செவ்வாய், ஜனவரி 24

கண்ணுக்குக் கண் - ஆதவன் தீட்சண்யா

குளிர்ந்த தடாகத்து பூவுள் வாசமாக
மெல்ல ஆழ்கிறேன் சாந்தத்தில்

யார்மீதும் புகாரற்று விடிகிறது பொழுது

சேகேறிய மரத்தின் கிளைகளாய் விரிந்தோடி
பிரபஞ்சத்தையே தழுவ நீளும் என் கரங்களை
தோள்பட்டையிலிருந்து தசைகிழிய முறித்து
பின்புறமாய் நெறித்துக் கட்டிய
ஜென்மாந்திர எதிரிகளிடம் புன்னகைக்கிறேன்

ரோஷங்கெட்டவனென்று கெக்கலிக்கின்றனர் அவர்கள்

இயல்பாய் புன்னகைப்பதும்
வலிந்து கெக்கலிப்பதும்
அனிச்சையாகிவிடுகிறது பகல் இரவுபோல

ரத்தமல்லாத வேறொன்றாய்
உள்ளிருந்து முடுக்கும் வன்முறையில்
அவர்களே
அவர்களுக்குத் தளைபூட்டித் தவித்த பின்னொருநாளில்
மதில்தாண்டி விடுவிக்கப்போன என்னிடம்
புன்னகையோ கெக்கலிப்போ மிஞ்சியிருக்கவில்லை
நானும் அவர்களும் இல்லாததைப்போலவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓடிப் போனவன் - பிரெஞ்சுக் கவிஞர் போரிஸ் வியான், தமிழில்: வெ.ஸ்ரீராம்

  குடியரசுத் தலைவர் அவர்களே இதோ உங்களுக்கு ஒரு கடிதம் நீங்கள் ஒருவேளை அதைப் படிக்கலாம் உங்களுக்கு நேரம் இருந்தால். இப்போதுதான் கிடைத்தன எனக்...