருக்கமுடியும். ஆனால் தடதடவென நெருங்கிவரும் பூட்ஸ் சத்தம் கேட்டு வீறிட்டழும் இந்தக் குழந்தையை என்ன செய்யலாம்?


***

நன்றி : விகடன் தடம் , ஆகஸ்ட் 2017

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...