வியாழன், ஜூன் 9

அன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ - ஆதவன் தீட்சண்யா



புகைப்படம்: thamizhstudio.com
ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் ஒசூரில் நடத்தினோம். எப்படியோ தகவல் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து அன்றைக்கு அறிமுகமானவர் தான் தோழர் ஆண்ட்டோ. 

பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நேரிலோ போனிலோ எப்போதும் சினிமா சினிமா என்று சினிமாவை மையமிட்டதாகவே இருக்கும் அவரது உரையாடல். அவரது சேகரிப்பில் வேறெங்கும் கிட்டாத அரிதான படங்கள் ஆயிரக்கணக்கில். திரைப்படச் சங்கங்களுக்கும் திரைத்துறை ஆளுமைகளுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் தனது சேகரத்திலிருந்து குறுவட்டுகளையும் அடர்வட்டுகளையும் அனுப்பிக்கொண்டே இருப்பார். கவனிக்கத்தக்க திரைப்படமோ ஆவணப்படமோ உலகத்தின் எந்த மொழியில் வெளியாகியிருந்தாலும் அதுகுறித்த முழுவிவரங்களையும் அறிந்துகொண்டு தரவிறக்கம் செய்து “குஞ்சு பொறித்து” தனது தோழமை வட்டத்தில் உள்ளவர்களுக்கு சொந்தச் செலவில் அனுப்பி பார்க்க வைப்பதில்  சோர்விலா ஆர்வமுடையவர்.  

புதிதாக படம் ஏதும் கிடைத்துவிட்டால் பொக்கிஷம் கிட்டினாற்போன்ற உற்சாகத்தோடு போனில் அழைப்பார். இன்றைக்கு காலையில் சென்னையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது எண்ணிலிருந்து வந்திருந்த ஓர் அழைப்பை தவறவிட்டிருந்தேன். பிறகு நான் அழைத்தேன். தோழமை கசியும் அவரது குரல் இதோ இன்னும் ஓரிரு நொடிகளில் என் காதில் ஒலிக்கப்போகிறது, ஏதேனுமொரு புதிய படத்தைப் பார்த்த காணின்பத்தை பகிரப்போகிறார் என்று காத்திருந்தேன். அவருக்கு பதிலாக பேசிய அவரது மகள் சொன்னார் "அப்பா இன்று காலை இறந்துவிட்டார்" என்று. ஏதும் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டோமா என்று அழைப்பை துண்டித்துவிட்டு சற்றுநேரம் கழித்து மீண்டும் அழைத்தேன். தோழர் ஆண்ட்டோ இனி இல்லை என்கிற உண்மையை அவர்கள் உறுதிப்படுத்தியேவிட்டார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்கிறேன் என்று பிரகடனம் செய்வதைவிடவும் அவர்களில் ஒருவராக கரைந்து வாழ்வதே நேர்மையானது. தோழர் ஆண்டனி மைக்கேல் என்கிற ஆண்ட்டோ  அவ்வாறே வாழ்ந்தார் என்பதற்கு அவரது இயக்கத்தில் வெளியான ஆவணப்படங்களே போதுமான சாட்சியங்களாய் இருக்கின்றன.  புதிரை வண்ணார் சமூகம் பற்றி “எச்சம் மிச்சம்”  என்கிற ஆவணப்படத்தை எடுத்தது போலவே இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மலையகத்தமிழர் குறித்த படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்கிற அவரது முயற்சியை தடுத்து நிறுத்திவிட்டது மரணம். நின்று போன அந்த முயற்சியை நம்மில் யாரேனுமொருவர் நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்று போலியாக சூளுரைப்பதற்கு கூசும் மனம் இம்மட்டில் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறது. 

தோழர். ஆண்ட்டோவின் நேர்காணலை வாசிக்க:  http://thamizhstudio.com/creators_28.php  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...