வெள்ளி, பிப்ரவரி 14

பி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா




ரு மரம் வீழ்வதை மட்டுமே காண்கிறோம். அதன் வேர்களில் விஷம் வைத்தவர்களை நாமறியோம். பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78569 பேர் 2020 ஜனவரி 31 அன்று ஒருசேர விருப்ப ஓய்வில் வெளித்தள்ளப்பட்ட விசயம்கூட இவ்வாறாகவே அணுகப்படுகிறது. தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்பவற்றால் 1990களில்  பாய்ச்சப்பட்ட விஷம் உள்ளிருந்து அரித்து இப்போது அதை வீழ்த்தத் தொடங்கியிருக்கிறது. ஆம், இவ்வளவு பெருந்தொகையான ஊழியர்களின் வெளியேற்றமானது அந்த வீழ்ச்சியின் தொடக்கக்காட்சிதான். முழுமையான வீழ்ச்சியின் அழிவுகளைக் காட்டும் துயரக்காட்சிகளைக் காண்பதற்கு நாம் இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு அதன் ஊழியர்களை பொறுப்பாக்கி நகர்வது எளிய வழி. ஆனால் அது உண்மையான காரணமல்ல. நாட்டின் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டும் இலாபநட்டக் கணக்கிற்குள் வைத்துப் பார்க்கக்கூடாத சேவையாகவும் அரசின் ஏகபோகத்தில் இருந்துவந்த தகவல் தொடர்புத்துறையில் தனியாரை அனுமதித்ததிலிருந்து இவ்வீழ்ச்சி தொடங்குகிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடனுக்காக கையேந்திய நமது அரசுகள் அந்நிறுவனங்களின் கட்டளைக்குப் பணிந்து இதுபோன்ற சேவைத்துறைகளை தனியாருக்கு திறந்துவிடும் நிலை உருவானது.

சேமநல அரசுஎன்கிற பாத்திரத்திலிருந்து விலகிக்கொண்டு தனியார் தொழில் நடத்துவதற்கு உகந்தவிதமான சட்டங்களை நிறைவேற்றி பராமரிக்கும் நிலைக்கு இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக பண்புரீதியில் மாறும் போக்கு 1980களின் நடுவே தொடங்கியது. சேவைத்துறையாக எதையும் நடத்த வேண்டியதில்லை. நஷ்டத்தில் இயங்குவதை மூடிவிடுவது, இலாபத்தில் இயங்குவதை தனியாருக்கு விற்றுவிடுவது என்கிற நிலை உருவானது. புதிய பொருளாதார கொள்கைக்குப் பின் தனியார் என்ற சொல் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்களையே குறித்தது. ஆனால் அதற்கொரு உள்நாட்டு முகத்தைக் கொடுப்பதற்காக இளைய பங்காளியாக சேர்த்துக்கொள்ளப் பட்ட இந்திய நிறுவனங்களில் சில இன்று பெருநிறுவனமாக வளர்ந்துள்ளன.  

பெரும் சொத்துகளையும் வாடிக்கையாளர்களையும் கொண்ட தொலைத்தொடர்புத் துறையை விற்பதற்கும் வாங்குவதற்கும் எளிதாக துண்டுத்துண்டாக்கும் முயற்சி பலவடிவங்களில் நடைபெற்று வந்துள்ளது. வருமானம் ஈட்டித்தரக்கூடிய டெல்லியையும், மும்பையையும் பிரித்தெடுத்து தனித்தனி மகாநகர் நிகம் டெலிகாம் லிட் உருவாக்கப்பட்டன. நாடு முழுவதுமுள்ள வருவாய் ஈட்டும் பகுதிகளைப் பிரித்து தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் முன்னோட்டமாக 1995ல், தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்கள் யு.எஸ்.வெஸ்ட்- பி.பி.எல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டன. ‘சேவ் டெலிகாம் சேவ் இந்தியாஎன்கிற முழக்கத்துடன் தொழிற்சங்கங்கள் அன்று போராடி தடுத்திருக்காவிட்டால் தொலைத்தொடர்புத்துறை என்பதே இப்போது இருந்திருக்காது.

ஆனாலும் விரிவாக்கம், துரிதம், நவீனமாக்கல் என்கிற அலங்காரங்களோடு துறையின் பலவேலைகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டன. இந்த வேலை ஒப்பந்தங்களைப் பெறுவதில் கையூட்டும் ஊழலும் சாய்மானங்களும் பெரும் பங்காற்றின. டெலிகாம் அமைச்சராயிருந்த சுக்ராம் பணத்தால் தைத்த மெத்தையில் படுத்துறங்கும் அளவுக்கானது இம்முறைகேடு.

பெருநகரச் சேவைக்கு எம்.டி.என்.எல், இணையச்சேவைக்கு வி.எஸ்.என்.எல், நாட்டின் எஞ்சிய பகுதிகளில் சேவைகளை வழங்கிட பி.எஸ்.என்.எல். என அடுத்தடுத்து வந்த துண்டாடல் இன்னும் ஓயவில்லை. புதிதாக தொடங்கப்பட்ட பேஜர், மொபைல் போன்ற சேவைகளில் அரசின் இந்த நிறுவனங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அரசு ஆதரவுடன் நிலைபெற்றுள்ள இந்நிறுவனங்கள் தனியாருடன் போட்டியிட்டால் அது சமமான ஆடுகளமாக இருக்காது என அரசின் நிறுவனங்களை அரசே ஓரங்கட்டியது. இந்தப் புறக்கணிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றுதான் அரசு நிறுவனங்களால் இந்தச் சேவைக்குள் வரமுடிந்தது. இந்த பாரபட்சம் இன்றளவும் 4ஜி ஒதுக்கீடு மறுப்பாக நீடிக்கிறது.

தனியார் ஏகபோகத்தில் இருந்த மொபைல் சேவைக்குள் பி.எஸ்.என்.எல். நுழைந்ததானது வாடிக்கையாளர்களுக்குப் பேராதாயங்களைக் கொண்டுவந்தது. பி.எஸ்.என்.எல்.க்கு இணையாகவோ குறைவாகவோ கட்டணம் என்ற நிலைக்கு இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் தனியார் நிறுவனங்களுக்கு உருவானது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் ஈர்க்கவும் வெறும் கட்டணக்குறைப்பு போதாதென அவை தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. அப்படியான மேம்பட்ட தொழில்நுட்பத்திற்குள் செல்வதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அரசு அனுமதிக்கவில்லை. ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றிய பிரதமர், பி.எஸ்.என்.எல். மேம்பாட்டுக்காக எதுவும் பேச மறுக்கிறார். இம்மாதிரியான சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக பி.எஸ்.என்.எல் சிறுகசிறுக பலிகொடுக்கப்படும் வஞ்சகத்தின் ஒரு கட்டம்தான் 78569 ஊழியர்களின் வெளியேற்றம்.

பெரும் மனித உழைப்பு தேவைப்பட்ட காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் கணிசமானோர் பின்னாளில் தொழில்நுட்பங்களினால் தேவையற்றவர்களான போதும் பொருத்தமான வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் பலரும் பணி ஓய்வு பெற்றுவந்த நிலையில் இந்த விருப்பு ஓய்வுத்திட்டம் வராமல் இருந்திருந்தாலும் இன்னும் சிலஆண்டுகளில் ஊழியர் எண்ணிக்கை தானாகவே இதேயளவுக்கு குறைந்திருக்கும். 

கடந்த சில ஆண்டுகளாகவே விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதியை ஒதுக்காத அரசு நாளடைவில் அன்றாட நடைமுறைச் செலவுகளுக்கான நிதியையும் நிறுத்திக்கொண்டது. அலுவலகங்களுக்கும் செல்போன் டவர்களுக்கும் மின்கட்டணம் செலுத்தக்கூட முடியாமல் நிறுவனம் திண்டாடியது. எரிபொருள், வாகன பராமரிப்பு, ஊழியர் குடியிருப்பு பராமரிப்பு என எல்லாம் நின்றுபோயின. காப்பீடு, கூட்டுறவுச்சங்கம், வங்கிக்கடன் ஆகியவற்றின் தவணைக்காக ஊழியர்களின் ஊதியத்தில்  பிடித்தம் செய்த தொகைகளைக்கூட அந்த நிறுவனங்களுக்கு வழங்காமல் வேறுதேவைகளுக்கு முறைகேடாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானது நிறுவனம்.

நிதியின்மை உள்ளிட்ட குளறுபடிகளால் சேவையின் தரம் குறைந்துள்ளது. மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. காலாவதியாகிப் போன பழைய புதைவடக் கம்பிகளை, கருவிகளை வைத்துக்கொண்டு செலவின்றி பழுதுகளை சரிசெய்யச் சொல்வது, தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு நடைமுறைச் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து நிர்ப்பந்திப்பது என கடுமையாகி வந்த பணிச்சூழலின் அழுத்தம் இவ்வளவு பேர் விருப்பு ஓய்வு கொடுப்பதற்கான காரணங்களில் ஒன்று. பணப்பலன்கள் இரண்டாம்பட்சம்.

பத்திருபது ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நாளில் ஊதியம் வழங்காதிருந்த பி.எஸ்.என்.எல், இப்போது 10 மாதங்களாக ஊதியம் வழங்காதிருக்கிறது. உழைத்தும் பலனின்றி வாடும் அவர்களது அவலத்தை மாற்றவியலாத அவமானத்தில் குமையும் நிரந்தர ஊழியர்கள் தமக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்றஞ்சியது உண்மையாகிப்போனது. இவர்களுக்கும் நாள் கணக்கில் தள்ளிப்போன ஊதியம் படிப்படியாக மாதக்கணக்கில் தள்ளிப்போனது. டிசம்பர் 2019, ஜனவரி 2020 ஊதியம் விருப்பு ஓய்வில் வெளியேறியவர்கள் உள்ளிட்ட யாருக்கும்  இன்னும் வழங்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பல் என்கிற அச்சத்தை உருவாக்கிக் கொண்டே அதை 69000 கோடி ரூபாயில் சீரமைக்கப் போவதாக சவடால் பேசியது. பி.எஸ்.என்.எல். சொத்துக்களில் ஒருபகுதியை விற்று 37500 கோடி, உறுதிப்பத்திரங்கள் விற்று 15000 கோடி, அரசின் பங்களிப்பாக 30000 கோடி ரூபாய் என இதற்கான நிதியைத் திரட்டப்போவதாக திட்டம். இத்திட்டத்தின் ஓரம்சமே 17160 கோடி ரூபாய் செலவிலான ‘விருப்ப ஓய்வு 2019’.

வெளியேறும்படியான உளவியல் நெருக்கடியை உருவாக்கி கட்டாய ஓய்வில் அனுப்புவதே விருப்ப ஓய்வின் உண்மையான பொருள். அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் 78569 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களது பணியிடங்கள் திரும்ப நிரப்பப்படமாட்டாது. எனவே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாது. நிறுவனத்தில் எஞ்சியுள்ளவர்களில் 8403பேர் இவ்வாண்டின் இறுதிக்குள்ளாக பணிமூப்பினால்  வெளியேறிவிடும் நிலையில் 66814 பேர் எஞ்சுவர். வெளியேறிவர்களை  விடவும் பணியில் நீடிப்பவர்களின் நிலை துன்பகரமானது. அவர்களது பணிச்சூழல்  முற்றிலும் வேறுவிதமாக மாறப்போகிறது. அனுபவம் வாய்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் வெளியேறிவிட்ட நிலையில்  அவர்களது பணிகளையும் இவர்களே சேர்த்து செய்யவேண்டியிருக்கும். இடமாறுதலும், பணிச்சுமையும் மனஅழுத்தமும் கூடும்.

ஆளில்லாத இடங்கள் இனங்காணப்பட்டு தனியார் முகமைகளிடம் விடப்பட்டுள்ளன. ஆனால் இதெல்லாம் ஓர் இடைக்கால ஏற்பாடே. சேவையின் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறிக்கொண்டு பல லட்சம் கோடி சொத்துள்ள இந்த மக்கள் நிறுவனத்தை கார்ப்பரேட்டுகளுக்கு சல்லிசான விலைக்கு கொடுப்பதே அரசின் இறுதி நோக்கம். டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். விற்கப்பட்டது போல, பல விமான நிலையங்களும் துறைமுகங்களும் அடானிக்கு விடப்பட்டதுபோல, ஏர் இந்தியாவும் ஓ.என்.ஜி.சி.யும் ஆயுள் காப்பீட்டுக் கழகமும் விற்கப்படவிருப்பது போல  பி.எஸ்.என்.எல் நிறுவனமும் யாருக்கேனும் விற்கப்படும். அரசை நடத்துவதற்கான வருவாயை ஈட்டுகின்ற இந்த மக்கள் சொத்துக்களை இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுவிட்டு அரசை எப்படி நடத்துவீர்கள் ஆட்சியாளர்களே என்கிற கேள்வியை எழுப்பாதவரை இந்த ஊதாரிகள் விதைத் தவசத்தை   விற்று சூதாடுவார்கள். 

- ஜூனியர் விகடன், 16.02.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...