வெள்ளி, ஜூலை 5

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை - ஆதவன் தீட்சண்யா

நத்தம் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக  பரப்பப்படுகிறது.  அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.  இந்த சூது புரியாமல், ‘இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?’, ‘தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...’, ‘அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு’ என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.

1. ஆட்டோ மோதினால்கூட ஐந்தாறு அடி தூரம் தள்ளிப்போய் விழுவோம். ஆனால் ரயிலின் முன் பாய்ந்ததாக சொல்லப்படும் இளவரசனின் சடலம் தண்டவாளத்திற்கு அருகாமையில் நாலடிக்கும் குறைவான தூரத்திலேயே விழுந்து கிடக்கிறது.

2. சடலம் கிடந்த இடம் தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தில் ரயில்நிலையம் இருப்பதால், குறிப்பிட்ட அப்பகுதியில் ரயிலின் வேகம் குறைக்கப்படுவதில்லை. எனில் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலின் முன்புதான் இளவரசன் பாய முடியும். அவ்வாறானால் இளவரசனின் உடல் வெகுதூரத்திற்கு வீசி எறியப்பட்டிருக்கும். தவிரவும், மோதிய வேகத்தில் உருவமே உருக்குலைந்து சதைத்துண்டங்களாகி தெறித்துச் சிதறியிருக்கும். 

ஒருவேளை குறைவான வேகத்தில் வந்த ரயிலின் முன் பாய்ந்திருந்தால், தூக்கி வீசுவதற்கு பதில் மோதிய வேகத்தில் ஆளை விழுத்தாட்டி தனது அடிபாகங்களால் அரைத்து கூழாக்கிவிட்டுத்தான் போயிருக்கும். ரயிலின் எந்த பாகத்தில் ஓரமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த முகமுமே சிதைந்திருக்கும். ஆனால் இளவரசனின் ஒருபகுதி முகத்தில் மட்டுமே காயங்கள். மண்டையின் பின்புறமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த தலையும் சிதைந்து சேதமடைந்திருக்கும்.

3. ரயிலின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்திருந்தாலும்கூட மல்லாந்த நிலையில் குறுக்குவாட்டாகத்தான் விழுந்திருக்க முடியும். இப்படி தண்டவாளத்துக்கு இணையாக அந்த மோரிக்கல்லின் (சிறுபாலத்தில்) ஓரத்தை அணைத்தபடி விழுவது சாத்தியமில்லை. 

இளவரசனின் உடையில்கூட சிறு கசங்கலை ஏற்படுத்தாமல், உடலின் எந்த பாகத்திலும் சேதாரம் விளைவிக்காமல் முகத்தின் ஒரு பகுதியை மட்டுமே சிதைத்து மூளையை வெளியே இழுத்துச் சிதறவிட்டிருக்கிற வினோதமானதொரு ‘ரயிலில் விழுந்த தற்கொலை’யை உலகம் இதுவரை கண்டதில்லை.

4. இளவரசன் - திவ்யா விசயத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்த விசயங்களை தொகுத்துப் பார்த்தால் இது தற்கொலையாக இருக்க முடியாது என்கிற முடிவுக்கு எளிதில் வந்து சேரமுடியும். ‘எனது தாய் சம்மதித்தால் எனது கணவருடன் இணைந்து வாழவே விரும்புகிறேன்’ - என்று திவ்யா தெரிவித்த கருத்தை யாராலோ ஏற்க முடியவில்லை. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே முதல்நாள் தெரிவித்த கருத்துக்கு மாறான நிலைப்பாட்டை மறுநாள் தெரிவிக்கிறார் திவ்யா. அழுத்தங்கள் இல்லாத இயல்பான நிலையில் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதையே திவ்யா விரும்புகிறார் என்பதை இந்த இருவேறு நிலைப்பாடுகளிலிருந்து   உணரமுடிகிறது. இளவரசன் உயிரோடு இருக்கும்வரை திவ்யாவிடம் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதால்தான் இளவரசன் பிணமாக்கப்பட்டிருக்கிறார். எப்படி யாரால் பிணமாக்கப்பட்டார் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறதே தவிர தற்கொலையா கொலையா என்பதல்ல.  

8 கருத்துகள்:

  1. பிரேதப்பரிசோதனை வரும் வரையில் பொறுக்கலாமே.. இந்த இடுகை கூட கொலை என்ற கருத்தை திணிப்பதாக உணர்கிறேன்.

    உண்மை வெளி வந்துதானே தீரும். கொலையோ, தற்கொலையோ எப்படி இருப்பினும் நமக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி இருக்கவேண்டும் என விரும்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரோத பரிசோதனை அறிக்கையில் கூட தலையில் அடிபட்டு இறந்திருப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரயில் மோதி என்று குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக சிதறடிக்கப்பட்ட மூளையில் மெட்டல் துகள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது தோழர்.வெளிப்புரக்காயங்கள் என்ற இடத்தில இடது கை விரல், முழங்கை, பகுதிகளில் ப்ளாக் கிரீஸ் மார்க் குறியீடுகள் இருப்பதாக குரிப்பிடப்பட்டுலதே தவிர பெரிய அளவிலான சிராய்ப்பு காயங்கள் எதுவும் இருப்பதாக காண்பிக்கப்படவில்லை. நிச்சயமாக ஹர்கொளையாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது உண்மை தோழர்.

      நீக்கு
  2. இந்த உண்மைல்லாம் வெளிவரவா போகிறது?!

    பதிலளிநீக்கு
  3. தண்டவாளத்தில் தலை வைத்து இருந்திருந்தால் கூட உடல் பக்கவாட்டில் கிடத்தப்பட்டது போல கிடந்திருக்கவும் வாய்ப்பில்லை

    பதிலளிநீக்கு
  4. தருமபுரி இளவரசன் மரணம் - கொலைதான்!
    கொலைதானோ எனும் சந்தேகம் –இந்தச் செய்தியை நேற்று மாலை- தொலைக்காட்சியில் பார்த்த உடனே எனக்கும் எழுந்தது. என்றாலும், இளவரசனது காதல் மனைவி திவ்யா, தன் தாயாருடன் போவதாகச் சொன்ன வார்த்தை எனக்கே இடியாக இறங்கியது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அந்தக் கோணத்திலேயே இரவெல்லாம் தூக்கமில்லாமல்... யோசித்துக் கிடந்ததில், காலையில் எழுந்தவுடன் –செய்தித்தாள்களைக் கூடப் புரட்டாமல்- எழுதிய கவிதையை(?)த்தான் உடனே வலையேற்றிவிட்டுப் போய்விட்டேன்.
    அப்போதும் அவன் ரயிலில் அடிபட்டு இறந்ததாக நான் நம்பவில்லை...
    அப்புறம் யோசித்துப் பார்த்ததில் ரயில்பாதையில் கிடந்தாலும் இளவரசன் ரயிலில் அடிபட்டு இறந்த்தாக எந்த மடையனும் நம்ப முடியாத அளவிற்கு அவன் உடல் பூ போலக் கிடந்ததை மறுபடி செய்தித்தாள்களிலும் இணையப்பக்கங்களிலும் மறுபடி பார்த்தேன்...
    நமது தோழர் –தலித்திய இயக்கங்களில் சரியாகவும் கூர்மையாகவும் செயல்பட்டு வரும்- ஆதவன் தீட்சண்யா இதுபற்றி என்ன எழுதியிருக்கிறார் எனத் தேடியதில் அவரது வலைப்பதிவு சுள்ளென உறைத்தது.
    http://aadhavanvisai.blogspot.in/2013/07/blog-post.html
    உண்மைதான். ஆதவன் கருத்தில் மட்டுமல்லாமல், அதை அவர் சொன்ன சொற்களின் உக்கிரமான வார்த்தை வெப்பத்திலும் நான் உணர்ந்துகொண்டேன்.
    பல நூறு ஆண்டுகளாக நம் ரத்தத்தில் ஏற்றப்பட்டுவிட்ட அடிமைப் புத்தி இந்த விஷயத்தில் எனக்குள் செயல்பட்டு, நான் சரியான கருத்தைச் சரியானபடி பதிவு செய்ய விடவில்லை என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினேன்.
    “தற்கொலைதான்” என்னும் தொனி கவிதைக்குள் கலந்திருப்பதை நான் ஏற்றுக்கொண்டு, அதை இப்போது மாற்றிவிடும் கருத்திற்கு வந்திருக்கிறேன். இது ஒன்றும் தவறல்ல என்றும் நம்புகிறேன்.
    தெளிவு படுத்திய என் தோழன் ஆதவனுக்கு நன்றி.
    இளவரசன் கொலை என்னும் செய்தி இன்னும் சில நாள்-வார-மாதங்களில்(?) உறுதிப்படும். அதற்கு எத்தனை இழப்பு காத்திருக்கிறதோ தெரியவில்லை!
    ஆனாலும் –
    “உண்மை ஒருநாள் வெளியாகும் – அதில்
    உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்
    பொறுமை ஒருநாள் புலியாகும் – அதற்குப்
    பொய்யும புரட்டும் பலியாகும்”
    -- பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்.

    நன்றி தோழர் ஆதவன் உங்கள் உண்மையின் வெப்பம் தமிழர்களுக்கு சூடு சுரணையைக் கிளறிவிடட்டும்.
    மீண்டும் நன்றி. தவறுக்கு மன்னியுங்கள்.
    அன்புடன் நா.மு.
    ----------------------
    ஆதவன், உங்களுக்கு எழுதிய இந்தக் கடிதத்தை என் வலையில் இட்டிருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தகவலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்,
    05-07-2013 இரவு 11 மணி புதுக்கோட்டை.
    http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_8483.html

    பதிலளிநீக்கு
  5. உலகமே தெரிந்த ஒரு காதல்
    காதலி உன்னோடு நான் வாழ இயலாது என்று சொல்லி விட்டாள்
    என்ன ஆகும் ஒரு காதலனின் மனம்
    இதற்கு காரணம் நம் இலக்கியர்கள்
    காதல் கொள்ளும் முன் காசு கொள் என சொல்லி தரப்படவில்லை
    இளவரசன் அமெரிக்கா போய் கிரீன் கார்ட் வாங்கி இருந்தால் இந்த காதல்
    கொண்டாட்டமாய் இருக்கும் சாதி நடுத்தரவர்க்கத்தை கொன்று விடும்
    கல்வியில் அல்லது பணம் மூலமாக முன்னேறினால் மட்டுமே
    இது சாத்தியப்படும்

    பதிலளிநீக்கு
  6. இரு உள்ளங்களின் ஊடே சாதி, மதி பித்து புகுந்து சதிராட்டம் ஆடிவிட்டது. சிறு துரும்பு அசைந்தாலும், அதை வைத்தே அரசியல் செய்யும் சாக்கடை பன்றிகளுக்கு நல்லதொரு இரையாகிவிட்டது. கூடவே இந்நிகழ்வுகளை காட்டியும், பதிப்பித்தும் அதிக பதிப்புகளை விற்கும் தினத்தாள்களுக்கும் சரி.. தொலைக்காட்சிகளுக்கும் சரி..

    இவைகளெல்லாம் ஒரு சில நாட்களே.. ஒரு சில வாரங்களே.. ஒரிரு மாதங்களே...!!!

    ஆனால் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இளம் உள்ளங்களில் ஒன்று நிரந்தரமாக பிரிந்துவிட்டது.. மற்றொன்று நடைபிணமாகிவிட்டது.

    பாவம் இவர்கள்..!

    எத்தனையோ சாதி, மத பேதமின்றி சந்தோஷமாக காதலித்து, திருமணம் செய்து வாழ்க்கை நடத்தும் காதலர்கள் இருக்க, இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும்.. ??!!!
    எல்லாவற்றிற்கும் காரணம் சாதீ..

    அவர்களுக்கு தொடர்பே இல்லாத சாதி பித்தர்கள்....!!! ஊதி ஊதி.. பெருக்க வைத்து.. அணு உலையாய் வெடிக்க வைத்து அதில் குளர்ந்து காய்ந்துவிட்டார்கள்.. ஒருவனின் வாழ்க்கையை முடித்துவிட்டார்கள்.. அது தானாக நடந்தாலும், பிறரால் நடத்தப்பட்டாலும், இழப்பு இழப்புதான்... !!!!!

    பரிதாபடுவதைத் தவிர, இனி நடக்கப் போவதொன்றும் இல்லை.. !!!!

    இனி இதுபோன்றதொரு நிகழ்வு எங்கும் நடக்க கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு...!!!!

    பதிலளிநீக்கு

  7. இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?
    தர்மபுரி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. வன்னியர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக குறிப்பாகவும் கொடும் வெறிகொண்டு அலையும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறிக் கூட்டத்தினர் 'தர்மபுரியில் இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்' என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

    1. தர்மபுரி கலவரத்தை பாமகவினர்தான் செய்தனர்,
    2. திவ்யாவை பாமகவினர்தான் கடத்தினர்,
    3. இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்

    - இந்த மூன்று கட்டுக்கதைகளை தமிழ்நாட்டின் வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினர் மிகவும் வெற்றிகரமாக பரப்பியுள்ளனர்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...