சனி, ஜனவரி 1

பீமா நதிக்கரையில் முடியும் கவிதை - ஆதவன் தீட்சண்யா


இந்த நதி1

எப்போதுமே இப்படி

அமைதியாகத்தான் ஓடிக்கொண்டிருந்ததென நினைக்காதீர்கள்

ஆற்றோட்டத்தின் இசைமைக்குப் பொருந்தாமல்

குதிரையின் கனைப்பொலியும் குளம்படிச்சத்தமும் 

எந்நேரமும் கேட்டபடியே இருந்த இதன் கரைகளில்தான்

முன்னைய நாட்களில் உக்கிரமான போர்கள் பலவும் நடந்துள்ளன.

 

யாருக்காகவும் வாளேந்தாத இந்த நதியினடியில் 

தோல்வியடைந்தவர்களின் எலும்புகள் புதைந்திருக்கின்றன

 

அதோ அங்கு நினைவிடத்தில் துயிலும்

சம்பாஜியின்2 தைக்கப்பட்ட உடற்துண்டங்களை

மீன்கள் அரித்துத் தின்றுவிடுவதற்கும் முன்பாக

கோவிந்த் கெய்க்வாட்டின்3 கைகளில்

நல்லடக்கத்திற்காக ஒப்படைத்தது இந்த நதிதான்.

 

நூறாண்டுகளுக்குப் பிறகு தேய்பிறையின் நாளொன்றில் 

இரண்டாம் பாஜிராவ் 

இந்த நதியின் கரையில்தான் தன் ராஜ்ஜியத்தை இழந்தான்.

 

வெற்றிகண்ட மகர்களும் மாங்குகளும்

தன்னில் இறங்கி நீந்திக்களித்த போது

வரலாற்றின் அழுக்கையே கழுவித்தள்ளியதுபோல்

பிரவகித்து பாய்ந்தோடத் தொடங்கிய இந்நதி

பெருங்கிடக்கையோடு நூறாண்டு காத்திருந்து 

நம் அண்ணலை வரவேற்றது 

நம் ஒவ்வொருவரையும் அதே களிப்புடன் அழைத்தபடி  

அடுத்தொரு நூற்றாண்டில் ஓடி

நமது காலத்திற்குள் பாய்ந்திடும் இதன் கரை

மற்றுமொரு யுத்தத்தின் களமாகிறது

 

சனிவார்வாடா கோட்டையின் இடிபாட்டில்

துருவேறிக் கிடந்த பேஷ்வாக்களின் வாள்

மநுவினால் சாணை தீட்டப்படுகிறது மீண்டும்

பெயர்களாய் உறைந்திருக்கும் நம் பாட்டன்கள்

விஜய்ஸ்தம்பத்திலிருந்து5 உயிர்த்தெழுந்து

ஆவேசமாய் களமேகுகிறார்கள் 

புதிய பேஷ்வாக்களின் வீழ்ச்சியைக் கொண்டாட

ஆர்ப்பரித்தோடும் பீமா நதியின் கரையிலிருந்து

இக்கவிதையின் மிச்சவரிகளை எழுதுவேன்.

 ...

 1. பீமா நதி

2. சத்ரபதி சிவாஜியின் மகன் - அவுரங்கசீப்பால் கொல்லப்பட்டவன்

3. சிவாஜியின் மகனை அடக்கம் செய்த இவர் ஒரு தலித்

4. மராட்டியத்தை ஆண்ட கடைசி பேஷ்வா

5. வெற்றித்தூண்


- இன்று பீமா கோரேகான் வெற்றிதினம்

 நன்றி: நீலம் மாத இதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...