ஞாயிறு, ஜனவரி 1

ஏன் தோழர்களே இப்படி அடிபட்டுச் சாகிறீர்...? - ஆதவன் தீட்சண்யா


மக்களை வாட்டிவதைக்கும் மோடுமுட்டியின் செல்லாக்காசு திட்டம் தோல்வியடைந்துவிட்டதை அம்பலப்படுத்தி  31.12.2016 அன்று ஏ.டி.எம். முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய DYFI, CPIM தோழர்கள் பள்ளிக்கரணை போலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இவ்வேளையில் 2010 ஜூலையில் எழுதப்பட்ட இக்கட்டுரை சட்டென நினைவுக்கு வந்தது.
நடுரோட்டில் தள்ளி அடித்து உதைத்து மண்டையைப் பிளந்து குண்டுக்கட்டாகத் தூக்கி போலிஸ்காரர்கள் வேனுக்குள் வீசுகிறார்கள். அப்போதும்கூட கோஷம் என்ன வேண்டிக் கிடக்கிறது இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு? தூக்கிக்கிட்டுப் போனாலே அய்யோ அம்மா கொல்றாங்களே அய்யய்யோ கொல்றாங்களே என்று கூப்பாடு போட பழகியிருக்க வேணாமா இந்நேரத்தில்? அல்லது அப்படி தூக்கிவீசுவதை லைவ்வாக படம்பிடித்து திரும்பத்திரும்ப ஒளிபரப்பி அனுதாபத்தை கிளறிவிட்டு வாக்குகளாக மாற்றி ஆட்சியைப் பிடிக்கத் தோதாக ஏழெட்டு தொலைக்காட்சி குடும்பங்கள் அல்லது குடும்பத் தொலைக்காட்சிகளையாவது இந்த மார்க்சிஸ்ட்டுகள் கைவசம் வைத்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடுமே இல்லாத இவர்களை யார் போராடச் சொன்னது? ஊடகங்களை சரிக்கட்டி ஆதரவாக வைத்துக்கொள்ளத் தெரியாத இவர்கள் போராடுவதையெல்லாம் எப்படி ஒரு நியூஸ் என்று வெளியிட முடியும்? வெறும் நியூசென்சாக பாவித்து ஒதுக்கித்தள்ளத்தான் முடியும். (அதனால்தான் 12.07.2010 அன்று உத்தபுரம் தலித்துகள் மீதான கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மார்க்சிஸ்டுகள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றிய செய்தியை பல நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் வெளியிடவே இல்லை. வெளியிட்ட தினமணியோ பொதுமக்களுக்கு அவதி என்று புலம்பியிருக்கிறது. நாலைந்து சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அவர்களோடு அணிதிரண்டு வந்திருக்கிற ஆயிரக்கணக்கான மக்களையெல்லாம் பொதுமக்கள் என்று ஒப்புக்கொள்ள தினமணிக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது? அவர்கள் போராட்டக்காரர்கள். போராட்டக்காரர்களை பொதுமக்கள் என்று சொல்வது பத்திரிகை தர்மத்துக்கே இழுக்கென்று இந்த மார்க்சிஸ்ட்டுகள் எப்போதுதான் விளங்கிக் கொள்ள போகிறார்களோ? தெரியாவிட்டால் தினமணியிடமாவது கேட்டால், மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனம் பொதுவில் புணர்ந்து பொதுவிலேயே பெற்றெடுத்து பொதுவிலேயே வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிற அந்த பொதுஜனத்தின் புகைப்படத்தை வெளியிட்டுத் தொலைக்கும்).

அ தொடங்கி ஃ வரைக்கும் எத்தனையோ கட்சிகள் இருக்கு இந்தநாட்டில். அவையெல்லாம் இப்படி போராடிக்கொண்டா இருக்கின்றன? அவ்வப்போது அறிக்கைகள் விடுவது, ஆளுயர கட்அவுட்கள் வழியாக மக்களுக்கு காட்சி தருவது, பிரம்மாண்டமான விழா, மாநாடு, பேரணி என்று எதையாவது நடத்தவது என்று இருந்தாலே இங்கு போதுமானது. அல்லது தலைவருக்கு பிறந்தநாள் விழா எடுத்து தலைவர் பிறந்ததையே சாதனையாக முன்னிறுத்தியதையெல்லாம் இந்த மக்கள் ஏற்காமலா போய்விட்டார்கள்? அதையெல்லாம் விட்டுவிட்டு கட்சி என்றால் போராடத்தான் வேண்டும் என்று ஏன் இந்த மார்க்சிஸ்டுகள் மட்டும் தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? அவசியமேயில்லை. சுதந்திரத்துக்கப்புறம் காங்கிரஸ் கட்சி எதற்காவது போராடியிருக்கா? இல்லையே, திண்டுமீது ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு காரியக்கமிட்டி கூட்டம் நடத்தியே அந்தக் கட்சியெல்லாம் இத்தனைக்காலம் நீடிக்கவில்லையா? அதுகளைப் பார்த்து ஏன் அடக்கஒடுக்கமா கட்சி நடத்தத் தெரியவில்லை இந்த மார்க்சிஸ்டுகளுக்கு?

அதுவுமில்லாமல், போராடத் தேர்ந்தெடுத்த நேரமும் சரியில்லை. செம்மொழி மாநாட்டின் வெற்றியை எப்படியாவது கொண்டாடியே தீர்வது என்று முதல்வரும் அவரது குடும்பமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்களா கேவலம் தமிழர்களைக் காப்பாற்றுவார்களா? போதாக்குறைக்கு ஜெயலலிதா வேறு சும்மாயிருக்காமல், வரும் தேர்தலில் வெற்றிபெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றப் போவதாக அறிக்கைவிட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிட்டார். நாம் ஆட்சி நடத்துகிற லட்சணத்தால் அப்படியொரு நிலை உருவாகிவிடுமோ என்ற பயத்தில் அந்தக் கட்டிடத்தை இடித்து நிரவி கழுதைபூட்டிய ஏரால் உழுது எள் விதைப்பதா அல்லது வேறு எதுவும் செய்யலாமா என்று யோசித்து கடைசியில் அதை செம்மொழி மையத்திற்கான அலுவலகமாய் மாற்றுவதென்று தீர்மானித்த கருணாநிதி அதற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த வளாகத்திற்குள் புத்தகங்களை எங்கே வைப்பது பூச்செடியை எங்கே வைப்பது என்ற கொள்கை முடிவுகளையெல்லாம் ஒரு முதல்வர் என்ற முறையில் அவர்தானே எடுத்தாக வேண்டியுள்ளது? அப்புறம் மைனாரிட்டி திமுக அரசு என்று ஜெயலலிதாவால் நொடிக்கொரு தடவை இடித்துரைக்கப்படும் அவமானத்திலிருந்து மீள்வதற்காக எப்படியாவது மெஜாரிட்டியாக்கிக் காட்டுகிறேன் பார் என்று எல்லாக்கட்சியிலிருந்தும் பிள்ளை பிடிக்கிற வேலையையும், அதற்காக அவரைப் பாராட்டி நடத்தப்பட வேண்டிய விழாவுக்கான எற்பாடுகளையும் அவரே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படி அதிமுக்கிய வேலைகளில் இருக்கிற ஒரு முதல்வர் இந்த மார்க்சிஸ்ட்டுகளின் போராட்டத்தையோ தலித்துகளின் கோரிக்கைகளையோ உடனே எப்படி கவனிக்க முடியும்?

சரி ஆளுங்கட்சிதான் அப்படியென்றால் எதிர்க்கட்சி மட்டும் சும்மாவா இருக்கிறது? என்னதான் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தினாலும் கொங்குமண்டலம் இன்னமும் எங்கள் கோட்டைதான் என்று காட்டுகிற தேவை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. ஆகவே அது பிபிரரம்ம்மமாண்ண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பதில் முனைப்பாயிருந்தது. நேற்று நடந்த அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா உத்தபுரம் பிரச்னை பற்றியோ மார்க்சிஸ்டுகள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றியோ ஒரு சொல்லும் உதிர்க்கவில்லை. இப்படியான பிரச்னையிலெல்லாம் வாய் திறந்து ஆதிக்கசாதிகளின் மனஸ்தாபத்தை சம்பாதித்துக் கொள்ளவா அவர் பங்களாவில் ரூம் போட்டு யோசித்து கட்சி நடத்துகிறார்? காட்டில் ஆயிரம் மிருகங்கள் இருந்தாலும் எலிக்குப் பூனையும் பூனைக்கு எலியும்தான் எதிரிகள் என்று எல்லோருக்கும் தெரிந்த பழமொழிதான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொருந்துகிறது. இரண்டில் எது எலி எது பூனை என்பதில் மட்டும் அவ்வப்போது காட்சிப்பிழைகள் தெரியுமெயன்றி உண்மையில் இரண்டுமே ஒன்றுதான்.

போகட்டும், போராடித்தான் தீர்வோம் என்றால் எதற்காகப் போராடுவது என்பதில் ஒரு தெளிவு வேண்டாமா இந்த மார்க்சிஸ்டுகளுக்கு? போயும் போயும் சாதிப்பிரச்னைக்குள் தலையைக் கொடுக்கலாமா? அப்படித்தான் தலையைக் கொடுத்தார்களே, அதிலாவது கொஞ்சம் சாமர்த்தியத்தோடு ஆதிக்கசாதிக்காரர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்று தோன்றியதா இவர்களுக்கு? அங்கே போய் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம் என்று ஏன் அடம் பிடிக்க வேண்டும்? பிரச்னை வரும்போது “மண்ணா இருந்தா நிலம், ஒன்னா இருந்தா நலம்”னு எதையாவது உளறித் தள்ளிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் இந்த தலித்துகளை தலையில் தூக்கிவைத்து ஆடினால் மற்ற சாதிக்காரர்களின் மனம் எவ்வளவு கொந்தளிக்கும்? கடைசியில் இப்ப என்ன ஆச்சு? போலிஸ்காரன் உதைக்கிறான், அவனோடு போட்டோ எடுக்க வந்தவனும் உதைக்கிறான். காங்கியனூரில் உதைக்கிறான், செட்டிப்புலத்தில் உதைக்கிறான், மதுரையில் உதைக்கிறான், நாளைக்கு மன்னார்குடியிலோ மணப்பாறையிலோ கூட உதைவாங்க வேண்டிவரும்.

மற்ற கட்சிக்காரனெல்லாம் சட்டை மடிப்பு கலையாமல் மக்களுக்கு அருந்தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போது இந்தக் கம்யூனிஸ்டுகள் மட்டும் ஏன் ஊரூருக்கு உதை வாங்கிச் சாகவேண்டும்? அதுவும் யாரெல்லாம் உதைபடுகிறார்கள் என்று பாருங்களேன்? தொண்டர்கள் அடிஉதை வாங்கலாம். அதற்காகத்தான் அவர்கள் பெரும்பாலான கட்சிகளில் பயன்படுத்தப்படுவது மரபு. இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் என்னடாவென்றால் தலைவர்களும் உதைபட வேண்டியிருக்கிறது. சரி அதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். மற்ற கட்சிகளின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் எல்லாம் தொகுதிக்குள்ளேயே வராமலிருக்கும்போது இந்த கட்சிகளின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மட்டும் என்ன வெங்காயத்துக்கு தெருவுக்குத்தெரு வரவேண்டும்? நத்தையைப் தூக்கி மெத்தையில் போட்டாலும் அது செத்தைக்குள் நெண்டுவதற்குத்தானே ஓடும் என்று மற்ற கட்சிக்காரர்கள் இவர்களை இளக்காரம் பேசுவதைக் கேட்டாவது திருந்தக்கூடாதா? கத்த புத்தி செத்தாத்தான் போகும் என்று சொல்வது இவர்களுக்குத்தான் பொருந்தும்போல.

மக்களுக்கு எப்பவும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அதையெல்லாம் தீர்க்கப் போராடுகிறேன் என்று ஒரு மக்கள் பிரதிநிதி கிளம்பிவிடணுமா என்ன? காண்ட்ராக்ட் எடுத்தோமா கமிஷன் வாங்கினோமா என்று இருப்பதுதான் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகு. அல்லது கல்லூரி தொடங்கி பிற்காலத்தில் கல்வித்தந்தையாக முயற்சிக்கலாம். பினாமி பெயர்களில் சொத்து சேர்க்கலாம். கம்பனி தொடங்கலாம். ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப்போடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு லாட்டரியில் லட்சரூபாய் பரிசு கிடைத்தால் தங்கத்தில் திருவோடு செய்துகொள்வேன் என்று சொன்னாராமே யாரோ ஒரு பிச்சைக்காரர், அதைப்போல இந்தக் கம்யூனிஸ்டுகள் எங்களை எம்.பி, எம்.எல்.ஏ ஆக்கினாலும் தெருவில் கிடந்துதான் போராடுவோம் என்று சொன்னால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? காங்கியனூரில் லதா வயிற்றில் மிதி வாங்கியதைப் பார்த்தே நன்மாறனும் மகேந்திரனும் ரங்கராஜனும் சுதாரித்து மதுரையில் ஜகா வாங்கியிருக்க வேண்டாமா? இந்த மாதிரி அக்கப்போரெல்லாம் எதுக்கு என்றுதான் எஸ்சாயிட்டேன் என்று சந்தடிசாக்கில் கோவிந்தசாமி சொன்னாலும் சொல்வார். பார்த்துக்குங்க.

ஏதோவொரு சமூகக்கடமையை ஆற்றிவிட்டோம் என்று சுயதிருப்தி கொள்வதற்கும், பிரபலமாவதற்கும், பரபரப்பாக இயங்குவதாக காட்டிக்கொள்வதற்கும் இங்கு எவ்வளவோ எளிய வழிமுறைகள் இருப்பதை இத்தனை வருடங்களாக கட்சி நடத்தும் இவர்கள் இன்னமும் அறிந்திருக்கவேயில்லை. ஆளில்லாத களத்தில் அட்டைக் கத்தி வீசி வீராதி வீரன் வெண்ணெய்வெட்டி சூரன் என்று பட்டம் கட்டிக்கொள்ள துப்பில்லாத தலைவர்களை வைத்துக்கொண்டிருக்கிற இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருகாலத்திலும் விளங்கப்போவதேயில்லை.

கம்யூனிஸ்டா இருந்தால் போராடணும் என்பதும்கூட அவர்களது பழமைவாதத்தையே காட்டுகிறது. தானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லிக் கொள்கிற கருணாநிதி போராடிக்கொண்டா இருக்கிறார்? போலி கம்யூனிஸ்ட்கள் என்று சிலரை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதன் மூலமாகவே தங்களை உண்மையான கெட்டிச்சிவப்பு கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக்கொண்டிக்கிறவர்கள் கழுத்தில் சயனைடு குப்பியைக் கட்டிக்கொண்டா போராடுகிறார்கள்? பென்சில் சீவக்கூட இதுவரை பிளேடு எடுக்காதவர்களெல்லாம் இப்போது தாங்களும் மாவோஸ்ட்தான் என்று அலட்டிக்கொள்கிற புதுமோஸ்தரையும் கூட நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இது எதுவுமே இல்லாமல் இணையதளம் ஒன்றைத் தொடங்கி சகட்டுமேனிக்கு எல்லாரையும் விமர்சனம் செய்துவிட்டு தம்மை முழுப்புரட்சியாளர்களாக கருதிக் கொண்டிருக்கிற என்னைப் போன்றவர்கள் எத்தனை பேரில்லை? இவர்களில் யாரைப்போலாவது இருந்துவிட்டுப் போகாமல் எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் மறியல் உண்ணாவிரம் ஊர்வலம் என்று போரட்டம் நடத்தி புண்ணாக்கிக் கொள்கிறீர்கள் உடம்பை என்று இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்குமாறு எல்லாம் வல்ல மார்க்சையும் இன்னபிற நமது குலசாமிகளையும் வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் இப்படியென்றால் தலித்துகளின் தலைவர்களும் சும்மா இல்லை. சாதியை ஒழிக்க விரும்புகிற ஒருவர் தனது சொந்த சாதிக்கு துரோகம் செய்தாகணும் என்று ஆதிக்கசாதிக்காரர்களிடம் வெகுகாலமாக சொல்லிப் பார்த்தார்கள். இவங்க அறிவுரையை யாருமே கேட்கவில்லை. அந்த ஆதங்கத்தில் சரி, நம்ம வார்த்தையை நாமாச்சும் மதிப்போம்னு அவங்க அந்த வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். திருமாவளவன் இலங்கைத் தூதரகத்தை மூடச் சொல்லி குரல் கொடுப்பாரா அல்லது உத்தபுரம் பிரச்னையை தீர்க்காமல் சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை மூடச்சொல்லி குரல் கொடுப்பாரா? அவர் என்ன தசாவதானியா அல்லது சதாவதானியா ஒரே நேரத்தில் ஒன்பது பிரச்னைக்கு குரல் கொடுக்க? ஈழப்பிரச்னையில் அவர் டிராமாவளவனாகிவிட்டார் என்ற புலிக்குட்டிகளின் குற்றச்சாட்டியதிலிருந்து மீள்வதற்கு அவர் இப்படி என்னமும் செய்யத்தானே வேண்டியிருக்கிறது? தவிரவும் உத்தபுரம் தலித்துகள் தேவேந்திரர்கள். ஆதிதிராவிடருக்கான கட்சியை நடத்தக்கூடிய திருமாவளவன் தேவேந்திரர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அநியாயம்? நீங்கள் ஏன் தலித்துகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது என்று வன்னியர் சங்க ராமதாசிடமோ அல்லது சேதுராமனிடமோ கேட்பது எந்தளவிற்கு அபத்தமோ அதுபோன்றதுதான் இதுவும். அப்படியானால் கிருஷ்ணசாமியாவது தனது சொந்த ரத்தங்களுக்காக குரல் கொடுக்கலாமே என்ற கேள்வி வரலாம். தலித் விடுதலை என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த திருமாவளவன் எதற்கு உள்ளூரில் வம்பு என்று தமிழ் தமிழன் என்று பொத்தம்பொதுவாகப் பேசிக்கொண்டு சாமர்த்தியமாக கட்சி நடத்தும்போது நான் மட்டும் இளிச்சவாயனா இதிலெல்லாம் தலையிட என்பதுதான் அவரது இப்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவர் உத்தபுரம் பிரச்னையில் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. அங்கிருக்கிற தீண்டாமைச்சுவர் இயல்பான ஒன்றுதான் என்றும் அங்குள்ள ஆதிக்கசாதியினரை கண்ணியமானவர்கள் என்றும் அங்குள்ள எல்லாச் சாதியினரும் இணங்கி வாழ்வதாகவும் நற்சான்றுப் பத்திரம் வழங்கிய அவரிடம் மீண்டும் எதை எதிர்பார்க்கிறீர்கள்? உத்தபுரம் தலித்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை எதிர்த்து சீமான் நெடுமாறன் திருமா போன்றவர்ளை பேசவைக்க எளிதான ஒரு வழியும் இருக்கிறது. அதாவது முதலில் உத்தபுரத்தை பெயர்த்துக் கொண்டு போய் இலங்கையின் வடபகுதியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு, அங்குள்ள ஆதிக்கசாதியினரை சிங்களவர்கள் என்றும் தலித்துகளை தமிழர்கள் என்றும் ( சும்மா ஒரு பேச்சுக்குதான், மற்றபடி தலித்துகளை எவன் தமிழன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான்? ) சொல்லிவிட வேண்டும். அதற்குப்பிறகு பாருங்கள், கழுத்து நரம்பு புடைக்க இந்தத் தலைவர்கள் எப்படி பேசுவார்கள் என்று.

இந்தக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் உத்தபுரம் தலித்துகளின் பிரச்னை, மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் குறித்து கருணாநிதி வாய் திறந்திருக்கிறார். ஒரு பொய்யை இவ்வளவு விரிவாகச் சொல்ல முடியுமா என்ற வியக்கவைக்கும் வகையில் அவரது அறிக்கை பத்திரிகைகளில் நீண்டு நெளிகிறது. ஏன் இந்த ஆளின் மூக்கை கடித்தாய் என்று ஒருவரிடம் விசாரிக்கப்பட்டதாம். அந்த நபர் தன் மூக்கை தானே கடித்துக்கொண்டு என்மீது பழிபோடுகிறார் என்று பதில் சொன்னாராம் குற்றம்சாட்டப்பட்டவர். அதெப்படி ஒருவர் எப்படி தன் மூக்கை தானே கடித்துக்கொள்ள முடியும்? அவருக்கு அவர் மூக்கு எட்டாதே என்று அடுத்தக்கேள்வியில் மடக்கப்பார்த்தாராம் விசாரித்தவர். ஆமாம் ஐயா முதலில் அவருக்கு அவர் மூக்கு எட்டவில்லைதான், பிறகு ஸ்டூல் மீது ஏறிநின்று கடித்துக்கொண்டார் என்று பதிலுரைத்தாராம். இப்படித்தான் இருக்கிறது கருணாநிதியின் அறிக்கை. உத்தபுரத்தில் எந்தப் பிரச்னையுமேயில்லை, இந்த மார்க்சிஸ்டுகள் வீணாக தலித்துகளைத் தூண்டிவிட்டு மோதவிடுகிறார்கள். மதுரையில் அவர்களை போலிஸ் தாக்கவேயில்லை, தடியடியே நடத்தவில்லை என்றெல்லாம் வெகுசரளமாக பொய்யுரைத்திருக்கிறார். தடியடியும் நடக்கவில்லை தாக்குதலும் நடக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சியினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் தங்களைத்தாங்களே தாக்கிக் கொண்டார்களா? கருணாநிதி தீக்கதிரை நம்பவேண்டாம், குறைந்தபட்சம் சன்/ சன் இன் லா தொலைக்காட்சியில் வெளியானதையாவது நம்பக்கூடாதா? உத்தபுரத்தில் எல்லாச்சாதியினரும் ஒற்றுமையாக வாழ்வதாகவும், தீண்டாமைச்சுவரை தான் இடித்துத் தள்ளிவிட்டதாகவும், ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சி திமுக அரசுக்கு கெட்டப்பெயரை உருவாக்கவேண்டும் என்ற உள்நோக்கோடு திட்டமிட்டே செயலாற்றுகிறதென்றும், தலித்துகளை தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கிறதென்றும் குற்றம்சாட்டி இருக்கிறார். திமுக அரசின் பெயரைக் கெடுக்க வெளியிலிருந்து யாரும் வரணுமாக்கும்? நல்ல தமாஷ்தான்.

சுவற்றில் 15 அடி மட்டும்தான் இடிக்கப்பட்டது. எஞ்சிய சுவர் இன்னும் இறுமாப்போடும் சாதித்திமிரோடும் செஞ்செவிக்க நின்று கொண்டிருக்கிறது. 15 அடியை இடித்து உருவாக்கப்பட்ட பாதையையும்கூட தலித்துகள் பயன்படுத்த முடியாதபடி அங்கு பதற்றமான சூழலை ஆதிக்கசாதி வெறியர்கள் தொடர்ந்த உருவாக்கியுள்ளனர். தலித்துகள் பகுதியில் நிழற்குடை அமைக்கத் தேவையான தொகையை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கிய பின்னும் அதை நிறைவேற்ற மறுக்கிறது மாவட்ட நிர்வாகம். அரசமர வழிபாட்டுரிமையும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இப்படி எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தலித்துகள் நிம்மதியாக இருக்கிறார்கள்... மற்ற சாதியினரெல்லாம் அவர்களோடு கொண்டான் கொடுத்தான் உறவோடு இருக்கிறார்கள்... என்ற ரீதியில் அவர் உண்மைகளைத் திரித்து விஷமத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பொறுத்திருங்கள் நண்பர்களே, உத்தபுரம் என்ற கிராமமும் மதுரை என்ற நகரமும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிடையாது என்ற அறிக்கையை அவர் நாளை வெளியிடக்கூடும்.

(இடதுசாரிகளை - குறிப்பாக- மார்க்சிஸ்ட் கட்சியைத் தாறுமாறாக தாக்கவேண்டும் என்று இணையதளங்களில் வளர்த்தெடுக்கப்படும் மரபுக்கியைந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது ) 


சனி, டிசம்பர் 31

கரீம் கோருவது வக்கணையான பதில்களையல்ல, மாற்றத்தை -ஆதவன் தீட்சண்யா

தோழர் அ.கரீம் அவர்களின் "தாழிடப்பட்ட கதவுகள்" சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

இந்த முன்னுரையை எழுதத் தொடங்கும் இவ்வேளையில், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இருந்து வெளியாகிவரும் செய்திகள் உலகெங்கும் மீண்டுமொரு முறை இஸ்லாமிய வெறுப்பை பரப்புவதற்குரிய கெடுவாய்ப்பை வழங்கியுள்ளன. கிருஸ்துமஸ் கால கொண்டாட்டங்களுக்காக அந்நகரில் கூடியிருந்த சந்தைக்குள் கனரக லாரி ஒன்றை தறிகெட்ட வேகத்தில் ஓட்டிய ஒருவர் 12 பேரின் உயிரைப் பறித்ததோடு பலரை படுகாயப்படுத்தியுமிருக்கிறார். இந்த பயங்கரவாதச் செயலில் சம்பந்தப்பட்டவர் என்று அகதிநிலை கோரி வந்த பாகிஸ்தானியர் ஒருவர் எடுத்தயெடுப்பில் கைதுசெய்யப்பட்டார். பிறகு அவர் தவறாக அடையாளம் காணப்பட்டவர் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய துனிஷியாவைச் சார்ந்த ஒருவர் தான் உண்மையான குற்றவாளி என்கிற செய்தி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பெயரால் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் தமக்கும் தமது மார்க்கத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை ஜெர்மானிய இஸ்லாமியர்களும் அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் நம் காலத்தின் அணுகுண்டு இஸ்லாம் என்பது போன்ற வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. இஸ்லாமியர் மீதான ஒரு தாக்குதல் பரவலாக நடத்தப்பட வேண்டும்  என்கிற விஷமம் தூண்டப்படுகிறது. ஒரு நபர் அல்லது ஒரு குழுவின் நடவடிக்கைக்கு ஒரு மதத்தவர் அனைவரையும் பொறுப்பாக்குவதும் அதன் பேரில் தாக்குவதும் தண்டிப்பதும் வெறுத்தொதுக்குவதும் எவ்வகையில் நியாயம்? பெர்லினிலிருந்து எழும் இதே கேள்வியைத்தான் கோவையிலிருந்து தோழர் கரீம் தமது கதைகளின் வழியே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திரும்பத்திரும்ப எழுப்பி வருவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் கரீமின் கதைகள் இந்தக் கேள்விக்கும் அப்பால் ஊடுருவிப் போகின்றன.

சிக்கல் சிடுக்காகவும் கோணல்மாணலாகவும் வரிசைக்குலைந்தும் போயிருக்கின்ற அன்றாட நடப்புகளுக்குள் ஒப்புமை கொண்டிருக்கின்ற புள்ளிகளை இணைக்கும் போக்கில் அல்லது ஒன்றேபோல் தோன்றுகின்றவற்றுக்குள் இருக்கின்ற தனித்துவங்களைப் பகுக்கும் போக்கில் கரீமின் கதைகள் உருவாகுகின்றன. இஸ்லாமியருக்கு எதிராக காவி பயங்கரவாதிகளால் நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வெறுப்பரசியல் கோவைக்குள் எப்படி பரவியது, அதன் பின்னே இருந்த சக்திகள் எவை, அவற்றின் நோக்கம் மற்றும் விளைவுகள் என்ன என்பதையெல்லாம் பாதிக்கப்பட்டவரின் அகவோட்டத்திலிருந்து முன்வைக்க இக்கதைகள் முயற்சிக்கின்றன.

குடிப்பரம்பல், குடும்ப அமைப்பு, உறவுமுறைகள், சமூக நிறுவனங்கள், வசிப்பிடம், வாழ்வாதாரம், வாழ்க்கைவட்டச் சடங்குகள், தொழில் மற்றும் வணிகம், உழைப்பு, இறைமார்க்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றினூடாக கோவையில் இஸ்லாமியர் குறித்த ஒரு நிறைவடைந்த சித்திரம் கதைகளின் வழியே நமக்கு கிடைக்கிறது. கோட்டைமேட்டின் மக்கள்தொகையில் 80 சதமானோர் இஸ்லாமியர் என்றபோதிலும் இறைமார்க்கம் ஒன்றைத் தவிர பிற யாவற்றிலும் யாவரும் இணங்கி வாழ்ந்த காலமொன்று அங்கு இருந்திருக்கிறது. கோட்டைமேடு, பெரிய கடைவீதி, உக்கடம் போன்ற பகுதிகளின் நடைபாதை வியாபாரிகளில் பெரும்பாலோர் பொருளாதார வலுவில்லாத மிகவும் அடிநிலை முஸ்லிம்கள். இவர்களையொத்த பிற மதத்தவரும் அதிகப்படியான முதலீடு தேவைப்படாத இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கிடையில் வியாபாரரீதியாக போட்டி பொறாமை இருந்துவந்த போதிலும் அது இணங்கிவாழ்வதற்கு ஒருபோதும் தடையாக இருந்திருக்கவில்லை. ஆனால் இந்த ஒற்றுமையில் கோடாலி பாய்ச்சும் கெடுநோக்கில் அங்கு காவி பயங்கரவாதம் ஊடுருவியதை அதற்கேயுரிய பதைப்போடு பேசுகின்றன கதைகள். 

அசீமானந்தா, நாடு முழுவதும் நடந்த பல்வேறு பயங்கரவாத அழிவுகளில் தொடர்புடைய காவி பயங்கரவாதி. அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக ராமகிருஷ்ணா மடத்துக்காரர்கள் விவேகானந்தரை சாதுபோல சித்தரித்து பரப்பிவிட்டதாக நொந்துகொள்ளும் அவர், பிறமதத்தவரை வெறுப்பதற்கான ஆதர்சத்தை தான் விவேகானந்தரிடமிருந்தே பெற்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். உலக மக்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளே என விளித்தவர் என்று காட்டப்பட்ட விவேகானந்தரை துருப்புச் சீட்டாக வைத்து காவிபயங்கரவாதிகள் இளைஞர்களிடையே ஊடுருவுகிறார்கள். பின் அப்பேர்ப்பட்டவரே பிறமதத்தவரை வெறுத்தவர்தான் என்பதாக கூறி அவர்கள் இந்துத்துவ வெறியை ஏற்றுகிறார்கள். கோவையிலும் அதுதான் நடந்திருக்கிறது. விவேகானந்தரும் விளையாட்டுத்திடல்களும் விநாயகர் சிலையும் யோகாவும் உடற்பயிற்சியும் ஆன்மீகமும் காவிபயங்கரவாதிகளால் வெகு லாவகமாக கையாளப்பட்டதற்கு கரீமின் கதைகள் சாட்சியங்களாகின்றன.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு ஏற்றதோர் அரசு இயந்திரம் இங்கு இன்னும் உருவாகவேவில்லை. அவ்வாறு உருவாகாமல் போவதற்கான அடிப்படைக் கோளாறு அரசியல் சாசனத்திலேயே ஒருவேளை இருக்கிறதோ என்கிற சந்தேகமும் பலரால் எழுப்பப்பட்டே வருகிறது. அரிதான சில சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலான நேரங்களில் அரசு இயந்திரமானது மேட்டுக்குடி நலன்களையும் பெரும்பான்மை மதவாதத்தையும் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவே இயங்கிவருகிறது. நடுநிலையாக இயங்கி பிரச்னைகளை கையாள்வதற்கு பதிலாக அது ஒரு தரப்பாக மாறி நீதியின் இடத்தில் தன் சொந்த நலன்களை நிரப்பி அதிகாரத்தால் நிலைநிறுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக நாம் கோவையில் காவல்துறையின் செயற்பாடுகளை கூறமுடியும். 

* பாபர் மசூதியை தகர்ப்பதற்கு காவி பயங்கரவாதிகள் மேற்கொண்ட முன்தயாரிப்புகளினூடாக நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறுப்பரசியலை காவல்துறை தடுக்காமல் போனதற்கு காரணம் அதற்குள் இயல்பாகவே ஊறிப்போயிருந்த இந்துத்துவ சார்புநிலை. மசூதி தகர்ப்புக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்திற்கு ஏற்பட்டிருந்த பாதுகாப்பற்ற மனநிலையையும் துயரத்தின் கொந்தளிப்பையும் ஆற்றுப்படுத்துவதற்கு பதிலாக காவல்துறையானது அவர்களை தனிமைப்படுத்தவும் ஒடுக்கவுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அது காவி பயங்கரவாதிகளோடு கைகோத்தது.

* பெரும்பாலும் இஸ்லாமியரும் அவர்களோடு கலந்திருந்த பிறருமான நடைபாதை வியாபாரிகளுக்கும் அவர்களை மிரட்டி தினசரி மாமூல் வசூலித்து வந்த காவல் துறையினருக்கும் இடையே நீண்டநாட்களாக மோதல் இருந்து வந்திருக்கிறது. இந்த அபகரிப்புக்கு எதிராக பல்வேறு அமைப்புகளில் அவர்கள் அணிதிரண்டதை காவல்துறையினர் ‘மாமூல் வாழ்க்கைக்கு’ விடப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொண்டு கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாமல் பணியவைக்கும் தாக்குதல்களை நடத்திவந்திருக்கின்றனர்.

* செல்வராஜ் என்கிற காவலர் ஒரு கிறித்துவர். இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் அவர் கொல்லப்படுகின்றார். கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை இஸ்லாமியர்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் செய்தனர். ஆயினும் ‘போலிஸ் மேலயே கை வச்சிட்டு நீங்க நிம்மதியா இருந்துடுவீங்களா’ என்று முண்டா தட்டுகிற மூன்றாம்தர தமிழ்ச்சினிமா வில்லன்களைவிடவும் நயத்தக்க பண்பை காவல்துறையால் வெளிப்படுத்த முடியவில்லை. செல்வராஜ் கொல்லப்பட்டதை தனிப்பட்ட மோதலின் விளைவாக கருதாமல் இஸ்லாமியர்களின் கூட்டுக்குற்றமாக கருதி கூட்டுத்தண்டனை வழங்க வன்முறையை கையிலெடுத்தனர் காவல்துறையினர்.   ‘பாயன்கள்’ ஒரு இந்து போலிஸ்காரரைக் கொன்றுவிட்டதாக பொய் சொல்லி  அவர்களோடு காவி பயங்கரவாதிகளும் சேர்ந்தனர். காக்கிகளும் காவிகளும் சேர்ந்து கோவையில் நடத்திய வெறியாட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றார்கள். இஸ்லாமியரின் வீடுகள், கடைகள், தொழில்நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின் தீக்கிரையாக்கப்பட்டன.

* கோவை குண்டுவெடிப்புக்கும் கூட ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் பொறுப்பாக்கி தண்டிக்கும் போக்கினையே காவல்துறையும் அரசு நிர்வாகமும் கைக்கொண்டன. இதே நிலைப்பாடுதான் சமூகத்தின் பொதுக்கருத்தாக வளர்தெடுக்கப்பட்டது. மனித உரிமை, சிறுபான்மையினரின் நலன் என்றெல்லாம் பேசுகிறவர்கள்கூட ‘பாயன்களை’ ஒரு கட்டுக்குள் நிறுத்த என்னமும் செய்துதானாக வேண்டும் என்று காக்கி மற்றும் காவி பயங்கரவாதத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்து கருத்து சொல்லுமளவுக்கு நிலைமை இந்துத்துவமயமாகிப்போனது. 

- கரீமின் கதைகள் வழியே நாம் அறிய நேரும் கோவையின் 1990களின் நிலைமை 2016 ஆம் ஆண்டிற்கும் பொருந்துவதாக உள்ளது அவமானம்தான். அதிகாரப் போட்டி, நிதிவசூல், பாகம் பிரிப்பதில் தகராறு, பரபரப்பை உருவாக்கி கவனம் பெறுவது போன்ற தனிப்பட்ட பிரச்னைகளுக்காக காவி பயங்கரவாதிகள் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்வதும் ஆளையே தீர்த்துக்கட்டுவதும் பிறகு அந்தப் பழியை இஸ்லாமியர் மீது சுமத்தி கலவரம் செய்வதும் அதிகரித்து வருகிறது. 2016 செப்டம்பரில் கோவையில் சசிகுமார் என்கிற காவியிஸ்ட் கொல்லப்பட்டதற்கும்கூட இதைவிட பெரிய காரணங்கள் இருந்துவிடப் போவதில்லை. ஆயினும் இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டு காவி பயங்கரவாதிகள் இஸ்லாமியருக்கு எதிராக கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை நடத்திமுடித்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் சொத்துகளை சூறையாடி அழித்ததோடு அவர்களது தொழில் மற்றும் வணிக நிறுவனங்களையும்  கொள்ளையடித்திருக்கிறார்கள். பிரியாணி அண்டாவைக்கூட விட்டுவைக்காமல் தூக்கிப் போயிருக்கிறார்கள். இந்த அட்டூழியங்கள் யாவும் காவல்துறையினரின் முன்னிலையில் தான் நடந்தன என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. பத்திருபது பேர் கூடுகிற ஒரு சம்பிரதாயப் போராட்டத்தைக்கூட தடியடி நடத்தி கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலைப்பதில் முனைப்பாய் இருக்கிற காவல்துறை சகல அதிகாரங்களும் ஆயுதங்களும் கைவசமிருந்தும்கூட ஏன் அமைதிகாத்தது? இந்தக் கேள்விக்கான பதிலை கரீமின் கதைகளுக்குள் அங்குமிங்குமாக கண்டடைய முடிகிறது.

இப்போது நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்விகள் சிலவுண்டு.
* ஒரு குறுகிய கால அவகாசத்திற்குள் ஒட்டுமொத்த சமூக வாழ்வையும் சில தினங்களுக்கு முடக்கிப்போடுமளவுக்கு காவி பயங்கரவாதிகள் பலமடைந்திருப்பது எவ்வாறு?
* உண்மையில் கோவைப்பகுதி எந்த கருத்தியல் செல்வாக்கின் கீழ் இருக்கிறது?
* உயர்சாதியினரின் ஆதிக்கத்தை மீட்டெடுப்பதற்காக இயங்கும் காவியமைப்புகளின் அடியாள்படையாக இடைநிலை மற்றும் அடிநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்கள் ஏன் அணிதிரள்கிறார்கள்? 
* ஒரு தொழில் நகரம் என்றறியப்பட்ட அங்கு தொழிலாளி வர்க்க அமைப்புகள் தான் இருக்கின்றனவேயன்றி தொழிலாளி வர்க்க அரசியல் நடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உண்மைதானா?
*  காவிகள் நடத்தும் ஒரு கலவரத்திற்கும் மறு கலவரத்திற்கும் இடைப்பட்ட காலத்தை தான் ‘அமைதிக்காலம்’ என்று நாம் தப்பர்த்தம் கொண்டிருக்கிறோமா?
* கோவைப்பகுதியில் காவி பயங்கரவாதம் நடத்திவரும் கலவரங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கதைகளை ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், சம்சுதீன் ஹீரா, கரீம் போன்ற இஸ்லாமியத் தோழர்களே ஏன் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்? இஸ்லாமியரல்லாத இலக்கியவாதிகளை இக்கலவரங்கள் பாதிக்கவில்லையா?  அல்லது இதிலொரு தரப்பாக இயங்குமளவுக்கு அவர்களின் மனம் இந்துமயமாகிக் கிடக்கிறதா?
* காவி பயங்கரவாதம் முழுவீச்சில் அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இயங்கிவரும் இக்காலத்தில் அதை  எதிர்கொள்ளவும் தடுக்கவும் உருப்படியாய் ஏதேனும் வேலைகள் நடக்கிறதா?   

இக்கேள்விகளுக்கான பதிலை நான் வாயடைத்துப்போகுமாறு விளக்கங்கள் வியாக்கியானங்களுடன் சொல்லக்கூடிய பலரை நானறிவேன். ஆனால் கலவரக்காலங்களில் உயிருக்கு அஞ்சி, பூட்டப்பட்ட வீட்டின் இருளுக்குள் வெறும் முருங்கைக்கீரையை அவித்துண்டு நாட்கணக்கில் மறைந்திருக்க நேரும் ஒரு சமூகத்தவராய் இருந்து கரீம் கோருவது வக்கணையான பதில்களையல்ல, மாற்றத்தை. 

இயலாமையுணர்வின் உளைச்சலோடு
ஆதவன் தீட்சண்யா
27.12.2016,  ஒசூர்.






புதன், நவம்பர் 30

அமெரிக்கத் தேர்தல்: சில அவசரமான அவதானிப்புகள் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

காலம் இதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை தோழர் ந.முத்துமோகன் அவர்கள் வாசிப்பதற்காக அனுப்பியிருந்தார். முக்கியத்துவம் கருதி இங்கு பகிரப்படுகிறது. 


அமெரிக்கத் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட  அடுத்தநாள் காலையில் இப்பதிவை கணனியில் எற்றுகிறேன். இக்கட்டுரையை நாலாண்டு கழித்து அதாவது டிரம்பின் ஆட்சியின் முதல் தவணைக்குப்பின் படிக்கும்போது இங்கே சொல்லப்பட்டவை கோமாளித் தனமானவையா அல்லது தீர்க்கதரிசனமானவையா என்பது  டிரம்பு நடந்துகொள்ளும் விதத்திலும் அவரை சரித்திரம் எப்படி விசாரணை செய்கிறது என்பதிலும் பொறுத்திருக்கிறது.
            
டொனால்ட் டிரம்ப்பின்  வெற்றி அறிவிக்கும் முக்கிய  செய்தி: அமெரிக்கத் தலைவர் பதவிக்கு முன் அனுபவம், அறிவு, மற்றும் தகுதிகள் போன்றவை தேவை இல்லை; பணமும், சொல்வாக்கும், வீறாப்பும் எளியவரைக் கேலி செய்யும் அடாவடித்தனமும், முக்கியமாக  ஊடங்களின் தலைப்புச்செய்திகளை வசியவைக்கும் தன்மையும் இருந்துவிட்டால், அமெரிக்கக் கனவை ஒரு வெள்ளை இனத்தவர் சாதித்துவிடலாம். ஈழப் பெற்றொரின் அவ்வையார் தன்மையான  "பிள்ளையே கவனமாகப் படி" என்ற வார்த்தைகளுக்கு, மோடி செல்லாது என்று அறிவித்த 500, 1000 ருபாய் நோட்டுகள் போல், இனி அதிக மதிப்பிருக்காது.

ஓர் ஆபிரிக்க அமெரிக்கரின் ஆட்சிக்குப்பின் வெள்ளையரின் பேரினவாதத்தை ஆதரிக்கும் கே.கே.கே.யின் ஆசீர்வாதத்துடன்  பதவிக்கு வருவது, ஒபாமாவின் தேர்வு உருவாக்கியதாகச் சொல்லப்படும் பின்-இனஞ்சார்ந்த (post racial) சமுதாயம் வெறும் கற்பிதம் என்பதை உணர்த்துகிறது. ''மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக்குவோம்`` என்ற இவரின் தேர்தல் பிரசாரத்தில் பொதிந்துகிடக்கும் உப பிரதி: அமெரிக்காவை மறுபடியும் வெள்ளையர்  கைக்குக்  கொண்டுவருவதே.

டிரம்ப் எற்படுத்திய நவீன கட்டுக்கதைகளில்  ஒன்று, இவர் தன்னை உழைக்கும் வர்க்கத்தினரின் வேட்பாளராகவும், ஹிலரியை தற்போதைய ஆதிக்கத்தரப்பின் (The Establishment) வேட்பாளராகவும்  சித்தரித்தே. குடியேறிகள், அரசின் நல உதவி பெறுகிறவர்கள்,  பிரத்தியேகமான  சலுகைகளை அனுபவிக்கும் சிறுபான்மையினர், கூட்டு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பாதகமாகத் திணித்த ஒப்பந்தங்களுக்கு எதிரான வேட்பாளராகவும், கடினமாக வேலைசெய்யும் அமெரிக்க  உழைப்பாளிகளை  பாதுகாக்கும் நாட்டுப்பற்றுமிக்க வேட்பாளராகவும், அவர்களில் ஒருவராகவும் தன்னை டிரம்ப் அடையாளப்படுத்திக்கொண்டார். இது உண்மையல்ல. இவரும் ஆதிக்கத்தரப்பைச்  சேர்ந்தவர். துருப்பிடித்த பகுதி (Rust Belt) என்று அழைக்கப்படும் ஊர்களிலிருக்கும் டிரம்பின்  ஆதரவாளர்கள் இவர் நடத்தும் உண்டுறை விடுதியில்  ஒரு நாள் தங்க  இவர்களின் ஒரு மாதச் சம்பளம் போதாது. இந்தத் தொழிலாளர்களுக்கும் டிரம்புக்கும் இடையே காணப்படும் வர்க்க இடைவெளி, தலைமன்னாரையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்கும்  பாக்கு நீரிணையைவிட விரிவானது, அழமானது.  இவர் அமைச்சரவையில் நியமனமாகப்போகும் பெயர்களைப் பாருங்கள். எந்த சகதியை வடிகட்டவேண்டும் (drain the swamp) என்று சொன்னாரோ அதே வாஷிங்டன் என்ற சகதியில் இருந்து வந்தவர்கள்.

டிரம்ப் பற்றிய இன்னுமொரு கட்டுக்கதை: வெள்ளை இன உழைப்பாளர் வர்க்கத்தின் கோபமே இவரின் வெற்றிக்குக் காரணம் என்பது. புள்ளிவிபரங்களை சற்று ஊன்றிப் படித்தால்  கிடைக்கும் செய்தி சற்று வேறானது. இது தொழிலாள வர்க்கம் கொதித்து ழும்பி நடத்திய புரட்சி அல்ல. ஆண்டுக்கு $250,000 மேலாகச் சம்பளம் வாங்குவோரில் 48 வீதத்தினரும் டிரம்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதேபோல் வருடத்திற்கு  $30,000 கீழ் ஊதியம் பெறுகிறவர்களில் 53 வீதம் ஹிலரி கிலிண்டனுக்குத் தங்கள்  சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்கள். மற்றும் 49வீத வெள்ளை பட்டதாரிகள் வாக்கு டிரம்புச் சென்றிருக்கிறது. இந்த புள்ளிவிபரம் தரும் இன்னும் ஒரு விநோதமான செய்தி. பெண்ணின வெறுப்பை தன் வாழ்நாள் சாதனையாக்கிய டிரம்புக்கு வெள்ளைப்பெண்களில் 53வீதம் வாக்கைப் போட்டார்கள். வெள்ளையர்களின் சிறப்புரிமை, அந்த இனத்தின் தனிச்சலுகைகள் இந்த வெள்ளைப்பெண்களுக்கு முக்கியமாகப்பட்டது. பெண்னிய உரிமைகள் அல்ல. கருக்கலைப்பு பற்றிய டிரம்பின் கல்தோன்றா மண்தோன்றாக் காலத்து பிற்போக்கான கருத்துகளைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மக்கள் கணிப்பியலில் ஆயிரம் ஆண்டுகாலத்தினர் (millennial) என்று அழைக்கப்படும்  இளம் வயதினர்களில் பெரும்பான்மையினர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தது இந்த புள்ளிவிபரம் தரும் ஆறுதலளிக்கக்கூடிய வாசிப்புகளில் ஒன்று.

டிரம்பின் சாதனைகளில் ஒன்று, பின்-உண்மை அரசியலை (post-truth politics) பொது சொல்லாடலில் புகுத்தியது. இந்த அரசியல் தகைமையற்ற கூற்றின் ஆக்கியோன் டிரம்ப் இல்லை. ஆனால் இந்த கருத்தாடலை தீவிரப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். உண்மைகள், சான்றுகள்,  உறுதிசெய்யக்கூடிய நிகழ்பாடுகள் ஒன்றுமே இப்போது முக்கியமல்ல. வாய்க்கு வந்தபடி சொல்லவேண்டியது, அது உண்மையா பொய்யா என்ற கவலை இல்லை. ஹிலரி பொய்பேசுகிறவர், தார்மீகக் கோலானவர் என்றார். இவைகளுக்கான ஆதாரங்கள் ஒன்றுமே தரவில்லை.

"செய்யுளில் பிரசாரம் செய்யுங்கள், உரைநடையில் ஆட்சியை நடத்துங்கள்" என்று  படிப்பதற்குப் புத்திசாலித்தனமான ஆனால் நடைமுறைக்கு  அறவே உதவாத  வசனங்களை நியூ யோர்க் ஆளுநர் Mario Cuomo சொன்னதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் தன்னுடைய பிரசாரத்தை வசையில் தான் நடத்தினார். டிரம்ப் ஒரு சமவாய்ப்பு (equal opportunity) வசவாளர். பெண்கள் முதல் வலுதளர்ந்தோர் வரை இழிவாகப் பேசினார்.  அவருடைய வசை மொழிக்கு முன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருவள்ளுவர் போல் தெரிகிறார்கள். இந்தக் கீழ்த்தரமான,  கடுங்காரமான, பிறிதானவர்களை ( the other) குற்றம் சாட்டும் அரசியல் பிரசாரம் டிரம்பின்  தனி குத்தகை அல்ல. இதற்கு முன்பும் அமெரிக்க தலைவர் தேர்தலில்  காரசாரமான இன, மத வெறி பரப்புரை செய்யப்பட்டிருகிறது. அந்தப் பெருமை 1850 முதல் 1853 வரை குடியரசு அல்லது ஜனநாயக கட்சியைச் சேராத  அமெரிக்க தலைவராயிருந்த Millard Fillmore ச் சேரும். இவர் அங்கம் வகித்த கட்சியின் பெயர் The Know-Nothing Party. இவர்கள் இன்றைய கே.கே.கே. யின் முன்னோடிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவரின் கட்சியின் ஆதாரவாளர்கள் கிறிஸ்தவ சீர்திருத்தச் சபையைச் சேர்ந்தவர்கள். டிரம்பைப் போலவே இவர்கள், குடியேறிகள் அமெரிக்க கலாச்சாரத்தை தீட்டுப்படுத்துகிறார்கள் என்ற விஷத்தைப் பரப்பினார்கள்.  டிரம்புக்கு முஸ்லிம்கள் போல் இருவர்களுக்கு கத்தோலிக்கர். பாப்பாண்டவர் அமெரிக்காவை ஆட்கொண்டுவிடுவார் என்று பயம் இருந்தது. இன்று டிரம்ப்பின் சொல்லாடலில் காணப்படும் எல்லா அவதூறுகளும் இவர்களின் பிரசரத்திலும் காணலாம். "எல்லா மனிதர்களும் சமனானவர்கள்" என்று எங்கள் அரசியல் சாசனம் கூறுகிறது. இவர்களுடைய பார்வையில் "எல்லா மனிதர்களும் சமனானவர்கள், ஆனால் கறுப்பர்கள், கத்தோலிக்கர்கள், அன்னியர்கள் தவிர என்று ஆபிரகாம் லிங்கன் இவர்களின் மனப்போக்கை ங்கலாயித்திருந்தார்.

இலக்கியத்தில் எதிர்காலம் பற்றி  தீர்க்கதரினமான ழுத்துக்கள் உண்டு.  Franz Kafka நாஜிகளின் வாயுக்கூடங்கள் ( gas chambers) பற்றி முன் எச்சரிகை செய்தார். Orwell அவருடைய  1984  இல் மக்கள் வாழ்வில் எங்கும்  வியாபித்திருக்கிற சார்வாதிகார ஆட்சி எவ்வாறு ஒரு தனிமனிதனின்  ஆளுமையையும், சுதந்திரத்தையும் ஒருநாள் வன்முறையில் கட்டுப்பட்டுக்குக் கொண்டுவரும் என்று கற்பனை செய்தார். Philip Roth அவருடைய Plot Against Americaவில் யூத எதிர்ப்பாளர்கள் அமெரிக்க ஆட்சிக்கு வந்தால் எற்படும் விபரீதங்களை புனைகதையாக ழுதினார். ஆனால் டிரம்பைப் போல் அதிதீவிர தனித்தன்னாட்சியாளர் ஒருவர் உருவாகலாம் என்று முன்னுணர்வுடன் சொன்ன நாவல்   Sinclair Lewis வின்  It Can't Happen Here (1935).  இந்த நாவலில் ஒரு வல்லாண்மையாளர் (fascist) அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றினால் விளைவும் தாற்பரியங்களைக் கதையாகச் சொன்னார். அவர் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன் நாவலில் பதிவு செய்தது இன்று நிறைவேறியிருக்கிறது. இந்த நாவலின் கதாநாயகன் வின்ரிப்புக்கும் டிரம்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே ஆணவப்போக்குடையவர்கள். இரண்டு பேருக்கும் மெக்சிக்கர்களே எதிரி. வின்ரிப்பு அந்த நாடு மீது போர் தொடுத்தார். டிரம்ப் அந்த வேலையை இன்னும் செய்யவில்லை. நாலாண்டு காலம் இருக்கிறது. இவர்கள் பார்வையில் பெண்கள் இருக்கவேண்டிய இடம் அடுப்படி.  இந்த நாவல் பற்றி இன்னொரு இதழில் விரிவாக ழுதியிருக்கிறேன். இந்த நாவல் தரும் மறைமுகமான செய்தி: வல்லாண்மை அமெரிக்காவில் அமுலானால் அது அமெரிக்கத்தன்மையானது என்று அழைக்கப்படும் When fascism comes to America, they will call it Americanism.

மெக்சிகோ-அமெரிக்க  எல்லையில் மதில் எழுப்புவேன், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடைசெய்வேன் என்றெல்லாம் டிரம்ப் அவருடைய பிரசாரத்தில் கூறிய அடாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்று பதட்டத்துடன் இருப்பவர்கள் இரண்டு வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் : ஒன்று ஒபாமா மற்றது குவாந்தானமோ  பே (Guantanamo Bay), ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் இந்த தடுப்பு காவல் நிலையத்தை இழுத்து முடுவேன் என்றார் ஒபாமா. எட்டு வருடங்கள் கழித்து இன்னும் கைதிகள் அங்கே இருக்கிறார்கள்!

மக்கள் தேசிய விருப்புவாதம் உலகு எங்கும் காணப்படுகிறது. இன்று ஆட்சி நடத்தும் அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது எமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அமெரிக்காவில் டிரம்ப், துருக்கியில் Tayyip Erdoğan,  பிலிப்பின்ஸ் தீவுகளில் Rodrigo Duterte,  செக் குடியரசில்  Miloš Zeman,  ஹாங்கேரியில் Viktor Orban...  அதேபோல் அய்ரோப்பாவில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் எதிர் கட்சிகளைப் பாருங்கள்; அச்சம் இன்னும் அதிகமாகும்.  பிரான்சில் Marine Le Pen, ஒல்லாந்தில் Geert  Wilders,  ஆஸ்திரியாவில்  Norbert Hofer. இவர்கள் பரப்புரைக்கும் அதீத தேசியவாதம் தங்களுடைய நாடுகளுக்கேற்ற தன்மைகளைக் கொண்டிருந்தாலும் இந்தத் தலைவர்களை ஒன்றிணைக்கும் சாமச்சாரங்கள் உண்டு. குடியேறிகளைக் கட்டுப்படுத்தவேண்டும், அவர்கள்  தூய தேசிய அடையாளத்தை கறைபடுத்துகிறவர்கள்; இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள், ஆகையினால் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்; உலகமயமாக்கல் தேசிய அரசுகளின் இறையாண்மையை சிதைத்து விடுகிறது, எனவே சுதந்திர சந்தையைக் கட்டுப்படுத்தவேண்டும்... இவர்களின் ஒரே நோக்கம் அன்னிய தீய சக்திகளிடமிருந்து பழைய வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதே. சமத்துவ சர்வ தேச, பன்முக ஒழுங்கினை உருவாக்குவதைவிட, தத்தம் நாட்டுக் குடிமக்களின் தனிநிலைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். பிற நாடுகளுடன் தொடர்பைத் துண்டித்து ஒரு ஒதுக்குநிலையை விரும்புகிறார்கள். எதிர் உலகமாயக்குதலுக்கு இவர்கள் தரும் விடை பொருளாதார தேசியம்.

கடைசியாக, இதேபோன்று தாராளவாதம் மங்கி, இருள் ஓங்கிய நாஜி நாட்களில் Bertolt Brecht ஏழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. அவரின் கவிதையை உரைநடையில் தந்திருக்கிறேன். இவை நல்லுணர்ச்சி தரும் வாக்கியங்கள் அல்ல. ஆனாலும் வாசித்துப் பாருங்கள்: இந்த இருண்ட நாட்களில் பாட்டுப்  பாடலாமா? ஆம், பாடலாம். பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும், இருண்ட நாட்கள் பற்றி. 

திங்கள், நவம்பர் 28

வி.பி.சிங் நினைவாக - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான போரைத் தொடங்கியவன் நானே என்று நரேந்திர மோடி மார் தட்டிக் கொள்கிறார். கடந்த 70 ஆண்டுக் கால இந்திய நிர்வாகம் செயல்பட்டு வந்ததைப் பற்றியப் புலனாய்வைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அரசியலிலும் அரசாங்கத்திலுல் ஊழல்களும் இலஞ்ச விவகாரங்களும் இருந்தன என்பது உண்மைதான். ஆனால்  நேருவோ அவரது நெருக்கமான சகாக்களோ இலஞ்சம் –ஊழல் கறை படிந்தவர்களாகச் சொல்ல முடியாது. எனினும், அரசியலில் குடும்ப வாரிசு முறையை உருவாக்குவதும்கூட ஊழல்தான் என்றால்  நேருவும் மறைமுகக் குற்றவாளிதான். தமக்குப் பின் தமது மகள் இந்திரா காந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எதனையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை என்றாலும்,   அவர் யாரைத் தமது அரசியல் வாரிசாகக் கருதுகிறார் என்று பலமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழித்ததும், அவர் உயிரோடு இருக்கும்போதே இந்திரா காந்தியை அனைத்திந்தியக் காங்கிரஸின் தலைவராக்க இசைவு தந்ததும், இந்திரா காந்தி தேர்தல் ஜனநாயகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையைக் கலைப்பதற்காக மதவாத, சாதியப் பிற்போக்குச் சக்திகளுடன் கைகோர்த்ததை எதிர்க்காமலிருந்ததும், இந்திய   ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் மாபெரும் ஊழல் என்று கூறலாம். ஊழலும் இலஞ்சமும் காசு வாங்குவதில் மட்டும் இல்லை.

 நேருவுக்கு அடுத்தபடியாகப் பிரதமர் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி தனிப்பட்ட முறையில் அப்பழுக்கற்றவர்; அதேபோலத்தான் காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வகித்த  மொரார்ஜி தேசாயும்.
வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காக மதவாதத்தைப் பயன்படுத்துவதும் ஊழல்தான் என்றால்,  அந்தக் குற்றச்சாட்டு இந்திரா காந்திக்குப் பொருந்தும். ஏராளமான முறை அவர் முஸ்லிம் விரோதப் பேச்சுகளைப் பேசியிருப்பதை, அவரது மகன் ராஜிவ் காந்தி முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதை வரலாற்று அறிஞரும் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.. நூரானி ஆவணப்படுத்தியுள்ளார்.

அரசியலிலும் அரசாங்கத்திலுமுள்ள ஊழல்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற போர் முழக்கத்தை எழுப்பி வந்த ராம் மனோகர் லோகியாவும் ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  இந்திய பாசிச சக்திகளான ஜன் சங், ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ‘அரசியல் கெளரவம்’ கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றினர்.

காங்கிரஸ் அல்லாத மத்திய அரசாங்கத்தில் சிறிது காலமே பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் கறை படியாத மனிதராக இருந்தார் என்றால் கறைபடியாதவராக இருந்ததோடு மட்டுமின்றி கறைபடிந்த கரங்கள் அனைத்தையும் அரசியலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான துணிச்சலான முயற்சியை மேற்கொண்டவர் வி.பி.சிங் ஒருவர் மட்டுமே.

ராஜிவ் காந்தியின் முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுபேற்றுக் கொண்டவுடன், இந்தியாவில் ஊழலையும் இலஞ்சத்தையும் மேல்மட்டத்திலிருந்துதான் ஒழிக்கத் தொடங்க வேண்டும் என்னும் கூருணர்வுடன் செயல்பட்டார் வி.பி.சிங். அவரது ஆணையின் பேரில் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது  திடீர் சோதனைகளை மேற்கொண்டு ஆண்டுக் கணக்கில் செய்யப்பட்டு வந்த வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்தனர். அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் பெருந்தொழிலதிபர்கள் சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எனவேதான் கார்ப்பரேட் பெருச்சாளிகள் அவரை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கு திருபாய் அம்பானியின் (ரிலையன்ஸ்) தலைமையில் அணி திரண்டனர். இந்த உண்மை நரேந்திர மோடியின் புலனாய்வு ராடாரின் கீழ் வருமா? வராது. ஏனென்றால் அந்த ராடாரை இயக்குவதே அம்பானிகளும் அதானிகளும்தான்.

அந்தப் பெருச்சாளிகளின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் ராஜிவ் காந்தி, விபி.சிங்கை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து,  பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். வி.பி. சிங்கின் திறமை பாதுகாப்புத்துறைக்குத் தேவை என்று பசப்பினார் ராஜிவ். ஆனால், வி.பி.சிங், பாதுகாப்புத்துறையில் மலிந்திருந்த ஊழல்கள் மீது கவனம் குவிக்கத் தொடங்கினார். ஜெர்மனியிலிருந்து HSW  நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதில் பேரம் பேசப்பட்டதையும் ‘கமிஷன்’ வழங்கப்பட்டதையும் கண்டறிந்து முழு உண்மையையும் வெளிக்கொணர்வதற்கான விசாரணை ஆணையம் அமைக்க ஆணை பிறப்பித்தார். அதனால்தான் ராஜிவ் காந்தியும் காங்கிரஸ் தலைமையும் வி.பி.சிங்கை ஓரங்கட்டின. நீர்மூழ்கிக் கப்பல் ஊழலும் போஃபர்ஸ் ஊழலைப் போலவே சட்டத்திடமிருந்து தப்பித்துக் கொண்டது.

1989இல் நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்  பெரும்பான்மை கிடைக்காதிருந்த சூழலில் பாஜக ஒருபுறமும் இடதுசாரிகள் மறுபுறமும் ‘வெளியே இருந்து’ தந்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வி.பி.சிங், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த படிநிலை சாதிய அமைப்பின் காரணமாக ‘உயர் சாதியினர்’ மட்டுமே அரசாங்கப் பதவிகளை வகித்து வந்த ஊழல் முறையின் மீது கை வைக்கும் மண்டல் குழு பரிந்துரைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தினார். இந்த சாதியப்படிநிலை ஊழல் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று விரும்பிய பாஜக, வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்த போது, அந்த கவிழ்ப்பு முயற்சிக்கு ராஜிவ் காந்தியின் காங்கிரஸும் துணை நின்றது – பின்னாளில் அயோத்தி ராமர் கோவில் ஷிலான்யாவுக்கு ராஜிவ் காந்தியும் பாபர் மசூதி இடிப்புக்கு நரசிம்ம ராவும் ஒத்துழைத்தது போல.

வி.பி.சிங் ஆட்சியிலிருந்த போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றின் தேர்தல் செலவுகளுக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கொள்கையை இடைவிடாது வலியுறுத்தி வந்தார். இப்படிச் செய்வதன் மூலம் கார்ப்பரேட் சக்திகள் அரசியல் கட்சிகள் மேல் செல்வாக்கு செலுத்துவதைப் பெருமளவில் தடுக்க முடியும் என்று கருதினார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியலிலும் மத்திய, மாநில அரசாங்கங்களிலும் உள்ள இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பது மேலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. ஆனால், சாதிய ஊழலை நிலைநிறுத்துவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள சங்பரிவார பாசிச சக்திகளோ, இலஞ்சமும் ஊழலும் ஏழைகளிடம்தான்,  நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான்  ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.

இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய அதிகாரி வர்க்கம், பங்குச்சந்தையின் தலைமைப்பீடமான மும்பையின் தலால் ஸ்ட்ரீட், இந்தியக் கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ,  பாலிவுட், இந்திய இயற்கை வளங்களை, சுற்றுச்சூழலைச் சூறையாடும் அதானிகள், அம்பானிகள் முதலானோர் மீது நரேந்திர மோடியாலும் சங் பரிவாரத்தாலும் கைவைக்க முடியாது. ஏனெனில் சாதிரீதியான, வர்க்கரீதியான ஒடுக்குமுறை, சுரண்டல், ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றவர்கள் இவர்கள்தாம்.

இவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஒரே இந்தியப் பிரதமர் வி.பி.சிங் மட்டுமே. அவரது இறப்புச் செய்தி, மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களின் போது எவ்வாறு முக்கியத்துவம் அற்றதாகப் போனதோ, அதைவிட மோசமானதாக, ஊழல், இலஞ்ச ஒழிப்பு பற்றிய நரேந்திர மோடியின் சொல்லாடல்கள், அவற்றுக்கு எதிரான எதிர்-சொல்லாடல்கள் நடக்கும் காலத்தில் முற்றாக மறக்கப்பட்டுவிட்டது. இந்த வரலாற்று மறதிக்கு இந்தியாவிலுள்ள மதச்சார்பற்ற சக்திகளும் (அப்படி ஏதேனும் இருக்குமானால்) இடதுசாரி சக்திகளும்தான் பொறுப்பு.


ஞாயிறு, நவம்பர் 27

ஃபிடலுக்கு ஒரு பாடல் - செ குவாரா



சூரியன் உதிப்பான் என்றாய் நீ 
வா, யாரும் செல்லாத பாதையில்
போகலாம் நாம்
உனக்குப் பிரியமான
அந்தப் பச்சை முதலையை விடுவிக்க.
கிளர்ச்சி என்னும் தூமகேது
முட்டிச் செல்லும் நம் நெற்றியைக்கொண்டு
அவமானங்களைத் துடைத்தெறிந்துகொண்டே
செல்வோம் வா
வெற்றி பெறுவோம் அல்லது
சாவைக் கடந்து செல்வோம்.
முதல் துப்பாக்கி வேட்டில்
புதிய வியப்புடன்
கானகம் முழுவதும் விழித்தெழும்
அங்கே அப்போது அமைதியாக உனது படை
உன்னருகே நாங்கள்.
உனது குரல் நாற்றிசைக் காற்றைத் துளைத்து
நிலச் சீர்திருத்தம், நீதி, உணவு, விடுதலை
என முழங்கும் போது
சேர்ந்து குரல் கொடுக்க
உன்னருகே நாங்கள்.
கூபாவின் அம்பு முனை துளைத்த காயங்களை
அக்கொடிய விலங்கு நக்கும் வேளையில்
பெருமித நெஞ்சத்துடன்
உன்னருகே நாங்கள்.
வெகுமதிகள் பெற்றுத் தத்தித் தத்திக் குதிக்கும்
அந்த அலங்கரிக்கப்பட்ட அற்பப் பூச்சிகளால்
எங்கள் நேர்மை குலைந்து விடும் என எண்ணாதே
எங்களுக்கு வேண்டியது
அவர்களது துப்பாக்கிகள், தோட்டாக்கள்,
ஒரு பாறாங்கல்
வேறேதும் அல்ல.
உருக்கு எங்களை வழிமறிக்கும்போது
நாங்கள் கேட்கப் போவது
கூபாவின் கண்ணீரால் நெய்த போர்வை
அமெரிக்க வரலாறு நோக்கிப் பயணிக்கும்
எங்கள் கெரில்லாக்களின் சடலங்கள் மீது போர்த்த
வேறேதும் அல்ல.

ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை( (Our Word: Guerrilla Poems from Latin America, Cape Goliard press, London, 1968  என்னும் நூலிலிருந்து)


சனி, நவம்பர் 19

The Forecast Today - Aadhavan Dheetchanya - Translated by V.Geetha

Until this minute no order has been passed that insists
Feet must wear caps and the head slippers.

The Honourable State in its mercy
Has allowed its citizens to let
Eyes be where they have always been
And ears where they always are.

After today’s cabinet meeting it shall be known
Whether one may continue to eat with one’s mouth. 
Just for a change and to ration available air supply
A plan that requires one of the nostrils to be stopped and shut 
Will come into force from 12 midnight. 

Citizens have been warned that they ought to support
All positive measures undertaken by the State – henceforth
And for the first time anywhere in the world – 
Buses shall run on railway tracks, trains on tarred roads,
Aeroplanes shall take off from harbours and ships from airports

The State which has relocated a lying-in clinic to a cemetery
Shall, step by step, implement its plan 
Of transforming the entire country into a graveyard. 

Since citizens follow their State’s dictates, 
It is expected that they will not allow 
Anything, and forever
To remain where it has always been. 


எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப...