காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால்
1869 அக்டோபர் 2 தொடங்கி
1948
ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள்
அதிலும்
கவனமாக
1948
ஜனவரி 30 மாலை 4.59 மணி வரைக்குமாக மட்டும்
பேசுங்கள்.
4.59
மணியைத் தாண்டுகிறவர்கள்
காந்தியின்
சாவைப் பேசுகிறவர்களாகிவிடுவீர்கள்
அதாவது
காந்தியைப் பேசத் தொடங்கும் நீங்கள்
கோட்ஸேவைப்
பேசுகிறவர்களாகிவிடுவீர்கள்
நீங்கள்
கோட்ஸேவுடனும் நின்றுவிடப் போவதில்லை
அவனது
துப்பாக்கியை
துப்பாக்கியேந்தத்
தூண்டியவரைப் பற்றியெல்லாம்
விலாவாரியாக
பேசுகிறவராகிவிடும் நீங்கள்
ஒருகட்டத்தில்
சாவுக்கும்
கொலைக்குமான வேறுபாட்டை விளக்கப் பார்ப்பீர்கள்
காந்தியின்
ரத்தமும் உயிரும்
ஒரு
துப்பாக்கிக்கு எவ்வகையிலும் தேவைப்படாதவை
எனில்
உண்மையில்
கொன்றது தோட்டா அல்ல என்பீர்கள்
இது
ஒருவகையில்
முடிக்கப்பட்ட
கொலைவழக்கிற்கு மறுவிசாரணை கோருவதுதான்
பிறந்தநாளுக்காக
மாலையணிவிப்போர் வரிசையில்
முன்னேறிக்கொண்டிருக்கிறான்
கோட்ஸே
ஹே
ராம் என்பார் காந்தி
இம்முறை
அவன்
ஜெய்
ஸ்ரீராம் எனத் திருத்திச் சொல்லும்படி
சுடும்போது
நேரம் சரியாக ஐந்துமணியாகியிருக்கும்
நீங்கள் ஏன் உங்களது உரையை
1948
ஜனவரி 30 மாலை 4.59 மணியுடன் முடிக்கக்கூடாது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக