வெள்ளி, மே 13

கையில காசு வாயில தோசை - ஆதவன் தீட்சண்யா

ப்புஸ்தானின் ஒருமாநிலம் துட்டுஸ்தான். துட்டுஸ்தானின் தலைநகரம் காசுக்கோட்டை. காசுக்கோட்டையில் இருக்கிறது சட்டமன்றம். சட்டமன்றத்துக்கு இன்னும் ஆயுசு ஒருமாதம். ஒருமாதத்துக்குள் அங்கு நடந்தாகணும் நேர்தல். நேர்தல் என்றால் நேர்தலல்ல. திருடுவதற்கும் தில்லுமுல்லு செய்வதற்கும் என்றே ஐந்தாண்டுகளுக்கு நேர்ந்துவிடுவது. நேர்தலை நடத்தப் போவது நேர்தல் ஆணையம்.  (நேர்தல் ஆணையத்தை நடத்துவது யார் என்று கேட்க நினைக்கும் இடக்குவாயர்களே, அதற்காகத்தான் நேர்தலே நடக்கிறது என்பதை அறியாத மூடர்களா நீங்கள்? காரை நாம வச்சிருக்கோம், காரை வச்சிருந்த நடிகைய இப்ப யார் வச்சிருக்காங்க என்று கேட்கிற செந்தில் கவுண்டமணி வகையறாவில் எப்போது சேர்ந்தீர்கள்?)

துட்டுஸ்தானத்தில் 432 தொகுதிகள். 432 தொகுதிகளிலும் நேர்தலை நடத்தி முடிக்க ஆகிற செலவு 864 கோடி நல்லப்பணம் + 864ஆயிரம் கோடி கள்ளப்பணம். கள்ளப்பணமென்ன கள்ளப்பணம், அது கரைபுரைண்டோடும் வெள்ளப்பணம். அந்த வெள்ளப்பணம் ஆளுங்கட்சியிடம் இருக்கிறது, ஆண்ட கட்சியிடமும் இருக்கிறது. இருக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இனி இந்தப் பணத்தைக்கொண்டு எப்படி வாக்குகளைப் பெறப்போகிறார்கள் என்பதுதான் மிச்சக்கதையே.

***
நேரம்- அதிகாலை 3 முதல் 5மணி வரை. இது திருடக் கிளம்பும் நேரமாச்சே என்று குதர்க்கம் பேசுகிறவர்கள் ஒதுங்கி நின்று கதையைச் சொல்ல வழிவிடுங்கள். உழைத்து வாழ்வதில் நம்பிக்கையுள்ள சிறுவர்களும் இளைஞர்களும் பால் பாக்கெட் போடவும் நியூஸ் பேப்பர் வீசவும் கிளம்பும் நேரமும் இதுதான். எப்போதும் கண்ணைத் திறந்துகொண்டே தூங்கும் நேர்தல் கமிஷன் இழுத்துப் போர்த்தித் தூங்கும் இந்த அதிகாலையைத்தான் ஓட்டு சேகரிக்கப் பொருத்தமான நேரமென ‘நாலும் அறிந்தவர்களான’ கட்சித்தலைவர்கள் கணித்திருந்தார்கள்.

உறையிலிட்ட பணத்தை வீடுகளுக்குள்  வீசிவிட்டு வந்துவிடும் பழைய ஃபார்முலா சிக்கலானதையடுத்துதான் பால்காரர்களைப் போலவும் பேப்பர் போடுகிறவர்களைப் போலவும் மாறுவேடத்தில் செல்லும் உத்தியை தலைவர்கள் கண்டுபிடித்திருந்தனர். பாலைச் சுண்டக்காய்ச்சினால் அது இரண்டு கிராம் தங்கமாகத் திரண்டு வரும், செய்தித்தாளை கருக்கினால் அது 500 ரூபாய் தாளாக மிஞ்சிவிடும். இதுவொன்றும் மாந்திரீகமோ மாயஜாலமோ கிடையாது. நவீன தொழில்நுட்பம்.  நடக்கவிருப்பது ஊராளுமன்றமா பாராளுமன்றமா என்பதைப் பொறுத்து தங்கத்தின் எடையும் தொகையின் அளவும் தானாகவே மாறிக்கொள்ளும் ரீதியில் தகவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நுட்பம்தான் மீண்டும் வெற்றிக்கனியை பறித்துக் கொடுக்கப்போகிறது என்ற இறுமாப்புடன் இருக்கிறது ஆளும்கட்சி. நாங்களும் சளைத்தவர்களல்ல என்று இதேபோன்று பல்வேறு கட்சிகளும் வாக்காளர்களை அணுகும் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்திருந்தன. இந்த நுட்பங்களறியாது வெறுமனே கட்சியை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிற  இ.வா.தலைவர்கள் தாங்களும் தோற்று கட்சியையும் கரைப்பவர்களாயிருக்கின்றனர்.

டெஸ்பாட்ச், டெலிவரி, இன்புட், பொரிகடலை போன்ற பெயர்களால் அறியப்படும் இந்த பணப்பட்டுவாடாவிற்கு என பணிக்கப்பட்ட தொண்டர்களும் நிர்வாகிகளும் நகரத்தின் தெருக்களுக்குள் நுழைந்தார்கள். ஆறுமாதங்களுக்கும் முன்பாகவே தயாரிக்கப்பட்டிருந்த பட்டியலின்படி எந்தெந்த வீட்டுக்கு எத்தனை பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் எத்தனைச் சுருணை என்கிற விவரம் அவர்களது கைவசமிருந்தது. எனவே சுளுவில் வேலை முடிந்துவிடும் என்று அவர்கள் நினைத்திருந்ததுதான் பிழையாகிப்போனது.

காட்சி மாறுகிறது. குடியிருப்புப் பகுதிகள்.

‘‘வாக்களிப்பு குறித்த விசயங்களுக்கு எமது பேரவையை அணுகவும். மீறி, பால் பாக்கெட்டையோ  நியூஸ்பேப்பர் சுருணைகளையோ வீட்டுக்குள் வீசி நச்சரிப்போர் மீது நேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும்’’ என்று எல்லாவீடுகளின் கதவுகளிலும் பளீரென ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ‘‘நன்கொடைகளுக்கு சங்கத்தை அணுகவும்’’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி வைத்துக்கொண்டு டபாய்த்துவிடுகிற எத்தனையோ கடைக்காரர்களை வழிக்கு கொண்டுவருவதில் அனுபவம் பெற்றிருந்த தொண்டர்கள் அந்த அதிகாலையிலேயே சூடாகித்தான் போனார்கள். ஆனால் நேர்தல் நேரமாகையால்  பம்மிக்கொள்ள வேண்டியதாயிற்று. போன வேலை தடைபட்டுப் போன ஆதங்கத்தில் ‘கடுப்பேத்தறாங்க யுவர் ஆனர்...’ என்று தலைவர்களிடம் புகாரிடுவதற்காக ஸ்டிக்கர் ஒன்றை கிழித்தெடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

காட்சி மாறுகிறது.
நேரம் - அதே அதிகாலை வேளை 3 - 5 மணிவரை.

கட்சித்தலைவர்களின் வீடுகளுக்குள் சன்னல் வழியாக துண்டறிக்கைகள் வீசப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட வீடுள்ள தலைவர்களாயிருப்பின் எந்த வீட்டில் இருக்கிறார் என துப்பறிந்து அந்த வீட்டுக்குள் கச்சிதமாக வீசப்பட்டன. எப்படியும் நாட்டுக்கு உழைத்தே தீர்வது என்று கண்விழித்த தலைவர்கள் ‘எங்களுக்கே பேப்பர் போட ஆரம்பிச்சுட்டாங்களா?’ என்ற எகத்தாளத்தோடு அந்த துண்டறிக்கைகளை எடுத்துப் பார்க்கிறார்கள். பழக்கதோஷத்தில் தங்களைப் போலவே அதில் இனாம்/ இலவசமாக எதையாச்சும் ஒட்டவைத்துப் போட்டிருக்கிறார்களா என்று திருப்பித்திருப்பி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் அந்த துண்டறிக்கையை படிக்கத் தொடங்குகிறார்கள்.

துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவை  ( பதிவு எண்- 189/2011 )

கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கம். சொத்துள்ளவர்களும் கல்வி பெற்றவர்களுமே வாக்களிக்க முடியும் என்றிருந்தது ஒரு காலம். வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அண்ணலொருவர் கோரியதாலேயே எங்களுக்கெல்லாம் வாக்காளர் என்ற தகுதி கிட்டியது.  எங்களை குடிமக்கள் என்று நாங்களே உணர்ந்திருந்த அந்தக்காலத்தில் போராடிப்பெற்ற ஒரு உரிமை என்ற பெருமிதத்தோடு வாக்களித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வேட்பாளர்களாகிய நீங்கள் அப்போதும் எமக்கு விசுவாசமாய் இருந்திருக்கவில்லை. வேட்புமனு இறுதி செய்யப்பட்டதற்கும் வாக்குப்பதிவுக்கும் இடைப்பட்ட பதினான்கே நாட்களில் எங்களைப்பார்க்க பலதடவைகள் வந்துபோகும் நீங்கள் தேர்தலுக்குப் பிறகு வென்றவராயினும் தோற்றவராயினும் தொகுதி பக்கமே வருவதை தவிர்த்தீர்கள். அதுகுறித்த எங்களது கோபத்தை தணிக்க அடுத்தத் நேர்தலின்போது  சின்னச்சின்ன கையூட்டுகளை கொடுக்கத் தொடங்கினீர்கள். சேவையைச் சொல்லி எங்களது வாக்குகளைப் பெற முடியாதென்கிற நிலைமைக்கு நீங்களே உங்களைத் தாழ்த்திக் கொண்ட அந்தநாட்களை இப்போது திரும்பிப் பார்ப்பதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் வேட்பாளர் வாக்காளர் என்ற நிலைமை மாறிவிட்டது. இப்போது வாக்கு என்பது ஒரு சரக்கு- பண்டம்.

ஒரு சரக்கின் விலையை அதன் உரிமையாளரே தீர்மானிக்கிறார் என்ற அடிப்படையான வியாபார விதியைக்கூட மதிக்காத ஆணவம் உங்களிடம் தொடக்கத்திலிருந்தே இருப்பதை நாங்கள் இப்போதாவது சொல்லத்தான் வேண்டும். சின்டிகேட் அமைத்துக்கொண்டு எங்களது வாக்குகளுக்கு நீங்களாகவே தன்னிச்சையாக ஒரு விலையை  தீர்மானித்துக் கொள்கிற அடாவடித்தனத்தால் எமக்கு இதுவரை பல்லாயிரம் கோடியளவுக்கு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். பதவியைப் பயன்படுத்தி சின்னச்சின்ன ஊழல்களைச் செய்துவந்த நீங்கள் ஊழல் செய்வதற்காகவே பதவிக்கு வரத்தொடங்கிய பிறகு உங்களது வருமானம் பன்மடங்கு (குறைந்தபட்சம் 780 மடங்கு) பெருகிப்போயிருந்தது. முழுநேர அரசியல்பணியில் இருக்கும் நீங்கள் இவ்வளவு வருமானம் தரும் சொத்துகளை எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேள்வி எழுப்புவதோ உங்களது அரசியல் பணி என்பதே சொத்து சேர்ப்பதுதான் என்று குற்றம் சாட்டுவதோ எங்களது நோக்கமல்ல. ஆனால் எங்களது வாக்குகளை ஆதாரமாக வைத்து பெருக்கிக்கொண்டிருக்கிற வருமானத்திற்கேற்ற விகிதாச்சாரத்தில் எங்களுக்கான விலையை நிர்ணயிக்காமல் அநீதி இழைத்தீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். நிர்ணயித்திருக்கும் இந்த ரேட் உங்களுக்கு கட்டுபடியானதா என்று ஒப்புக்குகூட ஒரு வார்த்தை எங்களிடம் கேட்க வேண்டுமென்று ஏன் உங்களில் ஒருவருக்கும் தோன்றவில்லை? ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பிலோ, குடியரசுத்தலைவர் அல்லது மேல்சபை நேர்தலிலோ வாக்களிப்பதற்கு இவ்வளவு கொடுத்தால்தான் ஆச்சு என்று பேரம் பேசி கல்லா கட்டுகிற நீங்கள் அதே நியாயத்தையும் உரிமையையும் எங்களுக்கு ஏன் வழங்க மறுக்கிறீர்கள்?

விட்டுத்தள்ளுங்கள், தின்ன சோத்துக்கு ஊறுகாய் தேடி என்ன ஆகப்போகிறது? ஆனால் இனி நடக்கிற வியாபாரம், வியாபாரத்திற்குரிய எல்லாவிதிகளோடும் ஒழுங்கோடும் தர்மத்தோடும் நடந்தால் மட்டுமே எங்களது சரக்குகளை நீங்கள் வாங்கமுடியும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். இனி துட்டுஸ்தானத்தில் நடக்கவிருக்கும் எல்லாத் நேர்தல்களிலும் எமக்கான ரேட்டை நாங்களேதான் தீர்மானிப்போம் என்ற சுயமரியாதைப் பிரகடனத்தை இதன் மூலம் அறிவிக்கிறோம். இதன் பொருட்டு துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவை என்கிற எங்கள் அமைப்பின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக படிவம் எண்-18ல் கையொப்பமிடாத எந்தவொரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ எங்களிடம் வாக்கு கோர அங்கீகாரமில்லை.

1. (அ) கட்சிகள்/ வேட்பாளர்கள் நேர்தலுக்கென செலவழிக்கவிருக்கும் உத்தேசத் தொகையை வா.வ.பேரவையிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். எம்மிடமே நேரடியாக வாக்குகளை கொள்முதல் செய்வதால் பிரச்சாரம் விளம்பரம் போன்றவற்றுக்காக செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே அந்தத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கியத் தொகை முழுவதையும்  வாக்காளர்களுக்கே பிரித்துக் கொடுத்துவிட வேண்டும்.

(ஆ) கடந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவரே மீண்டும் போட்டியிடுகிறாரெனில் இந்த ஐந்தாண்டுகளில் சுருட்டிய அசையும்- அசையா சொத்துகளின் விபரம் மற்றும் வங்கி இருப்பு, கையிலுள்ள ரொக்கம் உள்ளிட்ட வரவு செலவு அறிக்கையை து.வா.வ.பே அங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அபகரிப்பில் புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களின் அளவு தனித்தனியே வகைப்படுத்தி காட்டப்படவேண்டும். மணல்குவாரி/ கிரானைட் குவாரி  உரிமம் இருப்பின் அவற்றின் நகல்கள் இணைக்கப்படுதல் அவசியம். இனிவரும் ஐந்தாண்டுகளுக்கான உத்தேச சுருட்டலின் முன்வரைவுத் திட்ட அறிக்கையும் (Project report) இணைக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படும். இரண்டு தொகைகளின் கூட்டு சராசரி அல்லது மொத்தத்தொகையில் எண்பது சதம்- இவற்றில் எது அதிகமோ அதை அடிப்படையாகக் கொண்டு வாக்குகளுக்கான குறைந்தபட்ச முகமதிப்பு விலை நிர்ணயிக்கப்படும்.

 (இ) பொறியியல் / மருத்துவம்/ கல்வியியல் கல்லூரிகள், சர்வதேச உண்டுஉறைவிடப் பள்ளிகள் ஏதும் தொடங்கி திடீர் கல்வித்தந்தையாகியிருப்பின் அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெயர்வாரியாக அவர்களிடம் வசூலித்த தொகையும் எவ்வளவு எனக்காட்டும் வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

(ஈ) வேட்பாளர் குற்றப்பின்னணி உள்ளவரா? ஆம் எனில், ஆள்கடத்தல், அடிதடி, குத்துவெட்டு, பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, வழிப்பறி, நிலமோசடி, ஆள்மாறாட்டம் ஆகிய தனித்தனி தலைப்புகளின் கீழ் பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட வேண்டும். சிறைப்பட்டிருப்பின் அது பற்றிய விவரமும் தேவை. (ஆபிஸ்நேர போராட்டங்களில்   பங்கேற்று காலை 11 மணிக்கு கைதாகி பிற்பகல் 5 மணிவரை உள்ளே இருந்த கேவலத்தையெல்லாம் இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.) 

 (உ) வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்றவற்றின் ரெய்டுகளில் சிக்கியிருந்தால் அதுபற்றிய விவரம். விசாரணைக் கமிஷன் ஏதும் உங்கள் மீது அமைக்கப்பட்டிருப்பின் அதை தனித்தாளில் கொட்டையெழுத்துகளில் குறிப்பிடவும். ஊழலில் நீங்கள் எந்தளவுக்கு பிரசித்தம் என்ற மதிப்பீட்டுக்கு இவ்விவரம் அவசியம். 

மேற்கண்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுகிற கட்சிகள்/ வேட்பாளர்கள் எமது ஏலத்தில் கலந்துகொள்ள தகுதி படைத்தோராவர். 

ஏலமுறையின் வரலாறு 

போர்க்களத்தில் தோற்றுப்போகும் நாடுகளின் குடிமக்களை வெற்றியடைந்தவர்கள் அடிமைகளாகப் பிடித்துவந்து சந்தைகளில் ஒரு சரக்கைப் போல  குவித்துவைத்து ஏலம்கூறி விற்பனை செய்ததை வரலாற்றில் நாம் கண்டிருக்கிறோம். ஊர்களை மானியமாக கொடுக்கும்போது அவற்றிலிருந்த மக்களையும் சேர்த்தே கொடுத்தமைக்கு கல்வெட்டுச் சான்றுகளுண்டு. தனவந்தர்கள் தமது மகள்களுக்கு கல்யாணச் சீதனமாக பொன்பொருள் அகில் துகிலோடு அடிமைகளையும் கொடுத்தார்கள் என்பதை பழமரபுக்கதைகள் தெரிவிக்கின்றன. போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் கிழக்கிந்திய கம்பனியாரும் அரசர்களிடமிருந்து பெரும் நிலப்பரப்புகளையும் மக்களையும் விலைக்கு வாங்கியது பற்றிய ஆவணங்கள் இப்போதும் காணக்கிடைக்கின்றன. வறுமையின் காரணமாக ‘கொள்வாருளரோ.. கொள்வாருளரோ..’ எனக்கூவி தம்மைத்தாமே ஏலம்கூறி விற்றுக் கொள்வதும் அதற்கும் ஏலாதவர்கள் தம் குடும்பத்தாரையே விற்பதும் நடப்பிலுள்ள விசயம் தான். கேம்பஸ் இன்டர்வியூ என்ற பெயரில்  மூளையடிமைகள் முன்கூட்டியே தங்களை விற்றுக்கொள்வதை இச்சமூகம் ஊக்குவித்தே வந்திருக்கிறது. மனிதர்களை ஏலம்கூறி விற்கும் இத்தகைய நமது பாரம்பரிய வழக்கத்தை தற்கால நேர்தலுக்குப் பயன்படும் வகையில் தேவைக்கேற்ற மாறுதல்களுடன்  பின்தொடர விரும்புகிறது து.வா.வ.பே. 

கோயில் கட்டிக்கொள்வது போன்ற தேவைகளுக்காக அதிக தொகையைத் தருகிறவருக்கு ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களது வாக்குகளை கொத்தாக விற்கும் வழக்கம் ஏற்கனவே கிராமப்புறங்களில் நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக ஊரையே ஏலம்விட்டு சம்பாதிக்கிற இந்த முறையைவிட ஐபிஎல் முறையே மேலானது என்பது து.வா.வ.பேயின் கருத்து. இந்தப் போட்டியில் களமிறக்கப்படும் அணிகளின் முதலாளிகள் திறமையான ஆட்டக்காரர்களைத் தேடி சந்தைக்கு வருகிறார்கள். தமது திறமையை ஒரு சரக்காக பாவித்து அதை நல்லவிலைக்கு விற்றுக்கொள்ள ஆட்டக்காரர்களும் சந்தைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் அவரவர் தனித்துவமான திறமைக்கேற்ற விலை. நல்ல ரகமான ஒசத்தி சரக்குகளுக்கு கிராக்கி இருக்கும் என்பதை இந்த ஆட்டக்காரர்களிடமிருந்து தான் வாக்காளர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்டோம். சந்தைக்கலாச்சாரம் திறந்து விட்டிருக்கிற இந்த வாய்ப்பை எங்களைப் போலவே தங்களது கட்சியும் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே கவர்ச்சிகரமான பல திட்டங்களுடன் எங்களது ஏலமுறையை வகுத்துள்ளோம்.

திட்டம் - 1 

நெல்வரி தொழுவர் என்கிற அறுவடையடிமைகள், கிளாடியேட்டர்ஸ் என்னும் போர்க்கலை அடிமைகள், வயித்துச்சோத்து ஆள்காரர் என்ற பண்ணையடிமைகள் ஆகிய முன்மாதிரிகளை சற்றே மாற்றி உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் கூடுதல் செலவு பிடிக்கக்கூடியது. ஆனாலும் நீண்டகால நோக்கில் பெரிதும் பலன் தரக்கூடியது. இதன்படி  ஒரு தொகுதியிலுள்ள குடும்பங்கள் அனைத்தையும் மொத்தக் கிரயமாக விலைபேசி வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு வாங்கப்பட்டவர்களை நன்றாக பராமரித்து, வரக்கூடிய எல்லாத் நேர்தல்களிலும் வாக்காளர்களாக பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிக ஒளியுமிழும் விளக்கை எரியவிட்டவுடன் முட்டையிட்டுவிடும் கோழிகளைப் போன்ற இவர்களை வாங்குவது குடும்ப/வாரீசு அரசியல் நடத்த விரும்புகிறவர்களுக்கு உகந்த திட்டமாக இருக்கும்.

அழுகும் பொருள், மக்கும் குப்பை என்பதுபோல வாக்காளர்களைக் கருத வேண்டியதில்லை என்றாலும் கொஞ்சம் சேதாரம் இருக்கும் என்பதுதான் இத்திட்டத்திலுள்ள ஒரேயொரு பாதகமான அம்சம்- Risk factor வாக்கு தவறுவது வேட்பாளர்களின் புத்தியே தவிர வாக்காளர்களுடையதல்ல. என்றாலும் கட்சிமாறிகள் என நீங்கள் சந்தேகிக்கும் எந்தவொரு அயிட்டத்தின் காலிலும் கண்காணிப்புக்கருவிகளை பொருத்திவிடுவதற்கு எமது அமைப்பு விதி 16 ன் 7வது ஷரத்து அனுமதிக்கிறது. ஆனால் மனித உரிமை மீறல் என்று கிளம்பும் கூச்சல்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு உங்களுடையது.
  
திட்டம்-2 

தொகுதி வாக்காளர்கள் அனைவரையும் வாங்க முடியாதவர்களுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை பால்மாடுகள், பொலிகாளைகள் அல்லது நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அனுபவம் உள்ளவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இதன்படி நீங்கள் யாரை ஏலமெடுத்தாலும் அவர்கள் வாக்களிக்கத்தக்க பருவமான 18 வயதிலிருந்தே உங்கள் பெயரால் உங்களது மேற்பார்வையில் வளர்க்கப்படுவார்கள். பிற கட்சியினர் அணுக முடியாவண்ணம் பலஅடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வளர்க்கப்படும் இவர்களது விசுவாசம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. கட்சித்தாவல் மனப்பான்மையை 100 சதம் நீக்கி பதப்படுத்தப்படுகிற இவர்கள் ஒருவேளை அவசரநிலைப் பிரகடனம் அமலாகி வாக்குரிமையே பறிக்கப்பட்டாலும்கூட மானசீகமாக உங்களது வாக்காளர்களாகவே நீடிப்பார்கள். ஜனநாயகம் மீட்கப்பட்டு மீண்டும் நேர்தல் வரும்போது மற்றவர்களைப் போல திடுமென வாக்காளர்களைத் தேடியலையும் இக்கட்டான சூழல் இத்திட்டத்தில் சேர்கிற வேட்பாளர்களுக்கு ஏற்படாது என உறுதியளிக்கிறோம்.  ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து பழங்காலத்து பண்ணையடிமைகளுக்கு இட்டது போல இவர்களது மார்பிலோ நெற்றியிலோ சூட்டுக்குறியாக தங்களது சின்னத்தைப் பொறிக்க முயற்சிக்கும் கட்சிகள்/ வேட்பாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கிறோம். கடற்கரைப் பட்டினங்களை ஆக்கிரமித்திருந்த போர்த்துக்கீசியர்கள் இளம்பெண்களை விலைக்கு வாங்கி அனுபவித்துவிட்டு விற்றுவிட்டுப் போனதைப் போல, ஏலத்தில் எடுத்துவிட்டோம் என்ற எகத்தாளத்தில் எமது பெண் வாக்காளர்களிடம் யாரேனும் எடாகூடமாக நடக்க முயற்சித்தால் அவர்களது உரிமமும் ரத்துசெய்யப்படும். அத்துடன் அவர்கள் முக்கியமான நரம்பினையும் இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் வைக்கவும்.

திட்டம் 3

அரசியலில் நிச்சயமற்றத்தன்மை நிலவுவதாலும், தொகுதி ஒதுக்குவதில் கட்சித் தலைமைகள் பல குளறுபடிகளை கையாள்வதாலும் சரக்குகளை மொத்தமாக வாங்கிவைத்தால் வீணாகிப் போய்விடுமோ என்று தயங்குகிறவர்கள் துணிந்து இத்திட்டத்தில் சேரலாம். அதாவது அந்தந்த நேர்தலுக்கு தேவையான அளவுக்கு மட்டும் ஏலமெடுத்துக் கொள்வது என்ற இத்திட்டம்தான் இப்போது சந்தையில் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘இது கூட்டணியல்ல வெறும் தொகுதிப் பங்கீடுதான்’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வது போன்றதொரு திட்டம். முதலிரண்டு திட்டங்களைப்போல இதில் வாக்காளர்களோடு பிணைப்போ பொறுப்போ பராமரிப்புச் செலவுகளோ கிடையாது. நேர்தல் முடிந்தால் நீ யாரோ நான் யாரோ என்று போய்க் கொண்டேயிருக்கலாம். Disposable Cup/ Use and throw முறைகளின் உந்துதலால் உருப்பெற்றுள்ள இத்திட்டம் நூற்றுக்கு நூறு சதம் வியாபார நெறிகளையும் விதிகளையும் அடிப்படையாகக் கொண்டது. 

என்னதான் ஏலத்தில் எடுத்தாலும் வாக்காளர்களின்  பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி வாக்கு கேட்பதுதான் சரியான முறை என்கிற ஒரு மனப்பதிவு வேட்பாளர்களிடம் பொதுவாக காணப்படுகிறது. இப்படியான வேட்பாளர்களுக்கென்றே செய்யப்பட்டுள்ள பிரத்யேக ஏற்பாடுதான் கால்பிடிக் கால்வாய். பொக்லைன் வைத்து டெலிபோன் கேபிள் அல்லது பாதாள சாக்கடைக்கு தோண்டுவதுபோல ஆறடி ஆழத்திற்கு துட்டுஸ்தான் முழுக்க ஒரு கால்வாயை எமது அமைப்பு வெட்டியுள்ளது. கால்வாயின் இருகரைகளிலும் வாக்காளர்கள் அணிவகுத்து வரிசையாக நிற்பார்கள். கால்வாய்க்குள் வேட்பாளர் இறங்கி நின்றால் அவரது தலைமட்டத்திற்கு இணையாக மேலே கரையில் நிற்கிற வாக்காளர்களின் பொற்பாதங்கள் தெரியும். அப்படியே விறுவிறுவென்று ஒவ்வொருத்தர் காலையும் தொட்டுத்தொட்டு கண்ணில் ஒற்றி கும்பிட்டுவிட்டு போய்க்கொண்டேயிருக்க வேண்டியதுதான். தனித்தனியாக ஒவ்வொருவர் காலுக்கும் குனிந்து குனிந்து நிமிர்வதால் ஏற்படும் உடல் அசதியை தவிர்க்கலாம். நேரத்தையும் மிச்சம் பிடிக்கலாம். 

கால்பிடிக் கால்வாய்க்கான தேதியும் நேரமும் முதலில் வருவோர்க்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். முதலில் வருவோர்க்கே முன்னுரிமை என்ற தந்திரத்தைக் கையாண்டு கடந்தகாலத்தில் நடந்த முறைகேடுகளை எண்ணி கவலைகொள்ளத் தேவையில்லை. மிகவும் வெளிப்படையாகவே ஒதுக்கீடு நடைபெறும். இடைத்தரகர் மூலமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. 

குறிப்பு: ஒரு திட்டத்தில் வாங்கப்பட்ட வாக்காளர்களை வேறோரு திட்டத்திற்கு மைக்ரேட் செய்துகொள்ளலாம். அதுபோலவே ஏலம் தீர்ந்த சரக்குகளை இன்னொரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ கைமாற்றிக் கொடுப்பதற்கும் ‘போர்டபிலிட்டி’ வசதி உள்ளது. இதற்கென நீங்கள் கூடுதலாக சேவைக்கட்டணமோ, மண்டிக்கான கமிஷனோ செலுத்த வேண்டியதில்லை. (இச்சலுகை சரக்கு இருப்புள்ளவரை மட்டுமே).

நல்லது தலைவர்களே, இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அருகாமையிலுள்ள எமது துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவையின் கிளை மண்டி ஒன்றுக்கு வருகை தருவது மட்டும்தான். வயதையும் திறமையையும் குறிக்கும் பட்டயங்களை கழுத்தில் மாட்டி சந்தையில் நிறுத்தப்பட்ட அடிமைகளை கிள்ளியும் அடித்துப் பார்த்தும் வாங்கியது போன்ற புராதனச் சிரமங்கள் ஏதும் இப்போது இல்லை. திரண்டிருக்கின்ற வாக்காளர்களிலிருந்து உங்களுக்கு பிடித்தமானவர்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஓட்டுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல ஒரு விலையை குடும்பத்தலைவர் தீர்மானித்து வைத்திருப்பார். சந்தையில் ஆடு மாடு வாங்கிய அனுபவமிருந்தால் நீங்களே நேரடியாக அவரிடம் துண்டுபோட்டு பேரம் நடத்தி தரகருக்கான கமிஷனை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அனுபவமில்லாதவர்கள் நம்பகமான இடைத்தரகர் ஒருவரை அழைத்துவந்தும் பேரம் பேசலாம். ஆனால் இடைத்தரகர்கள் பேசும் பேரங்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு பிற்காலத்தில் வெளியானால் அதற்கு து.வா.வ.பே நிர்வாகம் எந்தவகையிலும் பொறுப்பல்ல.

பேரம் படிந்த வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட ஒரு நேர்தலில் மட்டும் உங்களுக்கு வாக்களிக்க கடமைப்பட்டவர்கள். மறுபடியும் விழிப்போம் என்ற நம்பிக்கை இருந்தால்தான் தூங்குவதற்கு கண்மூட முடியும். எனவே வாக்காளர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். வெத்திலை/ பாற்சொம்பு மீது சத்தியம் வாங்கும் காலாவதியாகிப்போன உத்திகளை கையாண்டு அவர்களை அவமதித்துவிடாதீர்கள். ஏனென்றால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் அவர்களை நம்பியே நீங்கள் களமிறங்கப் போகிறீர்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிக தலைகளை வாங்குகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் வெற்றியின் அருகே செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாருங்கள். வாரத்தில் ஏழுநாட்களும் 24 மணிநேரமும் எமது மண்டிகள் உங்களுக்காக திறந்தே இருக்கின்றன...

ஏலத்தில் பங்கெடுக்க வருகிற கட்சிகள் /வேட்பாளர்கள் மட்டும் வாசிக்க 

1. கொள்கை, கோட்பாடு என்று கவைக்குதவாத விசயங்களைப் பேசிக்கொண்டு  கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் என்று அல்லாடுகிறவர்களை வேட்பாளர்களாக ஏலத்துக்கு அழைத்து வருவதை தவிர்ப்பது நல்லது. மனசாட்சியைத் தூண்டிவிட்டு நமக்கெதிராக நாமே நிற்கும்படியான ஆபத்தை விளைவிக்கும் இவர்களை கடந்தகாலத்தைப் போலவே என்றென்றைக்கும் விலக்கிவைப்பதென்ற து.வா.வ.பே.யின் தீர்மானம் குறித்த உமது நிலைபாட்டை அறிய விரும்புகிறோம்.

2. வாகனச்சோதனை என்ற பெயரில் டவுன்பஸ்சிலும் ஷேர் ஆட்டோவிலும் ஏறி பயணிகள் வைத்திருக்கும் சில்லரைக் காசுக்கெல்லாம் முறையான ஆவணங்களைக் கேட்பது, ஆட்டுப்பட்டிகளுக்குப் போய் கூடுதலாக கிடா வாங்கியவர்களின் விவரங்களைக் கேட்பது, பிரியாணி அண்டாவை ஒளித்து வைக்குமாறு ஓட்டல்களை மிரட்டுவது போன்ற நேர்தல் கமிஷனின் ஜனநாயகவிரோதச் செயல்பாடுகள் வாக்காளர்களையும் வேட்பாளர்களையும் தேவையற்ற பீதியில் ஆழ்த்துவதாக உள்ளது. இதனால் நேர்தலுக்கு ஆறுமாதங்களுக்கு முன்பே கப்பலில் வந்த பணம் முழுவதும் ஆங்காங்கே கன்டெய்னர்களில் முடங்கி கரையான் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தை இறக்க முடியாமல் நீங்கள் படுகிற அவஸ்தைகளை நாங்களறிவோம். நியாயமான முறையில்தான் துட்டுஸ்தானில் நேர்தல் நடக்கிறது என்று வெளியுலகத்தை நம்பவைக்க ரெய்டு அதுஇது என்று கொஞ்சம் ஃபிலிம் காட்டுவதை நாங்கள் தவறென்று சொல்லவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நேர்தல் கமிஷன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தருகிறதோ என்ற ஐயப்பாடு உருவாகியுள்ளது. நேர்தல் கமிஷனின் தேவையற்ற இத்தகைய கெடுபிடிகளால் பணப்புழக்கம் தடைபட்டு  பங்குச்சந்தையே சரிவு கண்டு நாட்டின் பொருளாதாரமே ஆட்டங் கண்டுள்ளது.

சரி, இந்த நேர்தல் கமிஷன் இதுவரைக்கும் என்னதான் செய்திருக்கிறது? நேர்தலை நடத்தி யார் கெலித்தார்கள் என்று அறிவிக்கிறது. யார் கெலிப்பார்கள்? எங்களிடம் யார் அதிக வாக்காளர்களை பேசி முடிக்கிறார்களோ அவர்கள்தான். ஆக, நேர்தல் என்பது முழுக்க முழுக்க வாக்காளர்களாகிய நாங்களும் வேட்பாளர்களாகிய நீங்களும் சம்பந்தப்பட்டதாய் இருக்கும்போது இதில் நேர்தல் கமிஷனுக்கு என்ன வேலை? நமக்கிடையேயான பேரத்தை மிகவும் வெளிப்படையாக நடத்தி வெற்றி  தோல்வியை அறிவிக்க எங்கள் அமைப்பு உருவாகிவிட்ட நிலையில் நேர்தல் கமிஷன்  என்ற அமைப்பையே கலைத்துவிடலாம் என்ற எங்களது கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அவ்வாறு கலைக்கப்பட்டுவிட்டால் ஆட்களுக்கான சம்பளம்,  சுழல்விளக்கு பொருத்தின கார், மேலிடப் பார்வையாளர்களுக்கான பயணப்படி, கண்காணிப்பு காமிரா ஆகிய தேர்தல் செலவினங்களைத் தவிர்த்துவிட முடியும். பெருந்தொகை மிச்சமாகும். வேட்புமனு தாக்கல்- பரிசீலனை- இறுதிப்பட்டியல் வெளியீடு- பிரச்சாரம்- வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு- முடிவு அறிவிக்க ஒருமாதம் காத்திருக்க வைத்து மண்டைகாய விடுதல் என்ற ஜவ்விழுப்பான நடைமுறைகளால் இனி நமது நேரமும் வீணாகாது என்ற அம்சங்களையும் கணக்கில் கொள்ளவும்.

இடம் மாறுகிறது.

துட்டுஸ்தான் வாக்காளர் வணிகப் பேரவையின் கிளை மண்டிகள்.

கப்பல் போன்ற கார்களில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்திறங்குகின்றனர். கூட்டணியமைத்துக் கொண்டவர்கள் ஒரேகாரில் முன்சீட்டிலும் பின்சீட்டிலும் அள்ளையில் தொற்றிக்கொண்டும் வருகின்றனர். சொந்தமாக கார் இல்லாத கட்சிகளின் தலைவர்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்துள்ளனர். இரண்டுக்கும் ஏலாதவர்கள் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களிலும்  நடந்துமாக அவ்விடம் வந்து சேர்கின்றனர். (இப்படி காருக்கு கதியற்ற அன்னக்காவடிகளெல்லாம் உலாவித் திரிய அரசியல் என்பது சத்திரமா சாவடியா? )

இதோ திரை உயர்கிறது. இன்னும் கொஞ்நேரத்தில் ஏலம் தொடங்க இருக்கிறது.


புதன், மே 11

பறக்கும் படைக்கு றெக்கையில்லை - ஆதவன் தீட்சண்யா

திங்கட்கிழமை (9.5.16) புதுச்சேரி சென்றிருந்தேன். காலை எட்டுமணிவாக்கில் திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூரில் சாலையோரம் நின்றிருந்த தேர்தல் பறக்கும்படை ஊழியர்கள் எங்களது வாகனத்தை நிறுத்தினர். தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் ஓரிருவரையும், தமிழ்நாட்டவர் அல்லாத ராணுவஆட்கள் சிலரையும் கொண்டது அப்படை. ஆயுதம் தாங்கிய ஒரு ராணுவன் டாஷ்போர்டு, பை, டிக்கி ஆகிய மூன்று இடங்களையும் சோதித்தார். அதை ஒருவர் காணொளியாக பதிவு செய்துகொண்டார். சோதனையின்போது இன்னொரு ராணுவன் தனது இயந்திரத் துப்பாக்கியை கிட்டத்தட்ட தயார் நிலையில் வைத்திருந்ததைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. அவ்வளவுதான் சோதனை, அனுப்பிவிட்டார்கள். அடுத்து திண்டிவனத்திற்கு முன்பாக இன்னொரு பறக்கும்படைக் குழு நிறுத்தியது. மேற்சொன்ன மூன்று இடங்களில் மட்டும் அதேரீதியில் சோதித்தப் பிறகு அனுப்பிவிட்டார்கள். மூன்றாவது சோதனை புதுச்சேரியின் நுழைவாயிலில். எங்களது வண்டிக்குப் பின்னே வந்த மினிலாரி ஒன்றும் நிறுத்தப்பட்டது. உள்ளே என்ன இருக்கிறது என்று அதன் ஓட்டுநரிடம் பறக்கும்படை காவலர் ஒருவர் கேட்டார். ஆஸ்பத்திரிக்கு பிரட் எடுத்துனு போறன் சார் என்றார் ஓட்டுநர். சரிசரி அதுல ஒன்னு குடுத்துட்டுப் போய்க்கினே இரு என்கிறார் காவலர். வழியில் இப்படி கேட்பார்கள் என்று எதிர்பார்த்தோ என்னவோ அந்த ஓட்டுநர் தன் இருக்கைக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தவற்றிலிருந்து ஒரு பிரட்டை எடுத்து நீட்டிவிட்டு எங்களுக்கும் முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார்.

அன்று மாலை திரும்பிவரும் போதும் இதேபோல நான்கு இடங்களில் நிறுத்தப்பட்டோம். நான்கில் மூன்று காலையில் நிறுத்தப்பட்ட அதே இடங்கள். வாகனத்திற்குள் சோதிக்கப்பட்ட இடங்களிலும் மாற்றமில்லை, அனுப்பிவிட்டார்கள்.    

ஒரு வாகனத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் பணத்தை மறைத்துவைத்து கடத்துவார்கள் என்று இந்தப் பறக்கும் படைக்கு யார்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? எந்த இடத்தில் சோதனை நடக்கிறது என்று தோது பார்க்காமலா பணம் அல்லது பொருளைக் கடத்துவார்கள்? ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகும் பிரட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டு மினிலாரியை அனுப்பிவைக்கும் இவர்கள், ஒருவர் பணமூட்டையை ஏற்றிக்கொண்டு வருவாரேயானால்  நேர்மையாக மடக்கிப் பிடித்துவிடுவார்களா? 

பணம் அல்லது பொருட்கள் மூலமாக நடக்கும் ஓட்டுவியாபாரத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்கிற வெகுமக்கள் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே, பெரும் பொருட்செலவிலும் ஆள்விரயத்திலும் இத்தகைய ஜோடனையான சோதனைகள் நடத்தப்படுகின்றனவோ என்கிற ஐயமே மிஞ்சுகிறது. 


திங்கள், ஏப்ரல் 25

கதிர்காமம் போய்ச் சேராத காவடிகள் - ஆதவன் தீட்சண்யா



மணல்வீடு இலக்கிய வட்டம் 24.04.2014 அன்று சேலத்தில் நடத்திய விமர்சன அரங்கில் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் குறித்து வாசிக்கப்பட்ட  கட்டுரை

1970 ஆம் வருடத்திய இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியடைந்தன.

உயர் கல்வியில் பின்தங்கிய பிரதேசத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் பெயரால் இலங்கை அரசு ‘தரப்படுத்துதல்’ திட்டத்தை கொண்டுவந்தது. இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், சமூக நீதியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு முதலடி இது. அதேவேளையில் வரலாற்றுரீதியாக, குறிப்பாக பிரிட்டிஷார் காலத்திலிருந்தே பிற சாதியினரை ஒடுக்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூடுதல் பிரதிநிதித்துவம் பெற்று வந்திருக்கிற யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரது ஏகபோகத்தை பாதிப்பதாகவும் அமைந்தது. அவர்கள் தமக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பாதிப்பதாக முன்னிறுத்தினர். பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு பிறபகுதி மாணவர்களை விட தாங்கள் கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ள தரப்படுத்துதலை எதிர்த்த மாணவர் போராட்டம் அங்கு தீவிரமடைந்தது. இது, இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்தியாவில் உயர் சாதியினர் இன்றளவும் நடத்திவரும் போராட்டத்தோடு பெரிதும் ஒத்துப்போகும் தன்மைகொண்டது. 

1976 மே 15ம் தேதி தமிழர் ஐக்கிய முன்னணியின் மாநாடு வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூளை என்று முன்பு வர்ணிக்கப்பட்டவரும் 1960களின் பிற்பகுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை தொடங்கி நடத்தியவருமான வி.நவரத்தினம் என்பவரால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்கிற கருத்தாக்கம் உள்வாங்கப் பட்டு வட்டுக்கோட்டை மாநாட்டில்  தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் 1974 செப்டம்பர் 1ம் நாள் காமன்வெல்த் பாராளுமன்றவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மனுவிலேயே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான தொடக்கநிலைக் கூறுகளை காண முடிந்தது.

ஆட்சிமொழியாக சிங்களத்தை மட்டுமே ஆக்கியது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணக்கையை குறைத்தது, தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்தியது, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள்- ஒன்பது பேரின் உயிரிழப்புகள், அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த இனக்கலவரங்கள் என இலங்கை ஆட்சியாளர்களிடையே சிங்கள பேரினவாதம் திரண்டுவந்தது. அது ஓர் இனம் என்ற வகையில் தமிழர்களுக்குரிய பல்வேறு ஜனநாயக உரிமைகளையும் பண்பாட்டு தனித்துவத்தையும் ஏற்க மறுத்தது. இந்த நிலைமைகளும், தரப்படுத்துதலுக்கு எதிரான வெள்ளாள மேட்டுக்குடியின் கொந்தளிப்பான குமைச்சலும் 1977 ஆம் வருடத்திய பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அமோக வெற்றியைத் தந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் கிடக்கையும் இதிலடங்கும். இவ்வெற்றியானது தனிஈழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கிடைத்த ஒப்புதலாக முன்னிறுத்தப்பட்டது. தமிழர்கள் நாட்டைத் துண்டாடப் பார்க்கிறார்கள் என்று ஏற்கனவே சிங்களவர்களிடம் முளைவிட்டிருந்த பிரச்சாரம் ஒரு வெறியாக கிளப்பிடப்பட்டது. அவர்களது வெறிக்கு எளிய இலக்காக முதலில் சிக்கியவர்கள் மலையகத்தவர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள்.

யாழ்ப்பாணத்தவர்கள் கேட்கும் தனி ஈழம் இந்த இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்ளடக்கியதில்லை. ஆனாலும் சிங்களவர்கள் மலையகத் தமிழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். தமிழீழத்திற்கான ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் ராணுவத்துக்கும்/ சிங்களவர்களுக்கும் இடையே எங்கு கலவரம் மூண்டாலும் அதற்கான தண்டனையை இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு சிங்களவர்கள் வழங்கினர். அவர்களது வன்முறைக்கு காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் துணை நின்றது. பிறந்த வளர்ந்து பாடுபட்டு உருவாக்கிய மலையகத்திலிருந்து வேறெங்காவது தப்பியோடினால் தான் குறைந்தபட்சம் உயிரையாவது தற்காத்துக்கொள்ள முடியும் என்கிற உளவியல் முற்றுகைக்கு இந்த மலையகத் தமிழர்கள் ஆட்பட்டனர். எனவே அவர்களில் சிலர் மலையகத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இடம்பெயரத் தொடங்குகிறார்கள். ஆதிரை நாவல் மிகச் சரியாக இந்த இடத்தில் தொடங்குகிறது. ஆனால் அது தனி ஈழக் கோரிக்கை உருவான இந்த வரலாற்றுப் பின்புலத்திற்குள் நுழையாமல் ( நுழைய வேண்டிய தேவையை இந்த நாவலின் அமைப்பு கோரவுமில்லை) அதற்கான ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்கள், அவை நடந்த விதம், போரினூடாக மக்களது பாடுகள், ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களினதும் போராளிகளினதும் நிலை என்பது வரையாக நீண்டு முடிகிறது. 

‘ஒண்டரை லட்சம் சனங்களையும் நாற்பதாயிதரம் பொடியன்களையும்’ கொன்று தனிஈழத்திற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. வெறும் எண்களாக சுருக்கிச் சொல்லப்படும் இந்த மக்களை எவ்விதமான துன்பதுயரங்களுக்கு ஆட்படுத்தி இலங்கை அரசாங்கம் கொன்றொழித்தது என்பதை கொல்லப்பட்டவர்களின் சார்பான நிலையிலிருந்து சொல்கிறது ஆதிரை. ஒதியமலையில் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நடராசனின் பிணத்தை பார்ப்பதிலிருந்து லெட்சுமணனை தடுத்துவிட முதலில் நினைக்கிற அத்தார் பிறகு வெறியும் வன்மமும்  மேவ ‘அவன் பார்க்க வேணும். இந்தக் கோலத்தை அவன் காண வேணும். தமிழன் எண்ட பெயரைத் துரத்தி வருகிற அழிவையும் பேயாட்டதையும் அவன் அறிய வேணும்...’ என்று பார்க்கவிடுகிறான். இந்த நாவலின் முதன்மை நோக்கமும் கூட அதுதான். நடராசனின் பிணத்தை பார்க்கச் செய்வதனால் லெட்சுமணனிடம் எதிர்பார்க்கப்படும் மனமாற்றத்தை தனது வாசகர்களிடமும் எதிர்பார்க்கிறது நாவல். அதற்காகவே அது ஒவ்வொரு தனிச்சாவுகளையும் கூட்டுக்கொலைகளையும் கொப்பளிக்கும் ரத்தத்தின் சூட்டோடும் தெறித்த சதைத்துண்டத்தின் பிசுபிசுப்போடும் நமக்கு காட்டத் துடிக்கிறது.

தனி ஈழக் கோரிக்கை, அதற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டம், போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள், குழுக்களுக்கிடையே பகை, குழுக்களுக்குள்ளேயே நிலவிய கருத்து மாறுபாடுகள், விசுவாசிகள், துரோகிகள், பிற போராளிக்குழுக்கள் பலவற்றையும் அழித்து விடுதலைப்புலிகள் ஏகத்துவம் பெறுதல், புலிகளின் குணநலன்கள், ஆயுதபலம், சாகசங்கள், தியாகங்கள், புலிகள் நடத்திய தனி அரசாங்கத்தின் கீழ் மக்களது அன்றாட வாழ்க்கை, பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைகள், உடன்படிக்கை என்று சொல்லிக்கொண்டே நடந்த மோதல்களும் மீறல்களும், இந்தப் போராட்டத்தையும் போராளிக்குழுக்களையும் குறித்து சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்த வெகுமக்களின் கருத்து ஆகியவற்றை வகைமாதிரியான கதாபாத்திரங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் வழியே நாவல் முன்வைக்கிறது.

தன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் சாதியம், பின்தங்கியப் பகுதியான வன்னிக்கு இடம் பெயர்ந்த நிலையைக்கூட குறைந்த கட் அப் மதிப்பெண்ணில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனையும் யாழ்ப்பாண வெள்ளாளத்துவ மனம்,  இயக்கத்தில் சேர்ந்துவிடும் முன்பாக அல்லது இயக்கத்தவரால் பிடித்துச் செல்லப்படுவதற்கு முன்பாக மொத்தச் சொத்தையும் அழித்தாவது தன் பிள்ளைகளை  வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வைக்கும் மேட்டுக்குடியினரின் தந்திரம், கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவிப்பதற்காக செய்விக்கப்படும் இளம் வயது திருமணங்கள், பொய்க் கல்யாணம் செய்வித்து காட்டப்படும் போலி ஜோடிகள், பொய்க்கல்யாணம்தான் என்றாலும் அவனோடு படுத்திருக்க மாட்டாளா என்று பெண்ணை சந்தேகிக்கும் ஆண்வீட்டார், முஸ்லிம்களுடன் ஏற்பட்ட திருகல் நிலை- கட்டாய வெளியேற்றம், மலையகத் தமிழர்கள் குறித்த கீழான பார்வை - இப்படியாக  போர்ச்சூழலிலும் வெளிப்படும் மனித இழிவுகளை கவனத்தோடு பதிவு செய்கிறது ஆதிரை. அதேவேளையில் இவ்வளவு ஏறுமாறுகளுக்கும் இடையில் சனங்கள் ஒன்றையொன்று அனுசரித்து உயிர்வாழப் பதைக்கும் மனோநிலை வெளிப்படும் தருணங்களையும் கவனப்படுத்துகிறது.  தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட அவகாசம் அற்றவர்களாக ஓடிய அவர்கள் ஒருகட்டத்தில் காயமடைந்தவர்களையும்கூட அப்படியே விட்டுவிட்டு ஓடும் அவலநிலைக்கு ஆளாவது குறித்த உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிணங்களைத் கைவிடத் தொடங்கியவர்கள் கடைசியில் மனிதர்களையும் கைவிட்டு அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு என்கிற நிலைக்கு ஆளான போதும் தாங்கள் வளர்த்த ஆடுமாடுகள், கோழிகள், மரம் செடிகொடிகள், குலதெய்வம் என்று எதுவொன்றைப் பற்றிய கவலையையும் அக்கறையையும் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். 2009 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்கையில்  நெடுஞ்சாலையின் மருங்குகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் அநாதையாய் திரிந்ததைக் கண்ட போது எனக்கேற்பட்ட துக்கம் சொல்லி மாளாதது. இடம் பெயர்ந்து ஓடும் பதைப்பிலும் பெண்ணொருத்தி ‘விதியிருந்தால் மறுபடியும் சந்திப்போம்’ என்று தான் ஆசையாய் வளர்த்த மாடுகளை அவிழ்த்து காட்டுக்குள் ஓட்டிவிடும் துயரத்தை என்னவென்ற சொல்வது? தனக்கொரு குழந்தையில்லையே என்று காலம் முழுவதும் தீராக்கவலையில் உருகிக்கிடந்த சந்திரா, போரினால் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்களையும் உளவியல் சிதைவுகளையும் காணப் பொறுக்காமல் ‘என்ர வயித்தில்  உயிரொண்டும் சனிக்காதிருந்ததுக்கு நன்றியப்பா..’ என்று சொல்லும் நிலையைத்தான் போர் உருவாக்கியதா என்கிற கேள்வியையும் நாவல் எழுப்பிப் போகிறது.

கைக்கு சிக்கிய தமிழ் இளைஞர்களை பிடித்துவந்து சித்ரவதை செய்கிற ராணுவத்தினர் கடைசியில் புலிச்சீருடையை அணிவித்து சுட்டுக்கொல்வது ( வீரப்பனைப் பிடிப்பதாக காட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இப்படி பழங்குடி இளைஞர்களை தேவாரம் சுட்டுகொன்றதை சோளகர் தொட்டியில் காணலாம்),   இசை நிலா ஒளிநிலா என்று பெயர் வைத்திருப்பதைக்கூட உன்னிப்பாக கவனித்து ஒரு ராணுவத்தான் கேள்வியெழுப்பும் போது பெயரை மாற்றி விடுகிறோம் என்று பதைப்போடு தாய் சொல்வது, வீட்டில் தனக்கு வைத்த பெயரே தூயவன் தான், ஆனால் ஆமிக்காரன் நம்பமறுக்கிறான் என்று ஒருவன் பகடியாக சொல்வது, யாருடைய காயத்திலிருந்தோ பெயர்ந்து விழுந்திருந்த ரத்தம் தோய்ந்த பஞ்சை எடுத்து வெடியோசை கேட்காமலிருக்க குழந்தையின் காதில் அடைப்பது என்று சிறுசிறு காட்சிகள் வழியே நிலைமையின் தீவிரத்தை நம்மால் உணரமுடிகிறது. 

நடராசனின் பிணத்தை மூன்றாம் மனிதனாக ஓடிப்போய் பார்க்கிறவன், இந்திய அமைதிப் படையினரால் (?) கொல்லப்பட்ட சிங்கமலையின் பிணத்தை அவரது மகனென்ற முறையில் பார்க்கிறவன், தாய்தகப்பன் போல காத்துவளர்த்த சந்திரா-அத்தார் தம்பதியரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டவன், இறுதியில் ராணுவத்திடம் பிடிபட்டு விசாரணைக்கூடத்தில் சித்ரவதைக்கு ஆட்பட்ட போதும்  தனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறவன் என வெவ்வேறு நிலைகளில் காட்டப்படும் லெட்சுமணன்- குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் குறியீடாக தெரிகிறான். அதாவது ஆயுதம் தாங்கிய இரு தரப்பாருக்கு இடையிலானதாக போரில் பாவம் இந்த ஆள் மாட்டிக்கொண்டாரே என்று விலகியிருந்து பரிதாபப்படுவது, போரினால் தானே பாதிக்கப்படும் பொழுது ஆவேசம் கொள்வது, பரிதாபம் அல்லது கோபத்தை விடவும் நேரடியாக தானே களமிறங்குவது, அதற்கான விளைவைச் சந்திப்பது என்கிற நிலைகளை அங்கு தமிழ்ச்சமூகம் எட்டியதன் குறியீடு. ( ‘தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை?’ என்கிற கேள்விக்கும், போரின் முடிவில் ராணுவத்திடம் பிடிபட்டவர்களில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்களும் இடம் பெற்றது எங்ஙனம் என்பதற்கும் இவனது குடும்பத்தின் வழியாக விடை கிடைக்கிறது.) 

அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் யாவும் நம்மை அவமானத்தில் ஆழ்த்துகின்றன. கன்டோன்மெண்ட் என்கிற பெயரிலான ராணுவ முகாமிடங்களில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 10 முதல் 15 பாலியல் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக நியமித்து வல்லுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் எச்சில்பால் குடித்து வளர்ந்த இந்திய ராணுவம் இத்தகைய மனிதப்பண்பற்ற செயல்களை பிதுரார்ஜிதமாக பெற்றிருக்கிறது. நானும் இந்தியன் தான் என்று கதறுகிற எத்தனையோ சிங்கமலைகளை அது கொன்றிருக்கிறது. ‘பெத்தத் தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்... இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா’ என்று சபித்தவாறே இடதுமார்பில் கத்தியை பாய்த்துக் கொண்டு செத்துப்போன எத்தனையோ தாய்மார்களின் பிணங்களை பதக்கங்களாக குத்திக் கொண்டிருக்கிற பலர் அதில் இருக்கிறார்கள்.

ஆயுதக்குழுக்களை தனிமைப்படுத்துவதற்காக வெகுமக்கள் மீது ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட கண்காணிப்புகளும் சித்ரவதைகளும் மனிதகுலம் இதுவரை காணாத கொடூரங்களின் பூமியாக தமிழர் நிலத்தை மாற்றிவிட்டது. போரின் முடிவில் பிடிபட்ட போராளிகளை இலங்கை அரசும் ராணுவமும் நடத்திய விதம் சர்வதேச கண்டனங்களைப் பெறுமளவுக்கு கீழ்த்தரமானவை, மனிதவிரோதமானவை. போருக்குப் பிந்தைய புனர்வாழ்வில் பங்கெடுப்பதாக சொல்லிக் கொண்டு வந்துள்ள தன்னார்வ அமைப்புகள், தனவந்தர்கள், கனவான்கள் ஆகியோரது செயல்பாடுகள் மேனாமினுக்கித்தனமானவை என்பதையும் யாருக்காக போராடினார்களோ அவர்கள் முன்னாள் போராளிகளை நடத்தும் விதம் குறித்த விமர்சனங்கள் நாவலுக்குள் பொருந்தி நிற்கும் வண்ணம் முன்வைக்கப்படுகிறது. முன்னாள் போராளி என்பதாலேயே  வெள்ளையனை காவலாளி வேலையில் வைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தவர் மறுத்துவிடுவதும், கடைசியில் அவன் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை தோண்டியெடுத்து செயலிழக்கச் செய்யும் வேலையில் ஒரு என்.ஜி.ஓவிடம் சேர்வதும்,  முன்னாள் போராளிகளின் கைவிடப்பட்ட நிலையைக் காட்டுவதற்கு போதுமானதாயிருக்கிறது.

தான் பிறந்த சிற்றூரைத் தவிர வேறு திசைகளை அறியாத மக்களின் வாழ்வையும் சாவையும் எங்கோ இருக்கிற அமெரிக்காவும் பிரிட்டனும் சீனாவும் இந்தியாவும்  தீர்மானிக்கும் படியாய் விட்டுவிட்டு இயக்கத்தலைமை முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டது. கடைசி நேரத்தில் கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தைகளைக் கூட பிடித்துப் போய் ஆயுதம் தரிக்க வைத்தது, ராணுவத்திடம் பிடிபடும் தருவாயில்கூட வெகுமக்களை விடுவிக்காமல் ஆயுதமுனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஆகியவற்றின் மூலம் இவ்வளவு கூடிய உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் இயக்கமும்கூட காரணமாக இருந்துவிட்டது என்று இதற்கு முன்பாக சிலர் முன்வைத்த விமர்சனங்களை இந்த நாவலும் வழிமொழிகிறது. ‘காய்ந்த கட்டாந்தரைக்கு தண்ணீர் பாய்ச்சியது’ போலாகிவிட்டதோ என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டே, இத்தனைக்குப் பிறகும் இயக்கத்தை ஆதரிப்பதற்குரிய நியாயங்கள் தனக்கிருப்பதாக நாவலுக்குள்ளிருந்து சயந்தன் வாதிடுகிறார். இயக்கத்தின் பிழைகளை போராளிகளின் தியாகங்களையும் வெகுமக்களின் துயரங்களையும் காட்டி நேர்செய்வதற்கான முயற்சியோ என்று எண்ணும் வகையிலும் சில வாதங்களை இந்நாவல் முன்வைக்கிறது. நாவலில் ஓரிடத்தில் வருவது போல வரலாறென்பது யார் சொல்கிறாரோ அவரது நோக்கங்களையும் உலகக் கண்ணோட்டத்தையும் சார்ந்ததுதானே. வரலாற மட்டுமல்ல எதுவொன்றும் அவரவர் மனச்சாய்வுகளக்கு இயைந்தே எழுதவும் வாசிக்கவும் படுகிறது.

***
ஓரிடத்திலும் நிலைகொண்டு தலைசாய்க்கவொட்டாமல் துரத்தும் சாவுக்கு அஞ்சி ஓடிச் சலித்த மக்கள் இயலாமையின் முற்றிய கட்டத்தில் செத்தொழிந்தால்கூட பரவாயில்லை என்கிற மனநிலையை எய்திய போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரோடிக்கிறோம் என்பதைத் தவிர வாழ்வதற்கு வேறு ஆதாரங்களே இன்றி கைவிடப்பட்ட அம்மக்கள் சோதிமலர் சொல்வது போல ‘எங்கட வாழ்க்கையை நாங்கள்தான் உருவாக்க வேணும்’ என்று நிற்கிறார்கள். வளர்பிறையின் ஜொலிக்கும் நட்சத்திரத்தின் குறியீடாக ஆதிரை என்று பெயர் சூட்டப்பட்டாலும் அந்தப் பாத்திரம் திடுமென வந்து தலைப்பாக மாறிவிட்டதேயொழிய அதற்குரிய ஆளுமையோடு வளராமல் முடிந்துவிட்டது. அல்லது தலைப்பிடப்படுமளவுக்கு ஆதிரை பற்றி எழுதப்படவில்லை. ஒருவேளை நாவலில் இடம் பெற்றுள்ள எல்லா பெண்களின் கூட்டுப்பெயராக அது உருவகித்துக் கொள்ளப்பட வேண்டுமாயிருப்பின் அதற்குரிய அழுத்தத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். 

***
ஈழத்திற்குள்ளேயே இவ்வளவு காலமும் இருந்து எல்லாவிதத் துயரங்களையும் தாங்கிக் கழித்த மக்களுக்கு இந்த நாவலை வாசிப்பதற்கான மனநிலை வாய்க்குமா? தாங்கள் கடந்துவந்த துயரங்களை மீண்டும் நினைவூட்டுதானது தங்கள் மீது அவை மறுபடியும் நிகழ்த்தப்படுவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் கருதக்கூடும். ஆனால் புலம் பெயர்ந்து போய் போரின் கொடுமையிலிருந்து ஓரளவேனும் தப்பித்துவிட்டவர்கள், ‘வேறு கண்ணீர் தேடும்’ ஊடகக்காரர்கள், போரின் துயரங்களை கச்சாப்பொருளாகக் கொண்டு கதை எழுதக் கிளம்பியவர்கள் அல்லது கருத்தரங்குகளில் கொட்டி முழக்கி கண்ணீரையும் கைத்தட்டலையும் பெறக்கூடியவர்கள், தெருச்சண்டையில் பங்கெடுத்த அனுபவம் கூட இல்லாவிடினும் தேசிய விடுதலைப் போரை நடத்தப்போவதாக சவடாலடிக்கிற தமிழகத்தவர்கள் போன்றோருக்கு இந்த நாவல் மிகுந்த உவப்பைத் தரலாம்.  ஒருவேளை இவர்களை கருத்தில் கொண்டே இந்த நாவல் விரித்து விரித்து இவ்வளவு பெரிதாக எழுதப்பட்டிருக்கிறதா?  

திகுதிகுவெனக் கொதிக்கும் வெக்கையொடு சொல்வதற்குண்டான இக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்தி அலுப்பூட்டக்கூடியவையாக சயந்தனின் வர்ணனைகளும் விவரிப்புகளும் உள்ளன. கதையின் மையப்பொருளுக்கு தேவைப்படுகின்ற விவரங்களுக்குப் பதிலாக தேவையற்ற விவரங்கள் பத்திபத்தியாக தகவல் குவிப்பாக நிரம்பிக் கிடக்கின்றன. படிக்காமலே புரட்டி கடந்துவிடலாமா என்றும்கூட சில இடங்களில் தோன்றியது. துயரம் மிகுந்த காட்சிகளை சுரீரென விரித்துச் செல்ல ‘கிராமத்தை இழுத்து கடலின் அடியில் அமிழ்த்தியதைப் போல’, ‘றப்பர் போல நிலம் அதிர்ந்து தணிந்தது’, ‘காலொடிந்த இரவு..’ என்றெல்லாம் எழுதமுடிந்த சயந்தன், ஒடுங்கும் சுபாவமுள்ள, பெண் சகவாசத்தை அறிந்தேயிராதவனாக காட்டும் லெட்சுமணன் ‘காமத்தின் உச்சத்தை தொட்டதைப் போல’ என்று கூறுவதாக எழுதுகிறார். இப்படியான பொருத்தமற்ற பல ஒப்பீடுகள் நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஊளைச்சதையை கழித்து உடம்பைக் கண்டுபிடிப்பது போன்று தான் இந்த தடித்தப் புத்தகத்திலிருந்து உள்ளிழைந்து நிற்கும் கதையை நாம் வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பாதிப்பு, நாவலென்றால் தடிமனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ‘தமிழினி மேனியாவால்’ ஏற்பட்டிருக்குமாயின் அதிலிருந்து சயந்தன் விடுபட வேண்டுமென்பது எனது விருப்பம்.  ஆறாவடுவை எழுதிய சயந்தனுக்கு அது சாத்தியம்தான்.





செவ்வாய், ஏப்ரல் 19

சாதி நீதியும் சமூகநீதியும் - பாரிவேந்தருக்கு ஆதவன் தீட்சண்யா

இந்தியாவில் மனிதகுலம் தோன்றிய போதே இடஒதுக்கீடும் வந்துவிட்டது போன்ற தொனியில் கடைசியாய் திருவாய் மலர்ந்திருக்கிறார் பாரிவேந்தர். சாதிச்சங்கத்தை கட்சியாய் வைத்துக் கொண்டிருக்கிற இவர், தனக்கு சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் ‘சாதிவாரியான இடஒதுக்கீட்டின் காரணமாகவே இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியவில்லை’ என்று   அங்கலாய்த்திருக்கிறார். இவர் என்னமோ சாதியொழிப்புக்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருவது போலவும், இந்த பாழாய்ப்போன இடஒதுக்கீடு குறுக்கே வந்து தடுத்துவிடுவது போலவும் கூறுவதில் ஏதாவது உண்மையிருக்கிறதா?

முதன்முதலாக சாதிரீதியான இட ஒதுக்கீடு சுமார் கி.மு.185ல் தொடங்கியது எனலாம். அப்போது எழுதப்பட்ட மனுஸ்மிருதியில்தான் பூவுலகத்தின் ஆகச்சிறந்த அனைத்தும் பூதேவர்களாகிய பார்ப்பனர்களுக்கே என்று கூறப்பட்டதோடு அது சட்டப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டது. பார்ப்பனர்களுக்கே 100 சதவீதமும் என்று அன்று தொடங்கிய இந்த இடஒதுக்கீட்டில் கி.பி.1874 ஆம் ஆண்டுதான் ஒரு சிறு குறுக்கீடு நிகழ்ந்தது. அந்த ஆண்டில்தான் மைசூர் சமஸ்தான அரசானது, காவல்துறையின் அடிமட்ட மற்றும் இடைநிலைப் பணியிடங்களில் மட்டும் 20 சதவீதம் பார்ப்பனர்களுக்கு என்றும் எஞ்சிய 80 சதவீதம்  இஸ்லாமியர், இந்துக்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு என்றும் பகிர்ந்தளித்தது. இந்தியாவில் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின்  தொடக்கம் என்று இதையே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு 1902 ஜூலை 26 ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ், அரசாங்கப் பணியிடங்களில் 50 சதவீதத்தை பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவானது சமூகநீதிக்கான பாதையில் ஏற்பட்ட ஆகப்பெரிய முன்னேற்றம். சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் 1921ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அமலுக்கு வந்தது. பிறகு 1931ல் பம்பாய் மாகாணத்திலும் 1935ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இடஒதுக்கீடு அறிமுகமானது. 

இன்றைய தேதியில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ( பொருளாதார ரீதியில் அல்ல) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் என்று இட ஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த அளவு மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் இது 69 சதவீதமாக இருக்கிறது ( 18+1+30+20).

மனுஸ்மிருதி பார்ப்பனர்களுக்கு மொத்த இடத்தையும் ஒதுக்கியதற்கு சாதியே அடிப்படை. பார்ப்பனரல்லாதாருக்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கோ சமூக நீதியே அடிப்படை. இந்த வரலாறு பாரிவேந்தருக்கு தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் தெரிந்திருப்பது போல வாயைத் திறக்கும் போதுதான் வேறெதையோ திறந்தது போல நாறுகிறது. பாரிவேந்தர் அவர்களே, திறந்ததை நாட்டுநலன் கருதி மூடுங்கள். 

எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப...