வியாழன், மார்ச் 10

நான் உங்களை கம்யூனிஸ்டாக்கினேன் - ஆதவன் தீட்சண்யா

நானொரு பெயரிலி
முகமிலிக்கு பெயரெதற்கு?
என் பாதம் தீண்டா ஓரங்குலமும்
பூமியில் இல்லையாயினும்    
நான் நிலமிலியும் கூட
நெபுலாவிலிருந்து வழிந்த தீக்குழம்பை
முத்தமிட்டுக் குளிரவைத்த
எனது காலம்தான் எது?
 
அமீபாவைப் பிறப்பித்தேன்
அடுத்தூர்ந்த காலம் நெடுக
உயிர்களைப் பெற்றெடுத்து
நிறைக்கிறேன் இவ்வுலகை
 
ஆதிகுகைகளிலிருந்து பரவி
வரலாற்றின் இருள்வெளியெங்கிலும்
கமழ்ந்திருக்கும் மனிதவாசனையை
எங்கல்சுடன் பின்தொடர்ந்த மார்க்ஸ்
ஒவ்வொரு வீட்டின் அடுப்படியிலும்
தாளிப்பு நெடியின் காட்டத்தில்
நான் கரைந்திழப்பதைக் கண்டார்
 
தானியமணிகள் யாவிலும் 
பதிந்திருப்பது உன் ரேகையே; 
கன்றுகாலிகளுக்குத் தீவனம்
காடுகழனிகளுக்குப் பாசனம்
கொன்றிடும் நோய்க்கு மருந்து
கொண்டாட்டத்திற்கு கலைகள்
உன்னிலிருந்து பிறக்காததொன்றும்
உலகத்தில் இல்லையென்றார்
  
கல்லாயுதமேந்தி காய்ப்பேறிய
என் கரங்களைப் பற்றிக்கொண்ட எங்கல்ஸ்  
சொரசொரக்கும் இந்தக் கைகளால் வருடி
கொடிய விலங்குகளையும் பழக்க முடிந்த நீ
ஆண்களை  
ஆண்களாகவே விட்டிருக்கக்கூடாதென்றார்
 
உலைமூட்ட அவகாசமின்றி
ஸ்விக்கியில் தருவித்த உணவுப்பொட்டலத்தை 
பசிக்கேற்ப பகிர்ந்தளித்த என் பாங்கில்   
வேட்டைக்கறியைப் பங்கிட்டளித்த
மூதாயைக் கண்டுகொண்டதாய்
பரவசப்பட்ட அவ்விருவரும் உறுதியாய் சொன்னார்கள்:    
நாங்கள் இனி ஆண்களுமல்ல,
உன்னைப்போலவே
உழைத்து உருவாக்கி
தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் கம்யூனிஸ்ட்கள்.

நன்றி: செம்மலர், 2022 மார்ச் இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...