வாழ்வின்
தொடக்கத்திலிருந்து மரணம் வரையிலும்
எண்ணற்ற
குறுக்குச்சாலைச் சந்திப்புகள்
எந்தப்
பாதை வித்தியாசமானதாயிருக்குமோ
அந்தப்
பாதையில் நடப்பதற்கு நான் முற்படக்கூடும்…
- பஞ்சாப்பின் புரட்சிகர தலித் கவிஞன் சாந்த்ராம் உதாசி எழுதிய ‘என் மரணத்தின்போது அழாதீர்கள்’ என்ற பாடலின் இந்த இறுதிவரிகள்தான் தோழர் நன்மாறனின் வாழ்வுக்கும் சாவுக்கும் மிகப்பொருத்தமானவை. சமூகத்தில் நிலவிடும் ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றை நிலைநிறுத்துவதற்கான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து சமரசமற்றுப் போராடுவதற்கு இட்டுச் செல்லும் பாதை எதுவோ அதுவே தன் காலத்தின் வித்தியாசமான பாதை என்பதை உற்றுணர்ந்து அதையே தேர்ந்துகொண்டவர் நன்மாறன்.
நாடு விடுதலையடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, குஞ்சரத்தம்மாள் – வே.நடராசன் தம்பதியரின் மகனாகப் பிறந்த இராமலிங்கம் பின்னாளில் நன்மாறனாக மதிப்பையும் புகழையும் பெற்ற வரலாறானது தமிழ்ச்சமூகம் அடைந்துள்ள உயரங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பில் வேர்கொண்டுள்ளது. தந்தையின் வழியே இளவயதிலேயே மார்க்சீயத்தை ஏற்றுக்கொண்ட நன்மாறன், வாழ்வாதாரத்திற்கு பார்த்துவந்த நடத்துனர் பணியை உதறிவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானவர். சொந்த வாழ்வை வளப்படுத்திக் கொள்வதா சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைப்பதா என்கிற கேள்விக்கு, சமூகநிலை மேம்படும்போது சொந்தவாழ்வும் வளப்படும் என்கிற பதிலினை தனது அரசியல் தொலைநோக்கிலிருந்து அவர் கண்டடைந்தார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்சி ஆகியவற்றின் மூலம் பொதுவாழ்வில் தான் ஆற்றிவந்த களப்பணிகளின் நீட்சியாக பத்தாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிய நன்மாறன், தனது 74வது வயதில் 28.10.2021 அன்று காலமாகிவிட்டார்.
நன்மாறனின் இறப்புச்செய்தி வெளியானதிலிருந்து சோர்வறியாத ஓர் அமைப்பாளராக, அரசியல் செயல்பாட்டாளராக, எவரும் மனத்தடையின்றி எளிதில் அணுகவாய்த்த தோழராக, மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக, சட்டமன்றவாதியாக அவர் ஆற்றிய பணிகளையும் அவரோடு பழகிய அபூர்வ தருணங்களையும் பலரும் ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள். பகிரப்படும் அச்செய்திகளுக்குள்ளிருந்து மேலெழும் நன்மாறனின் சித்திரமானது, அரசியலை பிழைப்புக்கான தொழிலாக கீழ்ப்படுத்தாமல், தான் நம்பும் கொள்கையின் வழியே சமூகத்தை அழைத்துச் செல்வதற்காக திடச்சித்தத்துடன் பணியாற்றும் நன்மாறன்களுக்காக இச்சமூகம் காத்திருக்கும் ஏக்கத்தை காட்டுவதாயிருக்கிறது. எளிமையும் பொதுவாழ்வில் நேர்மையும் அதிசய குணங்களல்ல; அவை மனித சுபாவம், கம்யூனிஸ்ட்களின் அடிப்படை குணம். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதானது, கம்யூனிஸ்டாய் வாழ்வதற்காகத்தான் என்பதற்கான விளக்கத்தை தன் வாழ்வின் வழியே நிறுவிச்சென்றுள்ளார் நன்மாறன்.
நன்மாறன்
எத்தகைய மதிப்புமிக்க அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதனை அவரது இறப்பு உலகறியச்
செய்திருக்கிறது. அவருக்கு இறுதிமரியாதை செலுத்த தமிழ்நாட்டின் முதல்வரும், அமைச்சர்களும்,
மாநிலம் முழுவதுமிருந்து இயக்கத்தோழர்களும், மதுரையின் பல்வேறு சமூக அடுக்குகளின் மக்களும்
சாரிசாரியாக வந்து குவிந்ததைப் பார்த்த பலரும் ‘சாவதென்றால் நன்மாறனைப் போல சாகவேண்டும்’
என்று பேசிக்கொண்டார்கள். நன்மாறனைப்போல் சாக, நன்மாறனைப் போல் வாழ்ந்தாக வேண்டும்.
ஒரே
மூச்சில் உடனடியாகச் சாம்பலாகிவிட
நான்
விரும்பவில்லை
எப்போதெல்லாம்
சூரியன் அஸ்தமிக்கின்றானோ
அப்போது
துண்டுதுண்டாக எனதுடலைத் தீயிட்டுக் கொளுத்துங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக