திங்கள், ஜனவரி 13

சாதி பார்த்தே நீதி - ஆதவன் தீட்சண்யா


ண்ணல் அம்பேத்கர் பிறந்த 1891ஆம் ஆண்டில் அயோத்திதாசர் நீலகிரியில் கூட்டிய திராவிட சபையின் மாநாடு ‘...விவசாய ஏழைகளுக்கு பூமி...’ கோரியது. செங்கல்பட்டு ஆட்சியர் திரமென்ஹீர் பரிந்துரையால் 1892ல் சென்னை மாகாணத்தில்  தலித்துகளுக்கு 12லட்சம் ஏக்கர் பஞ்சமிநிலம் என ஒதுக்கப்பட்டது. அசுரன் திரைப்படத்தை முன்னிட்டு இவ்விசயத்தின்மீது கிளம்பிய விவாதம், ஒரு கட்சியின் தலைவரிடம் இன்னொரு தலைவர் மூலப்பத்திரம் கேட்பதாகவும், ‘ஆண்ட சாதி’யை நீக்கும்படி வெற்றிமாறனை மிரட்டுவதாகவும் திரிந்துபோனது. இதேபோல பா.ரஞ்சித் தலித்துகளின் நிலவுரிமை பற்றி எழுப்பிய கேள்வியை ராஜராஜசோழன் மீதான அவதூறாக திரித்தார்கள்.

இவ்விரண்டு விசயங்களிலும் பின்தள்ளப்பட்ட கேள்விகள்: மானியங்களுக்காக நிலம் பறிக்கப்பட்டு குடிநீக்கிகளாக ஆக்கப்பட்டவர்கள் யார்? சாதியமின்றி நிலக்குவிப்பு நடந்ததா?  பஞ்சமிநிலம் ஏன் இப்போது தலித்துகளிடம் இல்லை? தீண்டினால் தீட்டு பார்த்தாலே பாவம் என்பவர்கள் தலித்துகளின்  பஞ்சமிநிலம் முழுவதையுமே அபகரித்திருப்பது தீட்டுக்குரியதாகாதா? அபகரிக்கப்பட்டுள்ள பஞ்சமிநிலத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்?

***
மேலவளவு முருகேசனும் அவரது தோழர்கள் ஐவரும் கொடூரமாக துள்ளத்துடிக்க கொல்லப்பட்டதை உலகறியும். சாதிய வன்மத்தால் முருகேசனின் தலையை வெட்டியெடுத்து வெகுதூரத்திலிருந்த கிணற்றில் வீசிப்போயினர் கொலையாளிகள். ஆயுள்தண்டனைக் கைதிகளான இக்கொலையாளிகள் 17பேரும் ஒருசேர நன்னடத்தையோடு இருப்பதாக எப்படியோ கண்டுபிடித்து விடுதலை செய்திருக்கிற தமிழக அரசு, மறுதலையாக அப்பாவி தலித்துகளை எப்படி கையாள்கிறது?
 
மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவரால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு போராடியவர்கள் மீது காவலர்களை ஏவியது. பாதிக்கப்பட்டவர்களை சாதிப்பெயரிட்டு திட்டி அவமதித்து தாக்கியதுடன் பொய்வழக்கில் சிறைப்படுத்தியுள்ள காவல்துறையினர்மீது ஒரு நடவடிக்கையுமில்லை. பாராட்டி பதக்கம் கொடுப்பார்களாக்கும். இடுகாடின்றியும், இடுகாட்டுக்குப் பாதை மறுக்கப்பட்டதால் பாலத்தின் மீதிருந்து பிணத்தை கயிறுகட்டி இறக்கியெடுத்தும் தலித்துகள் அல்லாடுகையில் ஏறெடுத்தும் பாராத அரசு மேட்டுப்பாளையத்தில் மாண்ட 17பேரையும் அவசரமாக எரித்தழித்துள்ளது. தலித்துகள் ஒருவழக்கில் விடுதலையானால் மறுவழக்கைப் போட்டு வெளியே வரமுடியாதபடிச் செய்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு போராடியவர்களில் ஒருவரை குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்தியுள்ளது. நாட்டின் சிறைச்சாலைகளில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக அடைபட்டிருப்பது இவ்விதமாகத்தான்.

***
தேர்தலின்போதான பொன்பரப்பி வன்முறையாளர்கள் மனக்கண்ணிலேயே இருக்கிறார்கள். அந்த கும்பலில் பலருக்கும் திடகாத்திரமான உடல்வாகு இல்லை. நேர்த்தியான உடையில்லை, செருப்பில்லை. எண்ணெய்யற்ற பரட்டைத்தலை. ஆனால் மனம் முழுக்க சாதிவெறியும் அதன் மறுவடிவமாய் உருட்டுக்கட்டையும் ஏந்தி அவர்களையொத்த தலித்துகளின் வீடுகளையும் பண்டபாத்திரங்களையும் அடித்து நொறுக்கியும் தீராத ஆத்திரம் வசவானது. எது எதிர்ப்படினும் அழித்தொழிக்கும் வன்மத்தை உடல்மொழியால் காட்டியபடி விரைந்த அவர்கள் ஒருநாளில் சாதிவெறியர்களாகிவிடவில்லை. குடும்பம், சுற்றம், கோவில், திருவிழா, கல்விக்கூடம், ஊடகம் என ஒவ்வொன்றும் தன்பங்கிற்கு ஊட்டிய விஷத்தினால் அவ்விதமாகியிருக்கும் அவர்களை இக்கட்டுரை என்ன செய்யும்?




1 கருத்து:

  1. தோழர், இது சாதி மட்டுமே பார்த்து நீதியா? இல்லை வர்க்க பார்வை உள்ளதா? ஏனெனில், இது போன்ற கதைகள் தொழிலாளர்களின் வழக்குகளிலும். மானசார் மாருதி மேனேஜர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்கள் சிறைத்தண்டனை பெற, ஏனாம் ரீஜென்ஸி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இருவர் கொல்லப்பட அந்த மேனேஜர் கைது கூட செய்யப்படவில்லை. அப்புறம் தோழர், முகநூலில் உங்களால் ஓரிரு வரிகளில் மட்டுமே தொடர்ந்து எழுதுகிறீர்கள். மிகச்சில காலங்களில் மட்டுமே நீண்ட கட்டுரை இடம் பெறுகிறது. அப்படியாகவே இருக்கட்டும். பிரச்சனைகளில் உங்கள் பார்வையை தொடர்ந்து இந்த வலைப்பூவில் எழுதலாமே..

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...