புதன், ஏப்ரல் 26

சிஐடியு - ஏஐடியுசி மே தினச் சூளுரை



தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!  ஒன்றிய எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுக்கும் கூட்டறிக்கை வருமாறு:

1886இல் சிகாகோவில் நடைபெற்ற 8 மணிநேர வேலைக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடு, மரண தண்டனை ஆகியவற்றின் நினைவாக மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1889இல் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில் நடந்த இரண்டாம் அகிலம் இதை உலகத் தொழிலாளர் உரிமை நாளாகப் பிரகடனம் செய்தது.

சென்னை மேதினம்-100

இந்தியாவில் முதல்முதலாக தமிழகத்தில், சென்னை கடற்கரையில் சிந்தனைச்சிற்பி தோழர் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் செங்கொடியேற்றி மே தினத்தைக் கொண்டாடினார். அது நிகழ்ந்து நூற்றாண்டு நிறைகிறது. பெருமைக்குரிய அந்த நிகழ்வை நினைவிலேந்தி தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் அனைவரும் மே தினத்தை, செங்கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுவோம். வரலாறு காணாத உலக முதலாளித்துவ நெருக்கடியினால் வேலையிழப்பு, கதவடைப்பு, லேஆப், ஊதிய வெட்டு அதிகரித்து வருகிறது. நெருக்கடிச் சுமைகள் முழுவதும் சாதாரண உழைப்பாளி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகளுக்கு மீட்புத் திட்டங்கள் என்ற பெயரால் பெருமளவு சலுகைகள், தொழிலாளிகளுக்கோ துன்ப துயரங்கள்.  இக் கொடுமைகளுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் அலைஅலையான வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. போராடும் உழைப்பாளிகளுக்கு மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், கடந்த காலங்களை விட பெருமளவு அதிகரித்துள்ளன. தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறது. இந்தச் சட்டங்களை எதிர்த்து தொழிலா ளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் விதிகளை உரு வாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வருகின்றன. சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு போன்றவை பறிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்துப் போராடும் உரிமைகளும் கூட தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. 

பெருகி வரும் வேலையின்மை

கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு பழைய உற்பத்தி நிலைக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றிய அரசு இந்தத் தொழில்களை செயலூக்கப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்  உருப்படியான பலன் எதையும்  தரவில்லை.  பெருகிவரும் மோசமான வேலையின்மை கவலை அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலை இழப்பும், ஆலை மூடலும், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி ஐடி துறையிலும் பெருகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புச் சந்தையில் 80 லட்சம் இளைஞர் கள் சேருகிறார்கள். வேலையின்மை 34 சதவீதம் என அதன் உச்சத்தை தொட்டுவிட்டது. கிராமப்புறப் பொருளாதாரத்தை ஓரளவுக்கு பாதுகாத்து வந்த தேசிய கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத் தொழிலாளர் களுக்கான நிதி 30 சதவீதம் அளவுக்கு வெகுவாக  குறைக்கப்பட்டதால் அவர்களது வேலை பெறும் உரிமையும் பறிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் 19 கோடியாக இருந்த வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை, 2022இல் 35 கோடியாக அதிகரித்துள்ளது. பசியின் கொடுமையால் 5  வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 65 சதவீதமாக பெருகி உள்ளது என ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கிறது. அதேசமயம் நாட்டின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து 27.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் முதல் 5 பேரிடம் 72 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளன.

அனைத்துத் துறையிலும் தோல்வி

அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் அதிகரிப்பு,  நிலக்கரி, தொழில்துறை உதிரி பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றில் கட் டாய இறக்குமதி போன்றவற்றால் பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் உள்ளடக்கம் அபரிமிதமாக அதிக ரித்து; ஏற்றுமதியில் நாட்டிற்கு வர வேண்டிய பலனை முழுவதுமாக பறித்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு  ரூ.82 க்கும் மேல் எப்போதும் இல்லாத  அளவிற்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் தங்கக் கையிருப்புகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தி யாவின் வெளிநாட்டு கையிருப்பு 564 பில்லியன் டாலர்களாக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பெரும் தொகைகள் அதானி குழும நிறுவனத்திற்கு அள்ளி வழங்கப்பட்டுள்ள உண்மையை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் தனிப்பட்ட ஆர்வத்துடன் அதானி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டதும்,  தன்னுடன் கௌதம் அதானியை எப்போதும் அழைத்துச் சென்றதும் உலகம் முழுதும் அப்பட்டமாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்த ஒன்றிய  அரசு நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பை முற்றிலுமாக சிதைக்க முற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவை ஒரு பெரும் பான்மை வகுப்புவாத இந்து ராஷ்டிரம் ஆக மாற்றும் திசையில் வேகமாக முன்னேறி வருகிறது. டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக எதிர்க்கிறது. அதோடு சட்டத்தை கையிலெடுத்துக் கொள்கிறது. ராமநவமி தினத்தன்று பல்வேறு இடங்களில் இக்கும்பல் நடத்திய வன்முறை  வெறியாட்டத்தை கூச்சமில்லாமல் மத நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்கிறது.  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சிக் கொள்கை கடுமையாகத் தகர்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் நான்கு அடிப்படை தூண்க ளான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தேசிய சொத்துகளைக் கொள்ளையடிப்பது, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, தேசிய பணமாக்கல் திட்டம் இவை அனைத்தும் கார்ப்ப ரேட்டுகளுக்கு தேசத்தின் சொத்துகளை கொள்ளைய டிப்பதற்காகவே வழிவகுத்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் நலன்களை பாதுகாப்பது தேசத்தை அழிவுப்பாதைக்கு  இட்டுச்செல்லும்  மக்கள் விரோத,  தேச விரோத பாசிச அரசை அகற்றுவதே இந்த மே நாள் சபதமாகட்டும்.

தமிழ்நாட்டில்...

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 60 சதவீதம் பங்களிக்கின்ற மொத்த தொழிலாளர்களில் 94 சதவீதம்  தொழிலாளர்களை கொண்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.  மாநில நல வாரியங்கள் புரட்டிப் போடப்படுகின்றன. நல வரி வசூல் அதிகாரத்தையும் நிதி பலன் வழங்கும் திட்டங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது.  இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் கட்டிடத் தொழிலாளர் நலவாரிய நிதியாக வசூலிக்கப்பட்டு செலவிடப்படாமல் ரூ.38 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  நாட்டிலேயே மிக அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம்,  உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. சுமார் 2 கோடி தொழிலாளர்கள் நேர்முகமாகவும் இதர 2 கோடி பேர் மறைமுகமாகவும்  பணி செய்கிறார்கள். இவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை தரக்கூடிய சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்வதும், சமூகப் பாதுகாப்பு தருவதும் அரசின் இன்றியமையாத கடமையாகும். நிலவும் வேலையின்மை பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணி புரிகின்றனர். அவர்கள் மீது  தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான வீடியோக்களை, தனது அரசியல் ஆதாயத்திற்கு பாஜக பயன்படுத்தியதையும் அதன் விளைவாக நாடு முழுவதும் அச்ச உணர்வை உரு வாக்கிய கொடூரத்தையும் நாம் நன்கு அறிவோம். 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்நாள் முழுக்க வேலை பார்த்தும் நிரந்தரம் செய்யப்படாமல் காண்ட்ராக்ட் என்ற பெயரிலும் அவுட்சோர்சிங் என்ற பெயரிலும் தினக் கூலிகளாகவே வைக்கப்பட்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயரில் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி,  தொழிலாளர் துறை போன்றவற்றில் கீழ் நிலையில் பணி புரியும் சி அன்ட் டி பிரிவு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் புதிய ஆட்களை நியமிப்பதற்கு பதிலாக அவுட்சோர்சிங் என அரசாணை வெளியிடப்பட்டது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன்மொழிந்துள்ள 87 மற்றும் 89 விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. ஆளும் வர்க்கமும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. மீறி சங்கம் அமைத்தால் தொழிலாளர்கள் பணி நீக்கம்,  இட மாற்றம் பொய் வழக்கு என பழிவாங்கப்படுகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள், தலையிட வேண்டிய தொழிலாளர் துறையோ செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தகவல் தொடர்புத்துறையில் தற்போது உலக மந்த நிலையை காரணம்காட்டி தமிழகத்தில் இளம் தொழிலாளர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் வேகப்படுத் தப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவிதமான சட்டவிதிகளையும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. 

பணி நிரந்தரமின்மை

பல்லாயிரக்கணக்கான இளம் தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதோடு அல்லாமல் வாய்மூடி மௌ னியாகவும் இருக்கிறது. அதே போன்று ஆப் மூலமாக பணிபுரியும் கீக் ஊழியர்கள் பணி பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார்கள். இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் இவர்களுக்குப் பொருந்தாதாம். இவர்களை தொழிலாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய தொழிலாளர் துறை இவர்களது முதலாளி யார் என்று தேடுகிற தாம். இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் போனால் அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிலாளர்களை கீக் தொழிலாளியாக மாற்றும் ஆபத்து உள்ளது.  தமிழகத்தில் திட்ட ஊழியர்களாக பணியாற்றும் அங்கன்வாடி, ஆஷா,  மக்களை தேடி மருத்துவம், என்சிபிஎல் போன்ற ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளித்தல் சட்டம் 1982 கூறுகிறது. இந்த மானியக் கோரிக்கையில் கூட அந்த சட்டப்படி 237 தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டார்களா என்பது பற்றி சட்டமன்ற கொள்கைக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை.

குறைந்தபட்ச ஊதியம்...

இந்தியாவிலேயே மிக குறைவாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.  எல்ஐசி முடிவுப்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கான தொகையை குறைந்தபட்ச ஊதியமாக வழங்கிடல் வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங் காமல் வேலை அளிப்பவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்தடிப்புச் செய்கிறார்கள். இவைகளுக்கு சிறந்த உதாரணம் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை தொழிலாளர் துறையினால் அமலாக்க முடியவில்லை. தோட்டம் போன்ற துறைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதாரரீதியாக  வளர்ந்த மாநிலங்களில் இரண்டாமிடத்தை வகித்தாலும், தொழிலாளர்களின் ஊதியம் இந்தியாவின் சராசரி யிலிருந்து ரூ.2500 குறைவாக உள்ள போதும் சமூக நீதி பொருளாதாரக்கொள்கை என்பது வாய் வார்த்தையாகவே உள்ளது. ஒன்றிய அரசின் பொதுத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும் அதே வேளையில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை  தனியார் மயமாக்கும் நடவடிக்கை களில் முனைப்புக் காட்டுவது தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கே விரோதமானதாகும். 

சட்டமீறல்கள் பெருமிதமா?

தமிழக போக்குவரத்துத்துறைக்கு நெடிய வரலாறு உண்டு இத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க அதிமுக முயற்சித்தபோது அதை எதிர்த்து நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாதுகாத்தோம். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வேண்டுமென்றால் தனியார்மயத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பதும் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு ஒத்திசைவாகவே உள்ளது.  மாநில அரசை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலும் உள் ளாட்சி மற்றும் இசேவை துறைகளிலும் தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்படுவதில்லை. இந்த சட்ட மீறல்கள் செய்வதை அதிகாரிகள் பெருமிதமாக கருது கிறார்கள். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொய்வின்றி வாதாடுகிறது. இவைகளை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் ஒன்றிய அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களின் உரிமையை பறிப்ப தற்கும் 44 சட்டங்களை சுருக்கி நான்கு சட்டத் தொகுப்பு, வெளியிட்டது. ஒன்றிய ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இதனை எதிர்க்கின்றன. தமிழ்நாடு அரசு இயல்பாகவே சட்ட தொகுப்புகளை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த சட்ட தொகுப்புக ளுக்கு வரைவு விதிகளை தமிழ்நாடு அரசு தொழி லாளர் துறை வெளியிட்டது.  அந்த விதிகளை உறுதி செய்யாமல் தடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துச் சங்கங்களும் ஒரே குரலில் அரசுக்கு எடுத்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் சட்டத்தொகுப்பு இதுவரை அமல் நடத்தப்படவில்லை என்பதால், அதிலுள்ள வேலை நேரத்தில் மாறுதல்

உள்ளிட்ட விசயங்களை முன்னதாகவே செயல்படுத்தும் வகையில் தொழிற்சாலைச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா 12.04.2023இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பன்னிரெண்டு மணி நேரமாக்கிட, முதலாளிகளின் முப்பது ஆண்டு கால கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. 75 ஆண்டுகாலம் எந்த அரசும் செய்யத் துணியாத தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செய்து தமிழக உழைப்பாளிகளுக்கு ஊறு விளைவித்துள்ளது.  

மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உட்பட பல்வேறு முத்தரப்புக் குழுக்கள் உள்ளன. கடந்த காலத்தில் பத்து ஆண்டுகளாக இந்த குழுக்கள் அனைத்தும் கூட்டப்படாமலேயே இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்த குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொழிலையும், தொழிலாளர்களையும் பாது காப்பதற்கான பல்வேறு கருத்துக்கள் இவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் உரிய முயற்சிகள் உண்டா எனில் கேள்விக்குறியே. எனவே ஒன்றிய,மாநில அரசுகளிடமிருந்து  தொழிற்சங்க இயக்கத்தின் கூட்டுபேர உரிமை, ஜனநாயக  உரிமை, சுதந்திர  உரிமைகளை மீட்டெடுப்போம். தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம். ஒன்றிய சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று  இந்த மே நாளில் சபதமேற்போம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! 

தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!

மே தினம் நீடூழி வாழ்க! புரட்சி ஓங்குக!


நன்றி: https://theekkathir.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...